Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "வீரனும் அறவழி போரும்" உலகில் எந்த ஒரு பெண்ணும் / தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள், உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம் - மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 இல் "Not evileyed-, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentle hearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds." இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது. அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்: “வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு” ["சத்ரபதி சிவாஜி"/ பாரதியார்] என மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார். அப்படிபட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மா வீரர்களையும் புறநானுறு கவிதையில் விரிவாக 2000 / 2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்க தமிழர்களுக்கு உண்டு. மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன் அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப்பட்டிருப்பது, சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன்படுகிறது. இதைத்தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்: "O son of Kuntī, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with determination and fight." "குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு! (கீதை 2-37)" மேலும் போரில் மடிந்த, பெரும் வீரர்களை புதைத்த இடத்தில், அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்டப்பட்டதும், போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வதும் ஒரு வழமையாக இருந்ததுள்ளது சங்க பாடல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி, எதிரி படையை கலங்கடித்து, இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மா வீரனை, எம் மூதாதையர்கள், தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள். அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது. எனினும் அறம் சார்ந்த வீரமே அங்கு பெருமை உடையதாய் கருதப்பட்டது. அந்த நிலை இன்று அருகிப் போயிற்று. இதை நாம் கண்டு, கேட்டு, அனுபவித்தும் உள்ளோம். சங்க காலம் என்பது கி.மு.700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும். இக்காலத்தில் தோன்றியது தான் புறநானுறு. அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றுகள் உள்ளன. எனினும், முழுமையான தரவுகள் இல்லை. அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன. சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார். இதனால், புறநானூற்றில் இனக்குழுத் தலைவர்கள், குறுநில மன்னர்கள்,பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் கிடைக்கின்றன. அதில் அரசர்களின் வீர செயல்கள், தன் நாட்டிற்காக, தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு, அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு, அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை, இவைகளுக்கு மேலாக, எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம். இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று. இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை. போர் விதி முறை அல்லது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள். குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக தாக்கி அழிக்கிறார்கள். அது மட்டும் அல்ல வைத்தியசாலை, பாடசாலை,பாதுகாப்பு இல்லங்கள் / இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன. சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள். போர் பிணையாளர்களும் கொல்லப்படுகிறார்கள். இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. ஆனால் முறைப்படி போர் சாற்றும் வழக்கம் பழங் காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தனை என்பதை புறநானுறு 9 கூறிச் செல்கிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து, அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி இப் பாடல் பாடப் பெற்றுள்ளது. அது தான் அந்த முக்கிய தகவல். அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப்பட்டவை என்றும், தர்மயுத்தம் என்றும் இதனால் அறிகிறோம். இதே போல கி.மு ஏழாம் நூற்றாண்டு சுமேரிய காவியமான கில்கமெஷிலும் (Epic of Gilgamesh) இது காணப்படுகிறது. [Brien Hallett,The Lost Art of Declaring War]. கில்கமெஷ் காப்பியம் என்பது பண்டைக்கால மெசொப்பொத் தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். போர் தொடுக்கப்போகிறேன். ஆனிரை [பசுக் கூட்டம்], ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள் [பிராமணர்], பெண்டிர், பிணியுடையவர், மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுங்கள் என முன்கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என அறிகிறோம். இதோ அந்த பாடல்: "ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங் கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன் நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!" பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்"/ "இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது. அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக்கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி விட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது. அதுதான் யுத்த தருமமாகும். பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது. இப்படி போரை நடத்திய இந்த மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, "பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என மேலும் அவனை வாழ்த்துகிறது. பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர். பல் துளி என்னும் சொற்கள் இணையும்போது பஃறுளி என அமையும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. "கார்த்திகை தீபம்" [சிறுகதை ] இன்று கார்த்திகை தீபம், 2022. மிளிரன் ஒரு இளம் பொறியியலாளர். தன் பணியை முடித்துவிட்டு, தான் தங்கி இருக்கும் ஊழியர்கள் குடியிருப்புக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தான். அவனது எண்ணம் எல்லாம் தன் அம்மா, அப்பா, மூத்த அக்கா, அண்ணா மட்டுமே! "கார்த்திகை தீபம் எங்கும் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லட்டும்! காரிருள் ஆக்கிய எமது வாழ்வு விழிப்பு பெற்று தீபமாய் ஒளிரட்டும்!!" அன்று கார்த்திகை மாதம் 2008, மிளிரன் பத்து அகவை, தன் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர்களுடன், குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் பதுங்கு குழிக்குள் பாதுகாப்புக்காக இருந்தான். கொஞ்சம் சத்தம் அமைதியாகியதும், ஹெலிஹாப்டர், போர் விமானங்களின் இரைச்சல்கள் ஓய்ந்ததும், முதல் பெற்றோர்கள் வெளியே வந்து வானத்தைப் பார்த்தனர். இன்னும் குண்டுகள் வெடித்த புகைகள் வானத்தில் காற்றுடன் அங்கும் இங்குமாக அலைந்தவண்ணம் இருந்தன. அவர்கள் தமிழர் பாரம்பரிய குடும்பம் என்பதால், ஆயத்தமாக முன்பே தயார் நிலையில் இருந்த சில கார்த்திகை விளக்குகளை தம் வீட்டின் முன் கொளுத்தி வைத்தனர். அவர்களுக்கு அதில் ஒரு திருப்தி. "வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு இலையில மலர்ந்த முகையில் இலவம் கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த அருஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி” பதுங்கு குழியில் இருந்து மிளிரனின் இரு மூத்த சகோதரர்களும் மெல்ல வெளியே கார்த்திகை தீபத்தின் வண்ண அழகை எட்டிப் பார்த்தனர். வானத்தில் ஊர்ந்து செல்லும் ஒளிவட்டமான சூரியன், நெருப்பாகச் சிவந்து வெப்பத்தைக் கக்குகிறது. அவ்வெப்பத்தால் காய்ந்தது அழகிய காடு. அதனால் இலையற்றுப் போன இலவமரத்தில் ஒரு மொட்டும் விடாமல் எல்லா மொட்டும் மலர்ந்திருந்தன. அக்காட்சி அவ்வழியே சென்ற ஔவையாருக்கு, மங்கையர் கூட்டம் ஒன்றாகச் சேர்ந்து ஆரவாரத்தோடு ஏற்றிய அழகிய தீபங்களின் சுடர் கொடியாகப் படர்ந்து நீண்டு செல்வது போல் தோன்றியதாம். ஆனால் இவர்களுக்கு, குண்டுகள் ஷெல்களின் தாக்கத்தால், எரிந்து காய்ந்த இலையற்றுப் போன மரத்தில் பூத்த பூக்களாகவே அவை தெரிந்தன. அந்தக்கணம், மீண்டும் ஒரு ஹெலியின் பெரும் இரைச்சல், அவர்கள் பதுங்கு குழிக்குள் பாதுகாப்பாக திரும்பவும் உட்புகு முன் அந்த கோரா சத்தம், அது தான் மிளிரனுக்கு கேட்டது. அதன் பின் அவன் தனித்துவிட்டான். சொந்த இடத்திலேயே அகதியானான். அது தான் அவன் அவர்களுக்கு, அஞ்சலி செலுத்த, நினைவுகூர சில சிவப்பு மஞ்சள் துணிகளுடன் விடுதிக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறான். மிளிரன் தன் விடுதிக்கு கடைசியாக திரும்பும் மூலையில், அந்த மூலை வீட்டில், கார்த்திகா என்ற இளம் பெண் சிவத்த மேல் சட்டையுடனும், மஞ்சள் கீழ் சட்டையுடனும் "உண்பது நாழி உடுப்பவை இரண்டே" என்று, தன் வீட்டின் முன்றலில் கார்த்திகை தீபம் ஏற்றிக்கொண்டு இருந்தாள். "விளக்கொளி யாகிய மின்கொடி யாளை விளக்கொளி யாக விளங்கிடு நீயே." அனைத்தையும் விளக்கு கின்ற ஒளியாக விளங்கும் மின்கொடி போன்ற இறைவியை, அந்த பேரொளியாகவே நான் தெரிந்து கொண்டேன் என்று திருமூலர் அன்று கூறினார். ஆனால் இன்றோ, மிளிரன் உள்ளத்தில் சுடர்விட்டு எரியும், அனைத்தையும் அவனுக்கு மகிழ்வாக அள்ளித்தரும் விளக்கொளியாகக் அவளை ஒருகணம் அப்படியே அசையாமல் நின்று பார்த்தான். “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம்! நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி! தரளம் மிடைந்து - ஒளி தவழக் குடைந்து - இரு பவழம் பதித்த இதழ்! முகிலைப் பிடித்துச் சிறு நெளியைக் கடைந்து - இரு செவியில் திரிந்த குழல்! அமுதம் கடைந்து - சுவை அளவிற் கலந்து - மதன் நுகரப் படைத்த எழில்!” நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து சிறிய புன்னகையை பதித்த முகம். அவள் நினைவுகளை அவனில் பதித்து, அவன் மனதில் அவள் அலைகளை நிறைத்து, நளினத்தைத் தெளிக்கின்ற விழிகள். முத்துகளைக் கோத்து அவற்றின் ஒளி தெரியாதவாறு குடைந்து உள்வைத்து வெளியே சிவந்த இரண்டு பவழத்தைப் பதித்த இதழ்கள். மேகத்தைப் பிடித்து அதைக் கடைந்து காதுகளின் இரு மருங்கிலும் அது உலவுமாறு விடப்பட்ட கூந்தல். மொத்தத்தில் பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதினையே மீண்டும் கடைந்து வந்தத் தெளிவுடன், இன்னும் இன்சுவையைக் கலந்து, மிளிரன் நுகரப் படைத்த அழகு அவள்! அவள் தான் கார்த்திகா, கார்த்திகை தீபத்தில் ஒளிர்ந்துகொண்டு இருந்தாள்! அவன் அதில் அழகாய் மிளிருபவனோ, அது தான் அவன் பெயரும் மிளிரனோ!!, இப்படித்தான் அவன் மனம் அவனைக் அந்தக்கணம் கேட்டது. அவளும் சட்டென அவனைப் பார்த்தாள். காதல் என்ற ஒன்று உள்ளத்தில் புகுந்து விட்டாலே அது பொத்தி வைக்கும் வகையறியாது என்பதை அவள் கண்கள் வெட்கம் அற்று அவனுக்கு சொல்லிக் கொண்டு இருந்தன. இன்பத்தின் உச்சம் என்பது வெறுமைதானோ? சும்மாயிருப்பதே சுகம் என்கிறார்கள் சித்தர்கள். இதுவும், அவளின் பார்வையால் அவன் மனம் இன்பம் அடைந்தாலும், அவன் அதைக் வெளிப்படையாக காட்டாமல் சும்மா கொஞ்ச நேரம் அங்கே நின்றான். இந்த ‘சும்மா’வும், சித்தர்கள் சொன்ன அந்த சும்மாவும் ஒன்றுதானோ? தன்னை மறந்த நிலை என்கிறார்களே அதுவாக இருக்குமோ இது? அவன் கொஞ்சம் குழம்பித்தான் இருந்தான். கார்த்திகை தீபத்தின் மென்மையான பிரகாசத்தைப் போல அவள் அவனுக்கு தோன்றினாள். அன்பின் சுடர் மினுமினுப்பு கொண்டு இருவரின் உள்ளங்களிலும் நடனமாடியது. கண்டதும் காதல் ……. கூடியதும் பிரிவு … என்ற இந்த காலகட்டத்தில், அவையைத் தாண்டி, மிளிரன், கார்த்திகாவின் உள்ளங்களில் தீபம் ஒன்று இந்த நன்னாளில் பற்ற வைக்கப்பட்டு விட்டது! அந்த நேரத்தில் காற்றில் தூபத்தின் வாசனை மற்றும் எண்ணற்ற எண்ணெய் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வானம் அவர்களின் காதல் ஆரம்பத்துக்கு மெருகேற்றின. சிவப்பு, மஞ்சள் துணிகள் காற்றில் அசைந்து வாழ்த்துக்கூறின. இருவரும் தம்மை இழந்து ஒருவரை ஒருவர் நோக்கி கொஞ்சம் அசைந்தனர். அது காதலின் சம்மதத்தை சொல்லாமல் சொன்னது. அவர்களின் எண்ணங்களைப் பின்னிப் பிணைந்து, தீபத்தின் வான ஒளியின் கீழ் அவர்களை ஒன்றாக இழுத்தது. மினுமினுக்கும் தீப்பிழம்புகள் மற்றும் காற்றில் எதிரொலிக்கும் மெல்லிசைக் கோஷங்களின் பின்னணியில் அவர்களின் காதல் அங்கு மலர்ந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களில் ஆறுதல் கண்டனர், அவர்கள் இருவரின் இதயங்கள் கொண்டாட்டங்களின் தாளத்துடன் ஒன்றிணைந்து, இணக்கமாக அதற்கு ஏற்றவாறு துடித்தன. பகல் இரவுகளாக மாறியதும், கார்த்திகை தீபத்தின் இரவு முழுவதும் எரியும் சுடர் போல, அவர்களின் பிணைப்பு மௌனத்தில் வலுவடைந்தது. கார்த்திகா, தனது பிரகாசமான புன்னகையுடனும், விளக்குகளின் தீப்பிழம்புகளைப் போல பிரகாசிக்கும் கண்களுடனும், வீட்டுக்கு வெளியே, படலைக்கு அருகில் வந்து, 'உங்களுக்கும் என் குடும்பத்தின் சார்பில் கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!' என்று கூறியபடி, மிளிரனுக்கு ஒரு தீப விளக்கை கொடுத்தாள். அவனது கண்கள், அதை வாங்கும் பொழுது கண்ணீரால் நனைவதைக் கண்டு திடுக்கிட்டாள். அவன் தன் சோக கதையை அவளுக்கு சுருக்கமாக சொல்லிவிட்டு, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டான். 'நான் கார்த்திகா, நீங்க ?' நட்சத்திரங்கள் பிரகாசித்த வானத்தின் கீழ், அவள் மெல்லிய குரலில் கேட்டாள். அவன் திரும்பி பார்த்து, 'நான் அகதி, நான் மிளிரன், புதிதாக இங்கு பதவிபெற்ற பொறியியலாளன்' என்று கூறிக்கொண்டு புறப்பட்டான். 'இல்லை இல்லை, இனி நீங்க அகதி இல்லை' என அவள் தனக்குள் கிசுகிசுத்துக் கொண்டாள். அவள் கொடுத்த கார்த்திகை தீபத்தின் புனிதச் சுடரைப் அணையாமல் விடுதிக்கு எடுத்துச் சென்ற அவன், அதை மற்ற சுடர்களுடன் ஒன்றாக தனது பெற்றோர் சகோதரர்களின் படத்தின் முன், சிவப்பு மஞ்சள் துணிகள் தோரணம் போல அசைய, ஈகைச் சுடரின் முன் தன் அகவணக்கத்தை செலுத்தினான். அன்றில் இருந்து இருவரும் சந்திப்பது, கதைப்பது, ஒன்றாக பொழுதுபோக்குவது என அவர்களின் உறவு மலர்ந்தது. இருப்பினும், காதல் பற்றிய கதையைப் போலவே, சவால்கள் வெளிப்பட்டன. மரபுகளில் வேரூன்றிய அவளது குடும்பம், அவர்களது உறவின் ஆழத்தை கேள்விக்குள்ளாக்கினர், அவர்களது இணைப்பை ஏற்கத் தயங்கினர். ஆனாலும், இருவரும் உறுதியுடன் இருந்தனர். அவர்களின் உறுதியும் அசையாத அர்ப்பணிப்பும் தீபத்தின் சகிப்புத்தன்மையை பிரதிபலித்தது, அவளின் பெற்றோரின் எதிர்ப்பினால் ஏற்பட்ட துன்பத்தின் காற்றையும் மீறி பிரகாசமாக அந்த தீபம் ஒளிரத் தொடங்கியது. என்றாலும் நாளடைவில், மிளிரனின் குடும்ப விபரங்களை அறிய அறிய அவளின் பெற்றோர்களின் எதிர்ப்பு முற்றாக நின்றுவிட்டது. இறுதியாக, மற்றொரு மங்களகரமான கார்த்திகை தீபத்தில், கார்த்திகை 2023 இல், எண்ணற்ற தீபங்களின் பிரகாசம் மற்றும் புனித நெருப்பின் நடுவில், கார்த்திகாவின் குடும்பத்தினரின் ஆசீர்வாதங்களைப் பெற்றபடி, இருவரும் கைகளை பின்னிப்பிணைத்து ஒன்றாக நின்றனர். அவர்களின் காதல், அவர்களை ஒன்றிணைத்த சுடர் போன்று, பிரகாசமாக எரிந்து, அவர்களின் முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்தது. கார்த்திகை தீபத்தின் எல்லையற்ற பிரகாசத்தின் மத்தியில், சிவப்பு மஞ்சள் உடையில் இருவரும் இணைந்தனர்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. "கார்த்திகை தீபம்" [கவிதை] "கார்த்திகை திருநாள் தீபம் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லுது! கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் காரிருளை அகற்றி வெளிச்சம் தருகுது!" "காக்கை வன்னியன் இன்றும் இருக்கிறான் காசுக்கு தன் இனத்தையே விற்கிறான்! காட்டிக் கொடுத்து அடிமை ஆக்கிறான் காரணம் கேட்டால் எதோ மழுப்புறான்!" "காணும் காட்சிகள் இருளை கொடுக்குது காது கேட்பதும் பொய்யாய் தெரியுது! காதல் புரிந்தே கொலையும் செய்கிறான் கார்த்திகை தீபம் உண்மை பரப்பட்டும்!" "ஈன்றவன் இல்லை இணைந்தவன் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை! சிதைந்து போராடி வெற்றியும் இல்லை புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!" "கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம் நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம்! நீதி வேண்டி சிலம்பை உடைத்தோம் நியாயம் வேண்டி உலகை கேட்கிறோம்!" "ஒன்றாய் கூடு உண்மையை உரை நியாயம் நிறுத்து விசாரணை எடு! கவலை மறக்க தீர்வைத் தா கேள்வி கேட்டு நடுக்கல் முழங்குது!” "வேலி நோக்கிய விளக்கு நிலையும் போலித் தலைவரைக் சுட்டிக் காட்டட்டும்! நீலிக் கண்ணீர் வடிப்பவரைச் சொல்லட்டும் வாலிப உள்ளங்களுக்கு உற்சாகம் கொட்டட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 'வேலி நோக்கிய விளக்கு நிலையும்' [தொல்.பொருள்.புறத்திணை இயல்-35] – என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.
  4. "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி: 02 மனித சரித்திரத்தில், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப் படு கொலைகள் எவை எவை என்று பார்க்கும் பொழுது, மாயன் நாகரிகம் எம் கண் முன் வருகின்றன. கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரிகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு [Spanish] பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது. அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத் தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழு ப்பப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார் என்பதும் குறிப் பிடத்தக்கது . இப்படி ஒன்றையே மாயாக்களுக்கு உதவி செய்யும் அழிவு முதலியவற்றினின்று மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார்! இச் சின்னஞ் சிறிய இலங்கை தீவு சில இனக் கலவரங்களைக் கண்டு மனித வளம், பொருளாதார வளம் என்றெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால், இவற்றிற் கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் அமைந்தது. அதனால் தான் 1983 ஜூலை மாதம் "கறுப்பு ஜூலை' என்று இன்னும் அழைக்கப்படுகிறது. இது 40 / 41 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 24 தொடக்கம் ஜூலை 30, 1983 வரை அரங்கேறியது. இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000 தமிழர் படுகொலை செய்யப்பட்டு முப்பது கோடி டாலர்கள் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சூறையாடப்பட்டது. பல இலட்சம் தமிழர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பாதுகாப்புக்காக சென்றனர். நானும் என் குடும்பமும் உட்பட கப்பலில் யாழ் சென்றோம். இனப்படு கொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது . ஏன் என்றால் லட்சக் கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா ஆவார். வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக் கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப் பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற , மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும் . அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ? . இது போலவே இந்தியாவிற்குள் 1700 கி மு, ஆடு மாடு மேய்த்து