Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கைதிகளை விடுதலை செய் அல்லது விசாரணை செய் – க.தேவதாசன் சிறையிலிருந்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் கைதிகளை விடுதலை செய் அல்லது விசாரணை செய் – க.தேவதாசன் சிறையிலிருந்து

பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தமிழ் மக்களையும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து வடக்கு – கிழக்கையும் விடுதலை செய்துவிட்டதாக சிறீலங்கா தனக்கு தானே புகழாரம் சூட்டி மகிழ்கிறது. ஆனால் மகிழும் நிலையில் தமிழ் தேசியம் இல்லை. இது தேர்தல் காலமாகையால் தமிழர் தாயகத்தைக் குறிவைத்து வாக்கு வேட்டைக்காக பேரினவாதிகள் படையெடுக்கின்றனர்.

வெற்றுவாக்குறுதிகளைச் சரமாரியாக அள்ளி வீசுகின்றனர். இத்தேர்தல் மூலம் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழர்களின் உரிமை உணர்வை உரசிப்பார்க்கப்போகிறார்களாம்.

இப்பொழுது பேரினவாதம் சமாதான சகவாழ்வு பற்றி பிரசங்கம் செய்கிறது. ஆண்டானுக்கும் அடிமைக்குமிடையில் சமாதான சகவாழ்வு ஒருபொழுதும் இருக்கமுடியாது. இணக்கப்பாட்டு அரசியல் என்பது இருதரப்பில் இருந்தும் வரவேண்டும்.

மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தமை, அவர்களில் கணிசமானேரைப் பலவந்தமாக நாடு கடத்தியமை, ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டுவந்தமை, பல்கலைக்கழக அனுமதிக்குத் தரப்படுத்தலை அறிமுகப்படுத்தியமை, காலத்துக்கு காலம் இனக்கலவரத்தை கட்டவிழ்த்து விட்டமை, தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுவியமை, யாழ்பாண நூலகத்தை எரித்தமை, யுத்தத்தின் பெயரால் சுமார் இரண்டு இலட்சம் அப்பாவித் தமிழரை கொன்று குவித்தமை உட்பட சிங்களப் பேரினவாதத்தின் கடந்த ஆறு தசாப்த காலத் தமிழின விரோத வெறியாட்டத்தை நீண்ட பட்டியலிடலாம்.

இவ்வளவும் நடந்துவிட்ட பிறகும் இப்பொழுதுகூட அரசியல் இணக்கப்பாடு சாத்தியம்தான். ஆனால் இது நிகழவேண்டுமாயின் இதற்கு இடையூறாக இருந்துவரும் சிங்கள பேரினவாதம் சாகவேண்டும். அதாவது சிறீலங்காவின் சிந்தனையும் சொல்லும் செயலும் முழுமையாக மாறவேண்டும்.

அறுபது ஆண்டுகளுக்குமுன் இணக்கப்பாட்டு அரசியலை தமிழ்தேசியம் வெளிப்படுத்தியது. பேரினவாதம் அன்று அதை அலட்சியப்படுத்தியது. துன்பின்னர் அகிம்சை போராட்டத்தைத் தமிழ் தேசியம் ஆரம்பித்தது. அரச பயங்கரவாதத்தைப் பிரயோகித்துப் பேரிளவாதம் அதனையும் நசுக்கியது.

இதனையடுத்தே மாற்றுவழியின்றித் தமிழ் தேசியம் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தது. இதுவே இலங்கைத் தீவின் இனவிவகார வரலாறு. இதையாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆனாலும், ஆயுதபோராட்டத்திற்கு வழிகோலிவிட்ட பேரினவாதம், ‘தமிழ்ப் பயங்கரவாதம்’ என அதற்கு பெயர் சூட்டி தனது வரலாற்றுத் தவறை மூடிமறைக்க முயன்றது.

தமிழ் தேசியத்தின் தன்னுரிமைப் பொரில் ஆயுதமேந்தியோர் மற்றும் அதற்கு உதவிசெய்தோரைப் பயங்கரவாதிகள் என்ற பெயருடன் சிறீலங்கா பிடித்து வைத்திருக்கிறது. விளக்கமறியலில்லா பலநூறுபேரும் தடுப்பு காவலில் பலஆயிரம் பேரும் உள்ளனர். இவ்விதம் கைது செய்து அடைத்துவைத்திருப்போரைத் தனிப்பட்ட சட்டவிரோதிகளாகக் குற்றஞ்சுமத்தித் தண்டிக்க சிறீலங்கா விரும்புகிறது. இந்நடைமுறை பேரினவாதிகளின் பழிவாங்கும் மனநிலையை தெட்டத்தெளிவாகப் பறைசாற்றுகிறது.

