Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சென்ட்ரல் ஆட, ஸ்டேட் ஆட" - முச்சந்தி. சட்டம் நம் கையில

Featured Replies

சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நான்கு போலீஸார் விரட்டியடிக்க, ''அய்யோ என்னை காப்பாத்துங்க'' என்று அலறியபடியே ஓடிவந்துகொண்டிருந்தார் 'சுவருமுட்டி'.!

வெளியே ரோட்டில் வந்துகொண்டிருந்த சித்தன் பார்த்துவிட்டு ஓடிச்சென்று அவரை மீட்டு காப்பாற்றினார். ஆசுவாசப்படுத்தி, வெளியே இருந்த டீ கடையில் அமரவைத்து ''என்னய்யா பண்ணின...ஏன் அவிங்க உன்னை விடிட்டியடிச்சாங்க'' என்றார்.

''அது ஒண்ணுமில்ல சித்தா. இந்த 'மானாட, மயிலாட' நிகழ்ச்சி நடக்குது இல்ல. அதுமாதிரி நாம 'சென்ட்ரல் ஆட, ஸ்டேட் ஆட'ன்னு ஒரு நிகழ்ச்சி ஏன் நடத்த கூடாதுன்னு போய் போலீஸ்கிட்ட மனு கொடுத்து அனுமதி கேட்டேன்.வாங்கி படிச்சவங்க உனக்கு எம்புட்டு திமிருய்யான்னு அங்கேயே போட்டு புரட்டிட்டாய்ங்க" என்று அழுதார்.

சித்தனுக்கு சிரிப்புதான் வந்தது. "ஏன்யா உனக்கு ரொம்பதான் கிண்டலு. அவனவன் நொந்து போயிருக்கிற இந்த நேரத்துல நீ இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதி வேண்டும்னு போய் கேட்டிருக்கியே.."என்று அவர் பங்குக்கு ரெண்டு தட்டு தட்டினார்.

"சித்தா, என்ன ஆனாலும் சரிய்யா. விடமாட்டேன். நம்ப அலப்பறை டீமை விட்டு அண்ணா சமாதிகிட்டேயே இந்த ''ஸ்டேட் ஆட, சென்ட்ரல் ஆட' நிகழ்ச்சிய நடத்திடணும்" என்று பிடிவாதம் பிடித்தார் சுவருமுட்டி.

'சரி விதி. இப்படி உன் ரூபத்தில் வந்து விளையாடுது. தப்பிக்க முடியுமா...' என்று புலம்பியபடியே தகவல் அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்திற்குள் மெரீனா கடற்கரை அண்ணா சமாதி அருகே தொடங்கியது அலப்பறை டீமின் மானாட மயிலாட...ச்சே..., '' சென்ட்ரல் ஆட, ஸ்டேட் ஆட'' நிகழ்ச்சி.!

சுவருமுட்டி மாஸ்டர், சித்தன் மாஸ்டர் நீதிபதிகளாக உட்கார, கோட்டை கோபாலு, அன்வர்பாய் ஆகியோர் அறிவிப்பாளர்களாக... நிகழ்ச்சி ஆரம்பமானது.

முதலில் மேடைக்கு வந்தது சிபிஐ நடனக் குழுவினர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வீடு, அவரது அலுவலகம், உற்றார் உறவினர்கள் வீடு என்று முதல் ரவுண்ட் ரெய்டு என ஓரளவு ஆடிவிட்டு சோடா குடிக்கப் போனது. இரண்டாவது ரவுண்டில் ஆட்டம் சூடு தொடங்கியது. ஆனால் வேகம் இல்லை. கனிமொழி இயக்குனராக இருக்கிறார் என்று சொல்லி, அருட் தந்தை ஜெகத் கஸ்பர் நடத்தி வரும் தமிழ் மையத்தின் அலுவலகத்தில் நுழைந்த 'ஆட்டம்' கூட அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. கடைசியில் நமீதா ஆட்டம் என்று சொல்லி ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினத்தின் வீட்டில் ரெய்டு நடத்தின காட்சிதான் தூள். பட்டையை கிளப்பியது. ஆட்டம் முடிந்து வேர்த்து விறுவிறுக்க மூச்சுவாங்க நின்றது சிபிஐ குழு.நடுவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ என்ற பதட்டம் முகத்தில் தெரிந்தது.

