Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பை: விராட் கோலி வேதனையை சாதனைகளாக மாற்றி மறுபிறவி எடுத்தது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: விராட் கோலி வேதனையை சாதனைகளாக மாற்றி மறுபிறவி எடுத்தது எப்படி?

  • நிதின் ஸ்ரீவத்ஸவ்
  • பிபிசி செய்தியாளர், ஆஸ்திரேலியாவிலிருந்து
53 நிமிடங்களுக்கு முன்னர்
 

विराट कोहली

பட மூலாதாரம்,TREVOR COLLENS

நல்ல காலமும் கெட்ட காலமும் மாறி மாறி வருவது இயல்பு தான். காலத்தை விட வலுவானது எதுவுமில்லை. காலம் தலைகீழாக மாறவும் அதிக நேரம் பிடிக்காது. இந்த சொலவடை பழையது தான். ஆனால், நிஜ வாழ்க்கையில், நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் உண்மை தான் இது.

இந்திய கிரிக்கெட்டில் இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. விராட் கோலி தற்போது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

2022 ஜனவரியில் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

"இது ஒரு கடினமான முடிவு தான். ஆனால் இத்தனை நாட்களில் நான் ஒரு கேப்டனாக என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தேன்" என்று அவர் கூறியிருந்தார்.

 

இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, அவர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ஒரு நாள் கேப்டன் பொறுப்பையும் ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தார்.

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக், "கோலி சற்று தன்னை மறந்த நிலையில் இருக்கிறார். அவர் மௌனமாகிவிட்டார், பேட்டிங் செய்யும் போது இருக்கும் அவரது ஆக்ரோஷம் இப்போது இல்லை.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

ஆட்டத்தின் போக்கைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் துடிக்கும் அந்தப் பழைய விராட் கோலியை காணவில்லை. அவரிடம் இன்னும் ஐந்து-ஆறு ஆண்டுகள் கிரிக்கெட்டில் நிலைக்க வாய்ப்பு உள்ளது," என்று குறிப்பிட்டார்.

முன்னாள் கேப்டன் கபில்தேவும் கோலிக்கு "ஓய்வு எடுங்கள்" என்று அறிவுறுத்தினார்.

பின்னர் ஆசிய கோப்பையில், விராட் கோலி நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு சதம் அடித்தார். ஆனால் சிறிது காலத்திற்கு முன், மெல்போர்னில் பார்வையாளர்களுக்கு விருந்தாக இருந்த அந்த ஷாட்கள் இப்போது இல்லை.

டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில், பாகிஸ்தானை தோற்கடிக்கும் பணியை கோலி தனது தோளில் சுமந்தார்.

அன்றிரவு ஹாரிஸ் ரவுஃப் வீசிய பந்துகளில் கோலியின் இரண்டு சிக்ஸர்களைப் பார்த்தவர், விராட் கோலியின் பெயருக்கு நடுவில் 'கிங்' என்ற பட்டப்பெயர் மீண்டும் திரும்ப வேண்டும் என்று உறுதியாக நம்பியிருப்பார்கள்.

1986ஆம் ஆண்டு, அன்று மாலை ஷார்ஜாவில் அடிக்கப்பட்ட ஜாவேத் மியான்டத்தின் சிக்ஸரை ஒரு தலைமுறை இந்திய ரசிகர்கள் டிவி திரையில் பார்த்தனர். விராட்டின் சிக்ஸர் அதை நினைவு படுத்துவதாக இருந்தது.

அதன்பிறகு, இந்தியா பாகிஸ்தானை பலமுறை தோற்கடித்தது, ஆனால் மியான்டத்தின் சிக்ஸருக்கு இணையாக ஒரு சில சிக்ஸர்களே கருதப்பட்டன.

 

விராட் கோலி

பட மூலாதாரம்,SAEED KHAN

1996 உலகக் கோப்பையில் வக்கார் யூனிஸின் ஒரு ஓவரில் அஜய் ஜடேஜாவின் 22 ரன்கள், பின்னர் 2003 உலகக் கோப்பையில் செஞ்சூரியன் மைதானத்தில் ஷோயப் அக்தரின் பந்தில் அப்பர் கட் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சிக்ஸர் என ஒரு சில குறிப்பிடத்தக்க சிக்ஸர்களுக்குப் பிறகு, கோலியின் இந்த சிக்ஸர்கள் எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் ஒரு பெரிய ஆறுதல் தான்.

