Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8472
  • Joined

  • Days Won

    41

Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. நான் வரும்போது பேற்றோல் வரிசை குறைந்திருந்தது. நான் ஸ்கூட்டி வாங்கும்போது கியூவா கோட் முறை ஆரம்பித்துவிட்டாபடியால் எனக்கு அதுபற்றி எழுதிய ஒன்றும் இல்லை. ஆனால் சிலிண்டர் விலை 25000 ரூபாய்களாக உயர்ந்திருந்தது மட்டுமன்றி இலகுவில் வாங்கவும் முடியவில்லை. அதுகும் வெளிநாட்டுக் காறியைக் கொண்டு ஒன்றை இலவசமாக வாங்கி விடவேண்டும் என்பதில் என் சித்தி குறியாக இருந்ததில் கெதியா ஒன்றை வாங்கு என்று எனக்கு கரைச்சல் வேறு. யாழ்ப்பாணம், சுண்ணாகம், வரும்வழி, போகும் வழி எனக்கும் சிலிண்டர் பார்ப்பதே ஒரு வார வேலை. கொட்டடியில் பெரிய விற்பனை நிலையம் உண்டென்று அங்கு சென்றால் அங்கும் இல்லை. பின்னர் அவர்களில் ஒருவர் தந்த தொலைபேசிக்கு தொடர்புகொண்டு கதைக்க ஒரேஒரு சிலிண்டர் தான் இருக்கு. 25000 ரூபாய்கள் என்றும் கொண்டுவந்து தருவதற்கு 2000 ரூபாய்கள் என்றும் கூற சம்மதித்ததும் மாலையே கொண்டுவந்து தந்துவிட்டுச் சென்றனர். மீண்டும் நான் வருவதற்கு முன்னர் காஸ் விலை கூடப்போகிறது என்ற செய்தி வந்ததும் மீண்டும் கடைகளில் காஸ் சிலிண்டர்களை ஒளித்துவைத்துவிட்டு இல்லை இல்லை என்ற வார்த்தை மட்டும்தான். வருகைக்கு நன்றி சபேஷ் நாங்கள் லண்டனில் வசித்தாலும் சாதாரண குடிமக்கள் தான். அதனால் எங்கள் வீட்டிலோ வங்கியிலோ கட்டுக்கட்டாக பணமிருக்காது. இருந்திருந்தால் நான் எங்கேயோ இருந்திருப்பன்.😃 பரவாயில்லை நேரம் இருந்தால் வாசியுங்கள் அண்ணா.
  2. ஏதோ இப்போதுதான் வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசை எம்மவருக்கு அதுவும் விடுமுறைக்குச் செல்லும் எம்மவரைப் பார்த்து என்று கூறுவதும் முற்றுமுழுதான உண்மை அல்ல. நாம் இங்குள்ள கடின வேலைகளை, குளிரை, நின்மதியை,நோய்களை என்று எவற்றைச் சொன்னாலும் நம்பாது வெளிநாட்டுக்குத் தாமும் சென்று பணம் ஈட்ட வெட்டும் என்பது அவர்களது அடிப்படை ஆசை. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்று சும்மாவா சொன்னார்கள். வெளிநாட்டில் இருந்து செல்பவர்கள் பாவம் அவர்களிடம் போதிய பயணம் இல்லை எமது பணத்தில் அவர்களை இதையாவது அனுபவிக்க வைப்போம் என்று இங்கிருந்து பொருட்களையோ நகைகளையோ அல்லது பணத்தையோ அவர்களுக்கு வாரி இறைக்கும்போது மட்டும் வேண்டாம் எனறு சொல்லாமல் அனுபவித்துவிட்டு அவர்கள் டம்பம் காட்டுகிறார்களென்பது என்ன நியாயம்???? என்ன சொன்னாலும் நாம் பிறந்த மண்ணில் எங்கள் ஆசைக்கு காணிகளை வாங்கும் உரிமை வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு உண்டு. காணி மலிவாக வேண்டும் என்றால் மலிவாக இருக்கும் இடத்தில் நீக்கள் போய் வாங்குவதை யாருமே தடுப்பதில்லையே.
  3. படத்துக்கு நன்றி அண்ணா. தபேந்திரன் கூறியிருப்பது எல்லாம் சரியென ஒத்துக்கொள்ள முடியாது அண்ணா. இங்கக்கு பெரிய வளவுகள் வைத்திருப்பவர் குறைவு. அதிலும் தாயக்கத்தைப் போல பெரு மரங்கள் இருக்கும் வீடுகள் மிகக் குறைவு. அங்கு நிரந்தரமாக வாழ்பவர்களே உயிர் வேலிகளை வைத்திருப்பதில்லை. அதுவும் வசதி குறைந்தவர்கள் கூட கதியால்களை அகற்றிவிட்டு மதிலோ தாகரமோ அடைக்கிறார்கள். அறிவுள்ளவர்கள் யாரும் வளவுக்குள் உள்ள மரங்களை அழிக்கமாட்டார்கள். நான் கவனித்தவரை என் அயலிலேயே பல வீடுக்களில் மரங்கள் இல்லை. ஏன் வெட்டிவிட்டீர்கள் என்று கேட்டால் குப்பையைக் கூட்ட முடியவில்லையாம். புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் காணிகளை விற்றும் விட்டனர். தற்போது காணிகளை வாங்கிக்குவிப்பதாகக் கூறப்படுவோர் ஏதோ எமது நாட்டில் நல்லது செய்து நான்கு பெருக்காவது வேலைவாய்ப்பைக குடுக்கலாம் என்ற நல்ல நோக்கத்திலேயே காணிகளை வாங்குகின்றனர். ஒருசிலர்தான் வீணாக ஆடம்பரத்துக்காக மாடி வீடுகளைக் கட்டி வீட்டைப் பார்க்க ஆட்களையும் நியமித்து பணத்தையும் கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அதனால்தான் காணிகள் விலை என்று கூறுவது மிகத் தவறு. எமது ஊரில் ஒரு பரப்பு 30-60 லட்சம் வரை போகிறது. அதுவே நான் காணி வாங்கிய இடத்தில் 8 - 12 இலட்சயமே போகிறது ஒரு பரப்புக் காணி. எமது ஊரில் நான் வாங்கியிருந்தால் வெறும் 5 பரப்புக் காணி மட்டுமே வாங்கியிருக்க முடியும். எம்மூரில் காணிகளே விற்பனைக்கு இல்லை என்பது வேறு விடயம். தாம் வசிக்கும் இடத்தை விட்டு பக்கத்து ஊருக்குக் கூடப் போக விரும்பாதவர்கள்தான் அங்கு உள்ளவர்கள். அதனால் தான் காணிகள் அதிக விலை போகின்றன..அடுத்தது 10 லட்சம் போகும் காணியை தமது புரோக்கர் பணத்துக்காக 15,16 எனக் கூட்டி விலை ஏற்றுபவர்கள் புரோக்கர்மார் தான். வெளிநாட்டினரே எல்லாக் காணிகளையும் வாங்குகின்றனர் என்பது மிகைப்படுத்தல்.
  4. ம்க்கும் 😀 உண்மைதான் அக்கா பாரிய மாற்றம் எங்கும். பல்லைக் கடித்துக்கொண்டு வாழ்ந்தால்த்தான் உண்டு.
  5. இருபது ஆரம்பத்தில் நான் யாழ்ப்பாணம் செல்லும்போது பெரும்பாலும் பஸ்சில் தான் போய் வந்தேன். முன்புபோல பேருந்துச் சேவைகளோ அன்றி மினிபஸ்களோ கூட இல்லை. ஒரு மணித்தியாலத்துக்கு இரண்டு தான் செல்கின்றன. எல்லோர் வீட்டிலும் ஸ்கூட்டியும் மோட்டார் சயிக்கிலும் இருப்பதுதான் அதற்குக் காரணம். பஸ்சில் பெரிதாக ஆட்களே இருப்பதில்லை. அதிலும் அரசாங்க பஸ் சிவப்பு நிறத்திலும், தனியார் பஸ் பச்சை நிறத்திலும் ஓடுகிறது. சிலவேளைகளில் மட்டுமே மினிபஸ் ஆட்கள் நிறையாது வரும். மற்றப்படி ஆட்டுப்பட்டிகளை அடைப்பதுபோல் அடைந்தபடிதான் வருவார்கள். பின்னுக்குப் போ பின்னுக்குப் போ என்று அவர்கள் கத்தும்போது ஆட்களும் எதுவும் பேசாது இடித்தபடி பின்னால் நகர நான் மட்டுமே பின்னால எங்கே தம்பி போறது என்று கேட்டு நகராமல் நிற்பேன். ஆனால் எதுவும் பேசாது ஆட்கள் இடித்துக்கொண்டு நெருக்கியடித்து நிற்பார்கள். அதற்குள் பலத்த சத்தத்துடன் பாட்டுகளைப் போட்டு யாரும் கதைக்கக்கூட முடியாதபடி சத்தத்துடன் இருக்கும். அதற்கும் எவருமே எதுவும் சொல்வதில்லை. தோழில் பைகளைக் கொண்டு வருபவர்கள் கேட்டுக்கக்கேள்வியின்றி இருப்பவரின் மடியில் தமது பைகளை வைத்துவிட்டு நிற்பார்கள். ஒரு மரியாதைக்காவது “இதை ஒருக்கா வைத்திருக்கிறீர்களா” என்று கேட்பதில்லை. முன்னர் பள்ளிக்கூட பஸ்சில் தான் மாணவர்கள் ஏறவேண்டும். இப்போது மினிபஸ்சிலும் நெரிபட்டுக்கொண்டு வருகிறார்கள். “இப்போது பள்ளிக்கூட பஸ் வருவதில்லையா” என்று கேட்டதற்கு “அது வரும்வரை நிற்கேலாது” என்கின்றனர். ஆட்கள் மினிபஸ்சில் குறைவு என்றால் எங்காவது தரிப்பில் நிறுத்தி ஒரு மூன்று நான்குபேர் ஏறுமட்டும் ஒரு பத்து நிமிடமாவது நிறுத்திவைத்துவிடுவார்கள். யாரும் ஏன் நிக்கிறாய் போ என்று சொல்வதில்லை. ஒருதடவை தட்டாதெருவில் 15 நிமிடம்வரை நிக்க, “ஏன் தம்பி நிக்குது?” என்று நான் கேட்க யாரோ தமக்குத் தெரிந்தவர் வரவேண்டும் என்கிறான் அந்தப் பெடியன். “உங்களுக்குத் தெரிந்தவர் வரும்வரை இத்தனை பேரும் காத்திருக்கவேண்டுமா” என்று