Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தம் வாழ்வியலுடன் இணைந்து நின்று ஆற்றிய ஊடகப் பணி உதயன்

Featured Replies

உதயன் பத்திரிகை தனது 27ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு தொடர்ந்தும் தமிழ் மக்களுக்குச் செய்திப் பணியாற்ற இறைவரத்தையும் ஆசீர்களையும் தெரிவிப்பது மகிழ்வான ஒரு விடயமாகும்.

உதயன் பத்திரிகைக் குடும்பத்தின் ஆசிரியக் குழுவினர் செய்தியாளர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் முதலில் மகிழ்வான இந்த நேரத்தில் அன்பு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

ஒரு பத்திரிகையை நடத்துவது நெருப்பாற்றை நீந்திக் கடப்பதையும் யானையைக் கட்டி தீனி போடுவதையும் போன்றது என தினத்தந்தி பத்திரிகையின் நிறுவுநரும் ஆசிரியருமான சி.ப.ஆதித்தனார் தெரிவித்துள்ளார்.

உதயன் பத்திரிகை யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட மூன்றாவது செய்திப் பத்திரிகையாக கடந்த 27 ஆண்டுகளாக இடையறாத் தொடராகத் தமிழ் மக்களுக்குச் செய்திப்பணி ஆற்றுவதற்காகப் பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகள் பலவற்றை நிலைநிறுத்தி எத்துயர் வரினும் நிமிர்ந்து நிற்பேன் தொடர்ந்து வருவேன் என இன்றும் உயிர் வாழ்கிறது என்ற வரலாறு கால் நூற்றாண்டிற்கு மேலாகப் பயணித்துத் தன் பயணப்பாதையை முடித்த ஈழகேசரி மற்றும் ஈழநாடு பத்திரிகைகளின் பின்னணியிலும் அதன் பின்னர் வெளிவந்த வேகத்திலேயே இல்லாதுபோன பல தமிழ்ப்பத்திரிகைகளின் வரலாற்றிலும் பார்க்கப்படவேண்டிய ஒன்று.

யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு 1930 ஆம் ஆண்டுமுதல் 1958 ஆம் ஆண்டுவரை கால்நூற்றாண்டுக்குச் சற்று அதிகமாக வெளிவந்த முதல் வாரப்பத்திரிகை ஈழகேசரியாகும்.

அடுத்து 1959ஆம் ஆண்டு முதல் வெளிவந்த ஈழநாடு பத்திரிகை முதலில் வாரப்பத்திரிகையாக ஆரம்பித்து, பின்னர் தினசரிப் பத்திரிகையாக மாறி தமிழ் மக்களின் தனித்தமிழ்ப் பத்திரிகையாகப் பலகாலம் பணியாற்றி, பின்னர் அண்மைக் காலம்வரை வெளிவந்தது.

உதயன் பத்திரிகை 1985ஆம் ஆண்டு தன் ஆரம்பம் முதலே தினசரிப் பத்திரிகையாக வெளிவரத்தொடங்கி கால்நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் பிரகாசமான எதிர்காலத்துடன் பயணித்துக்கொண்டிருக்கிறது. யாழ்ப்பாண வாசகர்கள் வரலாற்றில் பல பத்திரிகைகளைக் கண்டுள்ளார்கள் படித்துள்ளார்கள் மதிப்பிட்டுள்ளார்கள் அவற்றின் இறப்பையும் சந்தித்துள்ளார்கள்.

கடந்தகாலப் பத்திரிகைகளின் வரலாற்றில் ஒரு நீண்டகால சரித்திரப் பின்னணியைக் கொண்ட ஒரு பத்திரிகையாக உதயன் பத்திரிகை இன்றும் தலைநிமிர்ந்து உயிர் வாழ்கிறது என்பது பாராட்டப்படவேண்டிய ஒரு சாதனையாகும்.

யாழ். மண், தன் ஆரம்பப் பத்திரிகைகளாக சமய வாரப்பத்திரிகைகளையே பிரசவித்திருந்தது. யாழ் மண் செய்த பெரும் பாக்கியம் தன் சமயப் பத்திரிகைகளான உதயதாரகை பாதுகாவலன் இந்துசாதனம் ஆகிய பத்திரிகைகளை நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் பிரசவித்துக்கொண்டிருக்கிறது என்பதாகும்.

இந்த ஆரம்பகாலச் சமயப்பத்திரிகைகளின் நீண்டகால வரலாற்றிற்கும் இன்றைய இருப்புக்கும் முக்கிய காரணமாக இருப்பது இவற்றின் பலமான பின்னணியும் நிர்வாகக் கட்டமைப்பும் பொருளாதார வளமுமேயாகும்.

உதயன் பத்திரிகையின் நீண்டகால இருப்பும் அதனுடைய கடந்தகால வரலாறும் அதனுடைய பலமான பொருளாதாரப் பின்னணியிலும் நிர்வாகக் கட்டமைப்பிலும் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட செல்வாக்கிலுமே நோக்கப்படவேண்டிய ஒன்று.