வந்த, நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் இங்கே வாழ்ந்த பழங்குடியினரை திட்டி , கேவலபடுத்தி, பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் என "ரோமேஷ் மஜும்தார்" தமது "பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்" என்ற புத்தாகத்தில் 22 ஆம் பக்கத்தில் கூறுகிறார் . மேலும் ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள் , அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன என Dr ராதாகுமுத முகர்ஜி Phd "இந்து நாகரீகம்" பக்கம் 69 இல் குறிப்பிடுகிறார். இதற்கு ஒரு மாதிரி எடுத்துக்காட்டாக ஒரு பாடலைக் கிழே தருகிறோம். "இந்திரா! ஆந்தையைப் போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் கொல்லவும். நாயைப் போலும் கழுகைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் நசுக்கி ஒழிக்கவும்." மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22 மேலும் இதில் ஒருவர் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், மாயனும் இந்த பழங்குடியினருக்கும் மற்றும் தமிழருக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக அறிஞர்கள் இப்ப சான்றுகளுடன் கூறுகிறார்கள். ஆகவே இந்த இரு முதன்மை இனப்படு கொலைகளைத் தாண்டித்தான் நாம் இப்ப வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அது மட்டும் அல்ல இக் கொலைகளை /அழிவுகளை புரிந்தோர் இருவரும் ஒரே இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மொழி குடும்பத்திற்குள் உள்ள இந்திய - ஈரானிய மொழி குடும்பத்தில் தான் பல வட இந்தியா மொழியும் உள்ளன என்பதும் கவனிக்கதக்கது. மேலும் ஒரு கடைசி உதாரணமாக எமது பார்வையை மகாபாரதம் அல்லது விஸ்ணு புராணம் பக்கம் திருப்புவோம். விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் என கருதப்படும் பரசுராமரை இங்கு சந்திக்கிறோம். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். ஒரு முறை கார்த்தவீரியன் என்றோர் அரசன் [சத்திரியன் / க்ஷத்ரியர்] ஜமதக்கினி முனிவரின் காமதேனு பசுவை கடத்தி சென்று விட்டான், இதை அறிந்த பரசுராமர் அவனைக் கொன்று பசுவை மீட்டார். ஆத்திரம் அடைந்த கார்த்தவீரியனின் புதல்வர்கள் ஆசிரமத்திற்கு வந்தார்கள். அங்கு பரசுராமர் இல்லாததால், அவனின் தந்தை ஜமதக்னி முனிவரின் தலையை பலிக்கு பலி வெட்டினர். தாயின் அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அப்பொழுதே இந்தக் க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார் பரசுராமர். அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். இரத்த ஆறு ஓடியது. குருக்ஷேத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. இதை அடுத்து கொடிய கொலைக்காரனாக மாறி பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் இல்லாமல் போகும்படி இருபத் தொரு திக்விஜயம் செய்து, இருபத் தொரு தலை முறையை வேரறுத்தார் என கூறுகிறது. இவர் தனி மனிதனாக அழித்த அரச வம்சத்தின் எண்ணிக்கை செங்கிஸ்கான் [mongolian king genghis khan], ஹிட்லர் [Adolf Hitler], ஸ்டாலின் [Joseph Stalin], முசோலினி [Benito Amilcare Andrea Mussolini], மாசேதுங் [Mao Zedong ] இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்த கொலைகளை விட மிக மிக அதிகம். சத்திரியர் குலத்தை அழித்ததினால் பிராமணர்கள் இவரை கடவுளின் அவதாரமாக்கி விட்டனர் போலும். என்றாலும் க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பும் அந்த வம்சத்தை தழைக்கச் செய்தான் மூலகன். சூர்ய குலத்தில் பிறந்தவன் இந்த அரசன். இராமாயண ராமன் இவனது எட்டாவது தலை முறையாகும். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது. ஆகவே பொதுவாக விவேகமும் வீரமும் ஆற்றலும் கொண்ட ஒரு இனத்தை முழுமையாக தடை செய்யவோ அழிக்கவோ முடியாது என்பது கண்கூடு எப்படி என்றாலும் ஒரு இனப்படு கொலை நடை பெறும் போது ஒரு தற்காலிக பின்னடைவு நிகழ்கிறது. அதனால் தான் பொதுவாக எல்லோரும் அறிய விரும்புவது : *உண்மையில் என்ன நடந்தது ? *இது ஏன் நடந்தது ? *இதற்கு யார் பொறுப்பு ? *இந்த அட்டூழியத்திற்கு யார் யார் உடந்தையாக பின் புறத்தில் இருந்தவர்கள் ? *நாம் யாரை குற்றம் சுமத்த வேண்டும் ? இதனால் தான் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவரும் ,தனது திருக்குறள் 548 இல்: "எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்." என்று கூறுகிறார். அதாவது, நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பல வகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான் என்கிறார். இப்படியான கேள்விகளுக்கான உண்மையான, ஆக்கபூர்வமான, பக்க சார்பு அற்ற, பதில்களையே இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! ஆகவே இந்த நேர்மையான கோரிக்கைகள் சிக்கலான ஒன்று அல்ல. மிக மிக இலகுவான ஒன்றே !! *"உண்மைகளை வெளிபடுத்துவது" *"நேரடியாகவோ மறைமுகமாவோ இதில் ஈடு பட்டவர்களை அல்லது குழுக்களை பகிரங்கமாக தண்டிப்பது" *"இதை ஒரு பாடமாக மற்றவர்களுக்கும் உணர்த்துவது" அப்படி என்றால் இவை மேலும் தொடராமல் தடுக்கலாம். அடுத்த பரம்பரைக்கும் தொடராமல் இருக்க. அது மட்டும் அல்ல பரசுராமர் போல் பரம்பரை பரம்பரையாக அழிப்பதை நேரத்துடன் தடுக்கலாம் என்பதாலும். இன்னும் ஒரு மூலகன் வரும்வரை இருபத்தி ஒரு தலை முறைக்கு காத்திருக்க தேவை இல்லை என்பதாலும் ஆகும் . "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்- விசாரணை எடு- உண்மையை நிறுத்து கூடுங்கள்,ஒன்றாய் உண்மையை உரையுங்கள்- படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முடிவுற்றது
  5. "முதல் - முடிவு கவிதை" / முதல்- தர்மம் & முடிவு- தலை காக்கும் "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இருவரையும் மதித்து வாய்மை என்னும் பண்பு கொண்டு ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல் மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால் செய்த நன்மை தலை காக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. "படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" / "The corpse that oppose the 'Genocide' is asking" "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்- விசாரணை எடு - உண்மையை நிறுத்து கூடுங்கள், ஒன்றாய் உண்மையை உரையுங்கள்- படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் "I am not able to sleep Somebody Please help me When I close my eyes Only many corpses come And unable to answer the questions arise by the corpses that come I am not able to sleep Those who have the answers Please help To bury the innocent corpses within my eyes Is an impossible task for me. I leave this to you, itself. One by one all the Corpses… Look closely the tongue of one has been sliced away For having told the truth For another the breast has been sliced off For refused to make love with notorious groups The corpses that come Every one of them Scream with questions In the line of these corpses , I found many kids The voices of those Who became corpses by fighting against 'Genocide' Are destroying My sleep ‘Bring the truth. expose the truth. Take action ... Now… Now…’ From now I cannot sleep Those with answers Come and Help me " [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  7. "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி 01 இனப்படுகொலை [Genocide] பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் / குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட , முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் , படை , ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில் , பொதுவாக நடை பெறுகிறது. ஆகவே இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது ,அவைகளுடன் போர் குற்றங்கள் [War Crimes] ,' மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ['crimes against humanity'] போன்றவையும் பொதுவாய் வந்து விடுகின்றன. இப்ப இனப்படு கொலை என்றால் என்ன என பார்ப்போம். இனப்படு கொலை என்பது ஒரு இனம் மற்ற இனத்தை ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என கொன்று குவிப்பதோ, அழிப்பதோ மட்டும் அல்ல. அதற்கு மேலாக ஒரு இனத்தின் அடையாளமான மொழி, பண்பாடு, பரம்பரை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தடுப்பதும், இடையூறு விளைவிப்பதும் , அழிப்பதும் அத்துடன் அதன் வாழ்வை, வளர்ச்சியை, வளத்தை முடக்குவதும் ஒரு இனப்படு கொலையே! போர் குற்றங்கள், இனப்படுகொலைகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவை உலக சமூகத்தில் மனித வரலாறு முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. என்றாலும் அத்தகைய குற்றங்களைத் தண்டிப்பது அல்லது அதற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் வெளிவரத் தொடங்கின. இரண்டாவது உலகப் போரில் [1939–1945 ] ஜெர்மனியரும் ஜப்பானியரும் செய்த கொடுமைகள், குற்றங்கள் போன்றவை மக்கள் வெறுப்பை சம்பாத்தித்து அவைகளுக்கு எதிராக ஒரு பொது சீற்றம் அல்லது கொந்தளிப்பு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும். செப்டம்பர் 1, 1939-இல் துவங்கிய அந்த போர் 1945 ஆகஸ்டு பதினைந்தாம் தேதி முடிவடைந்த போது மொத்தம் ஐந்து முதல் ஏழு கோடி உயிர்களை பலி வாங்கி இருந்தது. இதில், இராணுவத்தோடு சம்பந்தப்பட்ட வர்கள் இரண்டிலிருந்து இரண்டரை கோடியாகவும் (இதில் போருக்கு பின் பிடிபட்டு தண்டிக்கப்பட்ட இராணுவ வீரர்களும் அடங்குவர்) அப்பாவி பொதுமக்கள் நான்கிலிருந்து ஐந்து கோடியாகவும் இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டது. போருக்கு பின், போரினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வியாதியால் 1.3 கோடியிலிருந்து இரண்டு கோடிவரை மக்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். இனச் சுத்திகரிப்பு என்ற பெயரில் ஜெர்மனி நடத்திய 'யூத' இனப்படு கொலைகள் மட்டும் அறுபது லட்சத்திற்கு மேல் ஆகும். இந்தப் போருக்கு காரணமான பெரும்பாலானோர்கள் போரின் முடிவுக்குள்ளாகவே கொல்லப்பட்டு விட்டார்கள். அடால்ஃப் இட்லர் (Adolf Hitler) தற்கொலை செய்துக்கொண்டான். இத்தாலிய நாட்டின் சர்வாதிகாரி பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (Benito Amilcare Andrea Mussolini) அவன் மக்களாலே கொல்லப்பட்டான். ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகிக்கு பிறகு சரணடைந்தது. போர் முடிந்து போயிற்று. இதை அடுத்து பல பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அக்டோபர் 18, 1945-இல் 'சர்வதேச இராணுவ தீர்ப்பாயம்' [INTERNATIONAL MILITARY TRIBUNAL] தொடங்கப்பட்டது. 'அமைதிக்கு எதிரான செயல்களில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குபெற்றிருப்பது', 'அமைதியை குலைக்கும் செயல்களை வடிவமைத்தல், துவக்குதல் மற்றும் வழிநடத்தல்', 'போர் குற்றங்கள்' மற்றும் 'மனித குலத்திற்கு எதிரான குற்றம் செய்தல்' ஆகியவை குற்றச் சாட்டுகளாக அங்கு முன் வைக்கப்பட்டன. இன்று உலக முழுவதும் இது உருவாக்கிய இரண்டு பெரிய குற்றங்களை பரவலாக தொடர்ந்து கடை பிடிக்கப் படுகின்றன. ஒன்று 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' மற்றொன்று 'இனப்படுகொலை' ஆகும். இவை இரண்டும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மனிதகுலம் சுதந்திரத்தோடு வாழமுடியும். போர் குற்றம் எனப்படுவது போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயற்படுவதாகும் என்பதை அதிகமாக எல்லா நாடு களும் அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளும். உதாரணமாக ,போர் கைதிகளை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல் அல்லது கொடுமைப் படுத்துதல் ஒரு போர் குற்றம் ஆகும். அது போல, எதிரியை வேண்டும் என்றே ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை மோசம் செய்தல் [act of Perfidy] ஒரு போர் குற்றம் ஆகும். மேலும் ஒரு போர்க்கால சூழலில், சித்திரைவதை, இனப்படு கொலை, பெரும் திரளான மக்களை தம் சொந்த இடங்களில் இருந்து துரத்தல், மற்றும் பல வழிகளில் அவர்களைத் துன்புறுத்துதல் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்தல் ஒரு போர் குற்றம் ஆகும். எதிரியை வேண்டும் என்றே ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை மோசம் செய்தல் என்பதற்கு இன்றைய கால கட்டத்தில், மே மாதம் , 2009 ஆம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற "வெள்ளைக் கொடி சம்பவத்தை" ஒரு உதாரணமாக கூறலாம். அதே போல,பண்டைய காவியத்திலும் (இதிகாசம்) ஒரு சம்பவத்தை கூறலாம். உதாரணமாக, கிருஷ்ணர் பாண்டவர்களின் வெற்றியை பல தடவைகளில் நம்பிக்கை மோசம் அல்லது கௌரவர்களை வேண்டும் என்றே ஏமாற்றுதல் மூலமே பெற்றுக் கொடுத்துள்ளார். இவரின் செயல்கள் தர்மத்தின் நேரடி மீறலாக காணப் படுகின்றன. கண்ணனின் போர்த் தந்திர ஏமாற்று ஆலோசனையின் பேரில், குருச்சேத்திரப் போரில் வீழ்த்த முடியாத பீஷ்மர், துரோணர், ஜயத்திரதன், கர்ணன், சல்லியன் மற்றும் துரியோதனாதிகளை, அருச்சுனனும், வீமனும் வீழ்த்தியதால் பாண்டவர் அணி வெற்றி கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, பெண்களிடமும், திருநங்கைகளிடமும் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை வீழ்த்த, சிகண்டியை [துருபதனின் மகளான சிகண்டினி என்ற திருநங்கை] முன்னிருத்தி, பின்புறத்தில் அருச்சுனன் நின்று பீஷ்மர் மீது அம்புகளை எய்யுமாறு ஆலோசனை கூறினார் கண்ணன். அதே போல, துரோணர் உயிருக்கு உயிரான தன் மகன் அஸ்வத்தாமன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த கண்ணன், பதினைந்தாம் நாள் போரின் போது, போர்க்களத்தில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் எனும் பொய்ச் செய்தியை தருமன் மூலம் துரோணரிடம் கூறும் படி ஆலோசனை வழங்கினான் கண்ணன். அதன் படியே தருமனும், அஸ்வத்தாமன் என்ற யாணை இறந்து விட்டது, என்ற சொல்லில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற சொற்களை அதிக ஒலியுடனும், யானை என்ற சொல்லை மிக மெலிதாக துரோணரிடம் கூறினார். அதனால், துரோணர் தனது மகன் அஸ்வத்தாமன் போரில் இறந்து விட்டான் என்று நம்பி மனமுடைந்த துரோணர், தன் கையில் இருந்த போர்க்கருவிகளை விட்டு விட்டு, போர்க்களத்தில் தேரில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்து விட்டார். அப்பொழுது துரோணரின் தலையை திருட்டத்துயும்னன் தன் வாளால் வெட்டினான். எங்கே கிருஷ்ணன்?, எங்கே தருமன்?, எங்கே தருமம்? அப்படியே, கர்ணனை பல சூழ்ச்சிகளால் கொன்றான் கிருஷ்ணன்! உதாரணமாக, எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல், சேற்றில் மாட்டிக் கொண்ட தன் தேர் சக்கரங்களை தூக்கி எடுக்க கர்ணன் முயற்சித்த போது, இப்படிப்பட்ட சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்காது என்ற காரணத்தினால், கர்ணனை கொல்ல அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஆலோசனை கூறினார். அதன் படி தேர்ச்சக்கரம் தரையில் அழுந்தியதை, கர்ணன் மீண்டும் தூக்கி நிலைநிறுத்தும் நேரத்திற்குள், அருச்சுனன் கர்ணனின் மீது கனைகளை ஏவிக் கொன்றான்!! தன் இலக்குகளை அடைய ஒன்றுக்கு பல முறை, இப்படி கிருஷ்ணன் விதிமுறைகளை மீறியுள்ளார். மகா பாரதத்தை மேலோட்டமாக படித்தவர்களும் சரி, மதிநுட்பமாக படித்தவர்களும் சரி, கர்ணனை கொன்றது அர்ஜுனன் தான் என நினைப்பார்கள். அர்ஜுனன் என்பவர் தன் கையில் கருவியே என மகாபாரதம் முழுவதும் கிருஷ்ணர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போது தான் வதைக்கப்பட்டனர். இவை எல்லாம் பகவத் கீதையில் தர்மத்தை பாதுகாப்பதற்காக தான் அவதாரம் செய்தான், அதை ஒரு புறத்தில் தள்ளிவைக்க அல்ல என்ற கிருஷ்ணனின் கூற்றிற்கு, இது முற்றிலும் வேறுபட்டே காணப்படுகிறது. அத்துடன் வஞ்சனை மூலம் வெற்றி கொள்ளுதல், மகாபாரதத்திற்கு முன்பே பிராமண புராணங்களில் காணலாம். இங்கு ஆண்டவன் அடிக்கடி ஏமாற்றும் சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி அரக்கர்களுடன் அல்லது அசுரர்களுடன் போரிட்ட கதைகளைக் காணலாம்? மனிதாபிமானத்திற்கு எதிரான அல்லது மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற பதம் முதல் முதலாக 1915 இல், பெரிய பிரித்தானியா [கிரேட் பிரிட்டன்], பிரான்ஸ் மற்றும் ரஷ்யா [Great Britain, France and Russia] , துருக்கிய அரசாங்கம் [Turkish government], ஆர்மேனியர்களுக்கு [Armenians] எதிராக செய்த படுகொலையை கண்டிக்கும் பொழுது பாவிக்கப் பட்டது. போர் குற்றம் மாதிரி அல்லாமல், இது சமாதான காலத்திலும் போர் காலத்திலும் செய்ய முடியும். இந்த பதம் 1915 இல் இருந்து பாவிக்கப் பட்டாலும், உண்மையில் இரண்டாவது உலகப் போருக்கு பின் 1945 இல் தான் முதலாவது வழக்கு இந்த குற்றச் சாட்டின் கீழ் நடை பெற்றது. திட்டமிட்ட ரீதியில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களைக் கொல்கின்ற செயலானது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை என்பது தனிப்பட்ட மக்களைக் கொல்வதோடு மட்டுமல்லாது, ஒரு சமுதாயத்தை அழிப்பதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாகும். வேறுவகையில் கூறினால், தனியொரு குழுவைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதையே மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் குறிக்கின்றது. பொதுவாக இது, கொலை, முழுமையாக அழித்தொழித்தல், சித்திரவதை, பாலியல் வன்புணர்வு, அரசியல், சமய, அல்லது இன முறையிலான அடக்கு முறைகள் மற்றும் பிற மனிதம் அற்ற செயற்பாடுகள் போன்றவற்றை குறிக்கும். ஆகவே, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படு கொலை ஆகிய இரண்டும் வேறுபட்ட இரு வேறு எண்ணக் கருக்களாகும். அமெரிக்காக்களில் ஐரோப்பியக் குடியேற்றத்தில் [European Colonization of the Americas] அழித்து ஒழிக்கப் பட்ட கணக்கில் அடங்கா பெரு வாரியான உள்ளூர் குடிகள், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட பெரும் இன அழிப்பு [Holocaust], 1932- 1933 ம் ஆண்டுக் காலப் பகுதியில் உக்ரேனில் பட்டினியால் நடந்த இனப்படு கொலை கோலதடமோர் (The Holodomor, உக்ரேனியம்), நைஜீரிய உள்நாட்டுப் போர் [Nigerian Civil War], மற்றும் கம்போடியா இனப்படுகொலை (Cambodia Genocide) ஆகியன மிகப் பெரிய முதல் ஐந்து மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என இன்று கருதப் படுபவை ஆகும். இனப்படு கொலை என்ற சொல் [THE TERM "GENOCIDE" ] 1944 க்கு முன் இருக்கவில்லை. போலந்து - யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் [Raphael Lemkin (1900-1959)]என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல் வடிவம் கொடுத்தவராவார். இனத்தை குறிக்கும் geno என்ற கிரேக்க சொல்லையும், கொலையை குறிக்கும் cide என்ற லத்தீன் சொல்லையும் ஒன்றிணைத்து இந்த சொல்லை உருவாக்கினார். ஆகவே இனப்படு கொலை என்பது ஒரு சர்வதேச குற்றம் [International Crime] ஆகும். அதாவது கிழே தரப்பட்டவைகளை, முழுமையாகவோ பகுதியாகவோ ஒரு தேசிய,குடிமக்களை, இனத்தை, சாதியை அல்லது ஒரு மதம் சார்ந்த குழுவை அழிக்கும் நோக்குடன் ஈடுபடுதலை குறிக்கிறது . அதாவது ஒரு குழுவின் உறுப்பினர்களை * கொல்லுதல், *உடலிற்கு அல்லது மனதிற்கு கடும் தீங்கு ஏற்படுத்துதல் / விளைவித்தல், * வேண்டும் என்று பகுதியாகவோ முழுமையாகவோ ஒரு உடல் அழிவை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துதல், *அந்த குழுவிற்குள் இனப்பெருக்கத்தை அல்லது பிறப்புகளை தடுப்பதற்கான வழி முறைகளை சுமத்துதல், *அந்த குழுவின் சீரார்களை கட்டாயப் படுத்தி மற்ற குழுக்குள் மாற்றுதல், ஆகியவை இனப்படு கொலையாகும்! . இனப்படு கொலை என்ற சொல் 1944 ற்கு பின்பு வந்த படியால் அதற்கு முன் அப்படி ஒன்றும் நிகழவில்லை என்று பொருள் அல்ல . பல சாட்சிகள் எமது பண்டைய சரித்திரத்திலும் இதிகாசத்திலும் புராணத்திலும் மற்றைய சமய இலக்கியங்களிலும் காணப்படுகின்றது . ஆனால் இனப்படுகொலை என்ற சொல்லை நேரடியாக பாவிக்காமல். அவ்வளவுதான் ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பகுதி 02 தொடரும்
