Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேலிய மொஸாத் கூலிப் படையினர் துபாயில் நடத்திய படுகொலை..!

Featured Replies

எதிராளியைவிட ஒரு மணி நேரமாவது கூடுதலாகச் சிந்தித்தால்தான் அவனை வெல்ல முடியும் என்பது போர்த் தந்திரங்களில் ஒன்று. உலகம் முழுவதும் இதனை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோ, போராளி இயக்கங்களோ பின்பற்றுகின்றனவோ.. இல்லையோ.. யூத தேசமான இஸ்ரேல் மட்டுமே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகின்றது.

தான் தூங்கினால் பாலஸ்தீனம் முழித்துக் கொள்ளும் என்பதில் இன்றைக்கும் தெளிவான சிந்தினையுடன் ஆட்சி நடத்தி வருகிறார்கள் இஸ்ரேலியர்கள். மத்திய கிழக்காசியாவில் தனிப்பெரும்பான்மையுடன் அமெரிக்காவைப் போல் சர்வாதிகாரத்துடனும், சகல செல்வாக்குடனும் இருந்து வந்தாலும், ஒவ்வொரு நொடியையும் தனது பாலஸ்தீன எதிர்ப்பிலும், தனது நாட்டின் பாதுகாப்பு பற்றிய கண்காணிப்பிலும் உறுதியுடனேயே இருக்கிறது இஸ்ரேல்.

தனது எதிரிகளை அழித்தொழிக்க தான் உருவாக்கிய மொஸாத் என்னும் கூலிப் படையினர் மாதந்தோறும் இத்தனை பாலஸ்தீன விடுதலை விரும்பிகளை அழித்தொழிக்க வேண்டும் என்பதை கட்டளையாகவே மேற்கொண்டு வருகின்றனர்.

பாலஸ்தீனப் பிரச்சினைகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோதெல்லாம் அப்பாவிகள் இருக்கின்றார்களே என்ற ஒரு சின்ன தயக்கம்கூட இல்லாமல் ஒரு தீவிரவாதிக்காகவே கட்டிடம் முழுவதையுமே ராக்கெட் தாக்குதலில் சிதைக்கும் அளவுக்கு கொடூர மனம் கொண்டது இஸ்ரேல். அதனால்தான் இன்றுவரையிலும் இத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்தும் தாக்குப் பிடித்து வருகிறது.

பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் ஒவ்வொன்றின் வரலாறும், அந்த இயக்கத்தினருக்கே தெரிகிறதோ இல்லையோ.. மொஸாத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் நன்கு தெரிந்துவிடுகிறது.

விடுதலை இயக்கங்களின் தொண்டர்களையெல்லாம் விட்டுவிட்டு கமாண்டர்கள் என்றழைக்கப்படும் தளபதிகளை குறி வைத்துத் தாக்கியழிப்பதும் மொஸாத்தின் அன்றாடப் பணிகளில் ஒன்று. இதனால்தான் தங்களது இயக்கங்களின் தளபதிகளுக்கு நான்கைந்து பெயர்களைச் சூட்டி அவர்களை மறைமுகமாகக் காத்து வருகிறார்கள். அந்த இயக்கத்தினர் ஆனாலும் மொஸாத்தின் ஆழ ஊடுறுவும் வேவு தந்திரத்தின் முன்னால் இது அத்தனையையும் அவ்வப்போது தோற்றுப் போகிறது.