சட்ட நீதியின் சுதந்திரத்தன்மை பற்றியும், அதில் அரசின் தலையிடாத்தன்மை பற்றியும் சிறீலங்கா இன்று உலக அரங்கில் உரத்துப்பேசுகிறது. அதேவேளை , ‘யுத்தத்தில் வென்றதைப்போலத் தமிழ் மக்களின் மனதையும் வெல்லவேண்டும்’ என்று உள்ளுரில் உருக்கமாகப் பேசுகிறது. இதுதான் பேரினவாதத்தின் சந்தர்ப்பவாதம். தமிழ் தேசியத்தின் எதிர்காலம் என்பது பேரினவாதம் போடும் பிச்சையல்ல. சுமாதானம், சகவாழ்வு, அரசியல் இணக்கப்பாடு என்பன மீத சிறிலங்காவுக்கு உண்மையான பற்றிருந்தால், அதை செயலில் காட்டவேண்டும். பயங்கரவாதிகள் என்ற பெயருடன் சிறீலங்கா சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாடும் அரசியல் கைதிகள் விடயத்தில் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவேண்டும். சட்ட நீதி பற்றிக் கதையளப்பதையும் கைவிட வேண்டும்.

அவசியப்பட்ட பொழுதெல்லாம் ஆட்சியாளருடன் அநுசரித்துப்போக சிறீலங்காவின் சட்டநீதி என்றாவது தயங்கியதுண்டா? தேடப்பட்ட காலத்தில் தப்பியோடிய Nஐவிபி யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மீண்டும் அரசியல் செய்வதற்காக இலங்கைக்குத் திரும்பிவர உடன்பட்டமை, தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த கைதிப் பரிமாற்றத்தில் ஈடுபட்டமை, கடவுச்சீட்டு மோசடியில் கைதாகி லண்ட்டன் சிறையில் ஆறுமாதம் அடைபட்டு திரும்பிய கருணாவுக்கு அமைச்சர் பதவி வழங்கியமை என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆள்வோரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு சிறீலங்காவின் சட்ட நீதி அனுமதிதர மறுத்ததுண்டா? வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்படுவதை சிறீலங்கா விரும்புகிறதா? அது உண்மையில் அடைத்து வைத்திருக்கும் அரசியல் கைதிகள்’ அனைவரையும் அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகவே விடுதலை செய்யவேண்டும்! இதே காரணத்தின் நிமித்தம் நீதிமன்றத்தீர்ப்பின் பிரகாரம் தண்டனை அனுபவித்து வருவோரையும் இதுபோல விடுவிக்கவேண்டும்.!

உலக விவகாரங்களில் முக்கிய காலகட்டங்களில் சிறீலங்கா துணிச்சலான முடிவுகளை எடுத்து சர்வதேசத்தின் மத்தியில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்திருப்பது என்னவோ உண்மைதான். முழு ஆசியாவையும் ஆக்கிரமிக்க ஆசைப்பட்ட ஹிட்லரின் கூட்டாளியான யப்பான் தேசம் ‘மன்னிக்கப்படவேண்டும்’ என்று சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் வாதாடிய வென்றதாம் சிறீலங்கா.

இலங்கைத் தீவை அடிமைப்படுத்தப்போர் தொடுத்த அந்நிய இனத்தவரை அன்று மன்னித்த சிறீலங்கா, இலங்கைக்குள் அடக்குமுறைக்கெதிராகப் போர் தொடுத்த அயல் இனத்தவரை இன்று தண்டிப்பது ஏன்?. இது எந்தவகை நீதி? உலக அரங்கில் நல்ல பிள்ளை வேடம் போடும் சிறீலங்கா உள்ளுரில் தனது பேரினவாதப் போக்கை கைவிடத் தயாரா? மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

