Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு – முஸ்லிம் காங்கிரஸ் இணைவு எதிர்பார்க்காத ஒன்றா..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]அரசு – முஸ்லிம் காங்கிரஸ் இணைவு எதிர்பார்க்காத ஒன்றா..?[/size]

முத்துக்குமார்

கிழக்கு மாகாணத் தேர்தல் ஆரவாரங்கள் முடிவடைந்து விட்டன. தேர்தல் முடிந்த பின்னரும் யார் மாகாண நிர்வாகத்தை அமைப்பது (இங்கு ஆட்சி அமைப்பது என்ற பதத்தினை பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் மாகாணசபைகளுக்கு சில நிர்வாக அதிகாரங்கள் மட்டுமே உண்டு) என்பது தொடர்பில் ஆரவாரங்கள் இருந்தன. தமிழ் ஊடகங்களும், தமிழ்ப் பத்தி எழுத்தாளர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் தான் அதிகளவில் ஆரவாரங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தனர். எப்படியாவது முஸ்லிம் காங்கிரஸூடன் சேரவிடாது தடுப்பது என்பதே அவர்களது இலக்காக இருந்தது. யதார்த்த நிலமைகளுக்கு அப்பால் கற்பனை உலகிலேயே அதிகளவில் அவர்கள் மிதந்து கொண்டிருந்தனர்.

முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்யவேண்டும் எனத் தீர்மானிப்பது முஸ்லிம் மக்களுக்குரியதே ஒழிய தமிழ்த் தரப்பிற்கு உரியதல்ல. சகதேசிய இனம் என்ற வகையில் தமிழ் மக்களினது நலன்களையும் கவனத்தில் எடுக்கவேண்டும் என்று வற்புறுத்துவது மட்டும்தான் தமிழ்த்தரப்பினரது கடமையாக இருந்திருக்கவேண்டும். இந்த அறநெறி ஒழுக்கங்களையெல்லாம் மீறி தமிழ்த்தரப்பினர் ஆரவாரம் செய்தனர். தற்போது முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சேர்ந்துவிட்டதால் தேர்தல் ஆரவாரங்கள் அடங்கிவிட்டன. ஆனால் எதிர்த்தரப்பின் தூற்றுகை இன்னமும் குறையவில்லை.

