Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – கறுப்பின் நிறம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – கறுப்பின் நிறம்

black01-636x310.jpg

சாய் ராம்

அந்தக் குடும்பத்திற்கு அது ஒரு விசேஷ சந்திப்பு. கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள், தம்பதியரின் தாய் தந்தையர் என எல்லாரும் மதிய விருந்திற்காக குழமியிருந்தார்கள். வெளியே மதிய வெயில் பழுக்க தொடங்கியிருந்தது. சிரிப்பும் சந்தோஷமுமாய் மதிய விருந்து தொடங்கியது. என்ன விசேஷம்? அந்தக் கணவன் சிவில் வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பது தான் விசேஷம். இரண்டாம் உலகப் போரிலே ராணுவ வீரராய் பணியாற்றி விட்டு போர் முடிந்து இப்போது தான் திரும்பியிருக்கிறார் அவர். பெயர் வெயின் மில்லர். வயது 27.

இரண்டாம் உலகப் போரில் இருந்து திரும்பியிருப்பது மட்டும் விசேஷமல்ல, அந்தப் போரிலே வெயின் மில்லர் எடுத்த புகைப்படங்கள் பெரும் புகழைப் பெற்று விட்டன. டாக்டரான அவருடைய தந்தைக்கு அது குறித்து பெருமை தான். மகன் பள்ளி படிப்பு முடித்தவுடன் பரிசாக புகைப்பட கருவியை அவனுக்கு அளித்து அவனுள் புகைப்பட ஆர்வத்தை உண்டாக்கியவரே அவர் தான். மில்லரின் தாய் நர்ஸாக பணியாற்றியவர். தன் ஐரிஷ் பின்புலத்தைக் குறித்து பெருமைக் கொண்டவர். தான் சார்ந்த மத்திய வர்க்கத்திலே தனக்கு ஓர் இடம் ஏற்படுத்துவதையே வாழ்க்கைக் குறிக்கோளாய் கொண்டவர். மகன் அடுத்து என்ன செய்ய போகிறான் என கேட்பதில் ஆர்வமாக இருந்தார் தாய்.

அடுத்த இரண்டு வருடத்திற்கு சிகாகோ நகரத்தில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்க (கறுப்பின) மக்களைப் புகைப்படமெடுக்க போவதாக சொன்னார் வெயின் மில்லர். தாயின் முகம் சுருங்கியது.

“உன் பொண்ணை ஒரு நீக்ரோவிற்குக் கல்யாணம் பண்ணி தருவீயா?” என்று கேட்டார் தாய். இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற நாற்பதுகளின் பிற்பகுதி அது. வெள்ளையர் கறுப்பர் வித்தியாசம் மிக பெரிய அளவில் இருந்த காலம். பொது இடங்களில் வெள்ளையர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகள் கறுப்பின மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் மாற்றத்தின் அறிகுறிகள் தொடங்கி விட்டன. கறுப்பின மக்கள் எல்லா துறைகளிலும் நுழைய முனைப்புடன் இருந்தார்கள். குறிப்பாக நகரங்களிலும் அதுவும் அவர்கள் வசித்த சிகாகோ நகரத்திற்குத் திரள் திரளாக கறுப்பின மக்கள் வளமான எதிர்காலம் தேடி குடிபெயர்ந்து வந்தார்கள். இது எல்லாம் அப்போதைய மத்திய வர்க்க வெள்ளையர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி கொண்டிருந்தது. அந்த மனநிலையிலே வெயினின் தாயாரும் இருந்தார்.

சந்தோஷமாய் கழிய வேண்டிய மதிய உணவு வேளை தடைப்பட்டது. வெயின் கோபமாய் அங்கிருந்து கிளம்பி விட்டார். வெயினின் தந்தையார் அவர் பின்னாலே வந்து அவரைச் சமாதானப்படுத்தினார். வெயினும் சமாதானமாகவில்லை. அவருடைய தாயின் கோபமும் குறையவில்லை.