  8. "தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 10 ‘‘உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது, சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி, உதியம் என்பது ஒரு வகை மரமாகும். பப்பாளி, முருங்கை போன்று எளிதில் ஒடியும் தன்மை கொண்டது. வைரமில்லாதது. அது பெருத்தால் வீட்டிற்குப் போடும் உத்திரத்திற்குக் [beam] கூட ஆகாது. அது போன்று சரீரமாகிய உடல் பெருத்து விட்டால் அதுவும் ஒன்றுக்கும் உதவாது, நோயின் இருப்பிட மாக மாறிவிடும் என்கிறது. அதே போல சித்தமருத்துவத்தில் “ஒருவேளை உண்பான் யோகி, இரு வேளை உண்பான் போகி (உல்லாசி), மூவேளை உண்பான் ரோகி (வியாதியாளர்), நான்குவேளை உண்பான் பாவி” என்றும் சொல்கிறது. எனவே, மூன்று வேளை உணவு என்பது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பழக்கம் போலும். எனவே இது இன்றைய பண்பாட்டில் ஏற்பட்ட ஒரு நடை முறையே ஆகும். உலகத்தில் உள்ள எல்லா மக்களும் - மேற்கு நாடு உட்பட - அனைவரும் என்றும் மூன்று முறை உணவு உட்கொள்ள வில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வேளை உணவு முறையே வழக்கத்தில் இருந்ததாக BBC யின் "history of breakfast, lunch and dinner."என்ற கட்டுரை ஒன்றும் கூறுகிறது. நாம் இன்று கேள்விப்படும் காலை உணவு முறை மனித வரலாற்றின் பெரும் பகுதியில் காணப்படவில்லை. ரோமர்கள் அப்படி ஒன்றை உண்ணவில்லை. அவர்கள் பொதுவாக ஒரு உணவையே மதியம் வேளை உண்டார்கள் என உணவு வரலாற்றாளர் "கரோலின் யெல்தம் [Caroline Yeldham ] கூறு கிறார். பண்டையக்கால சரித்திரத்தை புரட்டி பார்த்தோம் என்றால் அதில் கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் வரலாற்று நிகழ்வுகள் பெரும் பகுதியாக நிறைந்திருக்கும். அப்படி பெருமைப்படத்தக்க கல்வி, தடகள கலாச்சாரங்களை [academic and athletic cultures] கொண்ட இந்த மக்கள் ஒரு சமைத்த பெரிய விருந்தாக - முதன்மை உணவாக - ஒரு நேரம் - அதிகமாக, பின்னேரம் அல்லது பிற்பகலில் உட்கொண்டார்கள். ஆகவே, அதிகமாக அவர்கள் இரண்டு உணவு உட்கொண்டார்கள் என நாம் ஊகிக்கலாம். அவர்கள் அதிகமாக, இந்த முதன்மை உணவிற்கு முன் ஒரு சிறிய உணவு எதோ ஒரு நேரத்தில் எடுத்து இருக்கலாம். "To rise at six, dine at ten, sup at six and go to bed at ten, makes a man live ten times ten.","காலை ஆறுக்கு துயில் எழுந்து, பத்துக்கு [உணவை] உண்டு, பின் ஆறுக்கு [இரா உணவை] உண்டு, பத்துக்கு [நித்திரைக்கு] கட்டிலுக்கு போய், பத்து மடங்கு பத்து வாழவைப்போம் " என்ற பதினாறாம் நுற்றாண்டு பழமொழி ஒன்று என் நினைவுக்கு வருகிறது. எனவே மூன்று முறை உணவு, சித்தமருத்துவத்தில் நாம் பார்த்தவாறு, மிக அண்மையானதே. ஆகவே முன்னைய எமது முதாதையர்கள் அதிகமாக இரு முறையே உட் கொண்டிருப்பார்கள். சூரிய உதயத்திற்கு சற்றுப் பின்பும் சூரிய மறைவிற்கு சற்று முன்பும் ஆகும். இந்த ஊகம் அதிகமாக சரியாகவே இருக்கும். ஏனென்றால் இது பகல் இரவுடன் ஒத்து போவதால். இரவு உணவு முறை, அதிகமாக மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் வந்து இருக்கலாம். நாம்,வரலாற்றில் வளர்ச்சி அடைந்து கொண்டு போகையில், எமது நடவடிக்கையும் நீண்டு பிற்பகலின் பிற்பகுதி மட்டும் சென்றது. ஆகவே அவர்களுக்கு தமது உணவை அதற்குத் தக்கதாக பரப்ப அல்லது நீட்ட வேண்டி இருந்தது. மேலும் பதினெண் சித்தர்களுள் ஒருவரான திரு மூலர் உடம்பைப் பேணுவது இன்றியமையாதது என்று ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என வலியுறுத் துகிறார், உணவே நம் உடலை வளர்க்கிறது. நம் உயிரைக் காக்கிறது. அதனால்தான் திருமூலர் அப்படி கூறினார். ஆகவே உடம்பை ஆரோக்கிய மாக வளர்க்க, சாப்பிடும் முறையைப் பற்றி, நமது முன்னோர்கள் வகுத்த உணவுப் பழக்கங்கள் பற்றி, நாம் சற்று அறிய வேண்டி உள்ளது. உடலுக்கு தேவையான சத்துக்களையும் கனிமங் களையும் கவனத்தில் கொண்டு, அச்சத்துகள் பொதிந்துள்ள உணவின் சுவையையும் அறிந்து, அதன் அடிப்படையில் உணவினை துவர்ப்பு, உவர்ப்பு (உப்பு), இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் கார்ப்பு (காரம்) என அறுசுவைகளாக வகை பிரித்து, நம் முன்னோர்கள் எமக்கு வழிகாட்டி உள்ளார்கள். மேலும் அவர்களின் சமையல் சுவையோடு நில்லாமல் உடல் நலத்தையும் உணவின் மருத்துவ தன்மையையும் முதன்மையாகக் கொண்டு, நீராவியில் வேக வைத்த உணவுகள் [இடியாப்பம், புட்டு, காய்கறி அவியல்], நொதிக்க வைத்த உணவுகள் [கூல், தயிர், இட்லி, பழைய சாதம்] போன்றவை அங்கு காணப்படுகின்றன. அத்துடன் வாழை இலை, தேக்கு இலை போன்ற இயற்கையானதை, உணவு உண்ணும் பாத்திரம் போலும், மண்பானை, மர அகப்பை, செம்பு, பித்தளை மற்றும் இரும்பு பாத்திரங்கள் போன்றவற்றை சமைக்கவும் பயன்படுத்தி உள்ளனர். காலையில் செல்வந்தனாகவும் மதியம் அரசனாகவும் இரவு கஞ்சனாகவும் சாப்பிடு” என்ற பழமொழி எவ்வளவு சாப்பிடலாம் என்பதையும் அழகுற எடுத்து இயம்புகிறது. தமிழர்களின் நாளாந்த பிரதான உணவு மிக எளிமையானது. அது அதிகமாக வேகவைத்த அரிசி [சோறு], சாம்பார் [தமிழ் நாடு] அல்லது வேகவைத்த அரிசி [சோறு], சொதி, மரக் கறி [இலங்கை தமிழர்] ஆகியவற்றுடன், மீன் அல்லது இறைச்சி [அசைவ உணவாளர்களுக்கு], ரசம், தயிர் போன்றவற்றை கொண்டுள்ளது. சிறப்பு சந்தர்ப்பங்களில் - அரிசி, பால், சவ்வரிசி, சேமியா, சக்கரை, ஏலக் காய், முந்திரிப்பருப்பு முதலியவற்றைக் கொண்டு செய்யப்படும், பாயாசம் பரிமாறப் படுகிறது. ஆனால், விருந்தினர்கள் அவர்கள் வீட்டில் வரும் பொழுது அல்லது திருமண வைபவம் நடை பெரும் பொழுது முற்றிலும் வேறு பாடாக, அங்கு இன்சுவை சாப்பாடு பரிமாறப்படும். அதிலும் ஒரு விழா, சடங்கு என்றால் , பாரம்பரிய முறைப்படி தலை வாழை இலையில் பரிமாறப்படும். இங்கு விருந்தினருக்கு முன்னால் இலையின் நுனி - பொதுவாக வலது கை பாவிப்பவர்கள் பெரும்பாலும் இருப்ப தால் - இடது பக்கம் இருக்கக் கூடியதாக வைக்கப் படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சமாக சேர்க்கக் கூடிய உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றை யெல்லாம், கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில், இலையின் குறுகிய பகுதியான இடப்பக்கத்திலும், உணவு, காய்கறிகள் இவற்றையெல்லம் பெரிய பாகமான வலப்பக்கத்திலும் உள்ளதாக பொதுவாக பரிமாறப்படும். இவர்கள் இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிர், உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சேர்த்து முடிப்பது ஒரு வழமையாகும். வாழை இலையில் உணவு பரிமாறல் 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாகவும், ஆகக் குறைந்தது கட் டாயம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே பரவலாக தமிழர் வாழ்விடங்களில் பாவிக்கப்பட்தாகவும் இருக்கலாம் எனவும் அறியப்படுகிறது. ஆகவே இது - வாழையிலையில் பரிமாறல் - ஒரு வரலாற்று ரீதியான காரணத்தையும் கொண்டுள்ளது. வாழை இலையை, அது பெரிய பரப்பளவை கொண்டதாக இருப்பதால், அதில் உணவு பரிமாறல் இலகுவாக இருந்ததாலும், மேலும் தண்ணீரை அதன் மேல் தூவுவது அல்லது தெளிப்பது மூலமே இலகுவாக கழுவக் கூடியதாக இருந்ததாலும், அதனால் சுகாதார மானதாக அமைந்ததாலும், அதே நேரம் இது நீர் உறியாதன்மையை கொண்டிருப்பதாலும் மற்றும் சில நன்மை பயக்கும் காரணங்களாலும் எமது முதாதையர்கள் இதை தெரிந்து எடுத்து இருக்கலாம். இவ் வாழை இலையில் சூடான உணவுகளை பரிமாறும் போது, அது நல்ல நறு மணத்தை கொடுத்து ரசம் போன்ற சில உணவுகளின் சுவையையும் கூட்டுகிறது. மேலும் புறநானுறு - 168, வரி11-12, கூட, "கூதளங் கவினிய குளவி முன்றில் செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்" என்று கூறுகிறது. அதாவது, - காட்டு மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்ணும் - என்கிறது. இவை அனைத்தும் வாழை இலை நீண்ட காலமாக உணவு சாப்பிட ஒரு தட்டு போல் பாவிக்கப் பட்டதை சுட்டிக்காட்டுகிறது. கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பகுதி: 11 தொடரும்
