Jump to content

பூலன் தேவி கொல்லப்பட்ட நாள் ஜூலை 25: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம் - #SpotVisit


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூலன் தேவி கொல்லப்பட்ட நாள் ஜூலை 25: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம் - #SpotVisit

  • சின்கி சின்ஹா,
  • பிபிசி இந்திக்காக
25 நவம்பர் 2020
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,JEAN-LUC MANAUD / GAMMA-RAPHO VIA GETTY IMAGES

அந்த நிலப்பரப்பின் வெறுமை என்பது அந்திப்பொழுதில் சம்பல் நதியின் கரையோரத்தில் நின்றுகொண்டிருக்கும்போதுதான் முகத்திலறைந்தாற்போல உறைக்கிறது. ஒரு பாடலைப் போல சுழித்தோடும் சம்பல் நதியினூடே எப்போதோ இறந்துபட்ட ஒரு பெண் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

கொள்ளைக்காரியாக அறியப்பட்ட அந்தப் பெண் ஒரு ராபின்ஹுட்டைப் போல மற்றவர்கள் சார்பில் பழிவாங்கியிருக்கிறார், தாகூர்களின் ஆதிக்கத்துக்கு சவால்விட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண் அவர். இங்கே, அவர் பிறந்த இந்த கிராமத்தில், இன்னும் அவரின் குழந்தைப் பருவத்தைப் பற்றியும் கொள்ளை வாழ்வு பற்றியும், அவரது பழி தீர்க்கும் படலம் பற்றியும் அவர் கைது செய்யப்பட்டதைப் பற்றியும் பாடல்கள் பாடப்படுகின்றன.

திருமணங்களிலும் பிற விழாக்களிலும் இந்தப் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் ஒரு துண்டு நிலத்தில் நின்று கொண்டிருக்கும் பகுதி சம்பல்,

ஒரு பழுப்பு நிற வெட்டவெளி. இங்கே இப்போது கொள்ளைக்காரர்கள் யாரும் இல்லை. தரிசு நிலம் மட்டுமே மீதமிருக்கிறது. 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் இங்கு நல திட்டங்கள் மூலமாகப் போடப்பட்ட எந்த சாலையாலும் இந்த முரட்டு நிலப்பரப்பை சாதுவாக்க முடியவில்லை.

 
 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,CHINKI SINHA / BBC

தூரத்து நதி, எல்லாவற்றையுமே விழுங்கிவிடும் ஆற்றல் கொண்டதாகக் காட்சியளிக்கிறது. இந்த சபிக்கப்பட்ட நிலத்தில் இருக்கிற எல்லாவற்றையும் ஏற்கனவே அது அரித்துவிட்டது. இதைப் போல ஒரு காட்சியை இதற்கு முன்பு நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. இதயமானியில் தெரிகிற வளைந்த இதயத்துடிப்பு வரைபடம் போல இது தோற்றமளிக்கிறது. இது வேறு ஏதோ ஒரு இடமாகத்தான் தெரிகிறது எப்போதும். வரைபடம் உருவாக்குபவர்களையே குழப்புகிற நிலப்பரப்பு இது. ஒவ்வொரு முறையும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் வன்புணர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வரும்போதும் பூலன் தேவியின் கதை உயிர்தெழும்.

ஹாத்ரஸில் ஒரு 19 வயது பெண் தாகூர் சமூக ஆண்களால் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது தலித் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறிப்பிட்டுப் போராட்டக்காரர்கள் எச்சரித்தார்கள். அநீதி இழைக்கப்பட்ட பெண் பூலன் தேவியைப் போல துப்பாக்கியைத் தூக்கக்கூடும் என்றார்கள்.

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நீங்கள் நீதி தராவிட்டால் பூலன் தேவியின் வழிமுறையைக் கையிலெடுப்போம்" என்று போராட்டங்களில் குரல்கள் ஒலித்தன. அவ்வப்போது எழுந்த #dalitlivesmatter ஹேஷ்டேகுகளையும் சமூக ஊடகக் கோபங்களையும் தாண்டி, செய்திச் சுழற்சி அடுத்தடுத்த செய்திகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. இன்னமும் சிபிஐ அந்தக் குடும்பத்தை விசாரணை செய்துகொண்டிருக்கிறது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை சி.ஆர்.பி.எஃப் காவல் காக்கிறது. சிபிஐ அறிக்கை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை. பூலன் தேவி 22 தாகூர் ஆண்களைக் கொன்றதாக சொல்லப்படும் பெஹ்மாயிலிருந்து ஹாத்ரஸ் ஐந்து மணிநேர தொலைவில் இருக்கிறது. தாகூர் சமூக ஆண்களைக் கொல்லவில்லை என்று பூலான் தேவி மறுத்தார்.

