Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை - 196 / கண்மணி டீச்சர் [ஆறு பகுதிகள் ]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 01

கண்மணி, தனது இளமைப் பருவத்தில், தன்னம்பிக்கை, ஆர்வம் உள்ளவராகவும், சக மாணவர்களாலும் குடும்பத்தினராலும் போற்றப்பட்டவராகவும் இருந்தாள். அவள் கல்வி, திருமணம், குழந்தைகள் மற்றும் மனநிறைவு [Education, marriage, children, contentment.] கொண்ட வாழ்க்கை எல்லாம் நேர்கோட்டில் நகரும் ஒன்றென்று அன்று நம்பி வளர்ந்தவள். இந்த வரிசை பெண்களுக்கு வேறுபடுவதாக யாரும் அவளுக்குச் சொல்லவில்லை.

கண்மணி புத்திசாலி மற்றும் திறமைகள் பல தன்னகத்தே கொண்ட பெண்ணாக, மென்மையான தன்னம்பிக்கையுடன் தனது படிப்பை முடித்து, ஆசிரியராக தொழில் வாய்ப்பும் பெற்றாள். ஆரம்ப பாடசாலையில் ஆசிரியையாக, ஒழுக்கத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து மாணவர்களுக்கு முழுமையாக பாடம் விளங்கும் வண்ணம் கற்பித்தாள்.


அப்பொழுதும் காதல் — அது புரிதலால் வளரும் ஒன்று என்று நினைத்தாள். திருமணம் — அது உடன்பாட்டின் பிணைப்பு என்று கருதினாள். அவள் அதில் மாற்றம் அடையவில்லை.

அப்போது அவள் இருபத்தி இரண்டு அல்லது இருபத்தி மூன்று அகவை கொண்ட அழகான பெண். அன்பு, புரிதல் மற்றும் நெருக்கமான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும், தன் மேல் காதல் கொண்ட, கண்ணீரையும் வெற்றிகளையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் கணவரை அல்லது காதலனைக் அவள் கனவு கண்டு, வாழ்க்கையை நேசித்தாள். காதலை — உடலோடு மட்டுமல்ல, மனதோடும், பகிர்வோடும், பரஸ்பர புரிதலோடும் நேசித்தாள். அவள் கனவு கண்டது ஒரு கணவனை அல்ல— ஒரு இணையான மனிதனை. அங்கே, அவள் கனவு கண்ட நெருக்கம் - கட்டாயமில்லாத தொடுதல், பயமில்லாத உடல், மறைப்பில்லாத மனம்.

அவளை “விவேகமான பெண்” என்று அனைவரும் புகழ்ந்தனர். “விவேகமான பெண்களுக்கு நல்ல வாழ்வு அமையும்” என்றார்கள். கண்மணி அந்த வாக்கியத்தை நம்பினாள். ஆனால் நடந்ததோ வேறு. அவளுக்குத் தெரியாது — சில திருமணங்கள் இணைவு அல்ல; உரிமை அறிவிப்பென்று.

கண்மணியின் திருமணம் வேறு விதமாக அமைந்து விட்டது. இது அவள் தேர்ந்து எடுத்த காதல் திருமணம் அல்ல, பெற்றோர் ஒழுங்கு படுத்திய திருமணம், என்றாலும் ஒரு நம்பிக்கையுடன் தன் கழுத்தை நீட்டினாள்.

திருமணமும் அழகாகவே நடந்தது. சடங்குகள். புன்னகைகள். புகைப்படங்கள். என்றாலும் அவளது கணவரின் போக்கு முதல் இரவே வித்தியாசமாக இருந்தது.

முதல் இரவில் அவள் எதிர்பார்த்தது மென்மை. அவளுக்காகக் காத்திருக்கும் கரம். ஆனால் வந்தது உரிமை உணர்வு. அவள் உடல் — ஒரு கடமை போல. அவள் தயக்கம் — ஒரு குற்றம் போல.

அன்று, அவன் செயலும் மௌனமும் அவளுக்குப் புதிராக இருந்தாலும், “ஆண்கள் இப்படித்தான்” என்று சமூகம் அவளுக்குப் பதில் சொன்னதால், அவள் அதைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. போகப் போக சரிவரும் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.

அவன் அணைப்பு— காதலின் வெளிப்பாடு அல்ல; உடல் மீது வைத்த அதிகாரத்தின் அறிவிப்பாக மாறியது. அவள் விருப்பம் கேட்கப்பட வில்லை. அவள் தயக்கம் மதிக்கப்படவில்லை. “மனைவி” என்ற சொல்லே அவளது சுய விருப்பத்தை அழித்து விட்டது. அந்த இரவுகளில் அவள் அழவில்லை. அழுகை கூட அவளிடம் இருந்து பறிக்கப்பட்டது.

