Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8472
  • Joined

  • Days Won

    41

Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. பிள்ளைக்களாய் இருந்தாலும் அவர்கள் கல்வியை நிறைவுசெய்தபின்னர் சுயமாக வேலை தேடிக்கொண்டு வீட்டுப் பொறுப்புக்களை தாமும் பகிர்ந்து பெற்றோருக்கு உதவி செய்துகொண்டு ஒழுங்கக்காக இருந்தால் மட்டுமே அவர்களை தம்முடன் வைத்திருக்க வேண்டும். பல பொறுப்பற்ற பிள்ளைகள் படித்து முடித்தபின்னரும் பெற்றோருடன் வாழ்ந்துகொண்டு வேலைக்கும் போகாமல் பெற்றோர் பணத்தில் உண்டு கொண்டு இருக்கின்றனர். பெண் பிள்ளைகள் எப்படியோ கூட்டுவது துடைப்பது, சமைப்பது போன்ற வேலைகளில் பெற்றோருக்கு உதவினாலும் பல ஆண் பிள்ளைகள் இவற்றைச் செய்வதில்லை. பெற்றோர் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கும் போது பிள்ளைகள் தம் அறையையோ வரவேற்பறையையோ சுத்தமின்றி தம் ஆடைகளைப் பொருட்களை கண்டபடி வைத்திருந்தால் கூட பெற்றோருக்கு அது மன உளைச்சலைத் தரக்கூடியது. உணவு விடயம் கூட அப்படித்தான். சாதாரண உணவை உண்ணும் ஒருவர் பிள்ளைக்காக மேலதிகமாக அவர்களுக்கு விரும்பியதை சமைக்கும்போது அதுவும் அவர்களுக்குக் கடினமாகவும் செலவாகவும் இருக்கலாம். ஆகவே அந்தப் பெண் நீதிமன்றத்தை அணுகியதில் தவறில்லை.
  2. தம்பியா உங்களைப் போன்ற வஞ்சனை இல்லாத ஆட்களால்தான் சீமான் வாழ்கிறார். ரதி சொன்னதுபோல இதில் எழுதி பயன் இல்லை என்பதானாலேயே நான் பலதுக்கும் எழுதுவதில்லை. படம் எடுப்பாதையே இத்தனை சுலபமான காரியமாக எண்ணும் உங்களுக்கு எதை எழுதினாலும் விளங்காது. விடுதலைப் போராட்டத்துக்குக்கொடுப்பது வேறு. அந்நிய நாட்டில் உள்ள ஒருவருக்குக் கொடுப்பது விழலுக்கு இறைத்த நீர். சீமானால் தனியாக எமக்கு எதையுமே செய்ய முடியாது. இங்குள்ள ஒருவருக்கு ஏசியபோது "அவர் எதுவும் செய்ய முடியாதுதான் அக்கா. ஆனால் அவர் அப்பப்பா அப்படிக் கத்திக்கொண்டிராவிட்டால் எமது பிரச்சனையை எங்கள் ஆட்களே மறந்திடுவார்கள். அதனாலேதான் அவருக்குப் பணம் அனுப்புகிறோம்" என்றார்.
  3. எல்லாம் சட்டப்படியா இந்தியாவில் நடக்கிறது. பணப் பரிமாற்றம் என்பது எத்தனை வழிகளில் நடக்கின்றது உலகில். நீங்கள் அதுபற்றித் தெரியாமல் இருக்கிறீர்கள்.
  4. லண்டனில் மாதாமதம் அவருக்குப் பணம் அனுப்புகின்றனர். எத்தனையோ வருடங்களாக. நான் சில ஆண்டுகள் பணமாற்றுச் வேலை ஒன்றில் வேலை செய்யும் போது அவர்கள் தரும் பணத்தை நான் அனுப்பியிருக்கிறேன்.
  5. நாதமுனி! இந்தியாவில் அச்சிடுவது மலிவுதான் எனினும் அங்கு நாம் நினைத்ததை செயலாக்க முடியாத சிக்கல்கள் இருக்கின்றன. சில சொற்களின் பொருள் விளங்காது எம்மைக் கேட்காது மாற்றி அச்சிடுவதும் நடைபெறும். ஆனால் பார்சலில் நூல்களை அனுப்பும் செலவும் அதிகம். எமது நாட்டில் நாமே எமக்குத் தெரிந்தவரை கதைத்துப் பேசித் திருத்தங்கள் செய்வது இலகுவானது. ஆனால் தற்போது அங்கு விலை அதிகம். ஆனாலும் பவுண்டஸ் இன் பெறுமதி அதிகரித்திருப்பதால் எமக்கு இலங்கையில் அடிப்பது பெரிதாகத் தோற்றாது. இலங்கையிலும் இந்தியாவிலும் தரமாக நூல்களை அடிக்க முடியும் தான். உயிர்மை, காலச்சுவடு போன்றவை தரமான நூல்களை தாமே அச்சிட்டு வெளியிடுகின்றன. ஆனால் நீங்கக்கள் அவர்களுக்கு உங்கள் ஆக்கணக்களை அனுப்பிவிட்டு மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். வடலி, பூவரசி போன்றவையும் மலிவாக அடிக்கக்கூடியாவை. இந்தியாவில் எம்மவர்களது. இலங்கையில் நான் இருதடவைகள் ஜீவநதி ஊடாக அடித்திருந்தேன். நீங்களே எல்லாவற்றையும் வடிவமைத்து - அட்டைப்படம், தலைப்பு, பின்னட்டை, எழுத்துப்பிழை என்பவற்றைச் சரிசெய்து வேண்டுமானால் நீங்களே புதிய ஒரு நிறுவனதின் பெயரில் வெளியீட்டையும் செய்யலாம். முக்கியமாக ISBN, வெளியீட்டு உரிமம் எடுப்பது அவசியம். மிகமுக்கியம் எழுத்துக்களின் அளவை சரிபார்க்க வேண்டும். நான் முதல்முறை லண்டனில் நூல் வெளியீடு செய்தபோது கிட்டத்தட்ட 100 பேர் வந்திருந்தனர். எனக்கு அதில் செலவு போக 400 பவுண்டஸ் மிஞ்சியது. இரண்டாவது நூலை இலங்கையில் வெளியீடு செய்தபோது நான் யாரிடமும் பணம் பெற்றுக்கொள்ளவில்லை. அதில் எனக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் இலாபமாகக் கிடத்தது. என் ஊரவர்க்கு என்னைப் பற்றித் தெரிவதே எத்தனை பெரிது. ஆனால் இந்தியாவில் வெளியிட்டால் எதுவும் இல்லை. யாருக்கும் எம்மைத் தெரியப் போவதில்லை. நீங்கள் பணம் செலுத்தி அமேசனில் ஏற்றிவிடலாம் தான். ஆனால் ஒரு நூல் வெளியீடு செய்யப்பட்டு விமர்சிக்கப்படும்போது ஏற்படும் திருப்தி பதிவேற்றிவிட்டு வருமானம் பார்ப்பதில் வராது. இலங்கையில் அடிப்பதானால் எம் உறவுகள் நான்குபேர் பயனடைவார்கள். வேண்டுமானால் இலத்திரணியல் நூலாகவும் நூலாகவும் வெளியிடுவது இன்னும் சிறந்தது.
  6. தூவானத்தில் நானும் நன்கு நனைந்துவிட்டேன். எழுதுங்கள் உங்கள் அனுபவங்களை.
  7. தந்திரமாக ஆரோ இவருக்குப் புதுக்கதை சொல்லி உருவேற்றியுள்ளனர். https://www.facebook.com/maunaguru.sinniah இது ஓர் தீபாவளிக் கதை பாவம் நரகாசுரன் ---------------------------------------------------------------------- இன்று தீபாவளி.அடிக்கடி நண்பர்களும்,மாணவர்களும் தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவிக் கிறா ர்கள். அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருகிறார்கள் போலத் தெரிகிறது கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சிதானே? ம்கிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைத்தானே நாம் விரும்புகின்றோம் மட்டக்களப்பில் நான் பிறந்த காலங்களில் 1940 களில் இற்றைக்கு 80 வருடங்களுக்கு முன்னர் தீபாவளியை யாரும் கொண்டாடவில்லை நாங்களும் வீட்டில் இதனைக் கொண்டாடியதாக ஞாபகம் இல்லை எமக்கு அன்று கொண்டாட்டம்,சித்திரைமாதப் புது வருடம்தான். அன்றுதான் எங்கள் வீட்டில் பலகாரம் சுடுவார்கள் /முதல் நாளிரவு நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்து பலகாரம் சுட்டு அதனைத் தமக்குள் பகிர்ந்து கொள்வார்கள் குடும்பங்களின் விழா அது. கிராமங்களின் விழா அது புது உடுப்புகளை காலையில் முதலில் தென்னம் பிள்ளைகளுக்கு உடுத்திவிடச் சொல்லுவார் அம்மா தென்னம்பிள்ளைகள் அணிந்த உடுப்பைத்தான் நாம் பின்னர் அணிவோம் இயற்கையை நேசித்த மனிதர்கள் அன்று சித்திரை நாள் எஙக்ளுக்குப் பெரும் கொண்டாட்ட நாள் தைப் பொங்கலும் கொண்டாட்ட நாள்தான் . அதனை விவசாயிகள் கொண்டாடுவர்.ஏனையோரும் வீட்டில் பொங்கி மகிழ்வர் ஆனால் சித்திரை வருடமளவு அது அன்று பெரும் கொண்டாட்டமில்லை சின்ன வயதில் தமிழ் நாட்டிலிருந்து கல்கி தீபாவளி ஆண்டுமலர், ஆனந்த விகடன் தீபாவளி ஆண்டுமலர் கலைமகள் தீபாவளி ஆண்டுமலர் அமுதசுரபி தீபாவளி ஆண்டுமலர் எனச் சில தீபாவளி மலர்கள் பள பளப்பான தாளில் கவர்ச்சிகரமான வர்ணப்படங்களுடன் பெரிய பெரிய அளவில் ஆண்டு தோறும் தீபாவளி நாளில் வெளிவரும் அவற்றின்மூலம்தான் தமிழகத் தீபாவளி எமக்கு அறிமுகமாகியதாக ஞாபகம் அதன்மூலம்தான் தலைதீபாவளி,என்ற சொற்றொடரை அறிந்தோம் கங்காஸ்னானம். அத்திம்பேர். தீபாவளிச் சீடை,முறுக்கு .