நிலப்பரப்பு திடீரென்று மாறுகிறது. உடைந்த வாயில் ஒன்றின்மீது பெஹ்மாய் என்று எழுதப்பட்டிருக்கிறது. எழுத்துக்கள் மங்கலாகத் தெரிகின்றன. பாம்பாக வளையும் ஒரு குறுகலான பாதையில் நடந்தால் கிராமத்தை அடையலாம். ஆற்றங்கரையோரமாக தூசிபடிந்தபடி இருக்கிறது அந்த கிராமம். எப்போதும் காற்றில் மிதக்கும் தூசி இருப்பதால் கிராமத்துக் கொள்ளைக்காரர்களாலும் பெருவழிச்சாலைகளில் செல்பவர்களாலும் எளிதில் ஒளிந்து மறைந்துகொள்ள முடிந்தது. இறந்த 20 பேரின் பெயர்கள் தாங்கிய நினைவுச்சின்னமாக நின்றுகொண்டிருக்கிறது ஒரு சுவர்.

இங்கிருந்துதான் பூலன் தேவி, பெஹ்மாய் கிராமத்தை நோக்கிச் சென்றதாக சொல்லப்படுகிறது. 84 கிராமங்கள் நிறைந்த அந்த இடத்தில் பெரும்பாலும் தாக்கூர் மக்களே வசித்துவந்திருந்தார்கள். பெஹ்மாயும் அப்படிப்பட்ட ஒரு கிராமம்தான். பூலன் தேவிக்கு 17 வயது இருக்கும்போது பெஹ்மாயின் தாக்கூர் ஆண்களால் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டதாகவும், கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியோ தப்பித்த அவர், தன் தலைமையில் ஒரு கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். 18 வயதான பின்பு பூலன் தேவி 30 தாகூர் ஆண்களை ஆற்றங்கரைக்கு இட்டுச் சென்றதாகவும், அதில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,GEORGE ALLEN & UNWIN

நாற்பது வருடம் என்பது ஒரு நீண்ட காலம் என்றாலும், பலருக்கும் அந்த பெஹ்மாய் வன்முறை சம்பவம் நினைவிலிருக்கிறது. ஆனால் உலகத்தைப் பொருத்தவரை இது ஒரு பழிதீர்க்கும் நிகழ்வாகவும் நியாயத்தை மீட்டெடுத்த ஒரு நிகழ்வாகவும்தான் இருக்கிறது. உலகைப் பொறுத்தவரை பூலான் தேவி ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு தைரியமான இளம்பெண். அவர் இறந்து இருபது வருடங்களாகிறது.

கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் சில ஆண்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாருடைய குடும்பத்திலும் அன்று நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒரு உறவினராவது இருக்கிறார். 16 முதல் 55 வயது வரை கொண்ட அந்த 20 ஆண்களுக்கான நினைவுக்கோயிலை சென்று பார்க்குமாறு அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

கொல்லப்பட்ட 20 பேரில் 18 பேர் பெஹ்மாயைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ராஜ்பூரைச் சேர்ந்தவர், ஒருவர் சிகந்த்ராவைச் சேர்ந்தவர். சுவர்களின் அவர்களது பெயர்கள் சிகப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் நினைவுக்கோயிலில் மணிகள் ஒலிக்கின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஓடிய ரத்த ஆற்றை அங்கு இருக்கிற யாரும் மறக்கவில்லை.

இன்னும் அந்த வழக்குக்கான தீர்ப்புக்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தசாப்தம் கடந்துவிட்டது. இந்த ஜனவரியில் தீர்ப்பு வந்திருக்கவேண்டும். ஆனால் ஒரு காவல் நினைவேடு தொலைந்துவிட்டதால் வழக்கில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த 84 கிராமங்களிலும் தாக்கூர் இனத்தவர் தாக்கூர்களையே மணந்துகொள்கிறார்கள். பெஹ்மாயில் தாக்கூர்களைத் தவிர வேற்று இனங்களைச் சேர்ந்த இரு குடும்பங்கள் மட்டுமே உண்டு - ஒன்று ஒரு பிராமணக் குடும்பம், ஒன்று தலித் குடும்பம்.

நினைவேந்தலில் வைக்கப்பட்டுள்ள பலகை இப்படி அறிவிக்கிறது : "பிப்ரவரி 14, 1981ல், மாலை நான்கு மணிக்கு, கொள்ளைக்காரர்களின் கூட்டம் ஒன்று கீழ்க்கண்ட, ஆயுதம் ஏந்தாத, குற்றமற்ற, மேன்மையான கிராமத்தவர்களைக் கொன்றுவிட்டது"

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பெஹ்மாயில் இருப்பவர்கள் ஊடகங்களிடமிருந்து பரிதாபத்தை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் துக்கமாக இருந்தபோது எழுந்த பூலன் தேவியின் புகழ் அவர்கள் பக்கத்துக் கதையாடலை மறைத்துவிட்டிருந்தது. பூலன் தேவியை ஒரு கொடூரமான கொலைகாரி ஆக அவர்கள் பார்க்கிறார்கள்.

