Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச சமூகமும் அரசியல் குருடர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகமும் அரசியல் குருடர்களும்

[01 - September - 2007]

இனநெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு அதிகாரப்பரவலாக்கல் திட்டமொன்று தொடர்பில் தென்னிலங்கையில் கருத்தொருமிப்பைக் காண்பது அவசியமென்று கூறிக்கொண்டு கடந்தவருடம் சர்வகட்சி மகாநாட்டைக் கூட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இப்போது அந்த மகாநாட்டை என்ன செய்வதென்று தடுமாறிக் கொண்டிருக்கிறார் போலத் தோன்றுகிறது. தென்னிலங்கை அரசியல் சக்திகள் மத்தியில் கருத்தொருமிப்பைக் காண்பதற்கு முயற்சிப்பதென்பது ஒன்றும் புதியவிடயமல்ல. அத்துடன் ஒப்பேறக்கூடியதுமல்ல.கடந்த அரை நூற்றாண்டு காலமாக இந்தக் கருத்தொருமிப்புக்காணும் முயற்சிகள் சகல அரசாங்கங்களினாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அடிப்படையில் அவை தமிழ் மக்களுக்கு எந்தளவுக்குக் குறைவான அதிகாரப்பரவலாக்கலைக் கொடுக்கலாமென்பதைத் தீர்மானிப்பதற்கான தந்திரோபாயமாகவும் தீர்வு காண்பதை முடிந்த மட்டும் இழுத்தடித்து காலத்தைக் கடத்துவதற்கான யுக்தியாகவுமே அமைந்திருந்தன என்பது சரித்திரம்.

அரசாங்கம் அதன் சொந்தத்தில் அதிகாரப்பரவலாக்கல் திட்டமொன்றை முன்வைக்காமல் சகல கட்சிகளையும் கருத்தொருமிப்பைக் காணுமாறு கேட்பது உண்மையில் பொறுப்பற்ற ஒரு செயற்பாடு என்பது எமது அபிப்பிராயம். அத்தகைய கருத்தொருமிப்புக் காணும் முயற்சி யானை பார்த்த குருடர்களின் கதையாகவே இருக்கும். ஜனாதிபதி ராஜபக்ஷ கூட்டிய மகாநாட்டையடுத்து இரு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. ஒன்று விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக்குழு. மற்றையது இந்தப் பிரதிநிதித்துவக் குழுவுக்கு உதவுவதற்கான புத்திஜீவிகள் குழு. இரண்டாவது குழு சில மாதங்களுக்கு முன்னர் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த யோசனைகளுக்கு பேரினவாதச் சக்திகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பையடுத்து புத்திஜீவிகள் குழு தொடர்ந்து செயற்பட முடியாமலே போய்விட்டது.

இரு வாரங்களுக்கு முன்னர் பேராசிரியர் விதாரண தலைமையிலான சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழு அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தயாரான நிலையில் அதில் அடங்கியிருக்கக்கூடிய யோசனைகளில் தங்களது நிலைப்பாடுகளுக்கு விரோதமான அம்சங்கள் இருப்பதை உணர்ந்து கொண்ட பேரினவாதச் சக்திகள் அக்குழுவின் செயற்பாடுகளைக் குழப்பியடிக்கும் நோக்குடன் செயற்பட ஆரம்பித்தன. பிரதிநிதித்துவக் குழுவில் அங்கம்வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற வெளிப்படையான பேரினவாதச் சக்திகள் மாத்திரமல்ல, ஜனாதிபதி தலைமையிலான ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதியும் அறிக்கை வெளியிடப்படுவதைத் தாமதிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதையடுத்தே சிக்கல் நிலை தோன்றியது. ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு அப்பால் அதிகாரப் பரவலாக்கல் திட்டம் அமைய வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளே சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவில் பெரும்பான்மையாக இருக்கின்றபோதிலும், சிறுபான்மை எண்ணிக்கையான பேரினவாதக் கட்சிகளின் கருத்துக்களுக்கும் ஆட்சேபங்களுக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுத்ததைக் கண்டோம்.

சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழுவில் பங்கேற்காமல் வெளியில் இருந்து கூச்சல் போடும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.)யின் கருத்துக்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் இதுவிடயத்தில் அளிக்கப்படுகிறது. சமஷ்டி அடிப்படையிலான யோசனைகளை முன்வைக்கும் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு பேராசிரியர் விதாரண முயற்சிக்கிறார் என்று ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் குற்றஞ்சாட்டின. அத்துடன் அக்கட்சிகள் நின்றுவிடவில்லை. விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற சதிமுயற்சியொன்றுக்கு பேராசிரியர் விதாரண ஒத்துழைக்கிறார் என்றும் குறை கூறப்பட்டது. இத்தகைய நிலைமையையடுத்து சர்வ கட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் விதாரண இராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் அதை ஜனாதிபதி தடுத்துவிட்டதாகவும் தெரியவந்தது.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் அறிவுறுத்தலையடுத்து சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவில் அங்கம்வகிக்கும் அரசாங்கக் கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் கடந்த புதன்கிழமை கூடினர். இனநெருக்கடிக்கு இறுதித் தீர்வொன்று காணப்படும் வரை சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழு அதன் செயற்பாடுகளைத் தொடருவதற்கான தீர்மானம் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போதுள்ள பிரச்சினையென்னவென்றால், சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவில் பெரும்பான்மையான பிரதிநிதிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவகாரங்களுக்குக் கூட அரசாங்கம் இணங்குவதை அனுமதிக்க பேரினவாதச் சக்திகள் தயாரால்லை. சிறுபான்மையினங்களின் எந்தவொரு நியாயபூர்வமான அரசியல் அபிலாஷையையும் அங்கீகரிக்கத் தயாரில்லாத இந்தப் பேரினவாத சக்திகளைத் திருப்பதிப்படுத்தக் கூடிய அணுகுமுறையைக் கடைப்பிடித்துக்கொண்டு இனநெருக்கடிக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு முயற்சிப்பதாக உலகுக்கு கூறுகின்றமைதான் ஜனாதிபதி ராஜபக்ஷ செயற்பாடுகளில் உள்ள பாரிய முரண்நகை.

பேரினவாதச் சக்திகளின் நிகழ்ச்சிநிரலின் பிரகாரம் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதில் இறங்கிய ஜனாதிபதி ராஜபக்ஷ, சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கத்திற்காகவே அரசியல் தீர்விலும் தனக்கு அக்கறையிருப்பதாகக் காட்டுவதற்கு சர்வகட்சி மகாநாட்டைக் கடந்த வருடம் கூட்ட வேண்டியிருந்தது. சரித்திரம் புகட்டிய பாடத்தை தமிழ் மக்கள் மறக்கவில்லையென்றாலும், இந்த சர்வகட்சி மகாநாட்டின் மூலம் ஏதோ ஒருவகையில் அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கல் திட்டம் முன்வைக்கப்பட முடியும் என்று சர்வதேச சமூகம் நம்பிக்கை கொண்டிருந்ததைக் காணக்கூடியதாகவும் இருந்தது. சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இசைவாகச் செயற்படுவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷவினால் முடியாமல் இருக்கிறது. ஆனால், இதற்கு மேல் சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும் முடியாமல் இருக்கிறது. சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவின் செயற்பாடுகளில் கடந்த இரு வாரங்களில் ஏற்பட்ட குழறுபடிகள் இதற்கு தெளிவான சான்று. செயலில் எதையாவது சர்வதேச சமூகத்துக்கு காட்டவேண்டிய நெருக்கடி நிலைக்குள் ஜனாதிபதி தள்ளப்பட்டிருக்கிறார். இலங்கை யிலுள்ள `அரசியல் குருடர்கள் ' தொடர்ந்து யானை பார்ப்பதை சர்வதேச சமூகம் எவ்வளவு காலத்துக்கு பார்த்துக்கொண்டிருக்கப் போகிறது?

நன்றி - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.