பாகம் மூன்று
நேசனை அழைத்து சென்ற அந்த போராளிகள், அவனை தங்கள் பொறுப்பாளரிடம் ஒப்படைத்தனர்.
"அண்ணே, இந்த தம்பியின் அம்மாவே போராடத்தில் இணைய அனுப்பி வைத்தவ.." என்று சொல்ல "சரி நான் பார்த்துகொள்கிறேன் என்று சொன்னார்" பொறுப்பாளர் சேகர்.
சேகர் , இயக்கத்தின் தொலைதொடர்புக்கு பொறுப்பானவர். இயக்கத்தின் மீதும் தலைவர் மீதும் தீராத பற்றும் பாசமும் கொண்டவர். ஜெயசுக்குறு காலத்தில் அவருடன் பணியாற்றி வீரச்சாவடைந்த தளபதியின் பேரையே தனது ஒரே மகனுக்கு வைத்த ஒரு ஆழமான போராளி. இவை எல்லாவருக்கும் மேலாக ஒவ்வொருநாளும் காலையில் அவரது அறையில் இருக்கும் அனைத்து மாவீரர்களின் படங்களுக்கும் பூ வைக்காமல் எந்த காரியத்தையும் தொடங்குவதில்லை.வெள்ளிகிழமை தோறும் துயிலும் இல்லம் போய், மாவீரரை வணங்கி, விரதமிருந்து தான் கடமையாற்றும் ஒரு உன்னத போராளி.
என்றுமே சிரித்த முகமும், மிடுக்கான பார்வையும் அவரை ஒரு ஆளுமை மிக்க போராளியாக, தளபதியாக நேசனுக்கு காட்டியது.
"தம்பி உங்கட பெயர் என்ன ? " அன்பாக கேட்டார் தளபதி சேகர்.
"நேசன்.." அடக்கமாக பதில் சொன்னான்.
"உமக்கு இயக்கத்தில் என்ன செய்ய விருப்பம்.?"
"அண்ணே.. ஏதாவது தொழில்நுட்ப துறையில் சாதிக்கணும் என்று ஆசை "
"சரி நான் இப்பொது ஒரு முக்கிய சந்திப்புக்காக போறேன். அங்கே எனக்கு பொறுப்பானவரை சந்திப்பேன். அவருடன் பேசி முடிவெடுத்துவிட்டு உமக்கு சொல்லுறேன். அது மட்டும் உந்த இருக்கையில் இரும்" என்று சொல்லிவிட்டு உந்துருளியில் வெளியில் சென்றுவிட்டார் தளபதி சேகர்.
அவரது அறையில் அடுக்கி வைக்கப்படிருந்த புத்தகங்களில், பாலா அண்ணா எழுதிய "விடுதலை வேட்கையை" எடுத்து புரட்ட தொடங்கினான் நேசன். மனசிலே அம்மா, தங்கைகளின் எண்ணங்கள் வாட்ட தொடங்கின.
நேரம் போனது தெரியவில்லை. உந்துருளியின் சத்தம் கேட்டு நிமிர்ந்த போது, சிரித்தபடியே வந்தார் தளபதி சேகர்.
"தம்பி உம்மை எங்கட பிரிவிலையே இணைக்க சொல்லிவிட்டார். நீர் எங்களுடனே பணி செய்யமுடியும். உமக்கு தொலைதொடர்பு துறையில் பணியாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லைதானே" என்ற போது மகிழ்வுடன் தலையாட்டினான் நேசன்.
"தம்பி. இந்த பிரிவு மிகவும் ரகசியமானது. இங்கு நடக்கும் எந்த வேலை திட்டமும் வெளியிலே யாருக்கும் எக்காரணம் கொண்டும் தெரிய கூடாது. இந்த ரகசியங்கள் நாங்கள் சாகும்போது எங்களுடன் சாக வேண்டியவை புரிந்ததா..??. எங்கட இயக்கம் இண்டைக்கு இந்தளவுக்கு வளர்ந்திருக்கு என்றால் அதுக்கு இரகசிய காப்பு தான் முக்கியம் என்றதை எப்பவும் மனசிலே வைச்சிருக்க வேணும். சரியா "
"ஓம் அண்ணே".
"சரி தம்பி. உமக்கு ஒரு இயக்க பெயர் தமிழில் வைக்க வேண்டும். உமக்கு ஏதாவது பெயர் விருப்பமா ?"
"ராணி மைந்தன்" என்றான் நேசன்.
"ஏன் தம்பி இந்த பெயரில் ஆரும் உங்கட உறவினர்கள் வீரச்சாவா ?"
"இல்லை அண்ணா. எங்கள் அம்மாவின் பெயர் ராணி".
ராணி மைந்தனுக்கு அந்த வேலை மிகவும் பழகிபோனது. தன்னுடைய அறிவுத்திறமையை வைத்து மேலும் மேலும் அந்த தொடர்பாடல் துறையை விருத்தி செய்தான். தளபதி சேகருக்கும், ராணி மைந்தனை மிகவும் பிடித்து போனது. சில சந்தர்ப்பங்களில் அனைவராலும் கைவிடபட்ட உபகரணங்களை கூட ராணி மைந்தன் தன்னுடைய திறமையால் திருத்திஅமைத்தான்.
அந்த வன்னி நிலபரப்பில் மக்களுக்கு தொலைதொடர்பு சேவையை வழங்குவதில் ராணி மைந்தனின் பங்கு அளப்பரியதாக இருந்தது. ராணி மைந்தனின் தேவையை உணர்ந்து அவனது அடிப்படை பயிற்சி தள்ளி போய்கொண்டிருந்தது. ஏனையவர்கள் அடிப்படை பயிற்சியை முடித்து பெற்றோர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும், ராணி மைந்தனுக்கு அவனது வேலை ரகசியம் காரணமாக பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பை இழந்திருந்தான்.
ஒவ்வொரு நாளும் தனது நாட்குறிப்பில் அம்மா, அப்பா, தங்கைகளை பற்றி தான் என்ன நினைச்சேன் என்று எழுதிவருவான். சந்திக்கும் நாளில் கூட பேச நிறைய நேரம் கிடைக்காது என்பதால், இந்த நாட்குறிப்பை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று நிறையவே எழுதுவான்.
அன்று அவனுக்கு தெரியாது. இந்த நாட்குறிப்பை என்றைக்குமே அவர்கள் பார்க்க போவதில்லை என்று.
(தொடரும்)
பாகம் நான்கு இங்கே அழுத்துங்கள்