Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னிக்குள் வகுக்கப்படும் புதிய புதிய வியூகங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விதுரன்

வன்னியில் யுத்த நிலைமை மோசமடைகிறது. பூநகரி மற்றும் கிளிநொச்சி நோக்கிய படை நகர்வு மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

நீண்ட நாட்களாக மௌனம் சாதித்து வந்த புலிகள் போர்க்கோலம் பூண்டு விட்டதால் இனி வன்னிக் களமுனை அதிரப்போகிறது. இதுவரை இருந்த நிலைமை இனியில்லையென்ற நிலையில் புலிகளின் பதிலடியை இனி ஒவ்வொரு கணமும் படையினர் எதிர்கொள்ளப் போகின்றனர். வன்னியை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டுமென்பதற்காக அரசும் படைத்தரப்பும் எதனையும் செய்யத் தயாராகிவிட்டன.

வன்னியிலுள்ள நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றிவிட்டு வன்னியை முழுமையாகக் கைப்பற்றிவிடுவதற்காக சர்வதேச சமூகத்துடனும் சர்வதேச தொண்டர் அமைப்புகளுடனமும் கூட்டுச் சேர இலங்கை அரசு தயாராகிவிட்டது.

நேற்று வரை சர்வதேச சமூகத்தினதும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளினதும் மிகக் கடும் கண்டனங்களை எதிர்நோக்கி வந்த அரசு, இன்று அவையனைத்துடனும் இணைந்து வன்னி மக்களின் பாதுகாப்பு குறித்தும் பேசுகிறது.

ஆனாலும் இனி வன்னிக் களமுனை முன்னரைப் போலிருக்கப் போவதில்லையென்பது, இவ்வார முற்பகுதியில் வன்னியில் இடம்பெற்ற கடும் சமர் நிரூபித்துள்ளது. இது படையினருக்கு ஏற்பட்ட இழப்பை மட்டுமல்ல இனி ஏற்படப் போகும் இழப்புகள் குறித்தும் கட்டியம் கூறுகையில், பூநகரி நோக்கியும் கிளிநொச்சி நோக்கியும் முன்னகர்வு முயற்சிகளை தீவிரப்படுத்துவது குறித்து படைத்தரப்பு யோசிக்கிறது. இல்லையேல் படையினருக்கேற்படும் பாரிய இழப்புகள் தெற்கில் பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தி விடலாமென்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

மன்னார் -பூநகரி வீதியில் (ஏ-32 வீதி) முழங்காவிலைத் தாண்டி நாச்சிக்குடாவை நோக்கிச் சென்ற படையினரும் அதற்குக் கிழக்கே யாழ் - கண்டி வீதிக்கு (ஏ9 வீதி) இடையில் சென்று விட்ட படையினரும் புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்றனர்.

நாச்சிக்குடாவிலும் அதன் கிழக்கே அக்கராயன்குளம் வரையிலும் கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெற்ற கடும் சமரில் படையினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. 75 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துமுள்ளனர்.

இந்தச் சமர்களில் கொல்லப்பட்ட படையினரில் 30 க்கும் மேற்பட்டோரின் சடலங்களைப் புலிகள் கைப்பற்றினர். இது இந்தப் பகுதியில் பாரிய படைநகர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முன்னேறிய பகுதிகளிலிருந்து படையினர் பின்வாங்கியுமுள்ளனர்.

படைநகர்வு முயற்சியை முறியடித்து படையினர் கைப்பற்றிய பகுதிகளை புலிகள் மீண்டும் கைப்பற்றியுமுள்ளனர். இந்த நிலையில், வடக்கே படை நகர்வு ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை "ஏ9' வீதி நோக்கி முன்னகர முயலாத படையினர் தற்போது "ஏ9' வீதிக்கும் சென்று முன்னகர்வுகளை மேற்கொண்டால் தான் வன்னிக்குள் மேலும் முன்னேற முடியுமென்ற நிலையுள்ளது. இதனால்தான் "ஏ32' வீதியிலும் அதற்குக் கிழக்கே "ஏ93' வீதிக்கும் இடைப்பட்ட பகுதியிலும் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ளும் படையினர் தற்போது தங்கள் நகர்வு முயற்சிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த முற்படுகின்றனர்.

