Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

shanthy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by shanthy

  1. அருணாண்ணையின் வீரச்சாவுச் செய்தி கேட்ட 2வது நாள் எழுதிய பதிவு இது. மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச் சந்திக்கும் துயரோடு ஆளரவமற்ற வனாந்தரத்துப் பெருமுகத்தில் அலைகிறது ஆன்மா. மீள் பொழுதின் வரவில் - உன் நினைவுகளைத் தெளித்துவிட்டுக் கனவாகிப் போனாய்.... நீயெழுதிய கடிதங்கள் மஞ்சள் கடதாசிப்பூக்கள் மறக்காமல் அனுப்பும் பிறந்தநாள் புத்தாண்டு வாழ்த்து மடல்கள் - உன் நினைவாய்க் கிடைத்தவைகள் எல்லாம் கண் முன்னால் உன்னை நினைவுபடுத்திபடி.... 'போய் வருகிறோம்' போர் நிறுத்த காலத்துச் சந்திப்பு முடிந்து பிரியும் நேரம் 'சந்திப்போம்' என்றாய் இன்று வந்த செய்தியுன்னை இழந்தோமென்கிறது. மாமாவின் மரணம் கேட்ட உன் மருமக்கள் சொல்கிறார்கள். 'கடிதம் மாமா' இனியெங்களுக்கு இல்லை... இதயம் நொருங்கிச் சிதிலமாகிறது. அவர்கள் பகிரும் உனது ஞாபகங்களில்.... மாமா தந்த சிலுவைப் பென்ரன் மாமா தந்த ஐஸ் கிறீம் மாமாவுடனான மோட்டசயிக்கிள் பயணம் மாமாவின் மடியில் விளையாடிய நினைவென்று நீட்டுகிறார்கள் நினைவுகளை..... மாமா இல்லையினி மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச் சந்திக்கும் துயரோடு அவர்கள்.... எங்கடை மாமாக்களும் அன்ரியவையும் ஏனம்மா சாகினம் ? திருப்பிச் சுடலாம் தானே ஆமிக்காறனை...? கேட்கிறான் உங்கள் பார்த்திக்குட்டி சொல்ல வார்த்தையில்லை. சொல்லியழ முடியவில்லை. இன்னும் யாரை எவரையெல்லாம் இழக்கப்போகிறோம்.....? வரும் நாட்கள் இனியெந்தத் தோழனைத் தோழியை அண்ணனைத் தம்பியை அக்காவையென எங்கள் வீரங்களைத் தன்னோடு கூட்டிப் போகப்போகிறது...? 29.02.09
  2. மூசுமலை பேசவில்லையோ துறைமுகத்தில் அனலெழுந்து வீசவில்லையோ.....!!!!!!!!!!!!
  3. லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று. 27.02.2009 அன்று விமானக்குண்டுத் தாக்குதலால் வீரச்சாவடைந்தார். 3ம் ஆண்டு கடந்த நினைவுநாளில் இன்று அருணாண்ணா பற்றிய பதிவுகள் சில:- கொள்ளைபோன கனவும் ஓராண்டு நினைவுகளும் ஓராண்டை இழுத்து வந்துவிட்டது காலம் உன் நினைவுகள் தா(தே)ங்கிய மனங்களில் நீ எத்தனையோ அடையாளங்களாய்..... தேசம் தேசியம் என்றெல்லாம் கனவுகள் நிரம்பியல்லவா உனது கடிதங்களை எழுதினாய்...! ஒவ்வொரு தோழமைப் பிரிதலின் முடிவிலும் உரமூட்டி உரமூட்டியல்லவா உன்னைத் தீட்டிக்கொண்டாய்....! உனதும் உன்போன்ற தூயவர்கள் கனவுகளிலும் காலம் இப்படியொரு கோலம் வரையுமென்று கனவில்கூட எண்ணாத ஒரு பொழுதொன்றில் எங்கள் கோட்டைகள் சிதைவுறத் தொடங்கியது.... எங்கள் கொள்கைகள் நலிவுற்றுச் சாகத் தொடங்கிய நாளில் நீ ஞானிபோய் சொன்னாயாம்.... மேமாத முடிவுகளைத் தைமாதமே உரைத்த நீ மாசி27 கிபீரடியில் உன் கொள்கையும் இலட்சியமும் தமிழீழ தேசத்தின் கனவுடனே கரைந்து போனது.... நீ கண்ட கனவும் உன்போல் ஆயிரமாயிரம் பேரின் கனவுகளும் கொள்ளைபோய்விட்டன..... தடுப்பு முகாம்களிலும் அகதி முகாம்களிலும் அள்ளுண்டு அரியுண்டு அனைத்துமே பூச்சியத்தில் போய் நிற்கிறது. வாழ்வோடு உன்னில் பாதியானவள் - உன் உயிரின் துளியான உன் குழந்தை உனது