Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் கிராமமும் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் கிராமமும் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பும்
[ வியாழக்கிழமை, 03 ஒக்ரோபர் 2013, 07:09 GMT ] [ நித்தியபாரதி ]


சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள வன்னிப் பிரதேசத்தின் முள்ளிவாய்க்கால் கிராமத்திற்கு World Socialist இணையத்தள ஊடகவியலாளர்கள் தமது பயணத்தை மேற்கொண்டிருந்தனர். சிறிலங்காத் தீவில் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரானது முள்ளிவாய்க்கால் கிராமத்தில் 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிக் கட்ட யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இறுதிக்கட்ட யுத்தம் தீவிரமடைந்திருந்த பொழுதில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கப் படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி தமது முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்தவேளையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்கால் கரையோரப் பகுதியில் அகப்பட்டுத் தவித்தனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் அகப்பட்ட தமிழ் மக்களில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 40,000 வரையானவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த 300,000 வரையான பொதுமக்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த மெனிக்பாம் முகாங்களில் அடைக்கப்பட்டனர். இந்த முகாங்கள் அனைத்தும் சிறிலங்கா
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. முள்ளிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மே 2012 இலேயே தமது சொந்த இடத்தில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

World Socialist இணையத்தள ஊடகவியலாளர் குழுவினர் செப்ரெம்பர் 21ல் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் முள்ளிவாய்க்கால் கிராமத்திற்குச் சென்றிருந்தனர். வன்னிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பரப்புரையின் போது மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாகவே அதிகம் பேசப்பட்டது.

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன், விவசாயத் தொழிலை மீளவும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் கிளிநொச்சிக்கு அருகிலுள்ள பரந்தனிலிருந்து 60 கிலோமீற்றர் தூரத்திலுள்ள முள்ளிவாய்க்கால் கிராமம் வரை பயணிப்பவர்கள் அனைவரும் இந்த இடங்களுக்கிடையிலான வேறுபாடுகள் என்ன என்பதையும் சிறிலங்கா அரசாங்கம் கூறுவதற்கும் இங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் இடையில் எவ்வாறான வேறுபாடு உள்ளது என்பதைக் கவனிக்கத் தவறியிருக்க மாட்டார்கள்.

வன்னியில் மீள்குடியேறியுள்ள மக்கள் மிகச் சிறிய குடிசைகளில் வாழ்ந்து வருவதை அவதானிக்க முடியும். தற்போது புதிதாக செப்பனிடப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு வீதியில் இவ்வாறான குடிசைகளிலில் மக்கள் வாழ்வதைக் காணலாம். இந்த வீதியானது முல்லைத்தீவு வரை செப்பனிடப்பட்டு கிழக்குப் புறமாக பிறிதொரு வீதியுடன் தொடர்புபடுத்தப்படவுள்ளது. இவ்வாறான கட்டுமானங்கள் உள்ளுர் மற்றும் அனைத்துலக முதலீட்டாளர்களைக் கவர்வதை மட்டுமே நோக்காகக் கொண்டுள்ளது. இதன்மூலம் இந்தப் பகுதியில் முதலீடுகள் அதிகளவில் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா அரசாங்கம் நம்புகிறது.

பரந்தனிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான 60 கிலோமீற்றர் நீளமான வீதியில் குறைந்தது ஏழு இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாங்கள் ஒவ்வொன்றும் தனியாருக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த முகாங்களுக்குப் பின்னால் இராணுவத்தினர் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதுடன் காடுகளை அழித்துவருகின்றனர். இந்தப் பகுதிகளில் இராணுவத்தினர் பெருமளவில் ஈருருளிகளில் பயணிக்கின்றனர்.

சில குடும்பங்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்லமுடியாத நிலை காணப்படுகிறது. புதுக்குடியிருப்பு இடைத்தங்கல் குடியிருப்பில் இன்னமும் 200 குடும்பங்கள் வரை தங்கியுள்ளனர். இடைத்தங்கல் குடியிருப்புக்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் உட்பட மீள்குடியேறியுள்ள அனைவருக்குமான நிவாரணங்களை ஆறு மாதங்களின் முன்னர் சிறிலங்கா அரசாங்கம் நிறுத்திவிட்டது. பெரும்பாலான மக்கள் வேலையற்றவர்களாக உள்ளனர். இதனால் இவர்கள் நாளொன்றுக்கு மூன்று வேளை உணவையும் பெற்றுக் கொள்வதென்பது கடினமாகவே உள்ளது.