கல்யாணத்துக்கு முன் கண்மணிக்குத் தன்னைப் பற்றிய முதல் நினைவு, ஒரு பெண்ணாக அல்ல; ஒரு முழுமையான மனிதையாக இருந்தது. அப்பொழுது அவளது சிரிப்பில் அச்சமில்லை. அவளது உடலில் குற்றவுணர்ச்சி இல்லை. அவளது கனவுகள் “அனுமதி” கேட்காது. ஆனால் இன்று ...

நாட்கள் பழக்கமாக மாறின. அவன் காலையில் போவான். இரவில் வருவான். விளக்கம் இல்லை. கண்மணி தன் ஆசைகளை மடக்கிக் கொண்டாள். கேள்விகளை ஒத்திவைத்தாள். ஏக்கங்களை அமைதியாக மாற்றினாள்.

அவள் உடல் விருப்பத்தின் இடமாக இல்லை; எதிர்பார்ப்பின் இடமாக ஆனது. ஒரு சிறிய குறிப்பேட்டில் அவள் எழுதினாள்:

'பயன்படாத ஆடைகள் போல என்னை மடக்கி வைத்தேன், எப்போதும் பூட்டிய அலமாரியில்.' அவள் இன்னும் நம்பினாள் — பொறுத்துக் கொள்வதே காதல் என்று.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 02 தொடரும்

பி கு: உங்கள் கருத்துக்கள் எங்கள் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்கும்

துளி/DROP: 1993 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 01

https://www.facebook.com/groups/978753388866632/posts/33271271955854690/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 02

மதுவில் கொஞ்சம் பலவீனமாக இருந்த அவன், கண்மணியைச் சரியாகக் கவனிக்கவில்லை. என்றாலும் எதோ தானோ என்று குடும்பவாழ்வு ஓடியது. ஒருநாள், உண்மை பெரும் சத்தத்துடன் வரவில்லை. அது சுலபமாக வந்தது. அவனுடைய பூட்டப்படாத கைப்பேசி அவள் கைகளில் சிக்கியது. அடிக்கடி தோன்றும் ஒரு பெயர். வேறொரு பெண். வேறொரு வாழ்க்கை. அதில் அவனின் இரட்டை வாழ்வு (Double Life) வெளிச்சத்துக்கு வந்தது.

கண்மணி அழவில்லை. கெஞ்சவில்லை. ஒரு முடிவு மட்டும் அவளுக்கு வந்தது. இது தவறு அல்ல. இது திட்டமிட்ட புறக்கணிப்பு. அது துரோகம் மட்டும் அல்ல — கண்மணிக்கு அவள் வாழ்ந்த திருமணம் ஒரு பொய்யென்று உறுதி செய்த தருணம். அவள் துரோகத்தையும் அதனால் மனவேதனையையும் அடைந்தாள். அவளது இளமைக் கனவு சுக்குநூறாகியது. அதிர்ச்சி அடைந்தாள், திருமண வாழ்வை வெறுத்தாள். ஆனால், அவள் கோபப்படவில்லை. அவள் கத்தவில்லை. அவள் விழித்தாள்.

“பொறுத்துக்கொள்” என்று சொன்ன உலகை அவள் இனி கேட்கவில்லை. “பெண்ணாக இருந்தால் சகிக்க வேண்டும்” என்ற பொய்யை அவள் உடைத்தாள்.

விவாகரத்து வழக்கறிஞர் மென்மையாகப் பேசினார். “குழந்தைக்காக மீண்டும் யோசியுங்கள்.”

நீதிபதி நடுநிலையாகக் கேட்டார். ஆனால் கேள்விகளில் சமூக தீர்ப்பு மறைந்திருந்தது.

உறவினர்கள் சொன்னார்கள்: “பெண் பொறுத்துக் கொள்ள வேண்டும்.”

கண்மணி ஒருமுறை மட்டும் சொன்னாள்: “நான் திருமணத்திலிருந்து தப்பவில்லை. பொய்யிலிருந்து வெளியேறுகிறேன்.”

விவாகரத்து கிடைத்தது. வெளியில் யாரும் வாழ்த்தவில்லை. பெண்கள் பெற்ற சுதந்திரம் பொதுவாகக் கொண்டாடப்படுவதில்லை.

உண்மையில் விவாகரத்து கண்மணிக்குத் தோல்வி அல்ல— அது மூச்சை மீண்டும் பெறும் தருணம். கண்மணி ஒரு கணவனை விட்டு வரவில்லை; அவள் தன்னைச் சிதைத்த வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாள்.

