Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவேந்தல் நிகழ்வுகள் - ஏன் இந்த அவலம் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த அவலம் ?

image

என்.கண்ணன்

“ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பேன் என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்து விட்டு, நல்லூரில் வந்து, ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள் திலீபனை நினைவேந்த தகுதியற்றவர்கள் என்று நாடகமாடுகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி”

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்களுக்கு நீதிமன்றங்களின் மூலமாக தடை உத்தரவுகளை பெற்றிருந்த நிலையில், சாவகச்சேரி சிவன் கோவில் பகுதியில் 10 கட்சிகள் திடீரென ஒன்று கூடிய நினைவேந்தலை முன்னெடுத்திருந்தன.

செல்வச்சந்நிதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட அந்த அடையாள உண்ணாவிரத நிகழ்வுக்கு பருத்தித்துறை நீதிமன்றமும் தடைவிதிக்க, கடைசியில், சாவகச்சேரிக்கு அது மாற்றப்பட்டது.

அப்போது எல்லாக் கட்சிகளின தலைவர்களும், பொதுமக்களும் பெருமளவில் ஒன்று கூடினார்கள்.

இப்போது, கட்டுப்பாடுகளும், தடைகளும் இல்லாத நிலையில், திலீபன் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியிலோ, அமைப்புகள் மத்தியிலோ ஒற்றுமையில்லாத நிலை தோன்றியிருக்கிறது.

அரசியல் தலையீடுகளால், ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி, துரோகி ஆக்கி, ஓரம்கட்டி ஒதுக்கும் அரசியலுக்குள் நினைவேந்தல் நிகழ்வுகள் அகப்பட்டிருக்கின்றன.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், நினைவேந்தல் நிகழ்வுகள் இரண்டு விதமான நெருக்கடிக்கு உள்ளாகி வந்திருக்கின்றன.

ஒன்று, அரசாங்கத்தின் அடக்குமுறைகள், தடைகள், அச்சுறுத்தல்கள்.

ராஜபக்ஷவினர் ஆட்சியில் இருந்த காலப்பகுதிகளில், நினைவேந்தல்களை முன்னெடுப்பதற்கும், நினைவுச் சின்னங்கள் அல்லது, துயிலுமில்லங்களுக்குச் செல்வதற்கும் முடியாத நிலை காணப்பட்டது.

படைகளைக் கொண்டும், புலனாய்வாளர்களைக் கொண்டும், அதனைத் தடுப்பதற்கு உச்சக் கட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனை மீறி ஒரு சில நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. அதற்காக அரசியல் பிரமுகர்கள் பலர் வழக்குகளையும், எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டாவது நெருக்கடி, நினைவேந்தல்களை முன்னெடுப்பது யார் என்ற பிரச்சினை.  இது  நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் இருந்தது இப்போதும் உருவாகியிருக்கிறது.

திலீபன் நினைவேந்தல், மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள், ஆகிய மூன்றும் தான், பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள்.

இந்த மூன்றையும் ஆரம்பத்தில் சில அரசியல்வாதிகளின்  தற்துணிவுடன், தான், நினைவேந்தும் சூழல் காணப்பட்டது.

காலப்போக்கில் அச்சுறுத்தல் அதிகமற்ற சூழலில், எல்லாத் தரப்பினரும், அதற்காகப் போட்டி போடத் தொடங்கியதுடன் அரசியல் நோக்கிற்காக பயன்படுத்தவும் முற்பட்டனர்.

அவ்வாறான நிலையில் தான், அரசியல் கலப்பில்லாத, பொதுக்கட்டமைப்பின் ஊடாக நினைவேந்தல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் ஆரம்பமானது.

துயிலுமில்லங்களில் நினைவேந்தும் நிகழ்வுகளுக்குள் அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட்டது.

முளிவாய்க்கால் நினைவேந்தலுக்கும் சில கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதற்குள்ளும் போட்டிகள் காணப்பட்டது. 

முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன், இருந்த காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மாகாண சபையின் நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட போது, அதனைப் புறக்கணித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாக வடமராட்சி கிழக்கில் நினைவேந்தலை முன்னெடுத்தது நினைவிருக்கலாம்.

இப்போது, திலீபன் நினைவேந்தலை முன்னெடுப்பதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமக்குத் தான் தனி உரிமை உள்ளதாக மற்றைய தரப்புகளுடன் மல்லுக்கட்டுகிறது.

தங்களை விட்டால் வேறெவருக்கும் உரிமை இல்லை என்று ஏனைய தரப்புகளை துரோகிகளாக்கி தமிழ்த் தேசிய இனத்தை  கூறுபோட்டுப் பலவீனப்படுத்தும் அரசியலை முன்னெடுக்கிறது.

நினைவேந்தலின் தொடக்க நாளன்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஸ், வெளியிட்ட கருத்து கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையிலும், ஏனைய தரப்புகளை முகவர்களின் கையாள்கள் என்றும், துரோகிகள் என்றும் அறிக்கைகளை வெளியிட்டு வருவது பரவலான விமர்சனங்களையும் கண்டனங்களையும் தோற்றுவித்திருக்கிறது.

தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருந்தது ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தான். அது தெளிவானது. வெளிப்படையானது.

ஆனால், அவர் உண்ணாவிரதம் இருந்தது ஒற்றையாட்சிக்கு எதிராக என்று புது விளக்கத்தைக் கொடுத்திருந்தார் சுகாஸ்.

ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள், திலீபனை நினைவேந்துவதற்குத் தகுதியற்றவர்கள், துரோகிகள் என்று நினைவேந்தலின் புனிதத்தை கெடுக்கும் வேலையை அவர் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தாங்கள் ஒற்றையாட்சியை ஏற்கவில்லை, சமஷ்டியைத் தான் கேட்கிறோம் என்கிறது.

ஆனால், ஒற்றையாட்சி அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்கம் வகிக்கிறது. 

ஒற்றையாட்சிக்கு எதிராக -  பிரிவினை கோரிச் செயற்படமாட்டோம் என உறுதி கூறும் 6 ஆறாவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அதன் தலைவர் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் சத்தியப்பிரமாணமும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

"இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பேன் என்று நான் ஆணித்தரமாகப் பிரகடனப்படுத்தி உறுதியளிக்கிறேன்." என்பது தான், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரினதும் பதவி பிரமாண வாக்கியம்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பேன் என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்து விட்டு, நல்லூரில் வந்து, ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள் திலீபனை நினைவேந்த தகுதியற்றவர்கள் என்று நாடகமாடுகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

திலீபன் உண்ணாவிரத மேடையில் உரையாற்றிய போது, மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று தான் கூறியிருந்தார்.

தமிழீழ தாயகத்துக்கு இணையான ஒரு தீர்வுக்கு இணங்குவது பற்றி பேசவில்லை. அதாவது சமஷ்டியை ஏற்றுக் கொள்வதாக அவர் கூறவில்லை.

பின்னர் எப்படி, சமஷ்டியை ஏற்றுக் கொண்டவர்கள் புனிதர்களாகவும், மற்றவர்கள் துரோகியாகவும் இருக்க முடியும்?

திலீபனை நினைவேந்தல் செய்வதற்கு அருகதையை வரையறை செய்வதற்கோ, நிபந்தனைகளை விதிப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் கிடையாது என்பது சட்ட மேதைகளான முன்னணியினருக்கு, தெரியாமல் போனது ஆச்சரியம்.

தமிழீழ இலட்சியத்தை மட்டும் இலக்காக வைத்து போராடிய விடுதலைப் புலிகள், 13 ஆவது திருத்தம், ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்களை ஒதுக்கி வைத்திருந்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பலமான அரசியல் சக்தியை உருவாக்கியிருக்க முடியாது.

ஒரு காலத்தில் அவர்களால் துரோகிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளையும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக் கொண்டு ஒரே கட்டமைப்புக்குள் கொண்டு வந்திருந்தார்.

காலத்தின் தேவை கருதி, மக்களின் நலன் கருதி அவர் அந்த அரசியல் மாற்றத்துக்குத் தன்னையும் தயார்படுத்திக் கொண்டார்.

ஆனால், அவருக்குப் பின்னர்,  தமிழ்த் தேசிய அரசியலை துரோகிகளால் நிறைத்த பெருமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே உள்ளது.

தங்களுடன் இணங்காதவர்களையும், தங்களின் கொள்கைக்கு முரணானவர்களையும் துரோகிகளாக்கி, அந்நியப்படுத்தும் அரசியலையே அவர்கள் முன்னெடுத்தனர்.

இன்று தமிழர் தரப்பில் நினைவேந்தல்கள், போராட்டங்கள் என்று மக்களை அணிதிரட்ட முடியாமல் இருப்பதற்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம்.

ஒவ்வொரு கட்டமாக பிரிக்கப்பட்டு பிரிக்கப்பட்டு, மக்கள் அந்நியப்படுத்தப்பட்டதால்- விடுதலைக்காகவும், தமிழ்த் தேசியத்துக்காகவும் குரல் கொடுத்தவர்களும், பாடுபட்டவர்களும், ஏன் வீண் வேலை என்று ஒதுங்குகின்ற நிலை வந்திருக்கிறது.

தொடக்கத்தில் இருந்து கடைசி வரை போராட்டத்துக்குள் இருந்தவர்களைக் கூட துணிந்து துரோகியாக்கி வெளியேற்றும் அளவுக்கு முன்னணியினர், விடுதலைப் போராட்டத்துக்கு ஏக போக உரிமையாளர்களாகியிருக்கின்றனர்.

திலீபன் நினைவிடத்தை தங்களின் அரசியல் பிரசாரத்துக்காக ஊடக மாநாடு நடத்தும் இடமாக மாற்றியதும் கடும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. 

நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்களெல்லாம் இப்போது, திலீபனுடன் ஒன்றாக இருந்து சுக துக்கங்களைப் பகிர்ந்து, இலட்சியப் பயணத்தில் ஈடுபட்டவர்களை ஓரம் கட்ட முனைகிறார்கள்.

அதற்காக ஒற்றையாட்சி என்ற ஆயுதத்தையும் அவர்கள் தூக்கிப் பிடித்துள்ளனர். அவர்கள் ஏந்தியது இரண்டு பக்கமும் கூர் கொண்ட வாள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டது. 

ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள் திலீபனை நினைவேந்த தகுதியற்றவர்கள் என்றால், தமிழீழ இலட்சியத்தை விட்டுக் கொடுக்காதவர்கள் மட்டும் தான், அதனைச் செய்வதற்குத் தகுதியுள்ளவர்கள்.

தமிழீழம் தான் இலட்சியம் என்று பகிரங்கமாக கூறுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எவருக்கும் துணிச்சல் கிடையாது.

வெற்று அரசியல் கோசங்களால் தமிழ்த் தேசிய இனத்தை அவர்கள் பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இது தமிழ்த் தேசிய அரசியலின் அவலம். 
 

 

https://www.virakesari.lk/article/136362

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.