Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்காஸ் ஆகியோருக்கு தங்கப் பதக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்காஸ் ஆகியோருக்கு தங்கப் பதக்கம்

ஸ்வீட்டி பூரா

பட மூலாதாரம்,BFI

25 மார்ச் 2023, 15:41 GMT
புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்

உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்கா ஆகியோருக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

81 கிலோ பிரிவில் தங்கம் வென்ற ஸ்வீட்டி பூராவுக்கு இது இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் பதக்கம்.

சீனாவின் வாங் லினாவை அவர் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அரையிறுதியில் அவர் ஆஸ்திரேலியாவின் எம்மா கிரீன்ட்ரீயை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

 
நீத்து கங்காஸ்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

நீத்து கங்காஸ்

முன்னதாக, 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீத்து கங்காஸ்.

இவர் 2022ஆம் ஆண்டுக்கான பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனை விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் மங்கோலியாவின் லுட்சைகான் என்பவரை 5-0 என்ற கணக்கில் அவர் வீழ்த்தினார்.

டெல்லியின் இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடந்த போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் இந்த சாதனையைப் புரிந்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cd1326239ygo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகத் ஜரீன், லவ்லினா: உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 4வது தங்கம்

நிகத் ஜரீன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்: நிகத் ஜரீன்

26 மார்ச் 2023, 13:43 GMT
புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்

உலக பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

சனிக்கிழமை இந்தப் போட்டியில் இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்றிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 50 கிலோ எடைப்பிரிவில் நிகத் ஜரீன், 75 கிலோ எடைப் பிரிவில் லவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் தங்கம் வென்றனர். இதன் மூலம் இந்தப் போட்டியில் இந்தியா வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

நிகத் ஜரீன்

இந்திய வீராங்கனையும், பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை 2022 விருதுக்கு இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவருமான நிகத் ஜரீன் வியட்நாம் நாட்டின் நியூயன் தி டாம் என்பவரை ஞாயிற்றுக்கிழமை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 50 கிலோ எடைப் பிரிவுக்கான போட்டி இது.

 

இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடந்து வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நீத்து கங்காஸ், ஸ்வீட்டி பூரா ஆகிய இரண்டு இந்திய வீராங்கனைகள் தத்தமது பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றனர். நிகத் ஜரீனுக்கு கிடைத்த தங்கப் பதக்கம் மூன்றாவது தங்கப் பதக்கமாக வந்துள்ளது. தவிர, நிகத் வெல்லும் இரண்டாவது உலக சாம்பியன் தங்கப் பதக்கம் இது.

நிகத் ஜரீன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்: உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வேறொரு போட்டியில் தன்னோடு போட்டியிட்ட தன்னோடு போட்டியிட்ட தாய்லாந்து வீராங்கனை சுதாமட் ரக்சத்துடன் நிகத் ஜரீன்.

யார் இந்த நிகத் ஜரீன்?

தெலங்கானாவின் நிஜாமாபாத்தைச் சேர்ந்தவர் நிகத் ஜரீன். நிகத் ஜரீனின் தந்தை முகமது ஜமீல் அகமது தனது மகளுக்கு குத்துச்சண்டையில் ஊக்கம் அளித்து ஒரு வருடம் பயிற்சியளித்தார். பின்னர் 2009 இல் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த துரோணாச்சார்யா விருது பெற்ற ஐவி ராவிடம் பயிற்சி பெற்றார்.

2011 ஆம் ஆண்டு துருக்கியின் அன்டலியாவில் நடந்த சர்வதேச பெண்கள் இளைஞர் மற்றும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றது அவரது வாழ்க்கையில் முதல் பெரிய படியாகும்.

2011இல் ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை வென்ற நிகத் ஜரீன், 2022ல் பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியனாக உயர்ந்தார். பர்மிங்ஹாம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஃப்ளைவெயிட் பிரிவில் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கத்தையும் நிகத் ஜரீன் வென்றார்.

