Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

26 JUN, 2024 | 07:41 PM
image

இலங்கை இன்று 26ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் பெரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன்  கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. 

மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இலங்கை இன்று இறுதி இணக்கப்பாட்டை எட்டியதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்பட்டது.

இந்த இணக்கப்பாடுகளுடன், இலங்கை தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கான கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து தலைமை தாங்கின. அவுஸ்திரேலியா, ஒஸ்டிரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜெர்மனி, ஹங்கேரியா, கொரியா, நெதர்லாந்து, ரஷ்யா, ஸ்பெயின், ஸ்வீடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்த உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இருந்தன. 

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் சீனா எக்ஸிம் வங்கி மூலம் மறுசீரமைக்கப்பட வேண்டிய கடனின் ஒருங்கிணைந்த மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை அந்நிய செலாவணிக் கையிருப்பை இழந்தது. இதனால் கடன் செலுத்த முடியாத நாடாக அறிவித்தது.

 இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடப்பட்டது. கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடுகளுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திற்கு முடியாது என்பதால் இலங்கை தனது அரச கடன் மறுசீரமைக்கும் செயற்பாட்டை ஆரம்பித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு (Debt Sustainability Analysis - DSA)  ஆரம்பத்தில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் மூலம் கடன் நிவாரண அளவு தீர்மானிக்கப்படுகிறது. 

அதன் பின்னர், குறித்த கடன் வழங்குநர்கள் மற்றும் கடனில் உள்ள நாடும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு மூலம் காட்டப்படும் இலக்கை அடையத் தேவையான பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்காக கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளை இலங்கை தொடர்ந்து முன்னெடுத்தது.

சர்வதேச நாணய நிதிய கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இலக்குகளின் அடிப்படையில் வழங்கப்படும் கடன் நிவாரணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும்.

கடன் வழங்கும் நாடுகள் வெவ்வேறு வழிகளில் கடன் நிவாரணம் வழங்குகின்றன. உத்தியோகபூர்வ கடன் வழங்கும்  குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கி போன்ற உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் இவற்றை வெவ்வேறாக தீர்மானிக்கின்றன.

காலத்தை நீடித்தல், விதிமுறைகளை தளர்த்துதல் மற்றும் வட்டி விகிதங்களைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் கடன் நிவாரணம் வழங்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கியுடனான மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் இரண்டும் குறிப்பிடத்தக்க கணிசமான கடன் நிவாரணத்தை  இலங்கைக்கு வழங்கியுள்ளது.

பொருளாதாரம் மீளவும் வழமைக்கு திரும்பும் வரையில்  எதிர்காலத்தில்  கடன் சேவைத் திறன் மேம்படும் வரை குறுகிய காலத்தில் இலங்கைக்கான தற்போதைய கட்டணச் சுமையை இது குறைக்கும்.

இதை  மதிப்பிடுவதற்காக உத்தியோகப்பூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனா எக்ஸிம் வங்கியுடனான மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் ஊடாக ஐஎம்எப் உடனான நிகழ்ச்சி நிரல் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில்,  செலுத்த வேண்டிய  குறித்த கடனில் நிவாரணம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு கடன் வழங்குநருடனும் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் போது ஐஎம்எப்  கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும். அத்துடன், ஏனைய  கடன் வழங்குநர்களுடன் எட்டப்பட்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களுடன் ஒப்பிடப்படும் வகையில் இது இருக்க வேண்டும்.

அடுத்த கட்டமாக, வர்த்தக பிணைமுறி உரிமையாளர்களுடனான இறுதிக் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை எட்டுவதை இலங்கை துரிதப்படுத்தும். முறையான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பது இந்த செயல்முறையை எளிதாக்கும்.

இன்று எட்டப்பட்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் பின்வரும் நன்மைகளை உள்ளடக்கியது:

1. நிதி நிவாரணம்:

இலங்கையின் வரி வருவாயை கடனை செலுத்துவதற்கு பதிலாக அத்தியாவசிய பொது சேவைகளுக்கு பயன்படுத்த முடியும். இது பொருளாதாரத்தை  மீட்டெடுப்பதற்கு கால அவகாசத்தை வழங்குகிறது.

2. வெளிநாட்டு நிதி:

முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இருதரப்பு நிதியுதவி வசதிகளைப் பெறுவதை மீண்டும் தொடங்கலாம். வரவு செலவுத்திட்டத்தின்  மூலதன செலவினங்களை ஆதரிக்க குறுகிய கால வெளிநாட்டு நிதி கிடைப்பதில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது நிர்மாணத்துறை போன்ற துறைகளில் சாதகமான விளைவுகளையும், முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நடுத்தர முதல் நீண்ட கால சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.