  9. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 23 மகாவம்சத்தில் எப்படி, மகாபாரத இராமாயண சாயல் தெரிகிறதோ, அப்படியே சில சங்க கால சாயலும் அல்லது அவையை ஒத்திருப்பதையும் காண்கிறோம். உதாரணமாக, அத்தியாயம் 23-ல் வரும் பரணன் துட்டகாமினியின் பத்து உதவியாளர்களில் ஒருவன். அதேபோல அத்தியாயம் 36-ல் மன்னன் ஒகாரிக திச்சனின் [VOHARIKA TISSA] ஒரு அமைச்சர் கபிலன் [Kapila]. இலங்கைத் தீவுக்கு அனுப்பப்பட்ட ஐந்து தேரர்களில் ஒருவர் பெயர் உதியர். மகாவம்சத்தில் கல்லாட நாகன் என்ற மன்னன் பற்றி சொல்லப்படுகிறது. மற்றும் இலங்கையில் பல “நாகன்” பெயர் கொண்ட மன்னர்களின் பட்டியல் இருக்கிறது. இப்படி இன்னும் சில சொல்லலாம். எனவே, கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன் என்று சங்க காலப் பெயர்கள் எல்லாம் மகாவம்சத்தில் ஒருங்கே வருவதை யாரும் தன்னிச்சையாக நடந்த ஒற்றுமை என்று ஒதுக்க முடியாது என்று நம்புகிறேன். அத்தியாயம் 21-ல் சோழ நாட்டில் இருந்து வந்த ஏலாரா அல்லது எல்லாளன், இலங்கையை 44 ஆண்டுகளாக சீரும் சிறப்புடனும் ஆண்டான். அதேபோல மனுநீதிச் சோழன் என்ற பெயரில் தமிழ் இலக்கியத்திலும் உள்ளது. இருவரும் சோழ வம்சத்தினர் மட்டும் அல்ல, இருவரும் பசுவின் கன்றைக் கொன்ற குற்றத்துக்காகத் தன் மகன் மீது தேர்க் காலை ஏற்றி சம நீதியை நிலை நாட்டியவர்கள் என்று, ஒரே மாதிரியான கதையை உடையவர்கள். அத்தியாயம் 5 இல் [THE THIRD COUNCIL], கிளிகள் தினந்தோறும் சந்திர காந்த ஏரியிலிருந்து தொண்ணுறாயிரம் வண்டி பாரம் நெல் மணிகளைக் கொண்டு வந்தன என்றும் [parrots brought daily from the Chaddanta-lake ninety thousand waggon-loads of rice], அத்தியாயம் 11 இல் [THE CONSECRATING OF DEVANAMPIYATISSA], அறுபது தரம் நூறு வண்டிகள் நிறைய கிளி பறவைகளால் கொண்டு வரப் பட்ட. மலையில் விளைந்த அரிசி என்றும் [sixty times one hundred waggon loads of mountain-rice brought thither by parrots, nay, all that was needful for consecrating a king]– அசோகன் மற்றும் தேவநம்பிய தீசன் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இப்படி பறவைகள் அரிசி கொண்டு வந்தன என்பது, புலவர் கபிலர் கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அரிசி கொண்டு வந்தார் என்று சங்க இலக்கியம் கூறுவதுடன் ஒத்து போகின்றன. கபிலர் என்பது சிவப்பு நிறக் கடவுள், சிவனைக் குறிக்கும் என்பர். அவர் குடிகளுக்கும் படைகளுக்கும் உணவு பஞ்சம் ஏற்படாத வாறு ஒரு முறை கிளிகளைப் பழக்கி நெற் கதிர்களை வரவழைத்தார் என்பதை நக்கீரர் மற்றும் ஒளவையார் பாடல்களில் அறியலாம். “புலம் கந்தாக இரவலர் செலினே, வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் 10 நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,” (ஒளவையார், அகநானூறு: 303: 8-14) அறிவைத் துணையாகக் கொண்ட இரவலர் சென்றால், மலை போன்ற யானைகளையும், அவற்றில் ஏற்றிய அணிகலன்களையும் வழங்கிப் புகழ் பெற்றவன் பறம்புமலை அரசன் பாரி. மூவேந்தர் முற்றுகை இட்டிருந்த காலத்தில் அவன் வளர்த்த குருவிக் கூட்டம் காலையில் பறந்து சென்று மாலையில் நெல்லங் கதிர்களோடு திரும்பும். அதனை உண்டு அரசுச்சுற்றம் வாழும் என்கிறது இந்த சங்க பாடல். மேலும் அதிகாரம் 25-ல் கந்துலன் என்னும் யானையை பத்து யானை பலம் கொண்ட நந்தி மித்ரன் அடக்கிய சம்பவம் வருகிறது. விஜித நகரத்தைக் கைப்பற்ற முன்பு அரசன் நந்திமித்திரனைக் சோதித்துப் பார்க்க விரும்பினான். அதற்காக யானை கந்துலனை அவன் மீது ஏவி விட்டான். தன் மீது பாய்ந்து வரும் யானையைக் கண்ட நந்திமித்ரன் அதன் இரு தந்தங்களையும் பிடித்துக் கொண்டு யானையை அடக்கி அது முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தினான் என்கிறது 5ஆம், 6ஆம் நூறாண்டில் எழுதிய மகாவம்சம். ஆனால் இதே போல சம்பவம் 2ஆம் நூற்றாண்டு சிலப்பதிகாரத்தில் கோவலன் யானையை புஜபலத்தால் அடக்கிய ஒரு சம்பவத்துடன் ஒத்துப்போகிறது. சிலப்பதிகாரம் /மதுரைக் காண்டம் / 5. அடைக்கலக் காதை இல், "தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி வளைந்த யாக்கை மறையோன்-தன்னை; பாகு கழிந்து, யாங்கணும் பறை பட, வரூஉம் வேக யானை வெம்மையின் கைக்கொள்; ஒய் எனத் தெழித்து, ஆங்கு, உயர் பிறப்பாளனைக் கைஅகத்து ஒழித்து, அதன் கைஅகம் புக்கு, பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி, மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப, பிடர்த்தலை இருந்து, பெரும் சினம் பிறழாக் கடக் களிறு அடக்கிய கருணை மறவ!" என்கிறது , அதாவது, முதியவன் ஒருவன் கூனிய உடம்புடன் தடி ஊன்றிக் கொண்டு தானம் பெறத் தளர்ந்து நடந்து வந்தான். அப்போது பாகனின் கட்டுப் பாட்டுக்குள் நிற்காமல் விரைந்து வரும் மதம் பிடித்த யானை ஒன்று அவனைத் துதிக்கையால் வளைத்து எடுத்துக் கொல்லப் பார்த்தது. அந்தக் காட்சியைக் கண்ட கோவலன், உடனே யானை மீது பாய்ந்து அந்தணனைத் துதிக்கையிலிருந்து விடுவித்து அதன் பிடரித் தலை மீதமர்ந்து அடக்கினானாம் என்று கூறுகிறது. மேலும் அத்தியாயம் 35 இல், சந்தமுகசிவனை அரசனின் மனைவி அலங்கரித்து “இவனை யானையிடம் கொண்டு செல். அரசன், சிறையில் இருப்பதால் யானை இடறி இவன் தலை நசுங்கட்டும். எதிரிகளிடம் சிக்குவதைவிட அதுவே மேல்” என்று சொல்லி வேலைக்காரியுடன் அனுப்புகிறாள். யானையின் காலடியில் குழந்தையை வைத்தவுடன் அது அவனைக் கொல்லாமல் கண்ணீர் வடிக்கிறது. திடீரெனக் யானை கோபம் கொண்டு அரண்மனைக் கதவுகளை உடைத்து அரசனை மீட்டு முதுகிலேற்றிக் கொண்டு சென்று, அக்கரைக்குக் கப்பலில் தப்பித்துச் செல்ல உதவுகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளை அப்பர் கதையிலும் காண்கிறாம். மஹேந்திர பல்லவ மன்னனின் யானை, அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்து விடுகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 24 தொடரும்
  10. "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 03 "கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு. கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றியிருக்க முடியாது. ஆனால் இது தாம் மூத்த குடி என்பதையும் வீரக் குடி என்பதையும் வெளிக்காட்ட ஏற்படுத்திய சொல் வழக்காக இருக்கலாம் என்று நம்புகிறேன். என்றாலும் இது பண்டைய பெருமையை பறைசாற்ற கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று. ஆமாம், ‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள், முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள் தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள உயிரணுக்கள் தொடர்பான மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான ஆய்வு மையத்தினர் [‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’ / 'the Centre for Cellular and Molecular Biology / Hyderabad]. இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு விருமாண்டிக்கு கிடைத்திருக்கின்றது. இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வ குடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டு பிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர், பிபிசி [BBC] தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் பழமையான மக்கள் நெகிரிட்டோ (Negrito) க்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தியாவிற்கு 60,000 ஆண்டுகளுக்கு முன் வந்த இனக் குழுக்களில் முதன்மையானவர்கள் அவர்கள் தான். அவர்கள் கேரளா மற்றும் அந்தமான் தீவுகளின் மலைப்பகுதிகளில் குடியேறினர். ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர், தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் இருளர், மற்றும் புலியன் போன்ற சில பழங்குடியினர் [Kadar, Irula and Puliyan tribes] நெகிரிட்டோக்களுடன் அதிக அளவில் ஒத்திருக்கிறார்கள். அவை ஆஃப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அவற்றின் அண்டை தீவுகளுடன் தொடர்புடையவை. நெகிரிட்டோக்கள் கருப்பு (கருமையான) தோல், கம்பளி முடி, அகன்ற மற்றும் தட்டையான மூக்கு மற்றும் சற்று நீண்டு சென்ற தாடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. பலாங்கொடை மனிதன் தெற்காசியாவில் இதுவரை கண்டு பிடிக்கப் பட்ட மறுக்க முடியாத பழமையான ஹோமோ சேபியன்ஸ் புதை படிவமாகும். அவை குறைந்தது 28,000 ஆண்டுகள் பழமையானவை மற்றும் அவை கண்டு பிடிக்கப்பட்ட இலங்கையின் இடத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அந்த காலத்தில் இலங்கை தென் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. அதாவது மகாவம்ச விஜயன் இலங்கைக்கு வருவதற்கு குறைந்தது 25,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும். அதே போல, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை [Harvard University] சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் [David Reich] ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள். அந்த ஆய்வானது கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது எனவும், முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து [when agriculturists from the Zagros region of Iran] நடந்திருக்கிறது. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள் எனவும், இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு (இயேசு பிறப்பதற்கு முன்பு) இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது என்றும். இந்த விவசாய மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்றும் அடையாளம் காட்டி உள்ளார்கள். இரண்டாவது குடிபெயர்வு கிறிஸ்து பிறப்பதற்கு 2000 மற்றும் 1000 க்கு இடையில், மத்திய ஆசிய ஆயர்களால் [மேய்ச்சல் தொழில் செய்பவர் / Steppe pastoralists] நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். இது இன்றைய கஜகஸ்தான் [Kazakhstan] பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே என்கிறார்கள். எனவே ஆரியர்கள் இந்திய மண்ணில் கிறித்து பிறக்க 1500 ஆண்டுகளுக்கு முன் - இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் - கால் வைத்தார்கள் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். ஆனால் சிந்து வெளியில் தோண்டிக் கண்டு பிடிக்கப்பட்ட நாகரிகம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே, அஃது ஆரியருக்கு முற்பட்ட ஒரு நாகரிகத்தின் அடிப்படையிலே அமைந்தது என்பது பொருந்தும். இதனாலும், மற்றும் சத்தி வழிபாடு, சிவன், லிங்க வழிபாடும் இன்னும் பல காரணங்களாலும் உலகின் பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் சிந்து நாகரிகம் தமிழியம் (திராவிடம்) சார்ந்தென்று உறுதிப்பட மொழிந்துள்ளனர். மேலும் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறுகள் சுமேரிய நாகரிகத்துடன் ஒப்பிட வாய்ப்பளித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த மரபனு குறியீடுகள் ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான இரண்டு பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அவையை தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென் இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள். ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது. மொழியியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் திராவிட மொழி பண்டைய சமஸ்கிருதத்தை பாதித்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றனர், இது இந்தோ - ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ரிக் வேதத்தில் தோன்றும் ஏராளமான திராவிட கடன் வார்த்தைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. திராவிட மொழி [தொல் தமிழ்] குறைந்தது 4,500 ஆண்டுகள் பழமையானது, இது கிமு 2,500 க்கு முந்தையது, மேலும் இந்தோ - ஆரிய மொழிகளைப் பேசும் மக்கள் தோன்றுவதற்கு முன்பு இந்தியா முழுவதும் திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர் என்றும் மொழியியலாளர்கள் நம்புகிறார்கள். "குயிலோசைக் கேளாவிட்டால் செவி அழிவதில்லை மயில் நடனம் காணாவிட்டால் மலர் விழி துடிப்பதில்லை உயிர் தமிழ் நினைப்பு இன்றேல் உலகினில் வாழ்வே இல்லை" என்று தமிழ் உயர்வைப் பாடி வைத்தான் ஒரு கவிஞன்.அவன் காதில் இந்த பெருமை விழட்டும். அவனோடு சேர்ந்து நாமும் மகிழ்வோம், ஆனால் அதே நேரத்தில் உண்மைகளை மேலும் மேலும் கொண்டுவர தொடர்ந்து முற்சிப்போம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி:04 தொடரும்
  11. "மே மாதத்தின் மத்தியில், அந்த சில நிமிடங்கள்" தேம்சு ஆற்றின் ஓரத்தில் ஒரு கல்லில் நான் இருந்தவண்ணம், இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் பிக் பென் (Big Ben) மணிக்கூட்டு கோபுரத்தின் நேரத்தை பார்த்தேன். அது மூன்று மணிக்கு இன்னும் அரை மணித்தியாலயம் என்று காட்டியது. சுமார் 100,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய லண்டனில் பாலஸ்தீனத்திற்கு தங்கள் ஆதரவைக் காட்டவும் காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சை நிறுத்தக் கோரவும் "இப்போதே போர்நிறுத்தம்" மற்றும் "காசா மீது குண்டு வீச்சை நிறுத்து" என்று எழுதப்பட்ட பலகைகளை எதிர்ப்பாளர்கள் கையில் ஏந்தியவண்ணம், பாராளுமன்ற சதுக்கத்துக்கு திரண்டு வந்துகொண்டு இருந்தனர். எனக்கு அங்கு நடப்பதில் அக்கறையும் போதுமான அனுதாபமும் இருந்தாலும், என் மனதில் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்தது "அந்த சில நிமிடங்கள்" தான்! இரண்டாயிரத்து ஒன்பது, மே மாதம், முல்லைத்தீவு, இலங்கையில் நான் கண்ணால் பார்த்து அனுபவித்த "அந்த சில நிமிடங்கள்" தான்! இளம் தாய் ஒருவள், குண்டுத் தாக்குதலால் இறந்த தன் குழந்தையைக் கையில் ஏந்தியவண்ணம் சாலையோரம் நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி, ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் குறுக்கே சிதறிய உடல்களுக்கு இடையே, அவர்களைச் சுற்றியுள்ள சண்டையிலிருந்து தப்பிக்க, பாதுகாப்பான வழியைத் தேடிக்கொண்டு, அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு இருந்தனர். அந்த இளம் தாயால் இறந்த உடலைக் மேலும் கொண்டு போக முடியவில்லை, ஆனால் அதையும் விட்டுவிட அவளுக்கு மனம் இல்லை. அவள் குழந்தையைப் பிடித்துக் கொண்டு ஒரு சிலையாட்டம் அங்கு நின்று கொண்டிருந்தாள். அவள் கையில் கொல்லப்பட்ட பிஞ்சு குழந்தையை பார்க்கும் பொழுது, புறநானுறு ஒன்பது சாட்சி சொன்ன போர் ஒழுக்கம் அங்கு என்னால் காண முடியவில்லை. இன்று பல இடங்களில் போர் விதி முறை அல்லது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள். குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக தாக்கி அழிக்கிறார்கள். அது மட்டும் அல்ல வைத்தியசாலை, பாடசாலை, ஆலயங்கள், பாதுகாப்பு இல்லங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன. சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள். போர் பிணையாளர்களும் கொல்லப்படுகிறார்கள். அதைத்தான் நான் இங்கு அவள் கையில் காண்கிறேன். "ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங் கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன் நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!" பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்" / "இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது. நான் ஒரு இளம் பொறியியலாளனாக முல்லைத்தீவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் பதவி ஏற்றேன். அதன் பிறகு மெல்ல மெல்ல உள்நாட்டு போர் திவீரம் அடைந்து, இன்று அழிவின் விளிம்புக்கு போய்விட்டது. பல ஊழியர்கள் பாதுகாப்பு கருதி, வெளி மாவட்டங்களுக்கு நகர்ந்து விட்டார்கள். ஏனோ நான் அங்கேயே இருந்துவிட்டேன். நான் இளமையாக இருந்ததும், எல்லோரும் போல உடனடியாக வெளியே நகர மனம் இடம் தரவில்லை. ஆனால் திடீரென இப்ப நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இனி எவரும் வெளியே போவது முடியாத காரியமாகவும் அல்லது பாதுகாப்பற்ற ஆபத்து காரியமாகவும் இருந்தது. எனவே நான் அங்கேயே தங்கிவிட்டேன். நடப்பது நடக்கட்டும் என்று. நான் தற்செயலாக எனது துவிச்சக்கரவண்டியில் அப்பொழுது அவ்வழியால் போய்க்கொண்டு இருந்தேன், உடனடியாக துவிச்சக்கரவண்டியை ஒரு முறிந்த மரத்தின் அடியில் சாய்த்துவிட்டு அந்த இளம் தாயைப் பார்த்தேன். அவள் பிள்ளையும் கையுமாக கண்ணீருடன் சாலை ஓரத்தில் இருந்துவிட்டாள். ஷெல் குண்டுவீச்சு எந்த நேரமும் மீண்டும் வரலாம். ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே இருந்தனர், அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு அங்கு அண்மையில் இருந்த ஆலயம் ஒன்றுக்கு பாதுகாப்புக்காக விரைந்து கொண்டு இருந்தனர். அவள் தன் குழந்தையை, ஒரு நல்ல அடக்கம் செய்யாமல் அங்கிருந்து புறப்பட மனம் இல்லாமல், அதே நேரம் தூக்கிப்போகும் தைரியமும் இழந்து அங்கு நிலத்தில் இருந்துவிட்டாள். 'மக்கள் என்ன தவறு செய்தார்கள்? ஏன் இப்படி கொல்கிறார்கள்? , சர்வதேச அரசாங்கம் ஏன் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை?" நான் அப்பொழுது என் மனதில் நினைத்தேன், ஏன் நான் இன்றும் அதே கேள்வியைத்தான் இன்னும் கேட்கிறேன். அவளை அணுகி, அந்த அழகிய குழந்தையை என் கையில் ஏந்தி, அவளை ஒருவாறு சமாதானப்படுத்தி, எல்லோரும் போகும் அந்த ஆலயத்தை நோக்கி கூட்டிக்கொண்டு போனேன். மே 2009 அங்கே குழப்பம், கொந்தளிப்பு மற்றும் மோதல்கள் நிறைந்த இடமாக, உண்மையில் பாதுகாப்பு என்று கூறக்கூடிய ஒரு இடமும் அங்கு இருக்கவில்லை. ஆலயம், பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் கூடினர். அவ்வளவுதான்! அது ஒரு அழிவுகரமான இறுதித் தாக்குதலுக்குள்ளான போர்க்களம். பீரங்கிகளின் இடைவிடாத கர்ஜனை மற்றும் புகையின் கடுமையான வாசனைக்கு மத்தியில்,நெகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அங்கு கூடியவர்கள் முகத்தில் தான் காணக்கூடியதாக இருந்தது. மற்றும் படி மக்களை தாக்கும் படைகளிடமோ, அதை வழிநடத்தும் தலைவர்களிடமோ அதைக் காணவில்லை. ஆலயத்தின் ஒரு சிறிய, பகுதியளவு இடிந்த கட்டிடத்தில், பொதுமக்கள் குழு கூடத் தொடங்கியது. இடைவிடாத சரமாரியான குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இருந்து ஒரு நம்பிக்கையில் தஞ்சம் தேடிக்கொண்டது. அவர்களில் குடும்பங்கள் மோதலால் சிதைந்தன, அவர்களின் முகங்கள் பயத்தாலும் சோர்வாலும் பொறிக்கப்பட்டன, ஆனால் அங்கு ஆண்டவனின் ஆலயத்தில் நம்பிக்கையின் சுடரைக் அவர்களின் முகத்தில் காணக்கூடியதாக இருந்தது. அந்த இளம் தாய் கூட, தன் பிள்ளையை அங்கு ஆண்டவனுக்கு முன்னால் வைத்து ஏதேதோ முணுமுணுத்தாள். அதன் பின் அங்கு கூடி இருத்த சிலரின் உதவியுடன் ஆலயத்தின் ஒரு அரச மரத்தின் கீழ், மரியாதையுடன், கண்ணீர் துளிகளுடன் அடக்கம் செய்தேன். அது அவளுக்கு ஆறுதலாகவும் இருந்தது. இந்த இடம்பெயர்ந்த ஆத்மாக்களில் மெல்லினி என்ற இளம் பெண்ணும் இருந்தாள். அவளது அகன்ற கண்கள் அவளைச் சூழ்ந்திருந்த போரால் சிதைந்த நிலப்பரப்பின் பயங்கரத்தை பிரதிபலித்ததுக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவளுக்குள் அமைதியான பலம் இருந்தது தெரிந்தது. தன் குடும்பத்தின் மங்கலான புகைப்படத்தைப் பற்றிக் கொண்டு அங்கு அவள் ஒரு மூலையில் தூணுடன் சாய்ந்துகொண்டு நின்றாள். நான் குழந்தையை அடக்கம் செய்தபின் "அந்த சில நிமிடங்களில்" தான் அவளையும் கவனித்தேன். என்றாலும் போரின் தொலைதூர ஒலிகள் நெருங்க நெருங்க, ஒரு பயங்கரமான மௌனம் அந்த ஆலய முன்றல் முழுவதும் கவ்வியது. ஒரு சாதாரண நாள் என்றால், அந்த கவலையிலும், அதை மீறி வெளிக்காட்டும் அவளின் அழகில், பெண்மையின் வனப்பில் கட்டாயம் நான் விழுந்து இருப்பேன். அப்படி ஒரு தோற்றம். என்ன நடந்ததோ, அடக்கம் செய்து ஒரு சில நிமிடங்களில், இயற்கையே எதிர்பார்த்து மூச்சு விடுவது போல துப்பாக்கிச் சூடு, ஷெல் அடிகள் நின்றது. அந்த அமைதியில், நிச்சயமற்ற நிலை மற்றும் விரக்திக்கு இடையே, அசைக்க முடியாத இரக்கத்தின் செயல் ஒன்று வெளிப்பட்டதை நான் கண்டேன். அந்த கூடத்தில், ஒரு முதியவர், நடுங்கும் கையுடன் எழுந்து நின்று, பயந்துபோன, களைத்துப்போன, கூட்டத்தினருக்குத் தன்னிடம் இருந்த சிறிய உணவை பிரித்து வழங்கினார். துன்பங்களை எதிர்கொண்ட அவரது தன்னலமற்ற தன்மை, வேறுபட்ட உள்ளங்களுக்கு இடையே ஒற்றுமையின் மினுமினுப்பைத் தூண்டியது. மற்றவர்கள் விரைவில் இதைப் பின்பற்றினர், தங்கள் அற்ப பொருட்களைப் உடனடியாக பகிர்ந்து கொண்டனர் மற்றும் மௌனமாக இதுவரை இருந்த அவர்கள் ஆறுதல் வார்த்தைகளை ஒருவருக்கு