1981ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தின் குளிர் மதியப்பொழுதில் இந்த ஆண்கள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டபோது கிராமத் தலைவரான ஜெய் வீர் சிங் வீட்டில் இருக்கவில்லை.

"தன் கூட்டத்தினரோடு பூலன் அந்த காடுகளில் அலைந்துகொண்டிருப்பாள். கொள்ளைக்காரனும் பூலன் தேவியின் காதலன் என்று சொல்லப்பட்டவனுமான விக்ரம் மல்லாவைக் கொன்ற ஶ்ரீராமும் லாலாராமும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல" என்கிறார் அவர். "அவர்களது கிராமமான தமன்பூர் 11 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது. பிஜேபி ஆட்சியில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அவர்கள் செய்ததற்காக அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கவேண்டும்" என்கிறார்.

இந்த கிராமத்தில் பல பக்கா வீடுகளும் இடிந்த கோட்டைகளும் உண்டு. அடிப்பவர்களின் குரலையும் மீறிய ஒரு குரலாக ஒலிக்கிறது தலைவரின் குரல். "பூலன் தேவிக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை" என்கிறார் அவர். காவல்துறையும் ஊடகங்களும் தயாரித்த கட்டுக்கதை அது என்கிறார்.

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,CHINKI SINHA / BBC

"ஒவ்வொரு விழாவின்போதும் இந்த விதவைகள் அழுகிறார்கள். குழந்தைகள் அழுகிறார்கள். பிப்ரவரி 14 அன்று நாங்கள் நினைவுகூரும் சடங்கு ஒன்றை நடத்துகிறோம்" என்கிறார்.

இந்தியாவில் தேடப்பட்ட நபர்களில் முக்கியமானவராக பூலன் தேவி மாறினார். அவர் தலைக்குப் பத்தாயிரம் டாலர்கள் விலை வைக்கப்பட்டது. அந்த கிராமத்தில் யார் காவல்துறையைச் சேர்ந்தவர் யார் கொள்ளைக்காரர் என்று அடையாளமே கண்டுபிடிக்க முடியாமல் இருந்ததாகக் கூறுகிறார் தலைவர். எல்லாரும் காக்கி உடைகள் அணிந்திருந்தார்கள் என்கிறார். அடிக்கடி உணவு உண்ணவும் நீர் அருந்தவும் அவர்கள் கிராமத்துக்கு அருகில் வருவார்கள் என்றும், சட்டத்துக்குப் புறம்பானவர்கள் என்பதால் அவர்கள் தரிசுக்காடுகளில் மறைந்திருந்தார்கள் என்றும் சொல்கிறார்.

வீட்டின் முன்னால் இருக்கிற இரும்புக்கதவில் "வீழ்த்தப்பட்ட வீரமங்கை பூலன் தேவியின் வீடு" என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக பூலன் தேவியால் தொடங்கப்பட்ட ஏகலைவ சேனா அமைப்பினர், வீட்டு வளாகத்துக்குள்ளேயே அவருக்கு ஒரு சிலை வைத்திருக்கிறார்கள். வீடு புதிதாகக் கட்டப்பட்டிருக்கிறது. அதில் தற்போது பூலான் தேவியின் தாயார் மூலா தேவி வசிக்கிறார்.

படிகள் கொண்ட ஒரு பீடத்தின்மேல் அமைக்கப்பட்டுள்ள பூலன் தேவியின் பளிங்குச்சிலையில் சேலை அணிந்து, கை கூப்பியவாறு அவர் காட்சி தருகிறார். இடுப்பிலிருந்து துப்பாக்கி தொங்க, காக்கி பேண்ட் சட்டையுடன், பறக்கிற தலைமுடியை இழுத்துப் பிடிக்குமாறு நெற்றியில் கட்டப்பட்ட சிவப்பு ரிப்பனோடு நாம் பார்த்துப் பழகிய பூலான் தேவிக்கும் இதற்கும் எத்தனையோ தூரம். அவரை ஒரு சாதுவானவராக, காப்பாளராக, கூப்பிய கைகளோடு நிற்கும் ஒரு சேலை அணிந்த பெண்ணாகக் காட்ட விரும்புகிறார்கள் அவர்கள். அதுதான் அவரது அரசியல்வாதி அவதாரம். மீட்டெடுக்கப்பட்ட ஒன்று அது. அவர்கள் அந்த அவதாரத்தோடுதான் வாழ விரும்புகிறார்கள். ஆற்றுக்கு அருகில் பிரதான சாலையிலிருந்து தள்ளி அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலும் மல்லாக்கள்தான் இருக்கிறார்கள், அவர்கள் "வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என்ற பிரிவுக்குள் வருபவர்கள்.