அவர் இந்தியாவில் நடந்த தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்துடன் 2022ஆம் ஆண்டை முடித்தார். தனது ஆற்றல் மிக்க மகள், அவருடைய ஆற்றல் முழுவதையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்க வேண்டும் என்பதற்காக, ஜரீனின் தந்தைதான் அவரை விளையாட்டில் அறிமுகப்படுத்தினார்.

12 வயதில் சண்டையின்போது கண்களில் கருவளையம் ஏற்பட்டது, திருமண வாய்ப்பு குறித்து உறவினர்கள் முன்வைத்த மோசமான கருத்துகள் ஆகியவற்றால் அவரது தாய் அடைந்த ஆரம்ப கால கவலைகளை ஒதுக்கிவிட்டு, அவருடைய கனவுகளைப் பின்பற்றுமாறு அவரை ஊக்குவித்தார் அவரது தந்தை. அதன் பிறகு நிகத் தயக்கமின்றி ஓடிக் கொண்டிருக்கிறார்.

லவ்லினா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்: லவ்லினா

லவ்லினா போர்கோஹெய்ன்

உலகப் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 75 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்ட்லின் பார்க்கரை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தினார் லவ்லினா போர்கோஹெய்ன். இது இந்தியாவின் 4வது தங்கப் பதக்கம் ஆனது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லவ்லினா போர்கோஹெய்ன் டோக்கியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது மூலம் ஒலிம்பிக்கில் பாக்ஸிங்கில் பதக்கம் வென்ற மூன்றாவது நபர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். பாக்ஸிங் ஜாம்பவான் முகமது அலியின் சண்டைகள் மூலம்தான் தனக்கு பாக்ஸிங் குறித்து தெரியவந்தது என்றும் அவரது பாக்ஸிங் மேட்ச்கள் தான் தான் பதக்கம் வெல்ல ஊக்கமாக இருந்தன என்றும் பிபிசிக்கு அளித்திருந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பெண்களுக்கு பாக்ஸிங் விளையாட்டு பாதுகாப்பானது அல்ல என்று ஊரில் அனைவரும் கூறியபோது தனது பெற்றோர்கள்தான் தன்னை நம்பினார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஒலிம்பிக் போட்டியில் அவர் கலந்துகொள்வதற்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டும் வந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

https://www.bbc.com/tamil/articles/c87vp017kdro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகத், நீது, ஸ்வீட்டி மற்றும் லவ்லீனா: இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் எழுதிய 'தங்க வரலாறு'

வீராங்கனைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,தீப்தி பட்வர்தன்
  • பதவி,விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நிகத் ஜரீன் தனது 12ஆவது வயதில் தடகளப் போட்டியில் பங்கேற்க நிஜாமாபாத் சென்றார். அப்போது வரை அவர் ஒரு இளம் வீரராக மற்ற தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டார்.

நிகத் அங்கு குத்துச்சண்டை தவிர பல விளையாட்டுகளில் பங்கேற்றார். ஆனால் அவரது எண்ணம் ஒரு விஷயத்தில் நிலைத்திருந்தது.

அவர் தன் தந்தை முகமது ஜமீல் அகமதுடன் அங்கு சென்றார். அவர் தன் தந்தையிடம், "குத்துச்சண்டை என்பது ஆண்களுக்கு மட்டும்தானா?" என்று கேட்டார். குத்துச்சண்டையுடன் நிகத்தின் உறவு இந்த அப்பாவித்தனமான கேள்வியுடன் தொடங்கியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் நிகத் தங்கப் பதக்கம் வென்றார். இது மட்டுமல்லாமல் மேலும் மூன்று பெண் குத்துச்சண்டை வீரர்களும் தங்கப் பதக்கங்களை வென்று உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற சாதனையை சமன் செய்தனர்.