உட்கார்ந்து ரசித்துகொண்டிருந்த 'சுவருமுட்டி' மாஸ்டர், முகத்தை சீரியஸாக வைத்துகொண்டு அவர்களையே உற்றுப்பார்த்தார்.

''சிபிஐ டீம்...? என்ன ஆட்டம் ஆடுறீங்க.! கொஞ்சம் கீழ குனிஞ்சு பாருங்க... உங்க அண்டர்வேரையே காணோம்.! ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு போட்டு கழட்டிடுச்சு.கழட்டினதுகூட தெரியாம இந்த குதி குதிக்கிறீய்ங்க'' என்று சொன்னதும் மொத்த கூட்டமும் கொள்ளென்று வாய்விட்டு சிரித்தது.

''உங்களுக்கு என்னாச்சு. நல்லாத்தானே இருக்கிறீய்ங்க. சிபிஐ டீம்னு சொன்னா ஒரு காலத்துல ஆட்டம் அமர்களப்படுமில்ல. இப்ப என்ன ஆச்சு. இப்படி சொதப்பறீங்க. 2007- அக்டோபர் மாசம் போட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேடு வழக்குல,இப்பதான் வந்து ரெண்டாவது ரவுண்ட் ஆடியிருக்கீங்க. அதுலேயும் வேகமில்ல. 'ஒப்புக்காக' ஆடுறீய்ங்க. என்ன ஒரே ஒரு ஆறுதல்னா ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினத்தை தூக்கி விசாரிச்சதுதான். அந்த நடன மூவ்மெண்ட்ல சி.ஐ.டி. காலனி வீடு மிரண்டு போயிருக்கு. கூடவே 'தாத்தாவும்' அரண்டு போனதா காட்டுற மூவ்மெண்ட் ஓரளவு சுமார்.ஆனாலும் இன்னும் கதற வச்சிருந்தா சூப்பர்னு செல்லலாம். நீங்க 'சுதந்திரமா' ஆடுன மாதிரி தெரியவில்லை. அப்பப்போ சைடில் நிற்கிற சோனியாஜி, மன்மோகன்ஜிய பார்த்துகிட்டே ஆடுறீய்ங்க. பார்க்க சகிக்கல. சோனியாஜியையும், மன்மோகன்ஜியையும் கேட்காம ஆட முடியாதுன்னு சொல்லாம சொல்றீங்க. சைடுல நின்னு அவிய்ங்க காட்டுற சைகைக்கு ஏத்தமாதிரி ஆடுறது,உங்க பேர்ல நம்பிக்கையில்லாம போயிடும். சுயமா, சுதந்திரமா ஆட பழகுங்க. அப்பதான் இறுதி சுற்றுக்கு வர முடியும். ரெண்டு சுத்து ரெய்டு ஆட்டம் முடிஞ்சதுன்னு போய் சோடா குடிச்சுட்டு கவுந்தடிச்சு படுத்திடாதீங்க.

யாரு உங்க கோச்.? போங்க அவிங்க கைய கால பிடிச்சு 'தயவுசெய்து சுதந்திரமா ஆடவிடுங்கன்னு' கெஞ்சுங்க. 41-நாள், ஒரு மண்டலம்னு கண்ணீர்விட்டு கதறுங்க. அப்பவாவது உருப்படியா ஆட முடியுதான்னு பார்ப்போம்னு" விரட்டியடித்தார் சுவருமுட்டி.!