நான் கேட்க “விருப்பம் இல்லாட்டில் அவவை இறங்கி ஓட்டோவில போகச் சொல்லு” என்கிறான் சாரதி. “எண்ணண்டு அப்பிடி நீர் சொல்லுவீர். என்னை ஓசியிலா ஏற்றிக்கொண்டு செல்கிறீர். இறங்கச் சொல்ல உமக்கு எந்த றைற்றும் இல்லை” என்றுவிட்டு அவர்கள் இருவரையும் படம் எடுக்க பக்கத்தில நிண்ட மனிசி “பிள்ளை உவங்களோட கதைச்சா பிரச்சனை. வெட்டிக்கிட்டிப் போடுவாங்கள். அதுதான் நாங்கள் கதைக்கிறேல்லை” என்கிறா. இன்னும் இரண்டுபேர் என்னிடம் “உவங்களோட கதைக்கேலாது” என்று மற்றவர்களுக்குக் கேட்காதவாறு சொல்கின்றனர். ஒருநாள் யாழ்ப்பாணம் சென்று மீசாலையில் இருக்கும் ஒரு நட்பைப் பாரக்கச் செல்கிறேன். எந்த பஸ்சில் ஏறுவது என்று தெரியவில்லை. ஒருவர் முன்னால நிக்கிற பஸ் என்று காட்ட, போய் ஏறுவதற்கு போக சாவகச்சேரி, மிருசுவில், கொடிக்காம்.. கொடிக்காம் .... தம்பி இது மீசாலைக்குப் போகுமோ? ஓம் ஏறுங்கோ கெதியா. கொடிக்காம் என்று ஒரு ஊர் இருக்கோ தம்பி? கொடிகாமம் எந்ததைச் சுருக்கிச் சொல்லுறன் அம்மா. தம்பி உங்களுக்கு என்ன பெயர்? சங்கீதன் அம்மா. உங்களை சதன் எண்டு கூப்பிடால் நல்லாவா இருக்கும்? சீற்றில ஏறி இருங்கோ அம்மா முதல்ல சாவகச்சேரி, மிருசுவில், கொடிக்காம் கொடிக்காம் ........ ஒருதடவை யாழ்ப்பாணம் செல்லும்போது மினிபஸ்சில் சனம் இல்லை. கடைசி இருக்கையில் நடுவே நான்குபேர் இருக்கும் இருக்கையில் ஒரு இடம் காலியாக இருக்க சென்று அமர்கிறேன். எனக்கு ஒருபுறம் இருவர். மறுபுறம் இன்னொருவர். ஒருபுறம் பெண் என்பதால் நான் அவருடன் நெருங்கி அமர்கிறேன். மறுபுறம் இருப்பவர் அடக்க ஒடுக்கமாய் இருக்காது கால்களை அகட்டி வைத்தபடி இருக்கிறார். போதாததற்கு கால்களை அப்பப்ப ஆட்டியபடியும் இருக்க, அவர் ஆட்டும்போது எனக்குப் பட்டுவிடும்போல் இருக்க அவரை ஒருதடவை திரும்பி முறைத்துப் பார்த்தபின்னும் அவர் நிறுத்தவில்லை. நான் : அண்ணா கால் ஆட்டாதைங்கோ அவர் : ஏன்? என்ர கால் நான் ஆட்டுறன். நான் : எனக்கு முட்டுற மாதிரி இருக்கு. . அவர் : ஏன் முட்டினதே? இல்லையே. நான் : முட்டாமல் இருக்கத்தான் முதலே சொல்லுறன். காலை ஒடுக்கிக்கொண்டு இருங்கோ. கடைசியில என் குரல் உயர்ந்து மற்றவர்கள் திரும்பிப் பார்க்க, தன் காலை ஒடுக்கிக்கொண்டு இருக்கிறார். நானாட்டானில் இருந்து மன்னார் மன்னார் வரும்போதும் எனக்கு கடைசி இருக்கை தான். அரச பேருந்து அதிவேகமாகச் செல்லும். எனக்கு முன்னால் பிடிப்பதற்குக் கூட எதுவும் இல்லை.அது ஐந்துபேர் இருக்கக்கூடிய இருக்கை. நாம் நாங்கு பேர்தான். ஒரு ஐம்பது மதிக்கத்தக்க ஒருவர் என்னருகில். பிரேக் பிடித்தால் நான் விழுந்துவிடுவேன் என்ற பயத்தில் முன் இருக்கையின் கம்பியை இறுக்கிப் பிடித்தபடி இருக்க, நித்திரை தூங்கியபடி என் கைகளில் தலையைக் கொண்டுவந்து சாய்ப்பதும் நான் கையை எடுப்பதுமாக இருக்க, அவர் வேண்டுமென்றே செய்கிறாரா அல்லது தற்செயலானதா என்று புரியாவிட்டாலும் கூட இதுக்கு மிஞ்சி சகிக்க முடியாது எனறு எண்ணி என் பலம் கொண்ட மட்டும் அவர் தலையை கைகளால் தள்ள திடுக்கிட்டு விழித்தவர்போல் என்னைப் பார்க்க, அண்ணா என்ர கையில படுக்காதேங்கோ. நித்திரை வந்தால் பின்னால சாய்ந்து படுங்கோ என்றபின் மன்னார் வரும்வரை அவர் நித்திரையே கொள்ளேல்லை. அரச பஸ்சில் ஏறினால் டிக்கட் கொடுப்பதற்கு மிஷின் இருக்கு. ஆனாலும் நாம் மாற்றிய காசு கொண்டு செல்வதுதான் நல்லது. மிச்சக்காசை இறங்கும்போது நாம்தான் கேட்டு வாங்கவேண்டும். மினிபஸ்சில் என்னைப் பார்த்ததும் எப்படித்தான் அவர்களுக்குத் தெரிக்கிறதோ இருபது ரூபாய்கள் அதிகமாகவே வாங்குவார்கள். சரி போகட்டும் என்று விட்டுவிடுவது. நாம் எப்படித்தான் சாதாரணமாக வெளிக்கிட்டுப் போனாலும் எம்மை எப்படித்தான் வெளிநாட்டவர் என்று அறிகிறார்களோ தெரியவில்லை. மண்ணெண்ணை தட்டுப்பாடு இருந்து எந்தக் கடைகளிலும் இல்லை. அடுத்தநாள் கொடுக்கிறார்களாம் என்று கதை அடிபட நானும் சித்தியின் அட்டையைக் கொண்டுசென்று வாங்குவோம் என முடிவெடுத்து 1000 ரூபாய்க்கு ஒரு பிளாஸ்டிக் கானும் வாங்கி வைத்தாச்சு. ஓட்டோவில் போகவர மண்ணெண்ணை வந்திட்டுதா என்று கேட்டு கடைசியில் மாலை நான்கு மணிக்கு மருதனார்மட பெற்ரோல் நிரப்பு நிலையத்தில் கொடுக்கிறார்களாம் என்று என் ஓட்டோக்காரர் கூற உடனேயே அவருடன் புறப்பட்டு வந்தாச்சு. நாம் வரும்போது வரிசையில் எமக்கு முன்னால் இருபதுபேர். சிறிது நேரத்தில் திபுதிபு என ஆட்கள் கூட எமக்கு முன்னால் சிலர் இடையே புகுகிறார்கள். தம்பி பின்னுக்கு வாங்கோ. நாங்களும் மண்ணெண்ணைக்குத்தான் நிக்கிறம் என்று நான் மட்டும்தான் சொல்லிக்கொண்டு நிக்கிறன். மற்றவர்கள் வாயே திறக்கவில்லை. ஓரிடத்தில் அட்டையைக் கொடுத்து பதிந்தபின் மற்ற இடத்தில் மீண்டும் வரிசையில் நின்று எண்ணையை வாங்க வேண்டும். பெடியள் எல்லாம் இரட்டு அட்டைகளைக் கொண்டுவந்து இடையில் புகுந்து அல்லது தமக்குத் தெரிந்தவரிடம் கொடுத்து வாங்குகின்றனர். யாரும் எதுவும் பேசவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் வருகிறார். எனக்கு முன்னார் நிற்பதற்கு முயல நான் விடாது “அண்ணா இத்தனைபேர் இவ்வளவுநேரம் காத்துக்கொண்டு இருக்கினம். நீங்கள் இப்ப வந்திட்டு இடையில நிக்க வாறியள். போய் வரிசையில நில்லுங்கோ” என்று சொல்ல,ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு முன்னால் போனவர் பத்து நிமிடத்தில் எண்ணையை வாங்கிக்கொண்டு வந்து எனக்குக் காட்டிப்போட்டுப் போறார். எனக்கு கடும் கோபம்வர பொறுங்கோ நான் போய் கேட்டுட்டு வாறன் என்று கிளம்ப, “அயலில இருக்கிறவை அக்கா. ஏனக்கா தேவையிலாத பிரச்சனை. பேசாமல் விடுங்கோ” என்கிறார் இன்னொருவர்.கடைசியில் எதுவும் பேசாது பார்த்துக்கொண்டுநின்று மண்ணெண்ணை வாங்கிவர இரண்டு மணித்தியாலம். எனக்கு ஏன் மண்ணெண்ணை என்றுதானே கேட்கிறீர்கள். என் வளவில் இருக்கும் கறையான் புற்றுக்களுக்கு விடுவதற்கு வாங்கியதுதான். திரும்பி லண்டன் வரும்போதும் நான் நிண்ட கோட்டலில் முதல் நாளே எனக்கு விமான நிலையம் செல்வதற்கு ஊபர் ஒழுங்கு செய்து தாருங்கள் என்றேன். நீங்கள் தயாராகிக் கீழே வந்தவுடன் சொல்லுங்கள். ஊபர் இருக்கிறது மலிவாக இருக்கும் என்றனர். என் போனில் போட அது ஏதோ சில்லெடுத்தபடி இருக்க அங்கு நின்றவரிடம் கூறினேன். ஒரு இருபது நிமிடமாக இருவர் போனை வைத்துக்கொண்டு அங்குமாறி இங்குமாறித் திரிய எனக்கோ நேரம் ஆகிறதே என்ற பதட்டம். தங்கச்சி ஊபர் விமான நிலையத்துக்கு வருதில்லை. தூரமாம். பெற்றோல் விலை என்பதனால் வர மறுக்கிறார்கள் என்கின்றனர் இருவரும் சொல்லிவைத்ததுபோல். பிரைவேட் கார் ஒழுங்கு செய்து தரட்டா என்று கேட்க நானும் என்ன என்றாலும் வரட்டும் என்று கூற, தங்கச்சி 9000 ரூபாய்கள் கேட்கின்றார். என்ன சொல்ல என்கிறார். சரி வரச் சொல்லுங்கள் என்கிறேன். விமான நிலையம் வந்து செக்கின் முடிய கணவருக்கு போன் செய்ய, நாம் வரும்போது ஊபருக்கு 3000 ரூபாய்தான் கொடுத்தோம். கோட்டலில் உள்ளவர்கள் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டனர் என்கிறார்.