விசிறியச் சுழட்டும் குடும்பிவைத்த பூணூல் போட்ட தத்தாமார் ,மடிசார்வைத்த பெண்கள் எனப் பல தீபாவளி சார்ந்த பிராமணச்சமாசாரங்கள் சிறுவயது மனதில் படிய ஆரம்பித்தன தீபாவளிச் சிறு கதைகள் வேறு அவற்றை மனதில் அழுத்தின இன்னொரு பண்பாடு எமக்குள் ஊடகங்கள் வாயிலாகப் புக ஆரம்பித்தன எம்மை ஆக்கிரமித்தும் கொண்டன நாம் மாறலாயினோம் நரகாசுரனை சத்தியபாமா துணையுடன் கிருஸ்ண பகவான் அழித்த கதையை திரும்பத் திரும்பச் சொன்னார்கள் அக்கதை எம்மனதில் ஆழமாக வேரூன்றியது நரகாசுரன் பூமியை மீட்க விஸ்ணு வராக அவதாரம் அதாவது பன்றி அவதாரம் எடுத்து பூமியை மீட்டகதையும், தன்னைமீட்ட வராக அவதாரத்தின் மீது பூமாதேவி காதல் கொள்ள விஸ்ணுவு க்கும்,பூமாதே விக்கும் பிறந்தவனே நரகாசுரன் எனும் கதையும் அவன் கொடுமை பொறுக்க முடியாமல் தந்தையே பிள்ளை யைக்கொல்லும் நிலை உருவானது எனும் கதையும் உருவானது சற்று வளர்ந்த பின் எனது 15 ஆவது வயதில் திராவிடக் கழகக் கருத்துக்களுக்கு அறிமுகமானபோது நரகாசுரன் என்ற திராவிட குலத் தலைவனை ஆரியனாகிய கண்ணன் அழித்த கதை எமக்கு அறிமுகமானது. நரகாசுரன் என்பவன் நரன் அதாவது மனிதன் அசுரன என்பதன் அர்த்தம் சுரன் அல்லாதவன். சுரர் என்றால் தேவர் தேவர்கள் என அழைக்கப்பட்ட ஆரியர்கள்.அவர்கள் சுரபானம் எனும் மதுவை அருந்தியதால் சுரர் என அழைகப்பட்டனர். திராவிடர்கள் ஒழுக்க சீலர்கள் ,மது அருந்தாதோர். ஆகவே அசுரர் என்றால் சுரம் அருந்ததோர் என்பது அர்த்தம் என்ற கருத்துகள் கூறப்பட்டன (அ+ சுரம்) என்ற விளக்கங்களைத் திராவிடக் கழக நூல்கள் தந்தபோது இளைஞரான நாம் அதனால் ஈர்க்கப்பட்டோம் தீபாவளிக்கு அது ஓர் புது விளக்கமாக இருந்தது இந்தப் புதிய கதை எங்களுக்குள் புகுந்து கொண்டது இது தமிழர் விழாவல்ல என எங்களுக்குள் பேசிக் கொண்டோம் இவற்றையெல்லாம் தாண்டி மெல்ல மெல்ல தமிழகத் தீபாவளி மட்டக்களப்புத் தமிழ்ப்பண்பாட்டினுள் புகத் தொடங்கி சித்திரை வருடத்திற்கு அடுத்த பெரும் கொண்டாட்டமாக இடம் பெறலாயிற்று 1960 களில் பேரதனைப் பல்கலைக்க்ழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எமக்கு சமணத் தமிழ் இலக்கியங்கள், சமணர் எழுதிய இலக்கணங்கள், சமணப்புலவர்களின் தனிப்பாடல்கள் என்பன அறிமுகமாகின. அவர்கள் பிராமண மதத்திற்கு,வைதீக மதத்திற்கு எதிரானவர்கள் .நால்வகை வருணப்பகுபாட்டை விரும்பாதவர்கள். அற ஒழுக்கக் கருத்துகளை மிக அதிகமாக வற்புறுத்தியவர்கள் சாதாரண மக்கள் பால் நின்றவர்கள். தமிழ் நாட்டின் பெரும் தாக்கத்தை அன்று எற்படுத்தியவர்கள் என்ற விபரங்களும் சமண தலைவரான மஹாவீரர்,என்பதும் அவர் ஸ்தபித்த சம்ணமதம் என்பதும்,அதன் தத்துவங்கள் என்பனவும் அறிமுகமாகின இவற்றை எமக்கு அறிமுகம் செய்தவர்கள் பேராசிரியர்களான கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி , வேலுப்பிள்ளை ஆகியோராவர் கைலாசபதி வகுப்பில் தொடர்ச்சியாகச் சமண தத்துவத்தை எமக்கு விளக்கினார் வேலுப்பிள்ளையும் தமிழ்ச்சமணம்,த்மிழ்ப்பௌத்தம் பற்றி ஆராய்ந்து எமக்குக் கூறினார் சமண தீர்தங்கரரும் மஹா ஞானியுமான மகாவீரர் மீது ஓர் மதிப்பும் உண்டாயிற்று மூத்த பேராசிரியரான கணபதிப்பிளையின் வகுப்புகள் வெகு சுவராஸ்யமானவை. சிரித்துக்கொண்டு கதையோடு கதையாகப் பல ஆழமான விடயங்களை மிக எளிமையாகக் கூறிசெல்வார் ஒரு நாள் அவர் எங்களுக்குப் படிப்பித்துக்கொண்டிருக்கையில் "உந்தத் தீபாவளி எப்படி வந்தது என்று தெரியுமோடா' என்று கேட்டார் யாழ்ப்பாணத்தில் அன்றைய பேச்சு வழக்கில் இந்த என்பதை உந்த எனக் கூறுவர்) நாங்கள் நரகாசுரன் கதையைக் கூறினோம் "அதுவெல்ல்லாம் புழுகடா.சமண மதத்தின் தலைவரான மஹாவீரர் சமாதி அடைந்த நாளை நினைவுகூர பல தீபங்களை ஏற்றிவைத்து சமணர் கொண்டாடிய சமண விழாவை சைவர்கள் தம் வசப்படுத்திக் கொண்ட கதைதாண்டா தீபாவளி.அதற்காக உருவாக்கப்பட்ட கதைதானடா நரகாசுரன் கதை” என்றார் சைவம், சமண மததிலிருந்து பல விடயங்களைத் த்ம்வயப்படுத்திச் சைவமாக்கிக் கொண்டது என்பதற்கு நிறைய உதாரணங்கள் கூறினார் சமணரை அருகதர் என்பர் யாழப்பாணத்தில் இன்றும் சைவச்சாப்பாட்டை அருகதக் கறி என்பர் என்றெல்லாம் கூறி "இதுவும் அதில் ஒன்றடா" என்றார் எங்களுக்கு வியப்பு அதிகமாயிற்று தீபாவளின் மூலம் பற்றி பேராசிரியர் வேலுப்பிள்ளைகூட தனது நூலில் ஒரு கட்டுரை எழுதியமை ஞாபகம் வருகிறது ஆனால் வாமைபோல சனாதனிகளால் அது கண்டுகொள்ளப்படவில்லை காலங்கள் பல கடந்து விட்டன இன்று 2023 ஆம் ஆண்டு இன்று மட்டக்களப்பில் தீபாவளி பெரும் கொண்டாட்டம் காலையிலிருந்து அரசியல் தலைவர்கள தொடக்கம் சமயத் தலைவர்கள் சமயசொற்பொழிவார்ளூடாக சினிமாபிரபலங்கள் வரை இருளிலிருந்து ஒளிக்கு வரும் கதையையும் அக்கிரமக்காரன் அழிந்த கதையையும் திருப்பித் திருப்பிக் கூறி அலுப்பூட்டிக் கொண்டிருக்கிறார்கள் அறிவு பூர்வமாக எந்தக் கதையும் இல்லை அறிவு பூர்வமாகச் சிந்திக்கும் திறனை தமிழ்சமூகம் இழந்துவிடட்தோ என்று எண்ணத் தோன்றுகிறது ஆர்ப்பாட்டமான இன்றைய எலக்ரோனிக் உலகு தீபாவளியையும் ஆர்ப்பாட்டமாக்கி விட்டது .நரகாசுரனை அழித்த கதை பாடசாலகளிலும்,சமயச் சொற்பொழிவுகளிலும் சர்வசாதரணமாக சொல்லப்படுவதாயிற்று அரசியல் வாதிகளும், ஆட்சியதிகாரத்தில் உள்ள பெரும்தலைவர்களும் சமயத் தலைவர்களும் இது நரகாசுரன் ஒழிந்த நாள் என்றே மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிகின்றனர் நரகாசுரன் அழிவு மக்கள் மனதில் ஆழமாகப் பதிக்கப்பட்டு விட்டது நரகாசுரனுடன் தீபாவளி இணைக்கப்பட்டுவிட்டது பெரும் சமயக் கொண்டாட்டமுமாகிவிட்டது இக்கொண்டாட்டத்தை இனி மக்களிடமிருந்து பிரிக்கமுடையாது காரணங்கள் பல ஒன்று இது ஓர் பெரும் சமய விழாவாகிவிட்டது இரண்டு இதுஓர்பெரும்கொண்டாடமாகிவிட்டது. கொண் டா ட்டமானமையினால் மக்கள் கூடுதல், அதனால் கிடை க்கும் பெரு மகிழ்ச்ச்சி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தெரிவித்தல் என்ற மனித குலம் விரும்பும் அடிமன நல் இயல்புகள் இதில் உள்ளன மூன்று பெரும் வணிக நிறுவனங்களின் லாபம் இக் கொண் டாட்டத்தில் அடங்கியுள்ளது,சேலை உடுப்பு, பட்டாசு ,பலகர வகைகளுக்கான மூலப்பொருள் வியாபாரம் என்பன இதில் அடங்கும் .நான்கு கோயில் வருமானம், பூசகர் வருமானம் என்பன இன்னொருபுறம் உள்ளது ஐந்து பத்திரிகளைன் தீபாவளி மலர் வருமானம், மற்றொரு புறம் உள்ளது ஆறு தொலைக்காட்சி ,போன்ற ஊடகங்களின் இடைவிடாத கருத்தேற்றமும் அவை அவற்றால் அவை அடையும் பெரு வருமானமும் இன்னொருபுறம் உள்ளது ஏழு இவ்வூடகங்களின் அழைப்பை விரும்பி ஏற்றுக் காசிகளில் தோன்றிப் புகழ் பெறச்செல்லும் நமது கலைஞர்களும் அறிஞர்களும் இன்னொருபுறம் பெருவாரியாகக் காணப்படுகிறர்கள் எட்டு இது குழந்தைகலள மத்தாப்புக் கொழுத்தி விளையாடும் ஒரு பெரு விழாவாகவும்,அவர்கள் புத்துடை அணியும் விழாவாகவும் கட்டமைக்கப்பட்டு விட்டது.குழந்தைகளின் மகிழ்ச்சிக்காப் பெற்றோர் எதனையும் செய்வர் எனவே தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என எப்படி சொன்னாலும் அக்கொண்டாட்டத்தை இலகுவில் போக்கிவிட முடியாது அது இந்து மக்கள் கொண்டாட்டமாகிவிட்டது கொண்டாட்டங்களை மிகவும் வரவேற்கும் பின் நவீன சிந்தனையாளர்களை நாம் காண்கிறோம் மக்கள் இணைகிறார்கள் மகிழ்கிறார்கள் என அவர்கள் கொண்டாட்டங்களுக்கு ஓர் புது வியாக்கியானம் அளிக்கிறார்கள் ஆனால் கொண்டாட்டங்களுக்குப் பின்னால் மறைந்து கிடக்கும் சுரண்டலையும் பேதங்களை மறக்க வைக்கும் போதை நிலையையும் அவர்கள் தோலுரித்துக்காட்டுவதில்லை தீபாவளியைக் கட்டுடைத்துப் பார்ர்க்கலாம் அதன் அதிகாரம் எங்கிருக்கிறது என்றுபார்க்கலாம் தீபாவளிக் கதை கூறும் நரகாசுரன் கதைப் பிரதியை கட்டுடைத்துப் பார்க்கலாம் இவையாவும் ஒரு புலமைத்துவ இன்பப் பயிற்சியுமாகும் (Intellectual pleasure exercise) தீபாவளி அன்றையபோல் இன்றில்லை . நிறைய மாறிவிட்டிருக்கிறது. இன்னும் மாறும் இடையில் வந்து மாட்டிக்கொண்டான் நரகாசுரன் பாவம் நரகாசுரன் அவனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் சி.மௌனகுரு
