Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா?

June 4, 2025

NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா?

— கருணாகரன் —

NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா? அதாவது இதுவரையான வரலாற்றில் அதிகாரத்தில் இருந்த சக்திகளை விட NPP தீங்கானதா? மோசமானதா?

அப்படியென்றால், NPP யை மக்கள் எப்படி – எதற்காக – ஆதரித்தனர்? ஏன் இன்னும் ஆதரிக்கின்றனர்?

இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா? 

அல்லது “இனவாதத்தைக் கடந்து விட்டோம், மாற்றுச் சக்தி நாங்கள், இடதுசாரிகள்..” என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இனவாதத்தையே NPP யும் கைக் கொள்கிறது என்ற  கோபமா? 

சிங்கள இனவாதச் சக்திகளைச் சமாளித்துக் கொள்வதற்காக NPP யும் இனவாதத்தைப் பேச முற்படுகிறதா? அது சரியானதா? 

NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா?

ஊழலுடன் NPP யும் தொடர்பு பட்டுள்ளதா? அல்லது ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் அது உறுதியாகவே நிற்கிறதா?

NPP செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை?

ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?

எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு NPP யின் நடவடிக்கைகள் வேகமாக இல்லையா? அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

இதைக்குறித்து NPP யினர் தெளிவாக்காது இருப்பது ஏன்? 

“NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்?

“தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது”  என்று சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள்.

“சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPPயும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்” என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர்.

அப்படியென்றால் இதில் எது உண்மை?

இரண்டு தரப்பினாலும் குற்றம் சாட்டப்படும் ஒரு தரப்பு எப்படியாக இருக்கும்?

சுருக்கமாகக் கேட்டால், சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில் ஆட்சி செய்த ஏனைய அரசியற் தரப்பினரை விட NPP மோசமான தரப்பா?

என்றால் அது எந்த வகையானது என்று அரசியற்கட்சிகளும் NPP யை எதிர்ப்போரும் தெளிவாகச் சொல்ல (விளக்க) வேண்டும்அல்லவா?

NPP யை எதிர்த்து அதனை அதிகாரத்திலிருந்து அகற்றினால் அந்த இடத்தில் வேறு எந்தச் சக்தியை அமர்த்தலாம்? அல்லது எந்தச் சக்தி அதிகாரத்துக்கு – ஆட்சிக்கு – வரும்?

1.      ஐ.தே.க

2.      ஐக்கிய மக்கள் சக்தி

3.      பொதுஜன பெரமுன

4.      சிறிலங்கா சுதந்திரக் கட்சி

5.      இந்தக் கட்சிகளின் கூட்டு அல்லது கலவைதானே!

இவை NPP யை விட சிறப்பான நல்லாட்சியை தமிழ் பேசும் மக்களுக்கோ இலங்கையின் அனைத்துச் சமூகங்களுக்கோ வழங்கி விடுமா?

அதற்கான உத்தரவாதம் என்ன?

தற்போதைய சூழலில் NPP யை நீக்கினால் அந்த இடத்தில் ராஜபக்ஸக்களின் பொதுஜன பெரமுன அல்லது சஜித் பிரேமதாச தரப்பின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றில் ஒன்றுதான் அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 

இவை இரண்டும் NPP ஐ விட முற்போக்கானவையா? அதாவது தீங்கற்றவையா? 

இவற்றுக்கு அப்பால் வேறு புதிய சக்தி ஏதாவது வரக்கூடிய சாத்தியமுண்டா?

என்றால் அது, எது?

இதற்கெல்லாம் யாரும் பதில்  சொல்லத் தயாரில்லை.

அப்படியென்றால் எந்த அடிப்படையில் NPP மீதான எதிர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது?

தமிழ் பேசும் மக்கள் NPP ஐ எதிர்க்கும்போது அது தவிர்க்க முடியாமல் மேற்சொன்ன ஐந்து தரப்புகளில் ஒன்றுக்கோ அல்லது ஐந்துக்கோதானே ஆதரவாக இருக்கும்?

அந்தத் தரப்புகள் கடந்த காலத்தில் இன ஒடுக்குமுறையையும் – பாரபட்சத்தையும்  தாராளமாகவே மேற்கொண்டவையல்லவா?மட்டுமல்ல, இப்போதும் அதே நிலைப்பாட்டில் உள்ளவையே!

இதைப் புரிந்து கொண்டும் NPP ஐ எதிர்த்தால் அது மறைமுகமாகவும் நேரடியாகவும் மேற்சொன்ன சக்திகளுக்கே வாய்ப்பாகும் அல்லவா?

