Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒரே நாடு ஒரே தேர்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இழுபறி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இழுபறி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
  • பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று ஏற்றுக்கொண்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று மத்திய அரசு கூறுகிறது.

குழுவின் பரிந்துரைகளின் படி இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த இரண்டு முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இதன்கீழ் அரசியலமைப்பின் 83 மற்றும் 172-வது பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

ஆனால், தற்போதைய மக்களவையில் பா.ஜ.கவுக்கு 240 இடங்கள் மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு மோதி அரசுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவை. எனவே இது அரசுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

 

இந்த விவகாரத்தில் பெரும்பாலான கூட்டணி கட்சிகளோடு கூடவே வேறு சில கட்சிகளின் ஆதரவும் மோதி அரசுக்கு உள்ளது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது மட்டுமல்லாமல், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு பல பிராந்திய கட்சிகளும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல் செய்யும் பொருட்டு அதற்கான மசோதாவை நிறைவேற்றுவதில் இருக்கும் பிரச்னையுடன் கூடவே பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் அரசுக்கு உள்ளன என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

அரசியலமைப்பில் திருத்தம் செய்வது எளிதானதா?

இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை 1983-ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. ஆனால், அப்போது மத்தியில் இருந்த இந்திரா காந்தி அரசு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அதன்பிறகு இந்தியாவின் சட்ட ஆணையம், 1999-ஆம் ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரைத்தது. அப்போது மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருந்தது.

2014-ஆம் ஆண்டு பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த விஷயத்தை சேர்த்திருந்தது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோதியும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மற்றும் மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகளும் அரசியல் ஆய்வாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கடந்த முறை ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. ஆனால், இந்த ஆண்டு இந்த இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடைபெறுகிறது. எதிர்கட்சிகள் இதனை ஒரு உதாரணமாக குறிப்பிடப்பட்டு வருகின்றனர்.

மூத்த வழக்கறிஞரும் அரசியல் சாசன நிபுணருமான சஞ்சய் ஹெக்டே,"இதை அமல்படுத்த அரசு, பல அரசியலமைப்பு திருத்தங்களைச் செய்ய வேண்டும். அதன் கூட்டணி கட்சிகள் இதை ஆதரிக்குமா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி அமைக்கும் ஒன்றாக இருப்பதால், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் உச்ச நீதிமன்ற பரிசீலனைக்காக செல்லும்" என்று குறிப்பிட்டார்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒரு வகையான, அதிபர் முறை ஜனநாயகம் போல ஆகிவிடும். அதாவது ’உங்களுக்கு நரேந்திர மோதியை பிடிக்குமா, பிடிக்காதா அல்லது ராகுல் காந்தியை பிடிக்குமா, பிடிக்காதா’ என்பதுபோல தேர்தல் ஆகிவிடும் என்று அவர் மேலும் கூறினார்.

 
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒரு வகையான ’கட்சித்தலைமை அடிப்படையிலான ஜனநாயகம்’ போல ஆகிவிடும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஒரே நாடு, ஒரே தேர்தலை அமல்படுத்தும் பொருட்டு அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை. ஏனெனில் இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது," என்று மக்களவையின் முன்னாள் செயலரும் அரசியலமைப்பு நிபுணருமான பிடிடி ஆச்சாரி கூறினார்.

"மாநில சட்டப்பேரவை தேர்தல், அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலங்கள் பட்டியலில் வருகிறது. மாநில சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த உரிமையை மாநிலத்திடமிருந்து பறித்துவிடும். இது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானது. எனவே இது ஒருபோதும் நடக்க முடியாது,” என்றார் அவர்.

உதாரணமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, பதவிக்காலம் முடிவடையாத மாநிலங்களின் சட்டப்பேரவைகளை கலைக்க வேண்டியிருக்கும்.

இது அமலானால் சட்டப்பேரவையை கலைக்கும் உரிமை மாநில அரசிடம் இருக்காது, அதன் கட்டுப்பாடு மத்திய அரசிடம் சென்றுவிடும்.

''ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இன்று பேசப்படும் விஷயம் அல்ல. அதற்கான முயற்சிகள் 1983 -ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கப்பட்டன. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அதை நிராகரித்துவிட்டார்,” என்று மூத்த பத்திரிக்கையாளர் பிரதீப் சிங், பிபிசி செய்தியாளர் சந்தீப் ராயிடம் தெரிவித்தார்.

"தேர்தலில் கறுப்புப் பணம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் அது கணிசமாகக் குறையும். இரண்டாவது, தேர்தல் செலவுகளின் சுமை குறையும், நேர விரயம் மற்றும் சுமை குறையும். கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீதான செலவின் அழுத்தமும் குறையும்," என்று அவர் கூறினார்.

"கட்சிகளுக்கு மிகப்பெரிய சுமையாக இருப்பது தேர்தல் நிதி. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் தனித்தனியாக பிரசாரம் செய்ய வேண்டியதில்லை என்பதால் சிறு கட்சிகள் பலன் பெறலாம்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 
ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு 47 அரசியல் கட்சிகள் தங்கள் பதிலை அனுப்பியிருந்தன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு 47 அரசியல் கட்சிகள் தங்கள் பதிலை அனுப்பியிருந்தன.

மாநிலங்களுடன் மோதல் தொடர்பான அச்சம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணை மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுகிறது.

இதில் மத்திய பட்டியலில் உள்ள விஷயங்கள் தொடர்பாக சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு உரிமை உண்டு. மாநிலப் பட்டியல், மாநில அரசின் கீழ் வரும் அதிகாரங்களை குறிப்பிடுகிறது. மத்திய மற்றும் மாநில அரசு இரண்டுக்குமே அதிகாரம் உள்ள விஷயங்கள் பொதுப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.

"கேசவானந்த பாரதி வழக்கில், உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பில் நீங்கள் எந்தத் திருத்தத்தையும் செய்யலாம், ஆனால் அதன் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளது," என்று பிடிடி ஆச்சாரி கூறுகிறார்.

"ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு 47 அரசியல் கட்சிகள் தங்கள் பதிலை அனுப்பியிருந்தன. இது ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது என்று அதில் 15 கட்சிகள் தெரிவித்துள்ளன,” என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறினார்.

இந்த விவகாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இன்னொரு நெருக்கடி உள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத்தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதாவது கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூத்த பத்திரிக்கையாளரும், நாடாளுமன்ற விவகாரங்களை கூர்ந்து கவனிப்பவருமான அரவிந்த் சிங், ''தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின் பல பணிகள் நின்றுவிடுவது உண்மைதான். இதற்கு தீர்வு காண தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்று 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றக் குழு கூறியிருந்தது,” என்று குறிப்பிட்டார்.

"தற்போதைய அரசு 100 நாட்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றி பேசுகிறது. இது தவிர எந்த மாநிலத்தில் ஆட்சி கவிழ்கிறதோ அந்த மாநிலத்தில் மீண்டும் எஞ்சிய காலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்.”

”அதாவது இது ஒரே நாடு ஒரே வரி என்று அழைக்கப்படும் ஜிஎஸ்டி போல இருக்கும். ஆனாலும் நாம் சுங்க வரி, வருமான வரி என பல வகையான வரிகளை செலுத்துகிறோம்," என்று அர்விந்த் சிங் சுட்டிக்காட்டினார்.

 

அரசின் வாதம்

ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது இந்தியாவில் ஒரு பெரிய அரசியலமைப்பு விவாதத்தைத் தூண்டக்கூடும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது இந்தியாவில் ஒரு பெரிய அரசியலமைப்பு விவாதத்தைத் தூண்டக்கூடும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகு முதல் முறையாக, 1951-52-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 22 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெற்றன. இந்த செயல்முறை சுமார் 6 மாதங்கள் நீடித்தது.

இந்தியாவில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் 489 மக்களவைத் தொகுதிகளுக்கு சுமார் 17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 100 கோடியாக உள்ளது.

