Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் உலகப் போரைத் தூண்டிய படுகொலையின் நூறாண்டு

Featured Replies

140627143239_tamil_ww1_640_0b.jpg

முதல் உலகப் போரைத் தூண்டிய படுகொலையின் நூறாண்டு

 

இளவரசர் ப்ரான்ஸ் பெர்டினாண்ட் படுகொலை, ஜூன் 28, 1914

140627140730_tamil_ww1_640_1.jpg

சரயோவாவில் கொலை

ஆஸ்திரிய பட்டத்து இளவரசர் ஆர்ச்ட்யூக் ப்ரான்ஸ் பெர்டினாண்ட் மற்றும் அவரது மனைவி சோபி, ஆகிய இருவரும், செர்பிய தேசியவாதி, காவ்ரிலொ ப்ரின்சிப் என்பவரால் கொலை செய்யப்பட்டது, ஆறே வாரங்களில் போர் மூளச் செய்யும் தொடர் நிகழ்ச்சிகளைத் தூண்டியது. இது அடுத்த நான்காண்டுகளுக்கு நீடித்த மேலும் பரவலான மோதலுக்கு வழிவகுத்தது.

 

போருக்கு இட்டுச்சென்ற வாரம், ஆகஸ்டு 1-12, 1914

140627140733_tamil_ww1_640_2.jpg

நெருக்கடியில் ஐரோப்பா

ஆகஸ்டின் முதல் இரு வாரங்களில் நெருக்கடி முற்றுகிறது. ஐரோப்பிய நாடுகள் உலகை மோதலில் ஆழ்த்துகின்றன. ஜெர்மனி, ரஷ்யா மீதும் பிரான்ஸ் மீது போர் தொடங்குகிறது. பெல்ஜியத்தையும் தாக்குகிறது. பிரிட்டன் பெல்ஜியத்துக்கு ஆதரவாக ஜெர்மனி மீது போர் தொடுக்கிறது. ஆஸ்திரிய-ஹங்கேரி , ரஷ்யா மீதும், செர்பியா ஜெர்மனி மீது போர் தொடுக்கின்றன.

டேனன்பர்கில் ரஷ்யா படுதோல்வி, ஆகஸ்டு 20, 1914

140627140735_tamil_ww1_640_3.jpg

கிழக்கில் மோதல்

ரஷ்யப் படைகள், கம்பின்னென் என்ற இடத்தில் ஜெர்மன் நிலைகளைத் தாக்குகின்றன. இரண்டாவது ராணுவப் பிரிவு , மேலும் தெற்காக நுழைகிறது. ஆனால் கடுமையான கள நிலவரம் காரணமாக, ரஷ்யர்கள் முன்னேற முடியாமல், ஜெர்மன் படைகள் மீண்டும் அணி திரள அனுமதித்து விடுகின்றனர். ஜெர்மனி , ரஷ்யர்களின் இரண்டாவது ராணுவப்பிரிவை முறியடிக்கின்றது. டேனன்பர்க் போர் என்று அறியப்படும் இந்த மோதல்களில் 1.25 லட்சம் ரஷ்யப் படையினர் சிறைப் பிடிக்கப்படுகின்றனர்.

 

காலனிகளில் போர் பரவுகிறது, ஆகஸ்டு 25, 1914

140627140737_tamil_ww1_640_4.jpg

டோகோ ஒலிபரப்பி அழிக்கப்பட்டது

ஐரோப்பிய நாடுகள் ஆப்ரிக்கக் கண்டத்தில் வைத்திருந்த காலனிகளுக்கும் போர் பரவுகிறது. கமீனாவில் அமைந்திருக்கும் ஜெர்மனியின், பிரதான வெளிநாட்டு வயர்லஸ் ஒலிபரப்பி டோகோ என்ற இடத்தில் அமைந்திருந்தது. ஜெர்மானியர்கள் இந்த ஒலிபரப்பியை தாங்கள் சரணடைவதற்குள் அழித்து விடுகிறார்கள். ஜெர்மன் காலனியான கேமரூனைத் தோற்கடிப்பது மேலும் கடினமாக இருந்தது. இந்தக் காலனியின் தலைநகரமான, டூவாலா, இறுதியாக, செப்டம்பர் 27ல் பிரெஞ்சு செனகல் படைகளிடம் வீழ்ந்தது.

