Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !

Featured Replies

ஐரோப்பியர்களின் நாகரீகம் எங்கே தோன்றியது என்று கேட்டால், கிரேக்கத்தை காட்டுவார்கள். கிறிஸ்துவுக்கு முன், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முழு ஐரோப்பிய கண்டத்திலும் கிரேக்கர்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்தை பெற்றிருந்தனர். இருப்பினும் அன்றைய கிரேக்கர்கள், பிற ஐரோப்பியருடன் எந்த தொடர்பையும் வைத்திருக்க விரும்பவில்லை. ஆமாம், அப்போதும் நாகரீகமடையாத காட்டுமிராண்டி சமூகமாக, குகைகளுக்குள் குடியிருந்து, காட்டுப்பன்றிகளை வேட்டையாடிக் கொண்டிருந்த ஐரோப்பிய இனக்குழுக்களுடன் இராஜதந்திர உறவு வைத்துக்கொள்ள முடியுமா? அதே நேரம் கிரேக்கர்கள் தமது அயலில் இருந்த பிற நாகரீகமடைந்த சமூகங்களோடு நெருக்கமான உறவை கொண்டிருந்தனர். பண்டைய கிரேக்கர்கள் மதிப்புக் கொடுத்த நாகரீகமடைந்த சமூகங்களில் சில, ஆப்பிரிக்காவில் இருந்தன!

நான் கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது, ஏதென்ஸ் நகர அருங்காட்சியகத்தில், ஆப்பிரிக்க கறுப்பினப் பெண்களைப் போல உருவத்தோற்றமுடைய சிற்பங்கள் சில இருந்ததை கண்டேன். எனக்கு அதை விட ஆச்சரியமளித்த விடயம், ஐரோப்பிய சரித்திர பாடநூல்கள் எதுவும் கிரேக்கம் ஆப்பிரிக்காவுடன் கொண்டிருந்த தொடர்பைப் பற்றி குறிப்பிட்டிருக்காதது. அது சரி, அனைத்து ஐரோப்பியர்களும் தமது “நாகரீகத்தின் தொட்டில்” என்று பெருமைப்படும் கிரேக்கத்தில், ஆப்பிரிக்க நாகரீகத்தின் செல்வாக்கு இருந்தது என்ற உண்மை, இலகுவில் ஜீரணிக்கக் கூடியதா?

அன்றைய உலகம் வேறுவிதமாக இருந்தது. பண்டைய நாகரிக கால மக்களுக்கு கருப்பு/வெள்ளை நிற வேறுபாடு கண்ணுக்கு புலப்படவில்லை. யாருமே தோல் நிறத்தை ஒரு விடயமாக கருதவில்லை. இதனால், அன்றைக்கு இருந்தது “வெள்ளையின நாகரீகமா”, அல்லது “கறுப்பின நாகரீகமா” என்று வேறுபடுத்திப் பார்ப்பது அவ்வளவு இலகுவானதல்ல. எகிப்தில் இருந்த பரோவா மன்னர்கள் இராச்சியம், செந்நிற மேனியரைக் கொண்டிருந்தது, என இன்றைக்கும் சில சரித்திர/அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே காலட்டத்தில், தெற்கே குஷ் இராசதானியை (இன்று சூடான்) சேர்ந்த கருநிறமேனியரான நுபியர்கள், அவ்வப்போது எகிப்திய ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த உண்மைகள் தற்போது வெளிவருகின்றன. அன்றைக்கிருந்த எகிப்தை இந்தியாவிற்கு ஒப்பிடலாம். ஒரே குடும்பம், பல நிற மேனியரைக் கொண்ட உறுப்பினரைக் கொண்டிருப்பது சகஜமானது. இன்றும் கூட பண்டைய எகித்திய ஓவியங்களில், கருநிற மேனியரின் உருவங்கள் வரையப்பட்டிருப்பதை காணலாம்.

