Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி அரசு ஈழத்தமிழருக்கு நன்மை செய்வதாக இருந்தால் சம்பூர் அனல் மின்னிலையத் திட்டத்தை கைவிட வேண்டும்:

Featured Replies

modi%201_CI.jpg

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்குச் சென்று நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச உடனடியாக சம்பூர் அனல் மின்னிலைய வேலைத் திட்டங்களை தொடங்க வேண்டும் என்று பணிப்பு விடுத்திருக்கிறார். இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, நீதி, நியாயம் கிடைக்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கு எதிரொலியாக உடனேயே ஈழத் தமிழர்களுக்கு அநீதி இழைக்க வேண்டும் என்ற நோக்கில் சம்பூர் அனல் மின்னிலையத்தை தொடங்கும்படி இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச உத்தரவிட்டிருக்கிறார்.

சம்பூர் ஈழத் தமிழர்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் கிராமம். ஈழத் தமிழர்களின் தாயக நிலப் பகுதியான கிழக்கில் திருகோணமலையில் இருக்கும் இந்த சம்பூர் கிராமம் பெயருக்கு ஏற்ப அழகு நிறைந்த கிராமம். கொட்டியாராப்பற்று என் பாரம்பரியமாக அழைக்கப்பட்டு வந்த நிலப்பகுதியில் சம்பூர் அமைந்துள்ளது. சம்பூர் பிரதேசத்தில் சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு, நவரட்ணபுரம், கடற்கரைச்சேனை ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இருக்கின்றன. மக்கள் செறிந்து வாழும் இந்தக் கிராமங்கள் விவசாயத்தில் செல்வம் கொழிப்பவை.

நான்காம் ஈழப்போர் தொடங்கிய பொழுது முதல் முதலில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசம் சம்பூர்பகுதியே. புலிகளிடமிருந்து மக்களை மீட்பதற்காக மனிதாபிமான யுத்தம் செய்கிறோம் என்று தெரிவித்து இலங்கை அரசு யுத்தத்தை தொடங்கிய நாட்களில் முதன் முதலில் அகதியாக்கப்பட்டவர்கள் சம்பூர் மக்கள். சம்பூர் மக்களின்மீது இலங்கை இராணுவப் படைகள் யுத்தம் தொடுத்த 2006.04.26 அந்த நாளை சம்பூர் மக்கள்யாரும் இன்றுவரை மறந்துவிடவில்லை.  

அன்றைய நாளில் சம்பூர் கிராமம்மீது மிகக் கடுமையான விமானத்தாக்குதல்களும் எறிகணைத்தாக்குதல்களும் நடத்தப்பட்டன. மக்கள் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று சனங்கள் பலரும் செத்துச் சிதறுவதைப் பார்த்த மக்கள் இரவோடு இரவாக சம்பூரை விட்டு இடம்பெயர்ந்ததார்கள். காலம் காலமாக வாழ்ந்த நிலத்தை விட்டு போகும் திசை அறியாதது செல்லத் தொடங்கினார்கள் மக்கள்.

அன்று இடம்பெயர்ந்த மக்கள் இன்றுவரையில் அகதி முகாங்களிலேயே தங்கியிருக்கிறார்கள். இன்று முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. சம்பூர்மீதான யுத்தம் தொடங்கி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. திருகோணமலை மூதூரில் உள்ள கிளிவொட்டி, பட்டித்திடல், மணற்சேணை, கட்டைப் பறிச்சான் முதலிய இடங்களில் இந்த மக்கள் அனுபவிக்கும் அவலங்கள் சொல்லி மாளாதவை. ஏழு ஆண்டுகளைக் கடந்தும் நிலம் மறுக்கப்பட்ட, நிலம் பறிக்கப்பட்ட சனங்களாய் அகதி முகாங்களில் உள்ளனர்.

