Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. உதவியமைக்கு மிக்க நன்றி. நன்றாக தேடி... இல்லை, இல்லை, தோண்டி எடுத்து அலசி ஆராய்ந்துள்ளீர்கள். இந்தப் பாடல்களில் எத்தனை புலிகளின் ஆரம்ப காலத்தில் பாவிக்கப்பட்டன என்று தங்களுக்குத் தெரியுமா?
  2. உதவியமைக்கு மிக்க நன்றி உதவியமைக்கு மிக்க நன்றி உதவியமைக்கு மிக்க நன்றி எனினும் இந்தப் பாடலானது 2000ம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் என்ற தமிழ்நாட்டுப் படத்தில் வெளியான பாடல். இது 80களில் வெளியான பாடல் இல்லை! தகவலுக்கு மிக்க நன்றி. நன்றாக தெரிந்த உறவுகள் உதவுவார்கள் என்று எண்ணுகிறேன்.
  3. ஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய கலைப்படைப்புகளாக வெளிவந்து ஆட்கொண்டவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள். இவற்றோடு வாழ்ந்து கழித்தவருக்கு பாடல்களைக் கேட்கும் போது எழும் உணர்வுக்கு வார்த்தை அலங்காரம் கட்ட முடியாது. ஈழத்தில் குறிப்பாக எண்பதுகள், தொண்ணூறுகளில் வாழத் தலைப்பட்டவருக்கு இம்மாதிரி அனுபவங்களைக் கேட்டவுடனேயே தம் கண் முன்னே தரிசிப்பர். அவ்வளவு உணர்வு பொருந்திய வரிகளைக் கொண்டமைந்து எமது வாழ்வியலோடு அந்தக் காலகட்டத்தில் கலந்து நின்றவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள். ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பல இயக்கங்கள் போராட்டக் களத்தில் இருந்த அந்த எண்பதுகளில், எனது அண்ணன் முறையான ஒருவர் ரெலோ இயக்கத்தின் மீது மிகுந்த பற்றோடு இயங்கி வந்தவர். அப்போது தன்னுடைய வீட்டில் ஒரு ஒலிநாடாவை எடுத்து வந்து ஒலிபரப்பியபோது புதுமையாக இருந்தது. தமிழீழ விடுதலையை வேண்டிய பாடல்களின் தொகுப்பு அது. தமிழ்த்திரையிசைப் பாடல்களைக் கேட்டு வளர்ந்த எமக்கு அப்போது அதைத் தாண்டிய ஜனரஞ்சக இசையாக "சின்ன மாமியே", "சுராங்கனி" போன்ற பொப்பிசைப் பாடல்களும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலைச் செய்தி அறிக்கையோடு வரும் ஒரு சில மெல்லிசைப் பாடல்களும் தான் அறிமுகமாகியிருந்த வேளை இந்த எழுச்சிப் பாடல்களைக் கேட்டது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் ஈழ விடுதலையை வலியுறுத்தும் பிரச்சாரங்களுக்காப் பொதுமக்களை அணி திரள அழைக்கும் போது எல்லா இயக்கங்களுமே பொதுவில் சினிமாவில் வந்த எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களையும் வேறு சில புரட்சிகரப் பாடல்களையுமே ஒலிபெருக்கி வழியே கொடுத்து மக்களின் கவனத்தைக் குவிக்க வைத்தார்கள். "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்", "ஏமாற்றாதே ஏமாறாதே", "அச்சம் என்பது மடமையடா" போன்ற பாடல்களோடு அன்று விஜய்காந்த் நடித்த ஆரம்பகாலப் படங்களில் வந்த புரட்சிகரமான பாடல்களும், குறிப்பாக "எங்கள் தமிழினம் தூங்குவதோ", "தோல்வி நிலையென நினைத்தால்" போன்ற பாடல்களுமே பரவலான பிரச்சாரப் பாடல்களாக அறிமுகமாகியிருந்தன. இதன் பின்னர் ஒரு இடைவெளி. 1990 ஆம் ஆண்டு நல்லூர்த்திருவிழாவிற்குப் போகின்றேன். வழக்கம் போல அதிக நேரம் கோயிலின் உள் மினக்கெடாமல் வெளியே வந்து சந்திரா ஐஸ்கிறீமில் வாங்கிய சொக் ஐஸ்கிறீமை நக்கியவாறு திருவிழாவிற்காக முளைத்த தற்காலிகமான கடைத்தொகுதிகளில் மேய்கின்றேன். அப்போது கண்ணிற் பட்டது ஒரு அங்காடி. அங்கே குவிந்திருக்கும் தாயக வெளியீடுகளோடு "களத்தில் கேட்கும் கானங்கள்" பாடற் போழைகள். என்னுடைய சுய நினைவுகெட்டியவரை பகிரங்கமாக ஒரு அங்காடியில் தாயக கீதங்களை விற்பனைக்காக வைத்திருந்தது அதுவே முதல்முறையாக இருந்தது. தொடர்ந்து வந்த நல்லூர்த்திருவிழாக்காலங்களில் இந்தப் பாடல்கள் கோயில் வீதிகளில் முழங்கியதும் குறிப்பிடத்தக்கது. 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான எதிர்பாராத யுத்தம், தொடர்ந்த மூன்றாண்டு வனவாசம் கழிந்து தமிழீழ விடுதலைப்புலிகள் சொந்த மண்ணில் வியாபித்த வேளை, இந்த "களத்தில் கேட்கும் கானங்கள்" ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனை விளைந்த காலத்து உணர்வுப்பதிவுகளின் பாடல் வடிவமாக விளைந்திருக்கின்றது. ஒவ்வொரு பாடல்களுக்கும் முன்னர் கவிஞரின் அறிமுகமும் அதையொட்டிய அடி நாதத்தில் பாடல்களுமாக அமைந்திருக்கும். இந்திய இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் புதுவை ரத்தினதுரையின் பாடல் வரிகளை ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், பி,சுசீலா உள்ளிட்ட தமிழகத்து முன்னணிப் பாடகர்கள் பாடியிருந்தார்கள். "நடடா ராஜா மயிலைக் காளை நாளை விடியப் போகுது" என்று மலேசியா வாசுதேவனும், "பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே" என்ற பாடலை ஜெயச்சந்திரனும், "கண்மணியே கண்ணுறங்கு" என்று பி.