மனிதனுக்கு மனிதனை அறிமுகப்படுத்துவது

selfie-235x300.jpg

எழுபது வருடங்களுக்கு முன்பு செல்பி

அமெரிக்காவில் சிகாகோ நகரில் பிறந்து வளர்ந்தவர் வெயின் மில்லர். தந்தையின் பரிசான புகைப்பட கருவி அவரைப் புகைப்படக்காரராக மாற்றியது. கல்லூரியின் ஆண்டு விழா புத்தகத்தில் அவருடைய புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் இராணுவத்தில் சேர்ந்தார். போர் காட்சிகளைப் புகைப்படமெடுக்க வேண்டியது தான் அவரது பணி. ஒரு போர் விமானத்தில் இருந்து குண்டு காயங்களுடன் இருக்கும் இராணுவ வீரரை மற்ற படை வீரர்கள் வெளியே எடுக்கும் புகைப்படம் வெயினுக்கு மிக பெரிய புகழைப் பெற்று தந்தது. அந்த விமானத்தில் வெயின் பயணிக்க வேண்டியது. ஆனால் அவருக்குப் பதிலாக பயணத்திருந்த மற்றொரு இராணுவ புகைப்படக்காரர் குண்டடிப்பட்டு இறந்து விட்டார்.

ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்கா வீசிய இரண்டு அணு ஆயுத குண்டுகள் இரண்டாம் உலகப் போரினை முடிவிற்குக் கொண்டு வந்தது. 1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பான் சரணடைந்த பிறகு அணு ஆயுதத்தால் அழிக்கப்பட்ட ஹிரோசிமா நகரத்தினைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்ட சில புகைப்படக்காரர்களில் வெயினும் ஒருவர். பிரம்மாண்டமான அழிவையும் அழிவின் தாக்கத்தை முகத்திலே சுமந்திருந்த ஜப்பானியர்களையும் அவர் புகைப்படமெடுத்தார்.

“அமெரிக்கர்களுக்கு ஜப்பானியர்களைத் தெரியாது. ஜப்பானியர்களுக்கு அமெரிக்கர்களைத் தெரியாது. நாம் ஒருவரையொருவர் அறிந்திருந்தால் இந்த (போர்) சூழலே மாறியிருக்கும்,” என சொன்னார் வெயின். புகைப்பட கலையை அரசியல் மற்றும் சமூக மாற்றத்தினை உண்டாக்க வல்ல ஊடகமாக அவர் பார்க்க தொடங்கியது இக்காலக்கட்டத்தில் தான். போர் முடிந்த பிறகு தாயகம் திரும்பிய வெயினின் மனதில் இந்தச் சிந்தனைகளே ஓடின. அவருடைய அடுத்த பணி இதற்கு ஏற்றார் போல அமைய வேண்டுமென திட்டமிட்டார்.

“மனிதனுக்கு மனிதனை அறிமுகப்படுத்துவது, மனித குலத்தினைப் புரிந்து கொள்வது,” என பிற்காலத்தில் அவர் தன் புகைப்பட கலையைப் பற்றி சொன்னார்.

பிழைப்பு தேடி, மரியாதைத் தேடி

ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து ஐரோப்பியர்களால் அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்ட கறுப்பின மக்கள் மிக துயரமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 1882ம் ஆண்டு தொடங்கி 1968ம் ஆண்டு வரை இனவேற்றுமை காரணங்களுக்காக 3500-க்கும் மேற்பட்ட கறுப்பின மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். காலங்கள் உருண்டோட அடிமை மனநிலை மாற தொடங்கியது. தங்களுக்கான உரிமையைப் பற்றி அவர்கள் பேசவும் அதற்காக போராடவும் துணிந்தார்கள். வெள்ளை இளைஞர்கள் சிலரும் இந்த மாற்றத்தினை ஆதரிக்க தொடங்கினார்கள். நகர்புறங்களில் இந்த மாற்றம் வேகமெடுக்க தொடங்கியது. ஆனால் கிராமப்புறங்களில் இன்னும் கறுப்பின மக்கள் அடிமை மனநிலையிலே பார்க்கப்பட்டார்கள்.

