Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திற்கு விரிவடையும் யுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கு விரிவடையும் யுத்தம்

---அமந்தபெரேரா-

நாட்டின் கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்டதை அரசாங்கம் கொண்டாடும் இவ்வேளையில் தமிழ்ப் புலிகளின் வடபிரதேச கோட்டையான யாழ்ப்பாணத்திலும் பாரிய அளவிலான யுத்தம் ஆரம்பமாகியுள்ளது.

அரசாங்க துருப்புகள் கிழக்கில் விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையான தொப்பிகலவை கைப்பற்றிவிட்டதாக ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் அறிவித்து 5 நாட்களின் பின்னர் வடபிரதேச கட்டுப்பாட்டு எல்லையில் இடம்பெற்ற மோதல்களில் அரச படைகள், புலிகள் ஆகிய இரு தரப்பிலுமாக 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.

வரப்போவதை புதிய மோதல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. 2002 ஆம் ஆண்டு நோர்வே மத்தியஸ்தத்தில் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை ரத்தாகாவிட்டாலும் சகல வகையிலும் அது செயலிழந்துள்ளது. சமாதான ஏற்பாட்டாளர்கள் பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியடைந்துள்ளன. உதவி வழங்கும் நாடுகளும் ஐக்கிய நாடுகளும் மேலும் வன்செயல்கள் வெடிக்கலாமென எதிர்பார்க்கின்றன.

தமிழ் தீவிரவாத இயக்கங்களுக்குள் மூன்று தசாப்தங்களாக தனித்தமிழீழத்திற்காக போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அரசாங்கமும் யுத்த நடவடிக்கைகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளன. `கடந்த 6 மாதங்களாக வவுனியா பாதுகாப்பு (வடபகுதி) எல்லைக்கோட்டிலிருந்து தாக்குதலை எதிர்பார்த்து நாங்கள் தயார் நிலையில்தான் இருக்கிறோம்'. இவ்வாறு புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். இராணுவத் துருப்பினர் தங்கள் பிரதேசத்திற்குள் நுழைய முயற்சிக்கும் ஒவ்வொரு தடவையும் தாங்கள் அவர்களை தாக்கி திருப்பி அனுப்பிவிடுவதாக அவர் தெரிவித்தார்.

இராணுவ நடவடிக்கையை வடக்கிற்கு திருப்பிவிடுவதாக அரசாங்கம் பகிரங்கமாக தெரிவித்ததை புலிகள் சுட்டிக்காட்டினர்.

கிழக்கில் கிடைத்த வெற்றியை கொண்டாடுவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் மாபெரும் பகிரங்க விழா ஒன்றை நடத்தியுள்ள நிலையில், துருப்புகளை பாராட்டி நாடெங்கிலும் சுவரொட்டிகள் ஏற்கனவே ஒட்டப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசாங்க துருப்புகள் மீதும் நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துவதை நிறுத்தும்போதே அரசாங்கப் படைகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று ராஜபக்ஷ நோர்வே சமாதான ஏற்பாட்டாளர்களிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.

மாவிலாறிலும் கிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகம் அமைந்துள்ள மூதூரிலும் அவர்கள் தாக்குதலை நடத்தியபோதே தாங்கள் தாக்குதலை நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டதாக, 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சண்டை மீண்டும் ஆரம்பமானது பற்றி ராஜபக்ஷ அண்மையில் கூட்டமொன்றில் தெரிவிக்கையில் கூறினார்.

கிழக்குப் பிராந்தியத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதென்ற திட்டத்தை அரசாங்கம் அறிவித்த போதிலும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து எண்ணெய் நிலைகள் மீதும் இராணுவ நிலைகள் மீதும் தாக்குதல்களை நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்தனர். திங்கட்கிழமை, விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஹேரத் அபேவீரவை திருகோணமலை துறைமுகத்தில் வைத்து சுட்டுக்கொன்றனர்.

இந்தப் படுகொலை, பயங்கரவாத சக்திகளுக்கு அடிபணிந்து விடுவதில்லை என்ற தங்கள் திடசங்கற்பத்தை மேலும் பலப்படுத்துகிறது என்று கிழக்கிலும் இலங்கை முழுவதிலும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதென்ற தங்கள் பணி தொடரும் எனக்கூறி ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வடக்கு நோக்கி துருப்புகள் நகர்வது குறித்து கருத்து தெரிவித்த இளந்திரையன், `இங்கே வரட்டும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்' என்று கூறினார். `உத்திகளை நாங்கள் மாற்றியுள்ளோம். ஆனால், எப்போதும் போலவே நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்' என்றார். வடக்கில் விடுதலைப்புலிகள் கடும் எதிர்ப்பை காண்பித்து வருகிறார்கள்.

ஜூலை மாத நடுப்பகுதியில் இடம்பெற்ற இரண்டு நாள் போரில் 14 அரச படைகளும் பல விடுதலைப்புலி உறுப்பினர்களும் உயிரிழந்தனர். விடுதலைப் புலிகள் இராணுவத் துருப்பினர் மீது சுட்டதால் துருப்பினர் திருப்பித் தாக்கியதாக தெரிவித்த இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க புலிகளின் துப்பாக்கி நிலைகளை தாங்கள் அகற்றிவிட்டதாகவும் கூறினார்.