எனக்கு மீண்டும் காதல் அல்லது திருமணம் வேண்டாம். இந்த வகையான வலியிலிருந்து நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள தனிமைதான் ஒரே வழி என்று, தன் பெற்றோரிடம் பிறந்த கைக் குழந்தையுடன் திரும்பினாள். அவளுக்கு உழைப்பு இருந்தது. அந்த உழைப்பு அவளும் மகளும் வாழப் போதுமாக இருந்தது.

கண்மணியின் கையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை. வீடும் அதே வாசனை. ஆனால் பார்வைகள், எதிர்பார்ப்புக்கள் மாறின. பெருமைக்கு பதிலாக பரிதாபம் வந்தது. பாசத்திற்குப் பதிலாக அறிவுரை வந்தது. [Pity replaced pride. Advice replaced affection.]

அவளுடைய அம்மா அண்டை வீட்டாரைப் பற்றி கவலைப்பட்டார். அவளுடைய தந்தை எதிர்காலப் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட்டார். கண்மணி ஒரே ஒரு விடயத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டாள் - தன் மகள் ஒருபோதும் உயிர்வாழ்வதை காதலோடு, அன்போடு குழப்பக்கூடாது [her daughter should never confuse survival with love.].

இரவில், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு, அவள் கிசுகிசுத்தாள்: நீ என்னிடமிருந்து மௌனத்தைக் கற்றுக்கொள்ள மாட்டாய் [You will not learn silence from me].

அக்கம்பக்கத்தினர் பார்த்தார்கள். சிலர் பரிதாபப்பட்டனர். சிலர் தீர்ப்பளித்தனர். சிலர் அமைதியாக சரிப்பண்ணி அவனுடன் மீண்டும் இருக்குமாறு அறிவுறுத்தினர். ஒரு உறவினர் மெதுவாக, “குழந்தைக்காக, நீங்கள் சரிப்பண்ணி வாழ்ந்து இருக்க வேண்டும்” என்றார். ஆனால், கண்மணி அமைதியாக, “என் குழந்தைக்காக, நான் சரிசெய்ய மாட்டேன்” ஏன் எனறால், அப்படியான தந்தையிடம் எந்த நல்ல பழக்கவழக்கங்களையோ, பாசத்தையோ குழந்தை காணாது, வெறுப்பைத் தவிர என்றாள்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 03 தொடரும்

துளி/DROP: 1997 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 02]

/ எனது அறிவார்ந்த தேடல்: 1413

https://www.facebook.com/groups/978753388866632/posts/33310717181910167/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 03

விவாகரத்துக்குப் பிறகு, கண்மணி தனது குழந்தையுடன் தனியாக, ஆனால் பெற்றோரின் கண்காணிப்பில் தொடர்ந்து வாழ்ந்தாள். ஒரு ஆசிரியராக மதிக்கப்பாக தன் வாழ்வை நகர்த்தினாள். என் தனிமை, என் குழந்தை, என் சுயமரியாதை - இவை மட்டுமே முக்கியம். நான் அவைகளை மீண்டும் அச்சுறுத்த விடமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாள்.

எனினும் பெற்றோர்கள், உறவினர்கள், மறு திருமணத்துக்கு கண்மணியை ஒப்புக்கொள்ள முயற்சி செய்தார்கள்.

“அவர் ஒழுக்கமானவர்.”
“அவர் உங்கள் கடந்த காலத்தை ஏற்றுக்கொள்வார்.”
“அவர் உங்கள் குழந்தையை ஏற்றுக்கொள்வார்.”

இப்படி புது புது வரன் கொண்டுவந்தார்கள். கண்மணி அவர்களின் வேண்டுதலை கேட்டுவிட்டு ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டாள்: “அவர் என் எல்லைகளை ஏற்றுக்கொள்வாரா? [Will he accept my boundaries?]”

யாரும் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. அவர்கள் அவளை பிடிவாதமானவள் என்று அழைத்தனர். ஆனால், அவள் தான் இப்ப விழித்திருப்பதாகக் கூறினாள்.

அந்த சூழலில் தான், ஒரு நாள், ஓய்வுபெற்ற அதிகாரி சமூக ஊடகங்கள் மூலம் அவளுடைய வாழ்க்கையில் நுழைந்தார் - அவசரமின்றி, உரிமை கோராமல். அவர்கள் புத்தகங்கள், சமூகம், பெண்கள் கல்வி பற்றிப் பேசினர். அவர் அவளுடைய புத்திசாலித்தனத்தை மதித்தார். படிப்படியாக, உரையாடல்கள் ஆழமடைந்தன.

"நீங்கள் உங்கள் பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டும்," என்று அவர் ஒரு முறை அறிவுரை கூறினார். "உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் ஒரு பாதுகாப்பான நிலை வேண்டும்."

அவர் கண்ணியமானவர். சிந்தனைமிக்கவர். மற்றும் பாதுகாப்பானவர் என்ற அவளின், அவர் மேல் உள்ள மதிப்பு, அவளை வாதாட விடவில்லை. என்றாலும் அவள் விளக்கினாள்.

