Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குப் பிடித்த திரைப்படம்- கற்றது தமிழ்: டிசே தமிழன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த திரைப்படம்- கற்றது தமிழ்: டிசே தமிழன்

 

வாழ்வென்பது எரிந்துகொண்டிருக்கும் ஒரு மெழுகுதிரியைப் போலவோ என நினைப்பதுண்டு. ஒரு குச்சியின் உரசலில் எரியத்தொடங்கும் மெழுகுதிரி குறிப்பிட்ட நேரத்தில் மெழுகு முழுதும் உருகி அணைந்துவிடத்தான் செய்யும். எரிந்து அணையும் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு இடையில் கூட, மெழுகுதிரி எந்தக் கணத்திலும் அணைந்துவிடலாம். அதுபோலவே வாழ்க்கையில் சாவு என்பது இன்னொரு கரையில் நிச்சயம் இருக்கிறது என்று தெரிந்து பயணித்தாலும், நம் பயணங்கள் எல்லாம் அந்தக் கரையைப் போய்ச் சேரும் என்பதும் அவ்வளவு உறுதியானதில்லை. இடையிலும் எதுவும் நடக்கலாம், சுவடுகளற்று நாம் போகலாம். மிக எளிய கனவுகளோடு வாழத்துடிக்கின்ற ஆனந்தியும், பிரபாகரும் இடைநடுவில் அணைந்துபோகின்ற இரண்டு மெழுகுதிரிகளாய் ஆவதை 'கற்றது தமிழ்' திரைப்படத்தில் பார்க்கின்றேன்.

 

ஒவ்வொருவருக்கும் முதன்முதலாகத் தாம் பார்த்த திரைப்படங்கள் பற்றிய அனுபவம் மறக்கமுடியாது இருக்கும். நான் ஈழத்தில் வாழ்ந்த காலங்களில் தியேட்டர்கள் ஒரு வரலாற்றுச்சின்னம் போல எவ்விதத் திரைப்படங்களும் திரையிடப்படாது தோற்றமளித்துக் கொண்டிருக்கின்றன. போர் எதைத்தான் விட்டுவைக்கின்றது. மின்சாரம் மட்டுமின்றி, விளக்குகளுக்கு வேண்டிய மண்ணெண்ணெயே தட்டுப்பாடாக இருந்த காலமே என்னுடைய சிறுவயதுப் பருவம். அப்படி இருக்கும்போது தியேட்டர்களில் எல்லாம் படம் ஓடுமா என்று எதிர்ப்பார்ப்பதே சற்று அதிகப்படியானதுதான். 

 

k1.jpg

 

அப்படியிருந்தும் 'மழை நின்றபோதும் தூவானம் நிற்கவில்லை' போல அவ்வபோது சமாதானக் காலங்கள் வரும்போது மின்சாரம் வரும். அத்தகைய காலப்பகுதியில், ஊரே திருவிழாக்கோலம் பூண்டதுபோல -தொலைக்காட்சி, விசிஆர்- வாடகைக்கு எடுத்து இரவிரவாய் யாருடைய வீட்டிலாவது நான்கைந்து படங்கள் இடைவெளியில்லாது 'திரை'யிடப்பட்டிருக்கின்றன.  அதில் எப்போதும், முதற்படமாய் ஒரு ஆங்கில வீரதீரப்படம் இருக்கும். இரண்டாவதாய் நிறைய சண்டைகள் இருக்கும் தமிழ்ப் படம் கட்டாயம் இருக்கும். இந்த இரண்டு படங்களைப் பார்ப்பதற்குள்ளேயே என்னை நித்திராதேவி ஆரத்தழுவி அரவணைத்திருப்பார். இப்படிப் படங்களைத் திரையிடும்போது இன்னொரு சிக்கலும் இருக்கின்றது. ரீவி,விசிஆர் போன்றவற்றை வாடகைக்கு எடுப்பதற்கு அன்றைக்கு யார் உபயக்காரர்களாய்  இருக்கின்றார்களோ அவர்களின் செல்வாக்கு தெரிவுசெய்யப்படும் படங்களில் அதிகமிருக்கும். சிலவேளைகளில் அவர்களுக்கு வெளிநாட்டில் யாரேனும் உறவுக்காரர் இருந்தால், முதற்காட்சியாய் வெளிநாட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தையோ, பூப்புனித நீராட்டுவிழாவையோ பார்க்கும் சித்திரவதையும் கிடைக்கும். எனவே திரைப்படம் பார்ப்பது எப்போதும் எனக்கு ஓர் இனிய நிகழ்வாக இருக்கிறதென நீங்கள் நினைக்கக்கூடாது.  சில திரைப்படங்களைப் பார்க்கும்போது, அவர்கள் எங்களைத் துண்டு துண்டாக அறுத்து வதைப்பார்கள் என்று நீங்கள் முணுமுணுப்பதும் கேட்கிறது. எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை எனக்கூறப்படுவதைப் போல, எல்லாம் கூடியதுதான் திரைப்படங்களுமென நம்மை நாமே ஆறுதற்படுத்தவேண்டியதுதான்.