  8. உங்கட பாட்டில இரண்டாவது வரி விளங்கேல்லை 😂 வருகைக்கு நன்றி
  9. வேறு என்னதான் செய்வது? வரவுக்கு நன்றி வராட்டிப் போங்கோ 😃 இப்போது விமானப் பயணம்தான். உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் தானே நாம் அதை நாம் எப்படித் தடுக்க முடியும் சொல்லுங்கள் ??? பலர் லண்டனுக்கு படிக்க வரும் மனைவியுடன் சேர்ந்து வந்துள்ளனர். இப்போ வருபவர்களில் சிலர் வந்ததும் பப்புக்கு கூடப் போகின்றனர். 😀 நன்றி அண்ணா
  10. முப்பதாண்டுகாலப் போரின் முடிவில் முள்ளிவாய்க்காலில் நாம் அடிமைக்களாக்கப்பட்ட பின்னர் எம் சொத்துக்கள் சொந்தங்கள் அழித்தொழிக்கப்பட்டு நிலங்கள் சிறிது சிறிதாக அபகரிக்கப்பட்டு எம் இளஞ் சமுதாயம் போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கப்பட்டு மறைமுகமாக தமிழர்களின் கல்வி வளமும் அழிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியின் பின் சாதாரண மக்கள் வாழ்வதற்குப் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்தான். ஆனாலும் புலம்பெயர் தேசங்களில் இருந்து அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் பெருந்தொகைப் பணம் பலரை முயற்சியற்றவர்கள் ஆக்கி ஆடம்பரமான வாழ்வுக்குள்ளும் தள்ளியுள்ளதை யாரும் மறுக்கவும் முடியாது. நிலங்கள் இருந்தாலும் அதில் சிறு பயிர் தன்னும் வைத்துப் பிழைப்பு நடத்தவோ அன்றாதத் தேவைக்கான வருமானத்தைச் சிறுதொழில் மூலம் ஈட்டவோ பலருக்கும் விருப்பம் இல்லை. வெற்று நிலங்கள் பல கேட்பாரற்று இன்றும் தரிசாகிக் கிடக்கின்றன. சுய தொழில் ஆரம்பிக்கிறோம் என்று வெளிநாட்டவரிடம் இருந்து பணம் பெற்றுக்கொள் வோரும் பணம் கைக்கு வரும்வரைதான் தொழில் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தம் நாற்காலிகளைக் காப்பாற்றவே அவர்களுக்கு நேரம் போதாது. பலர் முகநூல்களில் எல்லாரும் குடும்பங்குடும்பமாக வெளிநாடுகளுக்கு அதுவும் ஒன்றரைக் கோடி, இரண்டு கோடி கூடக் கொடுத்து வருகிறார்கள். அந்தப் பணத்தை அங்குள்ள வங்கிகளில் போட்டு வரும் வட்டியை எடுத்தே குடும்பத்தை நடத்தலாமே என்கின்றனர். நாம் போரினால் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோம். ஆனால் எத்தனைபேர் போரில் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு வந்தோம்?? பலரும் போரைச் சாக்காக வைத்து பிழைப்புக்காகப் பஞ்சம் பிழைக்கத்தானே வந்தோம். வெளிநாடுகளுக்கு வந்ததில் உயிர்ப்பயம் அற்ற நிம்மதியான வாழ்வு, வசதியான வாழ்வு, பொருளாதார வளம், தரமான கல்வி இவை எல்லாவற்றுக்குமாகத்தானே ஓடி வந்தோம். வெளிநாடுகளில் கடுங்குளிர், கடின வேலை, வருமானம் குறைந்த வேலைகள், வசதிகள் குறைந்த வீடுகள், புதிய வாழ்கைச்சூழல், புதிய மொழி என எத்தனையோ நெருக்குவாரங்களுக்கும் முகங்கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறோம். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழர்கள் பலரும் தம் திறமைகளை வெளிக்காட்டித் தமக்கென ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இங்கும் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழ் சமூகமும் உண்டுதான். வெளிநாடு வந்தும் நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ளாது வாழ்க்கையை வாழ முடியாமல், சரியான திட்டமிடல் இன்றி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்போரும் பலர் உள்ளனர். எண்பதுகளின் பின்னர் இடம்பெயர்ந்தோர் பலர் கடும் குளிர், மேலதிக வேலை, காற்றோட்டமற்ற வீடுகள், மன அழுத்தம் போன்றவற்றால் உடல், உளரீதியாக பாதிக்கப்பட்டு பாதி நோயாளிக்களாகவும் இருக்கிறார்கள். நாம் ஓடிவிளையாடியாதுபோல் விளையாட எமது பிள்ளைகளுக்கு இங்கு அயலோ நிலமோ இல்லை. கூடிக் கதைப்பதற்கு சுற்றமோ சொந்தமோ அருகில் இல்லை. பெற்றோரின், உறவுகளின் மரணங்களுக்கோ போக வழியின்றி எத்தனைபேர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் மனம் நொந்து அழுதிருப்பார்கள். இப்போது பலருக்கு அங்கு வீடு வாசலோ சொந்தங்கள் யாருமே எமது நாட்டில் இல்லை. ஆனாலும் எமது நாட்டில் கடைசி காலத்திலாவது சென்று வாழவேண்டும் என்னும் அவா இருப்பினும் பயம் ஒருபுறம், அங்கு சென்று சும்மா இருந்து வாழ்வதற்கான பொருதாரவளம் அற்றவர்களாகவும் இருப்பதுடன் நோயாளர்களும் அங்கு சென்று இருப்பதற்கு அஞ்சி ஆண்டுக்கு ஒருதடவை நாட்டுக்குச் சென்று தம் ஆசையில் சிறிதையாவது நிறைவேற்றிக் கொள்வதுடன் திருப்திப்பட்டும் கொள்கின்றனர். இன்னும் சிலர் எமக்கு ஒரு நாடு இருப்பதையே மறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அது அவர்கள் தப்பு மட்டுமன்று. எல்லோருக்கும் பாதுகாப்பான மகிழ்ச்சியான தன்நிறைவான வாழ்க்கை வாழவேண்டும் என்னும் ஆசை இருப்பது தவறல்லவே. ஆகவே எத்தனை கோடி கொடுத்தும் எம்மவர்கள் வெளிநாடு வரட்டும். நாம் அனுபவித்த இன்ப துன்பங்களை அவர்களும் அனுபவிக்கட்டும். அவர்களால் முடிந்த பொருளீட்டி அவர்களும் வளமாக வாழட்டும். வெளிநாட்டில் வசித்துக்கொண்டிருக்கும் நாம் வெளிநாடுகளுக்கு ஏன் வருகிறார்கள் என்று அவர்களைக் கேட்பதில் எந்த நியாயமுமில்லை. வேண்டுமானால் இங்கு வாழ்ந்து சலிப்படைந்து போனவர்கள் எல்லோரும் துணிந்து தாய்நாட்டில் சென்று மிகுதி நாட்களைக் கழிக்கப் பாருங்கள். அங்கு உங்கள் அறிவையும் திறமைகளையும் உழைப்பையும் போட்டு ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள். எப்படியாவது எமது அடுத்த சந்ததி அங்கு நிலைத்து வாழ்வதற்கான வழிகளை உருவாக்க முடியுமா என்று பாருங்கள். அதை விட்டு எதை சொல்லியும் யாரையும் நிறுத்தமுடியாது.
  11. மிக்க நன்றி கருத்துக்கு சபேஸ் உண்மைதான் அக்கா இடையிலேயே ஊகிக்க முடிவதால் நான் நன்றாக எழுதவில்லை 😀 இலங்கையிலுமா ??? நான் நினைத்தேன் வெளிநாட்டில்தான் இப்படி என்று.
  12. அப்ப உங்களுக்கு நாட்டு மடப்பு ஒன்றுமே தெரியாதாக்கும் 😂 முதல்ல கதையை வாசிச்சு அதுக்கு ஒரு கருத்துச் சொல்லுங்கோ 😀 உங்களுக்குத் தெரிஞ்ச ரீச்சர்மார் கொசிப் கதைக்கிறவையோ??
  13. ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் சிலர் அவற்றைத் தரத்திவிட்டு சிறிய பூனைகளை வளர்க்க ஆரம்பிப்பார்களாம். எனக்கு என்ன பிரச்சனை எனில் என கணவரும் மகளும் எனக்குத் தெரியாமல் உணவு போட அது என் வீட்டுக் குசினிக்குள் வந்து குப்பைக் கூடையைக் கிளறுமளவு வந்துவிட்டது.