இந்தியாவில் 1957, 1962 மற்றும் 1967-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றம் மற்றும் பல மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன.

இருப்பினும், 1955-ஆம் ஆண்டு ஆந்திரா ராஷ்டிரத்திலும் (பின்னர் ஆந்திர பிரதேசமாக மாறியது) 1960-65-ஆம் ஆண்டு கேரளாவிலும், 1961 இல் ஒடிஷாவிலும் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்பட்டன.

1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு சில மாநிலங்களின் சட்டப் பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்டன. அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது தவிர 1972-ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மக்களவைத் தேர்தலும் முன்கூட்டியே நடத்தப்பட்டது.

1983-ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை அப்போதைய இந்திரா காந்தி அரசிடம் வழங்கியது. ஆனால் அதற்கு பிறகு இதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நாட்டின் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் எந்த ஒரு புதிய திட்டத்தையும் அரசால் செயல்படுத்த முடியாது. நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள போது, புதிய திட்டங்கள், புதிய வேலைகள் அல்லது புதிய கொள்கைகளை அறிவிக்க முடியாது.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமானது தேர்தலுக்கான செலவைக் குறைக்கும் என்றும் வாதிடப்படுகிறது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் அடிக்கடி தேர்தல் பணிகள் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

 
'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறைக்காக அடிப்படைத் தேவைகளுக்கு பெருமளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் தேர்தல் செலவு

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்குப் பின்னால் தேர்தல் செலவு குறையும் என்ற வாதம் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது.

”உலகிலேயே குறைவான செலவில் இந்தியாவில்தான் தேர்தல்கள் நடைபெறுகிறன. இந்தியாவின் தேர்தல்களில் ஒரு வாக்காளருக்கு சுமார் ஒரு அமெரிக்க டாலர் (இன்றைய நிலவரப்படி சுமார் 84 ரூபாய்) செலவிடப்படுகிறது,” என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதில் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு, வாக்குச்சாவடியில் உள்ள பணியாளர்கள், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் VVPATகளுக்கான செலவுகள் அடங்கும். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு சுமார் 1.75 டாலர் செலவிடப்பட்டது.

தேர்தல் செலவுகள் பற்றிய தரவுகள் கிடைக்கப்பெறும் நாடுகளில் பார்த்தால் கென்யாவில் இந்தச் செலவு ஒரு வாக்காளருக்கு 25 டாலராக உள்ளது. இது உலகிலேயே மிகவும் அதிக செலவு செய்யப்படும் பொதுத் தேர்தல்களில் அடங்கும் என்று ஓ.பி. ராவத் குறிப்பிட்டார்.

“இந்தியாவில் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 4,000 கோடி ரூபாய் செலவாகிறது. இது அவ்வளவு அதிகம் அல்ல,” என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறினார்.

”இது தவிர அரசியல் கட்சிகள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். இதனால் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பணம் ஏழைகளை சென்றடைகிறது. இது ஒரு நல்ல விஷயம்தான்”, என்றார் அவர்.

மாறிவரும் காலக்கட்டத்திற்கு ஏற்ப இந்தியாவில் தேர்தல்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. ஆனாலும் கூட தேர்தல் நேரத்தில் பேனர்கள், போஸ்டர்கள், விளம்பரப் பொருட்களை தயாரித்து ஒட்டுவது முதல் ஆட்டோ, ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் வரை அனைவருக்கும் வேலை கிடைக்கிறது.

இந்த வகையில் சாமானிய மக்களுக்கும் அவர்களின் பொருளாதாரத்திற்கும் தேர்தல்கள் பல வழிகளில் நல்லது செய்கிறது என்றும் கருதப்படுகிறது.

மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் தற்போது இருக்கும் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்று எஸ்ஒய் குரேஷி கூறினார்.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றின் விலை சுமார் 17 ஆயிரம் ரூபாய் மற்றும் VVPAT இன் விலையும் ஏறக்குறைய இதே போலதான் இருக்கிறது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்காக சுமார் 15 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPATகளை வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' அமலுக்கு வந்தால் மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்படுமா?