வயதான பெற்றோர்கள் உன்னை நேசித்த நாங்கள் எல்லோரும் நீயிருந்தால் நீயிருந்தாலென்று எத்தனையோ விதமான கற்பனைகள் எங்களுக்குள்..... உன்னை வார்த்தாற்போல உன் செல்வமகன் அவன் மழலைக்குரலில் உன் குணங்கள் யாவும் தேங்கிக் கிடப்பது போல.... உன்னை எழுதுகிறான் உன்னைத் தேடுகிறான்.... உன் நினவுகளை எங்களோடு தேக்கி அவன் மழலைக்குரலில் நீயே வாழ்கிறாய்.... தொலையலையில் அழைக்கும் போதெல்லாம் என்னை அத்தையென்கிறான் உன் பிள்ளை அக்கா அண்ணா பற்றியெல்லாம் அக்கறைப்படுகிறான்..... அவன் குரல் கேட்டால் உன்னையே காண்பது போன்ற பிரமை.... நீ வந்தால்.... இந்த மகிழ்வுகள் எத்தனை நிறைவாயிருக்கும்...? (லெப் கேணல் அருணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு 27.02.2010) அருணாண்ணை வீரச்சாவு அதை நம்பவா…..? இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது....காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்.... தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று. யாரெண்டு தெரியுதா? இல்லை... என்ற எனக்குத் தன்னை ஞாபகப்படுத்திய குரல். 3வருடங்கள் மேலாக தொடர்பற்றிருந்த தோழனின் குரல் அது. குழந்தைகள் , குடும்பம் என விசாரிப்புகள் நீண்டு இறுதியில் வன்னிக் களமுனையில் போய் விழுந்தது கதை. செய்தியேதும் அறிஞ்சியளோ ? என்ன வளமையான செய்திதானே... சாவும் துயரும் இதைவிட என்னத்தை இப்பெல்லாம் அறியிறம்.....? என்ற எனக்கு… நேற்று "அருணாண்ணை" வீரச்சாவு என்றான் அந்தத் தோழன். உண்மையாவா ? நம்பிக்கையிழந்து மீளவும் கேட்ட எனக்கு அவன் மீளவும் சொன்னான். ஓம்.... 'அருணாண்ணை' இழந்தோமா உங்களை ....? அந்தத் தோழன் விடைபெறும் வரையிலும் ஒளிந்திருந்த அழுகையை வெளிப்படுத்தாமல் கண்களும் குரலும் என்னைக் காத்துக் கொள்கின்றன. அருணாண்ணை அருணாண்ணையின் குடும்பம் , அடுத்து அந்தக் களமுனையில் வாழும் தோழ தோழியர்கள் அவர்கள் குடும்பங்கள் என விசாரிக்கிறேன். மேலும் பலர் வீரச்சாவுகள் , விமானத்தாக்குதலில் இழப்புகள் என அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அடுத்ததென்ன நடக்கப்போகுது ? கேட்ட எனக்குச் சொன்னான். யாரையும் எதையும் சொல்ல முடியாத நிலமையிருக்கு…..எல்லாம் முடியப்போகிறது…..நம்ப முடியாதவைகள் எல்லாம் நடக்கப்போகிறது….. எல்லாம் முன்னறிந்த கடவுள் போல அவன் சொன்னான். ஏன் அப்பிடி ? அவன் அடுக்கிக் கொண்டு போன காரணங்களில் நியாயம் உண்மையென்று பல்லாயிரம் விடயங்களை ஏற்றுக் கொள்ளும்படியாக அவனது கதையிருந்தது. அழிபடாமல் வரலாறுகளைச் சேகரிக்க வேணும்….அதற்கான வேலைகளைச் செய்ய வேணும்…..அதற்கான வழிகள் பலவற்றையும் சொன்னான். மீண்டும் தொடர்புகளோடு இருப்போமென விடைபெற்றுக் கொண்டான். இமை விட்டிறங்காமல் முட்டிய கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அருணாண்ணை நினைவுகளை விட்டிறங்காமல் எங்களுக்குள் நிரந்தரமாகிப் போனாரா? நம்பவே முடியவில்லை. கதைப்பதை விட அதிகம் கடிதங்களில் தான் அருணாண்ணை பேசுவது நிறைய….2006 வரை அவ்வப்போது கடிதங்களோடு களம் நிலம் காவியம் மாவீரம் என அருணாண்ணை எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் கனமான பொழுதுகளில் மீளவுமான உயிர்ப்பையும் எழுச்சியையும் தரும் வல்லமை