Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள் ,  BBC ISWOTY

2 பிப்ரவரி 2026

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் (Indian Sportswoman of the Year) 6-ஆவது பதிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஸ்மிருதி மந்தனா, சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை சுருச்சி சிங், தடகள வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

2025-ஆம் ஆண்டில் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாகவும் விளையாட்டு துறையில் அனைத்து பெண்களின் சாதனைகளை கொண்டாடும் விதமாகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.

பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர் குழு, ஐந்து இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலைத் தொகுத்தது. இந்த நடுவர் குழுவில் இந்தியா முழுவதிலுமிருந்து அனுபவமிக்க விளையாட்டுப் பத்திரிகையாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளனர்.

இம்முறை பிபிசி முதன்முறையாக வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க தேர்வுக்குழுவை (Grand Jury) அறிமுகம் செய்துள்ளது. இந்த தேர்வுக்குழுவில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பேஸ், நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் மற்றும் பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோர் உள்ளனர்.

பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மேலும் 3 பிரிவுகளின் கீழ் நடுவர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகளை பிபிசி கௌரவிக்கும். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளை முன்னிலைப்படுத்த பிபிசி மாற்றுத்திறனாளி வீராங்கனை, இளம் தடகள வீராங்கனைகளின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக பிபிசி வளரும் வீராங்கனை விருது மற்றும் மூத்த வீராங்கனை ஒருவரின் ஈடுஇணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

பிபிசி நியூஸின் இடைக்கால உலகளாவிய இயக்குநர் (Interim Global Director) ஃபியோனா கிராக் கூறுகையில், "பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது (ISWOTY) இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டில் பெண்கள் செய்த சிறப்பான சாதனைகளை கொண்டாடுகிறது. அந்த சாதனைகளை வெளிக்கொணரவும் கொண்டாடவும் மற்ற எந்த ஊடக அமைப்பும் மேற்கொள்ளாத வகையில் பிபிசி உலக சேவை முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்த பெண்கள் கடின முயற்சியினால் அடைந்த சாதனைகளை இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் ஒலிக்கச் செய்ய ஒரு தளத்தை வழங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்." என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி கலெக்டிவ் நியூஸ்ரூமால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் தயாரிக்கப்படுகிறது.

கலெக்டிவ் நியூஸ்ரூமின் முதன்மை ஆசிரியரும் இணை நிறுவனருமான ரூபா ஜா கூறுகையில், "திருமணம், வயது, உடல் ரீதியான விதிகள் அல்லது உடல் ரீதியான சவால்கள் காரணமாக விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு பெரும்பாலும் ஊக்கம் தரப்படுவதில்லை. 'எல்லோரும் விளையாடலாம்' (Everybody Can Play) என்ற இந்தாண்டின் தலையங்க கருப்பொருள், விளையாட்டு எல்லோருக்குமானது என்ற எளிமையான யோசனைக்கு வலுவூட்டுகிறது. அதன் உண்மையான தாக்கம் அதனால் ஏற்படும் விளைவுகளால் அளவிடப்படாமல், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வாய்ப்புகளால் அளவிடப்படுகிறது. களத்தில் தைரியமாக இறங்கி தன்னுடைய இடத்தைக் கோரும் எந்தவொரு பெண்ணையும் ISWOTY 2026 கொண்டாடுகிறது." என்றார்.

பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகள் யார்?

திவ்யா தேஷ்முக், சதுரங்கம்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள், BBC ISWOTY , திவ்யா தேஷ்முக்

சதுரங்க விளையாட்டில் இளம் சாதனையாளரான 20 வயது திவ்யா தேஷ்முக், கடந்தாண்டு ஜூலை மாதம் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்திய மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் மற்றும் அந்த கோப்பையை கைப்பற்றிய இளம் சாம்பியன் என்ற புதிய வரலாற்றை படைத்தார். இதன்மூலம் திவ்யா தேஷ்முக் கிராண்ட் மாஸ்டரானார். இறுதிப்போட்டியில் திவ்யா இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பியை தோற்கடித்தார். அந்த தருணம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பொறுப்பை கையளிப்பது போன்றதாக இருந்தது.

