-
Posts
342 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by சுப.சோமசுந்தரம்
-
நேரத்துக்கேற்ற கதை நேர்த்தியாய் சொல்லப்பட்டுள்ளது. குற்றத்தின் அளவைக் காட்டிலும் தண்டனை மிகுதியாய்ப் போனது இரக்க உணர்வு மேலிடச் செய்கிறது. சில நேரங்களில் யாருக்கும் இத்தகைய சூழல் ஏற்படுவதுண்டு.
-
அக்னியஷ்த்ரா - இக்கதைசொல்லி ரசிக்கத்தக்க தனியொரு பாணியைக் கையாள்வது சிறப்பு. பெற்றோர் தந்த பெயரோ தாம் இட்ட புனைபெயரோ வடமொழியே தவிர (என் பெயர்கூட அப்படித்தான்), அவர் கையாளும் மொழியில் இயன்றவரை கலப்பில்லாத தமிழ்ச் சொற்களைக் கையாள்வதும் உருவாக்குவதும் கூடுதல் சிறப்பு. வாழ்த்துக்கள்.
-
அறம் என்பது என்னவென்றால்... - நிழலி
சுப.சோமசுந்தரம் replied to நிழலி's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
என்னே ஒரு அருமையான திறப்புக்களம் ! வடிவான எழுத்து. தொடர வாழ்த்துகள். -
வளமான எழுத்து வளவன் எழுத்து.
-
கவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்
சுப.சோமசுந்தரம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
முதலில் உங்கள் வாசிப்புக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி, திரு.ஈழப்பிரியன். நீங்கள் ரசித்து வாசித்தமை இருமுறை நீங்கள் அளித்துள்ள கருத்துக்களிலிருந்து தெளிவு. குறிப்பாக, உங்களிடமிருந்து இரத்தினச் சுருக்கமாக சில தத்துவார்த்த முத்துக்களை உதிர வைத்தது எனக்கான மகிழ்ச்சி. -
கவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்
சுப.சோமசுந்தரம் posted a topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
கவலையில்லாத மனிதன் சந்திரபாபு அவர்கள் முக்கியக் கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன். நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர். சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத் தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ? இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய் பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம். 24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும். கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார். வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”. - சுப. சோமசுந்தரம்- 10 replies
-
- 16
-
-
புனிதக் கருமாந்திரம் ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு, தலையில் தூக்கிக் கரகம் வைத்துக் கொண்டாடி, மனம் உருகிக் கரைந்து, அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறே மோவாய்க் கட்டையைத் தடவி விட்டு, பழைய நினைவுகளைக் கிண்டுகிறது, கிளறுகிறது, கொத்துக்கறி போடுகிறது என ஓர் அட்டுப்பிடித்த flashbackல் மூழ்கி, …. - ‘96’ என்னும் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது அல்லது ஒவ்வொரு வருடமும் அந்த ‘அமரகாவியத்திற்கு’, ‘ஒப்பற்ற(!) ஓவியத்திற்கு’த் திவசம் கொண்டாடப்படும் போது நடப்பவையே மேற்கூறியவை. படம் blockbuster வெற்றி என்று பிளிறுவதும் யாரைப் பார்த்தாலும் திரும்பத் திரும்ப அதன் புகழ் பாடுவதும்… பொறுத்தது போதும் என எழுத்தாணியுடன் பொங்கி எழுந்து விட்டேன். இத்தமிழ் மண்ணில் உருண்டு புரண்டு கதறி ஓலமிடும் அளவிற்கு அப்படம் உலகிற்குப் பறைசாற்ற விழையும் செய்தி அல்லது கடத்த விரும்பும் அம்மேன்மையான உணர்வு என்னவோ? ஆழ்ந்து உயர்ந்து குறுகி நீண்டு யோசித்துப் பார்க்கையில்தான் அந்த உன்னதச்(!) செய்தி புலப்பட்டது. ‘மணமான பின்னும் பழைய காதலின்/காதல்களின் நினைவுகளில் திளைத்துக் கிடக்கும் அந்த உயரிய (!) உணர்வு தவறில்லை’ என்பதே அது. ‘ஏன், மணமான பின் உணர்வு என்பதே இருக்கக் கூடாதா? உணர்வு என்பது உணர்வுதானே? அது எப்போது/எதற்கு/எங்கு வேண்டுமானாலும் வரலாம்’ என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்து என் அறிவுக்கண்ணைத் திறந்து வைத்த அந்த அறிவுக் கூடங்களுக்கான பாராட்டு(!) வாசகங்களைத் தயார் செய்ய 11 பேர் கொண்ட குழு ஒன்றை ஏவி விட்டிருக்கிறேன். அந்த அரும்பெரும் படைப்பை அநேகமாக எல்லோரும் கண்டிருப்பார்கள் என்பதால் இங்கு கதைச்சுருக்கம் தராமல் நேரடியாக எனக்கு உறுத்திய காட்சிகளைப் பகிரலாம் என எண்ணுகிறேன். பள்ளிப் பருவ இனக்கவர்ச்சி தற்காலத்தில் மிகச் சாதாரணமாக ரசனைக்குரியதாக உயர்த்திப் பிடித்துக் காட்டப்படுவதைப் பற்றிய நெருடல் மனதில் ஓடிக் கொண்டிருக்கையிலேயே அடுத்தடுத்த கொடுமைகள் அரங்கேறின. சாநக்கி எனப்படும் சானு – இவள்தான் கதையின் சானை… மன்னிக்கவும், தானைத் தலைவி. அவள் தலைவன் சிங்கப்பூரில் என்பதால், தானைத் தலைவனாக ர்ர்ராம். பள்ளிக்காலத்தில் சூழல் காரணமாகப் பிரிய நேரிட்டு பல வருடங்கள் கழித்து இருவரும், நண்பர்கள் அனைவரும் கூடுகையில் சந்தித்துத் தொலைக்கிறார்கள் ! சானு அப்போது ராமின் இதயத்துடிப்பை தொட்டுணர்வது கண்டு அவன் மயங்கி விழுவது; சானு தான் உண்ட உணவின் மிச்சத்தை அவனுக்கு அளிப்பது, ராம் அதே தட்டில் அதே ஸ்பூன் கொண்டு மிகுந்த பயபக்தியோடு பிரசாதம் போல் பாவித்து அத்தனை வருட பிரிவாற்றாமையை எண்ணி அதை ஆத்மார்த்தமாக உள்வாங்கி ரசித்து உண்பது; இருவரும் நடுராத்திரியில் சாலையில் உலாவித் திரிவது (ஆமா ! ஆமா! கையப் புடிக்காம தனிமனித விலகலோடதான்!), அவன் வீட்டிற்குச் சென்று (மழை! அவள் என்ன செய்வாள்? பாவம்!) குளித்து அவனது உடையை உடுத்திக் கொள்வது, அதுவும் எப்படி? அதை அணிந்து கண்களை மூடி ஆழ நுகர்ந்து அதில் அவனை உணர