Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிராந்திய பொருளாதார அரசியல் நலன்களின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்: சு.ப.தமிழ்ச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிராந்திய பொருளாதார அரசியல் நலன்களின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்: சு.ப.தமிழ்ச்செல்வன்

[ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 18:44 ஈழம்] [புதினம் நிருபர்]

பிராந்திய பொருளாதார அரசியல் நலன்களின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

புதுடில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் வெளியாகும் "த சண்டே இந்தியன்" வார இதழுக்கு (ஓகஸ்ட் 5, 2007) சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்:

மகிந்த ராஜபக்சவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்று ராய்ட்டர்ஸ்க்கு அளித்த பேட்டியில் அறிவித்திருந்தீர்கள். அதேபோல் இலங்கையின் முக்கிய பொருளாதார நிலைகளைத் தாக்க உள்ளதாகவும் கூறியிருந்தீர்கள். இதனை புலிகளின் யுத்த பிரகடனமாக கருதலாமா?

மகிந்த ராஜபக்ச அரசு பகிரங்கமாகவே தமிழர் தாயகத்தின் மீது ஒரு யுத்தப் பிரகடனத்தைச் செய்து அவ்வாறான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற நிலையில் நாம் அமைதிப் பேச்சுக்களைப் பற்றிக் கதைப்பதென்பது எந்தவிதத்திலும் பொருத்தமாக இருக்கும் என்று நம்பவில்லை. அந்த வகையில் இனிமேல் அவர்களது இராணுவ முனைப்புக்களைச் செயலிழக்கச் செய்து அவற்றை முடக்குவதற்குரிய எமது தாக்குதல் உத்திகளை தீவிரப்படுத்தி எமது தற்காப்பு உத்திகளை முழு அளவில் செயற்படுத்தவே எண்ணியிருக்கின்றோம்.

சம்பூர், வாகரை தொடங்கி தற்போது குடும்பிமலை (தொப்பிக்கல) என புலிகள் தரப்புக்கு அண்மைக்காலமாக பின்னடைவு ஏற்பட்டிருப்பது போலத் தோன்றுகிறதே... கிழக்கு மாகாணத்திலிருந்து முற்றிலுமாக புலிகளை விரட்டிவிட்டோம் என்றும் அதை தேசிய தினமாக கொண்டாடுவதாகவும் இலங்கை அரசு கூறுகிறதே?

கிழக்கில் எமது தாக்குதல் உத்தியினையே நாம் மாற்றியிருக்கின்றோம். எமது தந்திரோபாயத்தினை மாற்றியுள்ளோம். அங்குள்ள புவியியல் அமைவு, சூழ்நிலை கருதி அவை மாற்றப்பட்டிருக்கின்றனவே தவிர எமது படைக்கட்டுமானம் எவையுமே அங்கிருந்து அகற்றப்படவில்லை. பின்வாங்கிவந்ததாகவும் இல்லை. இனிவரும் காலங்களில் அங்கு எமது தாக்குதல்கள் தீவிரமடையும். சிறிலங்கா இராணுவம் பல தடவைகள் கிழக்கிலே பிரதேசங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாகவும் பின்னர் அவர்கள் விரட்டியடிக்கப்படுவதாகவும் காலம் காலமாக மாறி மாறி இடம்பெற்றிருக்கின்றது. இதனையே பெரும் கொண்டாட்டமாக கொண்டாடுவதென்பது சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை கிளப்பி விடுவதும் தற்போது சிங்கள மக்கள் மத்தியில் இந்தப் போரினால் எழுந்துள்ள அன்றாட வாழ்வியல் நெருக்கடிகளை, பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவுமே தவிர அதனைப் பெரியொரு வெற்றியாக யாரும் கருதவுமில்லை. அவர்களே அதனைப் பெரிதாக்கி கொண்டாடுகின்றார்கள். அத்தோடு தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துச் சிங்கள மயப்படுத்த முனைவதும் மகிந்த அரசின் நோக்கமாகும். இதை முறியடிப்பதற்கான தீவிர செயற்பாடுகளில் எமதும் எமது மக்களினுடைய செயற்பாடுகளும் தீவிரமடையும். சிங்களப் படைகளின் வெற்றிக் கொண்டாட்டங்கள் மிக விரைவில் சிங்களப் படைகளுக்கான பேரழிவாகவே முடியும்.