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,CHINKI SINHA / BBC

ஆற்றங்கரையை ஒட்டிய கிராமத்தில் அவர் ஒரு தேவதை, தேவி. ஆற்றங்கரைக்கு அப்பால் இருக்கிற கிராமத்தில் அவர் ஒரு கொலையாளி. மொத்தத்தில் அங்கே இரண்டு நினைவுக்கோயில்கள் இருக்கின்றன. ஒன்று, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது ஆதிக்கம் செலுத்திய தாகூர்களின்மீது அவர் தீர்த்துக்கொண்ட பழியை நினைவுகூர்வதற்காக. மற்றொன்று, படுகொலை நிகழ்வில் அன்று கொல்லப்பட்டவர்களின் நினைவேந்தலாக.

அவ்வபோது இரு கிராமங்களிலும் மணிகள் ஒலிக்கின்றன. இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் ஒருவரை ஒருவர் சந்தித்த்தேயில்லை. அவர்கள் விலகியே வாழ்கிறார்கள். இப்போதும், மிர்சாபூரில் பூலன் தேவிக்காக தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டபோது அனில் குமார் பூலன் தேவியின் குழுவில் ஒருவர். நிலைமை பெரிதாக மாறவில்லை.

"தாகூர்கள் எங்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள்" என்கிறார் அவர். பேண்டிட் க்வீன் பூலான் தேவியைப் பற்றியும் அவரது கைது நிகழ்வைப் பற்றியும் அவர் பாடுகிறார். மல்லா சாதியில் பிறந்தவரான பூலன் தேவியைப் பற்றிய நாட்டார் பாடல்களைத் திருமணங்களின்போது அவர்கள் பாடுகிறார்கள். எல்லா பண்டிகைகளின்போதும் அவரை நினைவிலிருத்துகிறார்கள். குறிப்பாக, அக்டோபர் மாதம் துர்க்காதேவியின் வருகையின்போது அவர் கட்டாயமாக நினைவுகூரப்படுகிறார். தன் பாக்கெட்டில் பூலன் தேவி எப்போதும் ஒரு துர்க்கை உருவத்தை வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சரண் அடைந்ததைப் பற்றிய அறிக்கைக் குறிப்புகளிலும், சரண் அடைந்தபோது அவர் பாக்கெட்டில் இந்த உருவம் இருந்தது சொல்லப்பட்டிருக்கிறது.

அட்லாண்டிக் பத்திரிக்கையில் 1996ல் பூலன் தேவி சரணடைந்ததைப் பற்றிய ஒரு கட்டுரையில் விவரிக்கிறார் மேரி ஆன் வீவர்: "கடுங்குளிரான பிப்ரவரி மாலை. 1983. பழுப்பு நிற கம்பளிப் போர்வையின்மேல் ஒரு பளீர் சிவப்புப் போர்வையையையும் போர்த்திக்கொண்டு வந்தார் பூலன் தேவி. அவர் பின்னாலேயே பன்னிரெண்டு ஆண்கள் வந்தார்கள். அவர் இடுப்பிலிருந்து .315 மௌசர் துப்பாக்கி ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அவரது பெல்ட்டில் ஒரு வளைந்த குறுங்கத்தி செருகப்பட்டிருந்தது. அவர் மார்பின் குறுக்கே துப்பாக்கி குண்டுகளாலான தோளணிப்பட்டை ஒன்று. அந்த பன்னிரண்டு ஆண்களையும் மத்தியப் பிரதேசத்தின் சம்பல் நதியை ஒட்டிய தரிசுப்பகுதிகளில் அவர் நடத்திச் சென்றார்".

அவரை ராபின் ஹுட்டைப் போல பாவித்த ஏழை மக்களின் ஆதரவு அவருக்கு இருந்தது. அவர்கள் கொள்ளைக்காரர்களாக இருந்தாலும் ஏழை மக்கள் ஆதரவு தந்தனர். "கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு அவர் பணம் தந்தார். பெண்களுக்குத் திருமணங்களின்போது நகை தருவார்" என்கிறார் அனில். ஒருமாதிரியான இந்த அன்பு இந்த கிராமப்புறங்களில் தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது.

பிண்ட் கிராமத்தில் அவர் சரணடைந்தபோது பூலன் தேவி எப்படி இருப்பார் என்பதே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. காவல்துறையிடம் அவரது புகைப்படம் இல்லை. அவராகவே அவரது ஆயுதங்களைக் கீழே வைத்தார். மத்திய பிரதேசத்தின் முதல்வர் அர்ஜுன் சிங்கின் மக்கள் தொடர்பு நிகழ்வு தேசிய சர்வதேச ஊடகங்களால் எழுதப்பட்டது.