முற்படும் அந்தக் கண்றாவியையெல்லாம் எப்படி கவித்துவம் என ரசித்துத் தொலைப்பது? தன் கழுத்தில் தாலி ஏறும் கடைசி நொடியிலும் கூட அவனது வருகையை எதிர்ப்பார்த்திருந்ததாகவும், இன்று வரை மனம் ஒரு மாதிரி இருக்கும் போதெல்லாம் அவனது முகமே தனக்கு ஞாபகம் வருவதாகவும் கூறும் இந்த வெட்கங்கெட்டத்தனத்தை என்னவென்று சொல்ல? அதிலும் ராம் தனது திருமணத்திற்கு வந்திருந்தான் என்பதை அறிந்ததும், தலையில் அடித்து அவள் வெடித்து அழும் காட்சி உச்சக்கட்ட அசிங்கம். அப்படிப்பட்டவள் திருமணத்திற்கு இசைவு தெரிவித்திருக்கவே கூடாது. ‘அவள் சூழ்நிலை அப்படி’ என்ற ஓட்டை வாதத்துடன் வருபவர்களுக்கு – எனில், எல்லாவற்றையும் மனதில் இருந்து தூக்கி எறியும் துணிவும் தெளிவும் வாய்க்கப்பெற்றவளாக, புதிய வாழ்க்கைக்கு உண்மையாக நடந்து கொள்ளும் நேர்மை கொண்டவளாக இருந்திருக்க வேண்டும். ‘காதல்ங்கிறது ஆழ் மனசில அடிச்ச ஆணி மாதிரி; ஆப்லங்கேட்டாவில் அடி பட்டாலும் மறக்காது…’, ‘வாழ்க்கை கடைசி வரை அப்பப்போ நாம கடந்து போற ஏதோ ஒரு விஷயம் (இடம், பாடல், கவிதை, கதை, இத்தியாதி இத்தியாதி) மனசின் ஒரு ஓரமா உறைந்திருக்கும் பழைய காதலை நினைவு படுத்திட்டேதான் இருக்கும்’ என்பதெல்லாம் மனதின் ஓரம் படிந்துவிட்ட அசட்டுத்தனமான கறையை நியாயப்படுத்தி, மனசாட்சியை சாமர்த்தியமாக ஏமாற்றி, மிக வசதியாகக் குற்றவுணர்வில் இருந்து தப்பித்து, ஆக மொத்தத்தில் தன்னை நல்லவனா/ளாக வரித்துக் கொள்ள கூறப்படும் பிதற்றல்கள். இதுவெல்லாம் ‘காதல்’ என விளிக்கப்படுவதால்தான் அவ்வார்த்தை எனக்குக் கடுமையான ஒவ்வாமையைத் தருகிறது! இன்னும் ஒரு படி மேலே போய் ‘இதெல்லாம் ரொம்ப இயற்கையான விஷயம். அப்படியெல்லாம் switch போட்ட மாதிரியெல்லாம் இந்த உணர்வை தூக்கி எறிய முடியாது’ என்பார்கள் சானுக்களின் ஒன்று இரண்டு மூன்று விட்ட சகோதர சகோதரிகள். அந்த switch போட்டு மறக்க இயலவில்லை எனில், அந்த உடன்பிறப்புகள் மணம் புரிந்து கொள்ள மனதளவில் தயாரில்லை; அதற்குத் தகுதியும் இல்லை என்றே பொருள். போதாக்குறைக்கு சில அரைப்பைத்தியங்கள் ‘நாங்க இப்போ நல்ல நண்பர்கள் மட்டுமே. எங்களுக்கிடையில் வேறொன்றும் இல்லை’ என்று உளறுவது (புதிதாக வரையப்படும் அந்தக் கோட்டின் வரம்பைத் தீர்மானிப்பது மனது அல்ல! Afterall it is all a matter of pure biology and play of hormones.), முற்றுப் பெற்ற உறவை மீண்டும் மிகவும் பண்பார்ந்த நாகரிகமான முறையில் பேணிக் காப்பதாக(!) வாழ்த்துச் செய்திகள், பொதுவான குறுஞ்செய்திகள் பரிமாறி (இவையெல்லாம் மானங்கெட்டுப்போய் மனம் தேடும் காரணங்களே!) ஒருவருக்கொருவர் சொறிந்து கொள்வது, சுரண்டிப் பார்ப்பது என ஈனத்தனங்களில் ஈடுபடுவது - இவை அனைத்தும் ஒரு வகையான மனப்பிறழ்வே. சானுக்கள்(சானு வகையறாவைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் அனைவரையும் குறிக்கும்!) தங்கள் வாழ்க்கைத் துணைக்கு அவர்கள் இருவரது எதிர்கால வாழ்வின் மீது, அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தின் மீது ஒரு நிலையற்ற தன்மையைக்(uncertainty) கற்பிக்கிறார்கள். இதையே அந்த வாழ்க்கைத் துணை செய்தார்களானால் கண்டிப்பாக இவர்களால் தாங்கிக் கொள்ள இயலாது. ‘என்னால மறக்க முடியல’ என்று மணமான பின்பும் கடந்த காலக் காதலை நினைந்து ஒப்பாரி வைத்து, கண்கள் பனித்துக் கண்ணீர் உகுப்பார்களாயின், அதை விடப் பச்சைத் துரோகம் இருக்கவே முடியாது. அவர்கள் அந்தப் பசுமையான(!) நினைவுகளுடனேயே தனியாகக் காலத்தை ஓட்டுவதுதானே? எதற்கு இன்னொருவரின் வாழ்க்கையையும் பாழாக்கி…? அந்நபரின் வாழ்க்கைத்துணை இந்தக் கிறுக்குத்தனத்தை ஏற்றுக் கொள்ள இயலாமல் கொஞ்சம் கொஞ்சமாக அந்நபரிடமிருந்து தூரமாக விலகிச் சென்று காலப்போக்கில் ஓர் உணர்வற்ற வறட்சி நிலையை அடைவதுதான் இயற்கை. ஏதோ தனித்தனியாக வெவ்வேறு வீடுகளில் இருப்பதற்குப் பதிலாக ஒரே வீட்டில் (இந்தச் சமூகத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பொறுமை இல்லாமல்) குப்பை கொட்டுவார்கள். ‘எப்படி மற்றவர்களுக்கு இப்படம் சற்றும் உறுத்தவில்லை?’ என்று எண்ணியபோது இயக்குநரி(யி)ன் தந்திரத்தை சாமர்த்தியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எவ்வளவு கேடு கெட்ட கதையாயினும் அற்புதமான ஒளிப்பதிவு, நெஞ்சை ஊடுருவிச் செல்லும் வயலின் இசை மற்றும் மிகையில்லா நடிப்பு ஆகிய வஸ்துக்களைக் கொண்டு அந்தக் கருமம் பிடித்த கதையை உலகம் வியக்கும் படைப்பாகச் சமைத்திருக்கிறார்கள். எவ்வளவு சீர்கேடான விஷயத்தையும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சமூகத்தில் எளிதாக ஏற்றிவிடலாம் போலும். இப்படியாக படத்தின் ஒவ்வொரு நொடியும் வெறுப்பும் அருவருப்புமாகக் கழிந்தது. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் அநியாயத்திற்கு நல்லவனாகக் காட்டப்பட்ட ‘ராம்’ என்னும் பாத்திரப் படைப்பு. அவனது கண்ணியம் (!) படத்தின் வெற்றிக்குப் பெரும் காரணம். ஒருவேளை அந்தப் பெண் திருமணமாகதவளாகவும் ஒழுக்கமானவளாகவும், அவன் திருமணமானவனாகி இருந்து, சானு நடந்து கொண்டதைப் போல் அவன் அந்தப் பெண்ணிடம் நடந்து கொண்டிருப்பானாயின் (உதாரணமாக ‘நீ இன்னும் virginஆ?’ என்று சானு ராமிடம் கேட்டதைப் போல் கேட்பது… இன்னும் பல) அவனை எளிதில் ‘பொறுக்கி’ என அடையாளம் கண்டிருக்கும் இச்சமூகம். சமூக மதிப்புகள் இரு பாலருக்கும் பொதுதானே ! ஒவ்வொரு காட்சியிலும் திரையில் இறுதிவரை காட்டப்படாத சானுவின் கணவனுக்காகப் பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தேன். இவ்வளவிற்கும் அவள் கணவன் கொடுமைக்காரன் என்ற இம்மி அளவிலான நியாயப்படுத்துதல் இருந்தாலும் பரவாயில்லை. அவன் நல்லவன் என்றும் அருமையான குடும்பம் வாய்க்கப் பெற்றது என்றும் அவளே தரும் நற்சான்றிதழ் வேறு. ‘அந்த அப்பாவி ஜீவனுக்கு இன்னும் தன் மனைவியின் மனதில் இன்னொருவன் (ஓரமாகவோ என்ன எழவோ!) இருக்கிறான் என்ற உண்மை தெரிந்தால், இங்கு நடந்து கொண்டிருப்பது அறிய வந்தால் எவ்வளவு வலிக்கும்? சுக்கு நூறாக நொறுங்கிப் போய்விட மாட்டானா? இத்தனை நாள் அவளுடனான வாழ்க்கை மொத்தமும் பொய்யாகத்தானே தெரியும்?’ என்றெல்லாம் அந்த முகமறியா கதாபாத்திரத்தின் மீது கழிவிரக்கம் உருவானது. பாவப்பட்ட அந்தப் பிறவிக்காகப் பச்சாதாபமே மேலிட்டது. இவ்வாறாகத் திரைப்படம் முழுக்க துரோகத்தின் நெடியே தூக்கலாக… நாற்றம் தாங்கவில்லை ! ‘அதான் ஒன்றும் தவறாக நடந்துவிடவில்லையே? இருவரும் கண்ணியம் காத்தார்களே?’ என்று மகோன்னதமான கருத்தை முன்வைக்கும் ஆன்றோரே! சான்றோரே! அவள் சிங்கப்பூர் கிளம்பும் வரையிலான ஒவ்வொரு நிமிடத்தையும் தன் கணவனிடம்…. ஏன், அவள் தோழியிடம் விவரிக்கும் தைரியம் அவளிடம் உண்டா? ம்ஹூம்… இது சரிப்பட்டு வராது. இப்படியெல்லாம் சொன்னால் உங்களுக்கு உறைக்காது. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பெண் மணமான பிறகு அர்த்த ராத்திரியில் யாருடனோ பொறுமையாக அளவளாவிக் கொண்டே நடந்து செல்வதைக் காணுகையில், ‘பாரேன் ! எவ்ளோ ஒழுக்கமா ஒரு அடி தள்ளி இருந்தே பேசிட்டு நடந்து போறா? பிரமாதம்’ எனப் புளகாங்கிதம் அடைவீர்களா அல்லது ‘இந்நேரம் யாரு கூட இப்பிடிப் போகுது இந்தத் தறுதலை, அதுவும் பிள்ளைய வீட்டுல விட்டுட்டு’ என்பீர்களா? ‘அந்தப் படம் ஓர் அழகான கற்பனை மட்டுமே ! எல்லாவற்றையும் வாழ்வில் பொருத்திப் பார்க்கக் கூடாது’ எனத் தத்துவம் பேசுபவர்களுக்கு – Rapunzel, Cinderella, Snow White போன்ற fantasyகள் ரசனைக்குரியவையே. இந்தப் படம் நிதர்சனத்திற்கு வெகு அருகில் இழையோடிச் சென்று அந்நிகழ்வுகளை ஏதோ எதார்த்தம் போலவே காண்பித்து ஒரு மாயையை உருவாக்கி வைத்திருக்கிறது. எனவே இதைப் போற்றுதலுக்குரியதாகப் பாவிப்பது மடமை. படம் எல்லோராலும் ரசிக்கப்படுகிறது என்பதற்காகவே அது சரி என்றாகிவிடாது. “If fifty million people say a foolish thing, it is still a foolish thing” – Bertrand Russell “A lie doesn’t become truth, wrong doesn’t become right and evil doesn’t become good just because it’s accepted by a majority” – Rick Warren ‘காதல்ங்கிறது ஒரே ஒரு செடியில் ஒரே ஒரு முறைதான் பூக்கும்…’, ‘காதல்ங்கிறது பட்டாம்பூச்சி மாதிரி; புழுப்பூச்சி மாதிரி….’, ‘வாழ்க்கையில் ஒரு தடவையாவது காதலித்துத் தோல்வி அடையாதவர்கள் இருக்கவே முடியாது’, ‘கல்யாணத்திற்கு முன்னால கண்டிப்பா எல்லோருக்கும் ஒரு காதல் இருந்திருக்கும்’, ‘காதல்னா……’ என சில பல மேதாவிகள் சினிமாவில் மொன்னைத்தனமாகப் பக்கம் பக்கமாக வசனம் பேசி வைத்ததில், ‘ஆ’ன்னா ‘ஊ’ன்னா அவனவன் தத்துவம் என்ற பெயரில் கொக்கரித்து வைத்ததில், கண்ட குப்பையையும் ‘இதுதான் உலக நியதி’ என வசனகர்த்தாக்கள் அற்பமாக ஒரு விதியை உருவாக்க முனைந்ததில் விளைந்த தாக்கம்தான் இந்தக் கைகூடா காதல்களின் ஆராதனை. சமூகப் பொறுப்பின்றி சமூகப் பிறழ்வுக்கான போதனை. காதல் தோல்விக்குப் பிறகு அதிலிருந்து விடுபட இயலாமல் அல்லது விரும்பாமல், அதேசமயம் வாழ்வில் தனிமையை எதிர்கொள்ளப் பயந்து ஒரு துணையைத் தேர்வு செய்வது சுயநலம் அல்லாமல் வேறு என்ன? இவர்களுக்கு அத்துணையின் உணர்வுகளோடு விளையாட எந்த உரிமையும் கிடையாது என்பதை யார் புரிய வைப்பது ? பழைய காதலைத் தூக்கிப் போடுவது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் இல்லை. தயவுசெய்து தண்டக் கருமாந்திரங்களுக்கெல்லாம் புனிதத்தை ஏற்றித் தொலைக்காதீர்கள் ! - சோம. அழகு நன்றி, 'திண்ணை' இணைய வார இதழ்
-
அட கல்யாணமேதான் ! - சோம. அழகு அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் ஆண்மகனை முறைப்படி தத்தெடுக்கும் வைபவம் !’ கல்யாணம், திருமணம் என்றெல்லாம் கூட நீங்கள் பெயரிட்டு இருக்கிறீர்களே ! அதேதான் ! “ஓ ! என்னமோ ‘அட கல்யாணமே!’னு பகடியா கல்யாண ஆரவாரங்களைக் கிண்டல் செய்து ஒரு காலத்தில் எழுதின? இப்போ எப்படி? தடபுடலா விசேடங்கள் முடிஞ்சுதா?” என அவசரமும் ஆர்வமுமாய்க் கேட்போருக்கு – ‘இந்தக் கட்டுப்பட்டி ஆட்டுமந்தைச் சமூகம் வழங்க முடியாத நியாயத்தை கொரோனா எனக்கு வரமாக வழங்கியது’. கருப்பும் சிவப்புமே எனக்கான நிறங்களாகிப் போன பின்பு, (வெண்நுரை பொங்கி ஆர்ப்பரிக்கும் நீலக் கடலின் கரையையும் பசுமையைப் போர்த்தியிருக்கும் மலை முகடுகளையும் புரவியேறிக் கடந்து வந்து என்னைக் கண்டடையும் இளவரசன் தோன்றும்) வண்ண வண்ணக் கனவுகள், வெட்கம், நாணம் போன்ற தண்டக்கருமாந்திரங்கள் எல்லாம் துளியும் வருதில்லை! முழுமையாக என் விருப்பப்படி பதிவுத் திருமணம் அல்லது சுயமரியாதைத் திருமணம் என்பதில்லாமல் போனாலும் கூட, குறைந்த அளவிலான கூட்டத்தோடு நன்றாகவே நடந்தது. ‘குறைந்த’ என்பதில் சுப.உதயகுமார் அங்கிள், பாமரன் அங்கிள், அப்பாவின் மூட்டா (MUTA) பேரியக்கத் தோழர்கள் பெரும்பான்மையாகக் கலந்து கொள்ள இயாலாமல் போன வருத்தம் ஒன்று மட்டுமே எனக்கு ! மற்றபடி பிரச்சனை பிடித்த, சி(சீ)க்கு பிடித்த சில உறவுகளைத் தாமாக வர இயலாமல் செய்த கொரோனாவை மெச்சாமல் இருக்க முடியவில்லை. இதற்கு நன்றி நவிலும் முகமாக, மணமான இரண்டு மாதங்கள் கழித்து கொரோனாவை வீட்டிற்கு அழைத்து வந்து அப்பா, அம்மா, தங்கை, நான் என ஆளுக்கு நான்கு நாட்கள் வீதம் நன்கு கவனித்து மரியாதை செய்து வழியனுப்பி வைத்தோம். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னான (நன்றி - தொல்காப்பியம்) இக்காலத்தில் காதலுக்கோ (இன்றைய பெரும்பாலான காதல் திருமணத்தில் முடிவதில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்) காதல் திருமணத்திற்கோ ஆன மெனெக்கிடுதல் எனக்கு இல்லாமல் போனது இயற்கையாகவே தோன்றியது. போதாக்குறைக்கு சிக்மண்ட் ஃப்ராய்ட் போன்றோரை வாசித்துத் தொலைத்தது வேறு ! எனவே ‘மணமான பின்பு கொண்டவனுடனான காதல் மட்டுமே உண்மையானது என்ற கொள்கைப் (!) பிடிப்பு !’ என்று சுற்றி வளைத்தும் கூறலாம்; அல்லது காதலில் தொபுக்கடீர் எனக் குப்புற அடித்து விழுந்து முசரக்கட்டையைப் பெயர்த்துக் கொள்ளும் பொறுமையும் சாமர்த்தியமும் போதவில்லை என்று நேரடியாகவும் கூறலாம். சாந்த சொரூபியான (அட, நம்புங்க !) என் முகத்தைப் பார்த்ததும் என் மாமனாருக்கும் மாமியாருக்கும் “இந்தப் பொண்ணுக்கு மூக்கு நுனியில சம்மணம் போட்டுல்ல உக்காந்துட்டு இருக்கும் கோபம்!” என்று அவர்கள் ஜோசியர் சொன்னது அடியோடு மறந்து போய், “இவனை இனி சீராட்டிப் பாராட்டி வளர்த்தெடுக்கச் சரியான பெண் இவளே!” என்று எக்குத்தப்பாகத் தோன்றி வைக்க, என் கலகலப்பான பேச்சைப் பார்த்து மாப்பிள்ளைக்கு பல்பு எரிய, தலைவனைப் பார்த்ததும் எனக்கு முன்னால் என் அப்பாவிற்குத் தலைக்கு மேல் பிரகாசமாய் பல்பு எரிந்து, “இவளைச் சமாளிக்கவே அவதாரம் எடுத்தவர் இவர்ர்ர்” என்று தோன்ற…. அப்புறம் என்ன, ஐயர் யாத்தனர் கரணம் தான் (மீண்டும் தொல்காப்பியம்!). இரு வீட்டாரும் ‘April Fool’ சொல்லிக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை ! ஹிஹிஹி… மணமகன் வீட்டார் வந்து பார்த்துச் சம்மதம் சொல்லிச் சென்ற பின், திருமணத்தை நோக்கிய அடுத்த நகர்வாகப் பெண்ணின் பெற்றோர் பெரும்பாலும் உறவினரை மணமகன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்கள் வரன் தேர்வினை உறுதி செய்வது வழக்கம். மாறாக என் விஷயத்தில் பெற்றோருடன் தோழர் பொன்னுராஜ் அங்கிள், கலா ஆன்டி இவர்கள் மட்டுமே சென்றது எனக்கான மனநிறைவு. திருமணப்பதிவின் போதும் என் தரப்பில் சாட்சியாக தோழர் நாகராஜன் அங்கிள் வந்தது மேலும் எனக்கான பெருமை. அப்பாவுக்கும் எனக்கும் தலையாய உறவினர்கள் தோழர்களே என்பது ஈண்டும் நிலைநாட்டப்பெற்றது பேருவகை ! புது வாழ்க்கை, புதிய உறவுகள், புதிய தொடக்கம், புது இடம். முழுமையாகத் துடைத்துச் சுத்தம் செய்யப்பட்டதைப் போல் மனம் சுற்றிமுற்றி இருந்த எல்லாவற்றையும் நுட்பமாக ரசிக்கத் துவங்கியது. புதுமையை உள்வாங்கிக் கொள்ளவும் மனமுவந்து பூசிக்கொள்ளவும் இது ஒரு நல்ல உத்தி. கிட்டத்தட்ட மலையடிவாரத்தில் அமையப்பெற்ற, நான் வாக்கப்பட்ட(!) வீடு ரசிப்பதற்கேற்ற சூழலையும் வாய்ப்பையும் உருவாக்கித் தந்தது. நமக்குத்தான் ரசித்துவிட்டுக் கடந்து செல்லும் நல்ல பழக்கமில்லையே ! உடனே அதை இரண்டொரு வரிகளில் வடித்து வடிகட்டிச் செதுக்கிப் பெற்றோருக்கும் உடன்பிறந்த ஜந்து குட்டிக்கும் அனுப்பித் தொலைக்கும் கொடூர வியாதி வாய்த்திருக்கிறதே ! ‘மலையின் மீது சோம்பிக் கவிந்து கிடந்த முகில் இப்போதுதான் தவழ்ந்து செல்லத் துவங்குகிறது’ ‘எங்கே மண்ணுக்குள் சென்று விடுவோமோ என்கிற பதட்டம். அந்தப் பயத்தில் தரையைக் கூட நனைத்து விடாத கவனம். சிணு சிணுவென்று சிணுங்கும் இத்தூறலும் ரசிக்கவே செய்கிறது’ ‘இங்கு அடுப்பங்கரை சாளரத்தில் நான் இடும் மிக்சரை எனக்குப் பழக்கப்பட்ட அதே கடுக் முடுக் சத்தத்துடன் உட்கொள்ளும் அணில் மற்றும் காக்கைகள் புதிய சொந்தங்களாகிப் போனதில் அங்குள்ள அணிலும் புறாவும் இன்னும் என் சாளரத்தில் பசியாறிக் கொண்டிருப்பதாய் நம்ப விழைகிறேன். ஏனோ இதில் misophonia வருவதில்லை’ முதன்முறையாக பெண்ணைப் பிரிந்த துக்கம் தொண்டை, மூக்கு, காது என மானாவாரியாக எல்லாவற்றையும் அடைக்க, நான் இப்படியெல்லாம் எழுதி அனுப்பியதைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தோ என்னவோ, ‘கவித ! கவித !’ என்று வசைபாடினார்கள் என் பெற்றோர். இப்படியே நிறைய எழுதித் தள்ளி ‘கவிதையல்ல !’ என்னும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிடுமாறு அப்பாவிடம் இருந்து நேயர் விருப்பம் வேறு ! உணர்ச்சிக் களஞ்சியமான அம்மா கூட நான் மணமாகிச் சென்ற நிதர்சனத்தை நான் எதிர்ப்பார்க்காத பக்குவத்துடன் ஏற்றுக்கொண்டாள். உலகியல் விஷயங்களின் எதார்த்தத்தையும் நடைமுறையின் இயல்புகளையும் அதீத நிதானத்தோடு அணுகும் அப்பாதான் இதை ஏற்றுக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள் என அம்மாவின் வழியாக அறிந்தேன். என்னைக் கொண்டவனுடைய வீட்டில் விடும் போது, “இதெல்லாம் இயற்கையாய் நடப்பதுதானே? உலக வழக்கம்தானே?” என்பதைப் போன்ற முகபாவத்தோடு வலம் வந்தார்கள். வண்டியேறிய மறு நிமிடம் என் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்து விழுந்தது, அப்பாவிடம் இருந்து. “Slowly it dawns on me that we are going to live in a house without Alagu”. நான் இல்லாது போன தனது அறையை எங்ஙனம் எதிர்கொள்வது எனப் புரியாமல் ‘என்னவோ போல் இருக்கு’ என்று அமைதியாய் முடித்துக் கொண்டாள் தங்கை. அதிகாலைப் புலரியில் நீட்டி முறித்து எழ முயலும் போதெல்லாம் கணப்பொழுது சுருக்கிப் பிடித்து இழுக்கும் பின்னங்கால் தசை, நாள் முழுக்க நின்று தீர்க்கும் அம்மாவை அழைத்து