Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தமிழர் பாரம்பரியத்தின் மற்றுமொரு சான்றாக 'கூட்டத்தார் கோவில்'

Featured Replies

வலிகாமம் யாழ்ப்பாணத்தில் தொன்மையான பாரம்பரிய வரலாறு கொண்ட பிராந்தியம் என்பதை அங்கு கிடைத்து வரும் தொல்லியல் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. சிகிரியா குகையோவியத்தில் உள்ள கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம் ஒன்று வலிகாமத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே இருந்த உறவு பற்றிக் கூறுகிறது.

12 ஆம் நூற்றாண்டில் வலிகாமத்தில் உள்ள துறைமுகம் சோழரின் கட்டுப்பாட்டில் இருந்ததை தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. 13 ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் அரசமைத்த கலிங்கமாகனின் முக்கிய படைத்துறைகளில் ஒன்று வலிகாமத்தில் இருந்ததாக சூளவம்சம் கூறுகிறது.

126.jpg

http://www.virakesari.lk/news/admin/images/126.jpg

அக்காலத்தில் முக்கிய குடியேற்றங்கள் நிகழ்ந்த இடங்களாக வலிகாமத்தில் உள்ள மயிலிட்டி, தெல்லிப்பளை, இணுவில், தொல்புரம் ஆகிய இடங்களை யாழ்ப்பாண அரசு காலத்தில் ஏற்பட்ட குடியேற்றங்கள் பற்றிக் கூறும் கைலாயமாலை கூறுகிறது. யாழ்ப்பாண அரசுகால நிர்வாகத்தில் வலிகாமம் மிகப்பெரிய நிர்வாக மையமாக இருந்ததாகக் கூறும் வைபவமாலை இக்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய இடங்களுக்குமான வணிக, போர்த் தொடர்புகள் வலிகாமத்தில் உள்ள காங்கேசன் துறைமுகம் ஊடாக நடந்தாகக் கூறுகிறது.

இத்தகைய பல வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்ட வலிகாமத்தின் தொன்மை வாய்ந்த ஆலயங்களை ஆவணப்படுத்தும் பணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியற் பிரிவு ஆசிரியர்களான இக்கட்டுரை ஆசிரியர், விரிவுரையாளர் செல்வி. சசிதா குமாரதேவன் ஆகியோர் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்தப்பயணத்தில் வீரகேசரி நிறுவன ஊடக இணைப்பாளர் திருமதி. உமா பிரகாஷ் இணைந்து கொண்டார்.

மேற்குறிப்பிட்ட கிராமங்களில் வாழ்ந்த மக்கள் போரின் காரணமாக அங்கிருந்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேறிவிட்டதால் அவ்விடங்களுக்கு இலகுவாகப் போக்குவரத்துச் செய்ய முடியவில்லை. பிரதான வீதிகளில் பயணிக்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி கிராமத்து வீதிப் பயணங்களில் காணமுடியவில்லை. பல குடியிருப்புக்கள் இருந்த இடம் தெரியாது தொலைந்துவிட்டன.

சமீபகாலங்களில் அங்கு மீளக்குடியேறிய மக்கள் தமது வாழ்விடங்களைவிட தமது பாரம்பரிய வழிபாட்டு ஆலயங்களை பாதுகாப்பதற்காக புதுப்பித்துக் கட்டுவதில் அல்லது அதேபெயரில் புதிய ஆலயங்களை அமைப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். அவ்வாறான ஆலயங்களில் ஒன்றுதான் இளவாலையில் உள்ள 'கூட்டத்தார்' ஆலயமாகும். இந்த இளவாலை வசந்தபுரம் 'கூட்டத்தார் ஆலயம்' பற்றி அக்கிராமத்தைச் சேர்ந்த திரு. நாகன் என்பவர் சுவைபடக் கூறினார். இப்பெயர் சம கால ஆலய வழிபாட்டில் எமக்கு அதிகம் பரீட்சயமற்றதாக இருந்ததால் அவ்வாலயத்தையும், அப்பெயர் ஏற்பட்டதற்கான காரணங்களையும் ஆராய வேண்டும் என்ற ஆர்வத்தை எமக்கு ஏற்படுத்தியது.

போர் நடந்த காலத்தில் குண்டுத்தாக்குதலில் அழிவடைந்த ஆலயங்களில் கூட்டத்தார் ஆலயமும் ஒன்றாகும். பழமை வாய்ந்த மிகப்பெரிய ஆலமரங்களுக்கு கீழே காணப்படும் இவ்வாலயம் ஏறத்தாள பதினைந்தடி நீளமும், ஆறு அடி அகலமும் கொண்டது. மேலும் சிறிய கர்ப்பக்கிருகத்தையும், அதன் முன்னால் அந்தராளத்தையும் கொண்டுள்ளது. இவ்வாலயம் அப்பிரதேசக் கடற்கரைப்பகுதில் கிடைத்த கோறல் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதன் மூலம் அதன் வரலாற்றுப் பழமையை உணரக் கூடியதாக இருக்கிறது.