ஒரு பெண் தானாகவே வந்து, கூட்டத்தை நோக்கித் திரும்பி, துப்பாக்கியைக் காட்டிவிட்டு அதைக் கீழே வைத்து கைகூப்பி நின்றுகொண்டதாகப் பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டார்கள். அது பெரும் ஏமாற்றமாகப் பார்க்கப்பட்டது. ஒரு அபாயகரமான, அழகான பெண்ணாக அவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சாகசப் பிரியையான கொள்ளைக் கூட்டத் தலைவி, கொள்ளைக்காரர்களின் கறுப்பு அழகி, கொள்ளைக்கார அழகி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ஒருவரைப் பற்றி இப்படி எழுதுகிறார் அப்போதைய இந்தியா டுடேவின் ஒரு பத்திரிக்கையாளர்: "வெறிச்செயல் புரிந்துகொண்டிருக்கிற,மிக சாதாரணமாகத் தோற்றமளிக்கும், மனநிலைகளை மாற்றிக்கொண்டேயிருக்கிற, குழந்தைத்தனமான ஒரு மோசமான முன்கோப உள்ள சிறு பெண்".

வழக்கு நடக்காமலேயே அவர் பதினோரு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார். பிப்ரவரி 1994ல் அப்போதைய உத்தர பிரதேச முதல்வரான முலாயம் சிங் யாதவ், அவருக்கு எதிரான எல்லா புகார்களையும் ரத்து செய்யுமாறு மாநில வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டதன்பேரில் பூலன் தேவி விடுதலை செய்யப்பட்டார்.

ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்கான ஒரு நியாயமாக அவரது விடுதலை பார்க்கப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்களின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைக்கு எதிராகப் பழிதீர்ப்பவராக இருந்த பூலன் தேவி, சாதி என்ற அமைப்புக்கான ஒரு சவாலாக மாறினார். விடுதலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மிர்சாபூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார். வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரானார். மீண்டும் 1999 தேர்தலிலும் வெற்றி பெற்றார். 38வது வயதில் புது தில்லியில் அவரது வீட்டுக்கு அருகே கொல்லப்பட்டார்.

தான் இறப்பதற்குள் இந்தப் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்று ஒரு முதிய பெண்மணி காத்துக் கொண்டிருக்கிறார். "நம்பிக்கை இல்லாமல் தான் காத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்" என்கிறார் படுகொலையில் கணவனையும் கொழுந்தனையும் மாமனாரையும் இழந்த ஶ்ரீதேவி.

"அப்போது எனக்கு 24 வயது. எனக்கு நான்கு சிறு மகள்கள் இருந்தனர். என்வீட்டு ஆண்களை எங்கே கூட்டிப்போகிறார்கள் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. மாலையில் இறந்த உடல்களைப் பார்த்தோம். எங்களுக்கு என்ன நீதி கிடைத்துவிடும்? பூலன் தேவி இறந்துவிட்டார். அந்த நாளைப் பற்றிப் பேசாதீர்கள், தேவையில்லாத நினைவுகள் வருகின்றன.... அவற்றை நாங்கள் மறந்துவிடவில்லைதான், இருந்தாலும்" என்கிறார்.

இது ஒரு பழமையான சிக்கல். ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் தாகூர் ஆண்களால் வன்புணரப்பட்டு கொல்லப்பட்டதாக சொல்லப்படும் வழக்கில் வெளிவந்த அதே சிக்கல். அந்தப் பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. வழக்கின்போது, அது குடும்பத்தினர் செய்த ஆணவக்கொலையாக இருக்கலாம் என்றும் ஒரு பேச்சு நிலவியது.

பட்டியலின பெண்கள் வன்புணரப்படுவது கடந்த சில வருடங்களாக அதிகரித்துகொண்டே இருக்கிறது என்கிறது தேசிய குற்றப் பதிவேடு ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவு. கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் பத்து தலித் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைசம்பவங்கள், சிறுமிகளுக்கெதிரான பாலியல் தாக்குதல்களில் உத்தர பிரதேசம் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நிஷாத் ஜாதியைச் சேர்ந்தவர் பூலான் தேவி. தாகூர்களின் ஆதிக்கத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் சின்னமாக அவர் மாறிவிட்டார்.

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,RAJENDRA CHATURVEDI / BBC

"அது ஒரு இலகுவான வாழ்க்கை அல்ல. எங்களைப் பொறுத்தவரை அவர்கள் புரட்சியாளர்கள். பாகீகள் ஒரு கடினமான வாழ்வை வாழ்கிறார்கள். நீதி மறுக்கப்பட்டதால் அவர்கள் புரட்சியாளர்களாக மாறினார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் தாகூர்களின் அச்சுறுத்தலால் அவதிப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அதற்கு ஒரு முடிவு கட்ட விரும்பினார்கள்" என்கிறார் அனில். பூலன் தேவியின் இறப்புக்குப் பின்னால் அந்த கிராமமே சோகத்தில் இருந்ததாக நினைவுகூர்கிறார் அவர்.