  14. பூனைகள் விசித்திரமானவை என் வளவில் உணவுதேடிப் பல பூனைகள் வருகின்றன நான் அவற்றுக்கு எந்த உணவும் கொடுப்பதேயில்லை பாவம் அம்மா பூனைகள் என்கின்றனர் பிள்ளைகள் வீட்டுப் பூனைகளும் சரி துரத்திவிடப்பட்டவைகளும் சரி நிரந்தரமாய் ஓரிடத்தில் உணவு தேடுவதில்லை. பசி எடுக்கும் வேளைகளில் அயலில் உள்ள வீடுகளுக்கெல்லாம் அலைந்து திரிகின்றன பக்கத்துவீட்டில் தாராளமாய் உண்டபின்னும் கூட அடுத்தவீட்டிலும் மியாவ் என்றபடி உணவுக்காய் நிற்கின்றன அவை தம் வீட்டில் மட்டும் உண்ணாமைக்கு என்ன காரணம் இருக்கும் என நான் எண்ணுவதுண்டு. வீட்டு உணவு அவற்றிற்கு உருசிப்பதில்லையோ??? அன்றி போதுமானதாக இருப்பதில்லையோ??? கட்டாக்காலி நாய்களைப்போல்தான் பூனைகளும் இப்போ பெருகிவிட்டன வேலியோ மதிலோ எங்கு ஏறிக் கடப்பதாயினும் எல்லாமே அவற்றுக்குச் சாதகமாகவும் இலகுவாகவும் உள்ளன ஆனால் இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் தன் வீட்டு உணவு உருசியானது. அதனாலேயே எல்லாப் பூனைகளும் என்னிடம் வருகின்றன என எண்ணி, கத்தியபடி வரும் பூனைகளுக்கெல்லாம் உணவுபோடும் வீட்டுக்காரர்கள் தான்.
  15. வருகைக்கு நன்றி அண்ணா. இனிமேல் எழுதி முடித்தபின் தான் போடுவதாக இருக்கிறேன்.
  16. மாலை நேரச் சூரியன் மறையும் காட்சி அத்தனை அழகாய் இருந்தும் மதுவால் அதை இரசிக்க முடியவில்லை. பெரிய தோட்டத்துடனான வீடு. சமதரையாக இல்லாது மேடும் பள்ளமுமாக இருந்ததில் அதற்கேற்ற நிபுணர்களைக் கொண்டு காசைப் பார்க்காமல் வடிவமைத்ததில் எத்தனைத்தரம் பார்த்தாலும் சலிக்காத அழகுடன் அந்த வீட்டின் பின்பகுதியும் தோட்டமும் அழகாய் இருக்கும். வரும் நண்பர்கள் அதைப் பார்த்துப் பொறாமை கொண்டாலும்கூட வாய்விட்டு அதன் அழகைப் புழுகாமலும் போனதில்லை. நிபுணர்கள் ஒருதடவைதான் வந்து வடிவமைத்தார்கள். அதன்பின் அவளே சிலதை புதிதாக நட்டும் மாற்றியும் அமைத்திருக்கிறாள். ரோசாக் கன்றுகள் மட்டும் விவதவிதமாகப் பூத்துக் குலுங்குவதை எத்தனை தடவை பார்த்தாலும் யாருக்கும் சலிக்காது. மாதம் ஒரு தடவை ஒருவர் வந்து கத்தரிப்பதைக் கத்தரித்து இலைகளைக் கூட்டிச் சுத்தம் செய்து புற்களை எல்லாம் வெட்டி அழகுபடுத்திவிட்டுப் போவார். அவர் இறந்து நான்கு மாதங்களாகிவிட்டன. வேறு ஆளைத் தேடவேண்டிய மனோநிலையும் அவளுக்கு இல்லாததனால் தோட்டம் குப்பைகள் நிறைந்து செடிகள் கண்டபடி வளர்ந்து தோட்டத்தின் அழகைக் கெடுக்கிறதுதான். இருந்தும் மது அதைப்பற்றி அக்கறையே இல்லாது மனதை எங்கோ விட்டபடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். விடாது அழைத்த தொலைபேசி அழைப்பு அவளை நிகழ்வுக்கு கொண்டுவர, எழுந்து சென்று தொலைபேசியை எடுக்கு முன்னர் அது நின்றுபோய் இருந்தது. திரையைப் பார்த்தவளுக்கு மனதில் குற்ற உணர்வு ஏற்பட உடனே வந்த இலக்கத்தை அழுத்தி, அந்தப்பக்கம் தொலைபேசி எடுக்கப்பட "மன்னிச்சுக் கொள்ளுங்கோ அக்கா. எதோ நினைப்பில இருந்திட்டன். உடன வாறன்" என்றபடி சப்பாத்தைக் கொழுவிக்கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள். பள்ளி முடிந்து வந்ததும் பிள்ளைகளுக்கு கொறிக்க ஏதாவது கொடுத்து ஒருமணிநேரம் தொலைக்காட்சி பார்க்க விட்டுவிட்டு ஐந்து மணி தொடக்கம் ஏழு மணிவரை ஒரு தமிழ் பெண்ணிடம் ஆங்கில ரியூசனுக்கு விட்டுவிட்டு இவள் திரும்பிவந்து இரவு உணவைத் தயாரித்து பிள்ளைகளின் உடைகளை எடுத்து கூடையில் போட்டுவிட்டு வீட்டையும் கூட்டி எல்லாம் ஒழுங்காக்கிவிட்டு பிள்ளைகளைத் திருப்பிக் கூட்டிவந்து இரவு உணவை உண்பதற்கு மேசைக்கு அழைக்கிறாள். "அப்பா எங்கை அம்மா?" "அவருக்கு வேலை கூடவாம். கொஞ்சம் பொறுத்துதான் வருவார் அப்பா. நீங்கள் சாப்பிடுங்கோ " "நீங்கள் சாப்பிடேல்லையே?" "அப்பா வந்தபிறகு அவரோட சேர்ந்து சாப்பிடுறன்" என்றவள் மகனின் அன்பில் நெகிழ்ந்து போகிறாள். " அப்பா சொக்லற் கொண்டு வருவாரோ? " மகள் கேட்கிறாள். "அப்பான்ர செல்லமெல்லோ நீங்கள். கட்டாயம் கொண்டு வருவார்" "நேற்று அப்பா கொண்டுவரேல்லையே" "அப்பா கொண்டுவந்து குசினி மேசையில் வச்சவர். நரி வந்து கொண்டு போட்டுது. இண்டைக்கு கட்டாயம் கொண்டருவார்" பிள்ளைகளிடம் பொய் சொல்கிறோமே என்ற வேதனையும் வெட்கமும் அவள் மனதைச் சூழ்கிறது. நாளை நான் கட்டாயம் இருவருக்கும் சொக்ளற் வாங்கிக் கொடுக்கவேண்டும். அல்லது அவர்களுக்கு இவளின் மேல் நம்பிக்கையே இல்லாது போய்விடும். தனக்குள் தீர்மானித்தவளாக மிகுதி வேலைகளை முடித்து பிள்ளைகளைப் படுக்கைக்கு அழைத்துப் போய் தூங்க வைத்தபின்னும் அடுத்தநாட் காலை வெள்ளன எழுந்து சமைத்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமும் எழ, சாப்பிட வேண்டும் என்ற நினைப்பேயின்றி படுக்கைக்குச் செல்கிறாள் மது. ........................................................................................................................................................... பிரான்ஸ்சில் பிறந்த மது படிப்பில் கெட்டிக்காரி மட்டுமன்றி அழகிலும் குறைந்தவளல்ல. அவளின் பன்னிரண்டு வயதில் சராசரித் தமிழ்ப் பெற்றோரின் ஆசைக்கிணங்க லண்டனுக்குப் பெற்றோரோடு இடம்பெயர்ந்தவளுக்கு முதலில் லண்டன் பிடிக்காவிட்டாலும் போகப்போக யூனியில் இடம் கிடைத்து படிக்கவாரம்பித்ததும் பிடித்துப்போய்விட்டது. பெற்றோர்கள் அங்கு கஷ்டப்பட்டுச் சேர்த்த காசைக் கொண்டுவந்து ஒரு கடை எடுத்து நடத்தவாரம்பிக்க இவளுக்கு அவர்களின் தலையீடு குறைய நிம்மதியாகப் படிக்கவாரம்பித்து தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க ஆரம்பித்தாள். இரவில் அவள் பெரிதாக வெளியே சென்றதில்லை. ஆனாலும் ஒரு கூடப் படிக்கும் நண்பியின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற அழைப்பை ஏற்று தாயிடம் கெஞ்சி மண்றாடி இரவு வரப் பிந்தும். அவளின் தந்தையே எல்லாம் முடியக் கூட்டிக்கொண்டு வந்து விடுவார் என்று தாயைச் சம்மதிக்க வைத்தபோது "இதுதான் கடைசி. இனிமேல் இப்பிடிக் கண்டபடி திரிய அப்பா சம்மதிக்க மாட்டார்" என்ற எச்சரிக்கையோடு தாய் அனுமதிக்க நண்பியுடன் சென்றவள், பிறந்தநாள் கொண்டாட்டம் பப் ஒன்றில் என்றதும் நடுங்கித்தான் போனாள். "எனக்குப் பயமாய் இருக்கு டொரத்தி, அம்மாக்குத் தெரிஞ்சா பிரச்சனை" என்று முனுமுனுதத்தவளை "கேய் யு ஆர் நொட் எ சைல்ட் " என்று நகைத்தபடி கேலி செய்தாள் டொரத்தி. அங்குதான் நவீனை முதல் முதலில் சந்தித்தது. கண்டதும் காதல் என்று ஒன்றும் ஏற்படாவிட்டாலும் அவனும் அதே யூனியில் படித்ததால் அதன்பின் தானாகவே நிகழ்ந்த சந்திப்புக்களும் அவனின் கண்ணியமும் அவளைக் கவர அவனே "நாளை என்னுடன் ரெஸ்ரோரன்ற் வருகிறாயா" என்று அழைத்தான். ஒருநாள் கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் என்னைப் போலத்தான் உனக்கும் இரவிலே தூக்க முடியாமலிருக்கா என்று அவன் கேட்டு தன் காதலை வெளிப்படுத்த, நிறையத் தமிழ்ப் படம் பார்க்கிறாயா என்று சினிமாப் பாணியிலேயே அவளும் வெட்கப்பட்டு காதலை வெளிப்படுத்த காலம் எப்படித்தான் விரைதோடியதோ இருவருக்கும் தெரியவில்லை. பெற்றோருக்குச் சொல்லாமல் இரவில் அதிகம் வெளியே