Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் தடை!

சங்கரன்- சிவலிங்கம்

அமெரிக்க அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ததற்குப் புறம்பாக தற்போது தமிழ் மக்கள் மத்தியில் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரேயொரு தொண்டர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையும் தடைசெய்துள்ளது. புலிகள் ஆயுதம் வாங்குவதற்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உதவி செய்து வருகின்றது. என்பதையே இதற்குக் காரணமாக கூறியுள்ளது. இத்தடை தந்த ஊக்குவிப்பில் இலங்கை அரசாங்கமும் இதைத் தடைசெய்யும் அமைச்சரவைத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

போரினால் பெரும் துன்பங்களை அனுபவித்து வரும் வன்னி மக்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்கக் கூடிய வகையில் இருக்கின்ற ஒரேயொரு அமைப்பு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தான் என்பது அமரிக்கா உட்பட உலகநாடுகள் எல்லாவற்றிற்கும் நன்றாகவே தெரியும். அவசர இடர் நிவாரணத்திற்குப் புறம்பாக வன்னியில் பல்வேறு சிறுவர் இல்லங்கள் உட்பட பல சமூக நிறுவனங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பராமரித்து வருகின்றது என்பதும் உலக நாடுகளுக்குத் தெரியும். சுனாமி அனர்த்தத்தின் போது இதன் ஒழுங்கான, சுறுசுறுப்பான பணிகளைக் கண்டு ஏனைய அரசுசாரா அமைப்புகள் உட்பட உலகநாடுகளே வியப்படைந்து இருந்தன. இதை நேரடியாக பாராட்டவும் அவர்கள் தயங்கி இருக்கவில்லை. தற்போது தங்களது அரசியல் தேவைக்காக தமிழ் மக்களை வஞ்சிக்கும் வகையில் தடை தீர்மானத்தினை எடுத்துள்ளனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குக் கிடைக்கின்ற நிதி வழங்களில் பெரும்பாலானவை புலம்பெயர்மக்கள் வழங்கும் நிதி வளங்களேயாகும். இங்கு தமிழர்களின் நிதி உதவிகளை தமிழர்களுக்கு வழங்குவதை அமெரிக்கா தடுக்க முயற்சிக்கின்றது. இதைவிட அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்காது என்றே கூறவேண்டும்.

இப்போது எழுகின்ற கேள்வி அமெரிக்கா ஏன் தமிழர் விவகாரத்தில் இவ்வாறு மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றது? அதற்கான அரசியல் தேவை என்ன? என்பதே ஆகும். சுருக்கமாகக் குறிப்பிட்டால் புலிகள் மேல் நிலைக்கு வருவதை தடுப்பதே இதற்குப் பின்னாலுள்ள அரசியல் காரணியாகும். இலங்கை அரசு இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பலவீனப்பட்டு வருகின்ற நிலையில் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தி மேல் நிலைக்கு வந்து விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே இத்தடை கொண்டு வரப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளன.

இப்போது எழுகின்ற அடுத்த கேள்வி புலிகள் மேல் நிலைக்கு வருவதை ஏன் அமெரிக்கா விரும்பவில்லை? இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது காரணம் விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாக ஏனைய விடுதலை இயக்கங்களுக்கு முன்மாதிரியாக வந்து விடுவார்களோ என்ற அச்சமாகும்.

எந்த ஒரு நாட்டிலும் தங்கியிராமை, முப்படைகளையும் வைத்திருக்கின்றமை, தமிழர்கள் மத்தியில் ஒரேயொரு இயக்கமாக இருக்கின்றமை, வலிமையான தளப்பிரதேசங்களைக் கொண்டிருக்கின்றமை, தலைவர் தமது தளப்பிரதேசத்தில் பாதுகாப்பாக இருக்கின்றமை, தலைவரை இலகுவில் அணுகமுடியாமை, தலைவர் மட்டுமே இறுதித் தீர்மானம் எடுக்கின்றமை, பல்வேறு சிறப்புப் படைப்பிரிவுகளை வைத்திருக்கின்றமை, சிறந்த ஆற்றலுடைய புலனாய்வு அமைப்பினைக் கொண்டிருக்கின்றமை என்பன உலக விடுதலை இயக்கங்களில் விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பியல்புகளாகும்.