 

இவ்வாறாக நிறையச் சண்டைகாட்சிகளும், நகைச்சுவைக்காட்சிகளும் அமைந்த படங்களே மிகச்சிறந்தவை என நினைத்துக்கொண்டிருந்த என் கலைப்பார்வையை 'உழைப்பாளி'தான் மாற்றியது என்று கூறினால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். எப்போது மண்ணெண்ணெயில் இயங்கிக்கொண்டிருந்த ஜெனரேட்டர் நிற்கப்போகின்றதோ என்கின்ற பதற்றத்துடன் 'உழைப்பாளி' பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், ஏற்கனவே இந்தப் படத்தைப் பார்த்திருந்த நண்பன், 'இப்போது இந்தப்பாட்டில் பார், ரஜனியை ரோஜா தன் முன்பக்கத்தால் முட்டுவா' என்றான். அதன்பிறகு எனக்குச் சண்டைக்காட்சிகள் பிடிக்காமல் பாடல் காட்சிகள் நன்கு பிடிக்கத் தொடங்க பதின்மத்திற்குள் நான் நுழைந்திருந்தேன்.இவ்வாறாக என் 'கலைப்பார்வை' காலத்துக் காலம் மாறிக்கொண்டிருக்கையில், நான் எப்படி  இப்படியிருப்பதுதான் சிறந்த திரைப்படம் என அறுதியும் இறுதியுமாய்க் கூறமுடியும்? 

 

திரைப்படம் சார்ந்த கோட்பாட்டு விளக்கங்களை விரும்பி வாசிக்கும் ஒருவன் எனினும் அவை கூட ஒரு சிறந்தபடம் இதுதான்  எனக்கூறுவதில்லை. வேண்டுமெனில் இக்கோட்பாடுகள் நமக்குப் பிடித்த திரைப்படங்களில் நாம் தவறவிட்ட பக்கங்களைக் கண்டுகொள்ளவும், ஆழமாய் விளங்கிக்கொள்ளவும் உதவுகிறதென  கூறிக்கொள்ளலாம். மேலும் வெகுசனச் சினிமா, கலைப்படம் என்ற பிரிப்புக்களில் கூட நான் அவ்வளவு அக்கறைகொண்டதில்லை. எனக்குப் பிடித்த சினிமா, பிடிக்காத சினிமா என்று ஒரு எளிய புரிதலிற்காய் வேண்டுமானால் பிரித்துக் கொள்ளலாம்.

 

த்தனையோ தமிழ்த்திரைப்படங்களைப் பார்த்த நான் ஏன் 'கற்றது தமிழ்'ஐ பிடித்த ஒரு திரைப்படமாகத் தேர்ந்தெடுத்தேன் என யோசித்துப் பார்க்கின்றேன். முதலாவது இந்தத் தருணத்தில் 'கற்றது தமிழ்' பிடித்திருக்கின்றது. சிலவேளை இதை எழுதிமுடிக்கும்போது எனக்கு வேறொரு திரைப்படம் பிடித்திருக்கவும் கூடும். நாம் கடந்து வந்த பாதையில் தீர்க்கமாய் நம்பிய எத்தனை விடயங்களை காலப்போக்கில்  உதறிவிட்டு வரும்போது, எது பிடித்த திரைப்படம் என்பதில் குழப்பங்கள் வருவதென்பது இயல்பானதுதான் அல்லவா? 'கற்றது தமிழ்' ஏன் தவிர்க்கமுடியாத ஒரு திரைப்படமாய் எனக்குள் வந்தமர்ந்திருக்கிறது என்றால், இத்திரைப்படம் ஒவ்வொருகாட்சியிலும் நாம் ஒரு ஆனந்தியாகவோ, பிரபாகரராகவோ எந்தக்கணத்திலும் ஆகிவிடலாம் என்கின்ற பதற்றத்தைக் கொண்டுவருவதாலேயே எனக்கு நெருக்கமான உணர்வைத் தந்திருக்கின்றது என நினைக்கின்றேன். 