ஆனாலும் அந்த கிராமம் துண்டிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஒரு பாலம் வரவேண்டியிருந்தும் ஒன்றும் நடக்கவில்லை. பல காலமாக அவர்கள் ஒரு இளங்கலைக் கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைத்துக்க்கொண்டிருக்கிறார்கள். இது பூலான் தேவியின் தொகுதி இல்லை என்றாலும் அவர் இருந்திருந்தால் நிச்சயம் உதவியிருப்பார். பூலன் தேவியின் பெயரில் ஒரு அருங்காட்சியகம் அமைப்பதாகவும் கிராமத்தில் பேச்சு நிலவுகிறது. அவரது சீருடைகள், சிவப்பு ரிப்பன், சிவப்புப் போர்வை, காலணிகளை அங்கே வைப்பார்கள். தங்கள் நாட்டார் கதைகளில் அவரது கதையை அவர்கள் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்காகப் பழி தீர்த்தவரை நினைவிலிருத்த அவர்கள் எல்லா முயற்சியும் மேற்கொள்கிறார்கள். கிராமத்து சிறுமிகளுக்குப் பூலன் தேவியின் கதை தெரியும். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் என்பதில் அவர்களுக்குப் பெருமையாக இருக்கிறது. ஆனால் அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ஒரு பெண்ணின் கதை காலப்போக்கில் மறைந்துவிடும் என்பதை நினைத்து அனில் வருந்துகிறார்.

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தங்கள் பெண்களை அவர்கள் "சிடியா" (பறவை) என்று அழைக்கிறார்கள். பூலன் தேவியின் சிலை நிறுவப்பட்டபோது அவரது அம்மா "பறவை கூட்டுக்குத் திரும்பிவிட்டது" என்றார். பூலன் தேவிக்கு மூன்று சகோதரிகள். தங்கை ராம்கலி தான் அம்மாவைப் பலகாலம் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் இப்போது இறந்துவிட்டார். ராம்கலியின் மகனும் மருமகளும் அதே கிராமத்திலேயே இன்னும் இருக்கிறார்கள். மூத்த சகோதரி ருக்மணி இப்போது ஒரு அரசியல்வாதி குவாலியரில் வசிக்கிறார். பூலன் தேவியின் அம்மா அதிகம் பேசவில்லை

ஹாத்ரஸில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல், குடும்பத்தினரின் அனுமதியின்றியே எரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சாம்பல் இன்னும் அங்கேயே இருக்கிறது. ஜலாவுன் கிராமத்தில், பூலன் தேவியின் மேன்மைகளைப் பாடும் பாடல் இன்னும் இசைக்கப்படுகிறது. இரண்டு கிராமங்களுக்கு இடையேயான தூரத்தை ஐந்து மணி நேரத்தில் கடந்துவிடலாம். இடையே நாற்பது வருடங்கள். ஒரு நீதி. ஒரு அநீதி. இறுதியில் எல்லாமே தூரம் தான். நீதியும்கூட. ஒருவருக்கும் இன்னொருவருக்குமிடையே. நீதிமன்றத்துக்கும் மக்களுக்கும் இடையே. மக்களுக்கும் மக்களுக்கும் இடையே.