சுசீலாவுமாகப் பாடிய பாடல்களோடு அந்த ஒலி நாடாவில் வந்த ஏனைய பாடல்களும் வெகுஜன அபிமானத்தைப் பெற்றுக் கொண்டன. இன்னமும் "வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டிலிருந்தொரு சேதி சொல்லு" என்று வாணி ஜெயராமும் "தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்" என்று காதலர் தம் தாயக நிலையை உணர்ந்து களமாடப் போகும் ஜோடிப் பாடலும் கூட இதில் சேர்த்தி. அந்தக் காலகட்டத்தில் ஈழத்துப் போர்க்கால எழுச்சிப்பாடல்களுக்கு இசை வடிவம் கொடுப்பதில் அமரர் எல்.வைத்தியநாதன் (எழாவது மனிதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர்), தேவேந்திரன் (வேதம் புதிது போன்ற படங்களின் இசையமைப்பாளர் போன்றோரின் பணி வெகு சிறப்பாக அடியெடுத்துக் கொடுத்தது. இந்திய இராணுவம் ஈழ மண்ணை விட்டு விலகிய பின்னர், ஈழப்போராட்டக் களத்திலும் முன்னர் அவ்வளவாகப் பொதுமக்களோடு அந்நியோன்யம் பாராட்டாது இருந்த போராட்ட வடிவமும் முழுமையான மக்களை ஒன்றிணைத்த போராட்ட வடிவமாக மாற்றமடைய பிரச்சாரப் பிரிவின் முயற்சிகள் தீவிரமாக அமைந்திருந்தன. இதன் முன்னோடி முயற்சிகளாக 86, 87 ஆம் ஆண்டுகளில் எங்களூர் சந்துபொந்தெல்லாம் ஒரு சிறு வாகனத்தில் தியாகி திலீபன் சிறு ஒலிபெருக்கியோடு பிரச்சாரப்படுத்தியதும் நினைவுக்கு வருகிறது. விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பிரிவு மற்றும் கலை பண்பாட்டுப் பிரிவு போன்றவற்றின் களப்பணிகளுக்கு ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் பேருதவியாக அமைந்திருந்தன. இந்திய இராணுவம் போன கையோடு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் பெரும் எடுப்பிலான இசைக்கச்சேரி நடக்கிறது. அதில் தேனிசை செல்லப்பாவும், பாடகி சுவர்ணலதாவும் (இவர் தமிழ் சினிமாவின் பிரபல பாடகி ஸ்வர்ணலதா அல்ல) பங்கேற்றுச் சிறப்பித்திருந்தார்கள். எந்த அடக்குமுறை வாழ்விலும் சுயாதீன முயற்சி தீவிரமடையும் என்பது ஈழத்துப் போர்க்காலப் பாடல்களுக்கும் பொருத்தமாக அமைந்தது. தொண்ணூறுகளில் மீண்டும் தீவிரப்பட்ட போர்க்காலத்தில் கடுமையான பொருளாதாரத் தடை, மின்சாரத் தடை, முன்பு போல தமிழகத்தோடு இணைந்திருந்த தகவல் போக்குவரத்தும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற நிலை வந்த போது ஈழத்தில் பல தன்னிறைவு நோக்கிய செயற்பாடுகள் பிறக்கின்றன. அப்போது தான் ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்னும் வீரியம் பெற்று எழுகின்றன. ஆனால் இம்முறை ஈழத்தின் பாடகர்களை, இசையமைப்பாளர்களை, கவிஞர்களை ஒருங்கிணைத்து அவை இன்னொரு புதிய வடிவில் மக்களை எட்டிப் பரவலான வெகுஜன அந்தஸ்தை அடைகின்றன. பள்ளிக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்குச் சைக்கிள் வலித்து டியூஷன் சென்ரர் நோக்கிய பயணத்தில் அப்போது கஸ்தூரியார் றோட்டில் இருந்த இசையருவி என்ற ஒலிப்பதிவுக் கூடத்தைக் கடக்கும் போது ஏதோ ஏவி.எம் இன் ஒலிப்பதிவுக் கூடத்தைத் தாண்டுவது போல பிரமை இருக்கும். அந்த இடத்தில் தான் இப்போது லிங்கன் கூல்பார் சற்றுத் தள்ளி இருக்கிறது. "மின்சாரம் இல்லை. ஒலிப்பதிவு செய்வது என்று சொல்வதென்றால் ஸ்பூன் மெஷினில் நாங்கள் ரெக்கோர்டிங் செய்யும் போது ஒரு ரேப்பையே கிட்டத்தட்ட ஏழெட்டு ஒலிப்பதிவு நாடாக்கள் உருவாவதற்கு பாவித்திருக்கின்றோம். "கரும்புலிகள்" தொடக்கம் பல இசைத்தட்டுக்கள் தொடங்கிய வரலாறு அப்படித்தான் இருந்தது. ஒரு பாடல் தொகுதி ஒலிப்பதிவு செய்து முடிந்த பின், மாஸ்ரர் கசற்றில் ரெக்கோர்ட் பண்ணிவைத்து விட்டு அதை அழித்து திருப்பி புதுப்பாடல்களை ரெக்கோர்ட் பண்ணுவது. அப்போது தரம் போய் விடும். அப்படியான வசதியீனங்களுக்கு மத்தியில் தான் எமது ஒலிப்பதிவு எல்லாம் நிகழ்ந்தன. அப்படியான சூழ்நிலையிலே பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் நினைவு கூரப்படவேண்டியவர்கள்." இப்படியாக முன்னர் எனக்களித்த பேட்டியில் அன்று எழுச்சிப் பாடல்களில் முன்னணியில் திகழ்ந்தவர்களில் ஒருவரான வர்ண இராமேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இதே நிலையில் அப்போது எழுச்சிப் பாடல்களை விரும்பிக் கேட்ட ரசிகர்களும், ஒலிப்பதிவு நாடாவை ரேப் ரெக்கோர்டரில் பொருத்தி விட்டு, சைக்கிள் ரிம் ஐச் சுத்தி, அதில் பொருத்தியிருக்கும் டைனமோவால் மின்சாரத்தை இறக்கிப் பாட்டுக் கேட்பார்கள். அதைப் பற்றிப் பேச இன்னொரு கட்டுரை தேவை. ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில், அமரர் பிரம்மஶ்ரீ நா.வீரமணி ஐயர், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் காசி ஆனந்தன், பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் போன்றோருடன் மேஜர் சிட்டு போன்ற அப்போதைய போராளிகள், பின்னாளி மாவீரர்களாகிப் போனவர்களும் இணைந்து கொள்ள திரு.வர்ண இராமேஸ்வரன், திரு.பொன் சுந்தரலிங்கம், திரு எஸ்.ஜி.