Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்பிரச்சினையை வைத்து நடத்தப்படும் அதிகாரப் போர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-09-04

இனப்பிரச்சினையை வைத்து நடத்தப்படும் அதிகாரப் போர்

""தமிழரின் இனப்பிரச்சினையை மையமாக வைத்தே சிங்கள ஆளும் வர்க்கங்கள் காலம் காலமாகத் தமக்கிடையே அதிகாரப் போர்களை நடத்தி வந்திருக்கின்றார்கள். இப் போர்கள் மூலமே தமது அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைப்படுத்தி, பலப்படுத்த முனைந்துள்ளார்கள். இந்த அதிகாரப் போர்களும், அதன் விளைவாகத் தமிழரின் இனப்பிரச்சினையும் தீர்க்கப்படாது மேலும் மேலும் சிக்கலடைந்த காரணத்தாலேயே சமாதான முயற்சிகள் காலங்காலமாகத் தோல்வியில் முடிவடைந்தன.''

இவை புலிகளின் மதியுரைஞர், "தேசத்தின் குரல்'அமரர் அன்டன் பாலசிங்கம் தமது கடைசி நூலான "போரும் சமாதானமும்' என்ற புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தில் குறிப்பிட்ட வாசகங்களாகும்.

சிங்கள ஆளும் வர்க்கத்தின் பதவிப் போட்டா போட்டிக்கு தமிழரின் இனப்பிரச்சினை மையமாகும் மற்றொரு சந்தர்ப்பத்தை மீண்டும் ஒரு முறை நாம் தரிசிக்கும் இச்சமயத்தில், அதற்குப் பொருந்திப் போகும் அவ்வாசகங்களை மீள உருப்போட்டுப் பார்ப்பது பொருத்தமானதுதான்.

அரசுத் தரப்பின் ஊழல்கள் தொடர்பான "கோப்' அறிக்கை,"மிக்' விமானக் கொள்வனவு ஊழல், ரெலிக்கொம் பங்குமாற்ற விவகாரம், 107 அமைச்சர்களை நியமித்த குளறுபடி, வர்த்தக வங்கிகளிடம் இருந்து 5 ஆயிரத்து 600 கோடி ரூபாவைக் கடன்வாங்கும் பொருத்தமற்ற திட்டம் போன்றவற்றை முன்வைத்து மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ. தே. கவும், மங்கள சமரவீரவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவும் கூட்டு முயற்சி ஒன்றை ஆரம்பித்திருக்கின்றன.

அரச தரப்பை ஆட்சியிலிருந்து கவிழ்க்க எத்தனிக்கும் விதத்தில் சிங்கள ஆளும் வர்க்கங்களுக்கு இடையேயான புதியதொரு அதிகாரப் போருக்கு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முயற்சி வித்திட்டிருக்கின்றது.

இனி என்ன, சிங்கள ஆளும் தரப்பின் இந்த அதிகாரப் போருக்கான மையமாக, மதியுரைஞர் பாலா குறிப்பிட்டமைபோல தமிழரின் தேசிய இனப்பிரச்சினையே பயன்படுத்தப்படப் போகிறது என்பது திண்ணம்.

நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைக்காக அல்லாடிக்கொண்டிருக்கின்றது ஜனாதிபதி மஹிந்தரின் அரசு. சிறுபான்மையினரான தமிழர்களின் குறிப்பாக மலையகத் தமிழர்களின் கட்சிகளும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் எச்சமயத்திலும் அரசுத் தரப்பின் காலை வாரலாம் என்ற அச்சம் அரசுக்கு இல்லாமல் இல்லை.

அதேசமயம், ஐ. தே. கட்சியிலிருந்து அரசுப் பக்கம் தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டோரில் கணிசமான எண்ணிக்கையானோரும் ஏன் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய தூண்களான பல அமைச்சர்களும் கூட தற்போதைய அரசுத் தலைமையின் போக்கு, அரசுக்குள் தாங்கள் நடத்தப்படும் விதம், தங்களின் மீது "ராஜபக்ஷ பிறதர்ஸ் அன்ட் கம்பனி' அளவுக்கு மீறிச் செலுத்தும் அதிகாரம் ஆகியவை காரணமாக அதிருப்தியும் விசனமும் அடைந்திருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது. பொருத்தமான சமயம் வரும்போது அரசின் காலை வாரக் காத்திருக்கும் இவர்களுக்கு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒரு வாய்ப்பை அளித்து விடக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.

இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீளுவதாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை முயற்சியை ஒரேயடியாக முறியடிப்பதாயின் இந்தப் பிரேரணைக்கு எதிராகவும், இது விடயத்தில் அரசுக்கு ஆதரவாகவும் பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளை அணி திரட்டி, அரசுப் பக்கத்துத் தூண்களாக அவற்றை நிறுத்துவதுதான் இலகுவான வழி என்பது அரசுத் தலைமைக்கு நன்கு தெரியும்.

இன்றைய நிலையில், இவ்விவகாரத்தில் பௌத்த சிங்கள மேலாண்மை சக்திகளான ஜே. வி. பியையும், ஜாதிக ஹெல உறுமயவையும் அரசுத் தலைமை தன் பக்கம் வளைத்துத் தனது கைகளுக்குள் அடக்கிக் கொள்ளுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை எத்தனத்தை அடியோடு உதாசீனப்படுத்தித் தோற்கடிப்பது அரசுத் தரப்புக்கு துச்சமாகிவிடும்.

இந்த இருஅணிகளையும் இவ்விடயத்தில் தன் பக்கம் வளைத்துப் போடவே தமிழரின் தேசிய இனப்பிரச்சினையைப் பகடைக் காயாக்கப் போகின்றது அரசுத் தலைமை.

இந்த இரு கட்சிகளையும் ஜனாதிபதி மஹிந்தவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தவிர ஏனைய பெரும்பாலான கட்சிகள் அனைத்தும், இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையில் "நாட்டின் உத்தேச புதிய அரசமைப்பு ஒற்றை ஆட்சியை வலியுறுத்தக்கூடாது' என்ற நிலைப்பாட்டை, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தின் ஊடாக வெளிப்படுத்தி நிற்கின்றன. அவற்றின் இந்த நிலைப்பாடு காரணமாக விட்டுக்கொடுப்புக் காரணமாக தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான ஒளிக்கீற்று தென்படுவதாக சிலர் நம்பத் தலைப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்

மேற்படி ஜாதிக ஹெல உறுமய, ஜே. வி. பி. போன்ற பௌத்த சிங்களக் கடும் கோட்பாட்டாளர்களின் கட்சிகளைத் தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்கும் முயற்சியில் தன்னுடன் ஒன்றிணைப்பதற்காக, அந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டத்தை தனது துரும்பாக அரசுத் தலைமை பயன்படுத்தப் போகின்றது எனத் தெரியவருகின்றது.

மேற்படி இரு பேரினவாதக் கட்சிகளின் விருப்புப்படி "ஒற்றையாட்சி' முறை நீக்கப்படமாட்டாது என்று பிடிவாத நிலைப்பாட்டை அரசு எடுக்கவும்

அதற்குக் கைமாறாக, நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் அரசுத் தரப்பை இவ்விரு கட்சிகளும் காப்பாற்றி காபந்து பண்ணவும்

எழுதப்படாத ஒரு கனவான் உடன்பாடு புரிந்துணர்வு சம்பந்தப்பட்ட பேரினவாதக் கட்சிகளுக்கும் அரசுத் தலைமைக்கும் இடையே உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தைத் துரும்பாகப் பயன்படுத்தி, அதற்காக உருவாகக் கூடிய தீர்வு யோச னையை, அரசையும் ஆட்சியையும் காப்பாற்றும் அதிகாரப் போட்டிக்கு பலிகொடுத்து, ஆட்சிப் போட்டிக்கு இனப்பிரச்சினையை மையமாகப் பயன்படுத்தும் மற்றொரு அத்தியாயத்தை அரங்கேற்ற கொழும்பு தயாராகி வருகிறது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.