உதயன் பத்திரிகையின் எதிர்காலம் அதன் பொருளாதாரப் பலத்திலும் நிர்வாகக் கட்டமைப்பிலும் உறுதியான நிலைப்பாட்டிலும் பிரகாசமானதொன்றாகவே தென்படுகிறது.

அந்த வகையில் உதயன் நாளிதழ் இன்னும் நீண்டகாலம் நீடித்து உயிர்வாழப்போகிறது. தமிழ் மக்களுக்கான செய்திப்பணியை உதயன் பத்திரிகை தனது நீண்டகால வரலாற்று அநுபவத்துடன் இன்னும் சிறப்பாக ஆற்றவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகும்.

1959ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகை வெளியானபோது வாழ்த்துத் தெரிவித்த யோகசுவாமிகளுடைய வார்த்தைகள் இன்றும் நீடித்து நின்று சாதிக்கப் போகிற பத்திரிகைகளுக்கு வழங்கப்படும் வாழ்த்துக்களாகவே அமைகின்றன.

ஏசுவார்கள் எரிப்பார்கள் உண்மையை எழுதுங்கள் உண்மையாக எழுதுங்கள் என்ற அந்த வார்த்தைகள் உதயன் பத்திரிகையினுடைய வரலாற்றிலும் வாழப்பட்ட வார்த்தைகளாகும். கடந்த 27 ஆண்டுகளில் உதயன் சாதித்தது என்ன? என்ற ஒரு கேள்வி எழுப்பப்படுமானால், உதயன் பத்திரிகையை நடுநிலைநின்று பார்க்கவேண்டிய கோணம் எது என்பது தெளிவாகும்.

உதயன் பத்திரிகை தமிழ் மக்களுக்கான ஒரு பத்திரிகையாக ஆரம்பித்த போது ஈழநாடு பத்திரிகை ஒரு நீண்டகால வரலாற்றுப் பின்னணியுடனும் தமிழ் மக்களின் தனிப்பெரும் இதழாக நீண்டகாலம் நடந்துவந்த பெருமையுடனும் இருந்தது.

உதயன் தன்னுடைய பயணப்பாதையை 1985ஆம் ஆண்டு ஆரம்பித்தபோது தமிழ் மக்களுக்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலமாகும். ஈழநாடுப் பத்திரிகையோடு உதயன் பணியாற்றத் தொடங்கியபோது மேலும் பல பத்திரிகைகள் இணைந்து பயணித்தன.

ஆனால் அவை ஒன்றுமே இன்று தாம் எதிர்கொண்ட நிர்வாகப் பொருளாதார அரசியல் போன்ற சவால்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இல்லாமற் போய்விட்டன. 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி உதயன் பத்திரிகை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் தன் பணியை ஆரம்பித்தபோது, இறுதியாண்டுக் குருத்துவ மாணவனாகக் கல்விகற்றுக்கொண்டிருந்த நான், நான்கு மாதங்களின் பின்னர் தவக்காலத்தில் பயன்படுத்தப்படுகின்ற சிலுவைப்பாதை சிந்தனைகளைப் பிரசுரிக்கும்படி கோரி அங்கு சென்றிருந்தேன்.

தற்போது பிரதம ஆசிரியராகப் பணியாற்றுகின்ற திரு.கானமயில்நாதன் அவர்களே அப்போதும் ஆசிரியராக அமர்ந்திருந்தார். என்னை அன்போடு வரவேற்று சிலுவைப்பாதை சிந்தனைகள் 14 நிலைகளைக் கொண்டிருப்பதால், அதனை இரண்டு ஞாயிறு தினங்கள் பிரசுரிப்போம் என முடிவுசெய்து பிரசுரித்தார்.

முதற் கட்டுரை 16.3.1986 ஞாயிற்றுக்கிழமை (பக்கம் 3) நமது பாதை முன் கிறிஸ்துவின் கல்வாரிப்பாதை தெரியவேண்டும் எனும் தலைப்பிலும் இரண்டாம் கட்டுரை 23.03.1986 ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துவினால் சிலுவை புனிதமடைகிறது என்ற தலைப்பிலும் பிரசுரமாகியது.

அன்று முதல் இன்றுவரை உதயன் பத்திரிகையுடனான எனது உறவு வளர்ந்தே வந்திருக்கிறது. புனித வளன் கத்தோலிக்க அச்சக அதிபராக நான் பணியாற்றிய காலத்தில் அப்போது உதயன் பத்திரிகையில் பணியாற்றிய திரு வித்தியாதரனின் வேண்டுகோளுக்கிணங்க ஊரடங்கு வேளையிலும் பல தடவைகள் உதயன் பத்திரிகையை புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சடித்துக் கொடுத்திருக்கிறோம்.

உதயன் பத்திரிகை தமிழ் மக்களுக்கான தன் செய்திப் பணியில் கத்தோலிக்க மக்களுக்கும் செய்திப்பணியாற்ற வேண்டும் என்பதில் அன்றுமுதல் இன்றுவரை உறுதியாகவே இருந்துவருகிறது. ஞாயிறு சிந்தனை தவக்கால சிந்தனை மற்றும் சிறப்புத் தினங்களுக்கான கட்டுரைகளை அதற்கென ஒதுக்கப்பட்ட நாள்களிலும் வெளியிட்டு வந்துள்ளது.