தாங்காமல் படிப்பையும் காதலையும் சமமாகப் பார்த்துக்கொண்டதால் எந்தத் தடங்கலும் ஏற்படாது போனது. படித்து முடித்த கையோடு பிரெஞ்சு விமான சேவை ஒன்றில் நல்ல ஊதியத்துக்கு உடனேயே அவளுக்கு வேலையும் கிடைத்தது. அவன் எத்தனை முயன்றும் ஒரு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கவே இல்லை. "உமக்கு என்ன. நல்ல வேலையும் சம்பளமும். ஆண்களுக்கு ஏன் வேலை தரப்போறாங்கள்" என்பதாய் சலிப்புடன் அவன் கதை நீளும். "நவீன், மனத்தைத் தளர விடவேண்டாம். எதுக்கும் சும்மா இருக்காமல் மாஸ்ரஸ் செய்யுங்கோ" "மூண்டு வருடங்கள் படிச்சே அலுத்திட்டுது. இன்னும் ஒரு வருடமா?" "கட்டாயம் அதுக்குப் பிறகு வேலை கிடைக்கும். ஒரு பகுதி நேர வேலை செய்து கொண்டு படியுங்கோ" நவீனுக்கு நண்பர்களூடாக மதுவே வேலையும் ஒழுங்குசெய்து அவனுக்கு பலவகையிலும் உதவியாக இருந்ததுமல்லாமல் வாரம் ஒருதடவை இருவரும் நாள் முழுதும் எங்காவது சுற்றிவிட்டு வீடுவருவதுமாக காதலையும் தக்கவைத்துக் கொண்டிருக்க மதுவின் வீட்டில் பிரச்சனை ஆரம்பித்தது. "மது, இங்க இந்தப் படத்தைப் பார். பெடியன் இன்ஜினியர். இரண்டே இரண்டு பெடியள்" படத்தை மறுக்காமல் வாங்கி இரண்டு நாள் வைத்திருந்துவிட்டு "எனக்குப் பிடிக்கேல்லை" என்றவளை ஏன் எதுக்கு என்று கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டனர். ஒன்று இரண்டாகி நான்காகி ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு நொண்டிச் சாட்டுச் சொல்லிக் காலங்கடத்தி, நவீன் படித்து முடித்ததும் இனிச் சொல்லித்தான் தீரவேண்டும் என்று இருவரும் முடிவெடுத்துத் தாயிடம் வருகிறாள் மது. எல்லா விசாரணைகளும் முடிந்தபின்னர் "உது சரிவராது. உந்த ஊர்ல செய்தால் எங்கட மானம் போயிடும்" "நாங்கள் இரண்டுபேரும் லவ் பண்ணுறம். அவரை விட்டுட்டு வேற யாரையும் நான் கட்ட முடியாது" "உதுக்குத்தான் நாங்கள் பெத்து வளர்த்தனாங்களோ" "அம்மா எனக்கு இப்ப 24 வயது" "அதுக்காக கண்டவனையும் கட்டப்போறன் எண்ணுவியோ?" "உங்கட சம்மதத்தோட தான் கட்டவேணும் எண்டுதான் எங்களுக்கும் விருப்பம்" "கடைசிவரை நாங்கள் சம்மதிக்கமாட்டம்" "சரியம்மா இனி உங்கடை விருப்பம்" அடுத்த ஒருவாரம் தாயோ தகப்பனோ இவளோடு கதைக்காமல் இவளை உதாசீனம் செய்ய, அடுத்தடுத்த நாட்களில் நவீனுடன் கதைத்து அவனை ஒருவாறு சம்மதிக்க வைத்து அவன் பெற்றோருடன் கதைக்கவைத்து எல்லாம் தோல்வியில் முடிய, "மது நாங்கள் அடுத்த மாதமே கலியாணம் கட்டுவம் என்று இவளுக்கு நம்பிக்கை குடுத்து இருவரும் பதிவுத் திருமணம் செய்தபின்னரும் இரு பக்கத்தாரும் இவர்களை ஒதுக்கிவைக்க, நவீன் இவளை கவலை கொள்ளவிடாது தாங்கிப்பிடித்தான் என்றுதான் சொல்லவேண்டும். அவனுக்கும் வேலை கிடைத்து இரண்டு ஆண்டுகளில் இருவர் பேரிலும் வீடு ஒன்றையும் வாங்கிய பின்னர்தான் அடுத்ததாக குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இருவரும் முடிவெடுத்ததும். குழந்தை வயிற்றில் வளர வளரப் பெற்றோரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையும் எழுந்ததை உணர்ந்தும் இவள் அடக்கிக்கொண்டாள். முதல் ஆண்குழந்தை பிறந்தபோது எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு நவீன் சென்று தன் பெற்றோரை மட்டுமன்றி மாமன் மாமியைச் சந்தித்ததில் பெற்றோரின் மனம் பெரிதாக இளகாவிட்டாலும் மதுவின் பெற்றோர் உடனே வந்து பேரப்பிள்ளையைப் பார்த்தது மதுவுக்கும் இவனுக்கும் ஆறுதலாகிப் போனதுதான். ஒருமாதம் செல்ல பிள்ளையையும் தூக்கிக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குப் போன நவீனையும் மதுவையும் மன்னிக்க மனமில்லை தான் அவர்களுக்கு. ஆயினும் பேரனைப் பார்த்தபின் மனம் இளகியதில் உள்ளே வாங்கோ என்று கூப்பிட்டு இருக்க வைத்தாலும் பெரிதாக அவர்களுடன் ஒட்ட மனம் ஒப்பவில்லை மதுமிதாவால். நவீன் அடிக்கடி பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவந்தாலும் இவள் எப்பவாவதுதான் சென்றுவருவாள். அவவின்ர சாதித் தடிப்பைப் பாரன் என்று நவீனின் தாய் கூறுவதை நவீன் ஏற்காது அவள் அப்பிடிப் பட்டவள் இல்லை அம்மா. நீங்களும் தானே அவள் வந்தால் முகம் குடுத்து பெரிசாக் கதைக்கிறேல்லை என்பான். இரண்டாவது பெண் குழந்தை பிறந்த பின் பெற்றவளே மதுவைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக்கொண்டாள். ஆனாலும் பேர்த்தியைப் பார்க்க நவீனின் பெற்றோர் வந்தபோது கதவைத் திறந்துவிட்டு வாங்கோ என்றுகூடச் சொல்லாமல் உன்ர மாமனும் மாமியும் வந்திருக்கினம் போய்ப் பார் என்றுவிட்டு சமையல் அறையில் போய்நிற்க, மதுவுக்குத் தாயின் மேல் கோபம் வந்ததுதான். எப்பிடிச் சொன்னாலும் அம்மா விளங்கிக் கொள்ளப்போவதில்லை. ஆனாலும் ஆறுதலா அம்மாவுக்கு விளங்கப்படுத்தவேணும் என எண்ணிக்கொண்டாள். அந்த நேரம் பார்த்து நவீனின் நண்பன் வேணுவும் மனைவியும் வீட்டுக்கு வந்ததில் நிலமை மோசமடையவில்லை. மதுவின் பெற்றோருடன் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு எங்கே நவீன் என்கிறாள் வேணுவின் மனைவி கலா. வேணு கேட்க வேண்டிய கேள்வியை இவள் ஏன் கேட்கிறாள் என்னும் நெருடல் மதுவுக்கு எழுந்தாலும் அவருக்கு இண்டைக்கு அரைநாள் வேலை. இன்னும் ஒரு மணித்தியாலத்தில வந்திடுவார் என்று மது கூறியவுடன் சரி அவர் வரும்வரை யும் இருந்திட்டுப் போவம் என்கிறாள் கலா. அவளின் நடவடிக்கை மதுவுக்குப் பெரிதாகப் பிடிப்பதில்லை. ஆரம்பத்தில் திருமணமான புதிதில் இவர்கள் மனதை ஆற்றிக்கொள்ள நண்பன் வேணுவின் வீட்டுக்குப் போவார்கள். மது இருப்பதைப் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாமல் நவீனுடனேயே அவள் கதைத்துக்கொண்டே இருப்பாள். ஆரம்பத்தில் அது சாதாரணம் என்றுதான் மதுவும் எண்ணினாள். ஆனால் போகப்போக மது அவதானித்துப் பார்த்ததில் நவீனைக் கண்டவுடன் அவள் கண்களில் ஒரு ஒளிர்வை அவதானித்தபின் மது அவர்கள் வீட்டுக்குச் செல்வதை குறைத்துக்கொண்டாலும் தொலைபேசியில் நவீனும் வேணுவும் கதைத்துக்கொள் வதை நிறுத்தவில்லை. மாமியும் மாமாவும் வந்திருக்கும்போது தாம் வந்தது எத்தனை இடைஞ்சல் என்று விளங்காமல் நவீனைப் பார்த்துவீட்டுப் போவோம் என்றது எரிச்சலைக் கிளப்பியதுதான். ஆயினும் போங்கோ என்று சொல்லவா முடியும்? வேணு மிகவும் நல்லவர். மதுவைத் தன் தங்கை என்று கூறி நாகரீகமாக நடந்துகொள்வார். ஆனால் இவள் கலாதான் சரியில்லை என்று மதுவின் மனம் சொல்லிக்கொண்டே இருக்குது. நவீன் வேலையால் வந்தவுடன் அவன் பெற்றோருடன் கதைக்கக்கூட விடாது. கலாவே அவனுடன் கதைத்துக்கொண்டிருக்க மதுவின் தாய்தான் இவளைக் குசினிக்குள் அழைத்துச்சென்று உவளை முதல்ல வெளியில கலை. மருமேன் வந்தநேரம் தொடக்கம் விடாமல் கதைச்சுக்கொண்டிருக்கிறாள். எனக்கெண்டால் நல்லதாப் படேல்லை என்றபின் இவள் சென்று நவீன் நீங்கள் குளிச்சிட்டு வந்து கதையுங்கோ என்று சொல்ல, நவீனின் தாயும் “தம்பி அவையை அனுப்பிப்போட்டு வந்து குளிக்கட்டன்” என்று சொன்னதுமில்லாமல் “நீங்கள் என்னொருநாள் வந்து ஆறுதலாக கதையுங்கோவன்” என்றதும் வேணு ஓமம்மா இன்னொரு நாளைக்கு வாறம் என்றபடி