Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கறுப்புச் சட்டை
------------------------
அறிவித்தலில் இருந்த திகதிகளை கழித்துப் பார்த்தால், அவருக்கு 55 வயதுகள் தான் ஆகியிருந்தது என்று வந்தது. அடப் பாவமே, இப்படி இடைநடுவிலேயே போய்ச் சேர்ந்து விட்டாரே என்ற மெல்லிய கவலை பற்றிப் பிடித்தது. அவரை சில தடவைகள் அங்கே இங்கேயென்று பார்த்திருக்கின்றேன். ஆனால் பழக்கம் எதுவும் இல்லை. ஒரு தடவை கூட அவருடன் உரையாடியதும் இல்லை. நல்ல மனிதன் என்று அவர் உயிருடன் இருக்கும் போதே பலரும் சொல்வார்கள். தோற்றத்தில் இன்னும் ஒரு பத்து வயதுகள் அதிகமாகவே தெரிந்திருந்தார்.
 
எப்படி இறந்திருப்பார் என்று அறிவித்தலில் போட மாட்டார்கள், ஆனால் காலமானார் என்று இருந்தது. அகாலமானார் என்று இல்லை, ஆகவே விபத்து என்று எதுவும் இல்லை. காலமாகும் போது கடைசிக் காரணம் என்னவென்று பார்த்தால் கார்டியாக் அரெஸ்ட் என்றே பலரின் மரண அறிக்கையிலும் இருக்கும். புற்று நோயால் அவதிப்பட்டு முடிந்த ஒருவரின் அறிக்கையில் கூட இப்படியே இருந்தது. இவருக்கும் அப்படித் தான் இருந்திருக்கும். பெரிய உடம்புக்காரர். கடும் நீரிழிவு கூட இருந்திருக்கலாம், அப்படியே கடைசியில் கார்டியாக் அரெஸ்ட்.
 
மனைவியின் பெயர் இருந்தது. அவரையும் பார்த்திருக்கின்றேன். இவருக்கு 55 என்றால், அவருக்கு ஒரு 50 அளவில் தான் இருக்கும். சராசரி வாழ்நாள் என்று எடுத்தாலே, இவர் இன்னும் ஒரு 20 வருடங்களாவது தனியே, வாழ்ந்த நாட்களின் நினைவிலேயே வாழப் போகின்றார். வேறு எவராலும் பகிரப்பட முடியாத வலி இவருக்கு. உற்றம் சுற்றத்தின் ஆறுதல்களும், வார்த்தைகளும் தீர்ந்து போன பொழுதுகளில், இவரை அழுத்தப் போகின்றன வாழ்ந்த நினைவுகள். 'நீங்கள் சுகமாக போய்ச் சேர்ந்துவிட்டீர்கள்.......... நான் இங்கே கிடந்து படுகின்றேன் பாடு..........' என்று பிரியம் இம்மியளவும் குறையாமல் அடிக்கடி இவரும் சொல்லப் போகின்றார்.
 
மூன்று பிள்ளைகள். அவர்களின் வயதுகளின் வரிசைப்படி தான் போட்டிருக்கின்றார்கள் என்றால், அப்படித்தான் மரண அறிவித்தலில் பொதுவாகப் போடுவார்கள், முதல் இருவரும் ஆண் பிள்ளைகள், மூன்றாமவர் பெண் பிள்ளை. அந்தப் பெண் பிள்ளை அப்பாவின் செல்லமாகவே வளர்ந்திருப்பார். எவருக்கும் அடங்காத பிடிவாதம் கொண்ட மனிதனாக அவர் இருந்திருந்தால் கூட, அந்தச் செல்ல மகள் ஒரு சொல்லால், ஒரு பார்வையால் இவரை கட்டுக்குள் வைத்திருந்திருப்பார். இப்பொழுது மகள் முழுவதும் உடைந்து போயிருப்பார். கண்கள் வற்றியிருக்கும். அம்மாவின் தோளிலேயே சாய்ந்து சாய்ந்து ஒட்டி ஒட்டி இருப்பார்.
 
நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கில் அவரின் இரு மகள்களும் அவர்களின் அம்மாவின், விவேக்கின் மனைவியின், இரண்டு பக்கங்களிலும் இருந்த அந்தக் காட்சி, வீட்டு மண்டபத்தில் கொழுவி இருக்கின்ற ஒரு படம் போல மனதில் அப்படியே தங்கிவிட்டது. ஏன் என்று சரியாகத் தெரியவில்லை. அவர்கள் மூவரும் வெளியே காட்டிய நிதானமாகக் கூட இருக்கலாம்.
 