  6. ஊரெழுவில் உள்ளது. தாவடியில் ஒரு நல்ல பெண் வைத்தியர் இருக்கிறார். பிரதேச செயலகத்துக்குப் போனால் கடுப்புத்தான் வரும் . இருந்தாலும் அடிக்கிக்கொண்டு வருவது. ஒருமுறை நான் போய் இருக்கிறேன். வேலை ஆரம்பிப்பது 9.00 மணிக்கு. நான் 8.50 இக்குப் போய்ப் பார்த்தால் ஒரே ஒரு முதியவரும் இரு இளம் ஆணும் தான் வந்திருந்தனர். பத்து நிமிடம் ஆகியும் அங்கே மாறி இங்கே மாறித் திரிக்கின்றனர். அதன் பின் நான்கு இளம் பெண்கள் வருகிறார்கள். பசிக்குது என்ன சாப்பிடுவம் என்று ஆளையாள் பார்த்துக் கேட்க எனக்கும் வாய் சும்மாஇருக்குமா? வேலைக்கு வரும்போது வீட்டில் சாப்பிடாமலா வருவீர்கள் என்கிறேன். அவர்கள் என்னைப் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு இருக்க அந்த முதியவர் அவர்களைப்பார்த்து அசடு வழிந்துகொண்டு இருக்கிறார். சமையல் செய்யிறன். இன்னும் முடியவில்லை. 😃
  7. நான் வாங்கிய காணியில் இரண்டு பெரிய புன்னை மரங்கள் இருக்கின்றன. அவற்றில் இலைகளை மூடி மயிர்கொட்டிகள்தான். ஆனாலும் வெட்ட மனமின்றி வீட்டிருக்கிறேன். அவை ஒரு குறிப்பிட்ட சீசனில் தான் அதிகம் வரும். லண்டனில் யூன், யூலை மாதம் காணப்படும் அதன்பின் இருக்காது. லண்டனில் முன்னர் அதிக பாம்பு இருந்ததாகவும் அதனாலேயே நரி போன்ற மரநாய் கொண்டுவந்ததாகவும் அதற்குப் பின் பாம்புகள் இல்லை என்றும் ஓரிடத்தில் வாசித்தேன்.
  8. உறுதி, தோம்பு எல்லாம் போட்டோ கொப்பி பண்ணி கொண்டுபோய் குடுத்தது. இனி வரும்போதுதான் பார்க்கலாம்.
  9. இப்பவரை என காணிக்கு சோலை வரி கட்ட பெயர் மாற்றித் தரவில்லை. வெளிநாட்டுக் காரர் இழுத்தடிச்சால் காசு தந்து செய்வினம் எண்டுதான் வச்சிரிக்கினம் என்றார் ஒருவர். இது சிறந்த ஐடியாவா இருக்கே. 😃
  10. 😂 இப்பவாவது கண் திறந்திதே.😃 உதுக்கெல்லாமா கவலைப்படுறது.??? கொஞ்சம் எண்டாலும் அன்பு இருக்கிறபடியால் தானே சமைச்சாவது தரீனம்.
  11. புலம்பெயர்ந்தவரின் சொத்துக்களை அரசாங்கம் எடுக்கப்போகிறது என்ற பொய்யான புரளியை நம்பித்தான் பலரும் தமது காணிகளை உறவினரின் பெயர்களுக்கு மாற்றினார்கள். அங்கேதான் ஆரம்பித்தது எல்லாம். ஒருவரைப்பார்த்து ஒருவர் என வெளிநாட்டினருக்கு எதுக்கு சொத்து என்று ஆரம்பித்து தாமே எல்லாவற்றையும் முடிவுசெய்கின்றனர். மற்றைய நாடுகளைப் பற்றித் தெரியாது. வெளிநாட்டினர் இலங்கையில் சொத்துக்களை வைத்திருக்கலாம். என்ன வரிதான் அதிகம் செலுத்தவேண்டும். அங்கத்தைய நிலவரம் பற்றி என்ன அறிந்துகொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டால் அவை பற்றி எனக்குத் தெரிந்தால் கூறலாம்.😃 அதைவிட்டு நிறுத்தவேண்டாம் என்றால் என்ன நியாயம் அண்ணா 😃 ஏன் நீங்கள் உங்கட மனிசிக்குப் பயப்படுறது இல்லையா ?????உண்மையைச் சொல்லுங்கோ😂 ஆண்கள் எப்பவும் பக்கத்தில் இருப்பதுதான் எமக்கு பலம். அல்லது நாங்களே எல்லாத்துக்கும் முறியவேணும்.😀
  12. அப்ப நான் ரெகோர்ட் பண்ணி போடவோ என குரலில ??😀 என் கணவரின் காணியை இப்போதே விற்போம் என்று நானும் கணவரும் எண்ணுகிறோம். ஆனால் பிள்ளைகள் வேண்டாம் என்கின்றனர். நாம் இருக்கும்போதே எத்தனை பேராசைப்படுகிறார்கள் உறவினர்கள். எம் பிள்ளைகளை எப்படி ஏமாற்றி காணியை அபகரிக்கலாம் என்றுதான் எண்ணுவார்கள். கச்சேரியில் பணம் கட்டினால் காணி உறுதியை இலகுவாக எடுக்கலாம். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வாய்ப்பை நாம் தானே உருவாக்கவேண்டும். ஒருமாதமா எழுதியது போதாதோ
  13. மனிசன் என்னை வீட்டைவிட்டுக் கலைத்துப்போடுவார்.😀 உண்மைதான். எல்லோரும் ஒரேமாதிரி இல்லை.
  14. பத்தொன்பது எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் நடைபெற்றதால் நான் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை எனினும் வந்தவுடன் கூறுங்கள் சந்திக்கலாம் என்றுவிட்டு இருந்துவிட்டேன். 14 தை சகாரா போன் செய்கிறார். நாளை எங்கள் ஊரில் பட்டத்திருவிழா நடைபெற இருக்கு சுமே. வந்தீர்கள் என்றால் என் வீட்டில் தங்கிப் போகலாம் என்கிறார். நான் செல்வச்சந்நிதி கோயிலுக்கு சில தடவைகள் சென்று தொண்டைமான் ஆற்றில் குளித்துவிட்டு வந்ததுடன் சரி. வல்வெட்டித்துறை எப்படி என்றுகூடத் தெரியாது. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று வருகிறேன் என்றுவிட்டு அடுத்தநாள் காலையில் ஓட்டோ பிடித்துக்கொண்டு செல்கிறேன். ஓட்டோவுக்கு 3000 என்று பேசி கிளம்பியாச்சு. போய் இறங்கியவுடன் இன்னொரு ஆயிரம் தரும்படிகேட்க ஏன் முதலே 3000 என்று சொல்லித்தானே வந்தது. பிறகென்ன என்றதும் தூரம் கூட என்கிறார். நீங்கள் வந்த தூரத்துக்கு 3000 சரிதானே. னீகள் கேட்பதானால் 500 ரூபாய் கூடத் தருகிறேன். அதைவிடத் தரமாட்டேன் என்கிறேன். யாவரும் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு செல்ல எது சகாராவின் வீடு என்று தெரியாமல் போன் செய்ய வாசலுக்கு வந்து கையைக் காட்டுகிறார். வாசலில் ஒரு மலரின் பெயர் எழுதியிருக்க வெள்ளை நிறப் பெயிண்ட் அடிக்கப்பட்டு கம்பீரமாக நிற்கிறது வீடு. உள்ளே சென்றால் மிக விஸ்தாரமாக உயரமாக பிரமாண்டமான அறைகளுடன் அட்டாச் டாய்லெட் பாத்ரூமுடன் கூடிய வீடு என்னைப் பிரமிக்க வைக்கிறது. சினிமாக்களில் வரும் வீடுபோன்று மிக அழகாய் இருக்கிறது. என் வளவில் இப்படி ஒரு வீடு கட்டினால் எத்தனை அழகாய் இருக்கும் என எழுந்த கற்பனையை வேண்டாம் என்று முடிவெடுத்து இழுத்து மூடுகிறேன். அவரின் மருமகளாக வர இருப்பவர் தேநீர் ஊற்றிவர அவரையும் அறிமுகம் செய்துவிட்டு நாம் ஊர் கதை, உலகத்துக்கதை, யாழ்க் கதை எல்லாம் கதைக்கிறோம். கதைத்து முடியவில்லை. கொஞ்சம் வெயில் தணிய நாம் வெளிக்கிட்டு பட்டத்திருவிழாவுக்குக் கிளம்பினால் சகராவின் வீட்டுக்கு அண்மையில் இருக்கும் அவர் சிறுவயதில் படித்த பள்ளி தெரிய குதூகலத்தோடு பள்ளியைப் பற்றிக் கதைக்கிறார். போகவர அவரின் உறவினர்கள் தெரிந்தவர்கள் என நின்றுநின்று கதைத்தபடி செல்கிறோம். பட்டத் திருவிழாவுக்கு வேறு ஊர்களில் இருந்தும் சனங்கள் வருவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கு. வீதிகளும் அடைக்கப்பட்டு குறிப்பிட்ட வீதியால் மட்டும் வாகனங்களை அனுமதிக்கின்றனர். கடற்கரைப் பக்கமாக செல்ல எக்கச்சக்கமான வாகனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. சாரிசாரியாக சனங்கள் போகின்றனர். கடற்கரை பார்க்க அந்த வெயிலிலும் அழகாக இருக்கிறது. இடையிடையே மீன்பிடிப் படகுகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சந்திசந்தியாக சிறு தெய்வங்களும் கட்டடங்களும் அது பற்றிய கதைகளுமாக சகாரா சொல்லியபடி வர நானும் கேட்டபடி நடக்கிறேன். வானத்தில் தூரத்தில் பட்டங்கள் தெரிகின்றன. மனது குதூகலம் கொள்கிறது. சிறுவயதில் திருவிழாவுக்குச் சென்ற நினைவுகள் வருகின்றன. கிட்டச் செல்லச் செல்ல விலத்த