https://www.bbc.com/tamil/india-55061863

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது கை மணிக்கட்டில் ஒரு நோ. அப்பில் பென்சிலைப் பிடிக்க விரல்களால் முடியவில்லை. ஆக கருத்துப் படங்களை சில நாட்களுக்கு உருவாக்க வாய்ப்பிருக்காது. நேற்று வைத்தியரின் அழைப்புக்காக பார்வையாளரின் அறையில் அமர்ந்திருந்தேன். எனக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தவர் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார், இடையிடையே என்னையும் பார்த்துக் கொண்டார். ஏதோ என்னுடன் பேச நினைக்கிறார் என்பது விளங்கியது. பார்வையாளர் அறை என்பதால் சத்தம் போட்டு கதைக்க முடியாது. நானும் ஒரு புன்னகையை அவருக்குத் தந்துவிட்டு இருந்து விட்டேன். அவருக்கான வைத்தியரின் அழைப்பு வர, எழுந்தவர் என்னருகில் வந்து, “நீங்கள் சிறீலங்காவா?’ என்று மெதுவாகக் கேட்டார்.  ‘ஓம்’ என்று தலையாட்டினேன். உங்கள் புது ஜனாதிபதியைப் பற்றி செய்தி வந்திருக்கிறது என தான் வாசித்துக் கொண்டிருந்த  அந்தச்  செய்தித்தாளை என்னிடம் தந்து விட்டுப் போனார். Taz யேர்மனியில் வெளிவரும் ஒரு பத்திரிகை. “இலங்கையில் இடதுசாரி ஜனாதிபதி - புதிய திசைகாட்டி” அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றியானது நாட்டிற்கு ஒரு புதிய திசையைக் காட்டுகிறது. ஆனால் எங்கே? சீனாவை நோக்கிச் செல்கிறதா? ஊழலைக் கைவிடுகிறதா? என்று அதன் முதற் பக்கத்தில் அனுரா திஸநாயக்காவின் பெரிய படத்துடன் செய்தி இருந்தது. செய்தியின் முழு விபரங்களும் உட் பக்கத்தில் இருந்தன. தென்னிலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை நகருக்கு வெளியே ஒரு வீதியின் முனையில் ரசீன் முஹம்மது பொறுமையுடன் நிற்கின்றார். வெயில் அடிக்கும் சூழலில் லேசான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. 21.09.2024 சனிக்கிழமை,சிறீலங்காவில் உள்ள 13,000 வாக்கு நிலையங்களில் ஒன்றான புத்த கோவிலின் பக்கத்து வீதியில் …. என்று ஆரம்பிக்கும் கட்டுரை, 38 ஆண்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலில் 17 மில்லியன் பேர்கள் வாக்களார்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. ….55 வயதான அனுரா திஸநாயக்கா, ஒரு தொழிலாளியின் மகன். நன்கு அறியப்பட்ட வேட்பாளர்கள் மத்தியில் இருந்து ஒரு தொழிலாளியின் மகனான அவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்…. ….இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உட்பட தெற்கே உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் கைகளில் இரத்தக் கறைகளைக் கொண்டவைதான் என்று கொழும்பில் உள்ள சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த கருத்துக்கணிப்பாளர் ரவி ரன்னன்-எலியா தெரிவிக்கிறார்…. என்று தொடரும் கட்டுரை இலங்கையின் பொருளாதரத்தையே பெரிதும் அலசுகிறது. …..”அதிகளவு கடன் சுமை காரணமாக நிதியளித்தல்  மற்றும் புனரமைப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளோ மிக அதிகமாக இருக்கின்றன.  இலங்கையின் தற்போதைய அந்நியச் செலவாணிக் கையிருப்பை வைத்து மூன்று மாதகால மட்டுமே இலங்கையால் இறக்குமதியைச் செய்ய முடியும் என்றும், அரசியல்துறையைச் சேர்ந்த அஷ்வின் ஹெம்மாதகம தெரிவித்துள்ளார். …..”கடந்த காலங்களில் இங்குள்ள அனைவரும் ராஜபக்ஷக்களுக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் நெருக்கடிக்குப் பிறகு, மக்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை  இப்பொழுது அளித்திருக்கிறது” என ரஸீன் முஹம்மத் தெரிவிக்கிறார் என்று கட்டுரை முடிவடைகிறது. ஆனால் அந்தப் பெரிய நீண்ட கட்டுரையில் சங்கெடுத்து முழங்கிய பொதுக் கட்டமைப்பின் தமிழ் வேட்பாளரான அரியநேத்திரன் பற்றி ஒரு வரி கூட இல்லை. ஆக சர்வதேசத்துக்கு எங்களின் சங்கொலி கேட்கவில்லை. அல்லது அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. https://taz.de/Linker-Praesident-in-Sri-Lanka/!6035398/  
    • அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர்.  புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  