"கண்ணியமில்லாத நிலைத்தன்மை மற்றொரு வகையான சரிவு. [“Stability without dignity is another kind of collapse.”]" - வெளியில் இருந்து பார்க்கும் போது வாழ்க்கை நிலையானதாகத் தோன்றுவதால் - திருமணம், வீடு, [வழக்கமான] நடைமுறை, நிதிப் பாதுகாப்பு [marriage, home, routine, financial security] - போன்றவை, உண்மையிலேயே ஆரோக்கியமானதாகவோ அல்லது வெற்றிகரமானதாகவோ உள்ளது என்றுஅர்த்தமல்ல.

கண்ணியத்தை (சுயமரியாதை, குரல், சம்மதம், அடையாளம் / self-respect, voice, consent, identity) பலிகொடுத்தால் வந்த நிலைத்தன்மை [ஸ்திரத்தன்மை] - உண்மையில் நிலைத்தன்மையே அல்ல. இது வெறுமனே மெதுவாக, ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒரு அமைதியான சரிவு" என்று அவள் விவரமாக விளக்கினாள்.

அவளுடைய மீள்தன்மையை அவர் பாராட்டினார். அவர் அவளது அறிவாற்றலை மதித்தார். அவர்களின் உரையாடல்கள் சிந்தனை மிக்கவையாக அளவுடன் இருந்தன.

"நீங்கள் தனியாக இருக்கக்கூடாது," என்று அவர் மீண்டும் ஒருமுறை எழுதினார்.

"நான் தனியாக இல்லை," என்று அவள் பதிலளித்தாள். "நான் என்னுடன் வாழ்கிறேன்." என்றாள்.

அவர்களின் உரையாடல் எளிமையானதாகவே தொடர்ந்தன. ஒரு முறை,

அதிகாரி: “எப்படி இருக்கீங்க?”
கண்மணி: “உடம்பு சரியில்லை... வாழ்க்கை சோகமாக இருக்கிறது.”
அவர் உடனே ஒரு கவிதையை அவளுடன் பகிர்ந்து கொண்டார்:

"In the hidden shadow of your eyes,
I burn with the touch of memory,
Love arrives, yet never heals,
You remain the light of my dreams."

"உன் கண்களின் - மறைந்த நிழலில்
நினைவின் தீண்டலால் - நான் எரிகிறேன்
காதல் வருகிறது - ஆனால் பலனில்லை
கனவுகளின் ஒளியாகவே - நீ இருக்கிறாய்."

கண்மணி தன் இதயத்திலும் உடலிலும் ஒரு சிறிய பரபரப்பை, உணர்ச்சின் பாச்சலை உணர்ந்தாள். என்றாலும் காதல் என்றுமே தன் வாழ்வில் சாத்தியமற்றது என்று திடமாக இன்னும் நம்பும் அவள், காதல் கவிதை - ஆசையின், காமத்தின் பாதுகாப்பான அனுபவத்தை இன்பத்தை தனக்கு கொடுக்கிறது என்று எனினும் நம்பினாள். அவர் மீண்டும் சில கவிதைகளை அனுப்பினார். அவை நீண்ட காலமாக செயலற்ற நிலையில் அவளிடம் இருந்த ஒன்றைத் தூண்டின - விரக்தியை அல்ல, நினைவை. ஆபத்து இல்லாத ஆசையை.

அவள் அதை அனுபவிக்க தன்னை அனுமதித்தாள். வார்த்தைகள் பாதுகாப்பானவை. தூரம் மரியாதைக்குரியது. அவள் அந்த ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ஒருபோதும் பொய் சொல்லவில்லை. அவரின் எழுத்தை, கவிதையை, கதையை ரசித்து வாசித்தாள். அதில் உள்ள காதலை, காமத்தை, அழகின் வர்ணனைகளை, ஒன்றும் விடாமல் ரசித்தாள். மகிழ்ந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக உரையாடல்கள் ஆழமடைந்தன.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 04 தொடரும்

துளி/DROP: 2001 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 03

https://www.facebook.com/groups/978753388866632/posts/33341508072164411/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 04

ஒரு நாள், இரவு அவர்கள் மீண்டும் ஆன்லைனில் இணைந்தனர் . அவளுடைய மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். இருவரின் வீடும் அமைதியாக இருந்தது.

அதிகாரி: “உனக்குத் தெரியும்... சில சமயங்களில் நீயே உன் மகிழ்ச்சியை மறுக்கிறாய் என்று எனக்குத் தோன்றுகிறது.”