மிக்கவை. „மீழும் நினைவுகள்“ என அரசபயங்கரவாதம் செய்த இன அழிவுகளையெல்லாம் தன் எழுத்துக்களுக்குள் சேமித்து அவர் அனுப்பிய தொலைமடல்கள் கையெழுத்துப் பிரதிகள் ஏராளம். ஐரோப்பிய வானொலிகள் பலவற்றில் அருணாண்ணையின் எழுத்துக்கள் ஒலிவடிவாக உயிர்த்து அவலங்களையெல்லாம் ஆவணமாக்கியது. தமிழ்வெப்றேடியோ என்ற இணைய வானொலியின் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில் அருணாண்ணையின் ஆக்கம் இருக்காது போகாது. தமிழினம் மீதான சிங்களப்பயங்கரவாதப் புடுகொலைகள் 1956 முதல் 2001 கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் வரை எழுதிய ‘மீழும் நினைவுகள்‘ இன்றுவரையும் மீட்கப்படக் காரணமாய் தனது எழுத்துக்களால் பதிந்த ஒரு போராளி. போர்க்குணம் மிக்க அந்த மனிதனுக்குள் அரசியல்ஞானம் உலகியல் விஞ்ஞானம் என எதைக்கேட்டாலும் இலகுவாய் புரிவிக்கும் திறன்மிக்க ஆழுமையென அருணாண்ணையின் அமைதியான தோற்றத்திற்கும் பின்னாலும் பேச்சுக்குப் பின்னாலும் ஆல்போல் விழுதேற்றிப் பரவியிருக்கிறது. சட்டென்று மூக்குநுனியில் நிற்கும் அவரது கோபம்….சொன்ன வேலையை சொன்ன நேரத்துக்குள் செய்து கொடுக்கப்படாவிட்டால் தனது அமைதியால் அதையுணர்த்தி அடுத்த வேலையை அவர் கேட்கும் அவகாசத்துக்கு முன்னால் செய்வித்துவிடுகின்ற சாதுரியம் எல்லாம் அருணாண்ணையின் ஆழுமை தான். 2001 அக்கினி கீல நடவடிக்கையில் இலங்கையரச படைகள் ஆயிரமாயிரமாய் செத்துடிந்து வல்லமை பொருந்தியதாய் நம்பப்பட்ட அரச இராணுவபலம் புலிகளின் காலடியில் விழுந்தபடியிருக்க ஒரு கடிதம் எழுதியிருந்தார்…..அந்தக் களமுனையின் நுனியிலிருந்து களமாடிக் காவியமான தனது தோழர்கள் பற்றியும் உலகு அந்தக்கள முனையை எப்படிப் பார்க்கப்போகிறது என்பதையெல்லாம் தனது எழுத்துக்குள் நிரப்பியனுப்பிய நீலக்கடித உறைக்குள் நான் கண்டது ஒரு சாமானியக் குணத்தையல்ல…..ஒரு போராளியின் இதயத்தை….. அக்கடிதத்திலிருந்து சில வரிகள் இவை…… உலகே வன்னிக்கு உலாப்போய்வரக் கிடைத்த சமாதான காலம் ஊர் போன போது அருணாண்ணையைச் சந்தித்தது கதைத்தது சேர்ந்து உணவருந்தியது மாவீரர் துயிலிடங்கள் சென்றது என நினைவுகள் யாவும் அருணாண்ணையுடனான அந்து நாட்களைத்தான் மீளமீளக் கொண்டு வந்தது. தனது தோழர்கள் தனது தொடர்பில் உள்ளவர்களென அருணாண்ணையை நேசிக்கும் அனேகருக்கு எங்களை அறிமுகம் செய்து அவர்களுடனான உறவுகளை ஏற்படுத்தித் தந்து விட்டதெல்லாம் ஒருநாள் இப்படி இழந்து போவதற்கா…..? மறுமுறை சந்திப்பதாய் பயணம் சொல்லிய அந்தக் கடைசிச் சந்திப்பு……வன்னிப் பெருநிலப்பகுதியிலிருந்து வவுனியா வர வெளிக்கிட்ட நேரம்….பிள்ளைகள் ஒவ்வொருவராய் மாமா அக்கா அன்ரி அண்ணாவென விடைபெற்று கடைசியில் அருணாண்ணையிடம் விடைபெறப் போனார்கள். பிள்ளையள் நல்லாப்படிச்சு கெட்டிக்காறரா எங்கடை நாட்டுக்குத் திரும்பி வரவேணுமென்ன….. எனச்சொல்லி என் மகன் பார்த்திபனை கட்டிப்பிடித்துக் கொஞ்சினார். எனது மகள் வவுனீத்தா மட்டும் ஏதோ கோபித்துக் கொண்டு நின்றாள். மாமாக்குச் சொல்லீட்டு வாங்கோம்மா…. என்ற எனக்குப் பின்னால் வந்து நின்றாள். என்னம்மா என்ன சொல்லீட்டு வாங்கோவன்….. இல்லையென்பதைத் தலையசைப்பால் உணர்த்தினாள். ஏன் ? என்னம்மா ? மாமா மருதன்மாமாவைப் பேசினவர். அதான் நான் அவரோடை கோவம். ஆக்களைப் பேசக்குடாது…அவருக்ககொண்டும் தெரியாது……என்றாள். காலையில் ஏதோ அருணாண்ணை சொன்னவிடயமொன்றை மருதன் மறந்து போனதற்காக விழுந்த பேச்சு அது. அது மாமா சும்மா பேசினவரென்னை….