வருகிறது. என் விரல்களின் நுனியில் நிரந்தரமாகக் குடியேறத் துவங்கும் கறைகள், எங்களுக்காகக் களிப்போடு கறையைப் பூசிக்கொண்ட அம்மாவின் விரல்களை நினைவுபடுத்துகிறது. அவளது உள்ளங்கை சொரசொரப்பு பிஞ்சினும் மென்மையாய் இருந்த எனது கைகளுக்கு இன்னும் சில நாட்களில் கடத்தப்படுவதில் மகிழ்ச்சியே ! இவற்றிலும் இன்னும் பலவற்றிலும் மனநிறைவு பெறும் சூட்சமத்தையும் கூட மறைமுகமாய்க் கற்றுக் கொடுத்திருக்கிறாள் போலும் ! உணவில் எல்லோரும் தெரிவு செய்தது போக மிச்சமிருப்பதே தனக்கு என்ற விதியைத் தன்னிச்சையாக உருவாக்கி எங்களது நிறைவிலேயே அகமகிழ்வு காணும் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறையவே உண்டு. அம்மாவுக்கு(ம்) மிகவும் பிடித்த இட்லி உப்புமா எங்கள் உபயத்தில்(!) ஒரு போதும் அவளுக்குக் கிட்டியதேயில்லை. “ஒரு மாசமாவது கவனமா சமையல் செஞ்சு கையில சுட்டுக்காம இருந்து காமியேன். பாப்போம்” என்று கூறும்போதெல்லாம் கண்சிமிட்டி புன்னகைத்து வைப்பாள் அம்மா. இப்போது ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு முறையாவது நான் வாங்கும் சுடுபுண், வலியையும் தாண்டி அவளது புன்னகையைச் சூடிச் செல்கிறது. என் சமையல் ரசித்து உண்ணப்படுவதைக் கண்டு கிட்டும் நுண்ணிதின் மகிழச் செய்யும் தருணங்கள் அச்சிறு சிறு காயங்களை மாயமாக்குகின்றன. “இப்போதுதான் கல்யாணம் முடிஞ்சுது. அதுக்குள்ள ஏன் எல்லாத்துக்கும் ‘நான்.. நான்’னு நிக்குற? எல்லா வேலையையும் நான் பாத்துக்குறேன்… நீ போ” என்று செல்லக் கோபம் காட்டும் போது, அடுக்களையில் நான் நுழையும் நொடியில் இருந்து நான் வெளியேறும் வரை ‘ஜாக்கிரதை’, ‘கவனம்’, ‘பாத்து..’ என ஓராயிரம் முறை பதற்றத் தொனியில் அதட்டும் போது, ‘அய்யய்யோ ! வேண்டாம்.. போதும்’ என நான் கால் பிடித்து விடுகையில் நெளியும் போது, காலை நேர இளவெயிலில் இனிமையாக அளவளாவிக் கொண்டிருக்கும் போது, கார் பயணத்தின் போது ‘வா…கொஞ்ச நேரம் தூங்கு ஊரு போற வரை’ என தம் மடியைத் தந்து தலை கோதி விட்ட போது, மனம் விட்டு என்னிடம் பழைய கதைகளைப் பகிர்ந்து கொண்ட போது… இன்னும் பற்பல தருணங்களிலும் எனது இன்னொரு தாயாகிப் போனார்கள் என் மாமியார். ‘தேள் கொட்டுகிறது’ எனத் தெரிந்தாலும் அதனிடமும் அபத்தமாக அன்பைக் காட்டும் ஜென் குருவைப் போல இந்த உலகின் நடைமுறைக்குச் சற்றும் பொருந்தாத மற்றும் தேவைக்கு அதிகமான நல்ல உள்ளத்தோடு இருக்கும் எனது மாமானார். சமையல் கலையின் நுணுக்கங்களைக் கற்றுத் தருவது, செம அரட்டை அடிப்பது என என்னைத் தனது குட்டித் தங்கையாகவே பாவிக்கும் சுகன்யா அக்கா. பக்குவமும் நிதானமும் கூடிய உடன் பிறந்த சகோதரன் அமையாத குறையை கார்த்தி அத்தான் ஈடு செய்கிறார்கள். அக்கா மற்றும் அத்தானின் கிண்டலிலும் கேலியிலும் இழையோடும் உரிமை அவர்களை என் மனதிற்கு மிக நெருக்கமாக அழைத்து வந்ததில் வியப்பேதும் இல்லை ! என் தங்கையின் பிரிவாற்றாமையை நான் சற்றும் உணர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே அதே குணாதிசயங்களோடு படைத்து அனுப்பப்பட்ட குரு, என் கொழுந்தன். அனைவரின் கைகளுக்குள்ளும் குட்டி தேவதையாகவே வலம் வரும், நான் பெறாமலேயே எனது மூத்த மகளாகிப் போன, அத்விகா. அப்புறம்… எனது கோணங்கித்தனங்களைச் சகித்துக் கொள்ள, எவ்விதத் தயக்கமும் இன்றி நான் நானாக இருக்க, என்னில் உறைந்திருக்கும் குழந்தைத்தனத்தை முழுமையாக வெளிக்காட்டிக்கொள்ள, என் பெற்றோர் இதற்கென்றே அளவெடுத்துக் கண்டுபிடித்துத் தந்த, எனக்கென அமையப் பெற்ற, பல்வேறு வேலைகளுக்கு இடையில் காலப்போக்கில் என்னை நான் தொலைத்துவிடாமல் பார்த்துக் கொள்ள, எனக்கு எல்லாமுமாகிப் போன என்னவன். “இத வாங்கிக் குடுங்க.. அங்க கூட்டிடுப் போங்க… இப்படியெல்லாம் நொச்சு பண்ணவே மாட்டியா? நீ மட்டும் ஏன் இப்படி இருக்க?” – பாராட்டுப் பத்திரம் வாசித்த என்னவனிடம் புத்தகங்கள் வாங்கித் தரச் சொல்லிப் பெற்றுக் கொண்டேன். இக்கேள்விகள் வந்து விழுந்த போது ஒரு புறம் பெருமை(!) பொங்கி வழிய மறுபுறம் பெரும்பாலான பெண்களுக்குரியதாகிப் போன பண்புகள் என்னில் வேரூன்ற விடாது பார்த்துக் கொண்ட காம்ரேடு தோழர்கள் அமையப் பெற்ற என் சூழலை நினைத்துக் கொண்டேன். என்னில் எட்டிப் பார்க்கும் பெண்மை கண்டு மகிழும் தருணங்களும் உண்டு… ‘கண்ணும் எழுதேம்’, ‘வெய்துண்டல் அஞ்சுதும்’ என என்னவனில் முழுமையாகக் கரைந்து போகவே விழைகிறேன்… ‘Life is not a fairy tale and am no Disney princess’ என்ற அவதானிப்புடன். இவையனைத்தும், மணமான புதிதில் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படும் உற்சாகமாக மட்டும் நின்று விடாது என்றே நம்ப விழைகிறேன். அதாவது, பாழாய்ப் போன ஆங்கிலத்தில் தோய்ந்து போன சமூகத்தில் (என்னையும் சேர்த்துதான்) இப்படியும் சொல்லித் தொலைக்கலாமோ – Let me hope things do not get over just as an initial euphoria. - சோம. அழகு நன்றி, திண்ணை இணைய வார இதழ் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு திண்ணை இதழிலேயே 'அட கல்யாணமே !' என்ற கட்டுரை வெளியிடப்பட்டது. அதனை மேலே பதிவிட்ட 'அட கல்யாணமேதான்!' என்ற கட்டுரையின் முன்பதிவாய்க் (prequel) கொள்ளலாம். 'அட கல்யாணமே !' என்ற கட்டுரையின் மின் இணைப்பு : http://puthu.thinnai.com/?p=34480
-
நட்பென்ன உறவென்ன ! by சுப.சோமசுந்தரம்
சுப.சோமசுந்தரம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in சமூகச் சாளரம்
தோழர்கள் அனைவருக்கும் நன்றி. வாசிப்புக்கு நன்றி. பாராட்டிற்கும் நன்றி. -
பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.