கண்ணீர் விட்டழுத சிபிஐ டீம் ''மாஸ்டர்.. மாஸ்டர்... ப்ளீஸ் மாஸ்டர். இப்பதான் சுப்ரீம் கோர்ட்டு எங்களுக்கு முழு சுதந்திரம்னு உத்தரவு கொடுத்திருக்கு.இனிமே எங்களால சுதந்திரமா ஆட முடியும்னு நம்புறோம் மாஸ்டர். ப்ளீஸ் ஒரு வாய்ப்பு கொடுங்க மாஸ்டர்'' என வாய்விட்டு தேம்பியது.

''நோ.. நோ.. இதுக்கெல்லாம் அழக்கூடாது. உங்களோட நல்லதுக்குதான் சொல்றம். உங்கள எல்லோரும் பெரிய ஆளா மதிக்கணும்ங்கிற நல்ல எண்ணத்தோடதான் சொல்றம்.போங்க அடுத்த ரவுண்ட் ரெய்டு உருப்படியா நடத்துங்க.ஆ.ராசாவை மடக்கப் பாருங்க.சம்பந்தப்பட்ட 'நெருங்கின-வங்களையும்' மடக்கப்பாருங்க. அப்பத்தான் உங்க பேர்ல நம்பிக்கை வரும். போங்க" என்று விரட்டியடித்தார் சித்தன். பாவம் கோவணத்தோடு மேடையிலிருந்து இறங்கியது சிபிஐ டீம்.

மைக் பிடித்தபடி கலகலவென்று பேசியபடி வந்தார் அறிவிப்பாளர் கோபால். ஆனால் பேச்சுதான் புரியவில்லை. அடுத்த ரவுண்ட்டும் சென்ட்ரல்தான் ஆட வருகிறது என புரிந்துகொள்ள முடிந்தது. அதற்கேற்றபடி கோஷ்டி பூசலில் கிழிந்த உடையலங்காரத்தோடு மேடையேறியது காங்கிரஸ் நடனக்குழு...! மேடை 'இருண்ட'... நிலைக்கு சென்றது.!

'ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒரு மூணு வருஷம் தண்ணீருக்கடியில ஒளிச்சு வச்சது, பிறகு வெளிவந்து அம்பலமாகி நாடே சிரிப்பது, முந்தின நாடாளுமன்ற கூட்டத்திலேயும் அமுக்கிப் போட்டது, 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு, முறைகேடு என்று இந்திய தணிக்கைத் துறை சட்டியை போட்டு உடைக்க அதற்கேற்ப எகிறிக் குதித்து ஆடியது எல்லாம் பிரமாதம்.எம்புட்டு அடிச்சாளும் அசரமாட்டோம் என்று பாராளுமன்ற அமளி துமளியை தாக்குபிடிச்ச ஸ்டெப் சூப்பர்.கடைசியில் 22-நாள் பாராளுமன்ற முடக்கம் என்று துணியெல்லாம் நார் நாராக கிழிந்து தொங்க...' மூச்சு வாங்க நின்றது காங்கிரஸ் நடனக் குழ.

ஒரே நிசப்தம்.'சுவருமுட்டியும்' 'சித்தனும்' என்ன தீர்ப்பை சொல்லப் போகிறார்களோ என்று பதட்டத்தோடு நிற்பதைப் பார்க்க பாவமாக இருந்தது.

''என்ன காங்கிரஸ்? யார் உங்க கோச்?" என்று சித்தன் கேட்க,... சோனியா வந்து நிற்கிறார்.

கடுப்பாகிப் போன சித்தன் ''ஊர் உலகம் சிரிக்க, மானம் ரோசம் பறக்க, இப்படி கிழிந்தபோன பிறகும் எப்படி மேடைக்கு அனுப்ப உங்களுக்கு மனசு வந்தது. எப்படிப்பட்ட மரியாதையான கட்சி? எவ்வளவு தியாகத்தை செய்த கட்சி.? அதுவெல்லாம் உங்களுக்கு தெரியுமா, தெரியாதா? இப்படி அலங்கோலமா மேடையேற்றுகிற அளவிற்கு உங்க பயிற்சி இருந்திருக்கு. உள்ளூர் பேப்பர் முதல் வெளிநாட்டு பேப்பர் வரைக்கும் எழுதி கிழிச்சான். பிறகுமா நீங்க... என்ன மேடம்.!