இதனை யாராவது மறுக்க முடியுமா?

 அப்படியென்றால் அதைத்தான் தமிழ் பேசும் தரப்புகள்  செய்ய விளைகின்றனவா? அவற்றின் அரசியல் தெரிவும் நிலைப்பாடும் இதுதானா?

அல்லது தெரிந்த பேயை விட தெரியாத பிசாசு நல்லது என எண்ணுகின்றனவா? அல்லது ஏனைய சக்திகளை விட NPP ஆபத்தானது என விளைகின்றனவா? 

ஏனைய தென்னிலங்கை அரசியற் கட்சிகள் வடக்குக் கிழக்கில் வலுவாகக் காலூன்றவில்லை. ஆகையால் பிராந்திய அரசியலுக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை. மட்டுமல்ல, பிராந்திய அரசியலுக்கு அந்தச் சக்திகள் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் தாரளமாக வாய்ப்பளித்தன. NPP இதை மறுத்து பிராந்திய சக்திகளின் இருப்பிலும் – பிராந்திய அரசியலிலும் கை வைத்துள்ளது என்ற அச்சத்தின் வெளிப்பாடா? 

இதெல்லாம் NPP யை எதிர்க்கும் தரப்பினர் மீதான கேள்விகளாகும். இதுபோல இன்னும் பல கேள்விகளுண்டு. இதில் தமிழ் பேசும் மக்களுக்குரிய தனியான கேள்விகளும் உண்டு. இவற்றை எளிதாக புறந்தள்ளி விட முடியாது. 

NPP ஐ மட்டுமல்ல எந்தவொரு தரப்பை எதிர்க்கும்போது அதற்குரிய போதிய காரணங்களை விளக்குவது அவசியமாகும். அப்பொழுதுதான் அதைக் குறித்து மக்களும் சிந்திக்க முடியும்? உரிய தரப்பும் (NPP) தன்னைப் பரிசீலித்துக் கொள்வதற்கு அதிக  வாய்ப்பிருக்கும்.

இதேவேளை NPP யின் மீதும்கடுமையான விமர்சனங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டே இந்தக் கட்டுரை விடயங்களை விவாதிக்க முற்படுகிறது.

NPP தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளவும் கவனத்திற் கொள்ளவும் வேண்டிய விடயங்கள் பல உள்ளன.  

தனக்குக் கிடைத்திருக்கும் வரலாற்று வாய்ப்பை NPP சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் யார்? எதிரிகள் யார் என்று அதனால் கண்டறிய முடியாதிருக்கிறது. முதிர்ச்சியும் பக்குவமும் நிதானமும் இல்லாத பலருடைய கைகளில் பொறுப்புகள் பகிரப்படுகின்றன. ஆற்றலுள்ளவர்களையும் NPP யின் மெய்யான ஆதரவாளர்களையும் அது கண்டறிய முடியாமல் தடுமாறுகிறது. அல்லது அவ்வாறானவர்களை அதனால் உள்வாங்க முடியவில்லை. அதற்குள் நிலவுகின்ற உளக் குழப்பங்களே இதற்குப் பெரிய காரணங்களாகும். இதெல்லாம் NPP ஐப் பலவீனப்படுத்துகின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட சிலரைத் தவிர, ஏனையவர்கள் நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர். 

அதாவது இனவாதத்தை முன்னெடுத்த ஐ.தே.க, சு.க, பொதுஜன பெரமுன போன்றன நாட்டை அகரீதியாகப் பிளவு படுத்தியது மட்டுமல்ல, அனைத்துச் சமூகங்களுக்கும் நாட்டுக்கும் பேரிழப்புகளையும் உண்டாக்கியவை. அவற்றின் அரசியல் (இனவாதம்) அந்தக் கட்சிகளையே காப்பற்ற முடியாமல் போய் விட்டது. சரியாகச் சொன்னால், அவை வளர்த்த இனவாதத்துக்கு அவையே பலியாகி விட்டன. 

அதனால்தான் ஒரு மாற்று சக்தி வேண்டும். மாற்று அரசியல் வேண்டும் என்ற அடிப்படையில் NPP க்கான ஆதரவை மக்கள் வழங்கினர். தமிழ் பேசும் மக்களுடைய ஆதரவும் அப்படியானதே. 

இதை மறந்து விட்டு அல்லது இதைப் புரிய மறுத்து ஏனைய தீய சக்திகளைப்போலவே NPP யும் செயற்படுமாக இருந்தால், அவற்றின் வழியையே தொடருமாக இருந்தால் நிச்சயமாக விரைவில் NPP தோல்வியைச் சந்தித்தே தீரும். தோல்வியை மட்டுமல்ல, அழிவையும்தான். 