இப்போது விராட் மெல்போர்னில் அந்த அந்தஸ்தை அடைந்தது மட்டுமின்றி மறு பிறவி எடுத்தும் வந்துள்ளார்.

பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்து விட்டு, தனது மன உறுதியை அதிகரிக்க கோலி இப்போது எதிரணி பந்துவீச்சாளர் அல்லது ரசிகர்களை நோக்கி அல்லாமல், தனக்குத்தானே பேசிக்கொள்வதை கவனித்தீர்களா?

கோலி கடந்த சில போட்டிகளில் வெற்றிக்குப் பிறகோ சிறப்பான இன்னிங்ஸுக்குப் பிறகோ வானத்தை நோக்கி விரலை உயர்த்தி தனக்குத்தானே பேசுவதையும் கவனித்தீர்களா?

அரை சதம் அல்லது வெற்றியின் போது மற்றவர்களுக்கு மட்டையைக் காட்டுவதற்குப் பதிலாக, கோலி இப்போது தனது முஷ்டிகளை மடக்கித் தரையில் குத்துவதை கவனித்தீர்களா?

நிச்சயமாக, இது கோலியின் புதிய தோற்றம், புதிய அவதாரம்.

உளவியலாளர்கள் ஆர் ஜி கௌடென் மற்றும் எல் கிரஸ்ட் ஆகியோர் தென்னாப்பிரிக்க ஜர்னல் ஆஃப் சயின்ஸில் " த மீடியேட்டிங்க் ரோல் ஆஃப் மென்டல் டஃப்னஸ்" என்ற கட்டுரையில், "விளையாட்டில் சவால்கள், வெற்றிகள் மற்றும் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளும் ஒரு வீரரின் போராட்ட அணுகுமுறையிலிருந்து தான் மன உறுதி வருகிறது. அந்த உறுதி பெற்ற பின் அவரது உடல் மொழி முற்றிலும் மாறுபடுகிறது" என்று எழுதியுள்ளனர்.

 

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிசிசிஐ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கோலி, "எனது இறுதி நோக்கம் அணியை வெற்றியடையச் செய்வது; அணிக்காக விளையாட வேண்டியது அவசியம்; அதற்காக நான் கடினமாக உழைத்து என்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். அது நடக்காத போது, என்னை நானே ஊக்குவித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது." என்றார்.

விராட் கோலி பொறுமையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியதற்கும், குடும்பத்துடன் விடுமுறை எடுத்துக்கொண்டதற்கும், கிரிக்கெட்டில் இருந்து ஒரு மாதம் விலகியதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.

ஆசிய கோப்பையில் 276 ரன்கள் எடுத்து, அந்தப் போட்டியில் அதிக ரன்களை எடுத்தவரானார் கோலி. இதன் மூலம் அவரது ஐசிசி தரவரிசையும் உயர்ந்தது.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஷான் பொல்லாக், "கோலியின் கவனம் ஒருபோதும் சிதறவில்லை" என்று கருதுகிறார்.

பொல்லாக் கூறுகையில், "போட்டி விரைவில் முடிந்தால், ஹோட்டல் அறைக்கு பதிலாக ஜிம்மிற்குள் பயிற்சி பெற வரும் வீரர் கோலி. அடுத்த போட்டிக்கு அவர் தயாராக வேண்டும் என்பதற்கான அறிகுறி இது. ஓரிரு தொடரில் விளையாட முடியவில்லை, அல்லது இரண்டு சீசன்களுக்கு சதம் அடிக்க முடியாமல் போனது ஒருவரின் பெருமையை குறைக்காது, மீண்டும் ஃபார்முக்கு திரும்ப அதிக நேரம் எடுக்காது." என்று குறிப்பிட்டார்.

காணொளிக் குறிப்பு,

தடுமாறிய இந்திய அணியை தூக்கி நிறுத்தி ஃபார்முக்குத் திரும்பிய விராட் கோலி

ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு கோலி மீது அதிக நம்பிக்கை இருந்தது, ஆனால் அவர் முன்பு போல் இப்போது ஒரு மேட்ச் வின்னராக இருப்பாரா ஐயம் பலருக்கு இருந்தது.

ஆனால் எப்போதும் போல விராட் கோலி பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுவர் போல் நின்றார்.

வாய்ப்பு இருந்தது, அதைத் தவற விடாத உறுதியும் இருந்தது.

160 ரன்கள் என்ற இலக்குடன் துவங்கிய இந்திய அணியில், கோஹ்லி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார், அதாவது மொத்த ஸ்கோரில் பாதிக்கு மேல் இவர் எடுத்தார்.