உங்க சிஸ்டருங்க ரெண்டு பேருக்கு தலா 18-ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் பங்கு பணம் போயிருக்குன்னு சுப்ரமணிய சுவாமி சொன்னப்பவாவது சுதாரிச்சிருக்கணும். கோட்டைவிட்டீங்க. ஆனால் ஒரு மூவ்மெண்ட்டை சூப்பரா போட்டீங்க. கௌரவம் போனாலும் பரவாயில்லைன்னு சொல்லி பாராளுமன்ற கூட்டத்தை 22நாள் தாக்கு புடிச்ச விதமும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாம சமாளிச்ச விதமும் பிரமாதம். எக்ஸ்லண்ட். உங்களுக்கு அருமையான ஒரு வாய்ப்பு வந்தது. நீரா ராடியா ஒலி, ஒளி.! சூப்பர் எபக்ட் மியூசிக். அதுக்கேற்ற மாதிரி உடனே ஆ.ராசாவை கழட்டி விட்டுட்டு, உடனே கோபாலபுரம் போய் கலைஞருக்கு சவாலா நின்றிருந்தீங்கன்னா கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கும்.

அதை விட்டுட்டு என்ன ஆனாலும் சரி. நாங்க ரெண்டு பேரும் பிரியவே மாட்டோம்னு 'பாச மலர்' படம் கணக்கா ஆடுறதுதான் உங்க பேர்ல பெரிய டவுட்டை கொண்டு வந்திருக்கு.ஆனாலும் இடையில உங்க காலை கருணாநிதிஜி வார பார்க்குறது,நீங்க அவரோட காலை வார பார்க்கிறதுன்னு போடுற ஆட்டம் சூப்பர். 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டிற்கு அச்சமே இல்லாத மாதிரி பயந்துகிட்டே ஆடுற இடம் சூப்பரோ சூப்பர்.இந்திய தேசிய மேடைக்கு நீங்கதான் தகுதியானவர்னு நிரூபிக்கிறீங்க. அதாவது சூடு சொரணையில்லாம இருக்கீங்க.! தப்பித் தவறிகூட காந்திஜி பெயரை சொல்லிடாதீங்க.அது என்ன உங்க கம்பெனிக்கு ஒரு பிராண்ட் நேம் மாதிரி..?''

"இல்லைங்க மாஸ்டர் அந்த பெயரை நானா சேர்த்துகிட்டதில்ல. எங்க அல்லக்கைங்க வச்சது. நானும் அப்படியே மெயின்டன் பன்றேன்" - சோனியா.

''என்னமோ பண்ணுங்க. அதுயாரு பக்கத்தில? இளங்கோவனுங்களா...! போன தேர்தலில் வைகோவும், சீமான் ஆளுங்களும் அவரோட வேட்டியை உருவி விரட்டினது உண்மைதான். அதுக்காக இந்த மேடையிலயும் வந்து டவுசரோடு நிக்கப்படாது. சேம் சேம்.! பரவாயில்ல. அவருமட்டும்தான் உங்க டீமில் கொஞ்சம் 'ரோசத்தோட' ஆடுறாரு. அதுக்காக ஒரு பாராட்டு.

அடுத்ததா, ஸ்பெக்ட்ரம் ஊழலை அமெரிக்கா ஒபாமா முதல், காங்கோ காட்டு ஆதிவாசிங்க வரைக்கும் சொல்ற மாதிரி இன்டர்நேஸ்னல் அளவில் பேச வச்சுட்டீங்க. அதுக்காகவே உங்களை சிறந்த ஆட்டக்காரரா தேர்ந்தெடுத்திருக்கோம் மேடம். நீங்க செலக்ட் ஆயிட்டீங்க''என்று சித்தன் சொன்னதும் சோனியாஜியின் கண்களில் கண்ணீர்... ஆனந்தக் கண்ணீர்..