மேற்கு இந்திய நகரமான நாக்பூரில் 2005-ஆம் ஆண்டு பிறந்தவர் திவ்யா தேஷ்முக். இவர் தன்னுடைய ஐந்து வயதில் சதுரங்கம் விளையாட தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் 7 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன் பட்டம் வென்றார். 2017-ஆம் ஆண்டில் 12 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார்.

2022-ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் திவ்யா முக்கிய பங்கு வகித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார் அவர். அதுமட்டுமல்லாமல், தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

ஹர்மன்ப்ரீத் கௌர், கிரிக்கெட்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள், BBC ISWOTY , ஹர்மன்ப்ரீத் கௌர்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத், நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் உலகக் கோப்பையை வெல்வதற்கு தன் அணியை வழிநடத்திச் சென்றார். சொந்த மண்ணில் விளையாடிய ஹர்மன்ப்ரீத், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 339 என்ற இமாலய இலக்கை துரத்துகையில் 88 பந்துகளில் 89 ரன்கள் அடித்து, அணியை முன்னின்று வெற்றிக்கு வழிநடத்தினார்.

2017-ஆம் ஆண்டில் நடந்த மற்றொரு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் எடுத்தது, மகளிர் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களுள் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.

1989-ஆம் ஆண்டு, பஞ்சாபில் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர் ஹர்மன்ப்ரீத். அவருடைய தந்தை ஹர்மன்ப்ரீத்துக்கு "குட் பேட்டிங்" என எழுதப்பட்ட டி-ஷர்ட்டை வாங்கிக் கொடுத்தார். இந்திய அணியின் பேட்டிங் முகமாக மாறுவார் என்ற தீர்க்கதரிசனத்திற்கு ஏற்ப 2009-ஆம் ஆண்டு அறிமுகமானதில் இருந்தே அவர் திறம்பட விளையாடினார்.

ஹர்மன்ப்ரீத் 2023-ஆம் ஆண்டின் டைம் இதழின் வளர்ந்து வரும் 100 தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றார். அதே ஆண்டில் பிபிசியின் மிகவும் செல்வாக்குமிக்க 100 பெண்கள் பட்டியலிலும் இடம்பெற்றார். 2017-ஆம் ஆண்டு இந்திய விளையாட்டுத் துறையில் இரண்டாவது உயரிய அங்கீகாரமான அர்ஜுனா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு விளையாட்டு துறையில் அவருடைய சிறந்த பங்களிப்புகளுக்காக 2026-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள், BBC ISWOTY , ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா, எல்லா காலத்திலும் சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் ஒருவராக திகழ்கிறார். 29 வயதான இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக சதங்களையும், தற்போதைய வீராங்கனைகளில் மூன்றாவது அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக உள்ளார்.

மகாராஷ்டிராவின் சாங்லி நகரில் பிறந்த மந்தனா, மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடிய தனது தந்தை மற்றும் சகோதரரால் ஊக்கம் பெற்றார்.

2013-ஆம் ஆண்டில், 19 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல அளவிலான போட்டியில் விளையாடிய போது, உள்ளூர் அளவிலான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்தார் . இது 50 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இந்தியரின் அதிவேக சதமாகும். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்தார்.

அவர் 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 2019-ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து மதிப்புமிக்க அர்ஜுனா விருதை அவர் பெற்றார்.

