Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கின் குடிப்பரம்பலை முழுமையாக மாற்றியமைக்கத் திட்டம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகளைக் கோரும் தயான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கின் குடிப்பரம்பலை முழுமையாக மாற்றியமைக்கத் திட்டம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகளைக் கோரும் தயான்

By NANTHINI

16 OCT, 2022 | 09:41 PM
image

“இந்தியாவை மௌனிக்கச் செய்யவே திருமலை அபிவிருத்தியில் கூட்டிணைத்து கையூட்டு அளித்துள்ளார் ஜனாதிபதி ரணில்”

(ஆர்.ராம்)

டக்கு, கிழக்கின் குடிப்பரம்பலை முழுமையாக மாற்றியமைப்பதற்கான நீண்டகால நிகழ்ச்சி நிரலினை முன்னெடுப்பதற்கான சூழமைவுகள் தற்போது அடுத்தடுத்து முன்னெடுக்கப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ள இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக, தமிழ் அரசியல் கட்சிகள் அவசரமாக அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து நிலைமைகளை தெளிவுபடுத்துமாறும் கோரியுள்ளார்.

குடிப்பரம்பலை மாற்றியமைப்பதற்கான இலக்கினை நிறைவேற்றுவதற்கு தடையாக இந்தியா இருந்து விடக்கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருகோணமலை அபிவிருத்தி திட்டத்தில் அந்நாட்டை பங்காளியாக இணைத்து கையூட்டு வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திடீரென திருகோணமலைக்கு விஜயம் செய்து, அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியமை மற்றும் ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் இந்தியாவின் பிரதிபலிப்புக்கள் தொடர்பில் வீரகேசரிக்கு பிரத்தியேகமாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இலங்கை இம்முறை பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றது. 

வெறுமனே 7 வாக்குகளே கிடைத்திருந்தன. அதேவேளை இந்தியாவானது ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலும்,  அறிக்கையிலும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவது பற்றி அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றது.

அத்துடன் இம்முறை கூட்டத்தொடரின் போது இந்தியா இரண்டு சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகவே 13ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கத்தினை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறிருக்கையில், அடுத்தடுத்து நடைபெற்ற நிகழ்வுகளை தொடர்புபடுத்தி பார்ப்பதன் ஊடாக அடுத்து நடைபெறவுள்ள சில முக்கியமான நகர்வுகளை ஊகித்து அறிந்துகொள்ள முடியும்.

வடக்கு, கிழக்கில் தொல்பொருளியலின் பெயரால் இரண்டு மதங்களுக்கு இடையில் பதற்றங்களை தோற்றுவிப்பதற்கு அண்மைய நாட்களில் தீவிரமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. 

குறிப்பாக, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலையில் அந்தச் செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து, மகாவலி ‘எல்’ வலயத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சர் ரொஷான் ரணசிங்க செப்டெம்பர் 26ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தினை நகர்த்துவதற்கு ஆயத்தமாகியிருந்தார்.

இந்த விடயங்களுக்கு சமாந்தரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வடக்கு, கிழக்கில் மேற்படி நடவடிக்கைகள் ஊடாக குடிப்பரம்பலையும் நிலப்பரம்பலையும் மாற்றியமைக்கும் செயற்பாடும் இடம்பெறுகிறது  என்பதையும், மதங்களின் பெயரால் பொதுமக்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு பதற்ற நிலைமைகள் அதிகரித்துச் செல்வதையும் வெளிப்படுத்தியுள்ளனர். 

குறிப்பாக, சம்பந்தன் ஜனாதிபதிக்கான கடிதம் மூலமும் சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் பாராளுமன்றத்திலும் குறித்த விடயங்களை கோடிட்டுக் காட்டியுள்ளனர். அப்போது அரசாங்கத்தின் அமைச்சர்களோ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ அவர்களுடன் முரண்படவுமில்லை. பதிலளிக்கவுமில்லை. இதற்கு காரணங்கள் உள்ளன. 

குறிப்பாக பலஸ்தீன நிலப்பரப்பினை இஸ்ரேல் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதை நன்கு அவதானித்து திட்டமிட்ட லிலித் அத்துலத் முதலி 1983ஆம் ஆண்டு வடக்கிலும் கிழக்கிலும் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் குடிப்பரம்பலை மாற்றியமைத்து ஆக்கிரமிப்பு செய்வதற்கான திட்டமிடலை செய்து, அதனை வெவ்வேறு வடிவங்களில் நகர்த்துவதற்கு முயன்றிருந்தார்.

