Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகமூடியிட்ட படையாட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகமூடியிட்ட படையாட்சி

-சேனாதி (தாயகம்)

அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட விரும்பும் எந்த அரசு சாரா நிறுவனமும் படையினரின் விதிப்புக்களுக்கமையவே செயற்பட முடியும் என்ற சுற்றறிக்கையை தனது ஆளுகைக்கு உட்பட்ட ஆயுதப்படைக் கட்டமைப்புகளின் மேலதிகாரிகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் கிழக்கு மாகாண ஆயுதப்படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய.

இந்த நகர்வு, இனப்பிரச்சினை குறித்த சிங்கள நிகழ்ச்சி நிரலின் ஒரு பதம் என்றும் தமிழீழத்தின் மீதான கொழும்பின் மூலோபாய வெளிப்பாடுகளில் ஒன்று என்றும் கருதப்படுகிறது. அந்த நிகழ்ச்சி நிரலின் நீட்சியும் கொழும்பு வெளியிட விரும்பாத அதன் உண்மையான மூலோபாயமும் ஆய்விற்குரியவை.

கடந்த வருடம் எட்டாம் மாதம் ஏ-9 சாலை மூடப்பட்டதிலிருந்து குடாநாட்டின் நிருவாகத்தை சிறிலங்கா படைத்துறையே நடத்தி வருகிறது. அன்றாட சிவில் செயற்பாடுகள் பற்றிய அறிவுறுத்தல்கள் எல்லாமே படை அதிகாரிகளிடமிருந்து தரப்படுகின்றன. சிவில் நிருவாகக் கூட்டங்கள் படைத் தளங்களில் நிகழ்கின்றன, அல்லது ஏதாவதொரு படை அதிகாரியின் மேற்பார்வையில் நிகழ்கின்றன. முன்னமே படைத் தலைமையகத்தால் எடுக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கப்படும் இடமாகவே அக்கூட்டங்கள் பெரும்பாலும் அமைகின்றன.

இவ்வாறு, யாழ். குடாநாட்டில் அறிவிக்கப்படாத படைய ஆட்சி நடைபெறும் அதே நேரம் கிழக்கிலும், ஓரளவுக்கு அறிவிக்கப்பட்ட முழுமையான படைய ஆட்சியை நிறுவுவதே கொழும்பின் உண்ணோக்கம் ஆகும்.

ஒரு சிங்களப் பிரதேசத்தின் செயலருக்கும் அதையொத்த தமிழ்ப் பிரதேச செயலருக்கும் இருக்கும் அதிகாரத்தின் அளவுகள்; இனியொரு போதும் இலங்கைத் தீவில் சமமாக இருக்கப்போவதில்லை என்பது பழைய உண்மை.

இப்போது, பன்னிப்பிட்டடியவின் சுற்றறிக்கையின்படி அமைக்கப்படவிருக்கும் கிராமக் குழுக்களுக்குத் தலைவராக ஒரு படை அதிகாரி அல்லது காவற்றுறை அதிகாரியே இருக்கவேண்டும். கிழக்கு மாகாணம் முழுவதும் புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்கு இதுவே நடைமுறையாகும். இவ்வகையில் அங்குள்ள அடித்தளச் சிவில் நிருவாகம் 99 வீதம் சிங்களவர்களால் நடத்தப்படவிருக்கிறது.

அதேவேளை மாகாண ஆளுநர், செயலர் போன்ற உச்சநிலை அதிகாரங்களும் சிங்களவர்களிடம் அல்லது அவர்களின் அதியுச்ச விசுவாகளிடம் தரப்படும். இடையில் இருக்கும் தமிழ்பேசும் அதிகாரிகளுக்கோ தமிழர் பிரதிநிதிகளுக்கோ நடைமுறை அதிகாரம் எதுவும் மிச்சமிருக்கப்போவதில்லை. சிங்கள நிகழ்ச்சி நிரலின் அரங்கேற்றங்களுக்குக் குத்துவிளக்கு ஏற்றி ஒப்புதல் கையெழுத்திடுவோராகவே அவர்கள் செயற்படவேண்டியிருக்கும்.