முடியாத சனம். எத்தனையோ விதமான பட்டங்கள், பிரமாண்டமான பட்டங்கள், உருமாறும் பட்டங்கள் என நாலு மூலைப் பட்டம் மட்டுமே பார்த்த எனக்கு இவற்றைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. ஒரு பக்கம் போய் நின்றால் இருப்பதற்கான இடமே இல்லை. ஒரு அரை மணிநேரம் அதில் நின்றுவிட்டு வேறு பக்கம் செல்கிறோம். அங்கும் சனக்கூட்டம் தான். இருந்தாலும் அங்கு நிற்பதும் பட்டங்களைப் பார்ப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதுமாக நேரம் கழிகிறது. சகாரா போனை எடுத்து வீடியோ கோலில் கண்மணி அக்காவை அழைக்கிறார். அவர் வந்ததும் அவருடன் கதைக்க தானும் வந்திருக்கலாம் என்கிறார் கண்மணியக்கா. நெட்வொர்க் சரியில்லாததாலும் சன இரைச்சலினாலும் கண்மணியக்கா கதைப்பது வடிவாகக் கேட்கவில்லை. பிறகு கதைப்போம் என்று போனை வைத்துவிட்டுப் பார்க்க ஏற்றியிருந்த பெரிய பட்டங்கள் போதிய காற்று இன்மையால் இறக்கப்பட நாம் அங்கிருந்து வேறு இசை நிகழ்வுகள் நடைபெற இருந்த இடம் நோக்கிச் செக்கிறோம். வழியில் பல ஐஸ்பழ வான்கள் நிற்க சகாரா எமக்கு வாங்கித் தர அதைக் குடித்தபடி நடக்கிறோம். வீதியில் போவதும் வருவதுமாக வாகன நெரிசல்கள். நாம் நடப்பதற்கே இடம் இல்லை. மோட்டார் சயிக்கிளில் வருவோரும் போவோரும் எம்மை யாரும் இடித்துவிடாதபடி நாம் முன்னும்பின்னும் பார்த்தபடி நடக்கிறோம். எமக்குக் கிட்டவாக இரண்டு மூன்று மோட்டார் சயிக்கிள்கள் வருவதும் நிற்பதுமாக சகாரா முன்னே செல்ல நடுவே அவர் மருமகள் நான் அவர்கள் பின்னே செல்கிறேன். போலீசாரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தியபடி அங்காங்கே நிற்க இருந்தாற்போல் ஒருவன். பார்க்க ரவுடி போல இருக்கிறான். எனக்கும் சகாராவுக்கும் அண்மையில் இடிப்பது போல் வருகிறான். என்ன தம்பி கவனமா ஓடுங்கோ என்கிறேன் நான். என்னட்டை சேட்டை விடாதை. தலையிலயோ தட்டுறாய் என்றபடி ஏதேதோ சொல்ல எனக்கோ ஒன்றும் புரியாமல் அவன் என்னைச் சொல்கிறானா அல்லது சகாராவா என்று எண்ண அவன் சகாராவைப் பார்த்துத் திட்டுவது தெரிய தவறுதலாத் தட்டுப்பட்டிருக்கும் தம்பி என்று அவனை நான் அமைதிப்படுத்தப் பார்க்க, நான் வேணும் என்றுதான் அவனுக்கு தலையில அடிச்சனான் என்கிறா சகாரா. எனக்குப் பதட்டமாகிறது. ஏன் அடித்தீர்கள் என்று கேட்க அவர் தேவையிலாமல் தனக்குக் கிட்ட அவர் மோட்டார் சயிக்கிளை கொட்டுவர அதுதான் மண்டையில போட்டனான். இவை எங்கள் ஊரவையும் இல்லை.வாற இடத்தில ஒழுங்கா நடக்க வேண்டாமோ என்று சகாரா கேட்க நான் சரிதான் என்கிறேன். தண்ணியும் அடித்திருக்கிறார்கள் போல. இந்தியத் திரைப்படங்களில் சிறிய ரவுடிகள் போலவே இருக்க இன்று என்ன நடக்கப்போகுதோ, கடவுளே காப்பாற்று என்று மனதில் வேண்டிக்கொள்கிறேன். மெதுவாக எனது போனை எடுத்து அவர்களை வீடியோ எடுத்தால் கண்டுவிடுவார்கள் எனப் பயந்து சும்மா கையில்வைத்திருப்பதுபோல் அவர்களின் மோட்டார் சயிக்கிளை வீடியோ எடுத்து வைத்துக் கொள்கிறேன். அதன்பின் இரண்டு மூன்றுபேர் எமக்குகிக்கிட்ட வந்து மன்னிப்புக் கேட்கவேணும் என்று கூற எனக்கு எந்தப் பக்கத்தால் ஓடுவது என்று கூடத் தெரியவில்லையே என மனதில் எண்ணுகிறேன். சகாராவோ அசரவில்லை. எங்கள் ஊரில வந்து என்ன தனகல் வேண்டிக்கிடக்கு. வந்தா வந்த அலுவலைப் பாருங்கோ. எங்கடை ஊர் ஆட்களைக் கூப்பிட்டன் என்றா வீடுபோய் சேரமாட்டியள் என்கிறா. அவர்கள் ஊரவர் என்று தெரிந்தபின் சமாளித்து பின்வாங்கிச் செல்ல எனக்குப் பதட்டம் தணியவே இல்லை. அதன்பின் இந்தியாவில் இருந்து வரவளைக்கப்பட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்குச் சென்றால் நிகழ்வு ஆரம்பிக்க இரவாகும் என்றதும் நாம் திரும்பி நடக்கிறோம். சிதம்பராக் கல்லூரி வரும் வழியில் இருக்க அதுபற்றியும் சகாரா கூறிக்கொண்டே வருகிறா. அண்ணரின் வீட்டையும் ஒருக்காப் பார்க்கவேண்டும் என்றதும் வீடு எங்கே இருக்கு வளவு மட்டும்தான் என்றபடி கூட்டிக்கொண்டு செல்கிறா. பார்த்தால் மதில்கள் எல்லாம் உடந்த நிலையில் இருக்க வளவு முழுவதும் மோட்டார் சயிக்கிளை நிறுத்தி வைத்துள்ளனர். மனதில் ஒருவித வலி எழுகிறது. இந்தப் பெரிய வீரனை நீங்கள் நினைக்கவேண்டாமா. அவரின் வீட்டைத்தான் இராணுவம் அழித்தால் அந்த வளவை மாசுபடுத்தாது பாதுகாக்கக்கூட முடியாதவர்களாக அவ்வூர் மக்கள் வாழ்கிறார்களே என்னும் ஆதங்கம் எழுகிறது. சந்தியில் உள்ள ஆலமரத்தடியில் கட்டியிருந்த கட்டில் சிறிது நேரம் இருந்து என்னை அசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் எழுந்து அண்ணனின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவர் லண்டனில் வசித்தவர். தற்போது அங்கு வாழ்கிறார். அவருடனும் சென்று கதைத்துவிட்டு களைத்துப்போய் வீடு வருகிறோம். சகாராவின் அண்ணியார் எமக்காக தோசை, சம்பல், சாம்பார் என கொடுத்துவிட பசிக்கு அமிர்தமாக இருக்கிறது. அதன்பின் சகாராவின் சகோதரர்கள் வந்து இயல்பாகக் கதைத்துவிட்டுச் செல்ல வேறு உறவினர்களும் வருகின்றனர். மீண்டும் இரவு ஒன்பது மணிபோல் மிகப் பெரிதாக அழகாக வடிவமைக்கப்படிருந்த டோரா பொம்மை ஊர்வலமாக வந்து ஒரு கோவிலுக்கு அண்மையில் நின்று பொம்மையின் உள்ளே நின்று இருவர் ஆட்டுவிக்க பார்க்க அழகாக இருக்கிறது. மின்விளக்கு வெளிச்சத்தில் இளயவர்களும் சிறுவர்களும் குத்துப் பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றனர். அதற்கு ஒரு கதை கூட சகாரா சொன்னார். எனக்கு மறந்துவிட்டது. நடந்து நடந்து கால்கள் சரியான வலி. ஒரு இரண்டு மணி நேரத்தின் பின் வந்து நான்கு பேர் படுக்கக்கூடிய கட்டிலில் நான் மட்டும் படுத்து உடனே தூங்கியும் விட்டேன். அடுத்தநாட் காலை பிந்தி எழுந்து காலை உணவை உண்டு சகாராவுக்கும் எனக்கும் அலுவல்கள் இருந்தபடியால் நான் கிளம்பிவிட்டேன். வரும்போது ஓட்டோ பிடிக்காது பெரிய மினிபஸ்சில் இடங்களைப் பார்த்தபடி யாழ்ப்பாணம் வந்து அங்கு ஒரு திரைப்படமும் பார்த்துவிட்டு ஐந்து மணிக்கு வீடு வந்து சேர்கிறேன். சகாராவைச் சந்தித்ததும் பட்டத்திருவிழா அனுபவங்களும் ஒரு நீங்கா நினைவாக எப்போதும் என் மனதில் இருந்துகொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நான் அவ்வூர் விடயங்கள் பலதையும் கூறாது விட்டுவிட்டேன். மன்னியுங்கள் சகாரா. அண்ணர் பிறந்து வளர்ந்த இடம் இப்படியாய் இருக்கு.
  15. இப்படிப் பயந்துகொண்டிருந்தால் ஒன்றும் நடவாது. நாம் அங்கு சென்று வாழ்ந்தாலும் முற்றுமுழுதாக வெளிநாட்டைத் துறந்துவிடவில்லையே. ஒரு இன்சூரன்சைப் போட்டுக்கொண்டு செல்லலாமா என்று பார்க்கவேண்டும். தனியார் வைத்திய நிலையங்கள் மோசமாக இல்லை. நாம் மருத்துவச் செலவுக்கும் சேர்த்தேதான் பணம் வைத்திருக்க வேண்டும் . ஆனாலும் எதற்காக எதிர்மறையாக சிந்திப்பான். உங்கள் நண்பர்களை எமக்கும் அறிமுகம் செய்து வைத்தால் பிரச்சனை தீர்ந்தது.
