Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

36 படகுகள் தயார்: கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன செய்துள்ளன?

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, சென்னை

பட மூலாதாரம்,RSMCNEWDELHI

படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருப்பதை காட்டும் படம். கட்டுரை தகவல்
  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை
  • 14 அக்டோபர் 2024, 09:15 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும், இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் தரப்பட்டுள்ளது.

கனமழையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறுகிறது தமிழக அரசு.

ஆனால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிதீவிர மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் எந்த தமிழக மாவட்டங்களும் இல்லை என்று கூறுகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் எந்த அளவுக்கு தயாராக உள்ளன?

வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?

இன்று காலை (அக்டோபர் 14) தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 13ஆம் தேதி அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், "இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 15 மற்றும் 16 தேதிகளில் புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திராவின் கடலோர பகுதிகளில் நிலை கொள்ளும்," என்று தெரிவித்தார்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் அடுத்த சில நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் 16ஆம் தேதி அன்று சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 
சென்னையில் கனமழை எச்சரிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னையில் 16ஆம் தேதி அன்று மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்

14-ஆம் தேதி அன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள் மற்றும் புதுவை - காரைக்கால் பகுதிகளில் கனமுதல் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

15-ஆம் தேதி அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை ஒரு சில இடங்களில் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

16-ஆம் தேதி அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மற்றும் 16 தேதிகளில் சென்னைக்கு ஆரஞ்சு நிற அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் படி, மஞ்சள் நிற எச்சரிக்கை கனமழை காலங்களில் வழங்கப்படுகிறது. பொதுவாக 7 முதல் 11 செ.மீ மழை பொழிவு ஏற்பட இருக்கும் காலங்களில் இந்த எச்சரிக்கை வழங்கப்படுகிறது.

மிக கனமழை என்பது 12 முதல் 20 செ.மீ மழைப்பொழிவை குறிப்பதாகும். இத்தகைய சூழலில் ஆரஞ்சு அலர்ட் வழங்கப்படுகிறது.

அதீத கனமழை என்பது 20 செ.மீக்கும் மேலே மழைப்பொழிவு ஏற்படும் நிகழ்வாகும். அப்போது சிவப்பு நிற அலர்ட் வழங்கப்படுகிறது.

 
சென்னை கனமழை எச்சரிக்கை

பட மூலாதாரம்,PRADEEP JOHN

படக்குறிப்பு, காற்றழுத்த தாழ்வுப் பகுதி வட தமிழகத்திற்கு அருகே மேற்கொண்டு நகராமல் நிலை கொண்டால் கனமழை நீடிக்கும்

அதீத கனமழைக்கு வாய்ப்பு - ப்ரதீப் ஜான்

ஐந்து நாட்களுக்கான கணிப்பின் அடிப்படையில் 20 செ.மீக்கும் மேலே சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு வெதர்மென் என்று அறியப்படும், ப்ரதீப் ஜான் இது குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், "மழை எப்போது ஆரம்பிக்கும் என்று உறுதியாக கூற இயலாது, ஆனால் இந்த நான்கு நாட்களில் ஏதாவது ஒரு நாள் நிச்சயமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டுவை உள்ளடக்கிய பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக," கூறியுள்ளார்.

இந்த தாழ்வுப் பகுதி வட தமிழகத்திற்கு அருகே மேற்கொண்டு நகராமல் நிலை கொண்டாலோ அல்லது குறைவான வேகத்தில் முன்னேறினாலோ நான்கு நாட்களுக்கும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (அக்.13) நேரில் சென்று பார்வையிட்டார்.

மழைக் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் மையமாக இந்த மையம் செயல்படும். சென்னையில் எந்தெந்த பகுதிகளில் வெள்ள நீர் தேங்குகிறது என்பதை நேரலையில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை இந்த மையம் மேற்கொள்ளும்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் பொருட்டு 13 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மின்வெட்டு போன்ற நிகழ்வுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மின்சாரத்துறை ஊழியர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

 
காற்றழுத்த தாழ்வுப் பகுதி, சென்னை

பட மூலாதாரம்,X/GREATER CHENNAI CORPORATION

படக்குறிப்பு, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வை மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

36 படகுகள் தயார் - சென்னை மேயர் பிரியா

சென்னை மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னை மேயர் பிரியா, "தாழ்வான பகுதிகள், சுரங்கப்பாதைகள் மற்றும் வடிகால்களில் செல்லும் நீரின் அளவை கண்காணிக்க அந்தந்த பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கே உள்ள கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் அதனை நேரலையில் காண இயலும். நீர் தேங்கும் சூழல் ஏற்படும் போது அதனை உடனடியாக சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்," என்று கூறினார்.