 

k4.jpg

 

படம் தொடங்கும்போதே எந்த வம்புக்கும் போகாத ஓர் அப்பாவியான- பிள்ளைகளுக்கு 'மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்' எனச் சொல்லிக்கொடுக்கின்ற ஆசிரியர், யாரோ இருவரின் காதல் ஆட்டத்திற்கு பலியாகின்றவராகக் காண்பிக்கப்படுகின்றார். அதனால் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்பட்டு பொலிஸ் ஸ்டேசனில் சித்திரவதைக்குள்ளாகும் பிரபாகர், நீதிமன்றம் செல்லும் வழியில் தப்பிச்செல்லும் ஓட்டம், இறுதியில் அவரும் ஆனந்தியும் இரெயினொன்றை இருட்குகையில் சந்திக்கும்வரை முடிவதேயில்லை.  முக்கியமாய் அநேக மனிதர்களுக்கு வாழ்க்கையில் தாம் ஏதும் தவறு செய்யாமல், எவரையும் ஏமாற்றாமல் இருந்தால் அமைதியான வாழ்வொன்று கிடைத்துவிடும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. அதை இப்படம், நல்லவர்களாய் இருப்பதால் நல்லதொரு வாழ்க்கை அமைந்துவிடுமா என்பதைக் கேள்விக்குட்படுத்துகிறது. இன்னும் நீட்டித்துப்பார்த்தால், நாம் எல்லோரும் கொண்டாடுகின்ற 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதையே ஒருவகையில் ஆட்டங்காணச் செய்கிறது.  நாம் தனியர்களாய் இருக்கவிரும்பினாலும் நமது வாழ்வு நம்மால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை, பிறராலும் தீர்மானிக்கப்படுகின்றது என்பதைப் பிரபாகரின் வாழ்வு திசைமாறிப்போகும்போது நமக்குப் புரிகிறது.

 

எல்லார் முன்னும் அவமானப்பட்டும், மயிர் நீங்கின் உயிர் வாழாக் கவரிமானாய் ஆக விரும்பி தற்கொலை செய்ய முயற்சித்தும் கூட பிரபாகரனுக்கு வாழ்வு நெடியது என்கின்றது விதி. ஆனால் தற்கொலை முயற்சியில் தப்பித்த பிரபாகர் முன்னைய பிரபாகர் அல்ல. 'நான் சிவனாகிறேன்' என தனக்குத்தானே சமாதானம் சொல்லி யார் யாரையெல்லாம் கொல்ல விரும்புகின்றாரோ அவர்களைக் கொன்று தன்னையொரு உருத்திரனாகப் பாவனையும் செய்துகொள்கிறார். இவ்வாறு பிரபாகர் ரிக்கெட் விற்பவரையும், ரெயினுக்குள் ரிக்கெட் பரிசோதிப்பவரையும் எழுந்தமானமாய் திரைப்படத்தின் தொடக்கத்திலேயே கொல்லும்போது, இப்படத்தைப் பார்ப்பவருக்கு அதிர்ச்சி வரத்தான் செய்யும். எல்லாவற்றுக்கும் பின்னாலும் ஒரு காரணமிருக்கும் என்கின்றதை இப்படத்தில் நடைபெறும் கொலைகள் உடைத்து நொறுக்குகின்றன. இப்படிக் கூட நாம் யோசித்துப் பார்க்கலாம், எத்தனை பேர் வாழவேண்டிய இளவயதில் எல்லாம் சட்டென்று மறைந்துபோகின்றார்கள். அவை ஏன் அவ்வாறு நிகழ்கின்றதென்பதும் நமக்குத் தெரிவதில்லை. அதை விளங்கிக்கொள்ளும் அல்லது விளங்கிக்கொள்ள முயற்சிக்கும் நாம்,  தான் சிவனாகியதாய் எண்ணிக்கொள்ளும் பிரபாகர்  எழுந்தமானமாய்ச் செய்யும் கொலைகளையும் ஏதோ ஒருவகையில் புரிந்து கொள்ள நிர்ப்பந்திக்கபடுகின்றோம். 