ஆனானப்பட்ட சி.ஐ.ஏ.வுக்கே தண்ணி காட்டக்கூடிய அளவுக்கு செல்வாக்கும், அறிவுத் திமிரும் படைத்த இந்த யூதக் கொலையாளிகள் இந்த ஆண்டின் துவக்கத்தில் துபாய் நாட்டில் நடத்திய ஒரு அட்டகாசமான, திரில்லிங்கான படுகொலையைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாத் பற்றி கூகிளாண்டவரிடம் விசாரித்துக் கொண்டே வந்தபோது, திடீரென்று இந்த வீடியோ காட்சியும், இது பற்றிய செய்திகளும் கண்ணுக்குப் பட்டது. நான் ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும், மறுபடியும் பார்த்தபோது நேரம் போவதே தெரியாமல் தலையுச்சியில் இருந்து உள்ளங்கால்வரையிலும் மயிர்கூச்செறியும்வகையில் ஒரு திகில் அனுபவம் மீண்டும் எனக்குக் கிட்டியது. என்னைப் போலவே உங்களில் பலருக்கு இது பற்றி முன்பே தெரிந்திருக்கலாம். சிலருக்குத் தெரிந்திருக்காது. அப்படித் தெரியாதவர்களுக்காக இந்தச் செய்தி.

முகமது அல் மாப்ஹா என்பவர் ஹமாஸ் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவர். இவருடைய வயது 49. Izz ad-Din al-Qassam Brigades என்ற ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பாலஸ்தீன அரசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம்வரையிலான காலக்கட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த பல்வேறு வன்முறை எதிர்ப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டது முகமதுவின் இந்த இயக்கம்தான். இந்த இயக்கத்தின் சார்பாகத்தான் ஜோர்டானில் இருந்து ஆயுதங்களைத் தருவித்து அதன் மூலம் இஸ்ரேலிய ராணுவத்துடன் போர் நடத்தினார் முகமது என்பது இஸ்ரேல் அரசின் குற்றச்சாட்டு.

டெல் அவிவில் நடைபெற்ற பல்வேறு மனித வெடிகுண்டுத் தாக்குதல்களின் சூத்ரதாரியும் இவர்தான் என்பதால் இஸ்ரேல் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கிறார். இந்த காரணங்களுக்காகவே மிக நீண்ட நாட்களாக மொஸாத் படையினராலும், இஸ்ரேலிய அரசாலும் கொல்லப்படுவதற்காகவே தேடப்பட்டு வந்தவர்.

பாலஸ்தீனத்தில் இருந்தால் தான் எப்படியும் கொல்லப்படுவோம் என்பதால் ஹமாஸ் இயக்கத்தினர் இவரை சிரியா தலைநகரமான டமாஸ்கஸில் இவரைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார்கள்.

டமாஸ்கஸிலும் இவரைக் கொல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் வருத்தத்தில் இருந்த மொஸாத் படையினருக்கு முகமது, துபாய்க்கு வரவிருக்கிறார் என்ற செய்தி ஒரு வாய்ப்பாகிவிட்டது.

தனது நீண்ட நாள் கனவு பலிக்கப் போகிறதே என்ற சந்தோஷத்தோடு முகமதுவை கொலை செய்ய பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து தனது ஏஜெண்டுகளை துபாய்க்கு அனுப்பி வைத்தது மொஸாத்.

இத்தனை ஆண்டு கால போராட்ட வரலாற்றில் ஒரு சின்ன சறுக்கலை முகமது செய்ததுதான் அவரது கொலைக்கு அவரே ரத்தினக் கம்பளம் விரித்தது போலாகிவிட்டது என்கிறார் ஹமாஸ் இயக்கத்தின் டமாஸ்கஸ் பிரிவின் வழக்கறிஞர்.

விமான டிக்கெட்டை டமாஸ்கஸில் இருந்து ஆன்லைனில் பதிவு செய்தது. அதிலேயும் தனது சொந்தப் பெயரில் இருந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தியது. அதன் பின்பு இப்போதும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருக்கும் தனது குடும்பத்தினருக்கு போன் செய்து தான் துபாய்க்கு செல்லும் தகவலையும், தங்கப் போகும் ஹோட்டலின் பெயரையும் சேர்த்து சொன்னது என்று பலவும் சேர்ந்து முகமதுவை வீழ்த்திவிட்டது என்கிறார்கள் ஹமாஸ் இயக்கத் தோழர்கள்.