இந்தப் பத்திரிகையாளர் தேர்தலுக்கு முன்னரே இவ்வாறு எல்லாம் நடக்கும் என எதிர்வு கூறினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து பெரும்பான்மையுடன் மாகாண நிர்வாகத்தைக் கைப்பற்றும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பத்தி எழுத்தாளர் பலரும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டபோது, இந்தப் பத்தியாளர் தெளிவாகவே கூட்டமைப்பிற்கு 11 ஆசனங்கள் மட்டுமே கிடைக்கும். சிலவேளை முதல் நிலையில் வந்தால் இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைக்கலாம். முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தியாக வளரும். தேர்தலின் பின்னர் அது பேரம்பேசி அரசுடன் இணைந்துகொள்ளும் என்று குறிப்பிட்டிருந்தார். அவை யாவும் இன்று உண்மையாகிவிட்டன. போலிக் கற்பனை உலகில் மிதந்தவர்கள் மட்டும் வாய்க்கு வந்தபடி பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்தது பற்றி முஸ்லிம் சிவில் சமூகத்திடமிருந்து பெரிய எதிர்ப்புகள் வரவில்லை. வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களே எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். நுஃமான் போன்ற ஒரு சில கல்வியாளர்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர் என்பதை இங்கு மறுப்பதற்கில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவெடுத்தபோது கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மாகாண நிர்வாகத்தில் பங்குபற்றும் நோக்கம் அதற்கு இருக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போதும் இது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தனித்த பலத்தினைப் பெற்று அரசுடன் பேரம் பேசி தமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்வதே அதன் இலக்காக இருந்தது. ரவூப் ஹக்கீம் வார்த்தையில் கூறுவதாக இருந்தால் 'மதிப்புள்ள தரப்பாக அரசில் அங்கம் வகிப்பது' என்பதே அதன் இலக்காக இருந்தது. எனவே தமிழ்த் தரப்பினர் கற்பனையில் இருந்திருக்கலாம். ஆனால் அரசியல் அங்கம் வகிப்பது என்பதே அதன் இலக்காக இருந்தது. எனவே தமிழ்த் தரப்பினர் கற்பனையில் இருந்திருக்கலாம். ஆனால் அரசியல் அவதானிகள் அனைவரும் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணையும் என்றே எதிர்பார்த்திருந்தனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையமுடியாமைக்கு பல காரணங்கள் உண்டு. அதில் முதலாவது முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை ரீதியான இறுக்கமான கட்சியல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களோ, மாகாணசபை உறுப்பினர்களோ கொள்கைக்காக கட்சியில் சேர்ந்தவர்களும் அல்ல. அரசியலில் ஈடுபடுவதனால் வரும் சுகபோகங்களை அனுபவிப்பதற்காகவே அவர்கள் கட்சியில் இணைந்தனர். இந்த சுகபோகங்கள் அரசாங்கத்துடன் சேருவதன் மூலமே அதிகம் கிடைக்கும். முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் சேர்ந்தால் இவர்களில் பலர் அரசாங்கத்துடன் சேருவதற்கும் தயாராகியிருந்தனர். பசீர் சேகுதாவூத் தேர்தல் காலத்தில் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தமை கொள்கைக்காக அல்ல. மாறாக முழு அமைச்சர் பதவி ஒன்றினைப் பெறுவதற்காகவே. முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி தனித்துப் போட்டியிடவேண்டும் என்று உறுதியாக நின்றமை கூட பேரம்பேசி அமைச்சர் பதவியைப் பெறுவதற்காகவே.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் சேராமலிருந்திருந்தால் கூட அவர்களை அரசாங்கத்தில் இணைக்கும் உத்தி மகிந்தருக்கு தெரியும். தான, தண்டம் என எல்லாக் கருவிகளையும் பயன்படுத்தி அவர் உறுப்பினர்களை இழுத்தெடுத்திருப்பார். அதற்கான செயற்பாடுகளை அவர் ஏற்கனவே முஸ்லிம் அரசியல்வாதிகள் மூலமும், இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மூலமும் முடுக்கி விட்டிருந்தார். ரவூப் ஹக்கீம் முன்னர் அரசாங்கத்துடன் இணைந்தமைகூட இந்த அச்சத்தினால்தான். அதனை அவர் நேரடியாகவே பலரிடம் கூறியிருந்தார்.

இந்தத் தடவை அவருக்கிருந்த பிரச்சினை பேரம்பேசுவதற்கு முன்னரே இணைந்து விடுவார்கள் என்ற அச்சம்தான். அதனால்தான் தேர்தலுக்கு முன்னரே உறுப்பினர்கள் மதரீதியாக சத்தியப் பிரமாணம் செய்ய வைத்திருந்தார். தேர்தல் முடிந்ததும் உலாமாக்களைக் கொண்டு போதனைகளை அளித்திருந்தார்.