சாந்தன் போன்ற ஆண் பாடகருடன் பெண் பாடகிகளில் பார்வதி சிவபாதமும் பரவலான வெகுஜன அபிமானம் பெற்றுத் திகழ்ந்தனர். பின்னாளில் திருமலை சந்திரன், குட்டிக்கண்ணன் என்று இன்னும் பல்கிப் பெருகினர். "கடலினக்கரை போனோரே" என்ற பாடலை அந்தக் காலத்து ஈழத்தவர்களும் சொந்தம் கொண்டாடி ரசித்தனர். அதற்குப் பின்னர் நெய்தல் நிலத்துப் பெருமையைக் கொண்டாடிய பாடல்களைத் தம் தலைமேல் சுமந்து போற்றிய தொகுப்பாக ' நெய்தல்" என்ற இசைத்தொகுப்பு வெளிவந்தது. இசைவாணர் கண்ணன் இசையில் பார்வதி சிவபாதம் , சாந்தன் உட்படப் பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். "ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்", "கடலலையே கொஞ்சம் நில்லு", "முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா", "'நீலக்கடலே", "புதிய வரலாறு" "கடலதை நாங்கள்", "வெள்ளிநிலா விளக்கேற்றும்","நாம் சிந்திய குருதி", அலையே நீயும்" என்று அந்த ஒன்பது பாடல்களுமே முத்தான பாடல்கள். இன்றும் நினைவிருக்கிறது தொண்ணூறாம் ஆண்டு காலத்தில நாங்கள் விலை கொடுத்து "நெய்தல்" கசற் வாங்கி, டைனமோவில மின்சாரம் எடுத்து றேடியோவில அந்தப் பாடல்களைக் கேட்டது. கூல்பார் பாட்டுக்களிலும் "நெய்தல்" பாடல்கள் தான் இடம்பிடித்தன. என்னைப் பொறுத்தவரை " கடலினக்கரை போனோரே" என்ற சினிமாப் பாடலை எப்படி இன்னும் கேட்டுக்கேட்டு ரசிக்கிறேனோ அதே அளவு உயர்ந்த இசைத்தரத்தில் தான் பார்வதி சிவபாதம் பாடிய " கடலலையே கொஞ்சம் நில்லு" பாடலையும் சாந்தன் பாடிய "வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்" பாடலையும் ரசிக்கின்றேன், எள்ளளவும் குறையாமல். மேலே கழுகுக் கண்ணோடு சுற்றும் விமானங்களின் கண்ணில் அகப்படாமல் கொழும்புப் பயணத்துக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து ஊரியான், கொம்படிப் பாதையால் மேடு, பள்ளம், நீர்க்குட்டை எல்லாம் தாண்டி இரவைக் கிழித்துக் கொண்டே கிளிநொச்சியால் பயணிக்கும் தனியார் பஸ்ஸில் எழுச்சிப் பாடல்கள் களை கட்டும். ஒரு விடிகாலை வேளையில் விசிலடித்துக் கொண்டே பாடும் ஒரு எழுச்சிப் பாடல் (பாடல் பெயர் மறந்து விட்டது) அந்த நேரத்தில் கொடுத்த இனிமை இன்றும் இருபத்தைந்து வருடங்கள் கழித்தும் இனிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் வேடிக்கையான சில நிகழ்வுகளும் நடந்ததுண்டு. ஊரில் இருக்கும் சின்னன் சிறுசுகளுக்கும் எழுச்சிப் பாடல்கள் மனப்பாடம். குறிப்பாக "காகங்களே காகங்களே காட்டுக்குப் போனிங்களா" போன்ற மழலைக் குரலில் ஒலித்த பாடல்கள். ஒருமுறை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைக் கடந்து வவுனியாவுக்கான பயணத்தில் தாண்டிக்குளத்தில் வைத்து இலங்கை இராணுவச் சோதனைச் சாவடி. அந்த நேரம் பயணித்தவர்களில் ஒரு இளம் தம்பதியும், ஒரு சிறுமியும். அப்போது இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்தச் சிறுமியின் துறுதுறுப்பைக் கண்டு ஒரு பாடல் பாடச் சொல்லிக் கேட்க, அந்தப் பிள்ளை "எதிரிகளின் பாசறையைத் தேடிச் செல்கிறோம்" என்று பாடவும், நல்லவேளை அவன் ஏதோ சினிமாப்பாட்டு என்று விட்டுவிட்டான். யாழ்ப்பாணத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கல்வி நோக்கில் தங்கி வாழ வரும் இளைஞர்கள் ஒளித்து மறைத்து இந்தப் போர்க்கால எழுச்சிப் பாடல்களைச் சினிமாப்பாடல்கள் போலப் பதிவு பண்ணிக் கேட்ட சம்பவங்களை அனுபவித்ததுண்டு 😉 புலிகளின் குரல் வானொலி பின்னர் தன் ஒலிபரப்பின் இன்னொரு பரிமாணமாக தமிழீழ வானொலியை உருவாக்கிய பின்னர் இந்த எழுச்சிப் பாடல்கள் நேயர் விருப்பப் பாடல்களாகக் கேட்டு மகிழவும் வாய்ப்பை வழங்கியது. "ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்" என்று பரணி பாடுவோம் பாடல் தொகுப்பிலிருந்து ஒலிபரப்பும் பாடல் எல்லாம் அந்தக் காலகட்டத்தில் பிரசித்தமானவை. யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டிலும், தட்டாதெருச் சந்தியிலும் என்று முக்கியமான கேந்திரங்களில் பெரும் ஒலிபெருக்கி பொருத்தி இந்த வானொலி தன் ஒலிபரப்பை எல்லோருக்கும் காற்றலையில் தவழ விடும். எனவே மின்சாரம் இல்லாது பாடல் கேட்கவும், செய்தி அறியவும் வக்கற்றவர்களுக்கு அது திசை காட்டும். ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வரக் கலைஞர்கள் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி இரட்டையர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுச்சிப்பாடல்கள் நாதஸ்வர இசையாகவும் வாசிக்கப்பட்டு வெளியாயின. "செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் தமிழ் தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்" என்று நல்லூர்த் திருவிழாவின் போது கர்நாடக இசை மேடைகளுக்கு நிகராக "நல்லை முருகன் பாடல்கள்" வெளிவந்தன. ஈழத்துச் சனத்தின் துன்பியல் தோய்ந்த போர்க்கால வாழ்வியலை நல்லூர் முருகனுக்கு ஒப்புவித்துப் பாடிய அந்தப் பாடல்களை புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுத வர்ண இராமேஸ்வரன் பாடியிருந்தார். நல்லூர்த் திருவிழாவின்இசைக்கச்சேரியாகவும் படைத்திருந்தார்கள். "எங்களுடைய