black02-266x300.jpg

பிழைப்பு தேடி, மரியாதைத் தேடி

நகர்புறங்களில் தொழிற்சாலைகள் அபரிதமாய் வளர தொடங்கிய காரணத்தால் வேலை வாய்ப்புகளும் பெருக தொடங்கின. இதன்காரணமாக 60 இலட்சத்திற்கு மேற்பட்ட கறுப்பின மக்கள் கிராமப்புறங்களில் இருந்து வடக்கு மாகாணங்களில் இருந்த நகரங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். இது அமெரிக்கா வரலாற்றிலே மிக பெரிய குடிபெயர்தலாக அமைந்தது.

கிராமப்புறங்களில் முக்கியமாக அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் கறுப்பின மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. வடக்கிலும் மேற்கிலும் 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் மிக சிறிய அளவிலே கறுப்பின மக்கள் இருந்தார்கள். ஆனால் இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் வடக்கு மேற்கு பகுதியில் இருந்த பெருநகரங்களில் கறுப்பின மக்களின் எண்ணிக்கை மிக பெரிய அளவில் உயர்ந்தது.

புகைப்பட கலைஞர் வெயினின் சொந்த ஊரான சிகாகோ இந்தக் குடிபெயர்தலின் மையமாக இருந்தது. சிகாகோ நகரத்தின் தெற்குப் பகுதி கறுப்பின மக்களின் புது நகரமாக மாற தொடங்கியிருந்தது. போர் முடிந்து நாடு திரும்பிய வெயினுக்கு இந்த மாற்றம் புலப்பட்டது. அமெரிக்காவில் உள்ள வெள்ளையர் கறுப்பர் பிரிவினை ஆபத்தானது என நினைத்தார் வெயின். கறுப்பின மக்களைப் பற்றி வெள்ளையர்கள் அறிந்து கொள்ள தன் புகைப்படங்கள் ஓர் ஊடகமாக அமைய வேண்டும் என நினைத்தார். “வடக்கு நீக்ரோவின் வாழ்க்கை,” என பெயரிடப்பட்ட அவரது புகைப்பட திட்டத்திற்கு நிதியுதவியும் கிடைத்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இதற்காக மட்டும் அவர் உழைக்க தொடங்கினார்.

நீக்ரோவின் வாழ்க்கை

black05-268x300.jpg

வெயினுக்கு இடங்களோ சம்பவங்களோ முக்கியமாக இருப்பதில்லை. அவருக்கு முகங்களும் உணர்ச்சிகளும் தான் முக்கியமானவையாக இருந்தன. புகைப்பட பத்திரிக்கையாளராக இருந்த காரணத்தினால் அவர் அழகுணர்ச்சியுடன் படமெடுப்பதைக் காட்டிலும் தெருவில் இருக்கும் யதார்த்தங்களை அதிகமாக படமெடுக்க விரும்பினார். யதார்த்தத்தினைப் படமெடுக்க பொறுமையுடன் காத்திருந்தார்.

சிகாகோவின் தெற்குப் பகுதிக்குள் நுழைந்து கறுப்பின மக்களைப் படமெடுப்பது என்பது வெள்ளையரான வெயினுக்கு எளிதாக அமைந்து விடவில்லை. உள்ளே நுழையவே அவருக்கு வாரக்கணக்கில் நேரம் விரயம் ஆனது. ஒரு வருடத்திற்கு முன்பு தான் கேய்டன் என்பவரும் கேளர் டேர்க் என்பவரும் சிகாகோ பல்கலைக்கழகத்திற்காக ஒரு புத்தகத்தினைப் பதிப்பித்து இருந்தார்கள். அதன் பெயர் ‘கறுப்பு நகரம் – வடக்கு (மாகாண) நீக்ரோவின் வாழ்க்கை.’ கேய்டனின் உதவியுடன் வெயினுக்கு இபோனி பத்திரிக்கை ஆசிரியர் பென் பர்ன்ஸின் அறிமுகம் கிடைத்தது. புது அறிமுகங்களின் உதவியோடு வெயின் தெற்கு சிகாகோவில் உள்ள நபர்களைப் பிடித்து தன் புகைப்பட கருவியோடு அங்கே கால் பதித்தார்.