நுபியர்களின் குஷ் இராச்சியம், எகிப்தின் தங்கச் சுரங்கம் எனக் கூறினால் மிகையாகாது. நுபிய சுரங்கங்கள் வருடமொன்றிற்கு நாற்பதாயிரம் கிலோகிராம்(இன்றைய மதிப்பில்) தங்கத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. கறுப்பின நுபியர்கள், எகிப்திய மத, மொழி, கலாச்சார அடையாளங்களை பின்பற்றினர். சூடான் முதல் சிரிய எல்லை வரை நுபியர்கள் ஆட்சி செய்த காலம் ஒன்றுண்டு. எகிப்தியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கடவுட்கோட்பாடான அமோன் (கிறிஸ்தவர்கள் இதனை “அமென்” என்று இன்றும் நினைவுகூருகின்றனர்) என்ற சூரிய தேவன் வழிபாட்டையும் அறிந்து வைத்திருந்தனர். நான் எகிப்தில், லுக்ஸொர் நகரில் உள்ள கார்னாக் ஆலயத்திற்கு சென்றிருந்த போது, எகிப்தியரின் வழிபாட்டு முறை இந்துக் கோயில்களை ஓரளவு ஒத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்துக் கோயில்களில் இருப்பதைப் போல மூலஸ்தானம், தூண்கள் மட்டுமல்ல, சாமி சிலைகளை குளிப்பாட்டும் தீர்த்தக்கேணி எல்லாம் அப்படியே இருந்தன. அந்தக் காலத்தில் மன்னர் அல்லது பிரபுக்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் போக அனுமதி இருந்தது. உழைக்கும் மக்கள் கோயிலுக்கு வெளியே நின்று தான், சாமி கும்பிட முடியும். உண்மையில் பண்டைய காலத்தில் நிலவிய வர்க்கப்பிரிவினை தான், பின்னர் இந்திய சமுதாயத்திலும் சாதிப்பிரிவினையாக தொடர்ந்திருக்க வேண்டும். இந்திய, ஆப்பிரிக்க சமூகங்களுக்கிடையிலான கலாச்சார ஒற்றுமை இதைப்போல நிறைய உள்ளன.

பிற்காலத்தில் அந்நியரின் படையெடுப்புகள் காரணமாக, எகித்திய, நுபிய நாகரீகங்கள் அழிந்து போனாலும், அதற்குப் பிறகு தோன்றிய “சூடானிய நாகரீகம்”, கிழக்கே செங்கடல் முதல் மேற்கே அட்லாண்டிக் சமுத்திரம் வரை பரவி இருந்தது. இந்த நாகரீகத்தின் சிறப்பம்சம் என்னவெனில், அப்போது நிலப்பிரபுத்துவ முறை நிலவவில்லை. மாறாக இன்று எமக்கெல்லாம் பரிச்சயமான அரச கரும ஊழியர்களைக் கொண்ட அதிகார வர்க்கம் இருந்தது. கடவுளுக்கு அடுத்த சர்வவல்லமை பெற்ற மன்னன், இந்த அரச ஊழியர்களை நியமிக்கவோ, பணிநீக்கம் செய்யவோ அல்லது பதவி உயர்வு கொடுக்கவோ முடியும். அதனால் குறிப்பிட்ட எந்த குடும்பமும் அதிகாரத்தை பரம்பரையாக பின்பற்ற முடியாது. நல்லது, மேற்குலகம் எதிர்பார்ப்பதைப் போல “பல கட்சி ஜனநாயகம்” (இது ஐரோப்பாவிலேயே 19 ம் நூற்றாண்டில் தான் வந்தது) அப்போது ஆப்பிரிக்காவில் இருக்கவில்லைத் தான். ஆனால் ஒரு கிராமத்தின் தலைவனைக் கூட மக்கள் தெரிவு செய்யும் நேரடி ஜனநாயகம் நிலவியது. இதைத்தான் கடாபி, அவ்வப்போது மேற்குலகிற்கு எடுத்துக் காட்டுவது வழக்கம். “ஆப்பிரிக்கர்களான நாங்கள் ஜனநாயக பாரம்பரியத்தில் வந்தவர்கள். எமக்கு புதிதாக பாடம் நடத்த தேவையில்லை.”