அரச கட்டமைப்புக்குள் இருந்து கொண்டே பேரனவாதத்தின் அத்துமீறிய குடியேற்றம் போன்ற சதிகளை எதிர்த்து வந்த அதிகாரிகள் இனிமேல் பல சாவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

ஆயுதக் கொள்வனவு முறைகேட்டில் முன்னணியில் நிற்கும் சிறிலங்காப் படைக் கட்டமைப்பிடம் அபிவிருத்தி நிருவாகம் தரப்படும்போது அங்கே எத்தகைய ஊழல் அரங்கேறும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

கிழக்கு மாகாணத்திற்கு வெளிநாடுகளால் தரப்படும் நிதி சிங்களக் கணக்குகளில் சேரும் வாய்ப்பு இனி அதிகமாகும். உதாரணமாக, கட்டுமான ஒப்பந்தங்கள் கோரப்படும்போது தரநிலை அடிப்படையிலான போட்டிகளில் சிங்கள ஒப்பந்தர்களே பெரிய ஒப்பந்தங்களை வெல்வர். போர்ச்சூழல் காரணமாக தர வரிசையில் முன்னேற முடியாத தமிழ்பேசும் ஒப்பந்தர்கள் புறக்கணிக்கப்படுவர்.

பொருளாதார வகையில் ஏற்படப்போகும் சமநிலை மாற்றப் பாதிப்பு, இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களை விட இஸ்லாமியராலேயே அதிகம் உணரப்படும். கிழக்கிலே போர்ச்சூழல் காரணமாக வணிகச் செயற்பாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள் இதுவரை இஸ்லாமியரைப் பாதித்தது குறைவே. இப்போதோ, அவர்களின் சந்தைகளைப் பகிர்ந்துகொள்ள சிங்கள வியாபாரிகள் முண்டியடித்துக்கொண்டு நிற்பர். அதிகாரிகளின் ஆசி அவர்களையே சாரும் என்பதால் குறிப்பாக மொத்த வியாபாரத்தில் ஈடுபடும் இஸ்லாமிய வியாபாரிகள் நலிவடைவர்.

அரசு சாரா நிறுவனங்கள் எதுவுமே எண்ணப்படி செயற்பட அனுமதிக்கப்படக்கூடாது என்ற பன்னிப்பிட்டியவின் உத்தரவின் பின்னணியில் வேறு சில சுவையான தகவல்களும் வெளிவருகின்றன. இலங்கைக்குக் கிடைக்கவிருக்கும் பெரும்பாலான உதவிகள் இனிமேல் ஐ.நா நிறுவனங்களின் ஊடாகவே தரப்படும் என்ற முடிவு அரச மட்டத்தில் ஆத்திரத்தைக் கிளப்பியதன் எதிரொலியே இது என்றும், கொழும்பின் அரசியல் நோக்குள்ள கால அட்டவணைப்படி அந்த நிதிகளை இனிமேல் இயக்க முடியாது போனதே ஆத்திரத்தின் காரணம் எனவும் அறியப்படுகிறது.

இந்த உத்தரவுகூட அரசியல் தலைமையிடமிருந்து பிறப்பிக்கப்படாது, பிராந்தியப் படை அதிகாரி மட்டத்தில் தரப்பட்டதை அந்நிறுவனங்கள் விசனத்துடனேயே நோக்குகின்றன.

மணலாறு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் படைக்கட்டுப்பாட்டில் இல்லாத இடங்களையும் கைப்பற்றிவிட்டு அங்கும் இவ்வாறான படைய நிருவாக முறைகளை ஏற்படுத்தும் எண்ணம் கோத்தாபயவிற்கு இருப்பதாகவும் பேசப்படுகிறது.

இந்நிலையில், கொழும்பின் இந்த மூலோபாயம் களத்திலும் பன்னாட்டு உள்நாட்டு அரசியலிலும் எவ்வாறான பிரதிபலிப்பை உண்டாக்கலாம் என்ற வகையில் பலவித கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

முதலில் இந்தப் படைய ஆட்சிமுறை நீண்டகால அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளதான கருத்துக்கள், படை அதிகாரிகளுக்குச் சாதமான அரசின் நகர்வுகளின் அடிப்படையில் கோடிகாட்டப்படுகின்றன. சம்பூர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமான அறிவித்தலானது அப்பகுதியில் படையினருக்கு வரைமுறையற்ற அதிகாரத்தைத் தருகிறது.