"நாங்கள் இக்குடியிருப்பில் 2011ல் சிறிலங்கா அரசாங்கத்தால் பலவந்தமாகக் குடியேற்றப்பட்டோம். முள்ளிவாய்க்கால் முமுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும் என சிறிலங்கா இராணுவத்தினர் விரும்பியதாலேயே நாம் இங்கு குடியேற்றப்பட்டோம்" என புதுக்குடியிருப்பு இடைத்தங்கல் குடியிருப்பில் தங்கவைப்பட்டு தற்போதும் அங்கு வாழும் முள்ளிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் காடுகளை அழித்த பின்னர் இங்கு குடியேறியுள்ளோம். நாங்கள் எமது இந்த நிலத்தைத் துப்பரவு செய்வதற்காக எமது சக்தியையும் எமது பணத்தையும் செலவிட்டுள்ளோம். இங்கே எமக்குத் தொழில் எதுவுமில்லை. விவசாயம் செய்வதற்கு எமக்கு நீர்வழங்கல் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நாங்கள் நீரைப் பெற்றுக் கொள்வதற்கு கிணறு வெட்டவேண்டும். இதற்கு 200,000 ரூபா வரை தேவைப்படுகிறது. நீரை இறைக்கும் இயந்திரத்திற்கு 50,000 ரூபா வேண்டும். சிறிலங்கா அரசாங்கம் எம்மை இங்கு குடியேற்றியுள்ள போதிலும் இது எமக்கு எவ்விதத்திலும் உதவவில்லை" என புதுக்குடியிருப்பு இடைத்தங்கல் குடியிருப்பில் உள்ள விவசாயி மேலும் தெரிவித்தார்.

தனது நெருங்கிய உறவினர்களில் எட்டுப் பேர் உள்ளடங்கலாக தனது கிராமத்தைச் சேர்ந்த பலர் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டதாக இந்த விவசாயி கூறினார். ஐந்து ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள தனது கிராமத்தின் சுடுகாடானது இறந்த உடலங்களால் நிரம்பியதாகவும் இவர் தெரிவித்தார். பலர் காணாமற் போயுள்ளதாகவும் இந்த விவசாயி விபரித்தார்.

"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் நவி பிள்ளை எமது கிராமத்திற்கு வருகை தந்தபோது காணாமற் போன தமது உறவினர்கள் தொடர்பாகவும் இராணுவத்தினரின் கைதுகள் தொடர்பாகவும் பெருமளவிலான மக்கள் அவரிடம் முறையிட்டனர். இது தொடர்பில் தான் நடவடிக்கை எடுப்பதாக நவி பிள்ளை வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் இது தொடர்பில் இவர் நடவடிக்கை எடுப்பார் என நான் நினைக்கவில்லை. 'அனைத்துலக சமூகம்' எம்மைக் காப்பாற்றும் என போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் எம்மிடம் கூறி எம்மைச் சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் இவை எதுவும் நடைபெறவில்லை" என குறித்த விவசாயி அதிருப்தி வெளியிட்டார்.

சிறிலங்கா மீது அமெரிக்கா தலைமையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், ஆகஸ்ட்டில் நவி பிள்ளை சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார். சிறிலங்காவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கத் தீர்மானமானது எதனையும் செய்யாதுவிட்டாலும் கூட, ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவானது தனது இராஜதந்திரச் செல்வாக்கை மீள நிலைநிறுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது என்பதை இத்தீர்மானம் உறுதிப்படுத்துகிறது.

"மாகாண சபைத் தேர்தல் பரப்புரைக்காகவும், வீதிப் புனரமைப்பு, வங்கிகளின் செயற்பாடுகளுக்காகவும் சிறிலங்கா அரசாங்கம் பல மில்லியன் ரூபாக்களை செலவிடுகிறது. ஆனால் மக்களின் அடிப்படை வாழ்வியலை அபிவிருத்தி செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் எதனையும் மேற்கொள்ளவில்லை. சிறிலங்கா அதிபரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு வீரர்கள் பலருடன் உலங்குவானூர்தி மூலம் முல்லைத்தீவுக்கு வருகை தந்ததுடன், தமது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் கோரியிருந்தார். நாங்கள் ஏன் இவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்? போர் முடிவுற்று நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. எமக்காக அவர்கள் என்ன செய்தார்கள்?" என முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த பிறிதொரு கிராமவாசி வினவினார்.