ஆண் பிள்ளைகள் இலேசில் அழமாட்டார்கள். ஆண்கள் அழக்கூடாது என்று சமூகத்தில் சொல்லியும் வைத்திருக்கின்றார்கள். அழுகையைப் பற்றி வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்த ஒருவர் எல்லோரையும் நல்லாக அழுங்கள் என்று சொல்லியிருக்கின்றார். அழுவதே ஒரு பெரிய சிகிச்சை என்றும் சொல்லியிருக்கின்றார். ஆனாலும் ஆண்கள் காலம் காலமாகவே அழுகையை அடக்கி, அதை மறைக்கவே முயன்று கொண்டிருக்கின்றார்கள். 
 
பெரிய மகன் தான் இனி எல்லாப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு, வீட்டைப் பார்த்துக் கொள்ளவேண்டும். எப்படியும் ஒரு 25 வயதுகள் ஆகியிருக்கும். ஆகியிருக்க வேண்டும் என்று மனம் விரும்பியது. 25 வயதுகள் என்றால், இங்கே படிப்பு முடிந்து மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகியிருக்கும். எப்படியும் ஒரு வேலையில் இருப்பார். இவர் குடும்பத்தை ஒப்பேற்றி விடுவார். ஆயுட்காப்புறுதியும் செய்திருப்பார்கள் தானே. தனியே என்று ஒரு காப்புறுதி எடுக்கா விட்டாலும், வேலை செய்யும் இடத்தில் ஒன்று கொடுத்திருப்பார்கள். மற்றபடி இங்கே இந்த அரசாங்கம், இந்த வயதுகளில் எதுவும் கொடுக்காது.
 
இளைய மகனும் படித்து முடித்திருக்கக் கூடும். மருத்துவம் படிக்கின்றார் என்றால், இங்கே இன்னும் பல வருடங்கள் படிக்கவேண்டும். மூன்று பிள்ளைகள் இருந்தால், ஒருவராவது மருத்துவர் ஆக வேண்டும் என்ற விருப்பம் பல குடும்பங்களில் இருக்கும் ஆசை. விருப்பம் இருக்குதோ இல்லையோ என்று பார்க்காமல், ஒரு பிள்ளையையாவது எப்படியாவது தயார் செய்து விடுவார்கள். இங்கு மருத்துவ படிப்பு செலவு எப்படியும் கடன் தானே.
 
காலமானவருக்கு சில சகோதரங்கள் இருக்கின்றனர். அடைப்புக்குறிக்குள் அவர்கள் எந்த எந்த நாடுகள் என்று போடப்பட்டிருந்தது. எல்லோரும் வேறு வேறு நாடுகளில் இருக்கின்றனர். இவர் மட்டும் இந்த நாட்டிற்கு வந்திருக்கின்றார். இங்கே மேலே படிக்க என்று வந்தவராக இருக்கும், பின்னர் அப்படியே இங்கேயே தங்கி இருக்கக்கூடும். இறுதிச் சடங்கிற்கு எல்லோரும் வந்து சேர்வார்கள். ஒரு மாதம் அளவில் ஆட்கள் மாறி மாறி நிற்பார்கள். பின்னர் எல்லோரும் போய்த் தானே ஆகவேண்டும்.  
 
அடூர் கோபலாகிருஷ்ணனின் 'எலிப்பத்தயம்' என்னும் படம் ஞாபகத்திற்கு வந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் எதை எதையோ விரும்பி, அங்கேயே தங்கிவிடுகின்றனர். படத்தில் கடைசியில் ஒரு எலியின் ஆன்மா கையெடுத்துக் கும்பிடும். அடூர் கோபாலகிருஷ்ணன் எப்பொழுது, எப்படி இறந்தார் என்று எனக்கு ஞாபகமில்லை. அந்தச் செய்தியை முற்றாகவே தவற விட்டிருந்தேன்.
 
இன்னும் பல உறவினர்களின் பெயர்களும், நாடுகளும் அறிவித்தலில் இருந்தன. அறிவித்தலின்  இறுதியில், வார நாள் ஒன்றில் காலை ஒன்பது மணியில் இருந்து மதியம் வரையான நேரத்தில் பார்வைக்கு வைக்கப்படும் என்றிருந்தது. அன்று அதிகாலையிலேயெ உடம்புக்கு முடியவில்லை என்று அலுவலகத்திற்கு ஒரு செய்தியை மறக்காமல் அனுப்பி விடவேண்டும். அப்படியே அந்தக் கறுப்பு சட்டையையும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். போன மாதம் போய் விட்டு வந்து, தோய்க்கும் இயந்திரத்தில் போட்டு எடுத்தபடியே அப்படியே வீட்டில் எங்கேயோ தொங்கிக் கொண்டு இருக்கும் அந்தக் கறுப்புச் சட்டை. ஏன் வாங்குகின்றோம் என்று தெரியாமலேயே, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று, பல வருடங்களின் முன் வாங்கப்பட்டது இந்தக் கறுப்புச் சட்டை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.