இரண்டாவது, முஸ்லிம் தேசிய அரசியல் அதிகளவு வளர்ச்சியடையாமையாகும். முஸ்லிம் பேரினவாதத்திற்கு எதிராக கட்டியமைக்கப்படவில்லை. மாறாக தமிழ்த் தேசியத்திற்கு எதிராகவே கட்டி எழுப்பப்பட்டது. இதனால் தமிழர்களுக்கு எதிராகத்தான் முஸ்லிம் தேசியம் எழுச்சி இருந்திருக்கின்றதே தவிர, பேரினவாதத்திற்கு எதிராக இருப்பதில்லை. மாறாக பேரினவாதத்திடம் அடங்கிப்போய் சலுகைகளை எதிர்பார்க்கும் நிலையே உள்ளது. சலுகை பெறுவதற்குகூட பேரம்பேசும் ஆற்றல் தேவை என்பதால்தான் முஸ்லிம் தனித்துவத்திற்கு ஒரு மதிப்பினைக் கொடுக்கின்றது. இந்த அடங்கிப்போகும் மனஉணர்வு  முஸ்லிம் சமுதாயத்திடம் இருக்கின்றபடியால்தான் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் சேர்ந்த அதாவுல்லா, அமீர்அலி, ரிசாத் பதுயுதீன் போன்றவர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று அரசியல் தலைவர்களாக வலம் வருகின்றனர். தமிழ் - சிங்கள முரண்பாடு நீந்தக்கூடிய அரசியல் வெளியை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பதால் அவர்கள் எழுச்சியடைகின்றனர்.

முஸ்லிம் தேசியம் பேரினவாதத்திற்கு எதிராக கட்டமைக்கப்படுகின்றபோதே இந்தப் போக்கில் மாற்றங்களைக் கண்டுகொள்ள முடியும். இந்த மாற்றங்கள் நடக்காது எனவும் கூறமுடியாது. பேரினவாதம் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அதிகரிக்க இத்தகைய ஒரு தேசியத்தைக் கட்டியெழுப்புவதைத் தவிர வேறு மார்க்கங்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு இல்லாது போய்விடும். சிங்களத் தரப்பு முஸ்லிம் தரப்பின் வளங்களை ஆக்கிரமிக்க இது தவிர்க்க முடியாததாக இருக்கும். முஸ்லிம் தரப்பு அரசுடன் இணைந்தால் ஏற்பட்டுள்ள அதிகாரபலத்தினைப் பயன்படுத்தி தமிழ்மக்களின் வளங்களைப் பறிப்பதிலேயே தற்போது அக்கறையாக இருக்கின்றது. கிழக்கிலும் மன்னார் மாவட்டத்திலும் இதுவே நடக்கின்றது. பேரினவாதமும் அதற்கு இடம்கொடுக்கின்றது. 'எம்மிடம் எதுவும் கேட்காதே, தமிழனிடம் உள்ளதை வேண்டுமானால் பறித்துக் கொள்' எனப் பேரினவாதம் வேண்டுகின்றது. முஸ்லிம் தரப்பும் அதனை மேற்கொள்கின்றது. அம்பாறை மாவட்டத் தமிழ்மக்களைக் கேட்டால் இதுபற்றி பல கதைகளைக் கூறுவர். மிக நுண்மையான அணுகுமுறைகள் இதற்காகப் பின்பற்றப்படுகின்றன. ஆனால் இந்த அணுகுமுறையினை முஸ்லிம் தரப்பினரால் தொடர்ச்சியாகப் பின்பற்றமுடியாது. ஏனெனில் பேரினவாத ஆக்கிரமிப்பின் வளர்ச்சி தமிழ் - முஸ்லிம் ஆகிய இரண்டு இனங்களையும் அழித்துவிடும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றது.

மூன்றாவது, முஸ்லிம் காங்கிரஸ் வட - கிழக்கு முஸ்லிம்களை மட்டுமல்ல, இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கான கட்சியாகவும் தன்னை அடையாளப்படுத்துவதாகும். உண்மையில் தமிழ்த் தரப்பினைப் போல், முஸ்லிம் தரப்பிலும் இரண்டு அரசியல் வளர்ந்திருக்கவேண்டும். வட - கிழக்கிற்கென ஒரு அடையாள அரசியலும், தென்பகுதிக்கென ஒரு அடையாள அரசியலும் உருவாகியிருக்கவேண்டும். இதற்கென வேறு, வேறு அரசியல் கட்சிகள் உருவாகியிருக்கவேண்டும்.