இந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதியன்று டமாஸ்கஸில் இருந்து பாங்காங் வழியாகத் துபாய் வந்து சேர்ந்தார் முகமது. துபாய் ஏர்போர்ட் அருகேயிருக்கும் பஸ்டன் ரொட்டனா என்ற ஹோட்டலில் 230-வது எண் அறையில் தங்கினார் முகமது.

அவரைப் பின் தொடர்ந்து வந்த சில மொஸாத்துக்களும் அதே ஹோட்டலில்தான் முகமது தங்கியிருந்த அறையின் எதிர் அறையில்தான் தங்கியுள்ளனர். மற்ற ஏஜெண்டுகள் நகரின் பல்வேறு ஹோட்டல்களில் தனித்தனிப் பிரிவாகத் தங்கியவர்கள், ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து பேசியுள்ளனர்.

முகமது மட்டுமே தனியே வந்திருக்கும் தகவலை உறுதி செய்து கொண்டு இரவு 8.20 மணியளவில் ஹோட்டலுக்குள் 4 மொஸாத் ஏஜெண்ட்டுகள் மட்டுமே நுழைந்து முகமதுவை சப்தமில்லாமல் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார்கள்.

அந்தக் கொலைக்காரக் மொஸாத் கூலிப் படையினர் சென்று வந்த இடங்களில் இருந்த CCTV-யில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து முகமதுவை அவர்கள் படுகொலை செய்ய போட்டிருந்த திட்டத்தை துபாய் போலீஸார் பட்டவர்த்தனமாக்கியுள்ளனர்.

அதன் வீடியோ காட்சிகள்தான் இரண்டு பாகங்களாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தயவு செய்து நேரத்தைக் கணக்கில் எடுக்காமல் முழுவதையும் பாருங்கள். யூதர்களின் மூளைத் திறன் எப்பேர்ப்பட்டது என்பதை இந்த வீடியோவைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்

http://www.youtube.com/watch?v=l9xMkX98VVE&feature=player_embedded

எப்போதும் பாதுகாவலர்கள் படை சூழ இருந்து வரும் முகமது இந்த முறை தனியே பயணப்பட வேண்டியதாகிவிட்டது. அன்றைக்கு பார்த்து அவர் புக் செய்த விமானத்தில், பாதுகாவலர்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் அவர்களை அடுத்த நாள் விமானத்தில் வரும்படி சொல்லியிருக்கிறார். இதுவும் மொஸாத்துக்குத் தெரிந்துவிட அதற்கு முன்பாகவே முந்திக் கொள்ள நினைத்து, முகமது வந்து சேர்ந்த அன்றைக்கே ஆறரை மணி நேர இடைவெளியில் அவரைக் கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த டிவி காட்சிகளின் தொகுப்பை வெளியிட்ட துபாய் போலீஸின் தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் டாகி கஃப்லன் தமீம் இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட மொஸாத் ஏஜெண்டுகள் என்று 11 பேரை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற Michael Lawrence Barney, James Leonard Clarke, Jonathan Louis Graham, Paul John Keeley and Stephen Daniel Hodes; அயர்லாந்தில் குடியுரிமை பெற்ற Gail Folliard, Evan Dennings and Kevin Daveron பிரான்சு நாட்டைச் சேர்ந்த Peter Elvinger, மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த Michael Bodenheimer. இவர்கள்தான் அந்த தேடப்படும் மொஸாத் ஏஜெண்டுகள்.