என மருதன் சொன்ன சமாதானத்தையும் அடம்பிடித்தாள். பிள்ளையைக் கொண்டு போய் யாழ்ப்பாணத்தில விட வேணும் கனபேருக்குப் பாடம் நடத்தப்பிள்ளைதான் சரி….என்றான் இன்னொரு போராளி….. இறுதியில் எல்லாரும் சேர்ந்து அவளைச் சமாதானம் செய்து வாகனத்தில் ஏற்றிவிட்டு கையசைத்து விடைதந்து அனுப்பி வைத்தனர். மாலையில் அருணாண்ணையின் இருப்பிடம் வந்து சேரும் போது பிள்ளைகளை ஒருதரம் மோட்டார் சயிக்கிளில் ஏற்றிச் சுற்றி அவர்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் ஒரு மாமாவாய் அருணாண்ணை எத்தனையோ அவதாரங்களாய்……பணம்மட்டுமே குறியாய் கடிதங்களால் குதறியும் காசைமட்டுமே கறந்த உறவுகளின் சபித்தலால் சோர்ந்து போய்விடும் வேளைகளில் அருணாண்ணைக்கு அதையெல்லாம் கடிதங்களாய் எழுதுவேன். எனது கடிதங்களுகெல்லாம் தனது பதில்களால் துணிவையும் மீண்டும் எழுகைக்கான எழுத்துக்களாக எழுதிய கடிதங்கள் யாவும் ஒரு நல்ல தோழமையின் அண்ணணின் ஆதரவைத் தரும் வல்லமை மிக்கவை…..எதை மறந்து எதை நினைத்து……இனி எங்கள் அருணாண்ணையை எங்கே தேட…… ஆட்கள் வந்து சந்தித்துச் செல்லவென அமைக்கப்பட்ட ஒற்றையறை மர நிழலில் பேசியவை……பகிர்ந்தவை…….அவர் அனுப்பிய வைத்த ஈழநாதம் வெள்ளிமலர்…..முதல் முதலாகப் பதிப்பித்த “சாள்ஸ் அன்ரனி“ படையணியின் சிறப்ப நூல் என்னையும் வந்தடைய வழிசெய்த அருணாண்ணையிடமிருந்து விடைபெற்று அவரை அவரது தோழர்களை நினைக்க நேசிக்கவென நிறையவே அறிமுகங்கள் தந்த அந்தத் தோழனின் ஆழுமையைச் சொல்ல பல்லாயிரம் பக்கங்கள் நீட்ட வேண்டும். தொடர்ந்த தொலைபேசி உரையாடல்….கடிதங்கள்…..என தொடர்ந்தது உறவு. என் குழந்தைகளின் நினைவுகளுக்குள் நிற்கும் பலருக்குள் அருணாண்ணைக்குத் தனியிடம் உண்டு. எங்கே நின்றாலும் மறக்காமல் பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்துமடல் அனுப்ப மறப்பதில்லை. யார் அனுப்புகிறார்களோ இல்லையோ அருணாண்ணையின் வாழ்த்துமடல் வந்தால் போதும் என்ற நிலைக்கு என் குழந்தைககளின் மனசுக்குள் குடியிருந்த இராஜகுமாரன் அருணாண்ணை. பிள்ளைகளுக்குத் தனித்தனியே கடிதம் எழுதி அவர்களின் கடிதம் மாமாவாகி…….எங்களுக்கும் கடிதம்மாமாவென்றே நினைவுகொள்ள வைத்த அருணன் என்ற ஆழுமை……27.02.09 அன்று நிரந்தரமாய் பிரிந்துவிட்டதாய் வந்த செய்தி…..செய்தி கேட்டதும் என் மகன் பார்த்திபன் உடைந்து கலங்கியதும்…மகள் வவுனீத்தா மெளனமாகி அருணாண்ணை எழுதிய கடிதங்களை ஒவ்வொன்றாய் எழுத்துக்கூட்டி வாசித்ததும்…..மாவீரர் துயிலிடத்தில் மாமாவை சந்திப்போமென்று சமாதானம் கூறியதும்……பொய்த்து எல்லாம் எங்கள் கைகளைவிட்டுத் தொலைவாகிக்கிடக்கிறது…… காலம் அருணாண்ணையையும் குடும்பமாக்கி ஒரு குழந்தைச் செல்வத்துக்குத் தந்தையுமாக்கியது……அந்தச் செல்வத்தைச் சிரித்தபடி தூக்கி வைத்திருந்த படம் மட்டும்தான் இன்று அருணாண்ணையின் ஆழுமையைச் சொல்லியபடி நினைவுகள் நீண்டு விரிந்து நிழல்பரப்பிக் கிடக்கின்றன…… 03.07.09
  4. தாத்தா வயசாகீட்டுது நண்பா ஞாபகம் இருக்கட்டும்.