 

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 50 கிலோ லைட் ஃப்ளைவெயிட் பிரிவின் இறுதிப் போட்டியில், நிகத் ஒருதரப்பாக அமைந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் வியட்நாமின் நகுயாம் தி டாமை தோற்கடித்தார்.

நிகத் ஜரீன் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வெல்வது இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகும்.

ஞாயிற்றுக்கிழமை லவ்லீனா போர்கோஹைன் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் முதல் வெற்றியை பெற்றுத்தந்தார்.

75 கிலோ பிரிவில் ஆஸ்திரேலியாவின் கெய்ட்லின் பார்க்கரை தோற்கடித்து உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக அவர் தங்கப் பதக்கம் வென்றார்.

ஒரு நாள் முன்னதாக, 48 கிலோ மினிமம் எடைப் பிரிவில் நீது கங்கஸ் தங்கப் பதக்கத்தையும், ஸ்வீட்டி பூரா 81 கிலோ லைட் ஹெவிவெயிட் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்கள்.

தங்கப் பதக்கத்துடன் கூடவே இந்த குத்துச்சண்டை வீரர்களுக்கு பரிசுத்தொகையாக தலா 82.7 லட்சம் ரூபாய் காசோலையும் கிடைத்தது.

இந்த நான்கு பேரின் அபார வெற்றியின் காரணமாக இந்திய அணி, உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 இல், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

"இது ஒரு வரலாற்று சாதனை. நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஆனால் இன்று தெரிந்த தன்னம்பிக்கை இதற்கு முன்பு எப்போதும் காணப்படவில்லை. சில வீரர்கள் முதல் சுற்றுகளில் பின்தங்கியிருந்தாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு இறுதி வரை போராடினார்கள்,” என்று இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய குத்துச்சண்டை சங்கத் தலைவர் அஜய் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

எதிர்கால நம்பிக்கை பற்றி குறிப்பிட்ட அவர், "இங்கு வெற்றி பெறாத குத்துச்சண்டை வீரர்களிடமும் வரும் நாட்களில் உலக சாம்பியனாகும் திறன் உள்ளது. அவர்களில் சிலர் ஒலிம்பிக் மற்றும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வரும் நாட்களில் சாம்பியன்களாக ஆவார்கள்," என்றார்.

mary kom

பட மூலாதாரம்,GETTY IMAGES

2006ஆம் ஆண்டில் படைக்கப்பட்ட வரலாறு

2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பெண் குத்துச்சண்டை வீரர்கள் உலக சாம்பியன்ஷிப்பில் நான்கு தங்கப் பதக்கங்களை வெல்வது இதுவே முதல்முறை.

2006 ஆம் ஆண்டில் இந்தியா முதல் முறையாக உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை நடத்தியது. அப்போது 46 கிலோ பிரிவில் எம்.சி மேரி கோம், 52 கிலோ பிரிவில் சரிதா தேவி, 63 கிலோ பிரிவில் ஜென்னி ஆர்.எல் மற்றும் 75 கிலோ பிரிவில் லேகா கே.சி. இந்தியாவுக்காக தங்கம் வென்றனர்.

இந்திய பெண் குத்துச்சண்டை வீரர்கள் உலக அளவில் பிரகாசித்தது அதுவே முதல் முறை.

உண்மையை சொன்னால் 2006 ஆண்டின் இந்த சாம்பியன் குத்துச்சண்டை வீரர்கள் சர்வதேச அளவில் இந்திய பெண் குத்துச்சண்டை வீரர்களின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர்.

இதன் பிறகு, எம்.சி மேரி கோம் ஆறு முறை உலக சாம்பியனானார். மேலும் அவரது வெற்றி இந்தியாவில் மகளிர் குத்துச்சண்டையை பிரபலமாக்கியது.

2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் மகளிர் குத்துச்சண்டை முதல் முறையாக பதக்க விளையாட்டாக சேர்க்கப்பட்டது. லண்டன் ஒலிம்பிக்ஸில், ஃப்ளைவெயிட் பிரிவில் எம்சி மேரி கோம் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஆனால் இந்த வெற்றிப் பயணத்தை இந்தியாவால் தொடர முடியவில்லை. இந்திய குத்துச்சண்டை சங்கத்தில் நிர்வாக சிக்கல்களின் காலம் தொடங்கியது.