படையினருக்கான நலன்புரித் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. படைகளுக்கான ஆட்சேர்ப்பில் காட்டப்படும் தீவிரமும் இந்த மூலோபாயத்தை வலியுறுத்துவதாகவே அமைகிறது.

மருந்திற்கும் சிங்களவர் வாழாத இலுப்பையடிச் சேனையிலிருந்து வேப்பைவெட்டுவான் நோக்கிச் செல்லும் பாதைக்கு படை நடவடிக்கையின்போது புலிகளால் கொல்லப்பட்ட சார்ஜன்ட் வீரபத்தரவின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கைப்பற்றிய இடங்களோடு படையினரை உளவியல்வகையில் ஒட்டவைப்பதற்கான செயற்பாடென்றே இதைப் பார்க்கவேண்டும்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இதே போன்று ஆயத்திய மலையிலிருந்து உன்னிச்சை செல்லும் வீதிக்குச் சிங்களப் பெயர் சூட்டப்பட்டதும் நினைவிருக்கலாம்.

இந்நிலையில், தமிழர் தாயகத்தில் இருக்கும் சிங்களப் படையதிகாரிகளுக்கு காலனித்துவக் கால அதிகாரங்கள் தரப்படுகின்றன.

கொழும்பை மையப்படுத்திய தென்னிலங்கை அரசியலில் தமிழர் உரிமையென்பது தொட்டுக்கொள்ள ஊறுகாய் என்ற கணக்கில் போய்விட்டதாலும், தமிழர் எதிர்ப்பு நிலைப்பாடே வெல்ல விரும்பும் கட்சிகளின் கோசம் என்பதாலும் படைகளிடம் நிருவாகம் கொடுக்கப்படுவதற்கு அங்கே மனப்பூர்வமான எதிர்ப்புக்கள் இருக்கப்போவதில்லை.

இருந்தாலும், கிழக்கிலே விடுதலைப் புலிகளின் தாக்குதலொன்று உடனடியாக நடைபெறவேண்டும் என தமிழர் நலன்விரும்பிகள் எதிர்பார்ப்பதைப் போலவே கொழும்பிலும் சிலர் எதிர்பார்ப்பதாக அரசல் புரசலாக கதைகள் எழுகின்றன. தங்களின் வாதத்தை வலுப்படுத்துவதற்காக ரணில்-மங்கள கூட்டணியும், தனது இருப்பின் தேவையைத் தக்கவைப்பதற்காக கருணா குழுவும் அப்படி எதிர்பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது.

தங்களின் நிகழ்ச்சி நிரலில் படு கவனமான இருக்கும் மேற்குலகம் அதற்குப் பாதகம் இல்லாதவரையில் கிழக்கை அனுமானோ விபீசணனோ ஆண்டுவிட்டுப் போகட்டும் என எண்ணுவதாகத் தெரிகிறது. திருமலையும் அம்பாந்தோட்டையைப் போலவே படையினரின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுவதால் இரு மாவட்டத்திலும் ஏன் ஒரே விதமான அபிவிருத்தி நடைமுறையைச் செயற்படுத்த முடியாது என்ற கேள்வியை மேற்குலகைப் பிரதிநிதிப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் அரசிடம் கேட்பதற்கான ஏதுநிலை அரிதே.

அவ்வாறான நிலையில், கிழக்கிலிருந்து புலிகள் முற்றுமுழுதாக வெளியேற்றப் பட்டுவிட்டதாகச் செல்லப்படுகிறது, அவர்களின் ஆயுத வெடிப்பொருட்களையும் தொடர்ந்து காடுகாடாகத் தேடிப் பொறுக்குவதாகவும் அரச தரப்பிலிருந்து அறிக்கைகள் வருகின்றன. ஆங்காங்கே நிகழும் மோதல் சம்பவங்களைத் தவிர அண்மைக் காலத்தில் கிழக்கில் புலிகளின் செயற்பாடு பற்றிய தகவல்களும் குறைவாகவே காணப்படுகின்றன. கொழும்பு ஊடகங்களை உற்றுக் கவனிக்கும் பலருக்கு அங்கே புலிகள் என்னதான் செய்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே. படைத்துறை வகையில் கிழக்கில் இதைவிடவும் நெருக்கடிகளைச் சந்தித்திருக்கும் புலிகள் எவருடையதும் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத வகையில் நிதானமான மீளொழுங்குபடுத்தல்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றே கருத இடமுண்டு.

நன்றி - தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.