'இப்படி என்னை தேர்ந்தெடுப்பீங்கன்னு நினைக்கவே இல்லை' என்று வாய்பொத்தி அழுதார்.இதுக்கெல்லாம் போய் சத்தம் போட்டு அழ முடியுமா? தாரைத் தாரையாக கண்ணீர் ...

"ஓ.கே. ஆடியன்ஸ். இந்த இரண்டு 'சென்ட்ரல் ஆட' நிகழ்ச்சியையும் ரொம்ப நல்லாவே ரசிச்சிருப்பீங்க. இப்போ ஆடப்போறது 'ஸ்டேட் ஆட' டீம்" என்று சொன்னதுமே கூட்டம் விசிலடித்தது...

கலைஞர் தனது குழுவோடு மேடைக்கு வந்ததும் 'செம்மொழியால் வணங்குகிறேன்' என்று கூறி, 'தமிழர்களே.. தமிழர்களே' என்றதும், பதட்டத்தோடு ஓடிவந்து மைக்கை வாங்கிய கோபால் 'ஐயா போதும், மொத்த பேரும் ஒடிப்போயிடுவான். நீங்க ஆட்டத்தை தொடங்கினாவே பெட்டரா இருக்கும்' என்று வேண்டிக் கொண்டார்.

மஞ்சள் ஆடை தகதகக்க மேடையில் பிரமாதமாக சுழன்றார். ஸ்பெக்ட்ரமா? 1.76 லட்சம் கோடியா? அப்படி ஒரு ஊழலே நடக்கவில்லை என்கிறார். பிறகு நடந்திருக்காது என்கிறார். பொய் பிரச்சாரம். ஆ.ராசா ஒரு தலித் என்பதால் மீடியா எல்லாம் இப்படி பார்ப்பன துவேசம் செய்கிறது என்று பெரிய ரவுண்ட்கட்டி ஆடுகிறார்.கடைசியாக இவ்வளவு பெரிய ஊழலை தனி நபராக செய்திருக்க முடியாது என்கிறார். தலித் இனத்தின் தகதகக்கும் சூரியன் தம்பி ஆ.ராசா என்று பாடிப்பார்க்கிறார். ஆச்சாரியாருக்கு ஒரு நீதி, ஆ.ராசாவுக்கு ஒரு நீதியா? பதவியை ராஜினாமா செய்துவிட்ட பிறகு அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே என்று அதிரடி மூவ்மெண்ட் காட்டுகிறார்.நடன அமைப்புக்கு ஏற்ப பல பாடல்களை வெட்டி ஒட்டி விறுவிறுப்பு, சோகம், என்று முகபாவத்தை நன்றாகவே மாற்றி பின்னி பெடல் எடுக்கிறார்.ஆட்டம் முடிகிறது. ஆனால் மூச்சுமுட்டவில்லை.இந்த மாதிரி எத்தனை மேடையை பார்த்திருப்பாரு.!

நம்ப 'சுவருமுட்டி'மாஸ்டர் கலைஞரையே உற்றுப் பார்க்கிறார். ''தலைவரே நீங்க ஊத்தின 'டாஸ்மாக்' சரக்குல ஊறி வளந்த உடம்பு இது. என்னை மாதிரி பல லட்டசக் கணக்கான இளைஞர்களின் வாழ்க்கைய சூறையாடி தள்ளாட வச்ச பெருமைக்கு சொந்தக்காரர்.நீங்களே இப்படி தள்ளாடலாமா. எனக்கு கவலையா இருக்கு'' என்று கண் கலங்கினார். விசுவாசத்தால் தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை... அடுத்தவரான 'சித்தன்' வாய் திறந்தார்.