பல்வேறு நாடுகளில் இருந்து கிளம்பி சுவிட்சர்லாந்தில் ஒன்று சேர்ந்து தனி விமானம் மூலம் துபாய்க்குள் கால் வைத்த இந்த மொஸாத் ஏஜெண்டுகளில் சிலர் டூரிஸ்ட்டுகள் போலவும், சிலர் விளையாட்டுப் போட்டியைக் காண வந்தது போலவும் காட்சியளித்துள்ளனர். துபாயில் அவர்கள் தங்களது தலைக்கு விக்கை பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

முகமதுவின் அறைக்கதவின் லாக், எலெக்ட்ரானிக் புரோகிராமிங் செய்யப்பட்ட ஒன்றாம். அந்த புரோகிராமையே உடைத்தெறிந்துவிட்டு அறைக்குள் நுழைந்த 4 மொஸாத்துகள் முகமதுவைச் சித்ரவதைப்படுத்தியும், இறுதியில் விஷம் கொடுத்தும் கொலை செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. பின்பு, கதவை உட்பக்கமாக முகமதுவே தாளிட்டிருப்பதுபோல் அதில் ரீபுரோகிராம் செய்துவிட்டுத்தான் தப்பியோடியிருக்கிறார்கள். என்ன கில்லாடித்தனம்..?

துபாய் அரசு இந்த படுகொலைக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தனது கெடுபிடியை இறுக்கமாக்கியிருக்கிறது. முன்பெல்லாம் அரபு குடியரசு நாடுகள் பாலஸ்தீனர்கள் என்றால் கொஞ்சம் கருணையுடன் நடந்து கொள்ளும் என்பதால்தான் இந்த நாடுகளுக்கு மட்டும் தைரியமாக வந்து செல்வார்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தளபதிகள். இதனை உடைத்தெறிந்திருக்கிறது சர்வ வல்லமை பொருந்திய மொஸாத்..

ஏற்கெனவே உலகம் முழுவதும் இருக்கும் மொஸாத் ஏஜெண்டுகளின் போலி பாஸ்போர்ட்டுகளை பல்வேறு நாடுகளும் அடையாளம் கண்டு அவற்றை தடை செய்துள்ளன. இந்த முறை இந்த ஏஜெண்ட்டுகள் வந்த அனைத்து ஐரோப்பிய நாடுகளுமே போலியான புகைப்படம் ஒட்டிய பாஸ்போர்ட்டுகளுக்கு அனுமதியளித்துள்ளார்கள். இது பற்றி அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட நாடுகள் முகமதுவின் படுகொலை பற்றி விசாரணை செய்து போலியாக பாஸ்போர்ட் வழங்கியமைக்காக சில அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படுகொலை வழக்கில் போலி பாஸ்போர்ட் வழங்க உதவியதற்காக ஆஸ்திரேலிய அரசு, தனது நாட்டுக்கான இஸ்ரேலிய தூதரை வெளியேற்றியது.

இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒருவரை மட்டுமே போலந்து தலைநகர் வார்சாவில் அந்நாட்டு போலீஸ் கைது செய்துள்ளது. அவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இதில் இன்னொரு திருப்பமாக ஹமாஸ் அமைப்பின் விரோதியாகச் செயல்படும் எகிப்து நாட்டைச் சேர்ந்த பாத் அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள்தான் துபாய் வந்திருந்த மொஸாத் ஏஜெண்டுகளுக்கு மறைமுகமாக உதவிகள் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனராம்.

மேலும் இந்தப் படுகொலையின் பின்னால் நிச்சயமாக மொஸாத் இருக்கிறது என்று துபாய் அரசு சொன்னாலும் இன்றுவரை இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கும், இதற்கும் யாதொரு ஸ்நானப் பிராப்தமும் இல்லை என்றே சொல்லி வருகிறது. ஆனாலும் துபாய் அரசு மொஸாத்தின் தலைமை இயக்குநரை கைது செய்து தரும்படி சர்வதேச போலீஸாரிடம் ரெட் அலர்ட்டை கொடுத்துவிட்டது கூடுதல் சுவாரஸ்யமான விஷயம்.

more details.....http://en.wikipedia.org/wiki/Assassination_of_Mahmoud_Al-Mabhouh

மூலம் -உண்மைத்தமிழன் வலைப்பூ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.