சுப.சோமசுந்தரம் replied to உடையார்'s topic in வாழிய வாழியவே
நண்பர் உடையார் அவர்கள் ஈராயிரம் பிறை கண்டதற்குச் சமமாய் வாழ்த்துகிறேன். -
குறையொன்றுமில்லை -சுப. சோமசுந்தரம் சமூக வலைதளத்தில் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் தலைப்பு ‘ஓடிப்போவதெல்லாம் உடன் போக்கல்ல’. அதில் நான் பதிவு செய்த கருத்து: ‘சிறகு முளைக்கும் முன்னர் காதல் வயப்படுவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் அப்போதே காதலுக்காகப் பெற்றோரையும் உற்றோரையும் பிரிந்து சென்று அல்லல்பட்டு மீண்டும் அப்பெற்றோரிடம் தஞ்சம் அடைவதோ அல்லது வேறு முடிவெடுப்பதோ காதலின் புனிதத்திற்குக் களங்கம் கற்பிப்பது. தன்னையும் தன் இணையையும் காக்கும் திறன் பெற்ற பின்னர், காதலை ஏற்றுக் கொள்ளாத பெற்றோரை மீறிச் செல்வது ஏற்புடைத்து. அப்படித்தான் சங்க இலக்கியங்களில் ‘உடன்போக்கு’ சுட்டப் பெறுகிறது. தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன் கொடிய விலங்குகளிடமிருந்து அவளைக் காக்கும் வல்லமை கொண்டவனாகக் குறிஞ்சித் திணையில் சித்தரிக்கப்படுகிறான்; உழவு முதலிய அந்தந்த நிலம் சார்ந்த தொழில் மேற்கொண்டு பொருள் வலிமை பெற்றும் திகழ்கிறான்.’ சரி. இப்போது கையிலெடுத்த தலைப்புக்கு வருவோம். மேற்கூறிய கட்டுரையை வாசித்த தோழர் ஒருவர், “நீங்கள் காதலுக்கு எதிரியல்ல என்று எவ்வளவுதான் உரக்கக் கூறினாலும், ‘ஓடிப்போதல்’ என்ற சொல்லாடலே காதலைக் கொச்சைப்படுத்துவதாய் உள்ளது” என்று விமர்சித்தார். மேலும், போக்குவரத்து சாதனங்கள் பெரிய அளவில் தோன்றாத காலத்தில் தோன்றிய சொல் ‘ஓடிப்போதல்’ என்றெல்லாம் வாதிட்டார். எத்தனையோ சொற்களுக்குப் பெயர்க்கரணமும் வேர்ச்சொற்களும் பழங்காலத்து வழக்கம் சார்ந்தே அமையும். அதற்காகப் பெயர் மாற்றம் தேவையில்லை என்று அவர் இரண்டாவதாக வைத்த வாதத்தைப் புறந்தள்ளினேன். இனி ‘ஓடிப்போதல்’ என்ற சொல் காதலைக் கொச்சைப் படுத்துகிறது என்ற வாதத்திற்கு வருவோம். இது சமூகம் உருவாக்கிய உளவியல் சார்ந்த விஷயம் என்பது என் கருத்து. ஓடிப்போய்- அதாவது, பெற்றோரையும் உற்றோரையும் எதிர்த்து- திருமணம் செய்வது தரக்குறைவானது என்ற உளவியலை பிற்போக்குத்தனமான சமூகம் உருவாகியது. இது தாழ்வானது என்ற கருத்து ‘ஓடிப் போகிறவர்களின்’ ஆழ்மனதிலும் அவர்கள் அறியாமலே பதிந்தது. இத்தாழ்வு மனப்பான்மை, உள்ளத்திலிருந்து ‘ஓடிப் போதல்’ என்ற சொல்லுக்குத் தாவியது. சொல்லை மாற்றினால் மட்டும் அத்திருமணத்தின் மீதுள்ள குறையுணர்ச்சியோ வெறுப்போ கட்டுப்பெட்டிகளுக்கு மாறிவிடப் போகிறதா, என்ன? “தினமும் காலையில் ஐந்து கிலோமீட்டர் ஓடுகிறேன்” என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்வது போல “நானும் இவளும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டோம்” என்று பெருமிதத்தோடு சொல்லிப் பாருங்கள். அப்போது ‘ஓடிப் போதலின்’ உயர்வு தெரியும். அதை விடுத்துச் செயற்கையாக ஒரு புதிய சொல்லை உருவாக்கி ஏற்கெனவே உள்ள சொல்லின் கவித்துவத்தை ஏன் இழக்கிறீர்கள்? இனி சிந்தனை சங்கிலித் தொடராகிறது. சுமார் முப்பது வருடத்திற்கு முந்தைய நிகழ்வு. அலுவலக உதவியாளர் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட துறையில் பியூன் யாரென்று கேட்டேன். அக்கேள்வி அவர் மனதைக் காயப்படுத்தியதோ என்னவோ, அவர் பதில் சொன்னார், ”நாங்களெல்லாம் O.A. (Office Assistant) சார். Peon என்று இப்போது யாரும் கிடையாது.” அரசாங்கத்தில் இப்பெயர் மாற்றம் நிகழ்ந்திருப்பது குறித்து நான் அறியாததற்கு முதலில் வெட்கப்பட்டேன். வகிக்கும் பொறுப்பின்/பதவியின் பெயர் என்னவோ, அவ்வாறே குறிப்பிடுவது என் கடமை. மேலும் அவர் எப்படி விரும்புகிறாரோ அப்படி நாம் குறிப்பிடுவதே விவேகம். ஆனால் இது குறித்த சிந்தனைப் பகிர்வில் தவறேதும் இல்லை. இப்பெயர் மாற்றத்திற்கான காரணம் அல்லது பழைய பெயர் குறிப்பிட்டதை அந்த ஊழியர் விரும்பாததற்குக் காரணம் பற்றி யோசித்துப் பார்க்கிறேன். மீண்டும் இச்சமூகமே காரணம் என்று தோன்றுகிறது. ஒரு பியூனின் மகன் கலெக்டர் ஆகிவிட்டான் என்று செய்தித்தாளில் எழுதிக் கொண்டாடும் சமூகம், “அப்போ ஒரு பியூனின் சேவை கொண்டாடப்பட வேண்டாமா?” என்றெல்லாம் சிந்திப்பதில்லை. “அவர் படித்த படிப்பு கலெக்டர் பணிக்கானது; அப்பணியை விரும்பி ஏற்றார்” என்று சமநிலை நோக்கோடு சமூகம் கடந்து செல்வதில்லை. “எனது பல்கலைக்கழகத்தின் தலைவரானாலும் துப்புரவுத் தொழிலாளியானலும் எல்லோரிடமும் ஒரே (மரியாதையான) தொனியில் தான் பேசுவேன்” என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் முதிர்ச்சியை இச்சமூகம் பெறவேண்டும். நேர்மையான எத்தொழில் ஆனாலும் அதன்மீது சமூகத்திற்கு மரியாதை ஏற்பட வேண்டும்; அத்தொழில் முனைவோருக்கும் ஏற்பட வேண்டும். அதுவரை பெயர் மாற்றம் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை. “அவன் வெறும் பியூன்தான்யா” என்பதற்குப் பதிலாக “அவன் வெறும் O.A. தான்யா” என்பது தொடர்கதையாகும். இன்னும் சிறிது காலம் கழித்து O.A. என்பதற்குப் பதிலாக வேறு புதுப்பெயரைத் தேடிய பிறகும் அக்கதை முற்றுப்பெறாது. சிந்தனைச் சங்கிலி தொடர்கிறது. சாதி என்ற ஒழிக்கப்பட வேண்டிய இழிவு தொடரும் போது சாதிப் பெயர்களும் தொடரத்தானே செய்யும்! ‘உயர்சாதிகள்’ என்னும் நாசக்காரக் கும்பல்களால் விலக்கப்பட்ட அல்லது படிம நிலைகளில் குறைக்கப்பட்ட சாதியினர், தாழ்வு மனப்பான்மையினாலோ, நியாயமான கோபத்தினாலோ தம் சாதிப் பெயரை மாற்றிக் கொள்வது இங்கு நினைவு கூரத்தக்கது. சூழ்நிலையால் எனக்கு அதிக நண்பர்கள் வாய்த்த கோனார் சமூகத்தை மேற்கோளுக்கு எடுக்க நினைக்கிறேன். பொதுவாக சாதிப் பெயர்கள் சமூகத்தில் அந்தந்த சாதிகளின் தலைமைப் பண்பை நிலைநிறுத்துவதாய் அமையும். அது உயர்வு மனப்பான்மை அல்லது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக இருக்கலாம். பிரம்மத்தில் தோன்றியோர் என்பதைக் குறிக்க பிராமணர் என்றனர். முதன்மையானோர் என்பதற்கு முதலியார் என்றனர். இதுபோலவே தேவர், மறவர், மூப்பனார் போன்ற பெயர்களைக் காணலாம். கோன் என்றால் தலைவன்; எனவே கோனார். பெரும்பாலான கோனார்க்குக் காரணம் புரியாமல், ‘உயர் சாதியினர்’ தந்த தாழ்ச்சியுடன் அச்சாதிப் பெயரைப் பார்க்கலாயினர். சாதிக் குறை மனதில் தான் உண்டு என்பதறியாமல், எங்கிருந்தோ வந்த ‘யாதவர்’ என்ற பெயரைத் தமக்குச் சூட்டி மகிழ்ந்தனர். இம்மாற்றத்தால் ‘தலைமைப்’ பொருள் போனது; தமிழ் போனது; இன