 

மார்ன் ரத்தக்களறி, செப்டம்பர் 5-12, 1914

140627140739_tamil_ww1_640_5.jpg

ஜெர்மன் முன்னேற்றம் நிறுத்தப்படுகிறது

ஜோசப் ஜோப்ர் தலைமையிலான பிரெஞ்சு ராணுவம் , ஜெர்மனி 1871ல் இணைத்துக்கொண்ட பிரெஞ்சு பிரதேசங்களான அல்சேஸ் மற்றும் லொரெய்ன் மீது தாக்குதலைத் தொடங்குகிறது. ஆனால் ஆரம்ப கட்ட வெற்றிகளுக்குப் பின்னர், பிரெஞ்சுப் படைகள் ஜெர்மானியர்களால் பின் தள்ளப்படுகின்றனர். இதனிடையே, ஜெர்மானியப் படைகள் வட பிரான்ஸ் வழியாக வந்து, பாரிஸின் கதவைத் தட்டும் தூரத்தில் நிற்கின்றனர். செப்டம்பர் ஆனால், பிரான்ஸ் தனது படைகளை திருத்தியமைத்து, பதில் தாக்குதலைத் தொடுக்கும் நிலைக்கு வருகிறது. பல நாட்கள் நீடித்த மார்ன் மோதல், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு பெரும் வெற்றியைத் தருகிறது.

 

செர்பியாவில் முட்டுக்கட்டை நிலை, செப்டம்பர் 7, 1914

140627140741_tamil_ww1_640_6.jpg

செர்பியர்கள் மீது தாக்குதல்

போர் தொடங்கிய நிலையில், ஆஸ்திரிய-ஹங்கேரி, செர்பியாவின் தலைநகர் பெல்கிரேட் மீது குண்டுகளை வீசுகிறது. செர்பிய ராணுவத்திடம் நல்ல ஆயுதங்கள் இல்லை. ஆனால் பால்கன் பகுதி யுத்தங்களில் இரண்டாண்டு காலம் பங்கேற்று உரமேறியிருந்த செர்பியர்கள், பதில் தாக்குதலைத் தொடுத்து, செப்டம்பர் 17லிருந்து 19ந்தேதி வரை நடந்த மோதலில் , ஆஸ்திரிய ஹங்கேரிப் படைகளை பின் தள்ளுகின்றனர். ஒரு மாதத்துக்கு பின்னர் ஆஸ்திரிய ஹங்கேரி மீண்டும் செர்பியாவுக்குள் நுழைகிறது . பத்து நாட்கள் நடந்த மோதலுக்குப் பின், செர்பியாவுக்குள் பல முக்கிய இடங்களைப் பிடிக்கிறது. இந்த ஆண்டு முடிந்த நிலையில், எந்தத் தரப்பும் எந்த நிலப்பரப்பையும் பிடிக்கவில்லை. ஆனால் இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் மிகவும் அதிகம்.

 

மேற்குப்பகுதியில் இந்தியப் படையினர் வலு சேர்க்கின்றனர், செப்டம்பர் 26, 1914

140627140743_tamil_ww1_640_7.jpg

இந்தியப் படைகள் வந்தடையும் காட்சி

மார்செய் நகரில் இந்தியப் படைகள் வரத் தொடங்குகின்றன. ஒரு மாதத்துக்குப் பின்னர் மேற்குப் போர் முனையில், ஈப்ரெயில் அவர்கள் போரில் ஈடுபடுகின்றனர். முதன் முறையாக இந்தியப் படைகள் ஐரோப்பிய மண்ணில், பிரிட்டிஷ் படையினருடன் இணைந்து போரிடுகிறார்கள். ஈப்ரெயில், சிப்பாய் குடாடாட் கான் தீரத்துடன் சண்டையிட்டதற்காக, விக்டோரியா சிலுவை விருது பெறும் முதல் தெற்காசியப் படை வீரராகிறார். ஜெர்மானியப் படைகளின் முன் நகர்வுக்கு மடை போடுவதில் இந்தியத் துருப்புக்கள் முக்கிய பங்காற்றின. மொத்தமாக, இந்த முதல் உலகப் போரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் பங்கேற்றனர். மேற்குப் போர் முனையில் மட்டும் 7,700 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர்.