கி.பி. ஏழாம் அல்லது பத்தாம் நூற்றாண்டளவில், எகிப்து வழியாக கிறிஸ்தவ மதம் எத்தியோப்பியா வரை பரவி இருந்தது. எத்தியோப்பியாவில் “அக்சும்” என்ற கிறிஸ்தவ சாம்ராஜ்யம் தோன்றியிருந்தது. செங்கடலை தாண்டி யேமனை ஆக்கிரமிக்குமளவு இராணுவ பலம் பெற்று விளங்கியது. (யேமன் நாட்டில் கூட ஆப்பிரிக்க செல்வாக்கு இருந்துள்ளது. பைபிளில் வரும் புத்திசாதுர்யம் மிக்க யேமன் அரசி ஷீபா, யேமனை சேர்ந்த கறுப்பின அழகி.) அக்சும் நாட்டில் சாப்பாட்டுத்தட்டுகள் கூட தங்கத்தில் அல்லது வெள்ளியில் செய்யப்பட்டிருந்தமை, அதன் செல்வச் செழிப்பிற்கு சாட்சி. எத்தியோப்பியாவில் யூத மதமும் பரவி இருந்தது. அதனால் சடங்குகள் சில கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் பொதுவாக இருக்கின்றன. உதாரணமாக, யூதர்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் சுன்னத்து செய்துகொள்ளும் வழக்கம், அந் நாட்டில் இப்போதும் நடைமுறையில் உண்டு. கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அரேபிய-முஸ்லீம் படையெடுப்புகளால், ஆப்பிரிக்காவின் வட பகுதி முழுவதும் இஸ்லாம் பரவிய காலத்தில் மட்டுமல்ல, பிற்காலத்தில் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளையும் எத்தியோப்பியா வெற்றிகரமாக எதிர்த்து நின்று, தனது இறையாண்மையை காப்பாற்றிக் கொண்டது. ஆமாம், பீரங்கிகளோடு படையெடுத்த ஐரோப்பியர்களை, புராதன கால ஆயுதங்களோடு எதிர்த்து போரிட்டு, ஆப்பிரிக்காவில் காலனிப் படுத்தப்படாத ஒரேயொரு நாடு என்ற பெருமையைப் பெற்றது எத்தியோப்பியா.

ஐரோப்பியர்கள் தமது நாகரீகத்தின் தொட்டில் கிரேக்கம் என்று கூறுவது போல, ஆப்பிரிக்கர்களுக்கு அவர்களது நாகரீகத்தின் தொட்டில், எத்தியோப்பியா. அதனால் தான் எத்தியோப்பியாவின் பண்டைய மூவர்ணக்கொடியை, “அகில ஆப்பிரிக்க ஒன்றியக்” கொடியாக, பல நாடுகளால் சுவீகரிக்கப்பட்டது. கிறிஸ்துவுக்கு பின் ஐரோப்பியக் கண்டத்தில், தனது ஆரம்பக்காலத்தில் இத்தாலியிலும், கிரேக்கத்திலும் கூட பரவுவதற்கு பெரும் சிரமம் எடுத்துக்கொண்டிருந்த காலங்களில்; எத்தியோப்பியா கிறிஸ்தவ நாடாக ஏற்கனவே மாறிவிட்டிருந்தது. அது மட்டுமல்ல, பிற ஐரோப்பிய பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக நடைபெற்ற போர்களில், எத்தியோப்பியாவை சேர்ந்த கருப்பு வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.

