Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவு நதியின் மேல் வீசப்பட்ட கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நதியின் மேல் வீசப்பட்ட கல் - எஸ்.வி.வேணுகோபாலன்

mammutty-book_thumb3.jpg?imgmax=800

மூன்றாம் பிறை, வாசித்துவிட்டு அடுத்த வேலைக்குச் செல்ல வைக்கிற புத்தகம் அல்ல. யாரிடமாவது அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை என்று ஆக்கி வைத்துவிட்ட அந்தப் பிரதியைப் பற்றி என்ன சொல்ல.... அல்லது சொல்லாது எப்படி இருக்க?

மலையாள நடிகர் மம்முட்டி (பிரபல என்ற வழக்கமான அடைமொழியை அந்த நூலின் வாசிப்பு தவிர்க்க வைத்திருப்பது அவரது நூலின் ஆளுமை!) அவர்களது சுயசரிதைப் பிரதியான காழ்ச்சப்பாடு நூலின் மொழிபெயர்ப்பு தான் மூன்றாம் பிறை. வம்சி புக்ஸ் வெளியீடு.

மம்முட்டியின் எளிமை எப்போதும் பேசப்படும் ஒன்று. அதை அவரது நூலும் பேசுவதுதான் ரசமானது. அடிக்கொருதரம் தான் யார் என்று தன்னை அகக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் அவரது எழுத்தின் மொழிபெயர்ப்பே இத்தனை கவிதையாய் ஒலிக்குமானால், மலையாளத்தில் அது எப்படி வசீகரிக்கும் என்று அறிந்துகொள்ள நெஞ்சு சிறகடிக்கிறது.

வளர்ந்த பிறகும் ஒரு மனிதர் குழந்தை போன்ற உள்ளத்தோடு விஷயங்களை அணுக இயலுமானால் அது வாழ்க்கை அவருக்குக் காட்டும் கருணை என்றே கொள்ள வேண்டும். தவறுகளுக்கு நாணும் தன்மையும், அவற்றைக் கூச்சமின்றி சபையில் எடுத்து வைத்துத் தலைக் குனிவோடு அதிலிருந்து விடுதலை பெற்று வெளியேறும் துணிவும் வாய்ப்பது இயற்கையின் வரமாகவே இருக்க வேண்டும். அடுத்தவரது அதிகார அத்துமீறலை, போலித்தனத்தை, கூசாது பொய்யுரைப் பதை சலனமற்ற ஓடை ஒன்றின் தெள்ளிய நீரைப் போல் தனது கருத்தை அதில் தோய்த்தெடுக்காது பிரதிபலிக்கிற மம்முட்டியின் பக்குவம் இரந்து கோள் தக்கதுடைத்து. 'தன்னை நேசிப்பவரை நாய் நேசிக்கும், பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே' என்ற மகாகவி கலந்து வாழ்கிற பக்கங்கள் இருக்கின்றன இந்தப் புத்தகத்தில்.

தாம் என்னவாக இல்லையோ அதையும் சொல்லி, அப்படி இருக்கலாமே என்று அடுத்தவரோடு சேர்ந்து நின்று உறுதியெடுக்கும் இடங்கள் இந்தப் புத்தகத்தில் மகத்துவம் பெறும் பக்கங்கள்.

கல்லூரி நாட்களில் தமது பெயர் குறித்த அவஸ்தையின் பழைய நினைவு கூரலில் தொடங்கும் அவரது பயணம், விதவிதமான மனிதர்களின் நுழைவையும், அவர்களது வாழ்வில் இவரது நுழைவையும் கலந்து பேசிக்கொண்டு செல்கிறது. நன்றி பாராட்டும் போது மறக்காத பெயர்கள், நன்றி கொன்றவர்களைச் சொல்லும் இடத்து நாகரிகத்தோடு அடையாளமின்றி அடுத்த வரிக்குச் சென்றுவிடுவது கவனத்திற்குரியதாகிறது.

இளம் வக்கீலாக இயங்கிக் கொண்டிருக்கும் இவரை, இவரது முக வசீகரத்தைப் பார்த்து இவருக்குள் ஏற்கெனவே இருக்கும் நடிப்பு தாகத்தை மேலும் தீவிரமாக்குவது மாதிரி, “நீங்கள் ஏன் சார் சினிமாவிற்குச் செல்லக் கூடாது” என்று கேட்கிறான் வழக்கு பற்றி கேட்க வந்த இளம் வாலிபன் ஒருவன். பின் இவரது திரைப் பிரவேசம் நடந்து, ஒரு படப்பிடிப்பு நேரத்தில் சூழ்கிற கூட்டத்தைக் காவல்துறை புகுந்து அடித்து விரட்டும் போது அந்தக் கூட்டத்தில் ரத்தம் தோய்ந்த முகத்தோடு இவரைப் பார்த்துத் தொலைவிலிருந்து வாழ்த்திவிட்டுப் போகும் அதே வாலிபனைப் பார்த்து மம்முட்டி அதிர்வதும், தனது முதல் ரசிகன் அவனே என்று பதிவு செய்வதும் வித்தியாசமான ஓர் அனுபவம்.