அடையாளம் போனது. ஆனால் குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் சமூகத்தில் போகவில்லை. இத்தருணத்தில் நான் கோனார் சமூகத்தில் பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் ஏற்படுகிறது. என் பெயர் அச்சமூகத்தில் பொதுவாக வழங்குவதில்லை என்பதால், தற்காலிகமாக என் பெயர் செல்வராஜ் என்று வைத்துக் கொள்வோமே! அழைப்பிதழ் ஒன்றை அச்சமூகத்தில் யாராவது ‘செல்வராஜ் யாதவ்’ என்று முகவரியிட்டு எனக்குக் கொடுக்கும்போது, “சாதிப் பெயரில்லாமல் கொடுங்கள். அல்லது செல்வராசுக் கோனார் என்றாவது எழுதுங்கள்” என்று சொல்ல ஒரு வாய்ப்பாவது அமைந்திருக்கும். இவ்வேடிக்கைக் குறிப்பு அனைத்துச் சாதிகள் குறித்தும் பொருந்தும். இக்கட்டுரைக்கான சங்கிலியில் இறுதிக் கண்ணி. ஆங்கிலத்தில் Physically handicapped, Physically disabled, Physically challenged என்று தொடர்ந்து இப்போது Differently abled என்று வந்து நிற்கிறது. தமிழில் உடல் ஊனமுற்றோர் எனத் தொடங்கி மாற்றுத் திறனாளிகள் என நிற்கிறது. நான் இப்போது எடுத்த பொருள் யாதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஒவ்வொரு நிலையிலும் எழுந்த மாற்றுக் கருத்தின் காரணமாக இப்பெயர் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். இம்மாற்றங்களைத் தாண்டி அவர்களை இச்சமூகம் முழுமையாக ஏற்றுக் கொள்வதும் அவர்களுக்கான வாய்ப்புகளை அமைத்துத் தருவதுமே முதன்மையானது என்று புரிதல் வேண்டும். இனி, மாற்றுத் திறனாளி என்ற சொல்லுக்கும் மாற்றுத் திறனாளியான தோழர் ஒருவரின் மாற்றுப் பார்வையைப் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன். அவரது வாக்கில், “என்னைத் தூக்கிப் பிடிக்க இச்சொல்லாடலுக்காக சமூகம் மெனக்கிட்டிருப்பது மகிழ்ச்சி. ஊனம் என்பது உடலில் ஏற்பட்ட குறைதான். குறையைத் தந்த வாழ்க்கையே அதனை ஏற்று வாழவும் கற்றுத் தந்திருக்கிறது. எனக்கு மாற்றுத் திறன் ஏதும் இருந்தால்தான் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? என் குறையோடு என்னை ஏற்றுக் கொள்ளாதா, என்ன?” இந்தத் தன்னம்பிக்கையை அளிப்பதே சமூகத்தின் தலையாய கடமை. மற்றபடி பெயரில் பெரிதாய் என்ன இருக்கிறது? இவ்விஷயத்தில் இக்கருத்துப் பதிவோடு நிறுத்திக் கொள்ளுதல் பொருந்தி அமையும். நிறைவாக, சமூகத்தின் மூலமாக ஒவ்வொரு தரப்பினரும் நம்பிக்கை பெற்று வாழ்ந்தால், குறையொன்றுமில்லை. பெயரெல்லாம் பெயரளவுக்குத்தான். What’s in a name? -சுப. சோமசுந்தரம்
-
நட்பென்ன உறவென்ன ! - சுப. சோமசுந்தரம் எனது இந்த அறுபதாம் அகவையில் சமூக விலங்காக எல்லோரையும் போல் நான் வாழ்ந்ததைத் திருப்பிப் பார்க்கிறேன். எத்தனை உறவுகள் எத்தகைய நட்புகள், அத்தனையும் ஒரு பெரிய புத்தகமாக எழுதித் தள்ளும் அளவிற்கு என் மனத்திரையில் ஓடுகின்றன. வாசிப்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு என்னால் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை, ஏன் இறுமாப்பே உண்டு என வைத்துக் கொள்ளலாம். புத்தக அளவிற்கு எழுத வேண்டியதை ஒரு கட்டுரையில் சுருக்க நினைக்கும் பேராசை இப்போது. உறவோ நட்போ, நம் வாழ்வில் இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் (படுத்தும் பாடுகளும்) அளப்பரியன. உறவுக்கும் நட்புக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுண்டு. நட்பு நமது தெரிவு (choice). நமது இயல்புக்கு ஒத்து வருவதை நாம் தெரிந்து தெளிதலே நட்பு. உறவு நமது தெரிவில்லை. முகம், நிறம் போன்று நமது பிறப்பாலோ அல்லது அதன் நீட்சியாக திருமணம் என்ற சமூக ஏற்பாட்டினாலோ அமைவது; சில நேரங்களில் அமைந்து தொலைவது. அமைந்த நட்பு ஏதோவொரு தருணத்தில் சரியாக வரவில்லையென்றால், அது தேரான் தெளிவு; நம் குற்றம். அமைந்த உறவு ஒத்து வரவில்லையென்றால், அது விதியின் விளையாட்டு; கருவின் குற்றம். அதிலும் தவிர்க்க முடியாத உறவுகளான தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள் என்ற வகையில் இந்நிலை ஏற்படின், அது உருத்து வந்து ஊட்டும் ஊழ்வினையன்றி வேறென்ன ! உறவோ, நட்போ நாம் கடந்து வரும் சிலர் நமது விருப்பப் பட்டியலில் இல்லையென்றால், அன்னார் ஏதோவொரு வகையில் தீயோர் என்றோ, குறையுள்ளோர் என்றோ பொருளில்லை; நாம் நல்லோர் என்றோ, குறையற்றோர் என்ற பொருளுமில்லை; நமக்கு ஒத்து வரவில்லை, அவ்வளவே ! (கூட்டுக்) குடும்ப உறவு என்னும் அமைப்பு நமது நாட்டில் மிக வலுவானது என மார் தட்டுகிறோம். இது சங்க கால நிலைமையாயிருக்கலாம். என் ஆச்சிமார் தாத்தாமார்களிடம் கேட்ட வரை நம் குடும்ப முறை ஆண்டான் – அடிமை நெறிமுறையாகவே இருந்து வந்திருக்கிறது. தொழிற்புரட்சிக்குப் பின் முதலாளிகள் வெளியே உருவாயினர். அதற்கு முன் நிலவுடைமைச் சமூகத்தில் குடும்பத்தினர் கூட்டாக இருந்து பாடுபட, சொத்துரிமையாளர்களான பெற்றொரும் உற்றோரும் முதலாளிகளாகவும் ஏனையோர் தொழிலாளர்களாகவும் – பெரும்பாலும் அடிமைகளாகவும் – அமைந்தனர். இந்த வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டவள் பெண்தான் என்பது தனியாக வேறு தலைப்பிட்டு எழுதப்பட வேண்டிய விடயம். அடிமையின் மனைவி அடிமைதானே ! அதிலும் பெண்ணடிமை ! உறவுகளுக்குள் – அன்றைய காலத்து அடிமைகளுக்குள் – போட்டியும், பொறாமையும், போட்டுக் கொடுத்தலும் வாழ்வின் அங்கமாகவே பெரும்பாலானோர் வாழ்ந்திருக்கின்றனர். இன்றைக்கும் அலுவலகத்தில் பார்க்கிறோமே ! போட்டியும் பொறாமையும் மனிதன் உட்பட அனைத்து விலங்கினங்களிடமும் உள்ள இயற்கை உணர்வு. ஒரு குழந்தையைத் தூக்கினால் இன்னொரு குழந்தைக்குக் கோபமும் அழுகையும் வருகிறதே ! பெரும்பாலான விடயங்களில் இயற்கையோடு ஒன்றிய வாழ்வு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் சில விடயங்களில் வேறுபட்டு நிற்பது. இயற்கையை எதிர்த்து சட்டை போட்டுக் கொள்ளவில்லையா ! அதுபோல் வளரும் போது பொறாமை போன்ற தீவினைகள் அகற்றிப் பக்குவமடைவதாலேயே விலங்கிலிருந்து மாறுபட்டு மனிதம் ஆரம்பமாகிறது. இப்பக்குவத்தை வெகு சிலர் அடைவதும் பெரும்பாலானோர் அதனை எட்டாமலேயே வாழ்ந்து மடிவதும் உலக நியதி. நிலவுடைமைச் சமூகத்தில் பக்குவமடைந்த மனிதன் கூட அடிமைச் சங்கிலியை உடைத்து அல்லது தனக்கு ஒத்துவராதவரிடமிருந்து தன்னை விடுவித்து மகிழ்ச்சியான வாழ்வை நோக்கிப் பயணிக்க இயலாத கையறு நிலை. ஆனால் பொருளாதார விடுதலை பெற்ற தற்காலத்திலும் தனது தலையில் ஏற்றப்பட்ட விரும்பத்தகாத உறவுச் சுமைகளை இறக்கி வைக்காமல் தவிப்பது, தவறான கற்பிதங்களால் ஏற்பட்ட பழமைவாத நீட்சி (Hangover) அன்றி வேறென்ன ? முன்பே கூறியதைப் போல் நமது