அதே காலகட்டத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய மதம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. மொரோக்கொவை சேர்ந்த இஸ்லாமிய சக்கரவர்த்தி ஸ்பெயின், பிரான்ஸ் மீது படையெடுத்த போது, அந்தப் படையிலும் கறுப்பின வீரர்கள் கணிசமான அளவில் இருந்தனர். அந்தக் காலத்தில் உலகம் கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இரு வேறு மதங்களைச் சேர்ந்த முகாம்களாக பிரிந்து நின்றது. ஒருவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது தான் முக்கியமாக பார்க்கப் பட்டதே தவிர, தோலின் நிறம் கருப்பா, சிவப்பா என்று யாரும் அக்கறைப்படவில்லை. அன்று “ஐரோப்பாவில் நிலவிய அடிமை முறை சமுதாயம் ஒழிந்து, நிலப்புரபுத்துவ சமுதாயம் உருவான வரலாற்றில் முற்போக்கான பாத்திரத்தை கிறிஸ்தவ மதம் ஏற்றிருந்ததை” கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுள்ளார். அந்த இடத்தில் இஸ்லாமையும் குறிப்பிடலாம். அன்று தனித்தனி இனக்குழுக்களாக (ரோமர்/கிரேக்கர் பார்வையில் காட்டுமிராண்டி சமூகமாக) இருந்த ஐரோப்பியரை (ஒரு உலக மதத்தின் கீழ்) நாகரீகப்படுத்தும் முக்கியமான வரலாற்றுப்பணியை ஆப்பிரிக்கர்கள் ஏற்றிருந்தனர்! அதாவது வரலாற்றாசிரியர்கள் கூறுவதற்கு மாறாக, ஆப்பிரிக்கர்கள் தான் இருண்ட ஐரோப்பாவை கண்டுபிடித்தார்கள்!!

ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர், ஆப்பிரிக்கர்கள் இராச்சியங்கள் இல்லாத இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்து வந்ததாக மாபெரும் வரலாற்றுப் புரட்டு பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றது. உலகின் எந்தவொரு பகுதியும் ஒரே காலத்தில் வளர்ச்சியடைவதில்லை. ஏற்றத்தாழ்வான வளர்ச்சி எங்கேயும் இருந்து வரும். ஐரோப்பியர்கள் காலனிப்படுத்த தொடங்கிய, மேற்கு ஆப்பிரிக்காவின் கினிய கரைப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள், புராதன இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்து வந்த உண்மையை மறுக்க முடியாது. ஆனால் அதேநேரம் தெற்கே இருந்த கொங்கோ சாம்ராஜ்யம் பற்றி, 16 ம் நூற்றாண்டில் ஒரு போத்துக்கேய மாலுமி குறிப்பெழுதி வைத்துள்ளார். “மக்கள் பட்டாலான ஆடைகளை உடுத்தியிருந்ததாகவும், இருபாலாரும் ஆபரணங்களை அணிந்திருந்ததாகவும்” அந்த குறிப்புகளில் காணக்கிடைக்கின்றது. வடக்கே இருந்த கானா சாம்ராஜ்யம் மிகப் பலத்தோடும், செல்வத்தோடும் இருந்ததாக அரேபிய சரித்திர ஆசிரியர்கள் எழுதிவைத்துள்ளனர். அந்தக்காலத்திலேயே கானா தங்கம் விளையும் நாடாக, அரேபியரால் அறியப்பட்டது. கானா சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியில், மாலியில் புதியதொரு சாம்ராஜ்யம் தோன்றியது. அதன் தலைநகரமான திம்புக்டு பிரதான வர்த்தக மையமாக புகழ் பெற்று விளங்கியது. 1324 ம் ஆண்டளவில், மாலி நாட்டு அரசன் மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்டு, எகிப்து வந்து சேர்ந்திருந்த போது, மூன்று வருடங்களுக்கு தங்கத்தின் விலை குறைந்திருந்ததாக எகிப்திய சரித்திர ஆசரியர் இபுன் கல்டூன் எழுதிவைத்துள்ளார். மாலி அரசனுடன் கூட வந்த 300 அடிமைகள், ஆளுக்கு ஒரு கிலோ அளவிலேனும் தங்கம் கொண்டு வந்ததைப் பார்த்து, அந் நாடு எவ்வளவு செல்வச் செழிப்பானது, என்று அரேபியர்கள் வியந்துள்ளனர்.