வட- கிழக்கு அரசியல் தமிழர்களுடன் இணைந்து நடத்துவதை வலியுறுத்துகின்றது. அங்கு சுயாட்சி அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தென்னிலங்கையில் சிங்கள மக்களுடன் இணைந்து அரசியல் நடத்தவேண்டிய நிலை உள்ளது. சுயாட்சி அதிகாரங்களை கேட்குமளவிற்கு முஸ்லிம்கள் அங்கு பலமாக இல்லை. சமத்துவக் கோரிக்கைகளை மட்டுமே முன்வைக்கலாம்.

இந்தவகையில் முஸ்லிம் காங்கிரஸ் வட - கிழக்கினை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இருந்தால் மட்டுமே வட – கிழக்கு முஸ்லிம்களின் நலன்களிலிருந்து அரசியல் மேற்கொள்ளமுடியும். தென்னிலங்கை முஸ்லிம்களையும் இணைத்துச் செயற்படுவதால், அவர்களின் குரல்களுக்கும் செவிசாய்க்கவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. தென்னிலங்கை முஸ்லிம்களின் பொருளாதார அடித்தளம் வர்த்தகமாகும். முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த்தேசியக் கூட்டமைபுடன் இணைந்தால் தமது வர்த்தகப் பொருளாதாரத்திற்கு சிங்களத் தரப்பினால் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர். இதனால் அரசுடன் இணையுமாறு முஸ்லிம் காங்கிரஸிற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸிற்கு அதனைப் புறக்கணிக்க முடியாதநிலை ஏற்படுகின்றது.

நான்காவது, முஸ்லிம் சமூகம் தன்னையொரு பலவீனமான சமூகமாக உணர்வதாகும். இதனால் சமூகத்தின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றி அது அதிகம் அக்கறை கொள்கிறது. தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டு உள்ளதால் அதற்கு ஒரு சர்வதேசக்குரல் உண்டு. அதைவிட வலுவான டயஸ்போராவும், தமிழக மக்களின் பின்பலமும் அதற்குண்டு. உள்நாட்டில் வடக்கிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் அவர்கள் வலிமையாக உள்ளனர். அவர்களால் குறைந்த மட்டத்திலாவது சிங்கள ஆதிக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும். தங்களுக்கு இந்தப் பாதுகாப்புகள் எதுவுமில்லை, எதிர்ப்பு அரசியலை நடத்தினால் நாங்கள் இலகுவாக அழிக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது. இதனால் சிங்கள அரசியலுடன் இணைந்து தம்மை அடையளங் காட்டுவதே தமக்கு பாதுகாப்பு என முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையோர் நம்புகின்றனர்.

எனவே முஸ்லிம் தரப்பினர் நிலையில் நின்று பார்க்கும்போது அரசாங்கத்துடன் இணைந்ததற்கு அவர்கள் மத்தியில் வலிமையான வாதங்கள் உள்ளன. இந்த வாதங்களை கவனத்தில் எடுக்க தமிழர் தரப்பு தயங்கக்கூடாது. அவர்கள் அந்த வாதங்களிலிருந்து மீண்டுவர தமிழ்த்தரப்பு உதவவேண்டும். வட - கிழக்கினைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கும் இருக்கின்றது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதுபற்றிய நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். இதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்பது உண்மையே. ஆனாலும் பொறுமையுடன் அரசியலை நகர்த்தப் பின்நிற்கக்கூடாது.