அதன் முக்கிய நகர்வே வெலிஓயா திட்டமாக இருக்கின்றது என்பது அனைவரும் அறிவர். தற்போது வெலிஓயாவின் தொடர்ச்சியாக மகாவலி எல் வலயத்தினை நீட்டிப்பதற்கு முயற்சிக்கப்பட்டிருக்கின்றது. 

நாட்டின் நெருக்கடியான நிலையில் இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று திருகோணமலையிலும் தொல்பொருளியல் துறையினால் திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பதற்றங்கள் தூண்டப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையாக இருப்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நகர்வு தான்.

அவர் ஜே.ஆர்.ஜயவர்த்தன, லிலித் அத்துலத் முதலி ஆகியோர் பங்கேற்றிருந்த அமைச்சரவையில் அங்கம் வகித்திருந்தவர். ஆகவே, அவருக்கு குறித்த விடயங்களை முன்னகர்த்துவதற்கான சூட்சுமங்களை நன்றாகவே அறிந்துள்ளார்.

அந்தப் பின்னணியில் தான் காய் நகர்த்தப்பட்டுள்ளது. இச்செயற்பாடானது திருகோணமலை, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பரம்பலை சிறுமைப்படுத்துவதும், பெரும்பான்மை மக்கள் அதிகளவில் வசிக்கும் அநுராதபுரம், பொலன்னறுவை ஆகியவற்றை விஸ்தரிப்பதாகவும் இருக்கலாம்.

இவ்வாறானதொரு செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக இருந்தால் இந்தியா பெரும் தடையாக இருக்கும். ஏனெனில், இந்தியா இலங்கையுடன் மேற்கொண்ட இந்திய  இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு தொடர்ச்சியாக கூறி வருகின்றது. 

இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் அதன் அழுத்தம் அதிகமாக இருந்துள்ளது.

ஆகவே தான் தற்போது திருமலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருமலை எண்ணெய் குதங்கள் உட்பட திருமலை நகர அபிவிருத்தி திட்டத்தில் இந்தியாவையும் கூட்டிணைத்துள்ளார். 

இதன் மூலம் தான் முன்னெடுக்கும் மேற்படி செயற்றிட்டம் தொடர்பில் இந்தியாவை, தடைகளை போடாமல் மௌனமாக இருப்பதற்கான கையூட்டாகவே பார்க்க வேண்டியுள்ளது.

அத்துடன் தற்போது இந்திய மத்திய அமைச்சரவையில் இருக்கும் முக்கிய அமைச்சர்களான ஹர்தீப் சிங் பூரியும் ஜெய்சங்கரும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கை விடயங்களில் நன்கு பரீட்சயம் உடையவர்கள் என்பதால் அவர்கள் தற்போதைய நகர்வின் பின்னணியை நிச்சயமாக விளங்கிக்கொள்வார்கள்.

அதேவேளை தமிழ் அரசியல் கட்சிகள் ஏலவே 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்பதற்கு தயக்கம் காண்பித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை பேசிக்கொண்டிருப்பதால் பயனில்லை.

எனவே, வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உடனடியாக இந்த நகர்வினை இடைநிறுத்துவதற்கு அனைத்துக் கட்சி கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்து நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும். 

பாராளுமன்றம் மற்றும் சர்வதேச அரங்குகளில் விடயத்தினை வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலமே மேற்படி திட்டம் முன்னகர்த்தப்படுவதை தடுத்து நிறுத்த முடியும்.

இல்லாவிட்டால், இந்தியாவும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தியில் கூட்டிணைக்கப்பட்டு, தமிழ்த்தரப்பும் 13ஆவது திருத்தத்தினை ஏற்க மறுக்கின்ற சூழல் நீடித்தால், வடக்கு, கிழக்கில் நடைபெறும் மாற்றங்கள் விரைவுபடுத்தப்படும்.

சம்பந்தன், சுமந்திரன், கஜேந்திரகுமார் கூறியது போன்று தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையினராக மாற்றப்படும் சூழல் ஏற்பட்டுவிடும் என்றார்.

https://www.virakesari.lk/article/137774

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.