Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2005ம் ஆண்டு தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்காக 180 மில்லியன் ரூபா நிதி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டது‐ டிரான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2005ம் ஆண்டு தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்காக 180 மில்லியன் ரூபா நிதி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டதுடன், அதனை பசில் ராஜபக்ஷ தனது அலுவலகத்தில் வைத்தே எமில்காந்தனிடம் வழங்கியதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாவலயில் உள்ள தனது வீட்டில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டதற்கமையே இந்தப் பணம் கொடுக்கப்பட்டது.

2002ம் ஆண்டில் தாம் முதலில் எமில் காந்தனைச் சந்தித்ததாகவும், ஜயலத் ஜயவர்தனவினால் அவர் தனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதாகவும் எமில்காந்தன் புனர்வாழ்வு அமைச்சில் பணியாற்றி வந்ததாகவும் டிரான் அலஸ் கூறியுள்ளார். அப்போது பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள ஒருவரை தேடித்தருமாறு கோரிக்கை விடுத்ததுடன் அவரிடம் தனது சகோதரர் பசில் ராஜபக்ஷவை அறிமுகப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டதாக அலஸ் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், தாம் எமில்காந்தனை பசில் ராஜபக்ஷவிற்கு அறிமுகப்படுத்தியதுடன் அவர்கள் இருவரும் தமது அலுவலகத்தில் சந்தித்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பசில் ராஜபக்ஷ அடிக்கடி எமில் காந்தனை தனது அலுவலகத்தில் சந்தித்ததாகவும் இருவருக்கிடையில் விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

சில காங்களின் பின்னர் இவர்கள் மிகவும் நெருக்கமான நண்பர்களாக மாறியதுடன் எமில் காந்தனைச் சந்திக்கும் போது பசில் தோள்மீது கைகோர்த்தபடி சம்பாஷனைகளில் ஈடுபட்டுவந்தார். இப்படியாக சந்திப்பு நடைபெற்ற போது ஒருநாள் பசில் ராஜபக்ஷ, பிரதமர் மகிந்தவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்புகளை உறுதிப்படுத்த புலிகள் எதனை எதிர்பார்க்கின்றனர் என எமில் காந்தனிடம் கேட்டார்.

அப்போது எதனையும் கூறாத எமில்காந்தன் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் பேசிவிட்டு அறிவிப்பதாக உறுதிவழங்கினார். இதன்மூலம் புலிகள் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் உதவியை மாத்திரம் பசில் ராஜபக்ஷவினர் எதிர்பார்த்தனர். அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையின்போது அதில் கலந்துகொண்ட எமில்காந்தன் விடுதலைப் புலிகளுக்கு படகொன்று தேவையெனவும் அதற்கு 180 மில்லியன் ரூபா செலவாகும் எனக் கூறியதாக தெரிவித்த டிரான் அலஸ், பணத்தைக் கொடுப்பதற்கு சில தினங்கள் தாமதமாகும் எனவும் பணத்தைத் தருவதாக எமிலிடம் கூறுமாறு பசில் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செலவுகளுக்காகக் கிடைத்த டொலர்கள் மற்றும் ரூபாய் என்பன இரண்டு பயணப் பொதிகளில் எடுத்துவரப்பட்டு வழங்கப்பட்டன. தான் கைதுசெய்யப்படும் போது இந்தத் தகவல் அனைத்தையும் வெளியிட்டதாகவும் இதனையடுத்து தகவல் வெளியாவதைத் தவிர்ப்பதற்காக சட்டமா அதிபர் தனக்கெதிராக சுமத்தப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுக்களையும் விலகிக் கொள்வதாக அறிவித்தார் எனவும் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து மௌபிம பத்திரிகையின் துஷ்யந்த பஸ்நாயக்கவை கைதுசெய்து அவரைப் பணயமாக வைத்துக்கொண்டு தான் கூறிய தகவல்கள் பொய்யானவை என கடிதமொன்றைப் பெற்றுக்கொள்ள அப்போது இரகசிய காவல்துறைக்குப் பொறுப்பாக இருந்த பிரதாப்ப சிங்க முயற்சித்ததாகவும் டிரான் அலஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமான சகல தகவல்களும் 2007 பெப்ரவரி 10ம் திகதி சத்தியக் கடிதமொன்றின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கியதாகவும் அதில் தற்போது மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கிவரும் உடுவே தம்மாலோக்க தேரர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியும், பசில் ராஜபக்ஷவும் தன்னைக் கொலை செய்ய முயற்சித்து வருவதால் இந்த விடயங்களை தான் ஊடகங்களுக்கு வெளியிடுவதாகவும் தன்னைக் கொலை செய்யும் முயற்சியின் முதற்கட்டமாகவே தனது வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் டிரான் அலஸ் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தொடர்புகள் குறித்த தனது வாக்குமூலத்தைத் தவிர பல சாட்சியங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள டிரான் அலஸ் தேவை ஏற்பட்டால் அவற்றை வெளியிடப் போவதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை, தமது குடும்பத்தினருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமானால் அது மகிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே ஏற்படுத்தப்படும் எனவும் தனது மரணத்தை மகிந்தவினால் தீர்மானிக்க முடியாது எனவும் அது பிறக்கும்போது தீர்மானிக்கப்படுகின்ற விடயம் எனவும் டிரான் அலஸ் கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார்.