தேவார திருவாசகங்களிலே கூட எத்தனையோ விடுதலை உணர்வை வெளிப்படுத்தக் கூடிய பாடல்கள் இருக்கின்றது. "நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்" அப்படிப் பல பாடல்கள் இருக்கின்றன. அவற்றைக் கூட இவர்கள் எடுத்துப் பாடியிருக்கலாமே என்று புதுவை இரத்தினதுரை அண்ணா ஆதங்கப்பட்டார். அப்போது நான் சொன்னேன், "நீங்களே எழுதுங்களேன், நாங்கள் அவற்றை படிப்போம்" என்று. எங்களுடைய இசைக் கலைஞர்களிடம் போய்க் கேட்டபோது "இல்லையில்லை சங்கீதம் என்றால் இப்படித்தான் பாடவேணும், இப்படியெல்லாம் செய்யமுடியாது" என்ற போது நாங்கள் சவாலாக எடுத்து புதுவை அண்ணா பாடல்கள் எழுத நான் எனது கச்சேரியில் பாடினேன்" என்று இந்தப் பாடல்களின் உருவாக்கத்தை என்னோடு பகிர்ந்த வானொலிப்பேட்டியில் வர்ண இராமேஸ்வரன் அவர்கள் நினைவு கூர்ந்தார். "இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன்' என்று தொடங்கும் பாடலின் முதல் அடிகளைக் கொண்டு வெளிவந்த இந்த மண் எங்களின் சொந்த மண் இசைவட்டில் இடம்பிடித்த "ஏறுது பார் கொடி ஏறுது பார்" பின்னர் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றத்தின் போது பாடப்படும் பாடலாக அமைந்து வருகின்றது. அதே இசைத்தட்டில் வெளியான "விண்வரும் மேகங்கள் பாடும்" பாடல் உள்ளிட்டவை பிரசித்தமானவை. பின்னாளில் தேனிசை செல்லப்பாவால் பாடிப் பிரபலமான "அழகான அந்தப் பனைமரம்" உள்ளிட்ட பாடல்களோடு தமிழகத்தில் இருந்து மீண்டும் பிரபல பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், உன்னிமேனன், உன்னிகிருஷ்ணன், நித்யஶ்ரீ போன்ற பாடகர்களால் பாடி அளிக்கப்பட்ட தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் இருந்து வெளிவந்த போர்க்கால எழுச்சிப் பாடல்கள் எண்பதுகளில் இருந்த சூழலை நினைவுபடுத்துகின்றன. அறிவுமதி போன்ற தமிழகத்துக் கவிஞர்களும், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இணைந்து கொள்கின்றார்கள். இவர்களில் தேனிசை செல்லப்பாவே பரவலான கவனிப்பைப்பெற்ற பாடகராக தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் இருந்து விளங்கினார். 95 ஆம் ஆண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசாங்கம் இயங்கிய போது ஈழத்துத் திரைப்படங்களோடு, போராளிக் கவிஞர்கள், போராளிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர்கள் பரவலாக இந்தப் பாடல் வெளியீட்டு முயற்சிகளில் இயங்கினர். தமிழீழ இசைக்குழு வழியாக பாடல் இசைத்தட்டுகள் வெளியாயின. சமகாலத்தில் புலம்பெயர்ந்த மண்ணிலும் ஈழத்துப் போர்க்காலப் பாடல்களின் இசைத் தொகுப்புகள் அந்தந்த நாடுகளில் இருந்தும் வீரியம் பெற்று வருகின்றன. அந்த வகையில் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வெளிவந்தவை அதிகம். டென்மார்க்கில் இருந்து வெளி வந்த ஒரு சில இசைத்தட்டுகளும் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தவை. மலேசியத் தமிழர்களால் வெளியிடப்பட்ட ஈழ விடுதலைக்கான உணர்வு பொருந்திய பாடல்கள் தனியே குறிப்பிடவேண்டியவை. 1995 ஆம் ஆண்டிலியிருந்து 2009 இறுதிக்கட்டப் போருக்கு முன்பாக வெளியான பாடல்கள் ஆயிரத்தைத் தாண்டும். இந்தக் காலகட்டத்தில் தமிழீழத் திரைப்படங்களின் பாடல்கள் என்ற வகையிலும் எழுச்சிப் பாடல்களின் கிளை தோன்றியது. ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் போராளிகளின் பங்கு, தமிழீழத் திரைப்படப் பாடல்கள், புலம்பெயர் சூழலில் பிறந்த ஈழ தேச நேசிப்பும், எழுச்சியும் மிகுந்த பாடல்கள் போன்றவை தனியே எடுத்து ஆய்வு செய்ய வேண்டியவை. வெறுமனே போர்ப் பிரச்சாரங்கள் தாங்கிய பாடல்களாக அன்றி ஈழத்தின் இயற்கை வனப்பையும், தமிழின் சிறப்பையும் போற்றிப் பாடும் பாடல்களாகவும் இந்த ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் நிலைபெற்றிருந்தன. "மீன்மகள் பாடுகிறாள்" போன்ற பாடல்களின் வழியே தமிழீழ மண்ணின் எழில் மீதான நேசிப்பும், "அழகான அந்தப் பனைமரம்" ஆகிய பாடல்கள் ஈழத்து வாழ்வியலின் நனவிடை தோய்தலாகவும், "கண்மணியே கண்ணுறங்கு" போர்க்காலத்தில் பிறந்த குழந்தைக்குரிய தாலாட்டாகவும், "படையணி நகரும்" போர்க்களத்தில் பெண் போராளிகளின் பங்கையும், "மாவீரர் யாரோ என்றால்", "மானம் என்றே வாழ்வெனக்கூறி மண்ணில் விழுந்தான் மாவீரன்" போன்ற பாடல்கள் சமர்க்களத்தில் களமாடி மடிந்த வீரர் பெருமையை எடுத்துரைப்பவையாகவும், "வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்" போன்ற நல்லுதாரணங்கள் தொழிலாளர் சக்தியின் ஓசையாகவும், "செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்" பாடல்கள் வழியே போர்க்காலத்துப் பக்தி இசை வடிவமாகவும், "கிட்டடியில் இருக்குதடா விடுதலை", "பட்டினி கிடந்து" ஆகிய பாடல்கள் நம்பிக்கையை ஏற்படுத்தி நிற்பவையாகவும், "என் இனமே என் சனமே" போன்ற பாடல்களால் போராளிக்கும் சமூகத்துக்குமான உறவின் வெளிப்பாடாகவும், "பூத்தகொடி