 

முற்றுகைக்குப் பின்னர் சீனத் துறைமுகத்தை ஜெர்மானியர்கள் கைவிட்டனர், அக்டோபர் 16, 1914

140627140746_tamil_ww1_640_8.jpg

த்சிங்டாவை ஜப்பான் தாக்குகின்றது

சீனாவில் ஜெர்மானியக் காலனியான த்சிங்டாவின் மீது ஜப்பானியப் படைகள் தாக்குதல் தொடுக்கின்றன. இந்தத் துறைமுகத்தை ஜெர்மனி 1898லிருந்து வைத்திருந்தது. குன்றுகளாலும், அரண்களாலும் பாதுகாக்கப்பட்ட இந்த நகரில் இருந்த சுமார் 5,000 ஜெர்மானியப் படைகளை இந்திய மற்றும் பிரிட்டிஷ் படைகளின் உதவியுடன், ஜப்பானியப் படையினர் 60,000 பேர் முற்றுகையிட்டனர். பல வான் வழி மற்றும் கடல் வழி மோதல்களுக்குப் பின்னர், ஏழு நாட்கள் நடந்த இந்த குண்டுத் தாக்குதலை அடுத்து , ஜெர்மானியப் படைகள் சரணடைகின்றன.

 

ஜெர்மானியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு ஆப்ரிக்காவில் பிரிட்டிஷார் பின்னடைவு, ம் ஆண்டு நவம்பர் 2 முதல் 5 வரை, 1914

140627140748_tamil_ww1_640_9.jpg

டாங்கா பேரழிவு

கிழக்கு ஆப்ரிக்காவில் ஜெர்மானியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த டாங்கா என்ற துறைமுகத்தைப் பிடிக்க பிரிட்டிஷார் எடுத்த முயற்சி பெரும் தோல்வியில் முடிகிறது. எண்ணிக்கை குறைவான நிலையிலும், ஜெர்மானியப் படையினர், இந்திய தாக்குதல் படை தொடுத்த தாக்குதலை முறியடிக்கின்றனர். ஜெர்மானியப் படைகள், போர்த்தந்திரம் தெரிந்த தளபதி,ஜெனரல் பால் வோன் லெட்டோவ் வொர்பெக் என்பவரால் வழி நடத்தப்படுகின்றனர். இந்தக் கிழக்கு ஆப்ரிக்கப் போர் முழுவதும், வோர்பெக் தலைமையில் போரிட்ட பெரும்பாலும் கிழக்கு ஆப்ரிக்கப் படையினர், இந்த நிலப்பரப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு தங்களுடன் மோத வருபவர்களைக் காட்டிலும் ஒரு படி முன்னேயே நின்றனர். அது மட்டுமல்லாமல் அவர்கள் மீது கெரில்லா பாணியில் பதில் தாக்குதல்களையும் தொடுத்தனர். 1918 நவம்பரில் நடந்த இறுதி யுத்தம் வரை, வோர்பெக் தொடர்ந்து போரிட்டார்.

 

பாக்லந்து தீவுகளில் கடற் சண்டையில் ஜெர்மானியர்கள் தோல்வி, டிசம்பர் 8, 1914

140627140750_tamil_ww1_640_10.jpg

ஜெர்மானிய கப்பல் மூழ்கடிப்பு

முதல் உலகப் போரின் பெரும் கடல்மோதல்களில் ஒன்று பாக்லாந்து தீவுகளுக்கு அருகே நடந்தது. ஜெர்மனியின் தூரக்கிழக்கு கடற்படைப் பிரிவின் பெரும்பகுதியை பிரிட்டிஷ் கடற்படை ஒன்று மூழ்கடித்தது. ட்ரெஸ்டன் என்ற கப்பல் மட்டும் தப்பிச் சென்று, 1915 மார்ச் வரை பிரிட்டிஷ் படைகளிடமிருந்து தப்பியே நிற்கிறது. ட்ரெஸ்டனில் பணியாற்றிய உளவுத்துறை அதிகாரி வில்ஹெல்ம் கேனரிஸ் . இவர் மற்றவர்களுடன் சிலியில் சிறைப் பிடிக்கப்படுகிறார். அங்கிருந்து தப்பிய அவர்,தனது சரளமான ஸ்பானிய மொழிப் புலமையைப் பயன்படுத்தி ஜெர்மனி திரும்பி, ஹிட்லரின் ராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குப் பின்னர் தலைவராகிறார்.