இதுமட்டுமின்றி, காலநிலையை கண்காணிக்கும் செயலி ஒன்று அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், அதன் மூலம் அவரவர் மண்டலங்களில் எந்தெந்த இடங்களில் மழையின் அளவு அதிகமாக உள்ளது, எங்கே நீர் தேங்கியுள்ளது என்பதை அதிகாரிகள் அறிந்து கொள்ள இயலும் என்று கூறினார்.

"கூடிய விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இது வழங்கப்படும்," என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் சென்னை மாநகராட்சி 36 படகுகளை வாங்கியுள்ளது. இது குறித்து பேசிய அவர், "இந்த படகுகளை தேவையான மண்டலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். குறிப்பாக வேளச்சேரி, மண்டலம் மூன்றில் உள்ள விநாயகபுரம் போன்ற பகுதிகளுக்கு நாங்கள் அனுப்பி வைத்திருக்கிறோம். கூடுதல் தேவை ஏற்படும் பட்சத்தில் மீனவர்களிடம் 80 படகுகள் வாங்கப்படும்," என்று கூறினார்.

நிவாரண மையங்கள் குறித்து பேசிய அவர், "169 வார்டுகளில் தற்போது நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒருங்கிணைந்த சமையலறையில் சமைத்த உணவுகளை மையங்களுக்கு கொண்டு செல்வது நேர விரயமாக இருப்பதால், அந்தந்த மையங்களிலேயே உணவுப் பொருட்களை சமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்" என்று கூறினார்.

 
சென்னை கனமழை எச்சரிக்கை

பட மூலாதாரம்,@CHENNAICORP/X

படக்குறிப்பு, ஆறாவது மண்டலத்திற்கு அனுப்பப்பட்ட படகுகள்

சென்னை மக்களுக்கு கை கொடுக்குமா மழைநீர் வடிகால் திட்டம்?

கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கனமழையின் போது நகரின் பெருவாரியான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கட்டி முடிக்கப்படாத வடிகால்கள் திறந்த நிலையில் அப்படியே விடப்பட்டிருந்தது சில இடங்களில் விபத்திற்கு வழிவகை செய்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றிய ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன் திறந்து கிடந்த மழைநீர் வடிகாலால் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட அசோக் நகரில் ஐயப்பன் என்பவர், அவ்வாறான மழைநீர் வடிகால் ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி, பொதுமக்கள் இது தொடர்பாக ஏதேனும் பிரச்னை என்றால் மாநகராட்சிக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, "நெடுஞ்சாலைத்துறையும் சில பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மாநகராட்சியில் புதிய பணிகள் எதையும் 30-ஆம் தேதிக்கு மேல் துவங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று கூறினார்.

பொதுமக்கள் உதவிக்கு 1913 என்ற கட்டணமில்லா எண்ணுக்கும், 9445551913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, சென்னை

பட மூலாதாரம்,X/GREATER CHENNAI CORPORATION

ஆனால் அடுத்த சில நாட்களில் சென்னை எதிர்கொள்ளவிருக்கும் கனமழைக்கு, சென்னை மாநகராட்சி இன்னும் முழுமையாக தயாராகவில்லை என அறப்போர் இயக்கம் விமர்சித்துள்ளது.

அறப்போர் இயக்கத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மெட்ரோ ரயில் திட்ட குழிகள், மெட்ரோ வாட்டர் குடிநீர் கழிவுநீர் குழிகள், சாலையில் மேலும் கீழுமாக இருக்கும் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் மூடிகள், சாலை குழிகள், தூர் வாரப்படாத நீர்வழி பாதைகள் மற்றும் ஏரிகள், ஒன்றோடு ஒன்று இணைக்கப்படாத மழை நீர் கால்வாய்கள். இத்தனையையும் தாண்டி சென்னை மக்களை மழையில் இருந்து காப்பாற்ற போட் மற்றும் பம்ப் செட்டுகளுடன் தயாராக இருப்பதாக சொல்லும் சென்னை மாநகராட்சிக்கு வாழ்த்துகள்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் ஏற்படும் வெள்ளத்திற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து அறப்போர் இயக்கத்தின் சார்பாக ஒரு கள ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 
அறப்போர் இயக்கம்

பட மூலாதாரம்,@ARAPPOR

காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்

"காலநிலை மாற்றத்தின் விளைவாக தொடர் மழை நிகழ்வுகளை நாம் சந்தித்து வருகின்றோம். ஆனால் சென்னை மாநகராட்சியின் பணிகள் தற்போதும் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது" என்று கூறுகிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் பொறியாளர் பிரபாகரன் வீரஅரசு.

"சமீபத்தில் வெளியான ஐ.பி.சி.சியின் ஏ.ஆர். 6 அறிக்கையில் சென்னையின் பெயர் மட்டும் ஐந்து முறை இடம் பெற்றுள்ளது. நூறாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய நிகழ்வெல்லாம் தற்போது ஆண்டு தோறும் நடைபெறும் நிகழ்வுகளாக மாறிவிட்டது," என்று எச்சரிக்கும் அவர், பருவமழையை நாம் எதிர்கொள்ளும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விவரிக்கிறார்.