கண்மணி உடனடியாக பதிலளிக்கவில்லை. அந்த வாக்கியத்தை அவள் முன்பே கேட்டிருந்தாள் - உறவினர்கள், அண்டை வீட்டார், அவளுடைய வாழ்க்கையைப் புரிந்து கொண்டதாக நம்பிய நண்பர்களிடமிருந்து கூட.

கண்மணி: “நான் மகிழ்ச்சியை மறுக்கவில்லை. நான் மீண்டும் மீண்டும் சொல்வதை மறுக்கிறேன்.”

அதிகாரி: “மீண்டும் மீண்டும் சொல்வது எது ?”

கண்மணி: “மௌனமாக இருக்கச் சொல்வது, நான் ஒருவாறு சரிப்பண்ண வேண்டும் என்று சொல்வது.”

அதன் பின் இருவரும் கொஞ்சம் பேசுவதை ஒரு சில நிமிடம் இடைநிறுத்தினர்,

அதிகாரி: “ஆனால் திருமணம் அப்படி, முன்பு போல் இருக்க வேண்டியதில்லை. அது வித்தியாசமாக நன்றாக அமையலாம்.”

கண்மணி: “ஆம். அது வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் அது இல்லாதபோது, அதன் தாக்கம் சமமாகப் பகிரப்படுவதில்லை.”

அதிகாரி: “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

கண்மணி: “ஒரு திருமணம் முறிந்துவிட்டால், அந்தப் பெண் என்ன தவறு செய்தாள் என்று மக்கள் கேட்கிறார்கள். அவள் போதுமான அளவு பொறுமையாக இருந்தாளா என்று கேட்கிறார்கள். அவள் போதுமான அளவு புரிந்துகொண்டாளா என்று கேட்கிறார்கள். அவள் போதுமான அளவு முயற்சி செய்தாளா என்று கேட்கிறார்கள்.”

அவள் தொடர்ந்தாள் “அவர்கள் ஆண்களிடம் ஒரே மாதிரியான இப்படியான கேள்விகளைக் கேட்பதில்லை.”

அதிகாரி: “அது சரி, ஆனால் எல்லா ஆண்களும் அப்படி இல்லை.”

கண்மணி: “எனக்குத் தெரியும். ஆனால் எல்லாப் பெண்களையும் மீண்டும் ரிஸ்க் எடுக்கச் சொல்கிறார்கள். [I know. But all women are asked to take the risk again.]”

அதிகாரி: “மீண்டும் ஒரு காதலுக்கு பயப்படுகிறீர்களா?”

அவள் லேசாகச் சிரித்தாள், ஆனால் அவரால் அதைப் பார்க்க முடியவில்லை. அது ஆடியோ [audio] அழைப்பு என்பதால்.

கண்மணி: “இல்லை. நான் காதலை ரசிக்கிறேன். நான் பாசத்தை ரசிக்கிறேன். நான் ஆசையைக் கூட ரசிக்கிறேன்.”

அதிகாரி: “அப்புறம் ஏன் ஒருவருடன் வாழ்க்கையை மறுக்க வேண்டும்?”

கண்மணி: “ஏனென்றால் காதல் என்பது சரணடைதல் போன்றது அல்ல. மேலும் திருமணம் பெரும்பாலும் பெண்களிடமிருந்து முதலில் சரணடைதலைக் கோருகிறது.”

அதன் பின் இன்னொரு மௌனம் சில நிமிடம் நீண்டது

அதிகாரி: “நான் உன்னைத் தனிமையிலிருந்து காப்பாற்ற முடியும் என்று நினைத்தேன்.”

அவள் பதில் மெதுவாக வந்தது.

கண்மணி: “நான் தனிமையாக இல்லை. நான் என்னுடன் வாழ்கிறேன். என் குழந்தையுடன் வாழ்கிறேன்.”

அதிகாரி: “அது... முழுமையடையவில்லையே?”

கண்மணி: “இல்லை. முழுமையடையாதது நான் காணாமல் போன முன்னைய வாழ்க்கை .”

அவர் குறுக்கிடவில்லை.

கண்மணி: “நான் ஏற்கனவே என் குரல் சிறியதாக மாறிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். [I have already lived a life where my voice became small], என் தேவைகள் கூட இரண்டாம் பட்சமாக அமைந்த இடத்தில் [Where my needs were secondary.]" அவள் நிறுத்தி, பின்னர் மேலும் சொன்னாள்: “நான் அதில் இருந்து இப்ப தப்பித்து விட்டேன். நான் மீண்டும் என்னை இழக்கத் தயார் இல்லை.”

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 05 தொடரும்

துளி/DROP: 2005 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 04

https://www.facebook.com/groups/978753388866632/posts/33375172355464649/?

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 05

ஒருநாள் ஓய்வு பெற்ற அதிகாரி: “நான், ஒருவேளை, இளமையாக இருந்திருந்தால்… நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பீர்களா?” என்று சும்மா ஒரு கதைக்கு கேட்டார்.