என்வர் பாஷா துருக்கியர்களை ரஷ்யர்களுக்கு எதிராக தலைமை தாங்கிச் செல்கிறார், டிசம்பர் 22, 1914

140627140752_tamil_ww1_640_11.jpg

துருக்கியின் மாரிக்காலத் தோல்வி

என்வர் பாஷாவின் தலைமையில் துருக்கியத் துருப்புக்கள், காகசஸ் பகுதியில் ரஷ்யர்களைத் தாக்குகின்றனர். ரஷ்யர்கள் கடுமையாகப் போரிடுகின்றனர். 1915 , ஜனவரி மத்தியில், பல வாரங்களாக, கடும் பனியிலும், குளிரிலும், மலை உயரங்களிலும் நடந்த கடும் போருக்குப் பின்னர், துருக்கியர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். துருக்கியின் மூன்றாவது ராணுவப் பிரிவு,சுமார் 90,000 படையினரை இழக்கிறது. இவர்களில் பலர் கடும் பனிக்கே இரையாயினர் என்று கருதப்படுகிறது.

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/06/140627_ww1_timeline.shtml

 

உலகப் போர்: தெரியாத 12 உண்மைகள்
xwar3_1977285h.jpg.pagespeed.ic.PcCT_6pb
 

முதலாம் உலகப் போர் நூற்றாண்டில் நமக்குத் தெரியாத சில தகவல்களை பி.பி.சி. தருகிறது…

உலகப் போர் என்றாலே ஐரோப்பிய நாடுகளின் போர்க்கள நெடுங்குழிகளில் நடந்த ரத்தக்களரிகள்தான் நம் நினைவுக்கு வரும். அதுதான் உண்மையும். இதுதவிர, உலகப் போர்குறித்து நமக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. உலகப் போர் சீனா வரை ஊடுருவியது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆசியா, வடக்கு அமெரிக்கா, கரீபியத் தீவுகள், ஆஸ்திரேலியேசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்தும் வந்த வீரர்கள் இந்தப் போரில் ஈடுபட்டது உங்களுக்குத் தெரியுமா?

முதலாம் உலகப் போர் தொடர்பாக நீங்கள் அறிந்திராத, ஆச்சரியமளிக்கும் 12 தகவல்களை பி.பி.சி. வெளியிட்டிருக்கிறது.

1. பிரான்ஸில் வெடித்த குண்டுச் சத்தம் லண்டன் வரை கேட்டது

போர்க்களத்தின் நெடுங்குழிகளிலும் சகதியிலும் மூர்க்கமாகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, போர் வீரர்களின் கால்களுக்கு அடியில் வேறு வகையான போர் ஒன்று நடந்துகொண்டிருந்தது. கண்ணிவெடி புதைப்பவர்களின் குழு ஒன்று, எதிரிகளின் நெடுங்குழிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைப்பதற்காக 100 அடி வரை குழி தோண்டியது. பெல்ஜியத்தில் உள்ள மெஸேன் ரிட்ஜ் என்ற பகுதியில் 19 சுரங்க வழிகளில் 4,08,233 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்யப்பட்டன. இதனால், ஜெர்மனியின் முன்வரிசைப் படையினரில் பெரும்பாலானோர் இறந்துபோனார்கள். 225 கிலோ மீட்டர் தொலைவில், பிரிட்டிஷ் பிரதமரின் இல்லம் இருந்த டௌனிங் தெரு வரை வெடிச் சத்தம் கேட்டிருக்கிறது.

2. மரண தண்டனையை எதிர்கொண்ட பத்திரிகையாளர்கள்

போரின் நடப்புகள்குறித்துச் செய்தி சேகரிப்பதற்காகச் சில பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்தனர். போரின் தொடக்கத்தில் அதிகார மட்டத்திலிருந்து தகவல்கள் கசிவதைத் தடுக்கும் வகையில் பத்திரிகையாளர்களுக்கு அரசாங்கங்கள் தடைவிதித்தன. ராணுவத் தலைமையைப் பொறுத்தவரை, போர் குறித்துச் செய்திகள் வெளியிடுவதென்பது எதிரிகளுக்கு உதவுவதே. எனவே, பிடிபடும் பத்திரிகையாளர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டார்கள்.