சென்னை கனமழை எச்சரிக்கை

பட மூலாதாரம்,@CHENNAICORP/X

படக்குறிப்பு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி ஊழியர்கள்

"நிலப்பகுதி மட்டுமின்றி, கடல் நீரும் சூடாகிறது. அதிகமாக மேகங்களை அவை உருவாக்கும் போது அதனை ஒட்டியிருக்கும் பகுதிகளில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் அல்லது ஒரே வாரத்தில் பெய்துவிடுகிறது. காலநிலை மாற்றத்தின் தொடர் நிகழ்வுகளை நாம் முன்கூட்டியே அனுமானித்து அதற்கு ஏற்றப்படி திட்டங்களை தீட்ட வேண்டும்" என்றும் பிரபாகரன் தெரிவிக்கிறார்.

"பருவமழையின் போது விடப்படும் எச்சரிக்கைகளில் அதீத கனமழை என்பது 20 செ.மீக்கு அதிகமாக பெய்வது. ஆனால் அந்த அளவில் இருந்து எந்த அளவு மழை பெய்யும் என்று கணிக்க நம்மிடம் போதுமான நுட்பங்கள் இல்லை. மத்திய அரசு வழங்கும் வானிலை அறிக்கையை மட்டுமே நம்பிக் கொண்டு நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது," என்றும் கூறுகிறார்.

"சென்னை மாநகராட்சி மட்டுமல்ல தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் காலநிலை மாற்றத்தால் தூண்டப்படும் தீவிர மழையை அடிப்படையாக கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க தயார் நிலையிலும் இல்லை," என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது - சென்னையில் மழை நீடிக்குமா? கனமழை எங்கெல்லாம் பெய்யும்?

சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

பட மூலாதாரம்,IMD WEBSITE

படக்குறிப்பு, வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியை காட்டும் வரைபடம்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதேபோல், தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கனமழை தொடர்கிறது.

கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்துள்ளது. இதனால், அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் கனமழை பெய்யக் கூடும்?

சென்னையில் காலை முதலே கனமழை

சென்னையில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவில் நல்ல மழை பெய்தது. இன்று காலை முதலே மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்கிறது. தாம்பரம், பல்லாவரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் காலை முதல் மழை தொடர்கிறது.

திருவள்ளூரில் விடியவிடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை, கும்மிடிப்பூண்டியில் பெய்த மழையால் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதியான திருஆயர்பாடியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

சோழிங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருகிறது குறிப்பாக புறநகர் பகுதிகளான மேடவாக்கம் வேளச்சேரி பிரதான சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கின்றது, குறிப்பாக பள்ளிக்கரணை பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி வடியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்

இதேபோல் ஓஎம்ஆர் சாலை, துரைப்பாக்கம், கந்தன்சாவடி, எம்ஜிஆர் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.

 
சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வழக்கமாக அதிகமாக மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் படகுகள் இப்போதே தயாராக வைக்கப்பட்டுள்ளன.

கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சியும் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வழக்கமாக அதிகமாக மழைநீர் தேங்கும் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட தாழ்வான இடங்களில் படகுகள் இப்போதே தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக, 36 படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது.

பொதுமக்கள் உதவிக்கு 1913 என்ற கட்டணமில்லா எண்ணுக்கும், 9445551913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

பட மூலாதாரம்,X/GREATER CHENNAI CORPORATION

கோவையில் மழைநீரில் மீண்டும் சிக்கிய பேருந்து

கோவை மாநகரில் மாலை சுமார் 5 மணி அளவில் இருந்து பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. காந்திபுரம், சித்தாபுதூர், சாய்பாபா காலனி, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சிவானந்த காலனியில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து மாட்டிக் கொண்டது. அதில் பயணித்த பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்ட நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து கிரேன் மூலம் அந்த பேருந்து மீட்கப்பட்டது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு தினங்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 70.5 மிமீ மழையும், காஞ்சிபுரத்தில் 70 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 52.9 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதற்கு அடுத்ததாக நுங்கம்பாக்கத்தில் 42.6 மிமீ மழை பதிவாகியுள்ளது.

 
சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

பட மூலாதாரம்,IMD CHENNAI

சென்னையில் 8 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் கன மழை, சூறைக்காற்று போன்றவைகளால் விமான சேவைகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அனுப்பி வரும் வானிலை அறிக்கையின் அடிப்படையில், விமான சேவைகளை பாதுகாப்பாக இயக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில், இதுவரையில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் கனமழை எச்சரிக்கை காரணமாக, பயணிகள் பலர் தங்களுடைய விமான பயணங்களை ரத்து செய்து விட்டதால், இன்று (அக்டோபர் 15) சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.