வேறு ஒரு சூழலில், மிகவும் பரிச்சயமானவள் போல வந்து பழகிவிட்டுப் போகும் முதியவளும், அவர் ஏற்று நடித்த பாத்திரத்தின் உண்மை உருவமான ஆக்ஷன் பாபுவும் (‘யதார்த்த வாழ்வில் வில்லன் யார், ஹீரோ யார்?’) தமக்கு எல்லாமாக இருந்து திரிந்து பிரிந்து பரிதாப மரணத்தை எய்துகிற உயிர் நண்பன் ரதிஷும்.....போலவே, நீதிமன்றத்தின் வெளியே பிரித்து வைக்கப்பட்டிருந்து, பரஸ்பரக் காதல் மனசு - அடைக்கும் தாழ் இன்றிப் புன்கணீர் பூசல் தருவதாய் ஒன்றிணைத்து விட காதல் இருவர் கருத்தொருமித்து வெளியேறும் மூத்த தம்பதியினரும், மம்முட்டியின் வாழ்வில் வந்து போகிற பிறரும் என்றென்றும் வாசிப்போர் அருகிலேயே குடியிருப்பார்கள் என்றே படுகிறது. அத்தனை அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் ஆர்ப்பாட்டமற்ற பதிவு வியப்பூட்டுகிறது.

தம்மை இன்னும் அடையாளம் தெரியாத மனிதர்கள் புழங்கும் அதே பூமியில்தான் மிகப் புகழுடன் தான் இருப்பதான உலா வருகிறோம் என்று ஓர் இடத்தில் அவர் சொல்வது, அவரது பிரகடனம் போலவே ஒலித்தாலும், ஒரு ஞானியின் தெறிப்பு அதில் காணப்படுகிறது. சம காலத்தில் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருக்கும் மெல்லுணர்வுகள், மனிதப் பண்புகள், பரஸ்பரம் மன்னிக்கும் பேராண்மை.... எல்லாவற்றையும் பற்றிப் பேச வாழ்க்கை அவருக்கு சிறப்பான அனுபவத்தையும், அதைவிட அவற்றை

எடுத்துரைக்கும் தேர்ச்சியான மொழியையும் அருளியிருக்கிறது.

“என் காதல் ஒரு கள்ள நாணயம்”, “லஞ்சத்தின் வேர்”, “சொர்க்கவாசல் திறக்கும் இரவு”, “கடவுள் கண் மூடிக் கொள்ளும் தருணம்”, “துயரத்தின் பாடல்”....என இருபத்து மூன்று உட்பகுதிகளின் தலைப்புகளே, பேசுகிற மனிதரது உளவியலின் பக்கங்களை எடுத்து வைக்கின்றன: காதலைப் பற்றி, கடவுளைப் பற்றி, நோன்பைப் பற்றி, கம்ப்யூட்டரைப் பற்றி, ஆபத்துக் காலத்தில் எதிர்பாராது வந்து உதவும் தன்மைகளைப் பற்றி...தமது சொந்த வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகளின் பின் புலத்திலிருந்து படரும் சிந்தனைகளை அப்பட்டமாக எடுத்துவைக்கிறார் மம்முட்டி.

ஒரு புன்னகை, கொஞ்சம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேர்மையாகப் புறப்படும் கண்ணீர், வசீகர சிரிப்பு, ஒரு குழந்தையின் கெஞ்சல், ஒரு ஞானியின் வாக்கியம், ஒரு திருந்திய மனத்தின் கேவல், ஒரு தடுமாறிய புத்தியின் அவசர வழி மீட்பு, ஒரு மன்னனின் கம்பீரம், ஒரு கொடையாளியின் தன்னடக்கம், ஒரு காதலனின் மன்னிப்பு கோரல், ஒரு நிம்மதிப் பெருமூச்சு, ஒரு பிரார்த்தனை, ஒரு சூளுரை.... இவை ஒவ்வொன்றும், இவை எல்லாமும் ஒளிரும் வித்தியாசமான அனுபவப் பகிர்வு இந்த நூல்.

மம்முட்டி அருகே உட்கார்ந்தபடி தமது வேட்டியின் நுனி காற்றில் பறக்கத் தமது புருவம் உயர்த்திய பார்வையோடும், நினைவு நதியின் மீது அதைக் கலைத்துவிடாத கவனத்தோடு அன்பின் சிறு கல்லை வீசியபடியும் அப்படியே என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த சுய சரிதையாகவே ஒலித்தது எனக்குள் இந்த வாசிப்பு.

கே. வி. ஷைலஜாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி இப்படி ஒரு வாக்கியத்தில் சொல்லலாம்: மம்முட்டி இதைத் தமிழில் தாமே சொல்லிவிட்டுப் பின்னர் தான் தமது சொந்த மொழியில் அவராக எழுதியிருப்பார் என்று கொள்ளலாம் போலிருக்கிறது. மிகச் சில இடங்களில் தமிழுக்கு மாற்ற வேண்டாமே என்று அப்படியே மலையாள (வடமொழியைச் சார்ந்த) சொற்களையே விட்டுவிட்ட இடங்களிலும் கூட (நித்ய யௌவனம்!) வாசிப்பிற்கு இடையூறு செய்யாத, குற்றம் சொல்ல முடியாத மொழி பெயர்ப்பு...

மிகக் குறைவான எழுத்துப் பிழைகளையும் மீறி, பரந்த நட்பு வட்டத்தோடு பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் வாசிப்பு இன்பத்தை வழங்கும் அருமையான நூலாக்கம். நூலின் இலக்கிய, மனிதநேய உள்ளடக்கத்திற்கு வரவேற்பு கூறும் ரசனை மிகுந்த முகப்பு.

-எஸ்.வி.வேணுகோபாலன்

மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்

-மம்முட்டி

வம்சி புக்ஸ், 19 டி எம் சாரோன்,

திருவண்ணாமலை | பக்: 128 | ரூ.80

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய் தான் நேசித்தவரை நேசிக்கும்.  

Edited by KuLavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.