இலங்கை இராணுவத்தின் தாக்குதலை உங்களது கட்டுப்பாட்டில் உள்ள வடக்குப் பகுதி தாக்குப் பிடிக்குமா?

வடக்குப் பகுதி மட்டுமல்ல தமிழர் தாயகம் எங்கிலும் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்கள் விரிவடையும் நிலையில் அவை கடந்த காலங்கள் போலவே முற்றாக செயலிழக்கச் செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கும் நடவடிக்கையில் நாம் வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்கின்றோம். தற்போது சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் மக்களும் நாமும் முழு அளவில் தாயாராகி வருகின்றோம். விரைவில் இதற்கான பதிலடியை கொடுப்போம்.

இலங்கை இராணுவத்துக்கு உங்கள் முகாம்கள் மற்றும் திட்டங்கள் பற்றி கருணா குழுவினர் தகவல் கொடுப்பதாகவும் கிழக்கில் இராணுவத்தின் வெற்றிக்கு அது உதவியாக இருந்ததாகவும் சொல்கிறார்களே...

சிறிலங்கா இராணுவம் கருணா குழு போன்ற இந்த தேசவிரோத சக்திகளிடருந்து இப்படியான தகவல்களை பெறுவதென்பது உண்மைதான். அவை சிறிலங்காப் படைகளின் தாக்குதல்களுக்கு உதவியிருக்கலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

உங்களது விமானங்கள் சாதாரணமான விமானங்கள் என்றும் இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என்றும் இலங்கை அரசாங்கம் கூறுகிறதே?

எமது விமானம் சாதாரண விமானமாக இருந்தால் அதனைச் சிறிலங்கா அரசாங்கப் படைகள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம். அந்த அரசின் அதி உச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட கோட்டைக்குள்ளேயே சென்று நாம் தாக்குதல்களை மேற்கொண்டு வெற்றிகரமாக திரும்பியிருக்கின்றோம். இப்படிக் குறிப்பிடுபவர்கள் அதனைத் தடுத்திருக்கலாமே!. மூன்று தடவைகளுக்கு மேல் நாம் தாக்குதல் நடத்தியிருக்கின்றோம். இவர்களின் இயலாமையை வைத்துக்கொண்டே நீங்கள் உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

உங்களது விமானப் படையால் இந்தியாவுக்கு ஆபத்து என்று கூறப்படுகிறதே?

நிச்சயமாக ஒருபோதுமில்லை. எமது கடற்படையாலோ, விமானப் படையாலோ அல்லது தரைப்படையாலோ எந்த விதமான எமது கட்டமைப்புக்களாலேயோ ஒருபோதும் எந்த அயல் நாட்டுக்கும் தீங்கேற்படுத்தப் போவதில்லை. எவருக்குமே நாம் அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை. எமது படைக்கட்டுமானங்களை நாம் கட்டியெழுப்பியது எமது மக்களின் தற்பாதுகாப்புக்காகவே. எமது மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான கௌரவமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கானதே. ஆகவே எமது மக்கள் மீது ஆக்கிரமிப்பை தொடுக்கின்ற எதிரிக்கு எதிராக அவை பயன்படுத்தப்படுமே தவிர எந்த எவருக்கும் அச்சுறுத்தல் விடுப்பதாக அவை அமையாது. அந்த வகையில் இது தவறாக முன்னெடுக்கப்படுகின்ற ஒரு பொய்ப்பிரச்சாரமே ஆகும்.

உங்களின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் இயக்கத்தில் என்ன பதவி நிலையில் உள்ளார்? விமான உருவாக்கத்தில் அவர் பங்கெடுத்தார் என்றெல்லாம் கூறப்படுகிறதே? ஏன் அவரைப் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவில்லை? அனைவரும் அறிந்து கொள்வார்கள் அல்லவா?

எமது அமைப்பில் பதவி நிலைகளை நாம் முதன்மைப்படுத்துவதில்லை. கடமைகளும் அர்ப்பணிப்புக்களுமே எப்போதும் முதன்மைப்படுத்தப்படும். அந்த வகையில் எமது தேசியத் தலைவரது மகனும் எமது விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கியமான பணியை ஆற்றிக்கொண்டிருக்கின்றார். ஆகவே அதில் பெரிதுபடுத்திக் கூறக் கூடியவாறு ஒன்றுமில்லை என்றே நினைக்கின்றேன்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளிப்படையாகவே உங்களை எதிர்த்து வருகிறார். ஆகையால் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.- தற்போதைய முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்த உங்களது கருத்து?