பூவிழந்து" பாடல்களின் வழியே போரின் ரணத்தைப் பதிவு செய்தும், "காகங்களே காகங்களே" இன்ன பிற பாடல்களால் சிறுவரை இணைக்கும் போர்க்கால இசைப் பாடல்களாகவும், "பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே" வழியாக தலைவனின் மாட்சிமையையும் காட்டி நிற்கும் பாடல்களாகவும் இந்த ஈழ எழுச்சிப் பாடல்களின் அடித்தளம் வெறுமனே பிரச்சாரப் பாடல்கள் அன்றிப் பரந்து விரிந்து பல்வேறுவிதமான பின்னணியோடு அமைந்திருப்பது அவற்றின் தனித்துவத்தைப் பறைசற்றுகின்றன. இன்னொருபுறம் தனியே மெல்லிசை என்ற கட்டுக்குள் நில்லாது சாஸ்திரிய இசையை அரவணைத்தும், பைலா போன்ற மேலைத்தேய இசைவடிவங்களைத் தொட்டும் (உதாரணம் அப்புஹாமி பெற்றெடுத்த) இந்தப் பாடல்களின் வடிவம் ஒரு கட்டுக்குள் நில்லாது அமையப்பெற்றிருக்கின்றன. "ஆசையினால் பாற்கடலை நக்கிக் குடிக்க முனையும் பூனை" என்று வான்மீகி இராமாயணத்தைத் தமிழில் எழுதும் போது கம்பர் சொன்ன அவையடக்கம் போன்றது என்பதுகளின் இறுதி தொட்டு 2009 வரையான முப்பது ஆண்டுகளில் இயங்கிய ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களைத் தொட்டுப் பேசுவது. பல்கலைக் கழக மட்டத்தில் இன்னமும் விரிவாக ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒரு இசைப்பண்பாடு இந்தப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பங்களிப்பு. - கானா பிரபா http://www.madathuvaasal.com/2014/11/blog-post.html
  4. எமது தாய்நாடாம் தமிழீழத்தின் விடுதலைப் போரின் தொடக்க கால கட்டத்தில் புலிவீரர்களின் பயிற்சிப் பாசறைகளில் ஒலித்த தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடல்ளை திரட்டி வருகிறேன் . அவ்வாறு சேகரித்த பாடல்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். போராடடா, ஒரு வாளேந்தடா வாழும் வரை போராடு சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு தோல்வி நிலையென நினைத்தால் அதோ அந்த பறவை போல (ஜனனி அன்ரி விரும்பி பாடுவா) இதனை தவிர வேறு ஏதேனும் கள உறவுகள் அறிந்திருந்தால் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். - நன்னிச் சோழன்
  5. செய்திகள் வலைத்தளம்: maddunews திகதி: 21/09/2017 கொழுவி: http://www.maddunews.com/2017/09/27.html புதுக்குடியிருப்பு படுகொலை 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் 17பேர் வெட்டிப்படுகொலைசெய்யப்பட்டு 27வது ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம திகதி நள்ளிரவு புதுக்குடியிருப்பு கடற்கரையினை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்த ஊர்காவல் படையினர் விசாரணை என கூறி பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என 44பேரை கூட்டிச்சென்று கடற்கரையில் வைத்து வாள், கத்தியால் வெட்டியதுடன் துப்பாக்கிசூடு நடத்தியும் தமது கொலைவெறி தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் ஐந்து மாணவர்கள் உட்பட 17பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 27பேர் படுகாயமடைந்ததுடன். ஒரு இரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த இன அழிப்பினை புதுக்குடியிருப்பு மக்கள் நினைவுத்தூபி அமைத்து படுகொலை தினமாக அனுஸ்டித்துவருகின்றனர். இன்றைய தினம் 27வது புதுக்குடியிருப்பு படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் அனுசரணையுடன் புதுக்குடியிருப்பு கிராம மக்களினால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் உறுப்பினர் மா.நடராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், புதுக்குடியிருப்பு புதுவை அமைப்பின் தலைவர் சதாசிவம் மற்றும் புதுக்குடியிருப்பு ஆலய தலைவர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன்போது நினைத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி ஒரு நிமிட மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன. *****
  6. செய்திகள் வலைத்தளம்: தினக்கதிர் கொழுவி: http://www.thinakkathir.com/?p=66245 மீளெடுக்கப்பட்டது: யாழ் கருத்துக்களம் - 3 வழியாக திகதி: 5/09/2016 எழுத்தாளர்: இரா.துரைரத்தினம் இராணுவம், புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல்படை இணைந்து நடத்திய கிழக்கு பல்கலைக்கழக படுகொலை கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 158 பொதுமக்கள் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1990ஆம் ஆண்டு கிழக்கில் நடந்த படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழ் இன உயிர்கொலை நாளாக மட்டக்களப்பு பொது அமைப்புக்களான கிழக்கு பல்கலைக்கழக சமூகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் ஆகியன பிரகடனப்படுத்தி இருந்தன. 