இந்தச் சமரசமெல்லாம் தெற்கில் மேலெழும் அல்லது NPP ஐ பலவீனப்படுத்த முற்படும் சிங்களத் தீவிரவாத சக்திகளையும் திருப்பதிப்படுத்த வேண்டிய சூழலால் செய்யப்படுவது என்று இதற்கு யாரும் சமாதானம் சொல்ல முற்பட்டால் அவர்கள் சமகால வாய்ப்பைச் சீரழிப்பவர்கள் மட்டுமல்ல, நாட்டுக்கும் NPP க்கும் கூட தீமைகளையே சிந்திப்பவர்களாக இருப்பர். 

வடக்கில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இளங்குமரன் போன்றோர் மிகப் பலவீனமானவர்களாகவும் பாதகமானவர்களாகவுமே இருக்கின்றனர். மக்களுக்கும் NPP க்கும் மாறானவர்களாகவே செயற்படுகின்றனர். 

இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. அல்லது இவர்களை பொறுப்புகளில் இருந்து நீக்கவில்லை என்றால் அதனுடைய பாரதூரமான விளைவுகள் NPP ஐயே பாதிக்கும். மக்களுக்கும் அதனால் பாதிப்பே. 

சிதறுண்டிருந்த தமிழ்க்கட்சிகளை ஆறுமாதங்களுக்குள் ஒன்றிணைய வைத்த, பிராந்திய அரசியலை வலுவாக்கம் செய்தது  NPP யின் நடவடிக்கைகள்தான். அதிலும் சந்திரசேகர் – இளங்குமரன் கூட்டணியே என்பதை NPP யும் அதனுடைய ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 

NPP யின் ஆதரவாளர்களும் NPP யும் இதைக்குறித்தெல்லாம் இன்னும் தெளிவாகப் பேசாதிருப்பது ஏன்?

 இதேவேளை NPP இலகுவில் ஆட்சியைக் கைப்பற்றவில்லை. அதைப்போல அதனால் இலகுவாக ஆட்சியை நடத்தவும் முடியாது. குறிப்பாக அதிகாரத்துக்கு வந்தபோது நாடு பொருளாதார நெருக்கடிக்குள்  (கடன் பொறிக்குள்ளும் சர்வதேச நெருக்கடிகளுக்குள்ளும்) தள்ளப்பட்டிருந்தது. அல்லது சிறைப்பட்டிருந்தது.

இது போதாதென்று இனவாதம் மிகத் தீவிரமாக கட்டமைக்கப்பட்டிருந்தது. அதற்கு இராணுவப் பலமும் சேர்க்கப்பட்டிருந்தது. அதாவது இனமுரணும் அதற்கான இராணுவமும் அதற்கான உளநிலையும் உச்ச நிலைக்கு வளர்க்கப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கு மத்தியில்தான், இவற்றைச்சீர்ப்படுத்தும் ஆட்சியை NPP  நடத்த வேண்டியுள்ளது. இது எளிய விடயமல்ல.

ஆகவே இதையெல்லாம் நாம் எளிதில் மறந்து விடவோ கடந்து விடவோ முடியாது.

இருந்தும் தமது தவறுகளுக்கும் பழிகளுக்கும் பரிகாரம் காணாமல், நிவாரணம் தேடாமல் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே அனைத்துத் தரப்பும் முயற்சிக்கின்றன. 

இது எவ்வளவு பெரிய தவறு? எவ்வளவு பெரிய குற்றம்?

ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள NPP இதையெல்லாம் புரிந்து கொண்டு  வேண்டும். இதற்கு NPP தன்னைத் தெளிவாக முன்னிறுத்துவது அவசியமாகும். தெளிவென்பது, குழப்பங்கள்,உள் முரண்பாடுகள் அற்ற நிலையில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதாகும்.

ஆனால், அதிகாரத்துக்கு NPP  வந்த பின்னரான எட்டுமாத கால நடவடிக்கைகளை அவதானிக்கும்போது அப்படித் தெரியவில்லை. அது தடுமாற்றங்களுக்குள்ளாகியிருப்பதாகவே தெரிகிறது. என்பதால்தான் அதற்கு (NPP க்கு) எதிரான சக்திகள் வலுப்பெறக் கூடியதாக உள்ளது. அதன் மீதான விமர்சனங்களும் உள்ளன.

https://arangamnews.com/?p=12060

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.