    • சம்பந்தமேயில்லாத அலட்டல் இது. அப்படியானால், அதே 2020 தேர்தலில் விக்கினேஸ்வரன் முதல், பொன்னம்பலம் வரை எல்லோரும் பெற்றவை ஊழல் சிறிலங்காவில் நிகழ்ந்த தேர்தலின் கள்ள வாக்குகள் என்று எல்லோரையும் "கள்ளா" என்று திட்டலாம் அல்லவா? அப்படி இங்கே யாரும் திட்டாமல் இருக்க என்ன காரணம்? அவர்களின் தேர்வு மட்டும் இன்னொரு நாட்டில், ஊழல் இல்லாமல் நடந்தமையாலா😂? பேசிய விடயங்கள் மத்திய குழுவுக்கும் தெரியாதாமா? அப்படியானால் அந்த 23 பேருக்கும் என்ன தெரியுமாம்? யார் அந்த 23 பேரும்? நுணாவுக்கும் தெரியாது போல இருக்கு, பேசாமல் இருக்கிறார். ஒரு கட்சி/அரசியல்வாதி பற்றி நியாயமான குற்றச் சாட்டுகள்/குறைகளை முன்வைப்பது ஆரோக்கியமானது. சும் (அதற்கு முன் சம்) ஒரு குறிப்பிட்ட அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க மறுக்கிறார்கள் என்ற காரணம் மட்டும் வைத்துக் கொண்டு தான் இங்கே பலர் குத்தி  முறிகின்றனர்😂! என்னைப் பொறுத்த வரை, தாயக மக்களுக்கு இது போன்ற அரசியலாளர்கள் தான் தேவை. வெளிநாட்டு "தீ கக்கும் தேசியவாதிகள்" இங்கேயே நாடு கடந்த த.ஈ. அரசில் வேண்டுமானால் "தீ கக்கும்" தேசிய வீரர்களைத் தேர்வு செய்து மகுடம் சூட்டி மகிழட்டும்! யார் தடுத்தது😂?
    • நாங்களும் விதைக்கப் பட்டவர்களே-பா.உதயன்  They tried to bury us. They didn’t know we were seeds.”  அவர்கள் எங்களை புதைக்க நினைத்தார்கள் ஆனால் நாங்கள் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமாரா திசநாயக்கா சொன்ன முதல் வாக்கியம் இது. எந்த இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப் போராளிகளை ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளரும் கொன்று புதைக்கலாம் என்று தான் நினைகிறார்கள் ஆனால் அவர்கள் புதைக்க நினைப்பதெல்லாம் விதை என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் இன்னொரு காலம் விடுதலைப் போராளிகளே. உங்களைப் போலவே ஒரு காலம் மாற்றம் வேண்டியும், சம நீதி வேண்டியும், எமக்கான சுதந்திரம் வேண்டியும், போராடிய புரட்சிகர தமிழ் போராளிகளையும் புதைத்தார்கள் நீங்கள் சொல்லுவது போலவே இந்த இளைஞர்களும் புதைக்கப்படவில்லை அவர்கள் கூட விதைக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதனின் வாழ்வில் உணவு, உடை, உறைவிடம் என்பது அத்தியாவசிய தேவை. இது கிடைக்காத போது பசி, பட்டினி, துன்பம் என்று ஒரு மனிதனுக்கு வந்தால் அந்த ஆட்சியாளரை எதிர்த்து அந்த மக்கள் போராடுவார்கள். இதை தீர்த்து வைக்கும் ஒருவன் வந்தால் அவனுக்கு பின்னால் தான் எவனும் ஓடுவார்கள் இவர்களுடன் மதம், சாதி, இனவாதம் எதுகுமே கூட வராது. ஆனால் எப்பொழுது அவன் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் விடுகிறானோ அப்பொழுதே அவனுக்கு எதிராக மக்கள் திரும்பமும் போராட வேண்டிய நிலைமை உருவாகிறது. அது திரும்பவும் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு ஆயுதமாக பாவிக்கப்படும் என்பதை மறுக்க முடியாது.  இலங்கை மக்கள் கோபமும் வெறுப்புமாக பழைய ஆட்சியாளர்களை நிராகரித்து அந்த மக்கள் மாற்றங்களோடு கூடிய புதிய பாதையை தெரிந்துள்ளார்கள் இது அறகலயா என்ற போராட்டத்தின் தொடர்ச்சியே என்று கூட நினைக்கலாம். ஆகவே எல்லா மக்களுடைய எதிர்பார்ப்பையும் பெரும்பான்மையாக இருந்தால் என்ன சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தால்  என்ன அவர்களின் அவிலாசைகளை முடிந்த வரை நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளுக்கு தடையாக ஒரு காலம் இருந்தது போலன்றி மாற்றங்களோடு கூடிய உண்மையான இதய சுத்தியுடன் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே சமூக நீதி கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க உதவும்.  அறகலயா போராட்டமானது பெரும்பான்மை சிங்கள மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் இவர்கள் இனி இனவாதத்தை நிராகரித்து இலங்கையை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலப்படுத்த வேண்டுமானால் இந்த நாட்டில் புரை ஓடிபோய் இருக்கும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் சமத்துவ வாழ்வுக்கும் ஏனைய எல்லா இனங்களின்அவிலாசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் இதுவே உண்மையான மாற்றமாகவும் சமூக நீதியுடன் கொண்ட ஒரு தேசமாகவும் மாற உதவும். இவைகளை வைத்தே எதிர்காலத்தில் இவர்கள் உண்மையாகவே மாற்றம் செய்ய வந்தவர்கள் என்பதை மக்கள் உணர முடியும். இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு பாரம்பரிய உயர்குடியிலிருந்தும் பல சகாப்தமாக தொடரும் குடும்ப ஆட்சியிலும் இருந்தும் வெளியே ஒரு அதிபரை மக்கள் தேர்வு  செய்திருப்பது இதுவே முதல் முறை. மாற்றம் ஒன்றே மாறாதது பல சகாப்தகால குடும்ப அரசியலில் இருந்து இலங்கையை விடுவித்து ஒரு புதிய பாதையை திறந்து விட்டிருக்கிறீர்கள். மாற்றங்கள் அனைத்தையும் அவ்வளவு இலகுவில் மாற்ற முடியாது. சவால்களை தாண்டி தமிழ் மக்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையோடு பாதுகாப்பாக வாழக்கூடிய பாதையை திறந்து சமத்துவ தேசம் ஒன்றை கட்டி எழுப்புவீர்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள். பா.உதயன் ✍️ 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.