“தெற்கு சிகாகோ என்னை உடனே தயக்கமின்றி ஏற்று கொண்டது,” என்று பிறகு எழுதினார் வெயின் மில்லர். புகைப்பட கருவியோடு சுற்றி சுற்றி படமெடுத்து திரியும் வெள்ளையனைக் கறுப்பின மக்கள் சில நாட்களிலே தங்கள் பகுதியில் ஒருவனாக ஏற்று கொண்டார்கள். திருமண நிகழ்ச்சிகள், இறப்பு இரங்கற் நிகழ்ச்சிகள், தொழிற்சாலைகள், மது பான விடுதிகள், குடிகாரர்கள், மீன் விற்பவர்கள், ஆலயங்கள், மத பிரச்சாரகர்கள், இசைக் கலைஞர்கள், ரவுடிகள், பரத்தைகள், இரவு களியாட்டம், குழந்தைகள் என தான் காண்பது அனைத்தையும் புகைப்படம் எடுக்க தொடங்கினார் வெயின்.

black07-239x300.jpg

கோடைக் காலம்

வரலாற்று சிறப்பு மிக்க தருணங்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. மனித தன்மையைப் பிரதியெடுப்பதே அவர் நோக்கம். மது பான விடுதியிலே தன்னை நோக்கி இளிக்கும் ஆணை அலட்சியமாய் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறாள் ஒரு பெண். செவ்வாய்க்கிழமை மதியம் ஜன்னலைத் திறந்து வைத்து உள்ளே கட்டிலில் நெருக்கமாய் இருக்கிறார்கள் ஒரு கணவன் மனைவி. ஏரிக்கரையோரமாய் தன் மகனோடு அமர்ந்திருக்கிறார் ஒரு தந்தை. மதுக்கடைக்கு வெளியே காத்திருக்கிறார்கள் இரண்டு சிறுமிகள். சரியான பராமரிப்பும் மேற்பூச்சும் இல்லா செங்கற் கட்டிடத்தில் ஒரு பத்திரிக்கையை தலைகீழாய் வாசித்தபடி அமர்ந்திருக்கிறாள் ஒரு சிறுமி. வெயின் தன் புகைப்பட கருவியோடு கண்ணுக்குப் புலப்படாதவராய் மாறி விட்டார்.

“என் புகைப்பட கருவியை மறைத்து கொண்டோ அல்லது நான் மறைந்து நின்றோ புகைப்படங்கள் எடுக்கவில்லை. அப்படி செய்திருந்தால் அங்கே இருந்தவர்கள் என்னைச் சந்தேகத்திற்குரிய ஆளாக பார்க்க தொடங்கியிருப்பார்கள். யாரைப் புகைப்படம் எடுக்க நினைக்கிறேனோ அவர்களிடம் போய் ‘தயவு செய்து என்னைக் கண்டு கொள்ளாதீர்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்களோ அதைச் செய்யுங்கள்,’ என்று சொல்வேன். நம்பினால் நம்புங்கள் அவர்கள் நான் சொன்னபடியே செய்தார்கள். ஏன்? யோசித்தால் எனக்கு ஒரு காரணம் தான் தோன்றுகிறது. அவர்களைப் பற்றி பரிவு கொண்டவனாக அவர்கள் மீது விமர்சனங்கள் இல்லாதவனாக என்னை அவர்கள் எதோ ஒரு வகையில் உணர தொடங்கியிருந்தார்கள். நல்லதையோ கெட்டதையோ தேடி நான் அங்கு வரவில்லை; தினசரி யதார்த்தங்களைத் தேடி வந்திருக்கிறேன் என அவர்கள் உணர்ந்தார்கள். உலகத்தைப் பற்றிய அவர்களது பார்வை, அவர்களுடைய உணர்ச்சிகள், அவர்களுடைய நம்பிக்கைகள், அவர்களுடைய கதைகளைத் தேடி நான் வந்திருக்கிறேன் என உணர்ந்தார்கள். இந்தப் புரிதலே மிக பெரிய வித்தியாசத்தைக் கொண்டு வந்தது. ஒரு புகைப்பட கலைஞனுக்குக் கிடைக்க கூடிய பெரிய பாராட்டு எனக்குக் கிடைத்தது. அது அங்கு நான் ஏற்கப்பட்டதும் எனது வேலையை தனித்து செய்ய அனுமதிக்கப்பட்டதும் தான்,” என சொல்கிறார் வெயின் மில்லர்.