இந்த மாற்றமானது வன்னிக்கான முனையில் இவ்விரு வீதிக்கும் இடைப்பட்ட பகுதியூடான நகர்வாயிருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மன்னார் - பூநகரி வீதியில் முன்னேறிய படையினர் இன்று நாச்சிக்குடாவை நெருங்கி நிற்கின்றனர். அதே நேரம் மடு - பாலம்பிட்டி - பெரியமடு- கல்விளான்- துணுக்காய் - அக்கராயன் வரை முன்னேறிய படையினர், வன்னேரிக்குளத்தின் தென்பகுதி வரை சென்று நிற்கின்றனர்.

அதற்கு மேல் முன்னேற அவர்கள் முயல்கின்ற போதும், கடந்த ஒன்றரை வருடமாக மௌனம் சாதித்து வந்த புலிகள் தங்கள் மௌனத்தை கலைத்து விட்டு போர்க் கோலம் பூண்டுள்ளதால் முன்னேறிச் சென்ற படையினர் திகைத்துப் போயுள்ளனர்.

இந்தப் பகுதிகளில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புகள் இனி இந்தப் பகுதி கள நிலை எப்படியிருக்கப் போகின்றதென்பதை படையினருக்கு நன்குணர்த்தியிருக்கும். தங்கள் தாக்குதல் தந்திரங்களை மாற்றியமைக்க வேண்டிய நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுவரை வன்னிக்குள் வேகமாக மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வை இனி நிறுத்த முடியாது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுக்க கூடிய வாய்ப்புமுள்ளது. அதே நேரம் ஏ-32 வீதியில் நாச்சிக்குடாவைக் கைப்பற்றி முன்னகர்ந்தால்தான், தற்போது நாச்சிக்குடாவிலிருந்து அதன் கிழக்கே அக்கராயன்குளம் வரை புலிகள் போட்டுள்ள பூட்டை உடைத்துக் கொண்டு முன்னேற முடியும்.

இல்லையேல் புதிய களமுனைகளைத் திறந்து ஏ- 9 வீதியூடாகவும் முன்னகர வேண்டும். அது படையினருக்கு தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்துவதுடன் படையினரைத் தேவையற்ற பகுதிகளுக்குள் முடக்கி படையினருக்கான பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கச் செய்து விடும். வவுனியா - மன்னார் வீதியிலிருந்து வடக்கு நோக்கிய படை நகர்வு கடந்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டபோது அது இருமுனை நகர்வாயிருந்தது.

ஏ32 வீதியை கைப்பற்றும் அதேநேரம், ஏ9 வீதியூடாகச் சென்று கிளிநொச்சியை கைப்பற்றுவதை விடுத்து ஏ32 வீதிக்கும் ஏ9 வீதிக்கும் இடையால் மடு, பெரியமடு மற்றும் துணுக்காய் ஊடாக அக்கராயன் சென்று அங்கிருந்து கிளிநொச்சிக்கு நகர்வதே படையினரின் திட்டமாகும். இதன் மூலம் ஏ32 வீதியைக் கைப்பற்றுவதுடன் கிளிநொச்சியையும் கைப்பற்றி விடவேண்டுமென்ற நோக்கம் அரசிற்கும் படையினருக்கும் இருந்தது.

தங்கள் திட்டப்படி இவ்விரு முனைகளினூடான நகர்வுகளும் வெற்றியளித்தால் மோதல்கள் எதுவுமின்றி ஏ9 வீதியைக் கூட சுலபமாகக் கைப்பற்றி விட முடியுமென்பதுதான் படையினரின் திட்டமாகும்.

அதேநேரம் பூநகரியைக் கைப்பற்ற ஏ32 வீதியில் பாரிய படை நகர்வை மேற்கொள்ளும் போது ஜெயசிக்குரு படை நகர்வு போல் ஏ9 வீதியூடாகவும் நகர்ந்து கிளிநொச்சியையும் கைப்பற்றியிருக்கலாமேயென்ற கேள்வியும் எழலாம். ஆனால் ஏ 32 வீதியைக் கைப்பற்றுவதே பிரதான நோக்கமாயிருந்ததால் அந்த வீதியில் நகரும் படையினருக்கு பக்கவாட்டுத்துணை தேவையென்பதாலும் அந்த பக்கவாட்டுத் துணை ஏ32 வீதிக்குச் சமாந்திரமாகவும் அதற்குச் சற்று நெருக்கமாகவும் இருப்பதன் மூலம் தான் இவ்விரு முனைகளிலும் நகரும் ஒவ்வொரு படையணிக்கும் மற்ற மற்ற முனைகளில் முன்னகரும் படையணிகள் நெருங்கிய பக்கவாட்டுத் துணையாக இருக்க முடியுமென்பதாலேயே ஏ 32 வீதியூடாக நகரும் போது ஏ9 வீதியூடாக நகராமல் அதற்கிடையில் மடு ஊடான படை நகர்வுக்கு படைத்தரப்பு திட்டமிட்டது.