  5. மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம் பகைவீடு துயில்கின்ற விடிகின்ற நேரம் புயலாகித் தமிழீழப் புலியாகிச் சென்றீர் பூனகரில் நிலையான பகையாவும் வென்றீர். பூனகரி நாயகரின் நினைவுப்பாடல். http://www.tamilnews24.com/parthipan/nesakkaram/chiddu/malaimeekam.asx
  6. இளைஞா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 1997முதல் முதலில் ஐபீசி வானொலியில் 14வயதுப் பையனாய் வந்து புதியதோர் உலகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நட்பான அந்தக் கவிஞன் தான் இப்பவும் நினைவில் வருகிறான். அப்போது இன்னொரு இளைஞனும் வந்தான் பிரான்சிலிருந்து சந்திரன். சந்திரன் விமானம் செய்யும் கனவோடு பல முயற்சிகளில் இறங்கி கண்காட்சிகள் நடாத்தினான். சமாதான காலத்தில் விமானியாக தாயகத்துக்குப் போனான். கடைசியில் அவன் மாவீரனாய் நினைவுகளில் மட்டும் நிரந்தரமாகிப்போனான். இளைஞனின் பிறந்தநாளில் சந்திரனும் ஞாபகத்தில் வந்து போகிறான். என்னோடு வவுனியன், பார்த்திபன், வவுனீத்தாவும் தங்கள் வாழ்த்துக்களையும் யாழில் தெரிவிக்கும்படி கட்டளையிட்டிருக்கினம் இளைஞன். சத்தமாய் சொல்லீட்டேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இளைஞன்.
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு.
  8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜீவா.
  9. சிட்டுபாடிய " அலைபாயும் இசையோசை கேட்கலையா கரையில் இளம் வீரர்" என்ற பாடல் யாரிடமாவது இருக்கிறதா ? இருந்தால் தந்துதவுங்கள்.
  10. மாவீரர் மேஜர் சிட்டுவின் நினைவுகள் தாங்கிய இணையம் http://chiddu1997.wordpress.com/
  11. அன்புள்ள அப்புவுக்கு (குமாரசாமி அண்ணா) இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அடுத்த வருசம் அப்புவுக்கு அதிர்ஸ்டம் இப்பிடிக் குவிய வாழ்த்துக்கள்.
  12. புலிக்குரல், இத்திரி சிட்டுவிற்கான நினைவுமீட்டலாகத்தான் இடப்பட்டது. ஏன் களம் போனான் எப்படி மரணம் நிகழ்ந்தது என்ற ஆராட்சி நடக்கவில்லை. ஆக நீங்கள் பூடகம் போட்டு எழுதிய கருத்து இங்கு பொருத்தமற்றது அதையே சுட்டினேன். நீங்கள் தெரிந்த காரணத்தை பகிரவில்லை. ஆனால் ஏதோவொரு பூதம் இருப்பது போன்ற தோற்றத்தை உங்கள் கருத்து உருவாக்கியிருக்கிறது. சாவீட்டில் சாவில் இழந்த உயிருக்கான மதிப்பைப் பேசலாமே அதுதான் அந்த உயிருக்கான கெளரவம். உங்களை சிரமப்படுத்தியமைக்கு மன்னிக்கவும்.
  13. சிட்டுவும் சாந்தனும் இணைந்து பாடிய இப்பாடல் அதிகளவில் மக்களிடம் பேசப்பட்ட பாடல்களில் ஒன்று. வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் கடல் விசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்.
  14. சிட்டு பாடிய கடைசிப்பாடல். தமிழீழ மொட்டுக்கள் இசைத்தட்டிலிருந்து....இணைப்பில் அழுத்தி பாடலைக் கேளுங்கள். சிறகு முளைத்து உறவை நினைத்து பறக்கும் குருவிகள்.
  15. உண்மைதான் உடையார். எங்களுக்காக தங்களை இல்லாமல் ஆக்கியவர்களை ஆவணப்படுத்தலும் அவசியமானது.
  16. சிட்டுவின் பாடல்கள் சில :- புலியொரு காலமும் பணியாது தளராத துணிவோடு கேணல் கிட்டு வெற்றி பெற்று தந்து விட்டு சங்கு முழங்கட தமிழா
  17. பாட்டு தந்து...எம்மை விட்டு....பறந்த சிட்டு....! நன்றி: பூராயம்,தமிழ்ப்புலிகள் போன்ற வலைப்பூக்கள். ஒரு அழகிய பகற்பொழுது. அது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபம். சமகாலக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரண்டு போராளிகள் எமக்கு நிலைமைகளை விளக்கிக் கொண்டிருந்தனர். இருவரையும் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பின்னர் ஒரு போராளி கேட்டார் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் எம்மிடம் கேளுங்கள். தயக்கம் இருந்தால் ஒரு சிறிய கடதாசியில் எழுதி முன்னாலே அனுப்புங்கள். நிறைய கேள்விகள் கேட்டனர். எல்லாவற்றிற்கும் பதில்கள் கிடைத்தன.