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் சாதக பாதகங்கள் என்ன?
27 நிமிடங்களுக்கு முன்னர்

'ஒரு நாடு, ஒரே தேர்தல்' மீண்டும் மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சரவை, இந்த சட்டம் தொடர்பான உயர் மட்டக் குழுவினரின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான முக்கியமான நடவடிக்கையாக இது இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்க, எதிர்க்கட்சியினர் இதில் உள்ள சிக்கல்களை மேற்கோள்காட்டி வருகின்றனர்.

இதில் உள்ள சாதக பாதங்கள் குறித்து விவாதங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வைக்கின்றனர்.

 

1) இது உண்மையிலேயெ தேர்தல் செலவுகளைக் குறைக்க உதவுமா?

2) ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலுமா?

3) இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு இதனால் பாதிக்கப்படுமா?

4) சிறிய கட்சிகள் இந்தச் சட்டத்தால் பாதிப்பைச் சந்திக்குமா?

என பல்வேறு சந்தேகங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன.

பிபிசி ஹிந்தியின் தி லென்ஸ் என்ற வாராந்திர நிகழ்வில் இந்த சந்தேகங்கள் குறித்து நிபுணர்களுடன் விவாதம் ஒன்றை நடத்தினார் கலெக்டிவ் நியூஸ்ரூமின் ஊடவியல் இயக்குநர் முகேஷ் ஷர்மா.

நன்மையும் தீமையும்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பல விதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது தேர்தல் செலவுகவுகள்.

ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை நடத்தும் போது நாட்டின் மேம்பாட்டு திட்டங்கள் சீராக தொடரும் என்றும், அரசுப் பணியாளர்கள் தொடர் தேர்தல் பணிகளை மேற்கொள்வதால் ஏற்படும் உளைச்சலில் இருந்து தப்பிப்பார்கள் என்றும் பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

பிபிசி-யின் விவாத நிகழ்வின் துவக்கத்தில் பேசிய ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான உபேந்திர குஷ்வாஹா ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பட்டியலிட்டார். பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது இவரது கட்சி.

"வெவ்வேறு நேரங்களில் நடத்தப்படும் தேர்தல் காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதை நாங்கள் உணர்ந்துள்ளோம். முதலில் தேர்தலுக்கான செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இரண்டாவதாக மேம்பாட்டு திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. எங்கேயும் எப்போதும் தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. விளைவாக தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துகின்றனர். இதனால் அங்கே வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன," என்று கூறுகிறார்.

இருப்பினும் இந்த ஒரே நாடு ஒரே திட்டத்தில் சில பிரச்னைகள் இருக்கிறது என்றும் அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மசோதா அறிமுகம் செய்யப்படும் போது இது தொடர்பாக மேலும் பல தெளிவு கிடைக்கும். "மசோதா வரும் போது, சட்டரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ பிரச்னைகள் ஏற்படும் போது தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்படும். அதன் பிறகு முழுமையான ஒரு சட்டம் இருக்கும். அதனை வைத்து இன்னும் சிறப்பாக விவாதிக்க இயலும்," என்று குஷ்வாஹா கூறுகிறார்.

 

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?

காங்கிரஸ் கட்சி இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்பை ஒரு ஏமாற்று வேலை என்று கூறுகிறது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள தொடர்பு தலைவரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியா ஸ்ரீநெத், "வருங்காலங்களில் பாஜக நிறைய தேர்தல் தோல்விகளை சந்திக்க உள்ளது. மக்களின் கவனத்தை ஈர்க்கவே இப்படியான திட்டத்தை அறிமுகம் செய்வதில் அக்கட்சி கவனம் செலுத்துகிறது," என்று குற்றம்சாட்டினார்.

பாஜக-வின் கூட்டணி கட்சியினரே அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று சுப்ரியா நம்புகிறார்.

"இது ஏமாற்று வேலை. மோதிக்கே தெரியும் இந்த சட்டத்தை அமல்படுத்த இயலாது என்று. அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர பாஜகவுக்கு 362 உறுப்பினர்களின் ஆதரவு மக்களவையில் தேவை.