இவ்வாறான காரணங்களினால் உலகின் ஆதிக்க சக்திகளோ, பிராந்திய சக்திகளோ இலகுவில் கையாளமுடியாத இயக்கமாக புலிகள் இயக்கம் இருக்கின்றது. இந்த முன்மாதிரியை உலகின் ஏனைய விடுதலை இயக்கங்களும் பின்பற்றி விடலாமென அமெரிக்கா அஞ்சுகின்றது. தான் ஊட்டி வளர்த்து உருவாக்கிய ்அல்-ஹய்தா இயக்கம்ீ போன்றவற்றையே கையாள முடியாது திணறும் அமெரிக்கா தனித்துவமாக வளரும் இயக்கத்துக்கு அதிகம் பயப்படுவதில் வியப்பேதும் இருக்க முடியாது. அரசுகளையே தன் ஆதிக்கத்துக்குள் வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு ஒரு விடுதலை இயக்கம் தண்ணீர் காட்ட முற்படுவது கோபத்தையும் அதேவேளை அச்சத்தையம் தருவதாக உள்ளது.

விடுதலைப் புலிகள் கொண்டிருக்கின்ற பண்புகளைப் போல சில பண்புகளை முன்னர் எரித்திரிய விடுதலை இயக்கமும் சிறிய அளவில் கொண்டிருந்தது. சிறிய கடற்படையை வைத்திருந்ததோடு ஏனைய நாடுகளில் தங்கியிருக்காத தனித்துவமான அமைப்பாகவும் அது இருக்கிறது. ஆரம்பத்தில் அவ் இயக்கத்தை ஏறெடுத்தும் பார்க்காத அமெரிக்கா எதியோப்பியாவின் சோவியத் சார்புநிலையினை இல்லாமற் செய்து தனது ஆதிக்கத்தை அந்நாட்டின் மேல் நிலைநிறுத்துவதற்காக எரித்திரிய விடுதலை இயக்கத்துக்கு உதவி செய்ய முன்வந்தது. அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு உட்படாது அவ்உதவியினையும் பெற்றுக் கொண்ட எரித்திரிய இயக்கம் வீரத்துடன் போரிட்டு எதித்தோப்பியாவிடமிருந்து சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்டது.

இந்த வகையில் விடுதலைப் புலிகளுக்கு சிறியளவில் முன்னோடியாக எரித்திரிய விடுதலை இயக்கம் இருந்தது எனக் கூறலாம் ஏனைய நாடுகளிடம் தங்கிஇருக்காமை வல்லரசுகளைக் கூட போராட்டத்தில் பயன்படுத்த முனைந்தமை என்பனவற்றை விடுதலைப்புலிகள் எரித்திரிய விடுதலை இயக்கத்திடமிருந்து பெற்றிருக்கலாம். ஆனால் விடுதலைப்புலிகளிடம் இருப்பது போல விமானப்படையோ பலம் வாய்ந்த புலனாய்வு அமைப்போ எரித்திரிய விடுதலை இயக்கத்திடம் இருக்கவில்லை.

இரண்டாவது காரணம் ஜனாதிபதி தேர்தலில் ரணிலைத் தோற்கடித்து மகிந்தவை ஆட்சிப் பீடம் ஏற்றியதால் ஏற்பட்ட கோபமாகும். இதன் மூலம் தங்களுடைய நிகழ்ச்சி நிரலை புலிகள் குழப்பிவிட்டார்கள் என்ற வெப்பெரிச்சல் அமெரிக்காவுக்கு உண்டு. இது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, ஐரோப்பிய யூனியனுக்கும் உண்டு, அமெரிக்காவின் பொருளாதாரத் தோழனான யப்பனுக்குமுண்டு.

புலிகள் மகிந்தரை ஆட்சிப்பீடம் ஏற்றியமைக்கான காரணம் சர்வதேச வலைப்பின்னலிலிருந்து விடுபடுவதற்காக ஆகும். டோக்கியோ மாநாட்டிற்கு செல்லாததிலிருந்து ஆரம்பித்த இந்த விடுபடுதல் செயற்பாடு மகிந்தரை ஆட்சிப்பீடம் ஏற்றியதோடு வேகமாக வளர்ந்து வருகின்றது புலிகள் இச் செயற்பாட்டுக்கு டோக்கியோ மாநாட்டிலிருந்து விலகுதல், மிகிந்தரை ஆட்சிப்பீடத்துக்குக் கொண்டு வருதல் ஆகிய 2 செயற்பாடுகளை மட்டுமே மேற் கொண்டு இருந்தனர். ஏனைய எல்லாவற்றையும் புலிகளுக்காக மகிந்தர் செய்து கொடுத்தார். ஆரம்பத்தில் ரணிலின் பதவிகளைப் பறித்தமை, சுனாமி பொதுக்கட்டமைப்பினைக் குழப்பி அடித்தமை என்பவற்றை சந்திரிகாவும் ஜே.வி.பி.யினரும் செய்து கொடுத்தாலும் பிற்காலத்தில் பேரினவாத அரசியலைத் தன் கையில் எடுத்த பின்னர் மகிந்தரே அதனை இன்று வரை நேர்த்தியாக செய்து கொண்டிருக்கின்றார். இது விடயத்தில் ஜே.வி.பி.யினருக்கு மகிந்தரோடு உள்ள கோபம் தன்கையிலிருந்த பேரினவாத அரசியலை மகிந்தர் எடுத்ததன் மூலம் தன்பிழைப்பில் மண்போட்டு விட்டார் என்பதேயாகும்.

அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் சமாதானகாலத்தில் புலிகளைப் பலவீனப்படுத்தவே முயற்சித்தனர். போர் இல்லா நிலையினை மட்டும் சமாதானமாகக்காட்டி அதனை நீண்ட காலத்துக்கு இழுத்தடிப்பதன் மூலம் போராட்ட உணர்வை அகரீதியாகவும், புறரீதியாகவும் சிதைப்பதே அவர்களது தந்திரோபாயமாக இருந்தது. எனினும் புலிகள் அதற்கு இடங்கொடுக்கவில்லை.

மூன்றாவது காரணம் அமெரிக்காவின் பூகோளரீதியான நலன் சம்பந்தப்பட்டதாகும். மத்தியக் கிழக்கிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் அமெரிக்காவின் செல்வாக்கு நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் தென் ஆசியாவின் நுழைவாயிலான இலங்கையில் தனக்கொரு பாதுகாப்பான செல்வாக்குத் தளமொன்றைத் தேட அமெரிக்கா முற்படுகின்றது. தூரகிழக்கிற்கான கேந்திரப்பாதையில் இலங்கை இருப்பதனாலும் போர் நடவடிக்கைகளுக்குப் பயன் படுத்தக் கூடிய சிறந்த இயற்கைத் துறைமுகம் திருகோணமலையில் இருப்பதனாலும் இலங்கை பொருளாதாரம் பாதுகாப்பு என இரு விடயங்களிலும் தனக்கு அனுகூலமாக இருக்குமென அமெரிக்கா நினைக்கின்றது. சமாதான முயற்சிகளில் அமெரிக்கா அக்கறைப் பட முனைந்தமைக்கும், ரணிலை ஆட்சிப் பீடமேற்ற முயற்சித்தமைக்கும் இதுவே காரணமாகும். ரணில் ஆட்சிக்கு வருவது சாத்தியமற்றுப் போன நிலையில் மகிந்தர் தன்னைவிட்டுத் தூரவிலகிவிடக் கூடாது என்பதற்காகவே இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுக் கொண்டது. இது விடயத்தில் இலங்கையில் கிடைக்கலாமென்று கருதப்படுகின்ற எண்ணெய் வளத்தையும் குறைத்து மதிப்பிடக் கூடாது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மத்திய கிழக்கினை தனது செல்வாக்கு மண்டலத்தினுள் கொண்டு வருவதற்கு எவ்வாறு பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பது முன் நிபந்தனையாக இருக்கின்றதோ அதே போல இலங்கையையும் செல்வாக்கு மண்டலத்தினுள் கொண்டு வருவதற்கு இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதும் முன் நிபந்தனையாக இருக்கின்றது. இதனால் தான் இரு பக்கத்திற்கும் அழுத்தத்தினைக் கொடுத்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வினைக் கொண்டு வர அமெரிக்கா முயற்சிக்கின்றது. இலங்கை ஒரு அரசாக இருப்பதனால் அதற்கு மென்மையான அழுத்தத்தினையும், புலிகளுக்கு வன்மையான அழுத்தத்தினையும் கொடுத்து வந்தது. இம்மென்மையான அழுத்தங்களைக் கூட மகிந்தர் அரசு ஏற்காமை ஒரு பிரச்சினையாக இருந்தாலும் புலிகளின் மேலெழும்புகை ஒன்றுபட்ட இலங்கையை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரல் என்ற இலக்கினைக் குழப்பிவிடும் என்பதற்காகவே புலிகளின் மேலெழுப்புகையைத் தடுக்கப் பார்க்கின்றது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை பிரிவினை, ஒருங்கிணைப்பு என்பதெல்லாம் அப்பிரதேசங்களின் நலன்களைச் சார்ந்தது அல்ல மாறாக தனது சொந்த நலன் சார்ந்ததே ஆகும். இதனால் தான் சோவியத் யூனியனிலும் யுகேஸ்லேவியாவிலும் கிழக்குத் திமோரிலும் கொசோவாவிலும் பிரிவினையை ஆதரித்த அமெரிக்கா இலங்கையில் மட்டும் அதனை எதிர்க்கின்றது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.