சுருச்சி சிங், துப்பாக்கி சுடுதல்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள், BBC ISWOTY , சுருச்சி சிங்

துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்குவதில் சிறப்பான வரலாற்றைக் கொண்ட ஹரியாணாவைச் சேர்ந்த சுருச்சி சிங், 2024-ஆம் ஆண்டில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 7 தங்கப் பதக்கங்களை வென்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

19 வயதான அவர் அடுத்த ஓராண்டிற்குள் சர்வதேச அளவில் சீனியர் பிரிவு போட்டிகளில் அறிமுகமாகி, விரைவிலேயே உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 2025-ஆம் ஆண்டில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ஐஎஸ்எஸ்எஃப் - ISSF) உலகக் கோப்பைத் தொடரில் பியூனஸ் அயர்ஸ் (Buenos Aires), லிமா மற்றும் மியூனிக் ஆகிய இடங்களில் தலா ஒன்று என 3 தங்கப் பதக்கங்களை வென்றார். லிமாவில் ஆண், பெண் இணைந்த கலப்பு குழு போட்டியில் அவர் தங்கம் வென்றார்.

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் -2025 தொடரில் மகளிர் குழு போட்டியில் மனு பாக்கர் மற்றும் பாலக் குலியாவுடன் இணைந்து வெண்கலம் வென்றார்.

கடந்தாண்டு செப்டம்பரில் ஐஎஸ்எஸ்எஃப்-யின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார் சுருச்சி சிங்.

ஜோதி யாராஜி, தடகளம்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள், BBC ISWOTY , ஜோதி யாராஜி

2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் பங்கேற்க ஜோதி யாராஜி தகுதி பெற்றார். இதன் மூலம், தடகளம் மற்றும் களப் போட்டிகளில் சர்வதேச அளவிலான சாதனைகள் மிகக் குறைவாகவே இருக்கும் இந்தியாவில் இருந்து 'ஒலிம்பிக்கில் 100 மீ தடை தாண்டும் ஓட்டத்திற்கு தகுதி பெற்ற முதல் வீராங்கனை' என்ற பெருமையை பெற்றார்.

26 வயதான ஜோதி யாராஜி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், தடைகளைத் தாண்டுவது உண்மையில் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. அவரது தந்தை ஒரு காவலாளியாகவும், தாய் வீட்டு வேலைகள் செய்பவராகவும் இருந்தனர்.

2022-ஆம் ஆண்டில், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 13.23 விநாடிகளில் இலக்கை எட்டி, புதிய தேசிய சாதனையை அவர் படைத்தார். அதன் பின்னர் அவர் தனது சொந்த சாதனையை பலமுறை முறியடித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஸ்பிரிண்ட் ( குறுகிய தூர ஓட்டப்பந்தயம்) மற்றும் தடை தாண்டும் ஓட்டப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றார். உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலத்தையும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளியையும் அவர் வென்றார்.

2023-ஆம் ஆண்டில், ஜோதி ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில் 60 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தங்கத்தையும், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளியையும் வென்றார். இதன்மூலம் அவர் ஆசியாவின் சிறந்த தடை தாண்டும் வீராங்கனையாக தனது பெயரை உறுதிப்படுத்தினார். 2025-ஆம் ஆண்டு குமியில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.

2024-ஆம் ஆண்டு ஜோதி யாராஜிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

இந்தியாவில் விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது(ISWOTY) 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த விருதை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெற்றியாளரானார்.

2020-ஆம் ஆண்டுக்கான விருதை உலக சதுரங்க சாம்பியன் கொனேரு ஹம்பியும் 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுகளை பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வென்றார். 2024-ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இந்த விருதை வென்றார்.

தடகள வீராங்கனைகள் பி.டி. உஷா மற்றும் அஞ்சு பாபி ஜார்ஜ், பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, ஹாக்கி வீராங்கனை பிரீதம் சிவாச் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் முந்தைய ஆண்டுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை பெற்றுள்ளனர்.

டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லேகரா ஆகியோர் பிபிசி இந்தியாவின் பாரா மகளிர் விளையாட்டு வீராங்கனை விருதுகளை வென்றுள்ளனர்.

கிரிக்கெட் வீராங்கனை ஷாஃபாலி வர்மா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் வில் வித்தை வீராங்கனை ஷீதல் தேவி ஆகியோர் பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனைகளுக்கான விருதுகளை வென்றுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg4e914y9l6o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.