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தினருடன் இணைந்து செயல்பட்ட புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களும், ஜிகாத் முஸ்லீம் பயங்கரவாத குழுக்களும் வகைதொகை இன்றி படுகொலைகளை நடத்தி வந்தன. கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளின் உச்சக்கட்ட படுகொலையாக கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் படுகொலை கருதப்படுகிறது. கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் இருந்த 158 இளைஞர்கள் இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து 158இளைஞர்களும், செப்டம்பர் 23ஆம் திகதி 16 இளைஞர்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டனர். இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்ட இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பபடுகின்ற போதிலும் இவர்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. றிசாட் டயஸ் அல்லது கப்டன் முனாஸ் என்று அழைக்கப்படும் இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரி தலைமையில் புளொட் மோகன், முஸ்லீம் ஜிகாத் குழுவைச் சேர்ந்த மஜீத் உட்பட இராணுவ குழு ஒன்றே இவர்களை 11 பேருந்தில் கொண்டு சென்றனர். 1990ல் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர் நிறுத்தம் முறிவடைந்து யுத்தம் ஆரம்பமானதை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து வாளைச்சேனை வரையான மக்கள் பாதுகாப்பு தேடி கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். இக்கடத்தல் சம்பவம் நடைபெற்ற வேளையில் அம்முகாமில் 55ஆயிரம் பொதுமக்கள் தங்கியிருந்தனர். சம்பவ தினம் காலை 6மணிக்கு முன்னரே அகதி முகமை இராணுவத்தினரும் புளொட் இயக்கத்தினரும் முஸ்லீம் ஜிகாத் குழுக்களும் சுற்றிவளைத்திருந்தன. சம்பவ தினம் கொம்மாதுறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கப்டன் களுவாராச்சி தலைமையிலான இராணுவத்தினருடன் மட்டக்களப்பு நகரில் இருந்த இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளான கப்டன் முனாஸ் என அழைக்கப்படும் றிச்சட் டயஸ் கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மஜீத், புளொட் மோகன் ஆகியோரும் வந்திருந்தனர். கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு பொறுப்பாக பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ஜெயசிங்கம், கலாநிதி சிவலிங்கம் ஆகியோர் இருந்தனர். அகதி முகாமுக்குள் நுழைந்த இவர்கள் தம்மை யார் என அறிமுப்படுத்தி கொண்டதாக அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவரான கலாநிதி ஜெயசிங்கம் தெரிவித்திருந்தார். இவர்களுடன் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகள் என கூறப்படும் 5பேர் இராணுவ உடையுடன் கதிரையில் அமர்த்தப்பட்டிருற்தனர். இவர்களுக்கு பின்னல் ஏறாவூரைச்சேர்ந்த 7 முஸ்லீம்கள் நின்றனர். ஆண்கள் அனைவரும் வயது அடிப்படையில் மூன்று வரிசையாக நிறுத்தப்பட்டனர். 12வயதிருந்து 25வயதுடையவர்கள் முதலாவது வரிசையிலும் 26வயதிலிருந்து 40வயதுவரையானவர்கள் இரண்டாவது வரிசையிலும் 40வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்றாவது வரிசையிலும் நிறுத்தப்பட்டனர். இவர்கள் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகளின் முன்னால் நிறுத்தப்பட்ட போது அவர்கள் தலைமை ஆட்டினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று தலையாட்டிகளின் பின்னால் நின்ற முஸ்லீம்களும் சிலரை காட்டினர். இவ்வாறு தலையாட்டிகளால் அல்லது முஸ்லீம்களால் காட்டப்பட்ட 158பேர் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல மட்டங்களில் முறையிட்ட போது அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த எயர்மார்சல் பெர்னாண்டோ அனுப்பிவைத்த பதிலில் செப்டம்பர் 5ஆம் திகதி 32பேரை மட்டும் விசாரணைக்காக கைது செய்யததாகவும் அவர்கள் அனைவரும் 24மணிநேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என தெரிவித்திருந்தார். இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு அப்போது இராணுவ தளபதியாக இருந்த ஹரி சில்வா சென்றிருந்தார். அப்போது அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்ற 158பேரின் நிலமை பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த இராணுவத்தளபதி 158பேரும் குற்றவாளிகள் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. அவர்கள் பற்றி இனி பேசக்கூடாது என எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார். இதன் பின்னர் செப்டம்பர் 23ஆம் திகதியும் அங்கு வந்த இராணுவத்தினர் மேலும் 16 இளைஞர்களை கைது செய்து கொண்டு சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கி.பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் உட்பட நேரில் கண்ட சாட்சிகள் 40பேர் சாட்சியமளித்தனர். இந்த ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே 5ஆம் திகதி 158பேரையும், 23ஆம் திகதி 16பேரையும் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்திருந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட இராணுவத்தினரும் புளொட் மற்றும் முஸ்லீம் ஜிகாத் குழுவும் பதில் கூற வேண்டும் என்றும் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை அறியப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமை நிர்வாகித்து வந்த பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி சிவலிங்கம், கலாநிதி ஜெயசிங்கம் ஆகியோரில் இன்று கலாநிதி ஜெயசிங்கம் மட்டுமே வாழும் சாட்சியாக உள்ளார். தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருக்கும் ஜெயசிங்கம் இச்சம்பவம் பற்றி 1996ஆம் ஆண்டு பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் 2004ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சாட்சியமளித்தார். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 26வருடங்கள் கடந்து விட்ட போதிலும் காணாமல் போனவர்கள் அங்கிருக்கிறார்கள், இங்கிருக்கிறார்கள் என அலைந்து திரியும் அவலமே தொடர்கிறது. உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என கலாநிதி ஜெயசிங்கம் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக சம்பவம் நடந்து சரியாக நான்கு தினங்களின் பின்னர் 1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார். சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவத்திலும் புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல் படை என்பனவும் சம்பந்தப்பட்டிருந்ததாக அக்கிராமமக்கள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகள் ஒருவயதிற்கு குறைந்தவர்கள். எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்ட சிவகுமார் தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தில் 8வயதுக்கு உட்பட்;ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர். காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு பிரஜைகள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார். சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் பற்றி அக்கிராமத்தை சேர்ந்த ஆசிரியரான சிவக்கொழுந்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார். இக்கிராமத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்து வீடு வீடாக சென்று அனைவரையும் இராணுவ முகாமுக்கு வருமாறு உத்தரவிட்டனர். இராணுவத்தினருடன் புளொட் மோகன் தலைமையில் புளொட் இயக்கத்தினரும் ஏறாவூரை சேர்ந்த முஸ்லீம் ஊர்காவல் படையினரும் ஆயுதங்களுடன் வந்திருந்தனர். இராணுவ சுற்றிவளைப்பிலிருந்து தப்பி காட்டிற்குள் தான் ஒளித்திருந்ததாகவும் இரவு 7மணிக்கு பின்னர் இராணுவ முகாமிலிருந்து அவலக்குரல்கள் கேட்டதாகவும் ஆசிரியர் சிவக்கொழுந்து தெரிவித்தார். இந்த அவலக்குரல்கள் இரவிரவாக கேட்டன. நள்ளிரவுக்கு பின்னர் இராணுவ முகாமுக்கு பின்பக்கத்தில் தீச்சுவாலை தெரிந்ததாகவும் இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிவக்கொழுந்து தெரிவித்திருந்தார். இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன. சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இக்காலப்பகுதியில் சுமார் 2600பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1990ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் மட்டுமன்றி கைது செய்யப்பட்டு ரயரில் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவங்களும் அதிகமாகும். 1990ஆம் ஆண்டு யூலை மாதத்திற்கு பின்னர் மட்டக்களப்பு புதுப்பாலத்தை அண்டிய வாவிக்கரைகளில் தினமும் ரயரில் எரிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. மட்டக்களப்பு பற்பொடி கொம்பனி என அழைக்கப்பட்ட இராணுவ புலானாய்வு பிரிவினரின் முகாமில் கப்டன் முனாஸ், மற்றும் புளொட் மோகன் இருந்தனர். இவர்களால் கைது செய்யப்படும் அப்பாவி பொதுமக்கள் சித்திரவதையின் பின்னர் உயிருடன் கழுத்தில் ரயரை போட்டு எரிக்கும் சம்பவங்கள் தினசரி நடந்தன. சடலங்கள் எரிந்த நிலையில் அரைகுறை உயிருடனும் காணப்படும். மிகப்பெரிய இனப்படுகொலைகளும் மனித உரிமை மீறல்களும் நடந்த அக்காலத்தை மறக்க முடியாது. இக்கொலைகளை இராணுவத்தினருடன் சேர்ந்து புளொட் போன்ற தமிழ் இயக்கங்களும் செய்தன. புளொட் போன்ற தமிழ் இயக்கங்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கின்றன. கிழக்கில் நடந்த படுகொலைகளில் இந்த தமிழ் இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கிழக்கில் நடந்த இனப்படுகொலைகளுக்கு இராணுவம் மட்டுமன்றி இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் இயக்கங்களும் சம்பந்தப்பட்டிருந்தன என்பதை பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கூறிவலம் வரும் பலரின் கைகளில் இரத்தகறை படிந்திருக்கிறது என்பதை கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள். – இரா.துரைரத்தினம்- *****
  7. .