"ஓ.கே. கலைஞர்ஜி...டர்ர்ர்ர்... கிழிச்சிட்டீங்க.... பின்னிட்டீங்க.. ஆகா பிரமாதம்" என தனது இருக்கையில் இருந்து ஒடிச்சென்று கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

'''ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.

ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை'-ன்னு தொடக்கத்தில் பாடிகிட்டு, சும்மா அப்படி சுழன்று ஆடுனீங்க பாருங்க.. சூப்பர். உங்களுக்கு எதிரா நின்ன காங்கிரஸ்காரங்க ஒரு 43 வருஷமா உங்க பக்கம் வர்ற முடியாம செய்துட்டீங்க.அதைத்தான் ஆயிரம் 'கை'கள்னு மறைமுகமா சொல்றீங்க. அப்படி உங்களால மட்டுமே மறைமுகமா மிரட்ட முடியும்னு பலமுறை நிரூபிக்றீங்க.

ஆடியன்ஸ் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத நேரத்தில அப்படியே பல்டியடித்து 'உன்னை நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே' ன்னு ஆடின இடம் சூப்பர்ப்...அதுவும் உங்களால மட்டுமே முடியும். அப்புறம் 'சோதனை மேல் சோதனை,போதுமடா சாமி'ங்கற பாட்டை எடுத்கிட்டு பொளந்து கட்டுனீங்க. அதுல 'சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது. அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது'ன்னு ராசாத்தி கனிமொழியை நினைச்சு உருகின சீன் சூப்பர். அதைவிட எங்கள பிரமிக்க வச்சது திடீர்னு கோபிச்சுகிட்டு 'ஓய்வு எடுக்கப் போறதா'சொல்லி ஏலகிரிக்கு போனது,பிறகு 'வீட்டுக்கு வந்து சேரலைன்னா என்ன உயிரோட பார்க்க முடியாதுன்னு மிரட்டல் வந்தவுடனேயே ரெண்டே நாளில் சென்னைக்கு வந்ததுன்னு போடுற நடனத்துல பெரிய உருக்கம்.. அட...அட.. நீங்க மட்டுமே அப்படி செய்ய முடியும்.

ஒரு பக்கம் சிபிஐ போலீஸ் வர்ற இருக்கிற காட்சி,மறுபக்கம் சின்ன அம்மா தூக்க மாத்திரைய சாப்டுட்டு ஆஸ்பிட்டலுக்கு போய் அட்மிட் ஆனத வெளியில சொல்ல முடியாம, தவியா தவிச்சு சமாளிச்ச விதம் எக்ஸ்லண்ட்.! என்னதான் துவண்டு விழுந்தாலும் அதை வெளியில காட்டிக்காம 'நீரா ராடியா டேப்' இசைத் தட்டு வெளியிட்டு விழாவுலேயும் நீங்க தலைமை தாங்க அடம் பிடிக்கிறது கை தட்ட வைக்கிறது.

இடையில இலங்கைத் தமிழர்களுக்காக திடீர்னு போய் உண்ணாவிரதம் இருந்தது, எனக்கு சொத்து இவ்வளவுதான். இருந்த ஒரு வீட்டையும் தான தருமத்துக்கு எழுதி கொடுத்திட்டேன்னு சொல்ற இடம் 'சிரிக்க' வைக்குது. அதே நேரத்தில் டாடா நிறுவனத்தின் 300 கோடி ரூபாய் நிலத்தை ராசாத்தி அம்மா வெறும் இருபத்தைந்து கோடிக்கு பினாமி பெயரில் வாங்கினதை எப்படின்னு மக்களுக்கு பதில் சொல்லாம சமாளிச்சு போடுற மூவ்மெண்ட் அட்டகாசம். நானே ஒரு அடிமை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்னு ஈழத் தமிழர்களுக்கு அல்வா படையல் வச்ச இடமும் பிரமாதம்.ஒரு அடிமையை ஐந்து முறை முதல்வராக உட்காரவச்ச பொது ஜனங்களை உங்களைவிட வேற யாரும் இப்படி கேவலப்படுத்த முடியாதுங்கிறதையும் நிரூபிச்சிட்டீங்க. இப்படி எல்லா விதத்திலேயும் பார்த்தால் உங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

கடைசியா நீங்க 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை'ன்னு உங்களையும் அறியாமல் சொல்லியழுது ஆடினவிதம் பிரமாதம். நீங்கதான் 'சூப்பர் ஆட்டக்காரர்' '' "யார் உங்க கோச்.?" என்று சித்தன் கேட்டார்.