ஏ 32 வீதியூடாகவும் ஏ9 வீதியூடாகவும் இந்தப் படை நகர்வுகள் இருந்திருந்தால் இவ்விரு முனைகளிலும் நகரும் படையணிகளுக்கு இடை நடுவில் மிகப்பெரிய இடைவெளியிருக்கும். அந்த இவைவெளியூடாக இரு முனைகளிலும் நகரும் படையணிகள் மீது புலிகளால் பக்கவாட்டில் ஊடறுப்புத் தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தி படை நகர்வுகளை ஆரம்பத்திலேயே நிறுத்தியிருக்க முடியும். ஆனால் ஏ 32 வீதியூடாகவும், மடு, பெரியமடு, துணுக்காய் பகுதியூடாகவும் முன்னேறும் படையினர் தங்கள் இலக்குகளை அடைந்தால் பாரிய மோதல்கள் எதுவுமின்றி ஏ9வீதியில் முக்கிய பகுதிகளுக்குச் சென்று ஏ9 வீதியையும் இலகுவாகக் கைப்பற்றிவிட முடியுமென படைத்தரப்பு கணக்குப் போட்டு அதற்கேற்ப நகர்ந்து வருகிறது. படையினரின் கணக்குப் படி, ஏ 32 வீதியில் இலுப்பைக்கடவைக்கு அப்பால் வெள்ளாங்குளத்தையும் மடு, பெரியமடு முனையில் துணுக்காய் மற்றும் மல்லாவியையும் கைப்பற்றி, வெள்ளாங்குளம் - மாங்குளம் வீதியில் சுமார் 15 கிலோ மீற்றர் கிழக்கே நகர்ந்து சென்றால் ஏ9 வீதியில் மாங்குளம் சந்தியை கைப்பற்றி விடலாம்.

இதன் மூலம் வவுனியாவின் ஓமந்தைக்கும் மாங்குளத்திற்குமிடையிலான ஏ9 வீதி எதுவித மோதலுமின்றி படையினர் வசமாகிவிடும். இதேபோல் ஏ 32 வீதியில் நாச்சிக்குடாவை கைப்பற்றி, அதற்கும் ஏ 9 வீதிக்குமிடையில் வன்னேரி மற்றும் அக்கராயன்குளப் பகுதியை கைப்பற்றி அங்கிருந்து கிழக்காக சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நகர்ந்தால் ஏ9 வீதியில் தெருமுருகண்டிச் சந்தியை கைப்பற்றிவிடலாம்.

இதன் மூலம் மாங்குளத்திற்கும் கிளிநொச்சிக்குமிடையிலான ஏ 9 வீதியை பாரிய மோதல்கள் எதுவுமின்றிக் கைப்பற்றிவிடலாம். இதேபோல் ஏ 32 வீதியில் நாச்சிக்குடாவைக் கைப்பற்றி அங்கிருந்து பூநகரி நோக்கிச் சென்று விட்டால் பூநகரியிலிருந்து கிழக்கே முன்னேறி ஏ 9 வீதியிலுள்ள பரந்தனுக்குச் சென்றுவிட்டால், கிளிநொச்சிக்கும் பரந்தனுக்குமிடைப்பட்ட ஏ 9 வீதியை கைப்பற்றுவது மட்டுமல்லாது பரந்தனுக்கு வடக்கே ஆனையிறவு, இயக்கச்சி, பளை, முகமாலை வரையிலான ஏ 9 வீதியும் எவ்வித மோதலுமில்லாது அடுத்த நிமிடமே படையினர் வசமாகி விடுமென்றெல்லாம் கணக்குப் போட்டவாறே தற்போது வன்னிக்கள முனையில் படைநகர்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதனொரு கட்டமாக, தற்போது வவுனியாவுக்கு வடக்கே பாலமோட்டை பகுதியில் படையினருக்கு பெரும் தலைவலியாக இருக்கும் புலிகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக, தற்போது மல்லாவியில் நிலைகொண்டுள்ள படையினர் வெள்ளாங்குளம் - மாங்குளம் வீதியில் மேலும் முன்னகர்ந்து சென்று ஏ 9 வீதியில் மாங்குளம் சந்தியை கைப்பற்றிவிட்டால் பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதியில் கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக புலிகளின் முற்றுகையை முறியடிக்க முடியாது திணறும் படையினர் அந்த முற்றுகையிலிருந்து விடுபட்டு விடமுடியுமெனப் படைத் தரப்பு கருதுகிறது.