  16. எனக்கு ஏற்பட்டதுதான் உங்களுக்கும் என்று இல்லை. யாழ்ப்பாணத்தில் கார்கில்ஸ் இல் மிகவும் சுத்தமாக வைத்துள்ளனர். நான் எங்காவது செல்லும்போது டாய்லெட் டிசு கொண்டுதான் திரிந்தேன். என் எழுத்தைப் பார்த்துப் போகாது விடாமல் நீக்கள் போய் உங்கள் அனுபவங்களையும் இங்கு வந்து எழுதுங்கள். இந்தப் படம் எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு அண்ணா. நன்றி எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு குடும்பம் அன்றுதொட்டு வறுமை. ஆனாலும் அவர்கள் கூட தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர். வீண் பண விரயம் தானே என்றதற்கு காசு போனாலும் கெதியாப் பாத்துப்போடுவினை என்றார். அவருக்கு சித்தி மாதாமாதம் 3000 ரூபாய்கள் கொடுக்கிறார். உண்மைதான் அண்ணா விழுந்த விழுகைக்கு நடக்கவே முடியாமல் இருக்கப்போகிறேன் என்றுதான் எண்ணினேன். கடவுள்தான் காத்தது.
  17. நான் எழுதிக் களைத்துவிட்டேன். இன்னும் ஓரிரு பகுதிகளுடன் நிறுத்தப்போகிறேன். என்னையே இவர்கள் இந்த ஆடு ஆட்டுகிறார்கள் என்றால் கொஞ்சம் வாய் பேசத் தெரியாத சனங்களை என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். தமிழர் வாழும் பகுதிகளில் தமிள வைத்தியர் இல்லை என்றால் எப்படி சரியான சிகிச்சை கொடுக்கமுடியும் என்று கேட்டதற்கு உங்கள் ஆட்கள் எல்லாம் நல்ல சம்பளம் வேண்டும் என்று வெளிநாடு போனால் வேறு யாரை அனுப்பமுடியும் என்றார் ஒருவர். நன்றி அக்கா
  18. பதினெட்டு ஒரு பத்து நிமிடங்களில் எனது சித்தியையும் கூட்டிக்கொண்டு வந்துவிட சித்தி வழமையாக நான் அழைக்கும் ஓட்டோக்காரருக்கு போன் செய்ய அவரும் உடனேயே வந்துவிடுகிறார். நான் கண்ணைத் திறந்து பார்க்கிறேன். இன்னமுமே எதுவும் தெரியவில்லை. சித்தியை அழைத்துவந்த உறவினரின் வீடு அருகிலேயே இருப்பதனால் அவர் ஸ்கூட்டியை தன் வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன் என்று கூற நான் தலையாட்டுகிறேன். அவரிடம் ஸ்கூட்டியில் வேலை செய்பவர்களுக்கான உணவு இருக்கு. தயவுசெய்து அவர்களுக்கு அதைக் கொண்டு சென்று கொடுக்க முடியுமா என்று கேட்க ஓமக்கா நான் கட்டாயம் கொண்டுபோய் குடுக்கிறன் என்கிறார். உது இப்ப முக்கியமோ என்கிறா சித்தி. சரியில்லை சித்தி அவர்களுக்காகச் சமைத்தது. உங்களுக்கு என்ன பிரச்சனை என்கிறேன். அதன்பின் அவர் ஒன்றும் கூறாமல் வாயை மூடிக்கொள்ள நான் கண்களைத் திறக்காமலேயே இவ்வளவும் கதைக்கிறேன். எங்கே கொண்டுபோறது என ஓட்டோக்காரர் கேட்க பெரியாசுபத்திரி என்கிறா. அங்க சரியான சனமாய் இருக்கும். தெல்லிப்பளைக்கே கொண்டுபோவம் என்று அவர் சொல்ல ஓட்டோ நகர்கிறது. ஓட்டோவுக்குள் இருக்க இருக்க முழங்கால் நோவெடுக்கிறது. எவ்வளவு நேரம் எடுத்தது என்று தெரியவில்லை. மருத்துவமனை வந்துவிட நீங்கள் இருங்கோ. நான் போய் அவையைக் கூட்டிக்கொண்டு வாறன் என்று சொல்லிவிட்டு போக, நான் கண்ணைத் திறக்கிறேன். கண் கண் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது. சக்கரநாற்காலியுடன் ஒருவர் வர ஓட்டோக்காரர் பக்கத்தில் வருகிறார். இறங்கி இதில இருங்கோவென்று சொல்ல நான் ஒருவாறு இறங்கி இருக்கையில் அமர, அவர் என்னைத் தள்ளிக்கொண்டு செல்ல சித்தியும் ஓட்டோக்காரரும் வருகிறார்கள். இடது முழங்காலும் வலது பாதமும் விண் விண் என்று தெறிப்பதுபோல் இருக்கு. அங்கு மூன்று மருத்துவத் தாதியரும் இரு மருத்துவர்களும் நிற்கின்றனர். அன்று பெரிதாக ஆட்களும் இல்லைப்போல. ஒரு பெரிய கோல் போன்ற பகுதியில் ஒரு இருபது கட்டில்கள் இருக்கின்றன. ஒரு சிறுவனும் தாயும் மற்றும் ஒரு வயதுபோன பெண்ணும் மட்டுமே இருக்கின்றனர். என் பெயர் விபரம் எல்லாம் பதிந்து என்ன நடந்தது என்று கேட்டு எழுதிவிட்டு இருங்கோ வைத்தியர் வந்து பார்ப்பார் என்று கூறிவிட்டு அந்தப்பக்கம் உள்ள அறை ஒன்றுக்குள் எல்லோரும் சென்று கதைத்து சிரித்து ஏதோ அதுக்கே வந்ததுபோல் இருக்கின்றனர். ஒரு தாதி மருத்துவர் ஒருவரைப் பார்த்து கிரிபத்தும் இருக்கு சாப்பிடுங்கோ என்றுவிட்டு அப்பால் செல்கிறார். நான் அந்த வாங்கிலேயே இருக்கிறேன். வாங்கில் தொடர்ந்து பலகையை அடிக்காது அதிக இடைவெளி விட்டு அடித்திருக்க அதுவேறு பயங்கர நோவை ஏற்படுத்துகிறது. வைத்தியர் வந்து சும்மா வாயால் கேட்டுவிட்டு ஒரு ஏற்பூசி போட்டுவிடுங்கோ. நாளைக்குத்தான் எக்ஸ்றே எடுக்கலாம் என்கிறார். நாளை வரை எக்ஸ்ரே எடுக்காமல் இருக்க ஏலாது எனக்குச் சரியான நோவா இருக்கு என்கிறேன். இண்டைக்கு புது வருடம் எண்டதால எக்ஸ்றே எடுக்கிறவர் வரமாட்டார் என்றவுடன் நான் அப்ப வேறு மருத்துவமனைக்குப் போறன் என்கிறேன். உடனே அவர் இல்லை இல்லை நான் எதுக்கும் வேறை யாரையும் வரச் சொல்லுறன். பொறுங்கோ என்றுவிட்டுப் போக தாதி ஊசியைக் கொண்டுவந்து போடுறா. அதன்பின் மீண்டும் எல்லோரும் அந்த அறைக்குள் சென்று கதைத்துச் சிரிப்பதும் உண்பதுமாக இருக்க, இன்னொரு தாதி வர எத்தனை மணிக்கு எக்ஸ்றே எடுப்பார்கள் என்கிறேன். ஒண்டரைக்குத்தான் அவர் வருவார் என்றுவிட்டு அவ செல்ல நான் சித்தியை தேவையில்லாமல் ஏன் நிற்பான். போங்கோ. எக்ஸ்றே முடிந்ததும் நான் ஓட்டோவுக்குப் போன் செய்கிறேன். எனக்கு தண்ணீர் போத்தல் மட்டும் வாங்கித் தந்துவிட்டுச் செல்லுமாறு கேட்க ஓட்டோக்காரர் சென்று வாங்கி வருகிறார். அவர்கள் சென்றபின் மேலும் அரை மணிநேரம் யாரும் தாதிமார் வருவார்கள் என்று பார்த்தால் யாரையும் காணவில்லை. யாரும் இருக்கிறீர்களா என்று மூன்று தரம் பெலத்துக் கூப்பிட்டபின் ஒருதாதி வெளியே வந்து என்ன இடைஞ்சல் தருகிறாய் என்பதுபோல் பார்த்துவிட்டு சிங்களத்தில் ஏதோ சொல்கிறா. எனக்கு சிங்களம் தெரியாது என்று தமிழில் சொல்ல அவ உள்ளே சென்று இன்னொருவரை அனுப்புகிறா. என்னால் தொடர்ந்து இப்பிடி இருக்க முடியவில்லை. உடலெல்லாம் நோவாக இருக்கு. நான் படுக்கவேண்டும் என்கிறேன். எட்டாம் நம்பர் பெட்டுக்குப் போங்கோ என்கிறா. நான் எழுந்து நொண்டி நொண்டி அந்தக் கட்டிலைத் தேடிப் போக என்ன நம்பர் என்று அந்த வார்டில் பிள்ளையுடன் இருந்த பெண் கேட்கிறா. நான் 8 என்றதும் அந்த அம்மாவுக்குப் பக்கத்தில என்கிறா. நான் நடந்து சென்று கட்டிலை அண்மிக்கிறேன். கட்டிலில் ஒரு விரிப்புக்கூட இல்லை. ஏன் கட்டிலுக்கு ஒன்றும் விரிக்காமல் இருக்கினம் என்று கேட்க எனக்குப் பக்கத்துக் கட்டிலில் இருக்கும் முதிய பெண் நீங்கள் தான் பிள்ளை எல்லாம் கொண்டுவரவேணும். உங்களுக்குத் தெரியாதோ என்கிறா. நான் சித்திக்குப் போன் செய்து உணவும் படுக்கை விரிப்பும் ஓட்டோக்காரரிடம் கொடுத்துவிடுமாறு சொல்கிறேன். என்னால் இருக்கவே முடியவில்லை. நான் எப்போதும் ஒரு shawl- சால்வையையும் கழுத்தில் சுற்றிக்கொண்டுதான் போவது. அதனால் அதை எடுத்து கட்டிலில் விரித்துவிட்டு ஒரு பக்கமாக தலைக்கு