அருகில் இருந்த சமாதியை காட்டி "எதையும் தாங்கும் இதயமாய் தூங்கும் 'அண்ணா'" என்றார் கலைஞர். அவர் கைபிடித்து நடந்துதான் இந்த நடனத்தை கற்றேன்.

"எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. அவர் பேரைச் சொல்லி நீங்களாவே இப்படி ஆடுறீங்க.இன்னைக்கு அவர் இருந்தாரென்றால் நீங்க ஆடுற ஆட்டத்தையெல்லாம் பார்த்துட்டு உயிரோடவே செத்து போயிடறேன்னு அழுதிருப்பார். ஓ.கே. சத்தியமாக நாங்க நம்புறோம். நீங்கதான் சூப்பர் ஆட்டக்காரர். போயிட்டு வாங்க" என்று கைகூப்பினார் சித்தன்.

"நீங்கள் ஆரியன் அல்ல. சித்தன் என்ற பெயரில் இருக்கும் ஒரு பச்சை தமிழன். அதுவும் திராவிடத்தை குடிச்சு வளர்ந்த தமிழன். என்னை சிறந்த ஆட்டக்காரர்னு தேர்ந்தெடுத்து நிரூபிச்சிருக்கிறீர்கள்" என்று கூறியபடியே மேடையை விட்டு இறங்கினார் கலைஞர்.

"என்ன ஆடியன்ஸ் 'வித்தியாசமான' ஆட்டத்தை ரசிச்சீங்களா. இப்போ கடைசியா வர்றது 'இன்டர் நேஷனல் ஆட்டக்காரர் நம்ப ராஜபக்சே' என்று அறிவிப்பாளர் கோபால் சொன்னதும் கருப்புக் கொடியோடு ஆராவாரம் தொடங்கியது. அதுதான் அவருக்கு ராசி என்பதால் அப்படி ஒரு ஏற்பாடு...

வழக்கமான காஸ்ட்யூம்தான்.கழுத்தில் சிவப்பு துணிக்கு பதிலாக மண்டை ஒட்டு மாலை. இடது, வலது கையில் அறுவா, கத்தி, துப்பாக்கி. மேடையில் சுத்தி அதம் பண்ணுகிறார்.விதவிதமான மூவ்மெண்ட். பல்டிமேல் பல்டியடித்து சோகமும், வேகமும் கலந்த பாடலுக்கு ஆடி முடித்தார். மூச்சுவாங்க நடுவர்களை பார்த்து ''என்னைதான் சிறந்த ஆட்டக்காரர்னு சொல்லணும். உலகமே அப்படித்தான் சொல்லுது. நீங்களும் அப்படித்தான் சொல்லணும்.இல்லாட்டி புலி ஆதரவாளர்னு கலைஞர்ஜிகிட்ட சொல்லி உள்ள தூக்கி வச்சுடுவேன்"என்று ப்ளாக்மெயில் செய்தார்.