பண்டைய ஆப்பிரிக்கா செல்வத்தில் மட்டுமல்ல, கல்வியிலும் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாலி நாட்டில், திம்புக்டு நகரில் இப்போதும் நிலைத்து நிற்கும், சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட, பல்கலைக்கழகமும், நூலகமும் அதற்கு சாட்சி. பிற்காலத்தில் மொரோக்கோவில் இருந்து படை எடுத்து வந்து ஆக்கிரமித்த மூர்கள், நூலகத்தை எரியூட்டி, அங்கேயிருந்த நூல்களை கொள்ளையடித்து சென்றனர். இப்போதும் அங்கே கொள்ளையடிக்கப்பட்ட நூல்கள் சில மொரோக்கோவில் உள்ளன. ஆப்பிரிக்கர்களின் கல்விச்செல்வங்கள், எகிப்தில், அலெக்சாண்டிரியா நகர நூலகத்திலும் வைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துவுக்கு முன், உலகில் இருந்த மாபெரும் நூலகம் அது. அங்கிருந்த நூல்கள் பாபிருஸ் (இதிலிருந்து “பேப்பர்” வந்தது) தாவரத்தில் இருந்து தயாரித்த தாள்களில் எழுதப்பட்டிருந்தன. கிரேக்கத்திலிருந்து சோக்ரடீஸ் போன்ற தத்துவ அறிஞர்கள் கூட அந்த நூலகத்தை பயன்படுத்தி இருக்க சாத்தியமுண்டு. அத்தகைய பிரசித்தி வாய்ந்த நூலகத்தை, கிளியோபாட்ரா(பூர்வீகம்:கிரேக

்கம்) காலத்தில் ஆட்சி செய்த ரோமர்கள் “தற்செயலாக” எரித்து விட்டனர். அங்கிருந்த கிடைத்தற்கரிய நூல்கள் யாவும் எரிந்து சாம்பராகின.

மனித குலத்தின் கண்டுபிடிப்புகளுக்கு, குறிப்பிட்ட ஒரு இனம் உரிமை கோருவது அயோக்கியத்தனமானது. ஆப்பிரிக்காவில் எகிப்தில் இருந்து கிரேக்கர்கள் கற்றுக்கொண்ட கணித, விஞ்ஞான கோட்பாடுகள் பல அன்றைய ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நீண்டகாலத்திற்கு பிறகு, அரேபியரால் மேம்படுத்தப்பட்ட அதே கோட்பாடுகளை, ஐரோப்பியர்கள் தாமதமாக அறிந்து கொண்டனர். இவற்றையெல்லாம் ஐரோப்பியர்கள் தாமே கண்டுபிடித்தது போல, பாடசாலைகளில் கற்பிக்கின்றனர். அது உண்மையென்று நம்பும் ஆப்பிரிக்கர்களும் இருப்பது வேதனைக்குரியது. அங்கே மட்டுமல்ல, ஆசியாவிலும் இது தான் நடந்தது. உலகம் முழுவதும் திருடியதை, தனது சொத்தென்று உரிமை பாராட்டுவது, அதையே விற்பனைச் சரக்காக்குவது, இவற்றில் எல்லாம் ஐரோப்பியர்கள் வல்லவர்கள். அதில் மட்டுமல்ல, இனவாதம், நிறவாதம் என நாகரிக உலகம் வெறுக்கும் அரசியல் கொள்கைகளை கண்டுபிடித்து, அதை ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, ஒருவரோடு ஒருவர் மோத விட்டு வேடிக்கை பார்ப்பதிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள் தான். இரத்தம் சிந்தும், இன்றைய இன/மத பிரச்சினைகள் பல ஐரோப்பிய காலனியகாலத்தில் உருவானவை, என்பதை யாராலும் மறுக்க முடியாது.

– தொடரும் –

வினவு தளத்திலிருந்து:http://vinavu.wordpress.com/2009/02/16/africa3/

இதன் மறுமொழிகள் http://vinavu.wordpress.com/2009/02/16/africa3/#respond

தொடர்புடைய பதிவுகள்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1

காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.