ஒரு மாணவன் கேட்டிருந்தான் அண்ணா ஒரு பாடல் பாடிக்காட்டுங்கள்? நான் நினைத்தேன் ஏன் இவன் இப்படி கேட்கிறான் என்று. அப்ப அந்த போராளி அண்ணா சொன்னார் கருத்தரங்கு முடியும் போது பாடுகிறேன். நான் எதையும் நினைக்கவில்லை. பின்னர் முடியும் தறுவாயில் புன்முறுவல் பூத்த முகத்துடன் "சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்...." என்ற "உயிர்ப்பூ" படப்பாடலை பாடினார். அப்போதுதான் தெரிந்தது இவர்தான் போராளிப்பாடகர் சிட்டு என்று. "ஜெயசிக்குறு" என்று புறப்பட்டு தமிழரின் தலை கொய்வேன் என்ற சிங்களத்துச்சேனை அடிவாங்கி அடிவாங்கி ஆமையாய் நகர்ந்து வன்னியின் கழுத்தை நெரிக்க முற்பட்டது. பிஞ்சும் பழமும் களமுனையில் வெஞ்சமராடிய காலம். எம் விடுதலை சேனையோ தடுத்து நிறுத்த முழுப்பலத்தையும் பிரயோகித்த நேரம். காலம் அவனையும் களமுனைக்கு தள்ளியது. குரலால் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த போராளி, இப்போது குண்டுகளால் எதிரியை திணறடிக்கிறான். மண்ணை காக்கும் பணியில் மாவீரனாகிறான். மாவீரன் சிட்டு வித்தாக விழுந்த தினம் இன்றுதான்(01.08.1997). பதினொரு வருடங்கள் பறந்துவிட்டன. மனதை விட்டு பறக்காமல் எம்முள் வாழ்கிறான் சிட்டு. செங்கதிரின் "கண்ணீர்ரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்...." என்ற பாடலுக்கான மெட்டுத்தான் எமக்கு சிட்டுவை ஒரு பாடகனாக தமிழீழ மண்ணிற்கு தந்தது. ஒரு போராளிப்பாடகன். இவன்தான் நிறைய போராளிகளுக்கு வழிகாட்டியாய் அமைந்தான். இப்போதெல்லாம் நிறைய போராளிக் கலைஞர்கள் உருவாகிவிட்டார்கள். இவற்றிற்கெல்லாம் அடிநாதம் எங்கள் சிட்டு. கேணல்.கிட்டு வீரச்சாவு அடைந்த உடன் செய்தி மட்டுமல்ல உருவாகிய பாடலும் உள்ளத்தை பிசைந்தது. முதலில் வந்த "தளராத துணிவோடு களமாடினாய்......" என்ற பாடலை பாடியவர் மேஜர் சிட்டு. அற்புதமான பாட்டு. பின்னர் நெய்தல் ஒலிப்பேழையில் எஸ்.ஜி.சாந்தனுடன் இணைந்து "வெள்ளி நிலா விளக்கேற்றும் பாடல்...." கரும்புலிகள் ஒலிப்பேழையில் "ஊர் அறியாமலே உண்மைகள் உறங்கும்..." என்ற தொகையறாவுடன் தொடங்கும் "சாவினைத்தோள் மீது தாங்கிய ...." என்ற பாடல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். பூநகரி வெற்றிப்பாடல் "சங்கு முழங்கடா தமிழா இந்த சாதனை பாடடா கவிஞா.." என்ற பாடலை மீண்டும் சாந்தனுடன் பாடி புகழ் அடைந்தார். இவரது நிறைய பாடல்கள் நெஞ்சை விட்டு அகலாதவை. இசைபாடும் திரிகோணம் ஒலிப்பேழையில் இடம்பெற்ற "கடலின் அலை வந்து தரையில் விளையாடும்..." என்ற பாடலும் அதே தொகுப்பில் 'ரணசுரு','சூர்யா',உட்பட 3கப்பல்களை தாக்கியளித்த கரும்புலிகள் நினைவாக வந்த "விழியில் சொரியும் அருவிகள்...." என்ற பாடலும் மிக உருக்கமானவை. இந்த கரும்புலித் தாக்குதலுடன்தான் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. பாட்டுகள் தந்த எங்கள் சிட்டுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு நினைவுப்பாடல்.... ஒருமுறை உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் என் எல்லோரும் வேண்டுகின்ற "தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன்ப்பேழைகளே........." என்ற துயிலும் இல்ல பாடலுக்கும் சிட்டு குரல் கொடுத்துள்ளார். முன்னர் இப்பாடலின் சரணத்தில் "..நள்ளிராவேளையில் நெய்விளக்கேற்றியே நாம் உம்மை பணிகின்றோம்..." என்ற வரி பின்னர் காலச்சூழ்நிலைக்கேற்ப மாற்றப்பட்டு விட்டது. நெஞ்சைப்பிழியும் நினைவு ஒன்று. சிட்டு களத்திற்கு போக தயாராகிறான். அவனது போராளி நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள் உனக்கு பிடித்த பாடல் ஒன்றை எமக்காக பாடு என்று. எல்லாம் நினைத்து நடப்பதில்லை. ஏன் அப்படி கேட்டார்களோ தெரியாது. ஆனால் சிட்டு இதே துயிலுமில்ல பாடலையே நண்பர்களுக்காக இறுதியாக பாடினானாம். எல்லோரும் அழுது விட்டார்களாம். இப்போது அந்நண்பர்கள் செங்களம் மீதிலே உன்னுடைய கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை ஒரு போராளி நண்பர் பகிர்ந்து கொண்டார். மனதைப்பிழியும் நினைவு ஒன்று. அந்தப்பாடல் துயிலும் இல்லத்துக்கு மட்டுமே உரியது என்பதால் இங்கே தரமுடியவில்லை. காலம் முழுவதும் வாழ்வான் சிட்டு எங்கள் நெஞ்சைப்பிழியும் பாட்டுக்கள் மூலம். சிட்டுவின் எட்டாவது ஆண்டு நினைவில் பூராயம் வலைப்பூவில் வந்த பதிவு: போர்க்குயிலின் மறைவு. தமிழீழப் போராட்டத்தில் எழுச்சிப் பாடல்களின் பங்கும் தாக்கமும் மிகப்பெரியது. “புலிகள் பாடல்கள்” என்ற முதலாவது வெளியீட்டிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் இயற்றி இசையமைக்கப்பட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. எண்பதுகளில் பெரும்பாலும் தமிழகக் கலைஞர்களைக் கொண்டு உருவான பாடல்களே அதிகம். டி.