தற்போது அந்தராளச் சுவர்களைத்தவிர ஆலயத்தின் ஏனைய பகுதிகள் முற்றாக அழிவடைந்துள்ளன. இதனால் கர்ப்பக்கிருகத்தில் இருந்த தெய்வச் சிலைகளுக்கு என்ன நடந்ததென்பது தெரியவில்லை. ஆயினும் கர்ப்பக்கிரகத்தில் இருந்த ஐம்பொன்னாலான தெய்வ விக்கிரகம் ஆலயம் அழிவடைவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ பீடத்தின் மேற்பகுதியுடன் வெட்டி எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இதை அங்கிருந்து எடுக்கப்பட்ட பீடத்துடன் இணைந்த விக்கிரகத்தின் பாதப்பகுதி உறுதி செய்கிறது. இவ்வாலயத்தில் பல தெய்வங்களுக்குரிய சிலைகள் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றை நினைவுபடுத்தும் வகையில் தற்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் சாதாரண கற்களை வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். அவற்றுள் நாக வழிபாட்டிற்குரிய ஆலயமாக ஆலமரத்தின் கீழ் உள்ள பாம்புப் புற்றுக்கு மக்கள் படையல் இட்டு, தீபமேற்றி வழிபாடு செய்யும் முறை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் பொ.இரகுபதி ஆதிகால, இடைக்கால வரலாற்றில் அரசையும், அரசனையும் பாதுகாக்கும் பொருட்டு தன்னுயிரை துச்சமாக மதித்து எதிரியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்காக அமைக்கப்பட்டதே 'கூட்டத்தார் கோவில்' எனக் குறிப்பிடுகிறார்.

இவ்வகையான கோவில்கள் தென்னாசிய நாடுகளில் மட்டுமன்றி ஆபிரிக்கா, மாலைதீவு, இந்தோனேசிய முதலான நாடுகளிலும் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை கூட்டத்தார் கோவிலின் தோற்றத்தை நல்லூர் இராசதானி காலத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க இடமுண்டு. ஆயினும் அவ்வாலயம் யாழ்ப்பாண இராசதானி காலத்தில்தான் கட்டப்பட்டதென்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை.

இருப்பினும் அதன் பழமையையும் நிராகரிக்க முடியாது. யாழ்ப்பாண அரசு போத்துக்கேயரால் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் அவ்வரசில் படைவீரர்களாக இருந்தவர்கள் அதே தொழிலைப் பிற்காலத்திலும் தொடர்ந்தனர் எனக் கூறமுடியாது. அதேபோல் பிற நாடுகளில் இருந்து கூலிப்படைவீரர்களாக வந்து யாழ்ப்பாண மன்னர்களுக்கு உதவியவர்கள் இவ்வரசின் வீழ்ச்சியோடு அனைவரும் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பியதற்கும் ஆதாரங்கள் இல்லை. இவர்கள் போத்துக்கேய, ஒல்லாந்தப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் தமது போர்த் தொழிலைக் கைவிட்டு பல்வேறு தொழில்களை ஆற்றப் பணிக்கப்பட்டதைப் போத்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்களில் இருந்து அறியமுடிகிறது.

உதாரணமாக இலங்கையில் சோழர் ஆட்சிக்காலம் தொட்டு படைவீரர்களாக இருந்த செங்குந்தர் சமூகம் பின்னர் நெசவுத் தொழில் புரியும் கைக்குளவர்களாக மாறியதையும், வட கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து கூலிப்படைகளாக வந்து யாழ்ப்பாண அரசில் இணைந்து கொண்ட கறுப்பின மொறாக்கோ படைவீரர்கள் பின்னர் யாழ்ப்பாணத்தில் கடல்தொழிலில் ஈடுபட்டதையும் இங்கு குறிப்பிடலாம்.

இவ்வாறு யாழ்ப்பாண அரசு காலத்தில் படைவீரர்களாக இருந்த பல இனத்தவரும், நாட்டவரும் காலப்போக்கில் அத்தொழிலைக் கைவிட்டு பிற தொழில்களில் ஈடுபடவேண்டிய சூழல் தோன்றியதால் அவர்கள் ஆற்றிய தொழிலின் காரணமாக குறிப்பிட்ட தொழிலுக்குரிய சாதிப்பெயர் அல்லது சமூகப் பெயர் தோன்றக் காரணமாகியது. இவர்கள் போர்வீரர்களாக இருந்து பின்னர் பிறதொழிலுக்கு மாறிய போது போர்வீரர்களுக்குரிய 'கூட்டத்தார் கோவில்' பின்னர் குறிப்பிட்ட தொழில் புரிந்த சமூகத்திற்கு அல்லது சாதிக்குரிய கோவிலாக மாறியிருக்கவேண்டும்.

இவ்வரலாற்றுப் பின்புலத்தை வைத்து நோக்கும் போது இளவாலையில் அமைக்கப்பட்ட கூட்டத்தார் கோவில் யாழ்ப்பாண இராசதானி காலத்தில் அரசனுக்கு விசுவாசமாக இருந்து போரில் வீரமரணமடைந்தவர்களுக்காக முதலில் அமைக்கப்பட்டதெனக் கூறலாம். அவ்வாறு போர்வீரர்களாக இருந்தவர்கள் மற்றும் அவர்களின் வம்சத்தவர் போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் பிற தொழில்களுக்கு மாறிய போது அவ்வாலயம் குறிப்பிட்ட தொழில் புரியும் சமூகத்திற்கு அல்லது சாதிக்குரிய கோவிலாக மாறியுள்ளதெனலாம். அதன் அடையாளமாக இளவாலைக் கூட்டத்தார் கோவிலைப் பார்க்கலாம்.

பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்,

தலைவர் - வரலாற்றுத்துறை,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=38607

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.