இந்தத் தேர்தலில் தமிழ்தரப்பு நிகழ்த்திய சாதனை, தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டிற்கு இனிமேல் தமிழர்கள் காரணமில்லை என்பதை நிரூபித்தமையே. இந்த நிரூபிப்பு நேர்மையாகச் சிந்திக்கும் பல முஸ்லிம் தரப்புக்களின் மனச்சாட்சிகளை தட்டியெழுப்பியுள்ளது. நுஃமான் போன்ற கல்விமான்களின் குரல்கள் இந்தவகையிலேயே வந்துள்ளன. இதுபோன்ற குரல்களை நாம் வரவேற்கவேண்டும்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் போட்டியிட்டது முதற்தவறு. மாகாண நிர்வாகத்தை கைப்பற்றுவோம் என மக்களுக்கு நம்பிக்கை கொடுத்தது இரண்டாவது தவறு. தற்போது தவறுகளையெல்லாம் விட்டுவிட்டு முழுசிக்கொண்ட இருக்கின்றது. கொள்கையைக் கோட்டை விட்டதும் மட்டுமல்லாமல் மாகாணசபை நிர்வாகத்தையும் கோட்டைவிட்டுள்ளது.

இந்த நிலமை ஏற்படாலாம் எனக்கருதியே தமிழ்ச் சிவில் சமூகம் தேர்தலில் போட்டியிடவேண்டாம், போட்டியிடுவதாயின் கொள்கையைக் காப்பாற்றும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுங்கள் என்று கேட்டது. அதற்கு இணங்காதபோது, கொள்கை விடயங்களை தேர்தல் பிரகடனத்திலாவது குறிப்பிடுங்கள் என்று கேட்டது. சம்பந்தன் தலைமை இவை எவற்றுக்கும் தலைசாய்க்கவில்லை. தேர்தல் விஞ்ஞாபனம் இல்லாமலேயே போட்டியிட்டது. புளுகு மூட்டைகளையெல்லாம் தேர்தல் பிரச்சாரங்களையெல்லாம் அவிழ்த்து விட்டது. தமிழ் ஊடகங்கள் அதற்கு எண்ணெய் ஊற்றின.

கூட்டமைப்பு சுயாதீனமான அமைப்பல்ல. அது இந்திய எஜமானின் கட்டளைப்படி செயற்படும் அமைப்பு. இந்தியாவின் கட்டளை என்பதால்தான் அது போட்டியிட்டது. இந்தியா மாகாணசபை அரசியலுக்குள் தமிழ் அரசியலை முடக்கவேண்டும் என்பதற்காகத்தான் கட்டளையிட்டது. தேர்தலுக்கான பல்வேறு உதவிகளையும் செய்தது. முஸ்லிம் - கூட்டமைப்பு இணைந்து நிர்வாகத்தை அமைப்பதற்கும் முயற்சி செய்தது. அது சரிவராது எனத் தெரிந்தபோது தேசிய நிர்வாகம் அமையுங்கள் என்று கூட கோரிக்கை விடுத்தது. அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் பிளேக்கும் இதற்கு ஊக்குவிப்பினை வழங்கினார்.

இறுதியில் எல்லா முயற்சிகளுமே தோல்வியில் முடிந்தன. இது இந்தியாவிற்கு இரண்டாவது தோல்வி. முதலில் சரத் பொன்சேகா விடயத்தில் தோல்வியடைந்தது. தற்போது கிழக்கு மாகாணசபை விடயத்தில் தோல்வியடைந்திருக்கின்றது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ்மக்களையும் தோல்வியடைய வைத்திருக்கின்றது.

எப்படியாவது தமிழ்த் தேசிய அரசியலைக் கீழிறக்குவதுதான் இந்தியாவின் நோக்கம். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதற்கு ஒருபோதும் இடங்கொடுக்கப் போவதில்லை. அவர் தொடர்ந்தும் தமிழ்த்தேசிய அரசியலை நோக்கியே தமிழ்மக்களைத் தள்ளிக் கொண்டிருப்பார்.

மாகாணசபைத் தேர்தலின் சாதகமான அம்சம் தமிழ்மக்கள் இலங்கை அரசாங்கத்துடன் தாங்கள் இல்லை என்பதை மீண்டும் வெளிக்காட்டியமைதான். இந்த ஒருமைப்பாட்டு வலிமையை மேலும் வளர்த்தெடுப்பது பற்றி யோசிப்பது நல்லது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=695a56a7-9f1f-484b-827b-87e1baa5f210

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.