Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கோவை போலீஸ் அக்கா திட்டம்

பட மூலாதாரம்,COIMBATORE CITY POLICE

படக்குறிப்பு, கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சுஹாசினி கட்டுரை தகவல்
  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 9 செப்டெம்பர் 2024
    புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்

''சென்னையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியர் சிலர், கோவையில் ஒரு தோழியின் ‘பாசிங் அவுட்’டுக்காக வந்து, ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

அதில் ஒரு மாணவி, தான் குளிக்கும்போது, யாரோ படமெடுத்தது போலத் தெரிந்ததாக ஒரு கல்லூரித் தோழியிடம் சொல்லியிருக்கிறார். அவர் ‘போலீஸ் அக்கா’விடம் சொல்கிறேன் என்று என்னிடம் சொன்னார். உடனே நாங்கள் அந்த விடுதிக்குச் சென்று, அந்த மாணவி தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் தங்கியிருந்த 27 வயது ஐ.டி., ஊழியர் ஒருவரை விசாரித்தோம். அவர் எங்களிடம், ‘அப்படி யாராவது வீடியோ எடுத்திருந்தால் கண்டுபிடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்’ என்று மிகவும் ஆவேசமாகப் பேசினார்.

அந்த பெண், தன்னைப் படமெடுத்த அந்த போன், சிகப்பு நிற ஐபோன் போல இருந்ததாகத் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த இளைஞரிடம் சிமென்ட் நிறத்தில் வேறு ஒரு நிறுவனத்தின் போன் இருந்தது. நாங்கள் அவரிடம் அவருடைய அம்மாவின் போன் நம்பரை வாங்கினோம். அவருடைய அம்மாவிடம், கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் ஒரு போன் கிடப்பதாகச் சொல்லி, உங்கள் மகன் பயன்படுத்தும் போன் என்ன, நம்பர் என்ன என்று கேட்டோம். அவர் 'சிகப்பு நிற ஐபோன்' என்று சொல்லி விட்டார்.

அதன்பின் விசாரித்த போது, அந்த போனை காந்திபுரத்தில் உள்ள ஒரு பார்சல் சர்வீஸ் மூலமாக சென்னையிலுள்ள தன் வீட்டிற்கு அந்த இளைஞர் அனுப்பியிருப்பது தெரியவந்தது. அதில் அனுப்புநர் விலாசத்தை போலியாகக் கொடுத்து, பெறுநராக தனது அண்ணனின் பெயருக்கு முகவரி எழுதி அனுப்பியுள்ளார். எதிலும் அந்த இளைஞரின் பெயர் இல்லை.

 

இரவு எட்டு மணிக்கு பார்சல் சர்வீஸ் அலுவலகத்திலிருந்து அந்த பார்சலைக் கைப்பற்றி, கொண்டு வந்து அதைப் பிரித்தபோது, அந்த சிகப்பு நிற ஐபோன் இருந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது, குளிப்பதை வீடியோ எடுக்க முயன்றது தெரியவந்தது. அந்தப் பெண் கேட்டுக் கொண்டதால், வெறும் சிஎஸ்ஆர்(தினசரி நிகழ்வு குறித்து காவல் நிலைய பதிவு) போட்டு, போனில் உள்ளவற்றை அழித்து, எச்சரித்து அனுப்பினோம்!’’

இது கோவை மாநகர காவல்துறையில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் பணியாற்றும் காவலர் வள்ளியம்மை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்வு.

போலீஸ் அக்கா திட்டம் என்பது என்ன?

கோவையில் சீருடை அணிந்த ஒரு பெண் காவலர், மாணவிகளைத் தேடிச் சென்று, அவர்களின் பிரச்னைகளை அறிந்து தீர்வு காண்பதே போலீஸ் அக்கா திட்டம் என கோவை மாநகர காவல்துறை கூறுகிறது.

‘போலீஸ் அக்கா’ திட்டத்தை, மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த, கோவை மாநகர காவல் துறையின் சார்பில் முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு பெண் காவலருக்கு தலா இரண்டு கல்லுாரிகளை கவனிக்கும் பொறுப்பு தரப்பட்டுள்ளது. புகார் வந்தால் கல்லூரிக்கு செல்லவும், புகார் இல்லாத நேரங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை கல்லுாரிக்குச் செல்லவும் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு பிரத்யேக தொடர்பு எண்கள் தரப்பட்டுள்ளன. இவர்களின் பெயர், தொடர்பு எண்களுடன் கூடிய விபரங்களைக் கொண்ட ‘க்யூ ஆர்’ கோட், கல்லுாரிகளில் ஆங்காங்கே சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டுள்ளன.

''கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 24 காவல் நிலையங்களைச் சேர்ந்த 37 பெண் காவலர்கள் 71 கல்லுாரிகளில் பயிலும் 1,43,224 மாணவிகளுக்கு, ‘போலீஸ் அக்கா’வாக பணி செய்கின்றனர்'' என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

 
போலீஸ் அக்கா திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாதிக்கும் மேலே பெண்கள்!

கோவையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கோவை மண்டலகிளை உட்பட தற்போது 8 பல்கலைக்கழகங்கள், 207 கல்லூரிகள், 76 பொறியியல் கல்லூரிகள், 6 மருத்துவக் கல்லூரிகள், 36 மேலாண்மைக் கல்லூரிகள் மற்றும் 20 ஆராய்ச்சிக் கல்வி மையங்கள் இருப்பதாக தெரிவிக்கிறது இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை கிளை வெளியிட்டுள்ள கோவை ஆவணப்புத்தகம்.

‘‘கோவை அரசு கலைக் கல்லூரியில் 60-65% பெண்கள் படிக்கின்றனர். ஒட்டு மொத்தமாகப் பார்த்தாலும் அனைத்துக் கல்லூரிகளிலும் 50%-க்கும் அதிகமாக மாணவியர்களே படிக்க வாய்ப்புள்ளது. முதுநிலைக் கல்வி என்று எடுத்துக் கொண்டால் பெண்களின் பங்கு இன்னும் அதிகமாக இருக்கும்'’ என்று பிபிசி தமிழிடம் விவரித்தார் கோவை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் கனகராஜ்.

 
போலீஸ் அக்கா திட்டம்

பட மூலாதாரம்,COIMBATORE CITY POLICE

படக்குறிப்பு, பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்

நடவடிக்கை என்ன?

மாணவிகள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கியதாகச் சொல்கிறார் துணை ஆணையர் சுஹாசினி.

‘‘இந்த திட்டத்தை சென்ற 2022 அக்டோபரில் துவக்கினோம். கல்லூரி மாணவிகளால் எங்குமே சொல்ல முடியாத பல பிரச்னைகளையும் ஒரு சொந்த சகோதரியிடம் சொல்லுவதைப் போன்று அச்சமின்றிச் சொல்வதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதே இந்த ‘போலீஸ் அக்கா’ திட்டம்.

இதுவரை 493 அழைப்புகள், மாணவிகளிடமிருந்து வந்திருக்கின்றன. அவை சார்ந்து, எட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு பலரையும் கைது செய்திருக்கிறோம். ஒரு போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட புகார்களில் ‘சிஎஸ்ஆர்’ பதிவு செய்திருக்கிறோம். ஏராளமான புகார்களில் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியிருப்பது, எங்களுக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதற்கு இதுவே சான்றாகிறது!’’ என்று அவர் கூறினார்.

சுஹாசினி ‘போலீஸ் அக்கா’ திட்டத்தின் பொறுப்பாளராக உள்ளார்.

 
கோவை போலீஸ் அக்கா

பட மூலாதாரம்,COIMBATORE CITY POLICE

படக்குறிப்பு, கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சுஹாசினி

மாணவியர் மட்டுமின்றி பிற பெண்களின் பிரச்னைக்கும் தீர்வு

கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமின்றி, பிற பெண்களும் இந்த திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட சில நிகழ்வுகளும் நடந்துள்ளன.

‘‘அம்மா திடீரென இறந்து விட்டார். அப்பா பால் வியாபாரி. அவர் தன் மனைவியின் அக்கா அதாவது குழந்தைகளின் பெரியம்மா வீட்டில் இரண்டு மகள்களையும் கொண்டு போய் விட்டு விட்டார். அவர்கள் இருவருக்கும் சாப்பாடு கூட போடாமல், பல விதங்களிலும் துன்புறுத்தியுள்ளனர்.

அதை அப்பாவிடம் சொன்னால் அவர் புரிந்து கொள்ளவில்லை. அதில் பெரிய மகள், கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். இரண்டாவது பெண், ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுமி. கல்லுாரியில் படிக்கும் அந்த மாணவி வந்து எங்களிடம் தனக்கும், தன் தங்கைக்கும் பெரியம்மா வீட்டில் நடக்கின்ற கொடுமைகளைப் பற்றி கண்ணீரோடு தெரிவித்தார். நாங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துப் பேசினோம். அவர்கள் எங்களையே மிரட்டுகிற தொனியில் பேசினார்கள். அதன்பின், சட்டம், வழக்கு என்று சொன்னதும், பின் வாங்கி விட்டார்கள். இரு தரப்பையும் பேசி சமாதானத்துடன் செல்லுமாறு அனுப்பி வைத்தோம்.

அந்தக் குழந்தைகள் இப்போது அவளுடைய தந்தையுடன் இருக்கிறார்கள். அந்த கல்லுாரி மாணவியே சமைத்துக் கொண்டு தன் தங்கையையும் பார்த்துக் கொள்கிறாள். சந்தோஷமாக இருக்கிறார்கள்!’’ என்று ஓர் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் பணியாற்றும் வள்ளியம்மாள்.