3. பிரிட்டிஷ் படையினருக்கு ஒவ்வொரு வாரமும் வந்த கடிதங்களின் எண்ணிக்கை: 1.2 கோடி

பிரிட்டனிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் பிரான்ஸில் உள்ள போர்முனையை அடைவதற்கு எடுத்துக்கொண்ட காலம் வெறும் இரண்டு நாட்கள்தான் என்பது நமக்கு வியப்பளிக்கிறதல்லவா? இந்தக் கடிதங்களின் பயணம் தொடங்கிய இடம் ரீஜெண்ட் பார்க் என்ற பணியகம்தான். போர்முனையில் உள்ள நெடுங்குழிகளை எட்டும் முன் இந்த இடத்தில்தான் கடிதங்கள் வகைவகையாகப் பிரிக்கப்பட்டன. போர் முடிவதற்குள் 200 கோடி கடிதங்களும் 11 கோடியே 40 லட்சம் பொதிகளும் போர்முனையில் இருந்த பிரிட்டிஷ் வீரர்களுக்குப் பட்டுவாடா செய்யப்பட்டன.

4. போர் பூசிய மஞ்சள்

ஒரு தலைமுறை ஆண்கள் போருக்குச் சென்றுவிட்டதால், வேலைகளைச் செய்ய வேண்டிய ஆண்கள் இல்லாததாலும், வறுமையின் காரணமாகவும், அதுவரை ஆண்கள் மட்டுமே செய்துவந்த வேலைகளைச் செய்யப் பெண்களும் பணிக்கப்பட்டனர். மோசமான பணிச் சூழல்களிலும், அபாயகரமான வேதிப்பொருள்களைக் கையாள வேண்டிய நிலையிலும் பெண்கள் நீண்ட நேரம் வேலைபார்த்தார்கள். டி.என்.டி. வெடிமருந்து தொழிற்சாலைகளில் வேலை பார்த்த பெண்கள் ‘மஞ்சள் பறவைகள்' என்று அழைக்கப்பட்டனர். நச்சு மஞ்சள்காமாலை காரணமாக அவர்களுடைய தோலின் நிறம் மஞ்சளானதால் அவர்களுக்கு இந்தப் பெயர்.

5. சீரமைப்பு அறுவைச் சிகிச்சையைத் தந்தது முதல் உலகப் போர்

முதல் உலகப் போரில் பலருடைய முகங்களிலும் காயமேற்படுவதற்கு முக்கியக் காரணம் குண்டுச் சிதறல்கள்தான். தோட்டாக்கள் நேராகத் துளைத்துச் செல்பவை. ஆனால், குண்டுச் சிதறல்களில் வெளிப்பட்ட உலோகச்சில்லுகளோ முகத்தையே அலங்கோலமாகக் கிழிக்கக்கூடியவையாக இருந்தன. ஹேரல்டு கிலஸ் என்ற அறுவைச் சிகிச்சை மருத்துவர் இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியுற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் இறங் கினார். இதன் விளைவாக, முகச்சீரமைப்புத் துறையின் முன்னோடித் தொழில் நுட்பங்களை அவர் கொண்டுவந்தார்.

6. போரின் முடிவில் அநாமதேயமாக இறந்துபோன வில்ஃப்ரெட் ஓவன்

வில்ஃப்ரெட் ஓவன், முதல் உலகப் போர் காலகட்டத்தைச் சேர்ந்த, தற்போது பிரபலமடைந்த கவிஞர்களில் ஒருவர். போர் முடிவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு போரில் அவர் மரணமடைந்தார். கருணை, பயங்கரம் ஆகிய இரண்டும் கலந்த ஒரு பார்வையைப் போர் மீது கொண்டிருந்த சிலரில் அவரும் ஒருவர். ஆனாலும், முதலாம் உலகப் போர்குறித்த மிகவும் அசலான பார்வை ஓவனுடையது என்பதை 1960-களில்தான் இலக்கிய முகாம்களைச் சேர்ந்தவர்கள் முடிவுசெய்தனர். அதன் விளைவாக, போர் தொடர்பான இரண்டு பெரும் கவிதைத் தொகுப்புகளை - பெருமளவில் ஓவனின் கவிதைகளைக் கொண்டு வெளியிட்டனர்.

7. பிரிட்டனின் மிக இளம் வீரருக்கு வயது 12

முதல் உலகப் போரின்போது தன்னுடைய வயது 12 என்பதை மறைத்து, பொய்யான வயதைச் சொல்லி சிட்னி லூயிஸ் என்னும் சிறுவன் ராணுவத்தில் சேர்ந்தான். ஆர்வத்தின் காரணமாக, பெரியவர்களுடன் சேர்ந்துகொண்டு போரிட்ட சிறுவர்களில் அவனும் ஒருவன். தேசப்பற்றினால் உந்தப்பட்டும், மந்தமான தினசரி வாழ்க்கையிலிருந்து தப்பிக்கவும்தான் அந்தக் காலத்துச் சிறுவர்கள் அப்படிச் செய்தார்கள்.