கையைக் கொடுத்துக்கொண்டு படுத்ததுதான் தூங்கியும் விட்டேன். அக்கா எழும்புங்கோ என்று கூப்பிடுவதுபோல் கேட்க ஓட்டோக்காரர் இரு பைகளுடன் நிற்கிறார். எக்ஸ்றே எடுத்தாச்சோ என்று கேட்க இல்லை என்று தலையாட்டுகிறேன். நான் ஒருவாறு எழுந்து கட்டிலுக்கு விரிப்பை விரித்துவிட்டு மீண்டும் அமர அவர் உணவுக்கான பையைத் தந்துவிட்டு தாதிமார் நிற்குமிடம் சென்று எப்போது எக்ஸ்றே எடுப்பினம் என்று கேட்க இன்னும் ஒன்றரை மணித்தியாலம் செல்லும் என்று கூற அவர் வந்து என்னிடம் விடையத்தைச் சொல்லி அக்கா நீங்கள் சாப்பிட்டுவிட்டு இருங்கள். எல்லாம் முடிந்ததும் போன் செய்யுங்கோ என்றுவிட்டுப் போக வளவில் வேலை செய்பவரிடம் இருந்து போன் வருகிறது. அக்கா இப்பதான் அண்ணை சாப்பாடு கொண்டுவந்து தந்ததிட்டுப் போறார். மோட்டசயிக்கிளோட விழுந்து அடிபட்டிட்டுது எண்டு சொன்னவர். இப்ப உங்களுக்கு ஓகேயோ என்கிறார். ஓம் இன்னும் எல்லாம் முடியேல்லை என்றுவிட்டு அவர்களின் வேலை பற்றிக் கேட்க, அக்கா நன்றி அக்கா உதுக்குள்ளையும் சாப்பாட்டைக் கொண்டுபோய் குடுக்கச் சொல்லியிருக்கிறியள். நாங்கள் பாண் வாங்கிச் சாப்பிட்டிருப்பம் தானே என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார். அதனால் என்ன வடிவாச் சாப்பிட்டுவிட்டு வேலையைச் செய்யுங்கோ என்கிறேன். அதன்பின் நான் எனது உணவை எடுக்கிறேன். பக்கத்தில் இருக்கும் முதியவரை சாப்பிட்டிட்டீங்களோ என்று கேட்க இல்லைப் பிள்ளை. என்ர மகள் வாறன் எண்டவள். இன்னும் காணேல்லை என்றவுடன் கொஞ்சம் தாறன் நீங்களும் சாப்பிடுங்கோ என்றபடி அவரின் பதிலை எதிர்பாராது அவரிடம் ஒரு பெட்டியைக் கொடுக்க எந்த மறுப்பும் கூறாது வாங்கி உண்கிறார். அதன்பின் தூங்காது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து எப்போது என்னை அழைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்க, ஒருவர் சக்கர நாற்காலியுடன் வந்து என்னை அழைத்துப்போய் மீண்டும் கொண்டுவந்து விடுகிறார். மேலும் இரண்டுமணிநேரம் சென்றபின்னும் என் எக்ஸ்றே ரிசல்ற் வந்தபாடில்லை. அதில் ஒரு பெண் நிலத்தைச் சுத்தம் செய்துகொண்டிருக்க ஒருக்கா தாதி ஒருவரைக் கூப்பிட முடியுமா என்று கேட்க அவ அங்கு சென்று சொல்லியபின்னும் யாரும் வருவதாய்க் காணவில்லை.ஒருக்கா சிறுநீர் கழித்துவிட்டு வருவோம் என்று சென்றால் நாற்றம் எதுவும் பெரிதாக இல்லை என்றாலும் நிலமெங்கும் தண்ணீராக இருக்கு. மீண்டும் சென்று கட்டிலில் அமர்ந்தபின்னும் எவரையும் காணவில்லை. கணவர் இப்ப நித்திரையால் எழுந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டு போனை எடுத்தால் போனில் 2 % தான் பற்றறி இருக்கு என்று சிவப்பில் காட்டுது. கட்டிலுக்கு மேலே சார்ச் செய்வதற்கான இடம் இருப்பினும் எந்த வயரும் என்னிடம் இல்லை. நான் எங்கு சென்றாலும் power bank ஐ கொண்டுதான் செல்வேன். இன்று அது ஸ்கூட்டியுடன் போய்விட்டது. ஓட்டோக்காரருக்கு போன் செய்தால் தான் வேறு ஒரு சவாரியில் இருப்பதாகவும் உங்களுக்கு வேறு ஒருவரை அனுப்பிவிடவா என்று கேட்கிறார். வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றுவிட்டு மெதுவாக நொண்டியபடி தாதிமார் இருக்கும் இடத்துக்கு செல்கிறேன். அவர்களின் இடத்தில் ஒரு எல்லாம் போடக்கூடிய போன் வயர் இருக்க, எனது போனுக்கு சார்ச் இறங்கிவிட்டது. எனக்கு ஒருக்கா தரமுடியுமா என்கிறேன். அது தமது பாவனைக்குரியது அங்கு நாம் சாச் செய்ய முடியாது என்கிறார். கணவனுக்கு போன் செய்யவேண்டும். நீங்கள் சார்ச் செய்து தாருங்கள். வேண்டுமானால் நான் பணம் தருகிறேன் என்றவுடன் ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்துவிட்டு அப்படி எல்லாம் செய்ய முடியாது. இது ஒன்றும் தனியார் மருத்துவமனை இல்லை என்றுவிட்டு தன்பாட்டில் இருக்க இது தனியார் மருத்துவமனை இல்லையா என்கிறேன். அதனால் என்ன? நீங்கள் ஒரு உதவி செய்ய மாட்டேன் என்கிறீர்கள் என்று சிறிது பெரிதாகக் கேட்க அந்த நேரம் பார்த்து ஒரு இளம் வைத்தியர் வந்து அவவிடம் என்ன என்று கேட்க அவ சிங்களத்தில் அவருடன் கதைக்கிறா. உடனே நான் எனக்கு சிங்களம் தெரியாது அதனால் நீங்கள் என் பிரச்சனைதான் கதைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழில் எனக்கும் புரியும்படி கதையுங்கள் என்று சொல்கிறேன். அவவுக்கு தமிழ் வடிவாத் தெரியாது என்கிறார் வைத்தியர். அப்ப என்னுடன் தமிழில் தானே கதைத்தவ என்கிறேன். ஓகே இப்ப உங்கள் பிச்சனை என்ன என்கிறார். நான் போன்சார்ச் பற்றிச் சொல்ல, நீங்கள் கோவிக்கவேண்டாம். இதில சார்ச் செய்ய அனுமதி இல்லை என்றவுடன் நான் வெளியே செல்ல எனக்கே செல்கிறீர்கள் என்கிறார். நான் யாரையும் பிடித்து ஒரு சாச்சர் வாங்கப்போகிறேன் என்றபடி அவரின் அனுமதிக்குக் காத்திருக்காமல் மெதுவாக நொண்டியபடி நடக்க வெளிநாடுகளில் மருத்துவர்களும் தாதியர்களும் எத்தனை பண்பாக நடப்பார்கள் என எண்ணிப் பெருமூச்சு வருகிறது. நான் அன்றுதான் அந்த மருத்துவமனைக்கு முதன் முதலில் வந்ததாலும் சிறுவயதில் வெளிநாடு வந்துவிட்டதாலும் யாழ் மருத்துவமனைதான் அரசாங்க மருத்துவமனை என்று எண்ணியிருந்தேன். சித்தியும் யும் ஓட்டோக்காரர் சொன்னவுடன் எதுவும் பேசாததால் இங்கு வந்து மாட்டுப்பட்டாச்சே என எண்ணியபடிநடக்கிறேன். நடந்தது சரியான நோவெடுக்க அதில் இருந்த ஒரு இருக்கையில் யாராவது வருக்கிறார்களா என்று பார்த்தபடி இருக்க மருத்துவமனையில் வேலை செய்யும் ஒருவர் என்னைக் கடந்து செல்ல தம்பி எனக்கு ஒரு உதவி செய்கிறீர்களா என்று கேட்க, போனவர் நின்று என்ன என்கிறார். நான் விடயத்தைக் கூற பக்கத்தில ஒரு கடையும் இல்லை. ஒரு ஐந்து நிமிடம் போனால்தான் ஒரு கடை இருக்கு. பொறுங்கோ நான் என மோட்டார் சயிக்கிளைக் கொண்டுவாறன் என்றுவிட்டு எடுத்துக்கொண்டுவர நான் இரண்டாயிரம் ரூபாய்களை எடுத்துக் கொடுக்க அவர் சென்று வாங்கி வருகிறார். அவருக்கு 1000 ரூபாய்களைக் கொடுத்து தம்பி உங்கள் பெற்ரோல் காசுக்கு வைத்துக்கொள்ளுங்கோ என்று கூற வாங்கிக் கொள்கிறார். அவருக்கு நன்றி கூறிவிட்டு உள்ளே செல்ல இரண்டு வைத்தியர்கள் நிற்க என் ரிசல்ட் வந்துவிட்டதா என்கிறேன். அது நாளைக்குத்தான் வரும் என்கின்றனர். எனக்கு உடனே வெளிநாடு நினைவில் வர, எக்ஸ்றே எடுத்தது வர நாளையாகுமா என்கிறேன். இல்லை எக்ஸ்றேயை யாழ் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கு. நாளை தான் பார்த்துச் சொல்வார்கள் என்கிறார். உதை முதலே சொன்னால் நான் அப்போதே வீட்டுக்கு சென்றிருப்பேனே என்றுகூற உங்களுக்கு இங்கு பதிவு போட்டாச்சு. நாளை பெரிய மருத்துவர் வரும்வரை நீங்கள் போக முடியாது என்கிறார். நான் இன்று இரவு இங்கு தங்க முடியாது. போய்விட்டு நாளை காலை வருகிறேன் என்று பெரிய மருத்துவர் வந்துதான் உங்களை டிஸ்சார்ச் செய்யமுடியும் என்றுவிட்டு