2ஆம் இணைப்பு:‐ பசில் ராஜபக்ச 180 மில்லியன் ருபாய்களை தனது கண் முன்னாலேயே வழங்கினார் என டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை வடக்கில் பகிஸ்கரிக்கும்படி தன்னால் அறிமுகம் செய்த வைக்கப்பட்ட புலிகளின் பிரதிநிதியான எமில்காந்தனுக்கு பசில் ராஜபக்ச 180 மில்லியன் ருபாய்களை தனது கண் முன்னாலேயே வழங்கினார் என டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இக் கொடுப்பனவு குறித்த ஆவணங்களை அழிக்குமுகமாக டிரான் அலஸ்ஸின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலை அடுத்து அவர் நேற்று நடாத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது, எமில் காந்தனுடன் நடாத்திய உரையாடலைத் தொடர்ந்து பசில் ராஜபக்சவின் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமானால் விடுதலைப் புலிகளுக்குப் படகுகள் வாங்க 180 மில்லியன் ருபாய்கள் தரப்பட வேண்டும் என்று எமில் காந்தன் கோரினார். பசில் ராஜபக்ச எவ்விதத் தயக்கமுமில்லாமல் தன் கண்முன்னாலேயே 180 மில்லியன் ரூபாய்களை வழங்கினார் என்று டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவுடன் எமில் காந்தன் நிற்பதான புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அதற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே கடந்த வெள்ளிக்கிழமை எனது வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை ஊடகங்களில் எமில் காந்தனுடன் நாமல் ராஜபக்ச நிற்பதான புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து ஜனாதிபதி கடும் கேபமுற்றிருந்தார் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

எமில்காந்தனுக்கு ஒரு வரலாறு உண்டு. அதைப்பற்றி நான் இப்போது பேசப் போவதில்லை. எமில்காந்தனை 2002ஆம் ஆண்டில் இருந்து எனக்குத் தெரியும். அந்நேரம் அவர் புனர்வாழ்வு அமைச்சில் பணியாற்றினார். 2004இல் மங்கள சமரவீர துறைமுக மற்றும் விமானத்துறை அமைச்சரானார். 2005இல் எயர்லங்காவின் தலைவராக நான் நியமிக்கப்பட்டேன். பின்னர் ஜனாதிபதித் தேர்தல் வந்தது. நான் அதற்கான குழுவில் நியமிக்கப்பட்டேன். மகிந்த அப்போது பிரதமராயிருந்தார். ஒரு நாள் அவர் என்னை அலரி மாளிகைக்கு அழைத்துக் கேட்டார் அந்தப் பகுதியிலிருந்து யாரையாவது உங்களுக்குத் தெரியுமா என்று. தான் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிக்கப் போவதாகவும் அவர் சொன்னார். யாரையாவது அறிமுகப்படுத்திவிடும்படியும் தான் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.

எமில் காந்தன் என்ற ஒருவரை எனக்குத் தெரியும். அவர் கொழும்பில் வர்த்தகம் செய்து வருகிறார். அவருக்கு புலிகளுடன் தொடர்பு உண்டு. வேண்டுமானால் அவரை அறிமுகப்படுத்தி விடுகிறேன் என்று சொன்னேன். மகிந்த கேட்டார் பசில் ராஜபக்சவுக்கு அவரைத் தெரியுமா என்று. அந்நேரம் பசிலை அங்கு காணவில்லை. பின்னர் பசிலை அழைத்து பசிலை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததோடு எமில் காந்தனை அவருக்கு அறிமுகப்படுத்தி விடுமாறு கேட்டார். அதனை நான் செய்தேன்.

அதிலிருந்து பசிலுக்கும் எமில் காந்தனுக்கும் உரையாடல் ஆரம்பமானது. தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவாக விடுதலைப் புலிகள் செயற்பட வேண்டும் என்பது பற்றியே உரையாடல் நிகழ்ந்தது. 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வந்தது. பசில் ராஜபக்ச எமில்காந்தனிடம் கேட்டார் விடுதலைப் புலிகளைச் சந்திக்க வழியொன்றை ஏற்படுத்தித் தருமாறு. அதற்காக அவர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக வாக்குறுதி அளித்தார். அத்தோடு வடக்கு கிழக்கில் வாக்களிப்பு நடைபெறாமல் தடுக்க முடிந்தால் மகிந்தவே தேர்தலில் வெற்றி பெறுவார் என்று அவர் சொன்னார்.

உடனடியாகவே எமில் காந்தன் எங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டீர்கள். விடுதலைப் புலிகளுக்கு படகுகள் வாங்க 180 மில்லியன் ருபாய் தேவைப்படுகிறது என்று சொன்னார். உடனடியாகவே அது பிரச்சினையில்லை. அந்தப் பணத்தை நாங்கள் தருகிறோம் என்று பசி;ல் சொன்னார்.

பசிலும் எமிலும் மீண்டும் சந்தித்தார்கள். நான் கனவிலும் நினைத்துப் பார்த்தருக்காதபடி பசில் பணக்கட்டுக்கள் நிறைக்கப்பட்ட பல பிரயாணப் பைகளுடன் வந்திருந்தார்.

இதேவேளை இவை அனைத்தையும் 2007இல் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரிடம் நான் சொல்லியிருந்தேன். இவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என்று நான் கருதியதால் இவற்றை நான் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

பசில் 180 மில்லியன் ருபாய்களையும் முழுமையாகவே கொடுத்து புலிகளுடன் உறவை வளர்த்துக் கொண்டார்.

இதனை நான் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரிடம் கூறியபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். நான் வெளிப்படுத்தியவற்றை பதிவு செய்ய அவர்கள் மறுத்தார்கள். நான் கூறியவற்றை அவர்கள் பதிவு செய்யாவிட்டால் நான் அதில் கையெழுத்திட மாட்டேன் என்று அச்சுறுத்தினேன். அதன் பின்னர் என் மீதான எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் விலக்கி என்னை விடுதலை செய்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி: GTN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.