அதற்கு கண்மணி : “இல்லை... இனிமேல் என்றும் இல்லை ... நான் பட்ட துயர் காணும் ... நான் குடும்ப வாழ்வில், ஆண் பெண் குடும்ப உறவில் மரத்துப் போனேன்" என்றாள்.

“உனக்கான மகிழ்ச்சியை ஏன் மறுக்க வேண்டும்?”

“நான் திரும்ப ஒருமுறை மீண்டும் மாட்டிக்கொள்வதை மறுக்கிறேன் ,” என்று அவள் பதிலளித்தாள்.

“இனி வரும் திருமணம் வேறுபட்டதாக இருக்கலாம்.”

“ஆம். “மாறலாம்” என்று சொல்வது எளிது. ஆனால் அந்த மாற்றத்தின் ஆபத்தை மீண்டும் ஏற்கச் சொல்லப்படுவது எப்போதும் பெண்களுக்கே. ஆண்களுக்கு திருமணம் ஒரு முயற்சி. பெண்களுக்கு அது ஒரு சூதாட்டம்.” [Yes. But women are expected to risk that difference.
Men are not.]”

அவர் அவளை தனிமையிலிருந்து காப்பாற்ற விரும்பினார். அழிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவள் விரும்பினாள்.

அதிகாரி: “ஏன்?”

கண்மணி: “ஏனென்றால் அப்போதும் கூட, நான் அதிகமாக அனுசரித்துச் செல்ல வேண்டியவளாக இருப்பேன். இன்னும் சமரசம் செய்ய வேண்டும். இன்னும் மன்னிக்க வேண்டும்.”

அவள் தன் இறுதி எண்ணத்தை கவனமாக இடைவெளி விட்டுச் சொன்னாள்

கண்மணி: “சாத்தியத்தை விட, அமைதியை நான் தேர்வு செய்கிறேன். நம்பிக்கையை விட, தெளிவை நான் தேர்வு செய்கிறேன். அதற்காக நான் அன்பை நிராகரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. அழிப்பை மறுக்கிறேன் என்று அர்த்தம்.”

அவர், அவளின் வார்த்தைகளை கவனமாக கேட்டார். அவளை மீண்டும் சம்மதிக்க வைக்க, அதன் பின் அவர் முயற்சிக்கவில்லை.

சில உரையாடல்கள் உடன்பாட்டுடன் முடிவதில்லை. அவை புரிதலுடன் முடிவடைகின்றன.

அவள் அன்பை விரும்பினாள். அவள் ஆசையை ரசித்தாள். அவள் தன்னை ரசிப்பதை விரும்பினாள்.

ஆனால் கவனிப்பு என்ற வேடத்தில், அதிகாரம் இருப்பதை வெறுத்தாள்

திருமணம் ஒரு காலத்தில் அவளுடைய குரலை எடுத்துக் கொண்டது. அதைத் திரும்பப் பெற அவள் இனிமேல் ஒருநாளும் பேரம் பேச மாட்டாள்.

அதன் பின் ஒருநாள், ஓய்வு பெற்ற அதிகாரி கண்மணிக்கு காதல் மற்றும் ஏக்கம் [romantic, sensual, longing] கொண்ட, அழகிய தமிழ் கவிதைகளை அனுப்பினார்.

உறங்கும் போது கனவிலும் விடிந்தவுடன் நினைவிலும்
குளத்தில் நீந்தும் தாமரையைப் போல்
மன ஓடையில் நீந்துகின்றது உன் நினைவு
வாழும் வரை உயிரிலும் எண்ணத்திலும் நீயே..

வானவில்லாய் எனக்கு அழகு பொழிந்து
ஏழு நிறமாய் உன் கோலத்தைக் காட்ட
காற்றைக் கண்ட மரம் போல் என் மனமும்
கவலை மறந்து ஆடிப் பாடி நடனமாடுகிறதே …

எனக்குள் தனிமையைத் தவிடு பொடியாக்கி
எனக்குள்ளே எங்கோ இருந்து இசைக்கிறாய்
உன்னைத் தேடி அலைந்திடும் தேடலில்
உன் வண்ணமும் என்னைத் தீண்டி மயக்குதே ...

ஒளியிழந்த விழிகளுக்கும் நீ கனவைத் தந்தாய்
இருண்டுவிடும் என்னுலகம் மீண்டும் - கலைந்துவிடாதே
மறக்க முடியாத பிம்பமாய் தவிர்க்க முடியாத நினைவாய்
கண்ணின் கண்மணியாய் வந்தவளே - விலகிவிடாதே..