"ஆனால் மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையே 293 தான். மாநிலங்களவையிலும் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். மேலும் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்காது என்றும் அவர்கள் அறிவார்கள்," என்றும் கூறினார்.

சமாஜ்வாதி கட்சியினரின் கருத்து என்ன?

சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் மிஸ்ரா சுப்ரியாவின் கருத்துகளை ஏற்றுக் கொண்டார். பாஜக-வின் திசை திருப்பும் நடவடிக்கையே இது என்று அவரும் கூறினார்.

"பாஜக-விடம் உண்மையான பிரச்னைகள் என்று ஏதும் இல்லை. பேசுவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒன்றும் இல்லை. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பாஜக பரப்பியுள்ள வெறுப்பு அரசியலால் சோர்வடைந்துவிட்டனர். அதனால் தான் தற்போது புதிய பிரச்னையை கிளப்பியுள்ளனர். உண்மையில் இவர்களால் இதில் வெற்றி பெற இயலாது," என்று கூறினார்.

 
ஒரே நாடு ஒரே திட்டம்

பட மூலாதாரம்,SUPRIYASHRINATE/X

படக்குறிப்பு, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை தாக்கும் திட்டம் இது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா கூறுகிறார்

கேள்வி எழுப்பும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

இதில் உள்ள சாதக பாதகங்களை கேட்டு பிறகு தன்னுடைய கருத்தை முன்வைத்தார் தேசிய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் எஸ்.ஒய். குரேஷி.

ஒரே நாடு ஒரே திட்டம் என்பது திணிக்கப்படுவதாக குரேஷி கருதுகிறார். இதற்காக உருவாக்கப்பட்ட கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அதன் பரிந்துரை குறித்து கேள்வி எழுப்பிய அவர் இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் கூறினார்.

"2014-ஆம் ஆண்டு மோதி இது குறித்து பேசும் போது, தேசிய அளவில் விவாதம் ஏற்படும். பிறகு ஒருமித்த கருத்து ஏற்படும் என்றார். விவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒருமித்த கருத்து ஏதும் ஏற்படவில்லை. ஒருமித்த கருத்து இல்லாத போது, தார்மீக முடிவாக இந்த திட்டம் கைவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் இதனை திணிக்கப்பார்க்கிறது," என்று கூறினார் குரேஷி.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

அரசியல் சார்ந்த எந்த ஒரு குழுவுக்கும் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவரை நியமிப்பது நியாயமற்றது என்று குரேஷி தெரிவித்தார்.

"அவர்களின் பரிந்துரைகளைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அவர்களின் பரிந்துரைகள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்காக எடுத்துக்காட்டாக இரண்டு மூன்று பரிந்துரைகளை இங்கே முன்வைக்கின்றேன்," என்று கூறினார் குரேஷி.

"முதலில் நாம் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் குறித்து பேசுகிறோம். பஞ்சாயத்து, உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசவில்லை. எந்த தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்படுகிறது? இந்த மூன்று தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்,"

"இரண்டாவதாக, நூறு நாட்களுக்கு பிறகு பஞ்சாயத்து தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படி நடத்தினால் அது எப்படி ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தலாக கருதப்படும்? இது முற்றிலுமாக புதிய தேர்தல். அனைத்து செயல்முறைகளையும் மீண்டும் தொடர வேண்டும்.

"மூன்றாவதாக ஒரு சட்டமன்றம் கலைக்கப்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும். பின்பு நாம் இதனை எப்படி ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்தல் என்று கூற முடியும்?" என்று மூன்று முக்கிய அம்சங்களை குரேஷி முன்வைத்தார்.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் குரேஷி மூன்று முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டமும் இந்திய அரசியலமைப்பு சட்டமும்

இது இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று விமர்சிக்கிறார் சுப்ரியா.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை கலைப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும்? 2029-ஆம் ஆண்டில் 17 மாநில அரசுகள் ஆட்சி செய்ய 2 அல்லது 3 ஆண்டுகள் மீதம் இருக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை கலைக்கும் உரிமையை உங்களுக்கு யார் வழங்கியது? இது மக்கள் வழங்கிய தீர்ப்பை அவமதிப்பது போன்று இருக்காதா? போன்று தொடர் கேள்விகளை அடுக்கின்றார் சுப்ரியா.