எழ, கலாவும் எழும்பவேண்டியதாகிவிட்டது. ********************************************************************************************************** பிள்ளைகள் இருவரிலும் நவீன் உயிரையே வைத்திருக்கிறான். மூத்த மகன் பள்ளி செல்லும் வரையிலும் மதுவுக்கு எல்லா உதவிகளையும் பார்த்துப் பார்த்துச் செய்தது நவீன்தான். அவனின் பெற்றோர் அங்கு வருவதற்கு முன்னர் அவன் இன்னொரு குடும்பத்தினருடன் தான் ஒரு அறையில் வசித்தான். அவர்களே இரண்டு நேர உணவும் கொடுத்து அவனை குடும்பத்தில் ஒருவானாக நடத்தினர். அவர்களின் இருகுழந்தைகள் கூட மாமா மாமா என்று இவனுடன் மிகவும் இயல்பாகப் பழகுவதில் இவன் தனிமையை உணர்ந்ததுக்கூட இல்லை. அவர்களைவிட இன்னும் இரண்டு நண்பர்களின் குடும்பங்களும் இருந்ததில் அவன் பொழுது மதுவைத் திருமணம் செய்த பின்னரும் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. இப்ப ஒரு ஆண்டாக அவனுக்கும் வேலை வேறு இடத்தில். போவதற்கும் வருவதற்குமே இரண்டுமணிநேரம் எடுப்பதாக சொல்லிச் சலித்துக் கொண்டாலும் இவளும் கார் எடுத்தபடியால் இவளே பிள்ளைகளை நேசறிக்கும் பள்ளிக்கும் ஏத்தி இறக்குவதில் இவள் நேரம் போய்விடுகிறது. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தபின் பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் என்று இவள் வேலையை விட்டுவிட்டாள். இப்ப அவர்கள் பள்ளிக்குச் செல்வதால் அவள் மீண்டும் வேலைக்குச் செல்லலாம் என எண்ணி அவள் இணையவெளியில் தேடி ஒரு தனியார் வைத்திய நிலையத்தில் வரவேற்பாளராக வேலையைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்து நவீனுக்கு போன் செய்ய எண்ணி போனை எடுத்தால் அவன் போன் நிறுத்திவைக்கப்பட்டிருக்கு. சரி அவனுக்கு வேலையில் பிஸி போல என்று எண்ணியபடி தன் காரில் ஏறி அமர்ந்து அதை செலுத்தத் தொடங்குகிறாள். மூன்று சந்திகள் கூடுமிடத்தை அடைந்து பச்சை விளக்குக்காய் காத்திருக்கிறாள். இவளின் முன்னே நான்கு கார்கள் நிற்க அந்தச் சுழற்சி வீதியில் பல கார்கள் வந்து வளைந்து செல்ல, இது நவீனின் கார் போல இருக்கே. பக்கத்தில் கலா இருக்கிறாள். என்ன நடக்குது/ இவர் எனக்கு ஒன்றும் சொல்லாமல் எதுக்கு அவளை ஏற்றிக்கொண்டு போறார் என்று எண்ணியபடி உடனே மீண்டும் அவனுக்கு போன் செய்ய அது அப்பவும் நிறுத்திவைக்கப்பட்டிருக்க மதுவின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி மறைகிறது. சைக் எனக்கு முன்னால் வாகனம் இல்லாவிட்டால் பின்னால் போய் பார்த்திருக்கலாம். சீச்சீ நவீன் அப்படிப்பட்டவர் இல்லை என்று மனம் கூறினாலும் நிலைகொள்ளாமலும் அவன் வீடுவந்து சேரும்வரை தவித்ததுதான். அவளுக்கு வேலை கிடைத்த மகிழச்சியே தொலைந்துபோயிருக்க இரவு அவன் வீடுதிரும்பும் வரை ஒரு வாய் உணவுகூட உள்ளே செல்ல மறுத்தது. வழமைக்கு மாறாக ஒரு மணிநேரம் பிந்தித்தான் அவன் வந்திருந்தான். அவள் அவசரப்படாமல் அவனுக்கு உணவைப் பரிமாற அவனும் உண்டுமுடித்துக் கைகழுவி வருமட்டும் பொறுமை காக்கிறாள். ஏன் நவீன் இண்டைக்கு லேட்?. கொஞ்சம் வேலைகூட. அதுதான் முடிச்சிட்டு வந்தனான். நான் பதினொரு மணிக்கு உங்களுக்கு மூன்றுதரம் போன் செய்தனான். சுவிச் ஓஃப் என்று சொல்லிச்சு. போன் அடிச்சனீரே. இரவு நான் சார்ச் போட மறந்திட்டன். பதினொரு மணி போல சட்டன் சிற்றிப்பக்கம் வந்தீங்களா? ஓம் மது. உவன் வேணு போன் செய்து கலாவுக்கு கொஸ்பிற்றல்ல ஒரு அப்பொயின்ற்மென்ட் இருக்கு. ஒருக்காக் கூட்டிக்கொண்டு போய் விடுறியோ எண்டு கேட்டவன். அவன் ஏதோ அலுவலா மன்சஸ்ரர் போகவேண்டி வந்திட்டுதாம். நான் முதல்ல மாட்டன் எண்டுதான் சொன்னனான். அவன் டேய் மச்சான் கெல்ப் பண்ணடா எண்டு கெஞ்சினதாலதான் வேற வழியில்லாமல் ஓம் எண்டனான். ஏன் கலா சின்னப் பிள்ளையே? அவவுக்குத் தனியப் போக ஏலாதாமா? நான் நெடுகவே கூட்டிக்கொண்டு போறன். ஒருக்காக் கேட்டான். மறுக்க முடியேல்லை. போனுக்கு சார்ச் இல்லை எண்டு சொன்னியள். எப்பிடி வேணு போன் செய்தவர்? அவன் விடிய போன் செய்த உடனதான் போன் நிண்டது. அவன்ர வீடு தெரிஞ்சதால அவன் இத்தனை மணிக்கு எண்டதும் நான் புறப்பட்டிட்டன். என்னை நீர் சந்தேகப்படுறீரோ? நான் உங்களை சந்தேகப்படேல்லை. ஆனால் உப்பிடி இனிமேல் யாரையும் உங்கட வாகனத்தில ஏத்திக்கொண்டு திரியவேண்டாம். எனக்கு அது பிடிக்கேல்லை. சரியெடா செல்லம். இனிமேல் உம்மைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டன். எனக்கு வேலை கிடைச்சிருக்கு. காலை ஒன்பதில் இருந்து பன்னிரண்டு வரை. அந்த நேர்முகத் தேர்வுக்குப் போட்டு சிக்னலில நிக்கேக்குள்ள தான் உங்களைக் கண்டனான். ஓ செல்லத்துக்கு வாழ்த்துகள். நீர் கட்டாயம் வேலைக்குப் போகவேணும் எண்டு இல்லை மது. என்ர சம்பளம் தாராளமாய்க் காணும்தானே. எனக்கு வீட்டில இருக்க போரடிக்குது. பிள்ளையளைப் பள்ளிக்கு விட்டிட்டு நான் சும்மாதானே இருக்கப்போறன். வேலைக்குப் போனால் மனதுக்கு இதமாய் இருக்கும். உமக்கு வேலைக்குப் போறது மகிழ்ச்சி எண்டால் நான் தடுக்கேல்லை. என்ஜோய் என்கிறான். மதுவுக்கு அவனைப்பார்க்கப் பாவமாக இருக்கு. அவர் எனக்குப் பொய் சொல்லேல்லை. நான் கேட்டது ஓம் என்று சொல்லிட்டார். நான் தான் அவரை வீணா சந்தேகப்பட்டிட்டன் என மனதுள் எண்ணியபடி அவனுடன் செல்கிறாள். நல்ல காலம் நான் மதியம் கலாவைக்கூட்டிக்கொண்டு போனது மதுவுக்குத் தெரியாது என எண்ணி இல்லை என்று பொய் சொல்லியிருந்தால் நல்லா மாட்டுப்பட்டிருப்பன். கடவுள்தான் என்னைக் காத்தது என மனதுள் எண்ணிக் கொள்கிறான். ********************************************************************************************************************* அதன் பின் நான்கைந்து மாதங்கள் எல்லாமே மகிழ்வாய்தான் போய்க்கொண்டிருந்தன. அவளும் வேலை பிள்ளைகள் சமையல் என பிஸியாகிவிட ஒருநாள் வேலை முடிந்து வரும்போது உணவுப்பொருட்களை வாங்குவதற்காக கடைக்குச் செல்லும்போது நவீனின் இன்னொரு நண்பனின் மனைவி சுகியை கடை வாசலில் பார்க்கிறாள். இருவரும் சுகநலம் விசாரித்தபின் “நான் கேட்கிறேன் என்று குறை நினைக்காதையும். எனக்கு உம்மைக் கண்டபிறகு சொல்லாமலும் இருக்கமுடியேல்லை” என்கிறாள் சுகி. “புதிர் போடாமல் விஷயத்தைச் சொல்லும்” என்கிறாள் மது சிரித்தபடி. “உமக்கும் நவீனுக்கும் ஏதும் பிரச்சனையா” “இல்லையே. ஏன் அப்பிடிக்க கேட்கிறீர்” “சுதனும் நானும் இரண்டுதரம் இதுபற்றிக் கதைச்சனாங்கள். ஆனாலும் என்ன எண்டு தெரியாமல் உம்மோடை கதைக்கிறது எண்டு நான் பேசாமல் விட்டிட்டன்”. “ஐ”யோ எனக்கு டென்சனாக்குது. முதல்ல என்ன எண்டு சொல்லும்” எனக்கு வேணுவின் வைஃப் கலாவைப் பிடிக்கிறேல்லை. ஆனால் அதுக்காக நான் இதைச் சொல்லேல்லை” “என்ன விசயம்எண்டு சொல்லாமல் என்ன பீடிகை. நேரா விசயத்தைச் சொல்லும்” “சுதன் இரண்டுதடவை கலாவையும் நவீனையும் கண்டவராம். ஒருக்கா சொப்பிங்க் மோலுக்குள்ள, மற்றத்தரம் பக்கத்து சிற்றியில் உள்ள உணவகத்தில, நவீனைக் கேட்டவராம். அவர் ஏதோ சாக்குப்போக்குச் சொன்னவர் எண்டு சுதன் சொல்ல நீங்கள் உங்கட அலுவலைப் பாருங்கோ என்று நான் சொல்லீற்றன்” “ஓ அப்பிடியே. சிலவேளை வேணு கேட்டால் கூட்டிக்கொண்டு போறவர்தான். எனக்கும் சொல்லுறவர்” “எனக்கு