3. கடன்  தரப்படுத்தல்:

இலங்கையின் கடன்  தரப்படுத்தலை  பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு ஒரு முக்கியமான  முன்னெடுப்பாக உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பின் முடிவு அமையும். வர்த்தக பிணைமுறி உரிமையாளர்களின் கடன்களும் விரைவாக மறுசீரமைக்கப்பட்ட பின்னர், அது கடன்  தரப்படுத்தலின்  உயர்வுக்கு வழிவகுக்கிறது.

உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பின் முடிவானது வெளிநாட்டு நிதியுதவிக்கான எளிதான  பிரவேசம்  என்பதுடன் குறைந்த செலவு போன்ற வழிகளின் ஊடாக குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும். இது வர்த்தக நிதியிலிருந்து வங்கிகளுக்கு இடையேயான நிதியுதவி வரை அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

https://www.virakesari.lk/article/187055

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெறும் 7 சதவீத கடன் தள்ளுபடிக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை நற்செய்தியல்ல - ஹர்ஷ டி சில்வா

Published By: VISHNU

27 JUN, 2024 | 07:19 PM
image
 

(எம்.மனோசித்ரா)

சர்வதேச கடன் வழங்குனர்களுடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய 7 சதவீத கடன் தள்ளுபடி மாத்திரமே கிடைக்கப்பெறவுள்ளது. 28 சதவீத கடன் தள்ளுபடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 7 சதவீதத்துக்கு மாத்திரம் இணக்கம் காணப்பட்டுள்ளமை ஒரு நற்செய்தியல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பிரதான இரு தரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான சீனா, ஜப்பான், இந்தியா உட்பட ஏனைய நாடுகளுடன் இணக்கப்பாட்டை எட்டியமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. அதன் ஊடாக நன்மை கிடைக்குமானால் இலங்கை என்ற குழந்தையை அங்குமிங்கும் இழுத்து சிதைப்பதற்கு நாம் தயாராக இல்லை என்நும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

வியாழக்கிழமை (27) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை தொடர்பில்கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரையை செவிமடுத்தோம். அதில் நாட்டுக்கு சிறந்த தாய் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நாணய நிதியத்தை நாட வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் தற்போது அதனை எதிர்க்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி எல்லா விடயங்களுக்கும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஜனாதிபதிக்கு இந்த உரையை எழுதிக் கொடுத்தவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தாலும், அதனை வாசிக்க முன்னர் ஜனாதிபதி சற்று சிந்தித்திருக்கலாம். சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாமே ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வந்தோம்.

ஐக்கிய மக்கள் சக்தி அசடு போல் தான் இதுவரை செயற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். நாம் எவ்வாறு செயற்பட்டோம் என்பதை ஜனாதிபதி ஒருமுறை சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். 2020இல் பாராளுமன்றத்துக்கு வந்த முதல் நாளே நாணய நிதியத்தை நாட வேண்டும் என்று நாம் கூறினோம். இதனைப் புரிந்து கொள்ளுங்கள். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டமைக்கெதிராக நாம் எமது வாக்கினைப் பயன்படுத்தவில்லை.

ஜனாதிபதியின் உரையை தயாரித்தவர் அதனை அறிந்திருக்கவில்லை போலும். நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டில் சில திருத்தங்களை மேற்கொள்வோம் என்றே நாம் கூறினோம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பீட்டர் பீருவருடனான கலந்துரையாடலிலும் எவ்வாறு நாம் இதில் திருத்தங்களை ஏற்படுத்துவோம் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளோம்.

பிரதான இரு தரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான சீனா, ஜப்பான், இந்தியா உட்பட ஏனைய நாடுகளுடன் இணக்கப்பாட்டை எட்டியமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. அதன் ஊடாக நன்மை கிடைக்குமானால் இலங்கை என்ற குழந்தையை அங்குமிங்கும் இழுத்து சிதைப்பதற்கு நாம் தயாராக இல்லை.  நாம் மக்களுக்கான எதிர்க்கட்சியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இது எமது இராஜதந்திர உறவுகளினால் கிடைத்த பலன் ஒன்றாகும். மாறாக லஸாட் மற்றும் கிளிபோர் சான்ஸ் நிறுவனங்களின் தலையீட்டினால் கிடைத்த ஒன்றல்ல.