உபேந்திரா இதற்கு மறுப்பு தெரிவித்தார். கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை என்று அவர் கூறினார்.

"நம்முடைய அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகள் காரணமாகவே நீங்கள் இன்று கூட்டாட்சி குறித்து இன்று பேசுகின்றீர்கள். அரசியலமைப்பு சட்டத்தின் படியே, அதில் ஏதேனும் திருத்தங்கள் தேவை என்றால் அதனை நிறைவேற்ற வேண்டும்," என்று உபேந்திரா கூறுகிறார்.

"கூட்டாட்சி அமைப்பை யாரும் தாக்கவில்லை. அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தால், ஆளும் கட்சி நல்லதே செய்தாலும் அதனை நாம் எதிர்க்க வேண்டும். இந்த மன நிலையோடு இதனை நாம் எதிர்க்க கூடாது," என்றும் அவர் கூறினார்.

"இந்த சட்டத்தில் எதையேனும் மாற்ற வேண்டும், நீக்க வேண்டும் என்றால் அரசாங்கத்திடம் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி உங்களின் கருத்துகளை கேட்க கோரிக்கை வைக்க வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.

கமிட்டியின் முன்மொழிதல் படி இந்த திட்டத்தை அமல்படுத்த அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 83 மற்றும் 172ல் இந்த மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

சமாஜ்வாதி கட்சியின் அபிஷேக் மிஸ்ரே இந்த திட்டம் பிராந்திய கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறுகிறார்.

"தேர்தல் ஒரே நாளில் நடக்கலாம். 7 நாட்களிலோ, 70 நாட்களிலோ, 700 நாட்களிலோ கூட நடக்கலாம். பல தசாப்தங்களாக மக்கள் மத்தியில் நல்லுறவை வைத்திருக்கும் பிராந்திய கட்சிக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது," என்று தெரிவித்தார்.

இருப்பினும் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்கு தான் அவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறுகிறார்.

திருத்தங்கள் மூலம் அரசியலமைப்பு சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்தினால் பிறகு அரசியலமைப்பு சட்டமே முழுமையாக மாற்றப்பட்டுவிடும் என்று அவர் இந்த பிரச்னையை அணுகும் விதம் குறித்து கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த உபேந்திரா, புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும் என்று கூறுவது தவறானது என்று கூறினார்.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, அரசியல் சார்ந்த எந்த ஒரு குழுவுக்கும் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவரை நியமிப்பது நியாயமற்றது

தேர்தல் செலவுகள் குறையுமா?

உபேந்திரா போன்ற பலரும் இந்த திட்டம் தேர்தல் செலவுகளை குறைக்கும் என்று நம்புகின்றனர்.

தேர்தல் செலவுகளைக் குறைக்க அரசு எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

"கடந்த தேர்தலுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது. இந்த நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு செலவு செய்வதற்கான நிதி உச்ச வரம்பு என்று ஏதும் இல்லை. ஆனால் வேட்பாளருக்கு அது உண்டு. பிரிட்டனின் அரசியலை நாம் பின்பற்றுகிறோம். அங்கே அரசியல் கட்சிகளுக்கும் உச்ச வரம்பு இருக்கிறது.

அரசாங்கம் அந்த வரம்பை நிர்ணயிக்கலாம். உண்மையில் செலவுகளை குறைப்பதே இந்த சட்டத்தின் இலக்கு என்றால் அரசு உச்ச வரம்பை ரூ.60 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடியாக அரசால் குறைத்து நிர்ணயிக்க இயலும்," என்று விளக்கினார்.

இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட உபேந்திரா இது தொடர்பான பணிகளில் அரசு ஈடுபட வேண்டும் என்று விவாதத்தின் போது குறிப்பிட்டார்.

