Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் மௌனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் மௌனம்

[04 - October - 2008]

காலகண்டன்

மௌனம் சம்மதத்தின் வெளிப்பாடு என்று கூறப்படுவதுண்டு. அது எவ்வளவு உண்மை என்பதை இந்திய மத்திய அரசு இலங்கை இனப் பிரச்சினையில் இன்றைய உச்ச கட்ட யுத்தத்தின் மத்தியிலும் கடைப்பிடித்து வரும் இறுக்கமான மௌனம் எடுத்துக் காட்டுகின்றது. மௌனம் மட்டுமின்றி அதன் பின்னால் இடம்பெறும் சம்பவங்களும் நடைமுறைகளும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவைகளாகவும் இருந்து வருகின்றன. மேற்படி மௌனத்தைக் கலைக்குமாறும் இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுக்குமாறும் ஆயுத உதவிகளை வழங்க வேண்டாம் என்றும் மத்திய அரசை தமிழகத்துக் கட்சிகள் வற்புறுத்திக் கேட்டு வந்துள்ளன. தமிழகத்தின் சில கட்சிகள் ஆவேசமாக அறிக்கைகள் விட்டும் பிரதமரை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுத்தும் வந்துள்ளன.

இரண்டு நாட்களுக்குமுன்பு சென்னையில் பல கட்சிகள் கலந்து கொண்ட உண்ணா விரதப் போராட்டம் இடம்பெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இவ் உண்ணாவிரதப் போராட்டமானது இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு அரசியல் தீர்வை வற்புறுத்துமாறும் கேட்டுக்கொண்டது. தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறான ஒரு உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முன்னின்று அழைப்பு விடுத்தமை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல் தடவை என்று கூறலாம். இதற்கு மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சியான மாக்சிஸ்ட் கட்சி உட்பட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தும் கலந்து கொண்டன. மேற்படி அழைப்பை ஏற்ற அ.இ.அ.தி.மு.க. கட்சி, ம.தி.மு.க. என்பன இறுதியில் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க., பா.ம.க. ஆகியன மத்திய அரசில் பங்கு கொள்வதால் அவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதனால், பா.ம.க. சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் முன் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் மத்திய அரசிடம் எதையும் முன்வைக்காது, தமிழக சட்டசபையில் தமிழீழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றும் கோரிக்கையை முன்வைத்தார். ஏனெனில் மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் தமது கட்சிக்கும் மகனுக்கும் நெருக்கடி வராதவாறும் அதேவேளை, முதல்வர் கருணாநிதிக்கு சிக்கல் ஏற்படுத்தும் விதமாகவே ராமதாஸ் பேசிச் சென்றார். ஜெயலலிதாவும் வைக்கோவும் தமது அரசியல் நிலைப்பாட்டிற்குரிய கணக்குப் பார்த்து அவ் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளவில்லை.

அதேவேளை இவ் உண்ணாவிரதத்தில் நடிகர் விஜயகாந்தின் கட்சியினர் பெருமளவில் கலந்து கொண்டு சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டனர் என்றே பரவலாகப் பேசப்படுகிறது. திருமாவளவன் உள்ளிட்ட பல கட்சிகள் இதில் கலந்து கொண்டு தமிழக மக்களின் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவு உணர்வலைகளுடன் தம்மையும் அடையாளப்படுத்திக் கொண்டனர். தேர்தல் காலம் நெருங்கி வருவதால் தாங்கள் இலங்கைத் தமிழர் விடயத்தில் அந்நியமாகிப் போய்விட்டதாக மக்கள் கருதிவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க. எதிர்வரும் ஆறாம் திகதி சென்னையில் கூட்டம் நடத்துகிறது. அதேவேளை கருணாநிதியின் மகளான கனிமொழி பிரதமரைச் சந்தித்து ஏதோ முறைப்பட்டதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. இவைவெறும் போக்குக் காட்டுதல்களேயாகும்.

