Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பத்தை எப்படிப் பங்கிடுவது? அப்பத்தை யார் சாப்பிடுவது ? - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்பத்தை எப்படிப் பங்கிடுவது? அப்பத்தை யார் சாப்பிடுவது ? - நிலாந்தன்

641481424_34151319527848567_589013539163தமிழ் நாடு,திருச்சியில், கடந்த வாரம் சீமான் நடத்திய கூட்டம் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள சீமானின் ஆதரவாளர்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதை ஒரு பிரம்மாண்டமான தமிழ்த் தேசிய வெற்றியாக அவர்கள் போற்றுகிறார்கள்.

அண்மை மாதங்களாக சீமானுக்கும் விஜய்க்கும் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். தமிழகத்தில் சீமானும் விஜேயும் ஒருவர் மற்றவருக்கு எதிராகக் காணப்படுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் மத்தியில் அவர்களுக்கு ஆதரவாளர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் நடந்த சீமானின் கூட்டத்தோடு அவருடைய ஆதரவாளர்கள் மிகவும் நம்பிக்கையோடு காணப்படுகிறார்கள்.

ஈழத் தமிழர்கள் தமிழகத்தைக் கையாள வேண்டும். ஈழத் தமிழ் ராஜிய நடவடிக்கைகளில் அது முதன்மையானது. ஆனால் அது எப்படி என்பதுதான் இங்குள்ள கோட்பாட்டு அடிப்படையிலான கேள்வி. தமிழகத்தில் பல கட்சிகள் உண்டு. அந்தக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்குள் ஈழத் தமிழர்கள் சிக்கக்கூடாது. அது தமிழ்நாட்டு வாக்காளர்களுடைய பிரச்சினை. அதில் ஈழத் தமிழர்கள் தலையிடத் தேவையில்லை. ஈழத்தமிழ் நோக்கு நிலையில் தமிழகத்தில் உள்ள ஈழ அபிமானிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒன்றுதான், தமிழ் நாட்டவர்கள்தான். எனவே தமிழகத்தைக் கையாள்வது என்பது கட்சி பேதங்களைக் கடந்து தமிழக மக்களைக் கையாள்வதுதான். அங்கே காணப்படும் கட்சி முரண்பாடுகளுக்குள் ஈழத் தமிழர்கள் சிக்கக்கூடாது என்பது முக்கிய முன் நிபந்தனை.

சீமானோ,விஜயோ,திமுகவோ,அதிமுகவோ,பாரதிய ஜனதாவோகாங்கிரசோ எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் யார் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களை ஈழத் தமிழர்கள் அணுக வேண்டும். அது தமிழ்நாட்டு அரசு. தமிழ்நாட்டு மக்களின் தெரிவு. அதை ஈழத் தமிழர்கள் மதிக்க வேண்டும். அதைக் கட்சியாகப் பார்க்கத் தேவையில்லை.

அப்படித்தான் புதுடில்லியிலும் இந்திய மக்களால் யார் ஆட்சியாளர்களாகத் தெரிவு செய்யப்படுகிறார்களோ அவர்களை அணுக வேண்டும். அதை பாரத அரசாக பார்க்க வேண்டுமே தவிர கட்சியாகப் பார்க்கக் கூடாது. இந்தியாவை, தமிழகத்தை கையாளும்போதும் அணுகும்போதும் இந்தத் தெளிவு மிக அவசியம். அரசுகளைக் கையாள்வது. அதுதான் அரச தந்திரம்.

சமூகவலைத்தளங்களில் ஆளுக்காள் மோதிக் கொள்ளும் ஈழத் தமிழர்களிடம் இந்தத் தெளிவு மிகக்குறைவாக இருப்பதை உணர முடிகிறது. அதுமட்டுமல்ல சீமான் திரட்டிய கூட்டத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள், தாங்கள் ஒரு தேசமாகத் திரள முடியாமல் இருப்பதைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் ?