அவள் அவற்றை ஆர்வத்துடன் திரும்பத் திரும்ப படித்தாள். உடைமையைக் கோராத ஆசையை அவள் ரசித்தாள் [She enjoyed desire that did not demand possession.]. கவிதை, விளைவுகளின்றி நெருக்கத்தை அனுமதித்தது [Poetry allowed intimacy without consequence.]. கடமை இல்லாமல் ஏங்குதலுக்கு வழிவகுத்தது. [Longing without obligation.]. “என்னை அழைக்கும் ஆசை என்னை அச்சுறுத்தவில்லை. என்னைச் சொந்தம் கொள்ளும் முயற்சிதான் என்னை நடுங்கச் செய்கிறது.” [Desire does not frighten me, she realised. Ownership does.] என்றாள்!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 06 தொடரும்

துளி/DROP: 2015 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 05

https://www.facebook.com/groups/978753388866632/posts/33634639602851255/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 06

"நான் உன்னை காதலிக்கிறேன்," என்று அவர் ஒரு நாள் சொன்னார். அவள் அந்த உணர்வை நிராகரிக்கவில்லை. உங்களைப் பொறுத்தவரையில், பயமும் இல்லை. மறுப்பும் இல்லை ” என்றாள். அனால் அதன் பின்னணியில் உள்ள திருமணம் என்ற கட்டமைப்பைத் தான் நான் நிராகரிக்கிறேன் என்றாள். " என் இருப்பு, சகிப்புத் தன்மையைச் [பொறுத்துக் கொள்ளும் தன்மையை ] சார்ந்திருக்கும் வேறொரு வாழ்க்கையில் நான் நுழைய மாட்டேன்.[“I will not enter another life where my existence depends on tolerance.”] " என்று மேலும் கூறினாள்.

கண்மணி தான் விரும்பிய இடத்திலேயே இருந்தாள். தனிமையாக இல்லை. உடைந்து போகவில்லை. முழுமையானவளாக . அவளருகில் மகள் நிம்மதியாக உறங்கினாள் — பயமற்ற சுவாசத்துடன்.

கண்மணிக்கு இப்போது தெளிவாயிற்று: சில பெண்கள் ஆண்களை விட்டு போவதில்லை. அவர்கள் அமைப்புகளை விட்டு வெளியேறுகிறார்கள். அந்த வெளியேற்றத்தில் தான் அவர்கள் தங்களை மீட்டெடுக்கிறார்கள்.

அதன் பின், ஓய்வு பெற்ற அதிகாரி ஒரு கவிதை அவளுக்கு அனுப்பினார்:

"The gentle breath of your memory,
A light in my night,
Yet love unapproachable,
I long to touch you."

"உன் நினைவின் - மெல்லிய சுவாசமே
என் இரவில் - விளக்காக ஒளிர்கிறது!
நெருங்முடியாத காதல் - உன்னுடையது என்றாலும்
உன்னைத் தொட - நான் ஏங்குகிறேன்."

கவிதை கண்மணிக்கு ஆசையைத் தூண்டியது, ஆனால் அவளின் திருமணக் கதவு மட்டும் மூடியே இருந்தது. அதிகாரி அவளை, அவளுக்கு பொருத்தமான திருமண வாழ்வில் இணைய, அவளுக்கு மீண்டும் அப்படி ஒரு எண்ணத்தை உண்டாக்க, பலவழிகளில் முயன்றார். ஆனால் அவள் ஒரு புரியாத புதிராகவே இருந்தாள். அவள் விவாகரத்து செய்தபோதும், அவளின் கழுத்தில் அவன் கட்டிய தாலி இன்னும் இருக்கிறது. அவன் அவளுக்கு அணிந்த மெட்டி இன்னும் இருக்கிறது. அவள் சொல்லும் காரணம், இந்த சமுதாய அமைப்பில், தான் தனியாக வெளியே போகும் பொழுது, இது பாதுகாப்பானது. அதற்கு மட்டுமே அவை!

இணைய ஒளியில் ஒளிர்ந்து
முகநூல் கடலில் மிதந்து
நலமா எனக் கேட்டு
நங்கை இவள் வந்தாள்

கவிதை மலரை மணந்து
கருத்துப் பல கூறி
சுகமா எனக் கேட்டு
சுந்தரி இவள் வந்தாள்

நெருங்கி இணையத்தில் உறவாடி
நெஞ்சம் குளிரக் கதைத்தாள்
திருமண வாழ்வின் முறிவை
மூடி மறைக்காமல் சொன்னாள்

கல்யாண வாழ்வின் வெறுப்பால்
மீண்டும் தலைநீட்ட மறுத்தாள்
ஆனால் காதல் கவிதை ரசிப்பாள்
அதில் பாலியல் உறவும் ரசிப்பாள்

மனம் திறந்து பேசுவாள்
கள்ளம் கபடம் இல்லை
சொல்லத்தெரியாத கனவும் உண்டு
தீர்க்கமுடியாத ஆசையும் உண்டு

அழகான தேவதை அவள்
அறியாத பருவம் அல்ல
தெரியாத ஒன்றும் இல்லை
புரியாத புதிர் அவள்

இப்படித்தான் அந்த அதிகாரி, அவளைப்பற்றி தன் நாட்குறிப்பில் அழகான, இலக்கிய நயம் கொண்ட கவிதை வடிவில் பதிவு செய்தார்.

