Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகளைக் கணக்கிட்டபோது, கிடைத்த 'அதிர்ச்சி' விவரம்- என்ன தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகளைக் கணக்கிட்டபோது, கிடைத்த 'அதிர்ச்சி' விவரம்- என்ன தெரியுமா?

பெண்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் வசிக்கும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. அதில் மிகக் கவனிக்கத்தகுந்த அறிவிப்பாக, பெண்களுக்கான உரிமைத் தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அறிவித்தார்.

தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்கப்படவுள்ள இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளன்று துவக்கிவைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த உரிமைத் தொகைக்கான தகுதிகள் என்ன என்பது விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் இப்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது, செயல்பாட்டிற்கு வரவில்லை; உரிமைத் தொகையைப் பெறவிரும்பும் பெண்களுக்கான தகுதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும்கூட பல தரப்பினரும் இந்தத் திட்டம் மிக முக்கியமானது எனக் கருதுகின்றனர்.

 

"பெண்களின் உழைப்பின் மதிப்பு ஆண்களின் ஊதியத்தைவிட அதிகம்"

சென்னையின் பின்தங்கிய பகுதி ஒன்றில் தொண்டுநிறுவனம் ஒன்று, ஓர் ஆய்வில் இறங்கியது. அதன்படி இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற குடும்பத்துப் பெண்களிடம், வீட்டில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் வெவ்வேறு வண்ணங்களில் ஒரு காகிதம் அளிக்கப்பட்டது. அவர்கள் அந்த வேலையை வெளியில் சென்று செய்தால், என்ன மதிப்பு இருக்குமோ, அந்த மதிப்பு அந்த காகிதத்திற்கு அளிக்கப்பட்டது. வீட்டில் பெண்கள் ஒரு வேலையைச் செய்து முடித்த பிறகு, ஒரு உண்டியலில் அந்தக் காகிதத்தை எடுத்துப் போட வேண்டும். மாத முடிவில் அந்த உண்டியல் திறக்கப்பட்டு அதில் இருந்த காகிதங்களை எண்ணி, அவர்களின் ஊதியம் மதிப்பிடப்பட்டது.

அப்போது ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியவந்தது. அதாவது, பல பெண்கள் செய்த வேலைக்கு ஊதியம் அளித்தால், அது அவர்கள் கணவர்கள் சம்பாதிக்கும் ஊதியத்தைவிட அதிகமாக இருந்தது.

"ஆனால், இந்த உழைப்பு குடும்பத்தில் அங்கீகரிக்கப்படுவதே இல்லை. இது 'ஊதியமில்லாத கவனிக்கும் பணி' (Unpaid Care Work) எனப்படுகிறது. இதற்கு பல நாடுகளில் அலவன்சுகளைத் தருகிறார்கள். இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு இதனை அங்கீகரித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஒரு நாளில் வீட்டைக் கவனிப்பதில் பெண்கள் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள், ஆண்கள் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள் எனப் பார்க்க வேண்டும். பெண்கள் 5 மணி நேரம் அந்த வேலையைச் செய்தால், ஆண்கள் சராசரியாக 13 நிமிடம்தான் செய்கிறார்கள். ஆனால், பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டால், அவர்கள் வேலைக்குச் செல்லாவிட்டால் 'சும்மா இருக்கிறார்கள்' என்றுதான் பதில் வரும்.

வீட்டு வேலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆகவே, இந்தத் தொகையை அரசு பெண்களுக்கு அளிக்கும் நிதி உதவியாகப் பார்க்கக்கூடாது. இது ஒரு அங்கீகாரம். வீட்டில் செய்யும் அவர்களது கவனிப்புப் பணிக்கான ஊதியம் இது. இந்த உழைப்பு ஒரு நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கெடுக்கும்போது, கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

வரும் காலத்தில் நமது சமூகத்தில் வயதானவர்கள் அதிகம் இருப்பார்கள். ஆகவே அவர்களை பார்த்துக்கொள்ளும் பளுவும் அதிகரிக்கும். இந்தத் தருணத்தில் இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது மிக முக்கியமானது" என்கிறார் ஆக்ஷன் எய்ட் அசோசியேஷன் அமைப்பின் இணை இயக்குனர் எஸ்தர் மரிய செல்வம்.

பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள், வீட்டைக் கவனித்துக் கொள்கிறார்கள், பாத்திரங்களைக் கழுவுகிறார்கள், துணிகளைத் துவைக்கிறார்கள், வயதானவர்களின் நலன்களைப் பேணுகிறார்கள். குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவர்களுக்கு படிப்புச் சொல்லித் தருகிறார்கள். கிராமப்புறங்களில் பெண்கள் எரிபொருள் சேகரிக்கவும், தண்ணீர் எடுக்கவும்கூட நீண்ட நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. ஆனால், குடும்பத்தில் இவையெல்லாம் வேலையாகவே கருதப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் எஸ்தர் மரிய செல்வம்.

ஆனால், தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை, ஆண்களுக்கு சமமாக பெண்களையும் உயர்த்தும் நோக்கில், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதாக பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தில் பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலேயே இந்தத் திட்டத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.

பெண்களின் கண்டுகொள்ளப்படாத உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே இதனைக் குறிப்பிடுகிறார். திண்டுக்கல் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்தவருமான கே. பாலபரதி.