2012 டிசம்பரில் தேர்தல் செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து உலக குத்துச்சண்டை சம்மேளனம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் அங்கீகாரத்தை நிறுத்தி வைத்தது.

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, உலக குத்துச்சண்டை சம்மேளனத்தின் விதிகளின்படி இந்தியா தனது விளையாட்டு கூட்டமைப்பை உருவாக்க முடிந்தது.

இடைப்பட்ட காலத்தில் இந்திய குத்துச்சண்டை வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருந்தது. எந்தவொரு போட்டிகளும் உள்நாட்டு மட்டத்தில் ஏற்பாடு செய்யப்படவில்லை. கூடவே இந்தியக் கொடியுடன் சர்வதேச போட்டிகளில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை.

lovlina

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிச்சயமற்ற நிலையில் இருந்த குத்துச்சண்டை வீரர்களுக்கு கிடைத்த ஆதரவு

2016 ஆம் ஆண்டில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் சிங் தலைமையில் இந்திய குத்துச்சண்டை சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகுதான் இந்திய குத்துச்சண்டை மீண்டும் மீட்சிப்பாதைக்கு வந்தது.

அஜய் சிங் தலைமையில் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, கூட்டமைப்பிற்குள் தொழில்சார் கலாசாரம் வளர்ந்தது. மாநில மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கின.

இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியபோது, பல்வேறு வயதுப் பிரிவினருக்கான போட்டிகளும் தொடங்கின.

இந்திய குத்துச்சண்டையில் சர்வதேச அளவிலான பயிற்சியாளர்கள் மற்றும் துணை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். குத்துச்சண்டை வீரர்கள் அதிக வாய்ப்புகளை பெறத் தொடங்கினர் மற்றும் வெளிநாடுகளில் முகாம் நிகழ்வுகள் தொடங்கப்பட்டன.

இந்த முகாம்கள் முற்றிலும் சிறப்பாக இருந்தாக சொல்ல முடியாது.

ஆனால் இது நிச்சயமாக வீரர்களுக்கு அனுபவத்தைக் கொடுத்தது. அதன் பிறகு குத்துச்சண்டை வீரர்கள் குறிப்பாக பெண் குத்துச்சண்டை வீரர்கள், ஒரு சிறிய உதவியால் என்ன சாதிக்க முடியும் என்பதை செய்து காட்டினார்கள்.

உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் இந்தியா

உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.

குத்துச்சண்டை உலகில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா, துருக்கி, க்யூபா, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை விட இந்தியா முன்னிலையில் உள்ளது.

2020 டோக்யோ ஒலிம்பிக்ஸிற்கு இந்தியா தனது குத்துச்சண்டை வீரர்களின் மிகப்பெரிய அணியை அனுப்பியது. இந்தியாவுக்காக ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் போட்டியிட்டனர்.

69 கிலோ எடைப்பிரிவில் லவ்லீனா போர்கோஹைன் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத்தந்தார். இதன் பிறகு சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனைகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.

2022 மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா மூன்று பதக்கங்களைப் பெற்றது.

52 கிலோ எடைப் பிரிவில் நிகத் ஜரீன் தங்கப் பதக்கத்தையும், ஃபெதர் வெயிட் பிரிவில் மனிஷா மௌனும், லைட் வெல்டர்வெயிட் பிரிவில் பிரவீன் ஹூடாவும் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்த செயல்திறன் நிச்சயமாக ஊக்கமளிப்பதாக இருந்தது.

நிகத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா நடத்திய போட்டி

இந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தனது பலத்தை உலகின் முன் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.

போட்டியின் 12 பிரிவுகளிலும் இந்தியா தலா ஒரு குத்துச்சண்டை வீரரை களமிறக்கியது.