கறுப்பினத்தவரான லேங்ஸ்டன் ஹக்ஸ் என்பவர் அப்போது புகழ் பெற்ற எழுத்தாளர். ‘சிகாகோ டிவ்வெண்டர்’ என்கிற வார இதழுக்காக அவர் எழுதி கொண்டிருந்த ஒரு பத்தி அப்போது பிரபலம். சிம்பிள் என்கிற கற்பனைக் கறுப்பின கதாபாத்திரத்தை உருவாக்கி அன்றைய சமூகத்தைப் பற்றி எழுதியிருந்தார். அதே சமயம் வெயின் ஒரு கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னலுக்கு உள்ளே உட்கார்ந்திருக்கும் ஒரு கறுப்பின இளைஞனைப் படம் பிடித்திருந்தார். அப்புகைப்படத்தினைப் பார்த்தவுடன் லேங்ஸ்டன் ஹக்ஸ், “புகைப்படத்தில் இருப்பவர் தான் சிம்பிள்,” என்றார்.

black08-283x300.jpg

“இவர் தான் சிம்பிள்!”

மற்றொரு புறம் தொழிற்சாலைகளில் யூனியனின் ஆதிக்கம் தொடங்கியிருந்தது. அங்கே கறுப்பின மக்கள் பணி புரிய அதிக வாய்ப்புகள் தரப்பட்டன. வெள்ளையர்களும் கறுப்பின மக்களும் சேர்ந்து பணி புரிந்தார்கள். இதன் காரணமாய் இரு சமூகத்திற்கிடையே சில நட்புகள் தோன்றின. தொழிற்சாலையில் அழுக்கு படிந்த உடையில் ஒரு வெள்ளையரும் கறுப்பினத்தவரும் தோள் மீது கை போட்டு புகைப்படத்திற்குப் போஸ் கொடுக்கிறார்கள்.

black09-150x150.jpg

மத்திய வர்க்கம்

வறுமையையும் கனவுகளையும் சுமந்தபடி அந்தச் சமூகம் வாழ்ந்து கொண்டிருந்தது. எனினும் அதிலே சிலர் மத்திய வர்க்கமாய் மாற தொடங்கி விட்டார்கள். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த கேளர் சேர்க் வீட்டில் பதிப்பக துறையைச் சார்ந்த கறுப்பினத்தவர்கள் உணவிற்காக அமர்ந்திருக்கும் காட்சி வித்தியாசமானது. ஒழுங்கும் தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு மத்திய வர்க்கம் கறுப்பின மக்களிடையே உருவாகி வருவது வெள்ளையர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை உண்டு செய்தது.

ஸுனுக்கர் விளையாட்டறையில் கறுப்பினத்தவர் குழமியிருக்கும் காட்சி அந்தச் சமூகம் மேற்கொண்டிருக்கும் சமூக மாற்றத்தினைப் பிரதிபலிப்பதாய் அமைந்தது. அப்புகைப்படமே பிறகு புத்தகமாய், ‘சிகாகோவின் தெற்குப் பகுதி,’ என பெயரிடப்பட்டு வெளி வந்த வெயினின் புகைப்பட தொகுப்பு புத்தகத்திற்கு அட்டைப்படமாய் தேர்வு செய்யப்பட்டது.