கொழும்புக்கும் கிளிநொச்சிக்கும் இடையே உறவுகள் சுமுகமடைவதாக உள்ளூர் ஊடகங்களில் மிகையாக வெளியான செய்திகளுக்கு தற்போதைய யுத்தம் முரண்பாடாக அமைந்துள்ளது. பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதற்காக அரசாங்கம் மீண்டும் நோர்வேக்கு அழைப்பு விடுத்ததாக ஜூலை மாத ஆரம்பத்தில் வெளியான செய்திகள் தெரிவித்தன. 2002 ஆம் ஆண்டில் நோர்வே மத்தியஸ்தத்தில் கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்தம் இன்னமும் அமுலில் இருக்கின்ற போதிலும் பெயரளவில் மாத்திரமே அது பின்பற்றப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வன்முறைகள் மீண்டும் ஆரம்பமாவதற்கு முன்னர் கடந்த இரண்டு தசாப்தங்களில் 65,000 பேரை பலியெடுத்த போரை இந்த யுத்த நிறுத்தம் நிறுத்தியிருந்தது. அடுத்து வந்த நான்கு மாதங்களில் 1,500 சிவிலியன்கள் உட்பட 4,500 பேர் உயிரிழந்தனர். சமீபகால போர் 500,000 பேரை இடம்பெயர வைத்ததுடன் 30 இலட்சம் இலங்கையர்களை பாதித்துள்ளது என்று ஐக்கியநாடுகள் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

நோர்வே அதிகாரிகளே சமாதானத்தில் நம்பிக்கையை இழந்துள்ளார்கள். கடைசியாக நோர்வே தூதுவர் கிளிநொச்சிக்கு மேற்கொண்ட விஜயம் ஒரு நல்லெண்ண விஜயம் என்று தெரிவித்த நோர்வே வட்டாரங்கள் சர்வதேச சமாதான விரும்பிகள் கொண்டுள்ள கவலையை இச்சந்தர்ப்பத்தின் போது நோர்வே தூதுவர் விடுதலைப் புலிகளுக்கு தெரிவித்ததாகவும் கூறின. விசேட சமாதானத் தூதுவர் தற்போதைக்கு அங்கு செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்த விஜயத்தின் பின் கருத்து தெரிவித்த நோர்வே தூதரக பேச்சாளர் எரிக் நுரென்பேர்க் கூறினார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளில் ஒருவரான இளந்திரையன் ஐ.பி.எஸ்.ஸிடம் கருத்து தெரிவிக்கையில், பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பது குறித்து பேச்சு எதுவும் இடம்பெறவில்லை என்று கூறினார். மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு யுத்த நிறுத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற தங்கள் கடும்போக்கையும் விடுதலைப் புலிகள் வலியுறுத்தினார்கள்.

தமிழர் தாயகத்தை அங்கீகரித்த யுத்த நிறுத்த உடன்படிக்கை பொருளாதார வளர்ச்சிக்கும் அமெரிக்க, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் நோர்வே ஆகியவற்றைக் கொண்ட சர்வதேச உதவி வழங்கும் நாடுகள் இலங்கை விடயத்தில் சம்பந்தப்படுவதற்கும் வழிவகுத்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஊடாகச் செல்லும் ஏ-9 நெடுஞ்சாலையை திறப்பது யுத்த நிறுத்த உடன்படிக்கையில் புலிகளின் முதன்மைக் கோரிக்கையாக இருந்தது. `பேச்சுவார்த்தையை மீணடும் ஆரம்பிப்பதற்கு ஏ-9 நெடுஞ்சாலையை திறப்பதுபோன்ற யுத்த நிறுத்த உடன்படிக்கையின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். அரசாங்கம் சமாதானம் பேசிக்கொண்டே தாக்குதல்களையும் நடத்துகிறது' இவ்வாறு விடுதலைப்புலிகளின் பேச்சாளர் தெரிவித்தார். அரசாங்கம் 2006 ஆம் ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏ-9 வீதியை மூடியது.

வடக்கிலிருந்து வெளிவரும் பேச்சுகளும் நிலைப்பாடும் எதிர்வரும் மாதங்களில் நிலைமை மிக மோசமாகவே இருக்குமென அவதானிகளை எச்சரிக்கை விடுக்க வைத்துள்ளன. 2007 ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப் பகுதியில் சமாதான முயற்சிகள் மந்தகதியில் இருந்தன. அடிக்கடி பகைமை நடவடிக்கைகள் பகிரங்கமாக இடம்பெற்றன. பயங்கரவாத நடவடிக்கைகள் பதுங்கியிருந்து தாக்குதல்கள் கண்ணிவெடித் தாக்குதல்கள், ஆட்கடத்தல்கள், திட்டமிட்ட கொலைகள் ஆகியன போன்ற வன்முறைகள் அதிகரித்தன என்று ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகார ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட பொது நடவடிக்கைத் திட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீரங்கித் தாக்குதல், விமானக் குண்டு வீச்சு, கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதல் ஆகியன சிவிலியன்களுக்கு உயிரிழப்பையும் சொத்து சேதத்தையும் ஏற்படுத்தியதுடன் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இழந்த உறுப்பினர்களின் இடத்தை நிரப்புவதற்காக இளைஞர்களும் சிறுவர்களும் பலவந்தமாக சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

இந்த வருடத்தின் எஞ்சியுள்ள பகுதியிலும் இதே நிலைமைதான் தொடரலாம் என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை உதவி வழங்கும் நாடுகளுக்கு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகளினதும் மனப்போக்கில் பெரும் மாற்றம் ஏற்படாவிட்டால் வன்முறைதான் ஒரேவழி என்று உள்ளூர் அவதானிகளும் அபிப்பிராயப்படுகிறார்கள். `சிந்தனையில் மாற்றம் தேவை. வாய்ச் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதே நிலை தான் தொடரும்' இவ்வாறு உள்ளூர் சமாதான ஆதரவு அமைப்பான தேசிய சமாதான சபையைச் சேர்ந்த ஜொஹான் பெரேரா தெரிவித்தார்.

-தினக்குரல்

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.