எம்.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், மனோ, பி.சுசீலா, சொர்ணலதா, வாணி ஜெயராம் என்று திரையிசையிற் பிரபலமான பல பின்னணிப் பாடகர்களின் குரல்களில் அப்போதைய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன. இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின் தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்திலேயே பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுடன் முழுக்க முழுக்க உள்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டே அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்நேரத்தில் சிறந்தவொரு பாடகன் எங்களுக்குக் கிடைத்தான். மேஜர் செங்கதிர் என்ற போராளிக் கவிஞனின் வரிகள் பாடலாக உருப்பெற்றபோது இப்போராளிப் பாடகன் அறிமுகமானான். “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற பாடலே இப்போர்ப்பாடகனின் முதலாவது அரங்கேற்றம். அதன்பின் களத்தில் சாகும்வரை சுமார் 75 பாடல்கள் வரை பாடியுள்ளான் சிட்டு எனும் இப்போராளிப் பாடகன். விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பொறுப்புக்களிலும் அரசியல்துறையின் பொறுப்புக்களிலும் தனது போராட்டப் பணியைச் செய்து வந்தான். கேணல் கிட்டு அவர்களுக்காக 'சிட்டு' பாடிய “கடலம்மா” பாடல் மிகுந்த பிரபலம். சிட்டுவின் குரல் யாரையும் கட்டிப்போட வல்லது. பின் ‘உயிர்ப்பூ’ திரைப்படத்தில் சிட்டு பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில் - வந்து மின்னல் விளையாடிடும்’ என்ற பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியாது. வெளியிடப்படும் எந்த ஒலிநாடாக்களை எடுத்தாலும் அதில் சிட்டுவின் பாடல் இருக்கும். ஜெயசிக்குறு தொடங்கியபின் வன்னியில் கடும் சண்டை மூண்டது. வெற்றி தோல்வி எதுவும் தெரியாமல், எப்போது முடியுமென யாராலும் சொல்ல முடியாமல் நீண்டது சண்டை. அச்சமர் தொடங்கியதிலிருந்து சமர்க்களத்திற் பணியாற்றினான் சிட்டு. இறுதியில் ஆவணி முதலாம் திகதி ஓமந்தை இராணுவத்தளத்தின் மீது புலிகளின் திட்டமிட்ட அதிரடித் தாக்குதலின்போது களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான் எங்கள் பாடகன் மேஜர் சிட்டு. ----------------------------------------------------------- சிட்டண்ணையைச் சந்தித்த சம்பவமொன்று: “கூப்பிடு தூரம்” என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் ஜெயசிக்குறு தொடங்கிய பின் சண்டை நடக்கப்போகும் இடங்களைப் பார்க்கச் சென்றிருந்த நிகழ்வைப் பதிந்திருந்தேன். அன்று தான் நான் இறுதியாகச் சிட்டண்ணையைச் சந்தித்தேன். புளியங்குளச் சந்தியிலிருந்து கிழக்குப் பக்கமாக, புளிங்குளத்தின் அணைக்கட்டால் நானும் நண்பர்களும் நடந்து சென்று கொண்டிருக்கிறோம். அணைக்கட்டை மையமாக வைத்து பதுங்குகுழிகளும் காவலரண்களும் போராளிகளால் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சற்றுத் தொலைவில் புளியமரத்தின் கீழ் கும்பலாக முப்பது பேர் வரையில் இருந்தார்கள். மரத்தை நெருங்க, அவர்கள் பாட்டுப்பாடி கலகலப்பாக இருப்பது புரிந்தது. போராளிகள் வழமையாக ஆபத்தற்ற இடங்களில் கும்பலாக இருந்து பாடல்கள் பாடிப் பொழுதைக் கழிப்பது வழமை. அதுவும் போர்க்களம் சார்ந்த இடங்களில் ஆபத்தில்லாத பட்சத்தில் இது நிச்சயம் நடக்கும். நாமும் அதை ரசித்தவாறு கடந்துசெல்ல முற்பட்ட போதுதான் பாடிக்கொண்டிருந்த அந்தக் குரல் சாதாரணமானதில்லையென்பது புரிந்தது. “சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும். அண்ணன் என்ற நெஞ்சில் நூறு அர்த்தங்களை தூவிடும்” இந்தப் பாட்டை யாரால் அவ்வளவு உருக்கமாகப் பாட முடியும்?