அணி தேர்வு குறித்த சர்ச்சை, ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகளை விளையாட அனுமதித்ததால் 11 நாடுகள் போட்டியை புறக்கணித்தது, போட்டிக்கு ஒலிம்பிக் தகுதி அந்தஸ்து கிடைக்காதது போன்ற அனைத்தும் இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்தால் அமுங்கிப்போனது.

உலக இளைஞர் சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டு முறை வென்ற நீது கங்கஸ், குத்துச்சண்டையின் மையப்பகுதியான பிவானியிலிருந்து வந்தவர்.

போட்டி

பட மூலாதாரம்,BFI MEDIA

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றார். அவர் 2023 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஆக்ரோஷமான தொடக்கத்தை ஏற்படுத்தினார். நடுவர் போட்டியை நிறுத்தவேண்டிய அளவிற்கு முதல் மூன்று போட்டிகளையும் அவர் வென்றார்.

அரையிறுதியில் அவர் முதல் நிலை வீராங்கனையான அலுவா பலிக்பெகோவாவை எதிர்கொண்டார். கடந்த முறை பலிக்பெகோவா, நீது கங்காஸை வீழ்த்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அந்தத் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரையிறுதி ஆட்டத்தில் நீது 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். நீது கங்காஸின் ஹீரோவும், இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீரருமான விஜேந்தர் சிங் இறுதிப் போட்டியில் பார்வையாளர்களில் ஒருவராக இருந்தார்.

அவரது முன்னிலையில், நீது 5-0 என்ற கணக்கில் மங்கோலிய வீரர் லுட்சைகன் அல்டான்செட்ஸை தோற்கடித்து தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை அதுவும் தங்கத்தை வென்றார்.

இந்த வெற்றிக்குப் பிறகு நீது கங்காஸ் மீடியாக்களிடம், "கடந்த ஆண்டு என்னால் பதக்கம் வெல்ல முடியவில்லை, எனவே இந்த முறை எனது குறைபாடுகளை சரிசெய்து சொந்த நாட்டு மக்கள் முன்னிலையில் பதக்கத்தை பெற்றேன்" என்று கூறினார்.

ஸ்வீட்டி பூரா மற்றும் லவ்லீனாவின் செயல்பாடு

மறுபுறம், ஸ்வீட்டி பூராவுக்கு இந்த தங்கப் பதக்கம் ஒன்பது வருட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ளது. இது அவரது தொழில் வாழ்க்கையின் மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றாகும். 2014 இல் பூரா ஜெஜு, சிட்டி சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கொரோனா நெருக்கடியின் போது, பூரா குத்துச்சண்டையை விட்டுவிட்டு தனது பள்ளி நாட்களின் விளையாட்டான கபடிக்கு திரும்பினார் என்பதும் சுவாரஸ்யமானது.

சில மாதங்கள் குத்துச்சண்டையில் இருந்து விலகி இருந்த பிறகு, குத்துச்சண்டை தான் தனது காதல் என்பதை பூரா உணர்ந்தார்.

புது உற்சாகத்துடன் குத்துச்சண்டை உலகிற்குத் திரும்பிய அவர், தனது உடற்தகுதிக்காக நிறைய உழைத்தார். பூரா 2018 உலக சாம்பியனான வாங் லினாவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

"உலக சாம்பியனாக வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி நன்றாக இருந்தது. எனது திட்டத்தின்படி நான் செயல்பட்டேன். போட்டிகள் முன்னேறிச் சென்றபோது எனது ஆட்டமும் மேம்பட்டது. என் உடல் தகுதியும் நன்றாக இருந்தது,” என்று 30 வயதான புரா கூறினார்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் லவ்லீனா போர்கோஹெய்னுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

அசாமைச் சேர்ந்த லவ்லீனா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதைத் தவிர, 2018 மற்றும் 2019 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற இருந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தின் நிறத்தை மாற்ற லவ்லீனா விரும்பினார்.