தற்போது ஜப்பானுடன் இணக்கப்பாட்டை எட்டியதற்கு கரகோஷமெழுப்பியவர்களே, அன்று ஜப்பானை கன்னங்களில் அறைந்து நாட்டை விட்டு விரட்டினர். இந்தியாவுடன் எமக்கு பெரும் சகோதரத்துவ பிணைப்புள்ளது. ஜப்பான் எமது நீண்ட நட்பு நாடாகும். நாடுகளோடு நாம் பேணி வந்த நட்புகளாலயே இந்த வெற்றி எமக்கு கிடைத்தது. இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதற்கு ஆதரவு வழங்குமாறும் ஜனாதிபதி கோரியுள்ளனர்.  

அதன் உள்ளடக்கம் குறித்து அறிய வேண்டியுள்ளது. எத்தனை வருடங்களுக்கு சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது? 2028 வரை கடன் தவணைகளை செலுத்த வேண்டிய தேவை இல்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். கடன் தவணைகளை காலம் தாழ்த்தும் போது வட்டி செலுத்த வேண்டுமா? இல்லையா? அதன் பிற்பாடு வட்டி விகிதம் என்ன? இது தொடர்பான விடயங்களை அறிய விரும்புகிறோம். சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் அடங்களாக சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை.

சர்வதேச வணிக கடன் தாரர்கள் தற்போது முன்வைத்துள்ள விடயங்களுடன் இலங்கை இணக்கப்பாட்டை எட்டுமாக இருந்தால் இதற்கு நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.  காரணம் அவர்கள் முன்வைத்துள்ள விடயங்கள் நாட்டுக்கு பாதகமானவையாகும். கடன் செலுத்தும் இயலுமையையே பார்க்கின்றனர். நிதி ஸ்திரதன்மையை மீட்டெடுக்கும் நிலை இங்கு அவதானிக்கப்படுகிறது. இதனால் புதிய தரப்படுத்தல் நிலையை எட்டலாம். சர்வதேச நாணய நிதியம் புதிதாக முன்வைத்துள்ள இணக்கப்பாட்டறிக்கையில் கடன்மீள் செலுத்தாமை சலுகை வீதம் என்ன என்பது குறிப்பிடப்படவில்லை.

இந்த இணக்கப்பாட்டுக்கமைய கடன் தள்ளுபடி 50 வீதம் என ஆரம்பத்தில் அரசாங்கம் தெரிவித்தது. பின்னர் 30 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் 28 சதவீதமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருந்தாலும் இது 2028ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறைக்கு வரும்.  சர்வதேச நாணய நிதியம் புதிதாக முன்வைத்துள்ள இணக்கப்பாட்டறிக்கையின் பிரகாரம் அவதானிக்குமிடத்து கடன் தள்ளுபடி 28 சதவீதத்திலிருந்து - 7 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது.

இந்தளவு குறைந்த மட்டத்துக்கு உடன்பாட்டை எட்டியமை நாட்டிக்கு நற்செய்தியல்ல. மக்களுக்கு பாதமே. இதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள  பரிசீலனை பரிந்துரைகளின் பிரகாரம் முன்னோக்கி செல்லும் தீர்மானத்துக்கு வந்தால் இது குறித்து கலந்துரையாடலாம் என்றார். 

https://www.virakesari.lk/article/187121

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடன் மறுசீரமைப்பைப் பூர்த்தி செய்வதில் இலங்கை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு ஜப்பான் பாராட்டு

Published By: DIGITAL DESK 7   03 JUL, 2024 | 12:26 PM

image

(நா.தனுஜா)

பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதிலும், கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதிலும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா பாராட்டியுள்ளார்.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடந்த திங்கட்கிழமை (1) ஜப்பான் சென்றுள்ளார்.

அதன்படி ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவுடனான இருதரப்பு சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை (02)  டோக்கியோவில் நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதிலும், கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதிலும் இலங்கையினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்புத்தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், மனிதவளப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல் உள்ளடங்கலாக பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஏதுவான வாய்ப்புக்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

அத்தோடு உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவின் உப தலைமை நாடு என்ற ரீதியில் இருதரப்பு கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்கு ஜப்பானால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய நிதியுதவியின் கீழான செயற்திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்தும், இலங்கையில் ஜப்பானிய முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி அவரது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை சிரேஷ்ட அமைச்சரவை செயலாளர் ஹயாஷி யொஷிமஸாவுடனான சந்திப்பொன்றும் நேற்று முன்தினம் நடைபெற்றதுடன், இதன்போது இருநாடுகளுக்கு இடையில் நிலவும் நட்புறவு குறித்தும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

https://www.virakesari.lk/article/187570

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.