இவ்வாறு தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விடயத்தில் கட்சிகளுக்கிடையே ஒருமித்த நிலைப்பாடு கிடையாது என்பது தெளிவாகத் தெரிகிறது. எத்தகைய கொள்கையையும் கோரிக்கையையும் கொண்டிருப்பது என்பதில் அக்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. அதற்குக் காரணம் கட்சி அரசியல் ஊடாகப் பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளூராட்சி மன்றம் போன்றவற்றுக்கான தேர்தல், ஆட்சி அதிகாரம் என்பனபற்றிய நிலைப்பாடுகளேயாகும். ஆதலால் தத்தமது தேர்தல் வெற்றிகளை மையமாக வைத்தே இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவு நிலைப்பாடு வரையறை செய்யப்படுகிறது. அதேவேளை, தமிழகத்தின் மக்கள் மத்தியில் இலங்கைத் தமிழர்கள் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவது பற்றியும் இன்றைய கொடூர யுத்தத்தால் கடும் பாதிப்புக்கள் பெற்று வருவதும் பற்றிய அனுதாபங்களும் ஆதங்கங்களும் நிறையவே இருந்து வருகின்றன. ஆனால் இந்நிலையைச் சகல தமிழகக் கட்சிகளும் உணர்ந்து பொதுக் கோரிக்கை மூலமான ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி முன் செல்லத் தயாராக இல்லை. அவை சந்தர்ப்பவாத நிலைப்பாட்டைக் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதால் தமது வாக்கு வங்கிக்கு எவ்வளவு சேரும் என்றவாறே கணக்கிட்டுப் பார்க்கும் நிலையே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி மத்திய அரசை வற்புறுத்துவதில் தயக்கம் காட்டப்படுகிறது. இந்திய மத்திய அரசில் தமிழகத்திலிருந்து தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் என்பனவற்றின் பத்து அமைச்சர்கள் பதவி பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை எந்த வகையிலும் முக்கியம் இல்லை. பதவிகளே முக்கியத்திலும் முக்கியமானதாகும். தனது மகள் கனிமொழிக்கு அமைச்சர் பதவி பெறுவதற்கு தள்ளாத வயதிலும் டில்லிக்குப் பறந்து செல்லும் கருணாநிதிக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை எவ்வகையிலும் முக்கியமல்ல. அதனாலேயே "இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எனது நிலைப்பாடு மத்திய அரசின் நிலைப்பாடுதான்' என அண்மையில் முத்தமிழ் அறிஞர் எனப்படும் முதல்வர் கருணாநிதி கூறிய பின்பும் அவரிடம் எதிர்பார்க்க வேறு எதுவுமே இல்லை.

அதேவேளை, இந்திய மத்திய அரசு ஏன் மௌனம் சாதிக்கின்றது என்பதையிட்டு சிலர் கடும் ஆதங்கப்படுகிறார்கள். தமிழ்த் தேசிய வாதத்தை உயர்த்தி நிற்கும் சில கற்றறிந்தவர்கள் எனப்படுவோர் இப்பொழுதும் இந்திய மத்திய அரசின் எசமானர்களிடம் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருப்பது தான் பரிதாபகரமானதாகும். இன்றைய நிலையில் சென்னையில் காலூன்றி நின்று டெல்கியை நமது பக்கம் கொண்டு வருவதே இலங்கைத் தமிழரின் தந்திரோபாயமாக இருக்க வேண்டும் என எழுதும் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பட்டும் பட்டும் பட்டறிவு பெறாதவர்களாகவே உள்ளனர். இன்றும் கூட டெல்கியில் இருந்து எப்பொழுது அழைப்பு வரும் என்றே தமிழர் கூட்டமைப்பின் தலைவர்கள் காத்திருக்கின்றனர். இந்நேரத்தில் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி' என்றவாறே தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் இந்தியாவை நம்பி மோசம் போனார்கள். இப்போதும் கூட அந்த மாயையில் இருந்து விடுபடத் தயாராக இல்லை.

இது இந்திய ஆளும் வர்க்கத்தின் அடிப்படைக் கொள்கையினை விளங்கிக் கொள்ள மறுப்பதன் விளைவானதாகும். இந்தியா தென்னாசியப் பிராந்தியத்தின் ஆதிக்கம் மிக்க பிராந்திய வல்லரசாக விளங்குவதையே மூலோபாயமாகக் கொண்டு செயற்படுகிறது. இதன் விரிவாக்கம் முழு ஆசியாவிலும் மேலாதிக்கம் செலுத்தும் உள்நோக்குடன் முன் செல்வதாகும். இத்தகைய இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் பன்னிரண்டு சதவீதமான தமிழர்களுக்காக தொப்புள் கொடி உறவு, தமிழகத்து உணர்வலைகள் எனக் கூறிக்கொண்டு ஓடோடி வந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பது அறிவீனம் அல்லது முட்டாள் தனமானதாகும். இந்திய ஆளும் வர்க்கத்திற்கு முழு இலங்கையும் அதன் வளங்களும் தேவைப்படுகிறதே தவிர வடக்கு, கிழக்கு அல்ல. இதனையே கடந்த மூன்று தசாப்த காலத்தில் இந்திய மத்திய கொள்கை வகுப்பாளர்கள் தமது கொள்கை வகுப்பின் மத்திய புள்ளியாகக் கொண்டு செயற்பட்டு வந்துள்ளனர்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இந்தியா நேரடியாகச் சம்பந்தப்பட்டு தலையீடு செய்து வந்துள்ளது. இன்றைய யுத்தம் வரை தேசிய இனப்பிரச்சினையை நகர்த்தி வந்ததில் இந்தியாவின் பங்கும் பாத்திரமும் பற்றி ஆழ்ந்து அறிய ஒருவரால் முடியவில்லை எனின் அத்தகைய ஒருவரால் யதார்த்தத்தையும் உண்மைகளையும் அறிய முடியாது.

இலங்கையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதா அன்றி அமெரிக்க மேற்குலகம் செல்வாக்குப் பெறுவதா என்பதே தேசிய இனப்பிரச்சினை மூலமான கேள்வியாகும். இந்த விடயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் இயக்கங்களும் பிளவு பட்டு இருவேறு அணிகளாயின. அவை இரு தரப்புப் பின் புலங்களுடனேயே தமிழ் மக்களின் மத்தியில் அரசியல் நடத்தியும் வந்தன. இன்றும் இந்நிலை தொடர்வதைக் காண முடிகின்றது.