போட்டிக்குப் பிறகு, "இது போன்ற ஒரு ஆட்டத்திற்காகத் தான் ஒரு வீரர் கிரிக்கெட் விளையாடுவது. அப்படிப் பட்ட ஒரு ஆட்டம் அது. 14-15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை மீண்டும் ஒருமுறை உசுப்பி எழுப்ப இதுபோன்ற சவால்கள் தேவை." என்று அவர் கூறினார்.

இந்த சுற்றுப்பயணம் கோலியின் ரன்களைக் குவிக்கும் தாகத்துக்கு மட்டுமல்ல, அவரது இயல்பில் சிறப்பான மாற்றத்தை கொண்டு வருவதற்கான நேர்மையான முயற்சிக்கும் வழி வகுத்தது.

 

விராட் கோலி

பட மூலாதாரம்,SAEED KHAN

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு, விருப்பத்தின் பேரில் இரண்டு நாட்கள் நெட் பிராக்டீஸ் செய்ய வேண்டியிருந்தது. அதாவது, வீரருக்குத் தேவை என்றால் மட்டும் செய்யலாம்.

இரண்டு நாட்களிலும் விராட் பயிற்சிக்கு வந்து அதிக பேட்டிங் செய்தார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார், பின்னர் அவர்களுக்கிடையில் ஆட்டம் குறித்த நீண்ட விவாதம் நடந்தது.

இந்நாட்களில் களத்தில் கூட கோலியின் முந்தைய 'கோப குணம்' வெளிப்படுவதில்லை. அவர் சாதாரணமாகவே சிரித்துக்கொண்டே காணப்படுகிறார். பெர்த்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஒரு கேட்சைத் தவறவிட்டார். தன்னைத் தானே திட்டிக்கொள்வதற்குப் பதில், அவர் விரக்தியிலும் சிரித்துக்கொண்டார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டூயல், "விராட் கோலி போன்ற ஒரு வீரர் அந்த நிலையை அடைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார், அதன் பிறகு அவர் தொடர்ந்து முன்னேறி வருகிறார். பெரிய வீரர்கள் இந்த நிலைக்கு வருவதற்கு அதிக நேரம் எடுப்பதில்லை, ஆனால் சிறிது நேரம் ஆகிவிட்டால், விமர்சனங்கள் ஆரம்பமாகின்றன. கோலியின் மறுபிறவி ஒரு பெரிய வீரரின் அடையாளம்." என்கிறார்.

https://www.bbc.com/tamil/sport-63469019

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விராட் கோலி பிறந்தநாள்: வீழ்ச்சியில் இருந்து திமிறி எழுந்தவர் கதை

22 நிமிடங்களுக்கு முன்னர்
 

விராட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காலாவதியாகி விட்டார் என்று விமர்சிக்கப்பட்ட பலர் அப்படியே காணாமலேயே போயிருக்கிறார்கள். விராட் கோலியும் அப்படி விமர்சிக்கப்பட்டார். 360 டிகிரி மைதானத்தைச் சுற்றி அடிக்கும் புதியவகை கிரிக்கெட் உலகில் அவருக்கு இடமில்லை என்றார்கள். எதற்காக இந்த அணியில் இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்கள்.

இப்போதும் அவர் 360 டிகிரி சுழன்று அடிப்பதில்லை. ஆனால் அவர் காணாமலும் போகவில்லை. விமர்சனம் அவரைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. ஆனால் வீழ்த்தி விடவில்லை. ஏனென்றால் அவர் விராட் கோலி!

கிரிக்கெட்டில் அவருக்கு எதுவுமே போதுமானதாக இருந்ததில்லை என்று கூறுகிறார்கள் விமர்சகர்கள். களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவரது உணர்ச்சிப் பெருக்கு பலரைக் காயப்படுத்தியிருக்கலாம். விமர்சனங்களுக்கும் காரணமாக அமைந்திருக்கலாம். அணித் தலைவர் என்ற பதவியையே பறித்திருக்கலாம். ஆனால் அவைதான் விராட் கோலியை கட்டமைத்திருக்கின்றன.

விராட் கோலிக்கு கடந்த சில மாதங்கள் மிகக் கடினமானவை. பாகிஸ்தான் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு பேசியபோது இதை அவரே கூறியிருக்கிறார். கடந்துபோன மாதங்கள் எந்த அளவுக்கு கடினமானவை என்றால் கிரிக்கெட் பந்தையோ பேட்டையோ தொடாமல் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாகக் கழிக்க வேண்டியிருந்தது.