இருப்பினும், டோக்யோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு, அவரது ஃபார்ம் சற்று குறைந்தது. 2022 உலக சாம்பியன்ஷிப்பில், லவ்லீனாவால் பிரீமியர் காலிறுதிக்கு அப்பால் முன்னேற முடியவில்லை மற்றும் பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும் அவரது பயணம் கால் இறுதி வரை மட்டுமே நீடித்தது.

இந்த முறை லவ்லீனா அதிக எடை பிரிவில் தோன்றி அற்புதமாக செயல்பட்டார். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இறுதிப் போட்டியில் ஒரு சுற்றில் தோல்வியடைந்த அவர் பின்னர் அற்புதமாக விளையாடினார்.

"கடுமையான சண்டையாக இருந்தது. அதனால், அதற்கேற்ப திட்டமிட்டோம். முதல் இரண்டு சுற்றுகளிலும் ஆக்ரோஷமாக விளையாடியதால், கடைசி சுற்றில் கவுன்டர் அட்டாக்கில் கவனம் செலுத்தப்பட்டது. 2018 மற்றும் 2019ல் வெண்கலப் பதக்கம் வென்றேன். எனவே பதக்கத்தின் நிறம் மாறியது ஒரு நல்ல உணர்வை தருகிறது,” என்று போட்டிக்கு பின் அவர் கூறினார்.

நிகத்தின் சவால்

மாற்றப்பட்ட எடைப் பிரிவில் அதாவது 50 கிலோ பிரிவில் நிகத் ஜரீனும் தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க களம் இறங்கினார். இந்த எடைப் பிரிவில்தான் அவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியும்.

கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு, அனைவரின் பார்வையும் 26 வயதான நிகத் ஜரீன் மீது இருந்தது. ஆனால் அவருக்கு முன்னால் மிகவும் கடினமான சவால் இருந்தது.

நிகத் மாற்றப்பட்ட எடைப் பிரிவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அவர் தரவரிசை பெறாத வீராங்கனை மற்றும் 12 நாட்களுக்குள் ஆறு போட்டிகளில் விளையாட வேண்டியிருந்தது.

அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் நிகத், மேரி கோமின் நிழலில் நீண்ட காலம் இருந்தார். ஆனால், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்த கற்றுக்கொண்டார்.

ஆக்ரோஷமான முறையில் போட்டியிட்டு நிகத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இறுதிப் போட்டியை எட்டினார்.

நிகத்தின் மேல் உதடு இரண்டாவது சுற்றில் அறுபட்டு வலியில் துடித்தார்.

"மேல் உதட்டில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அந்த நிலையில் மருத்துவரை அழைத்திருக்கவேண்டும். மேலும் விளையாட்டை சிறிது நேரம் நிறுத்தியிருப்பார்கள். ஆனால் நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தொடர்ந்து முழு வலுவுடன் போட்டியை தொடர்ந்தேன். உன்னால் முடியும் நிகத் என்று மனதில் சொல்லிக்கொண்டேன். அது கடைசிப் போட்டி. எனவே சக்தியை மிச்சப்படுத்த அவசியம் இல்லை. எனவே முழு மூச்சுடன் போராடினேன்,” என்று இந்த போட்டிக்கு பிறகு அவர் கூறினார்.

இறுதிப் போட்டியில், நிகத் ஒருபோதும் பின்நோக்கிப் பார்க்காமல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

தொடர்ந்து இரண்டு உலக சாம்பியன்ஷிப்களில் தங்கப் பதக்கம் வென்ற நிகத், பல ஆண்டுகளுக்கு முன்பு குத்துச்சண்டை பற்றி தனது தந்தையிடம் கேட்ட கேள்விக்கு சொந்தமாகவே சிறந்த பதிலை தந்துள்ளார் என்பதே உண்மை.

https://www.bbc.com/tamil/articles/cv24v14mxr9o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.