இங்குள்ள பெரிய கட்சி இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கிறது. ஒருவர் மற்றவரை எப்படித் துரோகி ஆக்குவது என்ற போட்டி.அதேசமயம் இரண்டாவது முக்கிய கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை அரசாங்கத்தின் புதிய யாப்புருவாக்க முயற்சியை நோக்கி குடிமக்கள் சமூகங்களை ஒருங்கிணைத்து வருகிறது. ஒருபுறம் அவர்கள் தமிழகத்தை நோக்கியும் ஐரோப்பாவை நோக்கியும் சென்றார்கள். இன்னொருபுறம் தாயகத்தில் குடிமக்கள் சமூகங்களை  நோக்கி வருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் அவர்கள் முன்னெடுக்கும் எல்லா நகர்வுகளுக்கும் போட்டியாக புலம்பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் தொடர்ச்சியாகக் காய்களை நகர்த்தி வருகிறார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள குறிப்பிட்டுச் செல்லக்கூடிய புத்திஜீவிகளில் அவர் ஒருவர். ஒரு காலம் ராஜதந்திரிகளால் ஆர்வத்தோடு பார்க்கப்பட்ட ஆங்கில இணையதளத்தை இயக்கியவர். அவருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு கோட்பாட்டு ரீதியிலானதா? ஈகோ சம்பந்தப்பட்டதா? என்ற விவாதத்தை தனியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த முரண்பாடு தமிழ்த் தேசிய ஆன்மாவின் இதயத்தைத் தாக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு  கோட்பாட்டு விளக்கமுடைய இரண்டு தரப்புகளுக்கும் உண்டு.

633759321_3126808887501374_4329678779529

cccc.jpg

சில மாதங்களுக்கு முன்பு ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு முன்னணி தாயகத்தில் உள்ள குடிமக்கள் சமூகங்களை ஒருங்கிணைத்து கடிதம் ஒன்றை ஐநாவுக்கு அனுப்பியது. ஆனால் அந்தக் கடிதம் அனுப்பப்பட்ட சிறிது காலத்தில் மற்றொரு கடிதம் அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் கையொப்பமிடப்பட்டு ஐநாவுக்கு அனுப்பப்பட்டது. இக்கடிதத்தின் பின்னணியில் மேற்சொன்ன புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளரே இருப்பதாக முன்னணி குற்றம் சாட்டியது.

அதன் பின் தமிழ்த் தேசியப் பேரவை தமிழகத்துக்குப் போனது. அங்கே மூத்த ஈழத் தமிழ் உணர்வாளர்களில் ஒரு பகுதியினர்  அவர்களைச் சந்திக்க மறுத்து விட்டார்கள். தமிழ்நாட்டு விஜயத்தின்போது,தமிழ்த் தேசியப் பேரவை முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக விமர்சித்து அங்குள்ள ஈழ உணர்வாளர்களில் ஒரு பகுதியினர் அறிக்கையும் விட்டார்கள். மேற்சொன்ன புலம் பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்தான் அதற்கும் பின்னணியில் இருந்ததாக முன்னணி குற்றம் சாட்டியது.

அதன்பின் தமிழ்த் தேசியப் பேரவை, இரண்டு வாரங்களுக்கு முன்பு மற்றொரு நகர்வை முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் குடிமக்கள் சமூகங்களுடான ஒரு சந்திப்பு அது. அந்தச் சந்திப்புக்கு சரியாக ஒரு நாள் முன்னதாக திருமலையில் ஒரு சந்திப்பு இடம் பெற்றது. அதுவும் குடிமக்கள் சமூகங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளூடான சந்திப்பு. அந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியது திருமலையைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர். அவரை பின்னிருந்து இயக்கியது மேற்சொன்ன புலம்பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளரே என்று முன்னணி குற்றம்சாட்டியது. திருமலையைச் சேர்ந்த அந்த அரசியல் செயற்பாட்டாளர் முன்பு முன்னணியின் உறுப்பினராக இருந்தவர். இப்பொழுது இல்லை.