இதனால் போதிய பயணிகள் இல்லாமல் பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும் விமான நேரங்களில் மாற்றங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதால், பயணிகள் அனைவரும் தாங்கள் பயணம் செய்யும் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்படும் நேரங்களை விசாரித்து, அதற்கு ஏற்றபடி தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

பட மூலாதாரம்,@AAICHNAIRPORT

படக்குறிப்பு,சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது

திருச்செந்தூரில் சுமார் 100 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு நேற்று கடல் உள்வாங்கியது. அப்போது, கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் பச்சை பாசி படிந்த பாறைகள் மேல் ஏறி செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். அவர்களை கோவில் கடற்கரை பணியாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் பள்ளிகள் மதியம் வரை மட்டுமே இயங்கும்.

புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தவரை, புதுச்சேரி காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா 15.10.2024 (செவ்வாய்க்கிழமை) முதல் 18.10.2024 (வெள்ளிக்கிழமை) வரை செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் எப்போதும் போல் பணிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை தேர்வுகள் நடைபெறாது என்று பொறுப்பு பதிவாளர் பிரகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு "சிவப்பு எச்சரிக்கை” – சென்னை வானிலை ஆய்வு மையம்

image

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய துணைத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,

chennai_rain__2024_5.jpg

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது.

கனமழை எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிககனமழையும் திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

chennai_rain_2024_1.jpg

நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழையும் பெய்யக்கூடும். திருப்பத்தூர், தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

17-ஆம் தேதி வடமேற்கு மாவட்டங்களான திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழையும் ஒரு சில பகுதிகளில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா உள்ளிட்ட தமிழக கடலோர பகுதிகளில் இன்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் 16, 17 தேதிகளில் வட தமிழக கடலோர பகுதிகள் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

chennai_rain_2024_2.jpg

தற்போதைய நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. அடுத்துவரும் 24 மணி நேரத்தில் மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் தெற்கு ஆந்திரா ஒட்டிய பகுதிகளை நெருங்க கூடிய சூழல் உள்ளது.

chennai_rain_2024.jpg

இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

https://www.virakesari.lk/article/196373

low-pressure.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Tamil Nadu Rains: வெளுத்து வாங்கும் மழை; மாநிலம் முழுவதும் எங்கே என்ன நிலவரம்?

Chennai Rains: வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது

சென்னையில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவில் நல்ல மழை பெய்தது. இன்று காலை முதலே மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இதனால் சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் போன்ற பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

பொதுவாக மழைநீர் தேங்கும் பகுதிகளான வேளச்சேரி போன்ற பகுதிகளில் மீட்புப் பணிகளுக்கு படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கணிப்புக்கு மாறாக மழை குறைய என்ன காரணம்? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே?

சென்னை மழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னையில் 2 நாள் கனமழைக்குப் பிறகு இன்று லேசான மழையே பெய்து வருகிறது.
16 அக்டோபர் 2024, 06:47 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் 12 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 360 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து கிழக்கே 390 கிலோமீட்டர் தொலைவிலும் ஆந்திர மாநிலத்தின் நல்லூரிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து வடதமிழ்நாடு தெற்கு ஆந்திர கடற்கரையோரம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே நாளை (அக். 17) காலை கரையை கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், இன்று சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரையிலும் அவ்வாறான கனமழை பெய்யவில்லை. ஆங்காங்கே லேசான மழையே பெய்தது.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் 70 நிவாரண முகாம்களில் 2 ஆயிரத்து 789 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மழை

பட மூலாதாரம்,IMD WEBSITE

படக்குறிப்பு, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை காட்டும் வரைபடம்

சென்னையில் 8 விமான சேவைகள் ரத்து

தொடர் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் இதுவரையில் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணிகள், தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்களின் நிலையை கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற் போல் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை மழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னையில் நேற்று பரவலாக கனமழை பெய்தது (அக். 15, 2024)

ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 38 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 ஏரிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

130 ஏரிகள் 75 சதவீதத்தை தாண்டியும் 120 ஏரிகள் 50 சதவீதத்தை தாண்டியும் நிரம்பி உள்ளது ஆக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 
சென்னை மழை

பட மூலாதாரம்,X/TAMIL NADU WEATHERMAN

படக்குறிப்பு, கனமழை பெய்வதற்கான மேகத்திரள்கள் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழை குறைந்தது ஏன்?

இந்நிலையில், மிக கனமழைக்கான வாய்ப்பு சென்னைக்கு குறைந்துள்ளதாக தனியார் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கனமழை பெய்வதற்கான மேகத்திரள்கள் சற்று மேல்நோக்கி சென்றுவிட்டதால் கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் தன் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கனமழை பெய்வதற்கான மேகத்திரள்கள் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழையே பெய்யும் என அவர் கணித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.