black06-300x234.jpg

அட்டைப் படம்

வெயின் எடுத்த சில புகைப்படங்களைக் கறுப்பின மக்களைக் கிண்டலடிப்பதற்கு சில வெள்ளையின பத்திரிக்கைக்காரர்கள் பயன்படுத்தி கொண்ட சம்பவங்களும் உண்டு. முக்கியமாக விருந்து, களியாட்டம் பற்றிய புகைப்படங்கள் அவ்வாறு பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று வரை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வெயின் மில்லரின் புகைப்படங்களுக்குக் கொடுக்கும் மரியாதை அவருடைய முயற்சி வெற்றியடைந்ததையே உணர்த்துகிறது.

“அக்காலக்கட்டத்தில் இருந்த கறுப்பு சிகாகோவினைப் பற்றிய சிறந்த பதிவு ஆவணம்,” என வெயினின் இந்தப் புகைப்படங்களைப் பற்றி பிறகு சொன்னார் வரலாற்று பேராசிரியர் அலெக்ஸ் கீரின். “வெயின் தெற்கு சிகாகோவிற்குச் சரியான காலக்கட்டத்தில் வந்திருந்தது அவருடைய அதிர்ஷ்டம். ஒவ்வொரு நாளும் அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிழைப்பு தேடி மரியாதை தேடி அங்கே குடி வரும் கறுப்பின மக்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருந்தது. கட்டமைப்பு மாற தொடங்கியிருந்தது. கறுப்பின மக்களிடையே தன்னம்பிக்கையும் பக்குவமும் வளர தொடங்கியிருந்தது. இந்தப் புகைப்படங்கள் அக்காலக்கட்டத்தில் தங்கள் குரலை உயர்த்த சக்தி கொண்ட ஒரு சமூகத்தை பதிவு செய்கிறது. அதே சமயத்தில் அக்குரலைச் செவிமடுக்க தயாராக இருந்த வெயினின் பொறுமையையும் இப்புகைப்படங்கள் பிரதிபலிக்கின்றன,” என்று சொன்னார் அலெக்ஸ் கீரின்.

black03-270x300.jpg

ஆலயம்

ஆணின் குடும்பம்

Wayne-Miller-150x150.jpg

வெயின் மில்லர்

சிகாகோவின் தெற்கு பகுதி மிக பெரிய வெற்றி ஈட்டிய பிறகு மில்லர் ‘ஆணின் குடும்பம்,’ என்கிற பெயரில் ஒரு புகைப்பட தொகுப்பினை உருவாக்கினார். தன் குடும்பம், தன் மனைவியின் பிரசவம், தன் குழந்தைகள் என அக்கால அமெரிக்க குடும்பங்களைப் பற்றிய தொகுப்பாக அது வெளிவந்து பரவலான வரவேற்பினைப் பெற்றது. லைஃப், நேஷனல் ஜியாகரெபி என பல இதழ்களில் அவருடைய புகைப்படங்கள் பிரசுரமாகியிருக்கின்றன. எழுபதுகளில் அவர் புகைப்பட தொழிலை நிறுத்தி விட்டு கலிபோர்னியாவில் உள்ள காடுகளைப் பாதுகாக்க குரல் கொடுக்கும் அமைப்போடு சேர்ந்தார். தனது 94வது வயதில் 2013-ம் ஆண்டு இறந்தார்.

மேக்னம் போட்டோஸ் நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸ் மஜோலி, “யதார்த்தத்தையும் தெருக்களையும் சித்தரிக்க நமக்கு பாதை அமைத்து கொடுத்தவர் வெயின் மில்லர்,” என்று சொன்னார்.

புகைப்படங்கள்: வெயின் மில்லரின் புகைப்படம் மற்றும் செல்பி தவிர மற்ற அனைத்தும் வெயின் மில்லரின் ‘சிகாகோவின் தெற்குப் பகுதி’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.

 

 

http://sairams.com/2014/07/கறுப்பின-மக்கள்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.