பொறுப்புகளுடன் கூடிய உறவுகளான தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள் பற்றி இங்கு பெரிதும் பேச வரவில்லை. விதியின்பாற் பட்டு இவ்வுறவுகளே சுமையானால், எவ்விதப் பொறுப்புத் துறப்புமின்றிக் கடமையாற்றி இரு தரப்பிலும் நிம்மதிக்கு இடையூறின்றி, நாம் வாழ்வதும் அவர்களை வாழ்விப்பதும் நம் கடமையாகிறது. இதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதெல்லாம் அவரவர் சூழ்நிலையும் முதிர்ச்சி நிலையும் தீர்மானிக்கும். உலகில் எல்லாவற்றையும் பட்டியலிட முடியுமா என்ன ? ஏனைய உறவுகள் நல்லெண்ணம் என்னும் வலுவான சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பின், அஃது நமக்கான அரும்பெறல். நூலிழையில் நிற்பது அறுந்து போகக் கடவது அல்லது வேறு வழியின்றி அறுத்து விடக் கடவது. இவ்வுலகில் நம் மகிழ்ச்சிக்குத் தடைக்கல்லாக எதுவும் இருக்க முடியாது. இருப்பின் அதனைப் புறந்தள்ளுவதே விவேகம். இரு தரப்பினரும் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கே கால அளவில் மிகக் குறுகிய இவ்வுலக வாழ்க்கை; புகார் கூறியும் புறங்கூறியும் வீணடிப்பதற்காக அல்ல. மேற்கூறியவை நட்பிற்கும் பொருந்தும். ஆனால் மேற்கூறிய சூழ்நிலைகள் நட்பில் அருகியே வரும். அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, முன்னர் கூறியதைப் போல நமது தேர்ந்து தெளிதலால் ஏற்படுவது நட்பு. இரண்டு, நட்பில் அநேகமாக எதிர்ப்பார்ப்பு இல்லை. எதிர்ப்பார்ப்பு இல்லாத உறவோ நட்போ ஆல்போல் தழைத்து நிற்க வல்லது. இனி என் தனிபட்ட அனுபவங்களைத் தொட்டுச் செல்லலாம் என நினைக்கிறேன். நட்பில் நான் தோற்ற கதையுண்டு. அது தேர்வில் நான் வல்லவன் அல்லன் என எனக்குச் சுட்டியது. அத்தருணத்தில் துரோகத்தைக் கடந்து செல்லுகையில் கிடைத்த அனுபவங்களை என் சேமிப்பில் வைத்ததுண்டு. உறவுகளில் நான் எந்த எதிர்ப்பார்ப்பும் வைத்தது இல்லை. எல்லை தாண்டியதில்லை. உடன் பிறந்தவர்களிடம் கூட அவரவர் விவகாரங்களில் அவர்களே சொன்னால் தவிர அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதில்லை. நட்போ உறவோ அவர்கள் நம்மை எங்கே நிறுத்தி வைக்க நினைக்கிறார்களோ, அங்கே நின்று கொள்வதே நாகரிகம் என்று நினைக்கிறேன். அவர்களிடமும் அவ்வாறே எதிர்பார்ப்பதற்குப் பெயர் ‘எதிர்ப்பார்ப்பு’ என்றால், என்னிடமும் எதிர்ப்பார்ப்பு உண்டு என்று முன்னர் கூறியதற்கு மாறாக திருத்திக் கொள்கிறேன். ஒரு குரூர வேடிக்கையாக சமீபத்திய நிகழ்வொன்றைக் கூறி நிறைவு செய்கிறேன். என் இல்ல விழா ஒன்று கூடி வந்தது. உறவுகளில் நல்லோர் உளப்பூர்வமாய் வாழ்த்தினர். சிலர் தங்கள் எல்லை மீறி அங்கும் இங்கும் விசாரணையை ஆரம்பித்து என் வீட்டு நிகழ்வுக்கு அவர்கள் பரபரப்பானது என் செவியில் சேர்ந்தது. எதிர்ப்பார்ப்புகள் இல்லாத என் தரப்பின் மீது பல எதிர்ப்பார்ப்புகளை வைத்துப் புகார்களும் புறங்கூறல்களும் பரிமாறப்பட்டன. என் உள்மனது சொன்னது, “இத்தகையோர் வராத விழா எத்துணை நன்றாயிருக்கும்?” அவ்வாறே நிகழ்ந்தது. அன்றைய தினம் கொரோனா நோய்த் தடுப்பாக மக்களே சுய ஊரடங்கு நிகழ்த்த அரசு கேட்டுக் கொண்டது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட இல்ல விழாக்களை அரசு அனுமதித்தது. யாரெல்லாம் வர வேண்டாம் என்று நினைத்தேனோ, அவர்கள் கொரோனா பயத்தில் வரவில்லை. யார் வரவேண்டும் என்று நினைப்பேனோ, அவர்களிலும் சிலரால் வர இயலவில்லை என்பது வேறு விடயம்; அவர்களின் வாழ்த்து தொலைபேசியில் கிட்டியது. குறைந்த வருகையுடன் விழா வெகு விமர்சையாக நடந்தேறியது. எனக்கான நீதியை மக்களைக் கொல்லும் கொரோனா தந்த நகைமுரண் பற்றி மகிழ்வது மனித மனத்தின் குரூரம். “அந்த விழாவிற்கு வந்த யாருக்கேனும் நோய்த்தொற்று வந்தால் அல்லது உனக்கே வந்தால்?” என்ற கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை. ‘The Alchemist’ என்ற புகழ்பெற்ற நாவலில், “When you want something, all universe conspires in helping you achieve it” என்று நம்பிக்கை தரும் (optimistic) கவித்துவமான வரி நினைவுக்கு வருகிறது. நாம் வெறுக்கும் ஒரு கொடுமை தற்செயல் நிகழ்வாக எனக்கு ஒரு சிறு நன்மையைத் தந்தது என்ற மட்டில் நிறுத்திக் கொள்கிறேன். நமக்குச் சரியாக வராத உறவு, நட்பு இவற்றை எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல், பெரும்பாலானோர் லாவகமாக விலக்கிச் சென்று கொண்டுதான் இருப்பீர்கள். முடிவு செய்யத் தெரியாத பாமரர்களுக்கு நான் எழுதியதாக வைத்துக் கொள்ளலாம். ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் கடைசியில், “யாராவது உயிருடன் இருக்கிறீர்களா?” என்று ஒலிபெருக்கி சாதனத்தில் கேட்பார்களே, அதுபோல் “யாராவது அறியாத பாமரர்கள் இருக்கிறீர்களா?” என்று கேட்டுச் சொல்லிக் கொள்கிறேன், “உறவுகளுடனும் நட்புகளுடனும் ஒட்டி வாழுங்கள். தேவையானால் வெட்டி விட்டும் வாழுங்கள். மிக முக்கியமானது - வாழுங்கள்!”
- 7 replies
-
- 11
-
-
தமது விருப்பங்களாக (Interests) தமிழ், காதல், வீரம் என ஆதித்த இளம்பிறையன் அவர்கள் அடுக்கியது ஒரு மூன்று சொற்கவிதை. தம் வாழிடம் (Location) தமிழ் தேசம் என்றது தனிக் கவிதை. அவர்தம் வாழ்வு 'ரசனை' என்று நாம் சேர்ப்போமே !
-
பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.
சுப.சோமசுந்தரம் replied to உடையார்'s topic in வாழிய வாழியவே
ஆயிரத்தில் ஒருவனைப் போல தமிழ்சிறி 'பத்தாயிரத்தில் ஒருவர்'. ஆயிரம் பிறை கண்டத்தைச் போல ராசவன்னியர் இன்று ஈராயிரம் பிறை கண்டவர். இருவருக்கும் வாழ்த்துக்கள். -
தோழர் ! ரூம் போட்டு யோசிக்கிறீங்களே ! உங்கள் கற்பனை வளம் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்.
-
பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.
சுப.சோமசுந்தரம் replied to உடையார்'s topic in வாழிய வாழியவே
தமிழ் சிறி அவர்களுக்கு நன்றி. -
பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.
சுப.சோமசுந்தரம் replied to உடையார்'s topic in வாழிய வாழியவே
நன்றி ஈழப்பிரியன். கோப்பையில் நன்றி சொல்ல ஒரு நாளுக்கு எண்ணிக்கை அளவு உள்ளதால், எழுத்தில் வடிக்க முடியாத நன்றியை எழுத்தில்தான் வடித்தேன். -
பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.
சுப.சோமசுந்தரம் replied to உடையார்'s topic in வாழிய வாழியவே
தமிழ்சிறி அவர்களுக்கும் யாழ் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி. -
ஆதவன், தமிழ்த் தென்றல் இவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.