 

பிரபாகர் இளவயதில் நேசிக்கும் ஓவ்வொருவரும் இடைநடுவில் இறந்துகொண்டிருப்பதால் அவருக்கு ஏற்படக்கூடிய மனப்பிறழ்வு விளங்கிக்கொள்ளக்கூடியதென்றாலும், இத்திரைப்படத்தில் இன்னொரு முக்கிய பகுதியும் இருக்கிறது. அது எவ்வாறு இன்றைய உலகமயமாதலில், பிளவுகள் ஏற்பட்டு நமது மனிதாபிமானம் எப்படிச் சுருங்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கின்றது என்பது பற்றியது. 'கற்றது தமிழ்' - பிரபாகர் என்னும் அன்புக்கு ஏங்கும், சற்று மனப்பிறழ்வுக்கு உள்ளாகும் சாத்தியமுள்ள ஒருவரைப் படைத்திருந்தாலும், பிரபாகரைப் போல நாம் எவருமே - மனச்சிதைவுக்கு ஆளாகாமல் விட்டால்கூட-  இவ்வாறு கொலைகளைச்  செய்யும் ஒருவராய் மாறிவிடும் அபாயத்தைத்தான் இத்திரைப்படம் முன்வைக்கிறது என்பதையும் கவனித்தாகவேண்டும். பணம் தேடும் வாழ்வில் மிகப்பெரும் இடைவெளிகள் மனிதர்களுக்கிடையில் எப்படி  உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதையும், நாம் எப்படி பிறமனிதர்கள் மீது வைக்கும் அன்பையும் நம்பிக்கையையும் இழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதையும் ஒவ்வொரு காட்சியிலும் 'கற்றது தமிழ்' சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

 

பிரபாகர் மட்டுமில்லை, இப்படத்தில் வரும் அநேக கதாபாத்திரங்கள் பலமும் பலவீனமும் உள்ளவர்களாய்த்தான் படைக்கப்ப்ட்டிருக்கின்றனர். எந்த இடத்திலும் பிரபாகருக்கு 'நாயக விம்பம்' வழங்கப்படவேயில்லை. அவருக்கு ஆனந்தி மட்டுமே பரிசுத்தமான ஒர் உயிர். ஆகவே ஆனந்தியை அவரால் மனம் நிறைந்து நேசிக்கவும் முடியும்; அவள் காலத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டு செய்த தவறுகளைக்கூட பிரபாகரால் மன்னிக்கவும் முடிகிறது. ஆனால் அதே பிரபாகருக்கு, 'உனக்கு துணிச்சலிருந்தால் என்னைத் தொட்டுப்பார்' என்ற ரீ-சேர்ட்டை அணிந்த பெண் எரிச்சலூட்டுகிறாள். எனக்குத் தைரியமிருக்கிறது என அவளின் மார்புகளைத் தொடவும் செய்கிறான்.

 

k4.png

 