ஒண்டும் இல்லை மது. வேணு நல்லவர்தான். ஆனால் கலா சரியில்லை. எதுக்கும் கவனமா இருங்கோ. உங்கட நன்மைக்குத்தான் சொல்லுறன். நான் வாறன்” சுகி சென்றபின்னும் மதுவால் அந்த இடத்தை விட்டு நகர விடாமல் கால்கள் இறுகிப்போயின. அடி வயிற்றிலிருந்து எதுவோ உருண்டு பிரண்டு நெஞ்சில் வந்து அடைத்ததுபோல் இருக்க சுவாசத்தை ஐந்துமுறை ஆழமாக இழுத்து காற்றை உள்வாங்கி வெளியே விட மனது சிறிது தளர்ந்ததுபோல் இருக்க, திரும்ப வீட்டுக்குப் போவோமா என எண்ணியவள் வேண்டாம் வந்த அலுவலை முடித்துவிட்டே செல்வோம் என மனதை ஒருநிலைப்படுத்தியபடி கடைக்குள் செல்கிறாள். வீட்டுக்கு வந்தபின் பொருட்களை அந்தந்த இடத்தில் அடுக்கி வைத்தபின் மனதைக் குவித்து அவசரப்படவோ கோபப்படவோ கூடாது. என்ன செய்யலாம் என்று யோசித்ததில் முன்னர் இவள் குழந்தை வயிற்றுடன் இருந்தபோது இவளின் பாதுகாப்புக் கருதி இவள் போனிலும் தன் போனிலும் நவீன் லைப் லொகேஷன் போட்டிருந்தான். குழந்தைகள் வளர்ந்தபின் தேவையில்லை என அதை இவளே நிறுத்தி வைத்திருந்தாள். மாலையில் அவன் வீட்டுக்கு வந்தபின் குளித்துவிட்டு வந்துதான் பிள்ளைகளுடன் விளையாடுவான். வெளியில் பல இடங்களுக்கும் செல்வதனால் பிள்ளைகளுக்கு நோய் தொற்று ஏற்படக் கூடாது என்பான். அத்தனை கவனம் குடும்பத்தின் மேல். அவன் வாங்கிக்கொண்டு வரும் சொக்ளற் மற்றும் விளையாட்டுப் பொருட்களுக்காக மட்டுமன்றி அவனிடமுள்ள அதீத விருப்பத்தில் எப்ப அப்பா வருவார் என்று இரு குழந்தைகளுமே தாயைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இன்று அவன் வந்ததும் எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாது குளிச்சிட்டு வாங்கோ என்று துவாயைக் கொடுத்துவிட்டு அவன் உள்ளே சென்றதும் அவனது போனை எடுத்து லைப் லொகேசனை அக்ரிவ் ஆக்கிவிட்டு திரும்ப வைத்துவிட்டு இருந்துவிட்டாள். அவனுடன் எதுவுமே நடக்காததுபோல சிரித்துக் கதைத்துவிட்டு தான் எத்தனை பொறுமையுடன் நவீனின் விடயத்தை கையாளக்கிறேன் என்று தன்னைத்தானே மனதுள் மெச்சிக்கொள்கிறாள். அடுத்து இரண்டு நாட்கள் கண்காணித்ததில் அவன் வீட்டுக்கும் வேலைக்குமாகத்தான் செல்வது தெரிய சுகியின் கதையைக் கேட்டு நான்தான் வீணாக நவீன் மேல் சந்தேகப்பட்டுவிட்டேனோ என்ற சந்தேகம் கூட எழுகிறது அவளுக்கு. ஆனால் மூன்றாம் நாள் மதியம் அவனின் கார் வேணுவின் வீட்டு லொகேசனில் நிற்பது தெரிய மனதில் இனம்புரியாத குழப்பமும் கோபமும் எழுந்ததுதான். ஆனாலும் அங்கு வேணுவிடம் கூடப் போயிருக்கலாம் என்ற எண்ணம் எழ பதட்டப்படாது தொடர்ந்தும் கவனிக்கலானாள். அடுத்த இரண்டு நாட்கள் எதுவுமற்றுக் கழிய அதற்கு அடுத்தநாள் வீட்டில் இருந்து புறப்பட்ட கார் நேரே வேணுவின் வீட்டுக்குச் சென்றது மட்டுமன்றி கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அந்த இடத்திலேயே நிற்க, இவளின் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. அவசரப்பட்டு அவனை எதுவும் இப்ப கேட்டுவிடக் கூடாது என எண்ணியவள், அதற்கேற்றாற்போல் தன் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டாள். நவீனைக் கவனித்ததில் அவன் சாதாரணமாகத்தான் இருக்கிறான். ஆனாலும் யாரையும் நம்பமுடியாது என அவள் மனம் சொல்ல, தொடர்ந்தும் கண்காணிக்க இரு வாரங்களாக மதிய நேரத்தில் அவனின் கார் வேணுவின் வீட்டுக்குச் செல்வதும் போவதுமாக இருக்க இன்று அவனை அதுபற்றிக் கேட்பதென முடிவெடுத்துக் காத்திருக்கிறாள். வழமைபோல் அவன் குளியல் அறைக்குச் செல்ல அவனின் போனை எடுத்து லைப் லொகேசனை நிற்பாட்டிவிட்டு அவன் கதைத்த தொலைபேசி இலக்கங்களை பார்த்தபோது பெயர் இல்லாது ஒரு தொலைபேசி இலக்கம் பல தடவை அவனுக்கு வந்திருக்க, அந்த இலக்கத்தை அழுத்தி யார் என்று கேட்போமா என இவள் நினைத்த வேளை மீண்டும் அந்த போன் உயிர்பெற கலோ என்று பெண் குரல் ஒன்று கேட்கிறது. உடனே யார் நீங்கள் என்று கேட்போமா என்று எண்ணியவள் வேண்டுமென்றே மௌனம் காக்க, அந்தபக்கம் போன் கட்டாகிவிட இவள் போனை வைத்துவிட்டு சமையல் அறைக்குச் சென்றுவிடுகிறாள். நவீன் உணவு அருந்தி முடிய பிள்ளைகளுடன் விளையாடி அவர்களும் களைப்புடன் தூங்கச் சென்ற பிறகு என்ன நவீன் வேணு வீட்டுக்கு அடிக்கடி உங்கட கார் போய்வருதாம். சிலபேர் பார்த்திட்டு எனக்கு போன் பண்ணிச் சொல்லிச்சினம் என்கிறாள். அவனின் கண்களில் ஒரு திடுக்கிடல் தெரிய உடனேயே தன்னை இயல்பாக்கிக்கொண்டு அவனும் நானும் ஒரு புரொஜெக்ட் சேர்ந்து செய்யிறம். அதுதான் அவனைச் சந்திக்க அவன் வீட்டுக்குச் செல்லவேண்டியதாப் போச்சு என்கிறான். ஒ அப்பிடியா என்றுவிட்டு அவள் ஏதும் பேசவில்லை. உங்கள் போன் றிங் பண்ணினது. துவா எடுத்திட்டா. ஏன் அப்பாவின் போனை எடுத்தீங்க என்று அவவை ஏசீற்று இனிமேல் எடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறன். சொல்லிவிட்டு கட்டிலில் அமர அவன் பதைப்புடன் போனை எடுத்துப் பார்த்துவிட்டு, புது இலக்கமாக இருக்கு. யார் என்று தெரியேல்லை. காலமைதான் அடிச்சுப் பார்க்கவேண்டும் என்கிறான். அந்த இலக்கத்தில் இருந்து பலதடவைகள் போனில் பேசப்பட்டிருப்பது தனக்குத் தெரியாது என்று நினைத்துக் கூறுகிறான். தீர விசாரிக்காது கதைப்பது சரியல்ல என எண்ணி மனதை அடக்கியபடி அடுத்தநாள் விடியலுக்காகக் காத்திருந்தாலும் எப்படி அதை அறிந்துகொள்வது என்று மனம் விடாப்பிடியாக யோசிக்க அவளுக்கு ஒரு வழி புலப்படுகிறது. காலை எழுந்து இயல்பாக எல்லாவற்றையும் செய்து நவீனுக்கு உணவும் கட்டிக் கொடுத்து அவனுக்குத் தெரியாமல் வேணுவின் தொலைபேசி இலக்கத்தை எடுத்துவிட்டு மீண்டும் தொலைபேசியை அவன் வைக்குமிடத்தில் வைத்து சிரித்த முகத்துடன் அவனை வழியனுப்பி வைத்துவிட்டு யன்னலில் நின்று அவன் போவதை உறுதி செய்துவிட்டு உடனே வேணுவின் இலக்கத்தை அழுத்துகிறாள். மூன்று நான்கு தடவை போன் அடிக்கும் சத்தம் கேட்டும் அவன் எடுக்கவில்லை. விடாமல் தொடர்ந்தும் அடித்துக்கொண்டிருக்க மூன்றாம் தரம் தொலைபேசி எடுக்கப்பட்டு கலோ என்று கிணற்றுக்குள் இருந்து கதைப்பதுபோல் குரல் கேட்கிறது. “வேணுவா கதைக்கிறீர்கள்?. “ஓம் நான்தான் நீங்கள் யார்? “சொறி நீங்கள் இன்னும் எழும்பவில்லைப் போல. நான் நவீனின் வைஃப் மது” “ஓ ஓ சொறி போனில் நாங்கள் கதைக்காதபடியால் உங்கட குரல் விளங்கேல்லை. ஏதும் அவசரமோ? “உங்கட வைஃப் கலாவிட போன் நம்பர் வேணும்” “ஓ நான் உங்களுக்குப் போட்டுவிடுறன். நவீன் உங்களுக்குச் சொல்லேல்லையா? நான் இப்ப ஒரு வாரமாக் கனடாவில நிக்கிறன். நாளையிண்டைக்கு வந்திடுவன்” “எனக்கு அவர் சொல்ல மறந்திட்டார். சரி நீங்கள் போட்டுவிடுங்கோ” போனை வைத்தவுடன் அவளுக்கு ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று புரிய நெஞ்செங்கும் எரிகிறது. நவீன் நல்லவர்தான். அந்தக் கலாதான் வலியப் போய் அவர் மனதைக் கெடுத்திருப்பாள். அவசரப்படவே கூடாது. இன்னும் கொஞ்சம் பொறுமையாய் இரு என மனம் கூற என்ன செய்வது என்று பலவாறு யோசித்தும் விடை கிடைக்காது பிள்ளைகளை எழுப்பி அவர்களுக்கு எல்லாம் செய்து பள்ளிக்குக் கொண்டுசென்று விட்டபின் தன் வேலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்துவிட்டு