உதயன் பத்திரிகை தமிழ் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் அவர்களின் எல்லா அநுபவங்களிலும் அவர்களோடு பயணிக்க வேண்டும் அவர்களோடு வாழ்ந்து அவர்களின் செய்திகளை அவர்களுக்கே சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்ற பணியை அன்றுமுதல் இன்றுவரை சிறப்பாக ஆற்றியே வந்துள்ளது.

ஆரம்பத்தில் அகலத்தாள் கொண்ட பத்திரிகையாக வெளிவந்த உதயன் பத்திரிகை யாழ்ப்பாண மக்கள் கையடக்கப் பத்திரிகைக்கே பழக்கப்பட்டவர்கள் அதனையே விரும்புகிறார்கள் என்ற வகையில் தனது நிலைப்பாட்டை மாற்றி கையடக்கப் பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது. இது உதயன் பத்திரிகை தமிழ் மக்களுக்காக பணியாற்ற தனது நிலைகளை மாற்றிக்கொள்ளத் தயங்காது என்பதை அன்றே தெளிவாகக் காட்டியது.

இன்று உதயன் பத்திரிகை என்று சொன்னால், அதற்கென தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தனியான இடமுண்டு அசைக்க முடியாத அத்திபாரமும் உண்டு. கடந்த 27 ஆண்டுகளாகப் பல சவால்களைச் சந்தித்து பல தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து பல உயிர்களைப் பறிகொடுத்த பின்னரும் தமிழ் மக்களுக்காக வெளிவரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றமை அதன் அசைக்கமுடியாத பலமாகும்.

உதயன் பத்திரிகையில் அதிக விளம்பரங்கள் வெளிவருகின்றன அதிக மரணச் செய்திகள் வெளியாகின்றன என குறைபட்டுக்கொள்ளுவோர் அதுவே உதயனின் பலமுமாகும் என்பதை மறந்துவிடமுடியாது.

அறுபது வீதமான செய்திகளும் நாற்பது வீதமான விளம்பரங்களும், ஒரு பத்திரிகையில் இருக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகின்ற போது, அதற்கு அதிகமாக விளம்பரங்கள் ஒரு பத்திரிகையில் வெளியிடப்படுகின்றன என்றால் அது அப்பத்திரிகையின் பலமுமாகும்.

அதிக விளம்பரங்கங்களுக்கு இடம்கொடுக்கின்ற வகையில் செய்திகளுக்கான இடம் குறைக்கப்படுகிறது என்பது பத்திரிகையியல் பார்வையில் பலவீனமாகக் கருதப்பட்டாலும், தன்னுடைய செல்வாக்கின் காரணமாகவே நிறைய விளம்பரங்களைப் பெற்றுக்கொள்கிறது என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதாகும்.

விளம்பரங்கள் பத்திரிகையின் முதுகெலும்புகள் என்று சொல்லப்படுகிறது. அதிக விளம்பரங்களைப் பெற்றுக்கொள்ளுகின்ற ஒரு பத்திரிகை அதிக பிரபல்யமான ஒரு பத்திரிகை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கொள்கையாகும். அதிக விளம்பரங்கள் வெளிவருகின்றன அங்கு அதிக செய்திகள் வெளிவரவில்லை என்ற விவாதத்தை முன்வைத்து யாரும் ஒரு பத்திரிகையின் இருப்பை இல்லாமற் செய்துவிட முடியாது.

1999ஆம் ஆண்டு சிறந்த துணிச்சல் மிக்க பத்திரிகைக்கான விருதை இலங்கை பத்திகையாளர் சங்கத்திடமிருந்து உதயன் பத்திரிகை பெற்றுக்கொண்டிருந்தாலும் உண்மையில் அதன் பின்னர்தான் அது ஒரு துணிச்சல் மிக்க பத்திரிகையாக மாறிப் பல சவால்களைச் சந்தித்து சாதனைகளைப் படைத்தது என்று துணிந்து கூற இயலும்.

சிலவேளை துணிச்சல் மிக்க பத்திரிகை என்று வழங்கப்பட்ட அந்த விருதே எதிர்காலத்தில் துப்பாக்கி ரவைகளைச் சந்திக்கவும் குண்டெறிகளைக் காணவும் உயிரிழப்புக்களை எதிர்நோக்கவும் என்ன நடந்தாலும் மறுநாள் பத்திரிகை வெளிவரும் என்றொரு வைராக்கிய உணர்வை உருவாக்கவும் வழிசெய்தது என்று எண்ணலாம்.

சிந்தப்பட்ட இரத்தத்துளிகளின் மத்தியிலும், இழக்கப்பட்ட மனித உயிர்களின் நடுவிலும், மறுநாள் பத்திரிகை வரும் என்று அசைக்கமுடியாத ஒரு மன உறுதியைக் கொண்டு அதனைச் சாதித்துக்காட்டியமை பத்திரிகை உலகில் எவராலும் சாதிக்க முடியாத ஒரு சாதனையாகும்.

- [size=5]அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை[/size]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5844842330216969

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.