Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சுவார்த்தை தோல்விகளுக்கு அடிப்படைக் காரணம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை தோல்விகளுக்கு அடிப்படைக் காரணம் என்ன?

[03 - August - 2007]

கலாநிதி நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் காரத் ஈவான்ஸ் கடந்தவாரம் கொழும்பு வந்திருந்தார். பெல்ஜியத்தை தலைமையகமாகக் கொண்டியங்கும் சர்வதேச நெருக்கடி குழு (International Crisis Group) என்ற அரசாங்கசார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனத்தின் தலைவராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் ஈவான்ஸ் இப்போது பணியாற்றுகின்றார். உலகளாவிய ரீதியில் மோதல்களையும் நெருக்கடிகளையும் தடுப்பதற்காக இந்த சர்வதேச நெருக்கடிக் குழு பாடுபடுகின்றது. வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈவான்ஸ் சந்தித்து இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இன நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அணுகுமுறைகள் தொடர்பில் ஈவான்ஸுக்கு விளக்கமளித்த போகொல்லாகம அவரிடம் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதாவது, 1985 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை அரசாங்கங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் குறித்து சர்வதேச நெருக்கடி குழு ஆழமான ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கையாகும்.

சர்வதேச நெருக்கடி குழுவினால் மேற்கொள்ளப்படக்கூடிய அத்தகையதொரு ஆய்வு இலங்கையில் மோதல்கள் தொடருவதற்கு காரணம் அடுத்தடுத்து அதிகாரத்துக்கு வந்த அரசாங்கங்களிடம் அரசியல் தீர்வு தொடர்பில் பற்றுறுதி இல்லாதமையல்ல, மானசீகமாக அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் விடுதலைப் புலிகள் தரப்பிலான அக்கறையின்மையே என்பதை வெளிக்காட்டும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் முன்னாள் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரிடம் தெரிவித்திருந்தார் என்று வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சர்வதேச நெருக்கடி குழுவிடம் அமைச்சர் போகொல்லாகம விடுத்திருக்கும் இக்கோரிக்கையில் பெரிதாகக் குறை காண்பதற்கு எதுவுமில்லை. ஆனால், இலங்கையில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நீடித்துவரும் இனநெருக்கடிக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண முடியாமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதற்கான பணியை மேற்கொள்ளும்படி அவர் காரத் ஈவான்ஸிடம் கோரிக்கை விடுத்திருந்தால் மேலும் கூடுதலான அளவுக்கு பொருத்தமானதாக இருந்திருக்கும்.

1983 ஜூலைக்கு பிறகு இலங்கை இனநெருக்கடி தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் பெரும் எண்ணிக்கையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இன ரீதியான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் வழிவகைகள் குறித்து கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் வாதப்பிரதிவாதங்கள் போன்று அண்மைக் காலத்தில் உலகின் வேறுஎந்தவொரு நெருக்கடி தொடர்பிலும் செய்யப்பட்டிருக்கும் என்று நம்புவதற்கில்லை. கற்று அறிந்தவரான வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம இதை தெரியாமல் இருந்திருக்க நியாயமில்லை. உலகில் இன்று காணப்படக்கூடியதாக இருக்கும் இன ரீதியான நெருக்கடிகளில் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மிகவும் சிக்கல்வாய்ந்தவையாக இருப்பவற்றில் எமது நெருக்கடி முக்கியமான ஒன்றாகக் காணப்படுகிறது. தீர்வு காண்பதற்கான நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஒவ்வொரு முயற்சியுமே நிலைவரங்களை மேலும் சிக்கலாக்கிய விசித்திரமான ஒரு வரலாற்றைக் கொண்டதாக இலங்கை இனநெருக்கடி ஒரு பிரத்தியேகமான தனித்துவத்தைத் தனதாக்கியிருக்கிறது. கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போருக்கு பின்னரும் கூட, இனநெருக்கடி என்று ஒன்று இல்லை என்று சொல்வதற்கு வக்கிரத் துணிச்சல் கொண்ட அரசியல் சக்திகளின் குரல் ஓங்கி ஒலிக்கக் கூடியதான விபரீதமான ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

தமிழர்களின் உரிமைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறுவதற்கு முன்னரான காலகட்டத்தின் இலங்கை அரசியலைப் பற்றி இப்போது தென்னிலங்கை அரசியல் சமுதாயம் எதுவுமே பேசுவதில்லை. மிதவாத தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் முன்னெடுத்த அமைதிவழிப் போராட்டங்கள் ஆயுதமுனையில் ஒடுக்கப்பட்ட வரலாற்றை சிங்களவர்கள் மறந்துவிட்டார்கள் போலத் தோன்றுகிறது. தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய இணக்கத் தீர்வொன்றை காண்பதற்கு அரசாங்கங்கள் மானசீகமாக முன்வராத காரணத்தினாலேயே வேறுவழியின்றி தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் தோன்றின. இதற்குப் பிறகே இனநெருக்கடியில் வன்முறை உக்கிரமடைந்து உள்நாட்டுப் போராக மாறியது. வன்முறைப் போராட்டம் தீவிரமடைந்ததற்கான அரசியல் காரணிகளை மறந்துவிட்டு, இன்று அந்த வன்முறைகளை மாத்திரமே பிரச்சினையாக தென்னிலங்கை அரசியல் சமுதாயம் நோக்குகின்றது. 1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகளுடன் அரசாங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் குறித்து ஆழமான ஆய்வை மேற்கொள்ளுமாறு சர்வதேச நெருக்கடி குழுவின் தலைவரிடம் அமைச்சர் போகொல்லாகம விடுத்த கோரிக்கையின் நோக்கத்தை இந்தப் பின்னணியிலேயே நோக்க வேண்டியிருக்கிறது.

அரசியல் பிரச்சினையொன்றுக்கு தீர்வு காண்பதற்காக ஆயுதப் போராட்டத்தை வழிமுறையாகக் கையாளுகின்ற இயக்கத்தின் தோற்றத்தின் பின்னணியில் உள்ள அரசியல் காரணிகளை சரியாக அடையாளம் காணாத எந்தவொரு முயற்சியுமே நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ஒருபோதும் உதவப்போவதில்லை. சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை அங்கீகரிக்கவும் அந்த இனங்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதற்கும் சிங்கள அரசியல் சமுதாயம் தொடர்ச்சியாக மறுத்துவருகின்றமையே இதுகால வரையான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கும் இனநெருக்கடிக்கு தீர்வொன்றைக் காண முடியாமல் இருக்கின்றமைக்குமான உண்மையான அடிப்படைக் காரணமாகும். இதை விளங்கிக் கொள்வதற்கு சர்வதேச நெருக்கடி குழுவின் ஆய்வு எதுவுமே தேவையில்லை.

நன்றி - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.