வந்து கட்டிலில் சரிய, கோகிலா அக்கா தொலைபேசியில் அழைக்கிறார். ஆரம்பத்தில் நவீன் இந்தக் கோகிலா குடும்பத்துடன் தான் வசித்தது. குழந்தைகள் பிறந்தபின்னர் அவர்கள் வீட்டுக்குப் போவது குறைந்தாலும் அவர்களுடனான உறவு பலமாகவே இருந்தது. நாளை அவர்கள் மகளுக்குப் பிறந்தநாள். அதனால் மாலை அந்நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள் என்று உரிமையுடன் கோகிலா அழைக்க சரி என்கிறாள். நவீன் வந்தவுடன் கோகிலா அக்காவின் அழைப்பு பற்றிக் கூற முதலில் ஏதோ எண்ணியவன் பின் “நீர் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போம். நான் வேலை முடிய அப்பிடியே வாறன்” என்கிறான். அடுத்தநாள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு இவள் முன்னரே செல்ல அங்கு இன்னும் இவளுக்குத் தெரிந்த சிலரும் தெரியாதவர்களும் இருக்கின்றனர். மற்றவர்களுடன் கதைத்துக்கொண்டே அப்பப்ப தொலைபேசியில் பார்க்கிறாள். காலையில் திரும்பவும் நவீனின் தொலைபேசியில் லைஃப் லொக்கேசனை அக்ரிவ் ஆக்கியிருந்தாள். நவீனின் கார் இன்று பகல் எங்குமே செல்லாமல் நேரே வேலையிடத்துக்குச் சென்று நின்றதுதான். ஆனால் இப்ப பத்து நிமிடத்துக்கு முன்னர்தான் மீண்டும் கிளம்பி வேணுவின் வீடு இருக்கும் பக்கமாகச் செல்லத் தொடங்க இவளுக்கு மனம் பரபரப்பாகிறது. உடனே நவீனுக்குப் போன் செய்ய நான் வேலையில் தான் நிற்கிறன். இன்னும் அரை மணித்தியாலத்தில் வந்திடுவன். நீர் போட்டீரோ என்கிறான். நான் இப்பதான் வந்தனான். எல்லாரும் வந்திட்டினம் கெதியா வாங்கோ என்றுவிட்டு மற்றவர்களுடன் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு அரை மணி நேரம் செல்ல மற்றவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் மகனிடம் “அம்மா ஒருக்கா வெளியே போட்டு உடன வாறன். தங்கச்சியைப் பார்த்துக் கொள்ளுங்கோ” என்றுவிட்டு தன் காரின் பின் இருக்கையில் அமர்ந்து வீதியைப் பார்த்தபடி இருக்க, ஒரு ஐந்து நிமிடத்தின் பின் நவீனின் கார் வருவது தெரிகிறது. இரவு ஏழு மணியாகிவிட்டதில் இருள் எங்கும் சூழ்ந்திருக்க கண்களைப் பூதக்கண்ணாடியாக்கிப் பார்த்துக்கொண்டே இருக்க நவீனின் காரின் பின் கதவைத் திறந்து கலா இறங்கி அக்கம்பக்கம் ஒருமுறை பார்த்துவிட்டு கடகடவென கோகிலா அக்கா வீட்டுக்குச் செல்ல நவீன் காரிலேயே இருக்கிறான். இவள் நினைத்ததுதான் அங்கு நடந்துகொண்டிருக்க இவளும் அசையாது பார்த்துக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் நவீனும் இறங்கி உள்ளே செல்ல, இவளும் இறங்கி காருக்குள்ளேயே வைத்துவிட்டு வந்த பரிசுப் பொதியை எடுத்துக்கொண்டு உள்ளே செல்கிறாள். இவளைக் காணாமல் தேடிக்கொண்டிருந்தவன் பிள்ளைகள் ஓடிவந்து அப்பா என்று கட்டிக்கொள்ள அவர்களைத் தூக்கி மடியில் வைத்துக்கொள்ள இவளும் வர சரியாக இருக்கிறது. சாப்பிட ஏதும் கொண்டுவரவா என்கிறாள் நவீனைப் பார்த்து. இப்ப வேண்டாம் என்று அவன் கூறும்போதே கோகிலா அக்கா பலகாரத் தட்டுடன் வந்து இவனுக்கும் கொடுத்துவிட்டு அந்தப் பக்கம் இருந்த கலாவுக்கும் கொடுக்கிறார். அவர்கள் இருவரையும் கண்காணித்தபடியே இவளும் இருக்கிறாள். கலாவோ அவனோ ஒருவரையொருவர் பார்க்கக்கூட இல்லை. நல்லா நடிக்கிறீர்கள் என இவள் மனம் எண்ணிக்கொள்கிறது. பிறந்தநாள் கேக் வெட்டி எல்லாரும் சேர்ந்து பாட்டுப்பாடி.. பிள்ளைகள் எல்லோரும் குதூகலமாக இருக்கின்றனர். கோகிலாவின் வீட்டு வரவேற்பறை மிகப் பெரியது. அதனால் சிறுவர்கள் எல்லோருக்கும் சங்கீதக் கதிரை விளையாட வருமாறு அழைக்க அவர்களும் ஆரவாரித்தபடி ஓடிவருகின்றனர். சிறுவர்கள் விளையாட பெற்றோர் தாங்களே விளையாடுவதாய் எண்ணி அவர்களை உற்சாகப் படுத்த விளையாட்டு சூடு பிடிக்கிறது. கடைசியில் இவர்கள் மகனே வெற்றி பெற இவள் மகிழ்ச்சியில் மகனைக் கட்டி அணைத்து முத்தமிடுகிறாள். நவீனும் அதையே செய்ய இவள் நிமிர்ந்து பார்க்கும்போது இவர்களையே பார்த்தபடி இருந்த கலா உடனே தலையைத் திருப்பிக்கொள்ள மதுவுக்கு சிரிப்பு வர அடக்கிக் கொள்கிறாள். அடுத்து “பெரியாக்களுக்கும் சங்கீதக் கதிரை உண்டு” என்று ஒருவர் கூற கோவெனச் சிலர் ஆர்ப்பரிக்க, வேண்டாம் நான் வரமாட்டான் என்றும் கட்டாயம் எல்லாரும் விளையாடவேணும் என்றும் மாறிமாறிக் குரல் ஒலிக்க ஆர்வமுள்ள பலரும் வந்து கதிரைகளுக்கு முன்னால் நிற்கிறார்கள். இவள் நவீனைப் போகச் சொல்ல நவீன் நீரும் வாரும் என்கிறான். நீங்கள் விளையாடுங்கோ. நான் வரேல்லை என்று ஒதுங்க ஆண்களும் பெண்களும் கலந்து நிற்க கலாவும் வந்து நிற்கிறாள். பாட்டைப் போட்டவுடன் சிறு பிள்ளைகளின் குதூகலத்துடன் பெரியவர்கள் கதிரை பிடிப்பதில் குறியாக இருக்கின்றனர். இத்தனைக்குப் பிறகுகூட மது நவீன் வெல்லவேண்டும் என மனதில் எண்ணியபடி அவனை உற்சாகப்படுத்த பிள்ளைகளும் சேர்ந்து ஆரவாரம் செய்கின்றனர். கலா அவுட் ஆகவேணும் என மது மனதில் நினைத்தது நடக்காது கடைசியில் எல்லாரையும் பின்தள்ளி நவீனும் கலாவும் மட்டும் கதிரையை சுற்றுகின்றனர். எல்லோரும் பலமாகக் கை தட்டி ஆரவாரிக்க அவள் வெல்லக்கூடாது எனக் கடவுளை வேண்டியபடி நிற்க, இசை நின்றுபோகிறது. கலா கதிரையில் இருக்க எத்தனிக்க நவீன் அவளைத் தள்ளிவிட்டுத் தான் இருக்க முயல அவளும் விடாமல் இருக்க எத்தனிக்க எல்லாம் ஒரு நிமிடத்தில் நடந்துமுடிந்திருக்க நவீனின் மடியில் கலா இருப்பதைக் கண்ட மதுவின் தலையில் இடிவிழுந்தது போலாகி அவமானத்திலும் கோபத்திலும் முகம் வெடிப்பது போலாகி நவீன் என்று அவள் கத்திய கத்தில் நவீன் கலாவை அணைத்துப் பிடித்தபடி இருந்த கையை அகற்ற, கலாவும் எழுந்துகொள்கிறாள். அங்கு அப்படி ஒரு அமைதி. தலை குனிந்தபடி நவீனும் செய்வதறியாது சொறி மது என்கிறான். மது இரு பிள்ளைகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு விடிவிடுவென அங்கிருந்து வெளியேறி காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவள்தான். அதன்பின் நவீனை வீட்டுக்குள் விடவே இல்லை. அதன்பின் கோகிலா அக்காதொட்டு இன்னும் சிலரும் கூட அது விளையாடும்போது வெல்லவேணும் என்று நிகழ்ந்தது. அதைப் பெரிதுபடுத்தாதேயும் என்று எத்தனையோ சொல்லிப் பார்த்தும் மதுவின் மனம் அசையவே இல்லை. நவீன் பள்ளிக்கூட வாசலில் வந்து நின்று இவளிடம் கெஞ்சிப் பார்த்ததும் பயனில்லை. விவாகரத்துக்குப் பதிந்து இவளின் பெண் லோயர் மேலதிக ஆதாரங்களைக் கேட்டபோதுதான் தான் அத்தனை நாட்கள் பத்திரப்படுத்தியிருந்த அவனும் கலாவும் வற்சப்பில் பரிமாறிய செய்திகளை அவளிடம் கொடுக்கிறாள். அவளுக்கு அவனிடமிருந்து விடுதலை கிடைத்துவிடும். ஆனால் வாரத்தில் இரண்டு நாட்கள் பிள்ளைகளை அவனிடம் விடும்படி அல்லது அவன் பார்த்துவிட்டுப் போக கோட் அனுமதிக்கும்தான். ஆனாலும் அவன் கண்ணில் படாமல் எப்படிப் பிள்ளைகளை வளர்ப்பது என்பதிலேயே அவள் சிந்தனை எல்லாம் செலவழிய அலங்கோலமாகிப் போயிருக்கும் அழகிய தோட்டத்தைப் பெருமூச்சுடன் பார்த்துக்கொண்டு நிற்கிறாள்
  17. வெளிநாட்டில இப்பிடி கேள்விப்படாததெல்லாம் கனக்க நடக்குது. வருகைக்கு நன்றி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.