ஒருவர் வழங்கினர், மதம் மற்றும் கலாச்சாரத்தின் தடைகளைத் தாண்டினர். அந்த விரைந்த தருணங்களில், போரின் அழிவுகளுக்கு மத்தியில், மனிதநேயம் மேலோங்கியது. அந்த இளம் தாய், மெல்லினி மற்றும் மற்றவர்களின் பார்வையில் தெரிந்த குழப்பம் மற்றும் அழிவுகளுக்கு மத்தியில், மனித உள்ளங்கள் ஓரளவு அதை சகித்துக்கொண்டடு - ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் பிணைப்புகளை அங்கு உருவாக்கியது என்பதை என் மனம் "அந்த சில நிமிடங்கள்" அனுபவத்தில் சுவீகரித்துக் கொண்டது. ஆனால் அது தொடர்ந்ததா என்பது, இன்றைய தமிழர்களின் நிலையைக் காணும் பொழுது, கேள்விக்குறியாகவே உள்ளது? "மரணித்தவர் வணக்கத்திலும் பிரிந்து நிற்கும் ஒற்றுமை இல்லா தமிழர் இங்கே? யுத்தத்தை வெறுத்த புத்தனைப் போற்றி சிறுபான்மையினரை மதிக்காத அரசியல் அங்கே?" "ஈன்றவன் இல்லை இணைந்தவன் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை சிதைந்து போராடி வெற்றியும் இல்லை புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!" "கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம் நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம் நீதி வேண்டி சிலம்பை உடைத்தாள் நியாயம் வேண்டி உண்மையைக் கேட்கிறோம்?" நடந்தவை நடந்தவையே! அதை அலசுவதால் வருங்காலத்துக்கு ஒரு பாடமாக, அனுபவமாக கற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த பாடத்தை உண்மையில் நாம் பின்பற்றுகிறோமா? இன்றும் இலங்கைத் தமிழருக்கிடையில் எத்தனை அரசியல் காட்சிகள், எத்தனைக் குழுக்கள்? மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி விட்டது என்பதே உண்மை? என் மனம் எனக்குள் பேசிக்கொண்டது. நானும் தேம்சு ஆற்றின் ஓரத்தை விட்டு மெல்ல பாராளுமன்ற சதுக்கம் நோக்கி போவதா அல்லது வீடு போவதா என்ற குழப்பத்துடன் குந்தி இருந்த கல்லில் இருந்து எலும்பினேன், பிக் பென் மணிக்கூடு மூன்று அரை எனக் காட்டியது. ஆர்ப்பாட்டக்காரர்களின் சத்தம் இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. ' நீதி வேண்டும், விசாரணை வேண்டும், சமாதானம் எங்கே?' , அதே கேள்வியைத்தான் என் மனமும் சிந்தித்தது, ஒரே ஒரு வித்தியாசமே, அது இலங்கையை நோக்கி!! "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருக்கையை தனதாக்கி பெரும்பான்மை அதிகாரத்தில் இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? " "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! " இரக்கமின்றி வாழும் காட்டுமிராண்டிகள் அவர்களல்ல இந்தநாட்டின் பூர்வீககுடிகளில் அவர்களும் ஒருவர் இணைந்து வாழ்ந்த குடிமக்கள் அவர்கள் இன்பமாக வாழ அவர்களை சமனாகமதி! " "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற மனமே இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' " "இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. "முள்ளிவாய்க்கால் கஞ்சி" / Mullivaikkaal Kanji (porridge): “கஞ்சி பரிமாறுவோம், முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” உலக அளவில் பரவலாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் மத்தியில் என்றுமே மறக்க முடியாத நாளாக மே 18ஆம் தேதி வரலாற்றில் பதிவாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி யுத்தம் முடிவடைந்த நிலையில், யுத்தத்தின் கடைசி நாட்களில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆண்டுதோறும் மே 18 தினம் அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் அந்த யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்த மக்கள் பல வார காலமாக உணவிற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு கிடைத்த அரிசியை கொண்டு, கஞ்சி தயாரித்து தமது பசியை தமிழர்கள் போக்கிக் கொண்டனர். இறுதி யுத்தத்தில் சிக்குண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியை போக்கிய கஞ்சி உணவை, ஈழத் தமிழர்கள் இன்றும் மறக்கவில்லை. அப்போது முதல், ஆண்டுதோறும் மே மாதம் 18ஆம் தேதிக்கு முதல் சுமார் ஒரு வார காலம் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மற்றும் தமிழர் வாழும் பிறநாடுகளில் இந்த கஞ்சி சமைக்கப்பட்டு, மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது ஒரு ஞாபகார்த்தமாக! ஒரு நினைவுகூறலாக! . வலிகள் நிறைந்த யுத்த காலத்தின் கடைசி நாட்களில் இந்த கஞ்சி தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்தது. “Mullivaikkaal Kanji (porridge)” was a striking feature of 18th May in the North. & East This plain and simple food was all the hundreds of thousands in precarious situation in bunkers, tents and on the move could eat in the last few months of the war. Fourteen years later, there are calls to have “Mullivaikkaal Kanji” for one meal on 18th May, to remember what happened. Having Mullivaikkaal Kanji for one meal across the country on May 18 could be one way Sri Lankans can unite, commemorate and express solidarity with the war dead, their families and survivors.
  13. "விண்ணில் வாழும் வீரன் இவன்!" "மொழியில் ஒரு பற்றுக் கொண்டு விழியில் ஒரு ஏக்கம் கவ்வ வழியில் வந்த தடை உடைத்து சுழியில் மூழ்கிய வீரன் இவன்!" "ஒன்று இரண்டு ஆயிரம் கொலை இன்று நேற்று கண்டு துடித்து வென்று ஒரு முடிவு காண சென்று மாண்ட வீரன் இவன்!" "தாயின் தங்கையின் கற்பு காக்க சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி நாயின் வாலை நிமித்த எண்ணி பேயில் சிக்கிய வீரன் இவன்!" "உண்மை வெல்ல களத்தில் போராடி கண்ணை இழந்து கையை முறித்து மண்ணை மீட்க மரணம் தழுவி விண்ணில் வாழும் வீரன் இவன்!" கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  14. "பூ மேயும் வண்டு " சங்க இலக்கியத்தில், நற்றிணைப் பாடல் 290 இல், ஆண்களை "பூ மேயும் வண்டு" என்று தோழி சாடுகிறாள். “வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே! 5 நீயே பெரு நலத்தையே; அவனே, ''நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, தண் கமழ் புது மலர் ஊதும் வண்டு'' என மொழிப; ''மகன்'' என்னாரே.” இதன் பொருள்:வயலில் வெள்ளாம்பல் பூக்கும். அது தலையில் சூடத் தகுந்த பூ. அதனைக் கன்று போட்டிருக்கும் பசு உண்ணும். அது தின்ற மிச்சத்தை நடை தளர்ந்த எருது மேயும். இப்படிப்பட்ட நில நாட்டுத் தலைவன் அவன். அவன் தொடர்பினை நீ நிலையாகக் கொண்டிருக்க விரும்பினால், என் சொல்லைக் கேள். நீயோ முள்ளைப் போன்ற பல் வரிசையுடன் பேரழகு மிக்கவள். என்றாலும், அவன், நீர் நிறைந்த பொய்கையில் அன்றாடம் மலரும் புது மலர்களை ஊதித் தேனுண்ணும் வண்டு போன்றவன் என்று கூறுகின்றனர். அவனை “மகன்” என்று யாரும் மதிப்பதில்லை. கவனமாக நடந்துகொள் என்று இந்த பாடல் அறிவுறுத்துகிறது. இப்படியே காளிதாசனும் ஆண்களை சாடுகிறான் !! "Kalidasa in Shakuntalam Drama (Act 5 - verse eight) O ,you honey -pilfering bee! Greedy as ever for fresh honey Once ,you lovingly kissed The mango’s fresh spray of flowers - And forgotten her so quickly? You are content now merely to stay Within the full blown lotus " இதன் பொருள்: “தேன் திருடும் வண்டே, எப்போதும் புதிய பூவுக்கு பேராசை பாடுபவனே, முன்னர் மாமரப் பூவை கொஞ்சி தேனுண்டாய், அவளை மிகவும் விரைவாக பின் மறந்தாய், இப்போது தாமரைப் பூவை தழுவி நுகர்கிறாயே" என்பதாகும். அதே போல 1958 ஆம் ஆண்டு,பழைய கருப்பு / வெள்ளை திரைப் படம் "நான் வளர்த்த தங்கை" யில்: "ஆண்கள் மனமே அப்படிதான் – அது அடிக்கடி மாறும் இப்படித்தான்" என்ற ஒரு வரியையும் காண்கிறோம். எல்லா பூக்களிலும் தேனின் சுவை இனிமை தான். ஆனாலும் - தாவும் குணத்தை வண்டுகள் மாற்றுவ தில்லை என்கிறது இந்த பாடல். அதே போல, பெண்களை இலக்கியவாதிகளும், கவிஞர்களும் பூவையர் என்று அழைப்பார்கள். பூவைப் போல் அழகானவர்கள். பூவைப் போல் மென்மையாவர்கள் என்பது இதன் பொருள். பூவுக்கும் பெண்ணுக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. சரியான கவனிப்பு இல்லாத பொழுது துவளும். தலைவன் தலை எதிர்பட்டதும் மலரும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. "ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே!" [எசப்பாட்டாக நாட்டுப்புறப் பாடல்] "ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே! நீலக் கருங்குயிலே! அருகில் வாராயோ காலம் கடத்தாமல் நெற்றியிலே பொட்டுவைக்கவா?" "வேகாத வெயிலுக்குள்ளே குந்தி இருப்பவனே தகாத உன்னுறவு எனக்கு வேண்டாம் ஆகாச கோட்டை பொடிப்பொடியாகப் போகட்டும்!" "மண்டை பெருத்தவளே வீறாப்புநீ பேசாதேடி கண்டகண்ட பயல்கள்தான் உனக்குத் தேவையோ வண்ணக்குயிலே நெருங்கிநிண்ணு நான் பேசவாடி" "கால்ரூபாய்க்கு விறகுவிற்று காலம் கழிப்பவனே அல்லும்பகலும் திண்ணை திண்ணையாத் தாண்டுபவனே கல்லுநெஞ்சம் எனக்கில்லை கண்டவனுக்கும் தலைகொடுக்க!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. "தாய்" [12 மே 2024] "அன்பின் இலக்கணம் அன்னை ஆகி அகிலத்தில் அவளே உயர்வு ஆவாள்! அல்லல் பொறுக்கும் தியாகி ஆகி அனைவரையும் அணைக்கும் ஆண்டவன் ஆவாள்!" "பாதிக்கும் இடர்களை தானே தாங்கி பாரம் என்று பிள்ளைகளை எண்ணாள்! குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள் குழவி கொஞ்சுகையில் துன்பம் மறப்பாள்!" "நடைதவறி வீழ்கையில் துணை நின்று நமதவறுகள் மன்னித்து ஒன்று சேர்ப்பாள்! கடையன் என்று பிறர் சொலினும் கைதடுத்துக் காத்து துணிவு ஏற்றுவாள்!" "வானும் கடல்மலையும் கானகமும் விந்தையில்லை வான்நிலாவும் மலரும் மழைவெயிலும் அதிசயமில்லை வானவன் படைத்ததிலே எதுவுமே புதுமையில்லை தாயைப் படைத்தானே அதற்கு இணையேயில்லை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.