அதே சிட்டண்ணை தான் பாடிக்கொண்டிருந்தார். கையில் ஒரு தண்ணீர்க் கான். தானே தாளம்போட்டுப் பாடிக்கொண்டிருந்தார். மரத்தடிக்குச் சென்றோம். அந்தப் பாட்டு முடியுமட்டும் நின்று கேட்டு ரசித்தோம். புதிய போராளிகளைக் கொண்ட அணியொன்றுக்குப் பொறுப்பாளனாய் கடமையாற்றிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் நலம் விசாரித்தார். சனம் என்ன கதைக்குது எண்டு வினாவினார். சனங்களின் இடப்பெயர்வுகள் பற்றியும் வெளியே பரப்புரைகள் பற்றியும் விசாரித்தார். நாங்கள் இடங்கள் பார்த்து மதியமளவில் மீண்டும் அவ்வழியால்தான் புளியங்குளச் சந்திக்கு வந்தோம். அப்போது காவலரண் அமைத்துக்கொண்டிருந்தது அவரது அணி. வேலை முடிந்து மதிய உணவுக்காக மீண்டும் மரத்தடிக்கு வந்துகொண்டிருந்தார்கள். எம்மைக்கண்ட சிட்டண்ணை, “வாங்கடாப்பா வந்து எங்கட சாப்பாட்டையும் ஒருக்காச் சாப்பிடுங்கோ” எண்டு கூப்பிட்டார். எவ்வளவு மறுத்தும், வெருட்டி, கூட்டிக்கொண்டு போய் இருத்தி, சாப்பாடு தந்து தான் விட்டவர். எல்லாம் முடிந்து சந்தி நோக்கி வரும்போது தான் முதற்பதிவில் குறிப்பிட்ட எறிகணை வீச்சும் மற்றதுகளும் நடந்தன. அருமையான ஒரு பாடகன், போராளி. எழுச்சிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த அந்தப் போர்க்குயில் ஒருநாள் ஊமையாகிவிட்டது. அவரின் எட்டாம் ஆண்ட நினைவுதினம் இன்று.
  18. புலிக்குரல் ஊகங்களை இங்கு சொல்லி சிட்டுவின் தியாகத்தைக் கூறுபோடாதிருங்கள். நீங்கள் அறிந்தவற்றில் பல பொய்யானவை(என்னவென்று புரிந்து கொள்வீர்கள்) சிட்டு விரும்பியிருந்தால் எங்கள் எல்லோரையும் விட மேலான வசதிகளுடன் வாழ்ந்திருக்கலாம். அவ்வளவு வசதியை அவனது குடும்பம் செய்யக்காத்திருந்தது. உறவுகள் அவனது பதிலுக்காக காத்திருந்தும் கடைசிவரை தனது கொள்கைக்காக எல்லாவற்றையும் துறந்த போராளி. இயல்பிலே அமைந்த கலகலப்பான சுபாவம் உங்கள் காது கேட்ட விடயங்களுக்கான காரணமாக இருக்கலாம். மற்றும்படி அவன் ஓர் சிறந்த போராளியாக அதாவது உயிர்விடும்வரை வாழ்ந்துவிட்டுப் போனான் என்பது தான் உண்மை. அவனது வழித்தடங்களை சுமந்துள்ள நீங்களா இப்படியொரு சந்தேகத்தை அவன் மீது விதைத்துவிட்டுள்ளீர்கள் ?
  19. ஈழவர்குரல் இணையத்தில் சிட்டபற்றி வெளியான நினைவுக்குறிப்பு: 01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டுபோராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை. போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார். விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’. இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது. ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல். “சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்” சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும். கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடலாக நான் கருதும் (இது தவறென்றால் தெரியப்படுத்தவும்) ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல் வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசைக்குழுவின் நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர். ‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?’என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள். [அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவது குறைவு. ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.] சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள். 01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார். “சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
  20. 01.08.1997ம் ஆண்டு யெஜசிக்குறு சமர்களத்தில் மேஜர் சிட்டு அவர்கள் வீரகாவியமானார். தனது இனிய குரலால் இன்றும் எல்லோரின் நினைவுகளோடும் வாழும் சிட்டு அவர்களது14ம் ஆண்டு நினைவுநாள் இன்று. 70பாடல்கள் வரை பாடியுள்ளார். முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிட்டு உறங்கிய துயிலிடம் 2003 தாயகம் போனது போது எடுக்கப்பட்ட படம் இது. சிட்டுவின் நினைவாய் புதுவை அவர்கள் எழுதிய நினைவுப்பாடல் சாந்தன் அவர்களால் பாடப்பட்டது. சிட்டு பாடிய *கண்ணீரில் காவியங்கள் என்ற பாடல்.இதுவே சிட்டுவின் முதலாவது பாடல்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.