இந்த மக்களின் நிலத்தை யுத்தம் மூலம் கைப்பற்றிய இலங்கை அரசு அவற்றை நிரந்தரமாக சுவீகரிப்பற்காக 2007 ஆம் ஆண்டு மே 30ஆம் திகதி வர்த்தமானியில் சம்பூர் அனல் மின்னிலையத்திற்கான நிலச்சுவிகரிப்பு பற்றிய அறிவித்தலை விடுத்தது. இந்தத் திட்டடத்தில் சுமார் 1700 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டது. நிலத்தடி நீர், கடல் வளம்,  மண் வளம், மரங்கள் என்று அழகும் வளமும் கொண்ட சம்பூரில் 530 குடும்பங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்காவர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இலங்கை அரசு சம்பூரில் அனல் மின்னிலையம் அமைக்கும் திட்டத்தை ஏன் ஒப்பந்தம் செய்தது என்பதுதான் இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வியாகும். ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா சாதகமான - பாதகமான தொடர்புகளைக் கொண்டிருக்கிறது  ஈழத் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் செய்தபோது அதற்கு முன்னாள் இந்திய அரசாங்கம் தாராளமான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கியது. இந்தியாவுக்கும் இலங்கைக்;கும் இடையில் வைத்து ஈழத் தமிழர்களை ஒடுக்கும் ஒரு நோக்கத்துடன் இலங்கை அரசு இந்த திட்டத்தை முன்வைத்தது.

அபிவிருத்திக்காக மக்கள் நிலங்களை தியாகம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு கூறி வருகிறது. அனல் மின்னிலையத்திற்கான சம்பூர் நில அபகரிப்பும் இராணுவ குடியிருப்புக்காக யாழ்ப்பாணம் வலி வடக்கு நில அபகரித்தலும் ஒன்றே. சம்பூர் அனல் மின்னிலைய ஒப்பந்த்தின்மூலம் ஈழ மக்களின் முழு நிலங்களையும் அபகரிக்கும் தனது நடவடிக்கைக்கு இலங்கை அரசு பாதுகாப்பு அமைத்துக் கொள்கிறது.

சம்பூர் விடயத்தில் இந்தியாவின் தலையீட்டை ஏற்படுத்தி ஈழ மக்களின் நிலங்களை அபகரிக்கும் விடயங்களில் இந்தியாவின் தலையீட்டை மாத்திரமின்றி எந்த ஒரு நாட்டின் தலையீட்டையும் இல்லாமல் செய்து அதன் மூலம் ஈழ மக்களின் ஒட்டுமொத்த நிலத்தையும் அபகரிப்பதே ராஜபக்சவின் நோக்கம். ஈழ மக்களுக்கு எதிரான யுத்தத்தின்போது உலகின் வல்லாதிக்க நாடுகள் பலவற்றையும் ஒன்றிணைத்து யுத்தம் தொடுத்த நிலையை ஏற்படுத்தியதற்கு ஒப்பானது இது.

ஈழ மக்களுக்கு எதிரான யுத்தத்திற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு பரிசாக சம்பூர் நிலம் அனல் மன்னிலையம் கொடுக்கப்பட்டது. இந்திய மற்றும் தமிழக மக்களின் இலங்கை மீதான எதிரப்பை கட்டுப்படுத்தும் நோக்கமும் இதற்குண்டு. இதைத் தவிர சம்பூரை மக்களிடமிருந்து பறிப்பதற்கு இலங்கை அரசுக்கு அனல் மன்னிலையம் ஒன்றை அமைக்கவேண்டிய தேவையும் இருந்தது. சம்பூரை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் அபகரிக்க இந்தியா தேவையாக இருந்தது. இந்தியா இந்த விடயத்தில் தலையிடுவதால் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தலையிட முடியாது என்றும் சம்பூர் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்காது என்பதும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவின் திட்டமாகும்.