 

"அறையில் கூட்டமாக மனிதர்கள் இருக்கும்போதும் தனிமையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது" என்று வெளிப்படையாகவே தனது உளவியல் சிக்கல் பற்றிக் கூறினார்.

அவர் மீதான அழுத்தம் அதிகம். சரியாக ஆடவில்லை, நூறு ரன்களைக் கடக்கவில்லை என்ற கருத்து அவரே நம்பும்படியாக திணிக்கப்பட்டிருந்தது. அதனால்தான் பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்குப் பிறகு அந்த அழுத்தத்தை அடித்து நொறுக்குவது போல கையை மடக்கி மைதானத்தை குத்த வேண்டியிருந்தது.

360 டிகிரி ஆட்டக்காரர் இல்லையா?

விராட் கோலி டி20 ஆட்டக்காரரோ, ஒருநாள் போட்டிக்கான ஆட்டக்காரரோ அல்ல. அவர் அனைத்து வகையான போட்டிகளிலும் ஆடக்கூட வீரர் என்பதை விமர்சகர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

விராட் கோலிக்கு 360 டிகிரியிலும் ஆட முடியும். ஆனால் அவர் அப்படி ஆடுவதில்லை. அது பற்றி ஒரு பேட்டியில் இயான் சாப்பல் கேட்டபோது, "அப்படி ஆடுவது டெஸ்ட் கிரிக்கெட் போன்ற மற்ற பார்மட்களை பாதிக்கும் " என்று கூறியிருக்கிறார் விராட் கோலி.

"கிரிக்கெட்டில் பாரம்பரிமாக உள்ள ஷாட்கள் மூலமாகவே அவருக்கு ரன்கள் கிடைத்துவிடுகின்றன. தேவையில்லா ஷாட்களை அவர் ஏன் அடிக்க வேண்டும்? அவருடைய ஆட்டத்தில் வழக்கத்துக்கு மாறான 'கன்னா பின்னா' ஷாட்களை பார்ப்பது மிகவும் அரிது" என்கிறார் விளையாட்டு விமர்சகரான சுமந்த் சி ராமன்.

 

விராட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 19-ஆவது ஓவரில் கடைசி இரு பந்துகளில் அவர் அடித்த சிக்சர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பேட்மேன்கள் அடித்ததிலேயே மிகவும் சிறப்பானவை" என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

வங்கதேசத்துடனான அவருடைய ஸ்ட்ரெய்ட் திசை சிக்சர் டெண்டுல்கரின் சார்ஜா சிக்சருடன் ஒப்பிடப்பட்டது.

ஃபார்மில் இல்லாமல் இருந்தாரா?

விராட் கோலி இதற்கு முன்னர் ஃபார்மில் இல்லை என்பதை ரவி சாஸ்திரி ஏற்கவில்லை. "அவருடையே இப்போதைய ஆட்டத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆஸ்திரேலியாவில் இது நடக்கும் என்று எனக்குத் தெரியும்" என்கிறார் ரவி சாஸ்திரி.

இதே கருத்தை சுமந்த் சி ராமனும் கூறுகிறார். "ஃபார்மில் இல்லை என்று கூறப்பட்ட காலத்தில்கூட அவர் சராசரியாக ஒரு கிரிக்கெட் வீரர் ஆட வேண்டிய ஆட்டத்தை ஆடிக்கொண்டுதான் இருந்தார். விராட் கோலி என்பதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது" என்கிறார்.

டி20 போட்டிகளில் அவருடைய சராசரி 53.13. ஒரு நாள் போட்டிகளில் 57.68. டெஸ்ட் போட்டிகளில் 49.53. இந்தப் புள்ளி விவரமே அவர் அனைத்து வகையான ஆட்டங்களுக்கும் பொருந்தக்கூடியவர் என்பதைச் சொல்லிவிடும். அதிலும் ஒப்பீட்டளவில் புதியவகை நுணுக்கங்களைக் கொண்டிருக்கும் டி20 கிரிக்கெட்டில் அவர்தான் அதிக ரன் எடுத்த, அதிக சராசரியைக் கொண்ட வீரர். அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் பிற முன்னணி வீரர்களுக்கு இணையானது.

 

விராட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சதம் அடிக்கவில்லை, ஆனால்…?