இங்கேதான் நமக்கு பிரபாகரை எப்படிப் பார்ப்பது என்னும் குழப்பம் வருகிறது. நமது காதலிகளைத் தேவதைகளாக்கியபடி, பிற பெண்களைப் பாலியல் சுரண்டல் செய்ய விரும்பும் நம் உள்மன ஆசைகள் பெருகத்தொடங்குகின்றன. நாம் தான் அந்தப் பிரபாகரோ என நினைக்கும் புள்ளி நம்மையின்னும் பதற்றமடையச் செய்கிறது. அது மட்டுமில்லை, பிரபாகர் ஆனந்தியோடு பஸ்சில் பயணிக்கும்போது, ஆனந்தி ஒரு விலைமாது எனத் தெரிந்து சேட்டை செய்கின்ற மனிதரை பிரபாகர் அடித்து உதைப்பதேயில்லை. மென்மையாக 'அவள் எனக்குரியவள்' என்பதைச் சொல்லிவிட்டு அந்த நபரை விட்டுவிடுகின்றார். ஒரு பெண்  'உனக்குத் தைரியமிருந்தால் என்னைத் தொட்டுப் பார்' என்றோ அல்லது 'என் பட்டன்களை கழற்று' என்கின்ற வாசகங்களையுடைய ஆடையை அணிந்திருப்பதோ உறுத்தச் செய்யவும், அதனால் பதற்றடையும் பிரபாகர் ஏன் பாலியல் சேட்டை செய்யும் ஆணோடு மூர்க்கமே கொள்வதில்லை? இதைவிட ஆண் மனதின் பெண்களில் அதிகாரம் செலுததும் வேட்கையை தெளிவாகச் சொல்லிவிடமுடியுமா? இன்றும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாவதற்கு, அவர்கள் அணியும் ஆடைகளே என தம் வக்கிரகங்களை மறைக்கக் காரணம் சொல்லிக்கொண்டிருக்கும் ஆண்கள் இருக்கின்றார்களா இல்லையா?  

 

தமிழைக் கற்பதால் எவ்வளவு அவமானப்பட வேண்டியிருக்கிறது என்பது பற்றி வரும் காட்சிகளும் கவனத்தில் கொள்ளவேண்டியது. வெளியிடங்களில் மட்டுமில்லை, தமிழ்த்துறையிலேயே ஒருவன் நல்ல புள்ளிகள் எடுத்தும் -தமிழைக் கற்கவிரும்புகின்றான் என்பதற்காய்- எவ்வளவு அவமானப்படுத்தப்படுகிறான். ஆனால் பிரபாகர் தனக்குப் பிடித்த தமிழைக்கற்று ஓரு ஆசிரியராகவும் ஆகி விடுன்றான். அவன் ஓரிடத்தில் தமிழ் சாந்தத்தைக் கற்றுத்தரும், அதேவேளை தேவையெனில் ரெளத்திரமாய் இருக்கவும் முடியுமெனச் சொல்கின்ற இடம் அற்புதமான தருணம்.

 

இதைத் தவிர்த்து இந்தப் படத்தில் ஒலிக்கமுனையும் பன்மைக்குரல்களையும் நாம் அவதானிக்கலாம். பிரபாகர் தனது சாட்சியத்தைப் பதிவுசெய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்ப்பான பின், ஏதோ வாசகம் எழுதிய ரீசேர்ட் அணிந்த ஒரு பெண்  கருத்துக் கூறுவார் 'நாங்கள் இப்படி எதுவும் எழுதாத ஆடைகள் அணிந்து வந்தால் கூட,   இவங்கள் ஏதோ அங்கே பார்க்காமலா இருக்கபோகிறாங்கள்' என்பதெல்லாம் பிரபாகரின் சாட்சியத்தை குலைக்கமுயல்பவை. அதேசமயம் இன்னொருகுரல், வளர்ச்சி என்பது இயல்பான நிலையில் நடக்கவேண்டும். உடலில் கால்மட்டும் வீங்கினால் அது வளர்ச்சியல்ல வியாதி எனக்கூறுவது கவனத்தில் கொள்ளவேண்டியது. அந்நியமோகத்தையும், ஐடி தொழிலையும் விமர்சிக்கும் பிரபாகருக்கு, அவர்கள் இறுதிக்கச்சாய்ப் பொருளே தவிர, இதற்கு முதன்மைக்காரணங்கள் அரச இயந்திரமும் அரசியல்வாதிகளும் என்பதை எவ்வளவு எளிதாகக் கடந்துபோகமுடிகிறது? தமிழை இன்னும் தாழ்த்தியதும், வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியதும்  இந்த ஜ.டிக்காரகளா? தமிழ் தமிழ் என்று தமிழுக்காய்த் தீக்குளிப்போம் என் அப்பாவி இளைஞர்களை பலியாக்கவும் தயங்காத அரசியல் கட்சிகள் அல்லவா இவற்றுக்கு முக்கிய காரணம்? அவர்களை நோக்கியல்லவா பிரபாகர் பேசியிருக்கவேண்டும்?  இதையொரு பலவீனமாய்த்தான் கொள்ளவேண்டியிருக்கிறது. இதையெல்லாவற்றையும் விட பிரபாகர் இறுதியில் கூறுவதைத்தான் நாம் இன்னும் கவனத்துடன் கேட்கவேண்டும். இப்போது ஏழைகள் பணக்காரர் என்று இருபெரும் பிரிவுகள் வந்துவிட்டன. இனி சின்ன விசயத்திற்குக்கூட மனிதர்களை மாறி மாறி கொல்லவும் துணியத் தயங்கமாட்டார்கள் என்னும் குரல்.