இப்படி சம்பூர் அனல் மின்னிலையத் திட்டம் என்பது பல்வேறு அரசியல்கள் நிறைந்த திட்டமாகும். அதன் நோக்கம் மாத்திரம் மிகவும் தெளிவாக தெரிகிறது. கிழக்கு ஈழ மக்களின் நிலத்தை அபகரிப்பதுவே அதன் நோக்கம். அனல் மின்னிலையம் அமைக்கிறோம் என்று அந்தக் கிராமம் முழுவதும் கையகப்படுத்துவதும் அனல் மின்னிலையத்திற்காக உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அந்தப் பகுதியில் இராணுவத்தை நிலை நிறுத்துவதுமே நோக்கம். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியை இராணுவ – சிங்களக் குடியேற்றமாக மாற்றுவதே சிங்கள அரசின் திட்டம் என்பது வெளிப்படையானது.

சம்பூர் மக்கள் வாழும் வாழ்க்கை மிகவும் கொடியது. அவர்கள் வளமும் அழகும் நிறைந்த தங்கள் ஊரினை நிலத்தினை பிரிந்து இன்று தகரக் கொட்டகைகளிலும் வெட்டாந் தரைகளிலும் வாழ்கிறார்கள். மழைகாலத்தில் அவர்கள் வசிக்கும் வயல் நிலங்கள் இடங்கள் சகதியாகின்றன. கோடை காலத்தில் அனல் பறக்கின்றன. அந்த தகரக் கொட்டகைகளில் வசிக்கும் அந்த குழந்தைகளின் எதிர்காலம் என்ன? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? தங்கள் நிலத்தை பிரிந்து அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்களின் பூர்வீக நிலத்தைக் காணாமலே அகதிகளாக வாழ்கிறார்கள்.

சம்பூர் மக்கள் தங்கள் நிலத்தை தங்களிடம் கையளிக்க வேண்டும் என்று கோரி இலங்கை உயர்நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்கள். அங்கு அனல் மின்னிலையம் அமைக்கும்படியும் அந்த இடத்தைச் சேர்ந்த மக்களை வேறு இடங்களில் குடியேற்றும்படியும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அந்தமக்களோ தங்கள் சொந்த நிலமே தங்களுக்கு வேண்டும் என்றும் எந்த மாற்றிடயங்களிலும் குடியேற மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு அகதிவாசம் இருக்கிறார்கள். இந்த மக்களை மாற்றிடங்களை குடியேற்றி சம்பூரைக் கைப்பற்ற சிங்கள அரசு கடுமையாகத் துடித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் ஊருக்கு மீண்டும் போவோம் என்ற கனவைத் தவிர அந்த மக்களிடம் எதுவும் இல்லை.

சம்பூருக்கு மக்கள் திரும்புவதிலிருந்தே சிங்கள இராணுவத்தினால் அபகரிக்கப்பட்ட ஈழத்தின் பல கிராமங்களுக்கு மக்கள் திரும்புவதும் சாத்தியமாகும். அதற்கு சம்பூர் அனல் மின்னிலையத்தை இந்தியா கைவிட வேண்டும். ராஜபக்ச தனது சொந்த ஊரில் சர்வதேச விமான நிலையத்தையும் விளையாட்டரங்கையும் அமைத்துக் கொண்டு  அனல் மின்னிலையத்தை மாத்திரம் ஏன் ஈழத்தில் அமைக்கிறார்? இந்த விடயத்தை தமிழக முதல்வரும் ப.ஜ.கவினரும் இந்தியப் பிரதமருக்கு எடுத்துரைக்க வேண்டும். மோடி அரசு ஈழ மக்களுக்கு நன்மை செய்வதாக இருந்தால் சம்பூர் அனல் மின்னிலையத்தை கைவிட வேண்டும். ஏனெனில் சம்பூர் அனல் மின்னிலையம் ஈழ மக்களை பலியாக்கும் ஒரு அபாயப் பொறி.  

தீபச்செல்வன்

globaltamilnews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.