சுவருமுட்டிக்கு கடன் வாங்கி அடித்த சரக்கின் போதை சர்ரென்று இறங்கிவிட்டது. சித்தனோ கதிகலங்கி அழுதார்.ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்ட 'சுவருமுட்டி',

''தலைவா ஈரேழு பதினாலு லோகத்துக்கும் நீங்கதான் சிறந்த ஆட்டக்காரர். சாட்சிகளே இல்லாம இனத்தை அழிச்ச பெருமைக்கு சொந்தக்காரர். சீனாவும், இந்தியாவும் சர்டிபிகேட் கொடுத்துவிட்ட பிறகு நாங்க எல்லாம் எந்த மூலைக்கு.!உங்க ஆட்டத்தை பாராட்டியே ஆகணும்ங்க.!! தொடக்கத்திலேயே நீங்க 'பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக. நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக'ன்னு பாடின மூவ்மெண்ட் எங்கேயோ போயிடுச்சு. நீங்க லண்டன் போக, அங்க தமிழருங்க ரவுண்ட் கட்டி விரட்ட, பாதியிலேயே ஓடிவந்ததை பிரமாதமா காட்சிப்படுத்திட்டீங்க. அந்த முகபாவம் இருக்கே.. எப்படி சொல்றதுன்னு தெரியல. புல்லரிச்சு போச்சு... உங்க பக்கத்துல யாருங்க அது. கருணா, டக்ளசுவா நீங்க அழுதா அவிங்க அழுவுறாய்ங்க. நீங்க சிரிச்சா அவிய்ங்க சிரிக்கிறாங்க. கம்பி எண்ணிகிட்டிருக்கிற சரத் பொன்சேகாவை காட்டி நல்லா ட்ரெயினிங் கொடுத்திருக்றீங்க.

அடுத்ததா ''நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன். நீ வர வேண்டும். உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்'' என்று கதறி அழுது போடுற மூவ்மெண்ட் சூப்பரோ சூப்பர். சோனியாவையும், கலைஞரையும் நினைச்சு அப்படி உருக்கமா ஆடுறீய்ங்க. லண்டனில் பறக்க விட்டுட்டு வந்த மானத்தை காப்பாத்த சொல்லி அழறீங்க போல. பாவம் அவிய்ங்க ரெண்டு பேரோட நிலைமையே மோசமா இருக்கு.அல்லாடிகிட்டு இருக்காய்ங்க. பெட்ஷீட் போத்திகிட்டு குமுறி அழற அவிங்களோட கஷ்டம் உங்களுக்கு எங்க தெரியப் போகுது. நீங்க செஞ்ச இன அழிப்புக்கு ஆதாரமா சேனல்-4 வெளியிட்ட வீடியோவுக்கு பதில் சொல்ல முடியாம முழிக்கிற இடம் இருக்கே...உலகத்திலேயே அப்படி ஒரு முழி உங்களுக்கு மட்டும்தான் வரும்.பின்னிட்டீங்க போங்க ராஜபக்சே.அதனால சுத்தி வளைச்சு சொல்லாம சுருக்கமா சொல்றேன். உலகத்திலேயே நீங்கதான் ஒரே கூலிப்படை கொலைகாரர்... மன்னிக்கணும் 'மிகமிக சிறந்த ஆட்டக்காரர்' என்று அறிவித்ததோடு அவசர அவசரமாக இடத்தை காலி செய்தார்கள்.

ஆனாலும் நம்ப போலீஸ் விடுமா என்ன.?வந்து சுத்தி வளைத்து கொத்தாக பிடித்துகொண்டார்கள்."நீங்க செய்தது பெரிய தேச துரோக குத்தம்.அதனால தேசிய பாதுகாப்பு சட்டத்துல ஒருவருடம் உள்ள இருக்க வேண்டியதுதாண்டி" என்று போட்டு சாத்தினார்கள்.

''யோவ் இது அநியாயமா படலை. சத்தியமா சொல்றேன்யா. நான் சீமான் இல்லையா.நம்புய்யா..சும்மா ஒரு கூட்டம் கூட்டினதுக்கா ராஜதுரோகம்னு சொல்றீங்க" என்று வடிவேலு கணக்காய் அழுது வடிந்தபடியே போலீஸ் வாகனத்தில் ஏறியதுதான் பாவம்..

- பா.ஏகலைவன்.

நன்றி: குமுதம்.

http://lawforus.blogspot.com/2011/01/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.