 

k2.jpg

 

னந்தியின் பாத்திரம் அவ்வளவு இயல்பாய் 'கற்றது தமிழில்' இருக்கிறது. காதலிக்க விரும்பும் மனதையும், அதை வெளிப்படையாகக் காட்ட முடியாத அவதியோடு அவரது வாழ்வு நூலறுந்து பட்டம் போல அலைகிறது. ஆனந்தியாக நடிக்கும் அஞ்சலி ஒவ்வொருமுறையும் 'நிஜமாய்த்தான் சொல்கிறியா' எனக் கேட்கும் ஒவ்வொரு தருணங்களும் கவிதைக்கு நிகர்த்தது.காலத்தின் நிர்ப்பந்தத்தால் ஆனந்தி பாலியல் தொழிலாளியாக மாறியபோது - தான் எழுந்தமானமாய் கடற்கரையில் சுட்டுக்கொன்ற காதலர்களில்- ஆனந்தியும் ஒருத்தியாக இருந்திருந்தால் என்னவாயிருக்குமென பிரபாகர் எண்ணிப்பார்த்திருப்பாரா? அப்படி அவர் தன் ஆனந்தியைப் போலத்தான் பிறரும்... என நினைத்திருந்தால் எந்தப் பெண்ணையும் வெறுத்திருக்கமாட்டார் அல்லவா?  ஆகவேதான் சொல்கிறேன் பிரபாகரை எப்படிப் புரிந்துகொள்வதென்ற சிக்கலே இன்னுமின்னும் என்னை இப்படத்தைப் பற்றி யோசிக்க வைக்கிறது. 

 

பிரபாகர் தனக்கான அறத்தோடு வாழும் ஒருவரே தவிர,  பொது அறம் என நாம் விவாதிக்கும் எவற்றிலும் அவருக்கு அக்கறையே இருப்பதேயில்லை.எனவேதான் பிரபாகர் என்கின்ற பாத்திரம் ஒவ்வொருமுறையும் இதுதான் அவர் என நினைக்கின்றபோது இன்னொரு வடிவம் எடுத்துவிடுகின்றது. அது இத்திரைப்படத்தைப் பார்க்கும் நமக்குத் திகைப்பூட்டுவதாய் இருக்கிறது. மேலும் மேலும் இதுகுறித்து உரையாடும் வெளியைத் திறந்தபடி 'கற்றது தமிழ்' ஆகிவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் பல்வேறு தன்னிலைகளால் ஆக்கப்பட்டவர்கள். வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வும், வாழ விரும்பும் வாழ்வும் கூட இருவேறு துவிதங்களாய்க்  இருக்கலாம். அது இன்னும் நம் தன்னிலைகளை அடித்துத் துவசம் செய்கின்றன. 

 

நாம் நம் தன்னிலைகளில் பிரபாகரைப் பார்க்கின்றோம். நம்மால் செய்யமுடியாததைப் பிரபாகர் செய்யும்போது நெருக்கத்தையும், ஆனால் அதேசமயம் பிரபாகர் நாம் விரும்பி  ஆகும் பாத்திரம் அல்ல என்று உணர்கின்றபோது விலகலையும் அடைகின்றோம்.  எனவேதான் இந்தத் தருணத்தில் 'கற்றது தமிழ்' எனக்குப் பிடித்த திரைப்படமாய் அமைந்திருக்கிறது போலும்.

 

 

(நன்றி: 'காட்சிப்பிழை' - ஒக்ரோபர் 2013)

 

http://djthamilan.blogspot.co.uk/2013/12/blog-post_7.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.