"இதுவரை வீடுகளில் வேலைசெய்யும் பெண்களின் மதிப்பு, அங்கீகரிக்கப்படவேயில்லை, மதிக்கப்படவும் இல்லை. அவர்கள் என்னதான் வேலைசெய்தாலும், குடும்பம் என்ற அமைப்பில் அன்பு என்ற பெயரில் அது சுரண்டப்படும். அதனை உழைப்பு என்றே மதிக்கமாட்டார்கள். தமிழ்நாடு அரசு அதனை முதன்முறையாக அங்கீகரித்திருக்கிறது. அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிக்காக இதைச் செய்திருக்கலாம்; அரசு கொடுக்கும் தொகை, ஐநூறாக இருக்கலாம் அல்லது ஆயிரமாக இருக்கலாம், ஆனால் வீட்டில் பெண்கள் பார்க்கும் பணியை அரசு அங்கீகரித்திருக்கிறது என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது" என்கிறார் பாலபாரதி.

பட்ஜெட்

பட மூலாதாரம்,TNDIPR

"குடும்பத்தின் பெண்கள் பற்றிய பார்வையை மாற்றும்"

பெண்கள் வழியாக கொடுப்போம் என்பது வேறு, பெண்களுக்கே கொடுப்போம் என்பது வேறு என்பதை அரசு புரிந்துகொண்டிருக்கிறது என்பதையே இந்தத் திட்டம் காட்டுகிறது என்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியரான எஸ். ஆனந்தி.

"இது மிகவும் வரவேற்கத்தக்க திட்டம். மகளிர் மிகுந்த எதிர்பார்ப்போடு இருப்பார்கள். ஒரு குடும்பம் என எடுத்துக்கொண்டால், சில செலவுகளைச் சமாளிக்க இது உதவும். எரிவாயு மானியம் நிறுத்தப்பட்டு, விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்ட நிலையில், அதற்குக்கூட இது உதவலாம்.

ஆனால், இந்தத் தொகையை அப்படிப் பார்க்கக்கூடாது. இந்தத் தொகை, உரிமைத் தொகை என்ற கருத்தாக்கத்தைக் கொண்டுவருகிறது. இது சமூகத்தில் மிகத் தீவிரமான தாக்கத்தை, நீண்டகால நோக்கில் இது ஏற்படுத்தும். ஏனெனில் குடும்பம் என்ற அமைப்பில் பெண்களின் உழைப்பை, அவர்கள் செயல்படுத்திவரும் பொறுப்பை இது அங்கீகரிக்கிறது. அவர்களுடைய ஊதியமில்லா உழைப்பை இந்த அரசு எப்படி பார்க்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

பெண்கள் வழியாக கொடுப்போம் என்பது வேறு, பெண்களுக்கே கொடுப்போம் என்பது வேறு என்பதை அரசு புரிந்துகொண்டிருக்கிறது. அரசின் பல திட்டங்கள் பெண்கள் மூலமாக குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டம் நேரடியாக பெண்களுக்கே பலனை அளிக்கிறது. இந்தத் தொகையின் காரணமாக, குடும்பத்திற்குள் பெண்களின் முக்கியத்துவம் உயரும். குடும்ப உறுப்பினர்கள் அவர்களை மதிப்புடன், வேறு மாதிரி பார்க்கும் வாய்ப்பு ஏற்படும்" என்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியரான எஸ். ஆனந்தி.

ஆனந்த் ஸ்ரீநிவாஸன்

பட மூலாதாரம்,ANAND SRINIVASAN

"பெண்களின் உழைப்பை மதிப்பிட்டு, GDPல் சேர்க்க வேண்டும்"

பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் வேலைக்கென வெளியிடத்திற்குச் சென்றாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்களுக்கு நேரமே கிடையாது. எப்போதுமே அவர்களுக்கு நேர வறுமை இருக்கும். அந்த அளவுக்கு வேலை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அதை இந்தத் திட்டம் அங்கீகரித்துள்ளது என்பது முக்கியமானது. அடுத்த கட்டமாக பெண்களின் உழைப்பை மதிப்பிட்டு, அதனை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்க வேண்டும் என்கிறார் எஸ்தர் மரிய செல்வம்.

இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் மிக ஆழமானதாக இருக்கும் என்கிறார் ஆனந்தி.

"இத்திட்டத்தின் பலன் என்னவாக இருக்கும் என்பது உடனடியாகத் தெரியாது. பெண்களுக்கான இலவசப் பேருந்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு இப்போது, அந்தத் திட்டத்தின் காரணமாக சேமிக்கப்படும் தொகையை பெண்கள் குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். அதைப் போலவே, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகுதான் இதன் தாக்கமும் முக்கியத்துவமும் தெரியவரும். அது தவிர, சமூக நோக்கில் இந்தத் திட்டம் ஏற்படுத்தவிருக்கும் தாக்கமும் முக்கியமானது" என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் முக்கியமான சமூக நலத் திட்டங்கள் பெரும்பாலும், விரும்பியோர் பெறும் வண்ணமே செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்தத் திட்டம் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் என்கிறது தமிழ்நாடு அரசு. அதனை எதிர்க்கட்சிகள் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன.

ஆனால், தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே அளிப்பதுதான் சரி என்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன். "தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதுதான் சரி. இது நிதியாக வழங்கப்படுவதால், அந்தப் பணத் தேவை இல்லாதவர்களும் வாங்குவார்கள். கூடுதலாக நிதி கிடைத்தால், தகுதியானவர்களுக்கு கூடுதலாக நிதி வழங்கலாமே தவிர, ஏற்கனவே பணக்காரர்களாக இருப்பவர்களுக்கு வழங்கக்கூடாது. அந்த வரையில் தமிழ்நாடு அரசின் முடிவு சரிதான்" என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/c3g74new5vzo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.