இதில் பணியாற்றும் பெண் காவலர்கள் இடமாறுதல் செய்யப்பட்டாலும், அவர்கள் ஏற்கனவே பார்த்து வந்த கல்லுாரிகளுக்கு மட்டும் இவர்களே போலீஸ் அக்கா திட்டத்தில் பணியாற்ற வேண்டுமென்ற உத்தரவையும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பிறப்பித்திருக்கிறார்.

 
போலீஸ் அக்கா திட்டம்

பட மூலாதாரம்,COIMBATORE CITY POLICE

படக்குறிப்பு, பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன்

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

‘‘மாணவிகளுக்கு போலீஸ் அக்காக்கள் உதவுவதைப் பார்த்து, மாணவர்களும் ‘அக்கா’ எங்களுக்கும் உதவுங்கள் என்று கேட்டு வருகின்றனர். அவர்களில் பலர் சைபர் மோசடியில் ஏமாற்றப்பட்டவர்களாக உள்ளனர். அவர்களுடைய பிரச்னைகளுக்கும் நாங்கள் தீர்வு காண்பதோடு, தேவையான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம்.’’ என்கிறார் போலீஸ் அக்கா திட்டத்தில் பணியாற்றி வரும் காவலர் வேலுமணி

கல்லூரி மாணவி கருத்து

போலீஸ் அக்கா திட்டத்தால் தனது பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததாக பிபிசியிடம் பேசிய கல்லூரி மாணவி ஒருவர் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "நான் டிகிரி படித்துக் கொண்டிருந்த போதே எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. டிகிரி முடித்ததும் திருமணம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த கால இடைவெளியில் எனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என் மீது சந்தேகப்பட்டார். இப்போதே சந்தேகம் கொள்பவருடன் இணைந்து வாழ்வது சரியாக இருக்காது என்று முடிவு செய்தேன். இதுகுறித்து வீட்டில் பேச பயமாக இருந்ததால் போலீஸ் அக்கா ஒருவரிடம் தெரிவித்தேன். அவர் என் பெற்றோரை அழைத்துப் பேசி எனது முடிவை அவர்கள் ஏற்க செய்தார்" என்றார்.

 

தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படுமா?

இந்த திட்டத்தை, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்துவது குறித்து, கோவை மாநகர காவல் ஆணையரிடம் முன்மொழிவு கேட்டிருப்பதாக தமிழக காவல் துறை சட்டம்–ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.

அதற்கான முன்மொழிவைதயார் செய்து, அனுப்பி விட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ‘‘அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று அரசு முடிவெடுக்கும்!’’ என்று கூறினார்.

'பக்கசார்புடன் காவல்துறை நடந்துக்கொள்ள கூடாது'

போலீஸ் அக்கா திட்டத்தில் வந்துள்ள 493 அழைப்புகளில் உள்ள புகார்களின் அடிப்படையில், இதுவரை 8 முதல் தகவல் அறிக்கை, 50 சி.எஸ்.ஆர்.,(தினசரி நிகழ்வு குறித்து காவல் நிலைய பதிவு) போடப்பட்டுள்ளது என்று மாநகர காவல் துறை புள்ளி விபரம் கொடுத்துள்ளது.

மற்ற புகார்களை பேச்சு வார்த்தை மூலமாக அல்லது நேரடி நடவடிக்கையால் வழக்கின்றி தீர்த்து வைப்பது சட்டரீதியாக சரியா என்று மூத்த வழக்கறிஞர் வெண்ணிலா கேள்வி எழுப்புகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘முதல் தகவல் அறிக்கை எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து, காவல் துறை ஆய்வு செய்வது அவசியம். அதே நேரத்தில், இந்த புகார்கள் வழக்காக மாறாமல் இருப்பதற்கு, காவல் துறை மட்டுமே காரணமாக இருக்குமென்று கருத முடியவில்லை. ஏனெனில், பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, புகார் வேண்டாம், வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்துவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது.

எனவே, இதில் பெற்றோரும், துணிவுடன் புகார் கொடுக்க முன் வரவும், இறுதி வரை நாங்கள் உங்களுடன் இருப்போம் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் ஏற்படுத்தவும் வேண்டிய பொறுப்பும் காவல்துறைக்கு உள்ளது.’’ என்று தெரிவித்தார்

மேலும் அவர், ''குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தை பார்த்து, பக்கசார்புடன் காவல்துறை நடந்துக்கொள்ள கூடாது. காவல்துறை நடுநிலையுடன் செயல்படுவது மிக முக்கியம்'' என்றார்

‘இது வெறும் விளம்பரத் திட்டம்தான்!’

பிபிசி தமிழிடம் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராதிகா, ‘‘எங்களைப் பொறுத்தவரை, இது வெறும் விளம்பரத் திட்டம்தான். மொபைல் ஆப்களைத் துவக்குவது, விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துவது என்று கோவை மாநகர காவல் துறை வெளியில் பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்கிறது.

இது போன்ற திட்டங்களை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதால் மட்டும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்பவில்லை’’ என்றார்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.