சுப்ரியா இது எப்படி செலவீனங்களைக் குறைக்கும் என்ற கேள்வியை எழுப்பினார். உங்களுக்கு விவிபேட்களும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் மூன்று மடங்கு அதிகமாக தேவைப்படும். இதற்கான சுமையை எங்கள் மக்கள் தான் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது திட்டங்கள் தொய்வடைவது பற்றியும் புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட இயலாமல் போவது குறித்தும் பேசிய குரேஷி இதனை மறுக்கிறார். நான்கரை ஆண்டுகளாக பதவியில் இருந்தாலும் கூட, தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படி சிறப்பான திட்ட அறிவிப்புகள் வருவது எப்படி என்ற கேள்வியை எழுப்பினார்.

தேச நலனை கருத்தில் கொண்டு ஏதேனும் திட்டம் அறிவிக்கப்படும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு கொண்டு வரப்பட்டு பிறகு ஆணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று மேற்கோள்காட்டினார்.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்
படக்குறிப்பு, தேர்தல் செலவீனங்களைக் குறைக்க அரசு எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை செய்யவில்லை

வாக்காளர்கள் இதனை எப்படி பார்க்கின்றனர்?

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் போது அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் அதனை பாதிக்குமா?

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிக்கும் வாய்ப்பு வாக்காளர்களுக்கு கிடைக்கிறது. அவர்கள் ஒரே நாளில் யாருக்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிடலாம் என்று நம்புகிறார் உபேந்திரா. ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவதால் இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

சுப்ரியாவும் அபிஷேக்கும் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர். மக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து பேசவும், குறைகள் பற்றி பேசவும் வெவ்வேறு காலங்களில் நடத்தப்படும் தேர்தல்கள் வாய்ப்பளிக்கிறது என்று கூறினார் அபிஷேக்.

"பஞ்சாயத்து தேர்தலோ, மேயர் தேர்தலோ வெவ்வேறு நேரங்களில் நடைபெறூம் தேர்தலின் போது மக்கள் தங்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கின்றனர். இது நடக்கிறதோ இல்லையோ, இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்களின் அதிகாரத்தை குறைக்கிறது," என அபிஷேக் கூறுகிறார்.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் போது அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது

மக்களுக்கு என்ன நன்மை?

வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்துவதால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றிய மேலும் ஒரு கருத்தை குரேஷி முன்வைத்தார்.

"பாஜக எம்.பி. ஒருவர் மக்களிடம் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பதை நான் கேட்டேன். பொதுமக்களுக்கு அதிகாரம் ஏதும் இல்லை என்பதால் அவர்களுக்கு தொடர்ந்து தேர்தல் நடப்பது மகிழ்ச்சியே அளிக்கிறது. அவர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது. அவர்களிடம் அந்த அதிகாரம் இருக்கும் வரை தலைவர்கள் மீண்டும் மீண்டும் மக்கள் முன்பு வந்து கைக்கட்டி நிற்பார்கள். இல்லையென்றால் அந்த எம்.பி-யை எத்தனை முறை மக்களால் பார்க்க முடியும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வந்து செல்லும் அந்த எம்.பி-யின் புகைப்படத்தை போஸ்டர் அடித்து ஒட்டி அவரை காணவில்லை என்று மக்கள் தேட ஆரம்பித்துவிடுவார்கள்," என்று கூறினார்.

தொடர்ந்து தேர்தல்கள் நடைபெறும் பட்சத்தில் பொதுமக்களின் நலன் பற்றிய பொறுப்பு அரசியல் கட்சி தலைவர்களுக்கு வருகிறது என்று நம்புகிறார் குரேஷி. புனேவில் இளைஞர்களுக்கான பாராளுமன்றமத்தில் பேசிய போது, பெண் ஒருவர் கூறிய கோஷம், "தேர்தல் வரும்போது தான் ஏழைகளுக்கு புலாவ் கிடைக்கிறது," அவருக்கு பிடித்தது என்று விவாதத்தின் போது குரேஷி கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.