இவ்வாறான சூழலை சிங்கள பௌத்த பேரினவாத ஆளும் தரப்பினர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இந்தியாவிற்கு சாதகமற்ற நிலைப்பாட்டையே முன்னெடுத்து வந்தது. எவ்வாறாயினும் இந்திய ஆளும் வர்க்கத்தை மீறி முற்று முழுதான அமெரிக்க மேற்குலக நிலைப்பாட்டிற்குள் ஜே.ஆரால் செல்ல முடியவில்லை. அதன் பின் வந்த சந்திரிகா அம்மையார் மேற்குலகைப் பகைக்காமலும் இந்தியா எதிர்க்காமலும் ஆட்சி நடத்திச் சென்றார். அதேவேளை இனப்பிரச்சினையைக் கையாள்வதில் இந்திய அனுசரணையை வேண்டியே நின்றார். அதன் அடிப்படையிலேயே அவர் "சமாதானத்திற்கான யுத்தத்தையும்' நடத்தினார்.

அதன் பின் வந்த மகிந்த ராஜபக்ஷ தனது மகிந்த சிந்தனை ஊடாக இந்தியாவை இறுகப் பற்றுவதில் முன் எவரையும் விட உறுதி பூண்டவராகினார். பயங்கரவாதத்தை ஒழிக்கும் கடந்த மூன்று வருட யுத்தத்தில் இந்தியாவைத் தனது நம்பிக்கைக்குரிய பெரியண்ணன் ஆக்கிக் கொண்டார். ஆயுத விநியோகம் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ள முடிந்தது. அதேவேளை, இந்தியா தனது பொருளாதாரக் கொலனியாக இலங்கையை மாற்றுவதில் விரைந்து செயற்பட்டது. இலங்கை இந்திய வர்த்தக ஒப்பந்தம் தொட்டு திருகோணமலையில் எண்ணெய் சேமிப்பு தாங்கிகள், அனல் மின் நிலையம், மன்னாரில் எண்ணெய் அகழ்வு, காங்கேசன்துறை சீமெந்து ஆலை, பெற்றோல், டீசல் விநியோகம் உட்பட வேறும் பலதுறைகளில் இந்திய மூலதனம் இலங்கைக்குள் உட்புகுத்தப்பட்டுள்ளன. இந்நிலை மேலும் விரிவுபடுத்தப்பட்டும் வருகின்றன.

இன்று இந்திய மூலதனம் எங்கும் தமது கரங்களை விரிவாக்கி வருகிறது. அத்துடன் சந்தை தேடும் போட்டியில் இறங்கி நிற்கிறது. இந்தியப் பெரும் முதலாளிகளுக்கு முதலீடுகளும் சந்தை வாய்ப்புகளுமே முக்கியமானவைகளாகும். அதற்கு இடைஞ்சல் தரக் கூடிய எவற்றையும் அவர்கள் நிராகரிப்பார்கள் எதிர்பார்கள். இதனை மையமாக வைத்தே மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் தமது முடிவுகளை நிலைப்படுத்திக் கொள்வார்கள். இத்தகைய பொருளாதார அடிப்படை நலன்களைத் தான் அமெரிக்க, மேற்குலக, ஜப்பானிய ஆளும் வர்க்கத்தினரும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இத்தகைய இருதரப்பு பொருளாதார அரசியல் போட்டிக்குத் தமிழர் பிரச்சினை பலியாகி வருகிறது என்பதை மறைக்க முடியாது.

இத்தகைய நிலையில் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளுக்கும் வாழ்வுரிமைகளுக்கும் இந்தியாவின் மத்திய அரசை நம்புவதை விட வேறு முட்டாள்தனம் இருக்க முடியாது. மாநிலக் கட்சிகள் இலங்கைத் தமிழர்கள் சார்பாக எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும் இலங்கையில் தமிழர் தலைமைகள் எவ்வளவிற்கு இந்திய மத்திய அரசை விசுவாசத்துடன் எதிர்பார்த்தாலும் அவர்கள் தமது பிராந்திய மேலாதிக்க நிலையில் இருந்து ஒரு போதும் மாறப்போவதில்லை. அதுவே இந்தியாவின் மௌனத்திற்குக் காரணமாகும். முன்பு கிழக்கில் யுத்தம் முன்னெடுக்கப்பட்டவேளை இந்தியா இதே மௌனத்தையே கடைப்பிடித்தது. இன்றும் அதையே செய்கிறது. வடக்கும் கிழக்கைப் போல் விடுவிக்கப்படுவதால் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று மகிந்த சிந்தனை அரசாங்கம் நம்பவது போல் இந்தியாவும் நம்புகின்றது. ஆனால், எந்த நம்பிக்கையும் ஈடேற யதார்த்த நிலைமைகள் இடம் தருமா என்பதே இன்றுள்ள சிக்கல் நிலையாகும்.

www.thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.