உண்மையில் விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் 2019 நவம்பருக்கும் 2022 செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் டி20 போட்டிகளில் மட்டும் 145 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 846 ரன்களைக் குவித்து 56.4 சராசரி வைத்திருந்தார். 19 ஒருநாள் போட்டிகளில் 10 அரைச் சதங்களை அடித்திருந்தார். ஆனால் சதம் அடிக்க வேண்டும் என்ற அழுத்தமே அவருக்குத் தரப்பட்டிருந்தது. டெஸ்ட் போட்டிகளில் அவர் நீண்ட இன்னிங்ஸ்களை ஆடவில்லை என்பது மட்டுமே அவர் மீதான விமர்சனமாக இருக்கலாம்.

"ஆப் சைடில் அடித்து அவுட் ஆகும் பலவீனம் அவருக்கு இருந்தது. அதை சில பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் அதுவும் இப்போது இல்லை" என்கிறார் சுமந்த்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த சதமும், டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான 82 ரன்களும் அவர் ஃபார்மில்தான் இருக்கிறார் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டன.

ஆயினும் விராட் கோலி முன்புபோல் இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே கூறுகிறார். அவர் கூறுவது அவருடைய நிதானத்தைப் பற்றி. இதுபோன்ற நிதானமான விராட் கோலியை முன் எப்போதும் கண்டதில்லை என்கிறார் அவர்.

'விராட் கோலியின் ஃபிட்னெஸ்'

மைதானத்தில் விராட் கோலி எப்போது உற்சாகமாக இருப்பார். பந்தை நோக்கி பாய்ந்து செல்வார். பேட்டிங்கில் ஒரு ரன்னை இரண்டு ரன்னாக மாற்றுவதற்காக விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுவார். இவையெல்லாம் அவருக்குச் சாதாரணமாக வாய்த்துவிடவில்லை. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அவர் அதிகக் கவனம் செலுத்துகிறார்.

இந்தியாவிலேயே சிறப்பான ஃபிட்னெஸ் கொண்ட வீரர் விராட் கோலி என்று தேசிய கிரிக்கெட் அகாடெமியின் அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் உள்ள 23 வீரர்களில் விராட் கோலியைத் தவிர மற்ற அனைவரும் காயம் உள்ளிட்ட ஏதோ ஒரு காரணத்துக்காக ஃபிட்னெஸ் தொடர்பான பிரச்னைகளுக்காக தேசிய கிரிக்கெட் அகாடெமியை நாட வேண்டியிருந்தது என்று அந்த அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

"விராட் கோலியின் பலமே அவருடைய பிட்னெஸ்தான். அதைக் கொண்டுதான் அவர் தனது கிரிக்கெட்டை வடிவமைத்திருக்கிறார்" என்கிறார் சுமந்த் சி ராமன்.

 

விராட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2020-ஆம் ஆண்டில் கோவிட் தொற்றால் உலகமே போராடிக் கொண்டிருந்த காலத்தில்கூட விராட் கோலி தனது உடலைப் பராமரிப்பதில் சமரசம் செய்து கொண்டதில்லை என்பதை அவரது சமூக வலைத்தளப் பக்கங்களைப் பார்த்தாலே தெரியும்.

அசைவ உணவுகளால் தனது ஃபிட்னெஸுக்கு பிரச்னை வருகிறது என்பதால் கடந்த சில ஆண்டுகளாக தனது உணவுப் பழக்கத்தையும் அவர் மாற்றிக் கொண்டிருக்கிறார்.

'இந்தியாவின் ஆல்டைம் கிரேட்'

கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியக் கிரிக்கெட்டின் தற்கால முகம் அவர்தான் என்கிறார் சுமந்த் சி ராமன்.

"சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இணையான வீரர். இந்தியாவின் அனைத்துக் கால கட்டத்திலுமான சிறந்த வீரர் என்கிறார்" சுமந்த்.

 

விராட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெண்டுல்கர், கவாஸ்கர் போன்றோரும் அவர்களுடைய கேப்டன்சிகளில் இருந்த காலத்தில் பின்னடைவுகளைச் சந்தித்தார்கள். அதே போன்றதொரு நிலைதான் விராட் கோலிக்கும் ஏற்பட்டது. அந்தப் பின்னடைவுகள் டெண்டுல்கரையோ, கவாஸ்கரையோ வீழ்த்திடவிடவில்லை. அவை கூடுதல் கிரிக்கெட்டை அவர்களுக்குள் கொண்டு வந்தன. ஆடுகளத்துக்குள் அவர்களை நிதானப்படுத்தின. 34-ஆவது வயதை எட்டும் விராட் கோலிக்கும் அப்படியே ஆகட்டும்!

https://www.bbc.com/tamil/sport-63510100

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.