தமிழகத்தில் சில தமிழகக் கட்சித் தலைவர்கள் சில தவறான சக்திகளினுடைய தவறான தகவல்கள், பிரச்சாரத்தின் அடிப்படையில் தவறான புரிதல்களைப் பெற்றிருக்கின்றார்கள். நிச்சயமாக அவர்களும் விரைவில் மனம் மாறி ஈழத் தமிழ் மக்களினுடைய சுதந்திரமும் விடுதலையும் அவர்களின் உரிமை என்ற வகையில் சகலரும் இந்தப் போராட்டத்தினுடைய தார்மீக அடிப்படையைப் புரிந்துகொண்டு ஒன்றிணைந்து உதவுவார்கள் என்று தான் நாங்கள் நம்புகின்றோம். தமிழ் மக்களினுடைய இருப்பையும், உயிர் வாழ்தலிற்கான அவர்களுடைய வாழ்வுரிமையினையும் எந்தவொரு தமிழர் என்ற உணர்வு கொண்டவர்களும் மறுதலிக்கமாட்டார்கள் என்றே நம்புகின்றோம்.

இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி செய்யாவிட்டால் இலங்கையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றதே. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

சிங்கள தேசத்திற்கும், சிங்கள வெறிபிடித்த அரசுகளுக்கும் இன்று பல நாடுகள் இராணுவ பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றன. இரண்டு நோக்கங்களுக்காக செய்து வருகின்றன. ஒன்று மத பண்பாட்டு தொடர்பு உறவு என்ற வகையிலும் மற்றையது பிராந்திய பொருளாதார அரசியல் நலன்களின் அடிப்படையிலும் உதவிவருகின்றார்கள்.

இந்தியாவைப் பொறுத்த வரையிலும் அதனைச் சிங்களத் தலைமைகளும் சிங்கள மக்களும் தமது எதிரிகளாகவே கருதுகின்றார்கள். ஏனெனில் தமிழ்நாடு என்கின்ற தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நிலப்பரப்பிற்கு அண்மையாக அதனுடன் சகலவற்றிலும் தொடர்பு கொண்டவர்களாக எமது மக்கள் இருப்பதாகும்.

ஆயினும் அத்தகைய பிராந்திய ரீதியிலான உதவிகள் எம்மை வந்தடையக்கூடாது என்பதற்காகவே இன்றைய சிங்களத் தலைமைகள் தமக்கும் இந்திய அரசுக்குமிடையில் நல்லுறவு இருப்பது போல எப்போதும் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றது.

இலங்கைத் தீவில் தமிழினத்தையே முற்றாக இன அழிப்புச் செய்து அவர்களுக்கான தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து இல்லாமற் செய்வதே அரசின் உண்மை நோக்கமாகும். அதற்காக அவர்கள் எத்தகைய பிராந்திய விரோத சக்திகளிடமும் கையேந்துவதற்கு தயங்கியதில்லை. அதனொரு வெளிப்பாடே தற்போதைய நிலைமை.

ஆகவே அதனை இல்லாமற் செய்வதாகக் கருதிக்கொண்டு பிராந்திய அரசுகள் சிறிலங்கா அரசின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு கை கொடுப்பதென்பது மேலும் இப்பிராந்தியத்தின் சகஜ நிலையை கேள்விக்குள்ளாக்குமே தவிர தீர்வாக அமையாது.

மாறாக மற்றைய நாடுகளைப் போலவே இந்திய அரசும் தனது நாட்டினது இன மத பண்பாட்டு தொடர்பு உறவுவினது பாற்பட்டும் பிராந்திய பொருளாதார அரசியல் நலன்களின் அடிப்படையிலும் தமிழர்களின் வாழ்வுரிமையை அங்கீகரித்து அவர்களுடைய தாயகத்தில் அவர்களுக்கு கௌரவமான சுதந்திரமான இருப்பை உறுதிப்படுத்துவதொன்றே மிகவும் பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என்றே நான் நம்புகின்றேன் என்றார் அவர்.

puthinam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.