  8. செய்திகள் வலைத்தளம்: IBC NEWS கொழுவி: https://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150920_savukkadi திகதி: 20/09/2015 ஆறு மாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை! ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த என்னுடைய மனைவி மற்றும் தாய் தகப்பன் தங்கச்சி உள்ளிட்ட 13 பேரை இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் மூலம் சுட்டும் வெட்டியும் மிகக் கோரமான முறையில் படுகொலை செய்ததுடன் அவர்களை அரைகுறையாக எரித்து மடு ஒன்றில் போட்டிருந்தனர் அவர்களின் ஆடைகளை வைத்து தான் நாம் எமது உறவினர்களின் சடலங்களை அடையாளம் கண்டோம். என தனது ஆறுமாதக் கர்ப்பிணி மற்றும் தாய் தகப்பன் தங்கச்சி உள்ளிட்ட 13 பேரை பறிகொடுத்த மரியசீலன் தெரிவித்துள்ளார். மொத்தமாக சவுக்கடிக் கிராமத்தைச் சேர்ந்த 26 பேரும் ஊரணி போன்ற வெளியிடங்களில் இருந்து வந்தவர்களையும் சேர்த்து 33 பேர் அந்த நேரத்தில் படுகொலை செய்யப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சவுக்கடி கடலோர கிராமத்தில் ஒரே தினத்தில் பெண்கள் குழந்தைகள் கர்ப்பிணித்தாய் உட்பட 33 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டதன் 28ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று வவுக்கடி நினைவு இல்லத்தில் நடைபெற்றது. ஆண்டுகள் பல கடந்தும் இதுவரையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் கூறுகின்றார்கள். 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி காலை 8.30 மணியளவில் இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் தாக்குதலிலே இவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. கப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியாவின் தலைமையில் சீருடை அணிந்த இராணுவத்தினரே அந்த காலப்பகுதியில் இது போன்ற படுகொலைகளில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் உண்டு. மட்டக்களப்பில் செப்டெம்பர் படுகொலைகள் என்பது 1990 ஆண்டு நடைபெற்ற படுகொலைகளையே சொல்லப்படுகிறது. 1990 ஆண்டு என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களை வெட்டுப்பாட்டி என்ற இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்த முஸ்லீம் ஊர்காவல் படையினருமே இணைந்து தமிழ் மக்களை வகை தொகை இன்றி படுகொலை செய்தமைக்கு இந்த சவுக்கடிப் படுகொலைகளும் சாட்சியாக உள்ளது. துப்பாக்கியால் சுட்டும் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலைகளை செய்த பின்னர் இரு குழிகளுக்குள் சடலங்களை போட்டு தீ வைத்து எரித்து தடயங்களை கூட அழித்துவிட்டே அந்தக் குழுவினர் சென்றதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றார்கள். சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் சிங்களத்திலும் தமிழிலும் பேசிக்கொண்டார்கள். அவ்வேளை நிலவிய சூழ்நிலையில் அவர்களை அருகாமையில் சென்று அடையாளம் காண முடியவில்லை என்கின்றார் மீனவரான ஜி. மரியசீலன். சவுக்கடி கிராமம் ஏறாவுர் முஸ்லிம் பிரதேசத்திற்கு அண்மித்த கிராமம் என்பதால் இந்த படுகொலைச் சம்பவத்துடன் முஸ்லிம்களும் தொடர்புபட்டிருப்பதாக தமிழர் தரப்பில் சந்தேகங்கள் உள்ளன. 1990ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் தமிழர்களும் முஸ்லிம்களும் இன ரீதியான மோதல்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாகவே இந்தச் சந்தேகம் இருந்தாலும் பொறுப்பானவர்கள் யார்? என்பதை தங்களால் உறுதிபடக் கூற முடியாது எனவும் மரியசீலன் குறிப்பிடுகின்றார். 28 வருடங்களுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத படுகொலைகளில் ஒன்றாக இந்த சவுக்கடிப் படுகொலையும் கடந்து செல்கின்றது. இலங்கை அரசு இந்தப்படுகொலைகள் குறித்து உண்மைகளை கண்டறிவதற்கோ அல்லது இது போன்ற படுகொலைகள் மீள நிகழாமல் இருப்பதற்கோ எந்தவகையான அர்ப்பணிப்பையும் செய்ததாக தெரியவில்லை. *****
  9. செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34283 திகதி: 07/08/2011 தமிழாக்கம்: நன்னிச் சோழன் திராய்க்கேணி படுகொலையின் 21வது ஆண்டு நினைவு நாள் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் உள்ள திராய்க்கேணி ஊரில் சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையின் ஆதரவுடன் முஸ்லிம் காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட 47 தமிழ் பொதுமக்களின் இருபத்தியோராம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் மட்டக்களப்புக்கு தெற்கே 70 கி.மீ தொலைவில் திராய்க்கேணி ஊர் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 5, 1990 அன்று திகவாபி ஊரில் சிறப்புப் படையினரால் 13 முஸ்லிம் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்குப் பகரடியாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்குவதற்காக சிறப்பு அதிரடிப்படை முஸ்லிம் தொழிலாளர்களை படுகொலை செய்தது. மறுநாள் சிறப்பு அதிரடிப்படை ஆளணியினரின் காப்புடன் முஸ்லிம் குற்றவாளிகள் குழுவொன்று தமிழர்களை அவர்தம் உற்றார் உறவினர் முன்னிலையில் கொன்றனர். முதியவர்களை அவர்தம் வீடுகளில் எரித்துக் கொன்றனர். 350க்கும் மேற்பட்ட வீடுகள் முஸ்லிம் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகும், படுகொலைக்காக யாரும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படவில்லை. இந்தப் படுகொலை குறித்து உசாவல் நடத்துமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு குடைச்சல் கொடுத்துவந்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் இ.மயிலப்போடி அவர்கள் 1997ஆம் ஆண்டு துணைப்படைக் குழுக்களாலும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களாலும் சுட்டுக் கொல்லப்பட்டார். சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச கடந்த வாரம் வெளியிட்ட தனது தவறுத்தகவல் அறிக்கையில் காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் குறிப்பிட்டிருந்த போதிலும் கிழக்கில் நடந்த தமிழ்ப் படுகொலைகளை குறிப்பிடத் தவறியதாக அம்பாறையில் உள்ள தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.