அவர் சென்றுவிட நான் சென்று போனை சார்சில் போடுகிறேன். அந்த நேரம் அங்கு வந்த தாதி நீங்கள் எட்டுமணிக்குப் பிறகுதான் சார்ச் போடலாம் என்கிறா. ஏன் இப்ப போட்டால் என்ன என்று கேட்க கரண்ட் காசு கூட வரும் என்கிறா. நானோ அதைக் கழற்றாமல் எனக்குக் கட்டாயம் போன் செய்ய வேணும் என்றுவிட்டு இருக்க, அவர் கோபமாக வேகமாகச் செல்கிறார். அவருடன் சேர்ந்து இன்னொரு தாதியும் வந்து இப்ப போடக் கூடாது என்கிறா. எனக்கு இத்தனை நேரம் அடக்கிவைத்த கோபம் மேலெள நீங்கள் மனிதர்களா?? ஒரு மனிதாபிமான உதவிகூட செய்யாமல் இப்பிடி காட்டு மிராண்டிகள் போல நடக்கிறீர்கள். நான் இங்கு நிற்க முடியாது என்கிறேன். நீங்கள் இன்று போக முடியாது என்று கூறிவிட்டு இருவரும் செல்கின்றனர். நான் போனை எடுத்துப் பார்க்க சிறிது சார்ச் ஏறியிருக்க, என் தங்கையின் கணவனுக்கு போன் செய்து விடயத்தைக் கூற அக்கா ஒரு மணித்தியாலம் பொறுங்கோ வாறன் என்று கூறிவிட்டு போனை வைக்க நானும் மனதுள் கறுவியபடி எதுவும் செய்ய முடியாது காத்திருக்க என் தங்கையின் கணவர் இரண்டு மணி நேரத்தில் பின் வர இருட்டியும் விடுகிறது. அவர் வந்து நான் கதைச்சுப் பார்க்கிறன் அக்கா என்றுவிட்டு அங்கு நின்ற வைத்தியாரிடம் வீட்டுக்குப் போவதைப் பற்றிக் கூற அவரும் மறுத்துவிட நான் அவர்களிடம் சொல்லாமலே போவம் செய்வதைச் செய்யட்டும் என்கிறேன். அவர் என் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வர நானும் அவருடன் வந்து தாதிமார் இருக்கும் இடத்தடிக்கு வர போன் சார்ச் போட வேண்டாம் என்று சொன்ன தாதி நிற்க, நான் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறிவிட்டு அவர் ஏதோ சொல்ல அதைக் காதில் வாங்காது வெளியே வருகிறேன். அதில் நின்ற ஓட்டோவில் என்னை ஏறச் சொல்லிவிட்டு அவர் பின்னே வர வீடு வந்து அடுத்தநாள் மாலைவரை காத்திருந்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஒரு அரைமணிநேரக் காத்திருப்புக்குப் பின் எக்ஸ்றே எடுத்து அடுத்த பத்து நிமிடத்தில் காலில் முறிவு ஒன்றும் இல்லை என்று மருத்துவர் கூறி பாண்டேச் போடும்படி கூறி மருந்தும் எழுதித் தர ஆக 2800 ரூபாய்கள் தான். அடுத்தநாள் முழங்காலுக்கும் பாதத்துக்கும் பாண்டேச் 10000 ரூபாய்களுக்கு வாங்கி அணிந்து இரண்டு நாட்களின் பின் மீண்டும் ஓட்டோவில் வளவுக்குச் சென்று வந்து ஒருமாதம் முடிந்தபின் தான் மீண்டும் ஸ்கூட்டியை எடுத்து ஓட ஆரம்பித்தது.
  19. சின்னக் காரே வாங்கி ஓடலாம். அதுதான் அதிக பாதுகாப்பு. சொந்த பிளைட் வாங்கிற வசதி இருந்தால் பிறகேன் ஒரு இடத்தில போய் இருக்கவேணும் ????😃
  20. உங்கள் பிள்ளைகள் உயர்கல்வியை முடித்து வேலையில் சேரும்வரை, கடைசிப் பிள்ளைக்கு 24 வந்தபின்தான் நீங்கள் அங்கு போவது நல்லது.
  21. ஆனாலும் ஓட்டோவில் சாய்ந்து காயாகப் போவதுபோல் வருமா?? நினைத்த இடத்தில் இறங்கலாம் ஏறலாம். அது ஒரு தனி சுகம். ம்க்கும் நன்றி
  22. அந்த ஸ்கூட்டி பாரம் என்றபடியால்தான் கனதூரம் போய் சேதப்படாமல் கீறலுடன் நின்றுவிட்டது. நான் இப்பதான் ஏன் உவவளவு பணத்தை அதில் முடக்கினேன் என்று கவலைப்படுறன். ஆனாலும் வாங்காது இருந்திருந்தாலும் வாங்கி ஓடியிருக்கலாம் என்று மனம் அலைபாய்ந்திருக்கும். என் பயணக் கட்டுரைக்கு அழகுசேர்ப்பதே உங்கள் ஓவியங்கள் தான். மிக்கநன்றி அண்ணா. மாலை போடாமலே இத்தனை நாள் ஓடினது. குடுத்த விலைக்கு அசரவில்லை அது. உங்களுக்குக் கொஞ்சம் கூட பொறுமை இல்லை 😀
  23. பதினேழு இடையில எழுதினதை விட்டிட்டு வேறு ஒண்டுக்கு வாறன். இணுவிலில இருந்து வாங்கிய வீட்டுக்குப் போவதற்கு ஒவ்வொருதடவையும் 2000 கொடுக்கிறதாலை எதுக்கும் நீ ஒரு ஸ்கூட்டி எடுத்து ஓடன் எண்டு மனிசன் சொல்ல எனக்கும் ஆசை பிடித்துக்கொண்டுது. ஆரைப் பார்த்தாலும் ஸ்கூட்டி. மோட்டார் சயிக்கிளோ அல்லது ஸ்கூட்டி இல்லாத வீடே இல்லைஎண்டு சொல்லலாம். பக்கத்தில இருக்கிற கடைக்குப் போறதுக்கும் நடக்காமல் விசுக்கெண்டு அதிலதான் போயினம். பெண்கள் பின்னால் இரண்டு பிள்ளைகள், முன்னால் ஒரு பிள்ளையை நிக்கவச்சு லாவகமா ஓட்டிக்கொண்டு போறதைப் பார்க்க எனக்கே ஆச்சரியம். காலையிலும் மாலையிலும் பள்ளிக்கூட வாசலைப் பார்த்தால் ஸ்கூட்டிகள் தான். நான் 34 ஆண்டுகளாகக் கார் ஓடுறன். உது ஒடுறது பெரிய வேலையோ எண்டு நினைச்சு நானும் கணவரின் தம்பி மகனுமாக கடை கடையாய் ஏறி இறங்கி ஸ்கூட்டி தேடினால் எல்லாம் படு விலை. ஆறு ஏழு இலட்சங்களுக்குக் குறைய ஒன்றுகூட இல்லை. நீங்கள் நிக்கப்போறது இன்னும் நாலோ ஐந்து மாதங்கள் தானே சித்தி. பழசை வாங்கி ஓடிப்போட்டு விட்டுட்டுப் போனாலும் நட்டம் இல்லை என்று கூறி தனக்குத் தெரிந்த சிலரிடம் கூறி ஒரு ஸ்கூட்டியைக் கண்டுபிடிச்சம் கொக்குவிலில். போய் பார்த்தால் வெள்ளை நிறம். சின்னன். இருந்து பார்த்தால் கால் நிலத்தில வடிவா முட்டுது. என்ன ஒகேயா சித்தி என்றுவிட்டு நாளை இணுவிலில் உள்ள ஒரு கறாச்சின் பெயரைச் சொல்லி கொண்டுவரச் சொல்லியாச்சு. விலை மூண்டு லட்சம் என்று தொடங்கி இரண்டு லட்சம் என்று முடிவாச்சு. நானும் நாளைக்கு வாங்கினால் இரண்டு மூன்றுநாட்கள் ஓடிப் பழகி ஓடலாம் என்ற கற்பனையில் கணவரிடம் சொல்கிறேன். 2 லட்சம் என்றால் சரியான பழைய மொடல் போல இருக்கே என்ற கணவர் தமையனின் மகனுக்கு போன் செய்து விசாரிக்க, ஓம் சித்தப்பா அந்த மொடலுகள் பழுதானால் திருத்த பாட்ஸ் எடுக்கிறதுதான் கஸ்டம் என்கிறார். அப்ப அதை வாங்க வேண்டாம் என்றுவிட்டு தான் ஒரு youtube வீடியோ ஒன்றை எனக்கும் பெறாமகனுக்கும் அனுப்புகிறார். விலை ஐந்து இலட்சத்துக்கு ஒரு ரூபாய் குறைய. ஏன் இவ்வளவு காசுக்கு என்கிறேன் நான். நங்கள் இனி அடிக்கடி போகத்தானே போறம். உது இரண்டுபேர் போகவும் வசதிபோல இருக்கு என்று உடனே பணத்தை அனுப்பிவிட அடுத்தநாளே அதை வாங்கியாச்சு. மூன்று நாட்களுக்கு நீங்கள் ஓடலாம். அதன் பிறகு ஒரு வாரத்தில் புத்தகம் வந்துவிடும். ரோட்டக்ஸ் கட்டியபின்தான் ஓடலாம் என்றனர். இப்போதெல்லாம் பிரதான வீதிகளில் மட்டுமன்றி சிறிய உள் வீதிகளில் கூட போலீஸ் நின்று வாகனங்களை மறித்து சோதனை செய்வது வழக்கமாகிவிட எதுக்கும் மூன்று நாளில் நீங்கள் பழகிவிடுவியள் சித்தி என்று பெறாமகன் உற்சாகப்படுத்த அவரையும் கூட்டிக்கொண்டு ஒரு விளையாட்டு மைதானத்துக்குப் போகிறேன். மழை பெய்த தண்ணீரும் சில இடங்களில் தேங்கி நிற்க நான்கு மாடுகளும் கட்டப்பட்டிருக்க எனக்கோ பயம் பிடித்துக்கொண்டது. இண்டைக்கு நீங்கள் கனக்க ஓடமாட்டியள் என்று என்னிடம் ஸ்கூபியைத் தந்தால் பயங்கரப் பாரம். ஆனாலும் ஒருவாறு நேராகப் பிடித்து மெதுவா ஒரு ஆறு சுற்றுச் சுற்றிவர பயத்தில் போதும் இன்று என்றுவிட்டு போய்விட்டோம். அடுத்தநாளும் ஒரு அரை மணித்தியாலம் இடதுபுறம் வலதுபுறம் திருப்பிப் பழகி றோட்டில ஒடுவம் சித்தி என்கிறார். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எல்லாம் சிறிய வளைவுகளுடன் கூடிய ஒழுங்கைகள். எனக்கு அங்கு ஓடுவதை எண்ணவே பயமாகவும் இருக்கு. ஒரு எல் போட் போட்டு ஒடுவமோ என்றுகேட்க அவர் விழுந்து விழுந்து சிரிக்க எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்க உங்களுக்கு 8 வருட லைசென்ஸ் தந்திருக்கிறாங்கள். பிறகு போலீஸ் மறிச்சால் தேவையில்லாத பிரச்சனையாயிடும் என்றதும் தான் எனக்குப் புரிய ரோசமும் வருகிறது. மூன்று நாட்கள் முடிந்தபின்னும் புத்தகம் வரவில்லை. அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள் என்கின்றனர். இரு வாரங்கள் இந்தா வருது. அந்தா வருது என்றுவிட்டு அது தொலைந்துவிட்டதாம். புதிதாக அனுப்புகிறார்கள் இன்னும் இரண்டுநாட்கள் பொறுங்கோ என்றபின் நான் போனில் குடுத்த கரைச்சலில் மூன்றுவாரமாகியும் புத்தகம் வராமல் இருக்க அதன் கொப்பியை வற்சப்பில் அனுப்பிவிட கொண்டுபோய் ரோட்டக்ஸ் எடுத்தாச்சு. முதல்முதல் றோட்டில ஓட மிகவும் மெதுவாக ஓடிக்கொண்டுபோக என்னை முந்திக்கொண்டு சின்னப் பெடியள் சயிக்கிளில என்னை சிரித்தபடி முந்திக்கொண்டுபோக நானோ அசரவில்லை. எல்லாத் தொடருந்துப் பாதைகளும் மீண்டும் போடும்போது மிக உயரமாகவே போட்டுள்ளதால் அதில் நின்று ஏற்றத்தில் திருப்ப பயந்து முதலே இறங்கி ஸ்கூட்டியை உருட்டிக்கொண்டுபோய் அந்தப்பக்க நேர் வீதியில் மீண்டும் ஏறி உரும்பராய் சந்திவரை 35 ,40 இல் ஓடி சந்திகழிய பெரிதாக வாகனங்கள் முன்புபோல் இல்லை என்பதனால் 50 வரை ஓடி முடிச்சு, கணவருக்கோ மனிசி காசு மிச்சம் பிடிக்கிறாள் என்ற மகிழ்ச்சி. இப்பிடியே ஒருமாதம் இணுவிலுக்கும் வீட்டுக்கும் போய்வர வீட்டு வேலைகளும் நடக்க அடுத்தநாள் வருடப்பிறப்பு. காணியில் தேவையற்ற மரங்கள் பல முளைத்திருந்தன. அதனால் காணியை சுத்தப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்க அடுத்தநாள் புதுவருடம் என்பதால் வேலையை நிறுத்துவோம் என்றவுடன் இல்லை நாங்கள் வேலைக்கு வருகிறோம். வீட்டில நிண்டு என்ன செய்யிறது என்றார்கள். காணியில் வேலை செய்பவர்களுக்கு 3000 ரூபாய்கள் நாட்கூலி என்பதனால் உணவை அவர்களே கொண்டு வருவார்கள். சிலவேளைகளில் அவர்களுக்கு உணவு கொண்டுவர வேண்டாம் என்றுவிட்டு நான் கொண்டுபோவேன். அவர்கள் மகிழ்வுடன் உண்பதைப் பார்க்க ஒரு திருப்தி இருக்கும். நாளைக்கு ஒரு ஆடு அடிச்சு சமைச்சுக்கொண்டு வாங்கோ என்றார்கள் பகிடிக்கு. நானும் ஒன்றென்ன இரண்டே அடிச்சால் போச்சு என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். நாளை அவர்களுக்கு ஆட்டுக்கறி காய்ச்சிக் கொடுத்தால் என்ன என்று யோசனை எழ அடுத்தநாள் காலையில் ஏழு மணிக்கே எழுந்து மருதனார்மடம் சென்று பெற்றோல் அடித்துக்கொண்டு சந்தையில் மரக்கறிகளும் வாங்கியபின் இணுவில் சந்தைக்குச் சென்றால் மூன்று ஆடுகள் கட்டித் தூக்கி இறைச்சி வாங்க சரியான சனம். 20 நிமிடக் காத்திருப்புக்குப் பின்னர் 6000 ரூபாய்களுக்கு இறைச்சி வாங்கிக்கொண்டு வந்து கழுவி வெட்ட வெறுத்துவிட்டது. ஏனெனில் லண்டனில் எல்லா இறைச்சியுமே சமைக்கும் பதத்துக்கு வெட்டித் தருவதால் இருபது ஆண்டுகளின் பின்னர் வெட்டுவது கொடுமையாக இருக்க, நல்ல காலம் லண்டனில் இருந்தே கத்தி வெட்டும் பலகை எல்லாம் கொண்டு சென்றதில் தப்பித்தேன் என்ற எண்ணம் எழுந்தது. மிகச் சுவையாக இறைச்சி, கத்தரிக்காய் பால்கறி, பருப்பு, வெங்காயமும் தக்காளிப்பழமும் தயிரும் போட்ட சம்பல் என்று செய்து லண்டனில் இருந்து கொண்டுபோன உணவுகள் கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பெட்டிகளில் போட்டு,பாஸ்மதி அரிசி இரண்டு கிலோ வாங்கி அதைச் சமைக்காது அங்கு கொண்டுசென்று சுடச்சுட அரிசியைச் சமைத்து அந்த வீட்டில் உள்ள இருவருக்கும் கொடுத்து உண்ணலாம் என்ற எண்ணத்தில் கறிகளை ஸ்கூட்டியில் பொருட்கள் வைக்க இருக்கும் இடத்தில் வைத்து மூடி சரியாக ஒன்பது மணிக்கு ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாச்சு. ஆறேழு வளைவுகளில் வளைந்து நிமிர்ந்து தொடருந்துத் தடத்துக்கு அருகே செல்லும் வீதியால் சென்று பிரதான வீதிக்கு ஏறமுதல் இருபக்கமும் பார்த்துக்கொண்டிருக்க வாகனங்கள் வந்தபடி இருக்கின்றன. சாதாரணமாக நான் வலது பக்கம் திரும்பவேண்டும். இறங்கி உருட்டிக்கொண்டு போய் மற்றப்பக்கம் நின்று ஏறுவதுதான் வழமை. மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்றாலும் ஒரு மாதமாக ஓடுகிறேன். இன்று ஒருக்கா உருட்டாமல் அதில் நின்று அப்படியே திருப்புவோம் என எண்ணி இருபக்கமும் பார்க்க தூரத்தில் ஒரு வாகனத்தைத் தவிர வேறு வாகனங்களைக் காணவில்லை. இதுதான் சரியான நேரம் என எண்ணி அக்சிலேற்றரைத் திருப்பியவுடன் ஸ்கூட்டி பாய்கிறது. நான் தண்டவாளத்தில் தூக்கி எறியப்பட என்முகம் கற்களில் தேய்ந்தபடி செல்வது தெரிய, அந்த நிலையிலும் நிவேதாவுக்கு இனி முகம் இலை என்று மனம் எண்ணுகிறது. ஒரு நான்கு மீற்றர் தூரம்வரை சென்றபின் நின்றுவிட இரு கைகளிலும் சிறு காயங்கள். என்னை யாரோ இருவர் நிமிர்த்தி இருத்த உடனே என் முகத்தைத் தடவக் கையைக் கொண்டுபோகிறேன். தலைக்கவசத்தின் பிளாஸ்டிக் மூடி கையில் பட என் முகத்தில் கீறல் எதுவும் படவில்லை என்று மனதுக்கு அசுவாசமாகிறது. இருந்தாலும் கையை விட்டுத் தடவிப் பார்த்து எதுவும் ஆகவில்லை என்று நிம்மதி ஏற்பட, தங்கச்சி எழும்புங்கோ என என் கைகளைப் பிடித்து இருவர் தூக்குகின்றனர். கால் நோவெடுக்கிறதுதான் என்றாலும் தெரியாதவர்கள் முன் தண்டவாளத்தில் இருப்பது அவமானமாகப்பட, முயன்று எழும்பி அவர்கள் பிடித்தபடி வர, நல்ல காலமடா அக்காவுக்கு கால் முறியவில்லை என்று ஒருவர் சொல்வது கேட்கிறது. அருகில் இருக்கும் கடைக்கருக்கே செல்ல ஒருவர் ஒரு கதிரை கொண்டுவந்து தர அமர்கிறேன். கண்களிரண்டும் கலங்கலாகி எதுவுமே தெரியாமல் கண்களை மூடியபடி சாய, அக்கா நீங்களோ? என்று எனது உறவினர் ஒருவரின் குரல் கேட்கிறது. அவர் யார் என்று புரிந்தாலும் கண்ணைத் திறந்து பார்க்க முடியாமல் இருக்கு. நான் வேறை யாரோ எண்டு நினைச்சுத்தான் போன்னான். பிறகும் மஞ்சள் நிற ஸ்கூட்டி என்றவுடனதான் நீங்களாய் இருக்குமோ என்று திரும்பி வந்தனான் என்கிறார். கண் திறக்க ஏலாமல் இருக்கு, தலை சுத்துது என்றதும் கடையில் தண்ணீர் போத்தல் ஒன்று வாங்கி என்னைக் குடிக்கச் செய்தபின் இப்பிடியே இருங்கோ அக்கா நான் போய் உங்கட சித்தியைக் கூட்டிவறான் என்றபடி செல்கிறார். ஸ்கூட்டி எங்கே என்றதற்கு பக்கத்திலதான் நிக்குது அக்கா. இந்தாங்கோ திறப்பு என்று என் கைக்குள் திறப்பை வைக்கிறார். என் கைப்பையின் நினைவு வர அதையும் என்னிடம் தந்துவிட்டு கடைக்காரரிடம் பார்த்துக்கொள்ளுங்கோ வாறன் என்றுவிட்டுச் செல்கிறார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.