அவளுக்கு கவிதைகள் பாதுகாப்பான ஆசையாகவும், உரையாடல் தனிப்பட்ட நெருக்கமாகவும் மாறியது. அவள் தினமும் படித்து, உரையாடி அதில் மகிழ்ச்சியைக் கண்டாள். ஆனால் அவளின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

கண்மணி தனது தனிமையை வலிமையாக மாற்றினாள். அவள் மீண்டும் திருமணத்தை விரும்பவில்லை. கவிதை, உரையாடல் மற்றும் நெருக்கமான தொடர்பு அவளுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வந்தது. தனது குழந்தை மற்றும் வேலை இரண்டையும் தன்னுடன் சேர்த்து, அவள் தனக்கு என ஒரு முழுமையான வாழ்க்கையை உருவாக்கினாள்.

அவள் முதல் தடவையாக ஓய்வு பெற்ற அதிகாரிக்கு தானே எழுதி ஒரு கவிதை அனுப்பினாள். அது காதல் கவிதை அல்ல. அதிகாரியின் நாட்குறிப்பு கவிதைக்கு ஒரு பதிலாக.

நான் விட்டு வந்தது
ஒரு மனிதனை அல்ல.
ஒரு வீட்டை அல்ல.
ஒரு பெயரை அல்ல.

நான் விட்டு வந்தது
என்னைச் சுருக்கும்
ஒரு கட்டமைப்பை.

என்னை நேசித்தவர்கள் இருந்தார்கள்.
என்னை விரும்பியவர்களும் இருந்தார்கள்.
ஆனால்
என்னை நானாகவே
இருக்க விடாத இடத்திலிருந்து
நான் வெளியே வந்தேன்.

காதல் எனக்குத் தடை இல்லை.
கவிதை எனக்குத் தவறு இல்லை.
நெருக்கம் எனக்குப் பயமில்லை.

ஆனால்
“சகித்துக் கொள்”
என்று தொடங்கும் வாழ்க்கைக்கு
நான் இனி
வாசல் திறக்கவில்லை.

என் கழுத்தில் தாலி இருக்கிறது.
என் காலில் மெட்டி இருக்கிறது.
அவை நினைவுகள் அல்ல —
கவசங்கள்.

இந்தச் சமுதாயம்
ஒரு பெண்ணை தனியாக
பார்க்கத் தயாரில்லை என்பதால்
நான் அவற்றை
என் உடலோடு வைத்திருக்கிறேன்.
என் மனத்தோடு அல்ல.

என் அருகில்
என் மகள் உறங்குகிறாள்.
அவளின் மூச்சு
எனக்குச் சொல்லித் தருகிறது —
பாதுகாப்பு
ஒரு ஆணின் நிழலில் அல்ல;
ஒரு பெண்ணின் நிம்மதியில் தான்.

எனக்குக் கவிதைகள் வந்தன.
நான் அவற்றைப் படித்தேன்.
சில வரிகளில்
நான் சிரித்தேன்.
சில வரிகளில்
என் உள்ளம் ஈரமானது.

ஆனால்
என் கதவு
அப்படியே இருந்தது.
மூடியே.

என்னைப் புதிர் என்றார்கள்.
உண்மையில்
நான் தீர்வு.

நான் உடைந்தவள் அல்ல.
நான் கைவிடப்பட்டவள் அல்ல.
நான் தோற்றவள் அல்ல.

நான்
என்னை மீட்டுக் கொண்டவள்.

சில பெண்களுக்கு
திருமணம் வாழ்க்கை.
சில பெண்களுக்கு
விவாகரத்து
வாழ்க்கையின் தொடக்கம்.

நான்
தொடங்கிய இடத்தில்தான்
இப்போது நிற்கிறேன் —
என்னுடன்.

கண்மணி இப்போது ஒரு “விவாகரத்து பெற்ற பெண்” அல்ல. அவள் — தன்னை மீட்டுக் கொண்ட பெண். சில பெண்களுக்கு திருமணம் வாழ்க்கை. சில பெண்களுக்கு விவாகரத்து தான் வாழ்க்கையின் தொடக்கம். கண்மணி இதில் இரண்டாவது வகை.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

முற்றிற்று

துளி/DROP: 2021 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 06

https://www.facebook.com/groups/978753388866632/posts/33687281527587062/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.