"நாங்கள் எமக்கான நாளாந்த உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் போராடுகிறோம். போரின் போது அழிவடைந்த வாகனங்களின் உதிரிப்பாகங்களை விற்று எமக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்குக் கூட எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தனியார் ஒப்பந்தகாரர்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. அண்மையில் இரும்புக் கம்பிகள் மற்றும் இரும்புத் துண்டுகளை சேகரித்த மக்களிடமிருந்து அவற்றை இராணுவத்தினர் பலவந்தமாகப் பறித்தனர். இதனை எதிர்த்த மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமக்காக வாக்களிக்குமாறு அவர்கள் எந்த உரிமையுடன் எம்மை நாடுகிறார்கள்?" என அக்கிராமவாசி கூறினார்.

சிறார்களைத் தமது படையில் இணைத்ததன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர் என்பதை முள்ளிவாய்க்கால் கிராமவாசிகள் பலர் விபரித்தனர்.

தற்போது 24 வயதேயான இளம் தாயொருவர் புலிகளின் ஆட்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக கட்டாயத் திருமணத்திற்கு உட்பட்டதாகக் கூறுகிறார். "இறுதிக்கட்ட யுத்தமானது எமக்கு பல துன்பங்களைத் தந்தது. இதனை விபரிப்பதற்கு எம்மிடம் வார்த்தைகள் இல்லை. பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமாக எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்த போது எமது கண்முன்னால் பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். நாங்கள் இறந்த உடலங்களுக்கு மேலால் ஓடிக்கொண்டிருந்தோம். நல்வாய்ப்பாக நாங்கள் இதில் தப்பித்தோம். நாங்கள் மீளவும் பிறவியெடுத்துள்ளோம்" என அந்த இளம் தாய் கூறினார்.

"எனது குடும்பத்தவர்களையும் புலிகள் அமைப்பு பலவந்தப்படுத்தியது. புலிகள் அமைப்பினர் எனது சகோதரனை பிடித்துச் சென்றபோது அவனுக்கு 15 வயது. அவன் புலிகளிடமிருந்து ஐந்து தடவைகள் தப்பிவந்தான். இறுதித்தடவை எனது தம்பியை புலிகள் அமைப்பினர் பலவந்தமாகக் கூட்டிச் செல்வதை நான் தடுத்த போது அவர்கள் எனது காலின் கீழ் சுட்டார்கள். மக்களின் இவ்வாறான எதிர்ப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்கு ஒரு காரணமாக உள்ளது" என இளம் தாய் மேலும் தெரிவித்தார்.

"நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காகவே வாக்களிக்கவுள்ளேன். இதன்மூலம் எமது பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதை நான் காண்பிக்க விரும்புகிறேன். ஆனால் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் எம்மை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் அதன் பின்னர் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள்" எனவும் இந்தத் தாய் தெரிவித்தார்.

இராணுவத்தின் எறிகணையின் போது தச்சுத் தொழிலாளி ஒருவர் தனது கையை இழந்திருந்தார். "போரின் போது நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். சிறிலங்கா இராணுவத்தினரால் எமது வீடு அழிக்கப்பட்டது. இதனைத் திருத்துவதற்கு எம்மிடம் பணம் இல்லை. நாங்கள் தற்போது சிறிய குடிசையில் வாழ்கிறோம். மழைக்காலத்தில், இந்தக் குடிசைக்குள் மழைநீர் வருகிறது" என தச்சுத் தொழிலாளி தெரிவித்தார்.

"எனது கையை இழந்ததால் என்னால் எந்தவொரு வேலையையும் செய்ய முடியவில்லை. நான் இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1500 ரூபா வரை சம்பாதிப்பேன். எனது மனைவி தற்போது கூலித் தொழில் செய்கிறார். நாளொன்றுக்கு 200 அல்லது 300 ரூபாக்களைப் பெறுவார். எனது மகள் உட்பட நாங்கள் அனைவரும் இந்தச் சிறிய வருமானத்திலேயே வாழ வேண்டியுள்ளது" என தச்சுத் தொழிலாளி மேலும் குறிப்பிட்டார்.

இராணுவத்திடம் சரணடைந்த போது ஒரு ஆண்டுக்குள் விடுவித்து விடுவதாக அவர்கள் தன்னிடம் தெரிவித்த போதும் தான் மூன்று ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டதாக மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்தார். "நான் விடுவிக்கப்பட்ட பின்னர் ஒருவரும் எனக்கு உதவவில்லை. போரின் போது எனது வீடு அழிவடைந்து விட்டது. நான் இங்கு நாளொன்றுக்கு 700 ரூபா வரை பெறுகிறேன். இந்தச் சம்பளத்தைக் கொண்டு நான் எவ்வாறு வீடு ஒன்றைப் புதிதாகக் கட்ட முடியும்?" என அவர் வினவினார்.

மொழியாக்கம் : நித்தியபாரதி


http://www.puthinappalakai.com/view.php?20131003109181

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.