*******************************************

விடுதலை செய் அல்லது விசாரணை செய் எனும் கோரிக்கையை முன் வைத்து கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 130 பேர் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தம்மை விசாரணைகளுக்கு உட்படுத்தவேண்டும் அல்லது விடுதலை செய்யவேண்டும் எனக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தப் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த முதலாம் திகதி முதல் செய்து வரும், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவுப் பணிப்பாளரான கரவெட்டியைச் சேர்ந்த கனகசபை தேவதாசன் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இறுதியான போராட்டமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த குறித்த அரசியல் கைதி, `தண்ணீர்` கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

(கனகசபை தேவதாசன் தனது நிலைப்பாட்டை விளக்கி நீதி அமைச்சுக்கு 21, நவம்பர் 2009ல் அனுப்பிய கடிதம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. )

K Thevathasan

No: 9544, J/Ward

New Magazine Prison

Colombo- 09

21-11-2009

To:

The hon.Milinda Moragoda

The hon minister of Justice

Ministry Of Justice

Superior Courts Complex

Colombo-12

கெளரவ அமைச்சர் அவர்கள்,

க.தேவதாஸன் வயது 52 விளக்கமறியல் கைதி இல: 9544 “03-12-2009 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்”

கனகசபை தேவதாஸன் ஆகிய நான் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கச் சந்தேக நபராக கடந்த 17 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன். எனது நிலைப்பாட்டை விரிவாக எழுதி 26-08-2009ல் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பினேன். சிறைச்சாலை நிர்வாகத்துக்கூடாக 12-11-2009ல் தங்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினேன்.

“என்மீதான சட்டநடவடிக்கை தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும்” என்பதே எனது கோரிக்கை. கடந்த யூலை மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான 4 மாத காலத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் வெற்று வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டேன்.

கடைசித் தடவையாக நீர் மற்றும் உணவு உட்கொள்ளாமல் 15-10-2009ல் ஆரம்பித்து 11 நாட்கள் தொடர்ந்து எனது உண்ணாவிரதத்தை 25-10-2009ல் நிறைவ செய்தேன். கெளரவ நீதி அமைச்சரான தங்களின் விசேட தகவலுடன் அன்றைய தினம் சிறைச்சாலைக்கு வந்து என்னை சந்தித்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்குறுதியை நம்பி உணவு உட்கொள்ள ஆரம்பித்தேன் ஆனால் எனது கோரிக்கை இம்முறையும் நீதித்துறையால் முற்றாக அலட்சியம் செய்யப்பட்டுள்ளது.

எனவே நீதித்தறை மீது எனக்கு எழுந்துள்ள சந்தேகத்தை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்:

1.

08-09-2009, 16-09-2009, 30-09-2009 ஆகிய திகதிகளில் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு சிறையிலிருந்து சென்று வந்தேன். எனது கைதுடன் சம்பந்தப்பட்ட வேறு ஆட்களின் பெயர்களும் சந்தேக நபர்களாக அந் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டன. ஆனால் அவர்களில் யாரும் அங்கே சமூகமளிக்கவில்லை. நான் அழைக்கப்பட்டது ஏன் என்பது பற்றியோ சமூகமளிக்காத மற்றவர்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றியோ இன்றைவரை எனக்கு எதுவுமே தெரியாது. இதற்கு பின்னர் B 1927/2008 என்ற அதே வழக்கு இலக்கத்தில் 14-10-2009, 28-10-2009, 05-11-2009, 11-11-2009, 16-11-2009 ஆகிய திகதிகளில் வெலிக்கடை விசேட நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று வந்தேன் எனது பெயர் மட்டுமே இங்கு அழைக்கப்பட்டது. என்மீதான நீதி துறையின் நிலைப்பாடு என்ன என்று அறிய ஒவ்வொரு தடவையும் நான் கேள்வி எழுப்பிய போதிலும் இந்நீதிமன்றம் எனக்குப் பதில் தரவில்லை.

2.

B148/2008 என்ற ஒரு புதிய வழக்கு இலக்கத்தில் 04-11-2009, 18-11-2009 ஆகிய தினங்களில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்று வந்தேன். இதில் என்னுடன் எவ்வகையிலும் சம்பந்தமேயில்லாத செல்லையா சரத்குமார் என்ற யாரோ ஒரு நபரின் பெயருடன் எனது பெயர் இணைக்கப்பட்டது ஏன்? இதைச் செய்தது யார்? எதற்காக இப்புதிய வழக்கு பதிவு செய்ய்பபட்டுள்ளது? இவை பற்றியும் இற்றைவரை எனக்கு எதுவுமே தெரியாது.