இதேநேரம், படையினர் போட்ட கணக்குகள் சரிவர வேண்டுமானால் ஏ32 வீதியில் நாச்சிக்குடாவைக் கைப்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆனால், நாச்சிக்குடா பகுதியில் நிலை கொண்டுள்ள புலிகளின் கடும் எதிர்ப்பை முறியடிப்பதற்கு படையினர் பெரும் பலப் பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால்தான் நாச்சிக்குடாவை கைப்பற்ற முடியாவிட்டால் நாச்சிக்குடாவுக்கு கிழக்கே வன்னேரி மற்றும் அக்கராயன் நோக்கி துணுக்காய் க்கு வடக்கே நிலைகொண்டுள்ள படையினர் முன்னேறிச் சென்று புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளைத் தகர்த்து முன்னேறிச் சென்று விட்டால் பின்னர் மேற்காகத் திரும்பி ஏ32 வீதிநோக்கிச் செல்லும்போது நாச்சிக்குடாவை கைவிட்டு புலிகள் பின்வாங்கிவிடுவரென படைத்தரப்பு கருதுகிறது. ஆனால், நாச்சிக்குடா முதல் அதன் கிழக்கே ஏ9 வீதியை நோக்கிய பகுதியில் வன்னேரி, அக்கராயன் மற்றும் அக்கராயன்குளப் பகுதியில் புலிகள் மிகவும் வலுவாக நிற்கின்றனர்.

வவுனியா-மன்னார் வீதியிலிருந்து வடக்கு நோக்கிய படை நகர்வு ஆரம்பமான போது இருந்த அகலமான பிரதேசம் போலல்லாது நாச்சிக்குடா முதல் அக்கராயன்குளம் வரையான பகுதி கூம்பு போன்று ஒடுங்கி வந்து குறுகிய அகலப் பிரதேசமாயிருப்பதால் மாற்றுவழி தேடும் வரை நாச்சிக்குடா முதல் அக்கராயன்குளம் வரையான சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்திற்கு புலிகளின் பாரிய மண் அணையையும் வலுவான முன்னரங்கக் காவல் நிலைகளையும் உடைத்துக் கொண்டு படையினரால் ஊடறுத்துச் செல்வது மிகக் கடினம்.

யாழ்.குடாவில் முகமாலையிலுள்ள குறுகிய ஒடுங்கலான நிலப்பிரதேசம் போன்றே தற்போது நாச்சிக்குடாவுக்கும் அக்கராயன் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியிருப்பதால் இந்தக் களமுனையில் படையணிகள் உடனடியாக முன் னேற்ற முயற்சியை மேற்கொள்ள முடியுமென்பது சாத்தியமில்லை.

நாச்சிக்குடா, வன்னேரி, அக்கராயன் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் நடைபெற்ற பாரிய முன்நகர்வு முயற்சிகளை விடுதலைப்புலிகள் மிகக் கடுமையான பதிலடித் தாக்குதல் மூலம் முறியடித்திருந்தனர். வடக்கு நோக்கிய பாரிய படை நகர்வு முயற்சியில் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் படையினர் சந்தித்த மிகப் பெரும் பின்னடைவாக இது கருதப்படுவதுடன் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் விசேட கொமாண்டோப் படையணி பலத்த இழப்பைச் சந்தித்தமையானது இப்பகுதியில் அடுத்த படைநகர்வு முயற்சிகளுக்கும் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தி விடலாமென்ற அச்சத்தை படைத்தரப்புக்கு எற்படுத்தியுள்ளது. மிக நவீன, இதுவரை படைத்தரப்பு களமுனைகளில் பயன்படுத்தாத, எதிரிக்கு மிக மோசமான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய கனரக ஆயுதங்களை படையினர் இந்தக் களமுனையில் பயன்படுத்திய போதும் புலிகள் அதனை முறியடித்தமை படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://www.thinakkural.com/news/2008/9/7/a...s_page57524.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.