திருமலைச் சந்திப்பில் திருமலைப் பிரகடனம் முன்வைக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பான கோட்பாட்டு விவாதங்களை அது புதுப்பித்திருக்கிறது. திருமலைச் சந்திப்பைப்போல மற்றோரு சந்திப்பு அதன்பின் மட்டக்களப்பிலும் நடந்தது. அதில் முன்னணியின் செயலாளர்,கஜேந்திரன் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்திருந்தார். எனினும் அதன் பின் வெளி வந்த காணொளிகள், அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களுக்கும் முன்னணிக்கும் இடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிப்பவை.

மேற்சொன்ன புலம்பெயர்ந்த தமிழ்ச் செயல்பாட்டாளர் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள பெரும்பாலான அமைப்புகளை ஒரு மெய் நிகர் சந்திப்பில் ஒருங்கிணைந்திருக்கிறார். இதில் தாயகத்திலிருந்தும் சிலர் கலந்து கொண்டதாக ஒரு தகவல். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இந்த மெய்நிகர் சந்திப்பும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கியதுதான்.

இதில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையில் நிகழும் வாதப் பிரதிவாதங்களின் சாராம்சம் எதுவென்றால், கோட்பாட்டு ரீதியாக யார் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தை தீவிரமாகவும் விட்டுக்கொடுப்பின்றியும் முன்னெடுக்கிறார்கள்? இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு பொறுத்து யார் கோட்பாட்டு ரீதியாக மிகச் சரியான,பொருத்தமான தீர்வை முன்வைக்கின்றார்கள்? என்பதுதான்.

ஒருபுறம் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் தூதரகங்களை அல்லது வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்திக்கு இழுக்கும் ஒரு நிலைக்கு வந்துவிட்டது. கட்சிகள் தாங்களாக ஒற்றுமைப்படாத ஒரு பின்னணியில்,தூதரகங்கள் தலையிட்டு முன்முயற்சி எடுத்தாலும் அதையும் ஒரு கட்சி குழப்புகிறது. இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையே எக்கிய ராஜ்யவா? சமஸ்ரியா என்ற வாதப்பிரதிவாதம். இன்னொரு புறம் சமஸ்டி வேண்டாம் பொதுஜன வாக்கெடுப்புத்தான் வேண்டும் என்ற கோரிக்கை.

சிறிய ஈழத் தமிழ்ச் சமூகத்தில் நாலில் ஒரு பகுதிக்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து விட்டார்கள். புலப்பெயர்ச்சி தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. அனேகமாக எல்லா ஈழத் தமிழ் கிராமங்களும் ஒரு பகுதி ஆளில்லா வீடுகளைக் கொண்ட கிராமங்களாக மாறிவருகின்றன. இளைய தலைமுறையின் ஒரு பகுதி நாட்டில் வேர் கொண்டு பூத்துக் குலுங்குவதை விடவும் நாட்டை விட்டு எப்படித் தப்பியோடுவது என்றுதான் சிந்திக்கின்றது. அதாவது தாயகத்தில் சனத்தொகை தொடர்ச்சியாக மெலிந்து வருகிறது.

ஒருபுறம் சனத்தொகை மெலிகிறது. இன்னொருபுறம் இருக்கின்ற ஜனத்தொகையைத் திரட்டுவதற்குக் கட்சிகளால் முடியவில்லை. கட்சிகள் ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கிக் கொண்டிருக்க,தேசிய மக்கள் சக்தி உற்சாகமாக, எதிர்பார்ப்போடு அனுர குமாரவை தமிழ்மக்கள் மத்தியில் கதா நாயகனாகக் கட்டியெழுப்புகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குக்  கிடைத்த அதேயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும். இந்த லட்சணத்தில் தீர்வை நோக்கி ஒருங்கிணைய வேண்டிய தமிழ்த்  தரப்போ சிதறிக்கொண்டு போகிறது. பலஸ்தீனர்களுக்கிடையிலான அக முரண்பாடுகளை  விமர்ச்சிப்பவர்கள் கூறுவார்கள்…”பாலஸ்தீனர்கள் அப்பத்தை எப்படிப் பங்கிடுவது என்று விவாதித்துக் கொண்டிருக்க, யூதர்களோ அப்பத்தைச்  சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று. இது ஈழத் தமிழர்களுக்கும் பொருந்துமா?

https://www.nillanthan.com/8159/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.