3.

2008யூன் மாதம் தொடக்கம் சுமார் 15 மாதகாலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைத்தேன். தமிழீழ விடுலைப்புலிகள் இயக்கத்துடனான எனது தொடர்பை ஒத்துக்கொண்டு 26-08-2009ல் கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் வாக்கு மூலம் அளித்தேன். எனக்கு எதிரான வழக்கில் நான் எதிர்த்து வழக்காடப் போவதில்லை என்றும் இவ்வாக்கு மூலத்தில் உறுதியளித்தேன். அப்படி இருந்தும் என்மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் தாமதம் காட்டப்படுவதன் காரணம் என்ன? எனது தரப்பில் சட்டத்தரணியை நான் நியமிக்கப் போவதில்லை. அப்படியாயின் என் மீதான சட்ட நடவடிக்கை தொடர்பான நிலைவரத்தை நீதித்துறையிடமிருந்து நான் எவ்வாறு அறிவது? அல்லது அறியவே முடியாதா?

4.

கல்கிசை வெலிக்கடை மற்றும் கோட்டை நீதிமன்றங்களில் சிங்கள மொழியிலேயே நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் அவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இரு மொழிகளுக்கும் சம இடம் வழங்கும் வகையில் இலங்கையில் அரசியல் யாப்பில் 16வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரசியல் யாப்பின் 24ம் 25ம் சரத்துகள் இம்மொழி உரிமையை உத்தரவாதம் செய்கின்றன. ஆனாலும் “சிங்களம் மட்டும்” என்பதே நடைமுறையாகவுள்ளது. எனது வழக்கு தொடர்பான நீதித்துறையின் ஆவணம் மற்றும் அறிவித்தல் யாவும் தமிழ்மொழியிலேயே தரப்படல் வேண்டும் எனக்கெதிரான வழக்கும் தமிழ்மொழியிலேயே நடைபெறவேண்டும். இது நடைபெறுமா? அல்லது இம்மொழி விவகாரம் என்மீதான சட்ட நடவடிக்கை மேலும் தாமதமாவதற்கு இன்னுமொரு காரணமாகிவிடுமா?

“சட்டம் என்பது கணத்திற்கு கணம் நிகழும் மனித மனமாற்றத்தை உணர்ந்து உள்வாங்கும் திறனற்றது. சித்தார்த்தன் கெளதம புத்தரானதைக் கிரகிக்கும் சக்தி சட்டத்திற்கு கிடையாது. இலங்கையின் இனவிவகாரத்தின் தோற்றுவாய் பற்றி அறிவதில் சட்டத்திற்கு என்ன? அக்கறை? பிரித்தாளும் கொள்கையே பிரிவினை உணர்வின் ஆதிமூலம் என்பதை சட்டம் எவ்வாறு அறியும்? இன்று என்னையும் என் போன்றவர்களையும் சட்ட விரோதிகளாக இனங்காண்பதைத் தவிர சட்டத்தால் வேறேன்ன செய்ய முடியும்?

சட்டத்தாலும் அதனைப் பிரயோகிக்கும் நீதித்துறையாலும் இதையெல்லாம் புரிந்துகொள்ள இயலாதபொழுது “இருப்பு! என்பதை விட “இறப்பு” பற்றிய சிந்தனையே என்னுள் மேலோங்கி நிற்கிறது. “03-12-2009 முதல் சாகும்வரை உண்ணாவிரதம்” மேற்கொள்வது என்ற முடிவுக்கு நான் வர இதுவே காரணம். எனது இம்முடிவு ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் நல்லதொரு பாடமாக அமையட்டும்.

இதன்பொழுது நான் இறக்க நேர்ந்தால் எனது சடலத்தை கொழும்பு மருத்துவ பீட மாணவர்களின் கல்வித்தேவைக்காக அன்பளிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இங்கனம்

க. தேவதாசன் (ஒப்பம்)

கனகசபை தேவதாசன்

http://meenakam.com/?p=2194

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.