8. கிட்டத்தட்ட பிரிட்டனில் பொருளாதாரச் சரிவையே ஏற்படுத்திவிட்டது முதல் உலகப் போர்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொருளாதார வல்லரசாக இருந்தது பிரிட்டன். எந்த நாடும் எதிர்கொள்ளாத அளவுக்குப் பொருளாதார இழப்பை முதலாம் உலகப் போர் பிரிட்டனுக்கு ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக, 1918, செப்டம்பர் மாதத்தின் ஒரு நாளில் மட்டும் சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளுக்குச் செலவான தொகை அப்போதைய மதிப்பில் 4 லட்சம் பவுண்டுகள். ஆக, மற்ற செலவுகளையெல்லாம் கற்பனை செய்துபாருங்கள்!

9. முதல் உலகப் போரின் நன்மைகளில் ஒன்று ரத்த வங்கிகள்

போரில் பலத்த காயமுற்ற வீரர்களுக்கு ரத்தம் செலுத்திச் சிகிச்சை அளிப்பதை பிரிட்டிஷ் ராணுவம் ஆரம்பித்துவைத்தது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு என்று நேரடியாகவே ரத்தப் பரிமாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்க மருத்துவர் ஆஸ்வால்டு ராபர்ட்சன்தான் முதல் ரத்த வங்கியை நிறுவினார். ரத்தம் உறைவதையும், வீணாகப்போவதையும் தடுப்பதற்கு சோடியம் சைட்ரேட்டைப் பயன்படுத்தினார். ஐஸ் கட்டிகளின் அரவணைப்பில் 28 நாட்கள் வரை ரத்தம் பாதுகாக்கப்பட்டு, உயிர் காக்கும் நடவடிக்கைகளின்போது பயன்படுத்தப்பட்டன.

10. கண்ணை ஏமாற்றிய கப்பல்கள்

போரின்போது உணவையும் ராணுவத் தளவாடங்களையும் சுமந்துவந்த கப்பல்களை எதிரிகளின் நீர்மூழ்கி ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பது அத்தியாவசியமாக இருந்தது. நார்மன் வில்கின்சன் என்ற ஓவியர் வித்தியாசமான ஒரு யோசனையை முன்வைத்தார். கண்ணைக் கூசவைப்பது போன்ற வடிவங் களாலும், ஒன்றுக்கொன்று தீவிரமாக வேறுபடும் வண்ணங்களாலும் கப்பலுக்கு ஒரு மாயத்தோற்றத்தைக் கொடுப்பது என்பதுதான் அவரது யோசனை. உருமறைப்பு என்பதற்கு நேரெதிர் இது. கண்ணைப் பறிக்கும் உருமறைப்பு என்று அதற்குப் பெயரிடலாம். கப்பல்களை மறைப்பதற்குப் பதிலாக எதிரிகளைக் குழப்புவதற்கு இந்த உத்தி பயன்பட்டது.

11. காப்பாற்றிய குழிகள்

முன்வரிசையில் நின்றுகொண்டு சுடுவது என்பது பிரிட்டிஷ் வீரர்களைப் பொறுத்தவரையில் அபூர்வமான ஒன்று. நீளமாகக் குழிகள் வெட்டி, அவற்றிலேயே அவர்கள் நடமாடினார்கள். இது பெரும்பாலும் ஆபத்தைத் தவிர்க்கத்தான்.

12. போர்முனைக்குச் செல்ல ராணுவத் தளபதிகளுக்குத் தடை

முதலாம் உலகப் போரைப் பற்றி வழக்கமாகச் சொல்லப்படும் உவமைகளுள் ஒன்று இது- கழுதைகளின் தலைமையில் சிங்கங்கள் போரிட்ட போர். போரில் நேரடியாகச் சண்டையிட்ட தளபதிகள் பெரும்பாலும் கொல்லப்பட்டதால் போர் முனைக்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டது. தளபதி என்ற கௌரவத்தைப் போரில் ஏற்படும் வீர மரணத்துக்காக விட்டுக்கொடுக்கப் பலரும் தயாராக இல்லை என்றும் சொல்லலாம்.

நன்றி: பி.பி.சி., தொகுப்பு: ஆசை

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-12-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6164392.ece?homepage=true&theme=true

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.