Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா: தமிழர் பிரச்சனையில் ஒதுங்குகிறதா - பதுங்குகிறதா?

Featured Replies

jayalalitha_letter_narendra_modi_defence

இந்தியா:  

ஒதுங்குகிறதா - பதுங்குகிறதா?

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுடெல்லிக்கான பயணம் எப்போது சாத்தியமாகும் என்ற கேள்வி பல வாரங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  ஏனென்றால், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலமாகவே முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறது.  குறிப்பாக, வடக்கு மாகாணசபை நிறுவப்பட்ட பின்னர், ஏற்பட்டுள்ள சூழல் குறித்தும், நிலையான அரசியல் தீர்வு காண்பது குறித்தும், வடக்கிலுள்ள நிலைமைகள் குறித்தும் இந்தியாவுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்வம் கொண்டிருக்கிறது. என்கின்றார் இன்போ தமிழ் குழுமத்தின் பிராந்திய அரசியல் இரானுவ ஆய்வாளர் ஹரிகரன் அவர்கள்.

முன்னைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் பதவியில் இருந்த போது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  ஆனால், அது சாத்தியமாவதற்குள், அந்த அரசின் ஆயுள் முடிந்து போனது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே, புதிய அரசு அமைந்தவுடன், புதுடிடெல்லியுடன் பேச்சு நடத்துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.  இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டதும், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா. சம்பந்தனும், வடக்கு மாகாணசபையின் சார்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கடிதங்களை அனுப்பியிருந்தனர். அந்தக் கடிதங்களில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு விருப்பம் வெளியிடப்பட்டிருந்தது. அதேவேளை, நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்குச் சென்ற போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தன்னுடன் துணைக்கு வருமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அதனை அவர் நிராகரித்து விட்டார்.  என கூறும் ஹரிகரன் 

தனது விரிவான ஆய்வில்,

  • ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்தது போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழ்நாட்டில் எழுந்த போதும், அதனை இந்திய அரசாங்கம் நிராகரித்து விட்டது. சார்க் தலைவர்களுக்கு மட்டும் விடுக்கப்பட்ட அழைப்பே அதுவாகும். 

    வெளிநாடுகளில் இருந்து வேறு எவரும் அழைக்கப்படவில்லை.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அந்த நிகழ்வுக்குத் தம்மை அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு எதிர்பார்த்திருந்தால், அது அவர்களின் முட்டாள்தனம். எனினும், கூடிய விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைத்துப் பேசுவார் என்று ஊகங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், கடந்த மே மாத இறுதியில் தான் பதவியேற்ற நரேந்திர மோடியின் தலைமையிலான புதிய அரசாங்கம் நிலைமைகளை அவதானித்து, தமது வழக்கமான பணிகளை ஆரம்பிக்க எப்படியும், ஜூலை மாதமாகி விடும் என்று அப்போதே தகவல்கள் கசிந்திருந்தன. 

    இப்போது, ஜூலை முடிந்து ஓகஸ்ட் மாதமும் வந்து விட்டது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான அழைப்பு மட்டும் இன்னமும் இந்திய அரசாங்கத்திடம் இருந்து வரவில்லை.  இதற்கிடையில், ஜூலை நடுப்பகுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைக் கொண்ட குழு, புதுடெல்லி செல்லவுள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகின. அப்போது, புதுடெல்லியில் இருந்து, தமது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும், எனினும், இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கான நாள் குறித்து, இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். 

    இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நரேந்திர மோடியைச் சந்திக்க இம்மாத துவக்கத்தில் புதுடெல்லி செல்லவுள்ளதாக மீண்டும் கடந்தவாரம் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.  ஆனால், புதுடெல்லியில் இருந்து அழைப்பு ஏதும் வரவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசாவும், செல்வம் அடைக்கலநாதனும் உறுதிப்படுத்தியுள்ளனர். 

    ஆக, 

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை புதுடெல்லிக்கு அழைக்க இந்திய அரசாங்கம் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. எதற்காக இந்த தாமதம் - ஏன் இந்திய அரசாங்கம் இழுத்தடிக்கிறது என்ற கேள்விகள் இப்போது மெல்ல மெல்ல எழும்பத் தொடங்கியுள்ளது. ஏனென்றால், பாஜக அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக – இலங்கை விவகாரத்தில் அதன் நிலைப்பாடு தொடர்பாக வெளியாகும் தகவல்கள், சில சந்தேகங்களை ஏற்படுத்தவே செய்கிறது. 

    குறிப்பாக, 

    பாஜகவின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவைச் சேர்ந்த கலாநிதி சேஷாத்ரி ராமானுஜன் சாரி, வெளியிட்டுள்ள கருத்து இங்கு முக்கியமானது.  தமிழர் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்றும், அது சர்வதேச மயப்படுத்தப்படக் கூடாது என்பதே பாஜக அரசின் நிலைப்பாடு என்றும் அவர் கூறியிருக்கிறார்.  அந்த வகையில் பார்க்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடெல்லிக்கு அழைத்துப் பேசுவது, பாஜகவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு முரணானது. அதற்காகத் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்காமல் புதுடெல்லி காலம் தாழ்த்தி வருகிறதா என்ற சந்தேகங்கள் ஏற்படத் தான் செய்கின்றன. 

    அதேவேளை, 

    புதுடெல்லியில் புதிய அரசாங்கம் அமைந்து, இப்போது தான், இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இந்த இரண்டு மாதங்களிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய வெளிவிவகார அமைச்சும் இறுக்கமான நிகழ்ச்சி நிரலுடன் ஓடிக் கொண்டிருப்பதையும் உணர வேண்டும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான உத்திகளை வகுக்க வேண்டிய நிலையில் இருந்ததுடன், இந்தக் கால இடைவெளிக்குள், இரண்டு வெளிநாட்டுப் பயணங்களையும் முடித்துக் கொண்டு திரும்பியிருக்கிறார்.பூட்டானுக்கும், பிறேசிலுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன், நேபாளம், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்களையும் எதிர்நோக்கியிருக்கிறார். 

    அதுபோலவே, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், பதவியேற்ற பின்னர், தொடர்ச்சியான வெளிநாட்டுப் பயணங்கள், சிக்கல்கள், சந்திப்புகளுக்குள் சிக்கியிருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும். அவர், முதலில் பங்களாதேசுக்கும், பின்னர், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டதுடன் அடுத்து மியான்மாருக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.  இதற்கிடையில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.ல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, பிரதிச் செயலர் வில்லியம் பேர்ன், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சராக இருந்த வில்லியம் ஹேக் மற்றும் சீனா, உகண்டா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஓமான், மியான்மார், கட்டார் உள்ளிட்ட பல நாடுகளின் வெளிவிகார அமைச்சர்களையும், இந்த இரண்டு மாதங்களிலும் சுஸ்மா சுவராஜை சந்தித்துள்ளனர்.  இவை தவிர, ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் விவகாரம், உள்ளிட்ட சிக்கல்களையும் சந்திக்க நேரிட்டது. 

    ஆக, 

    புதுடெல்லியில் அமைந்த புதிய அரசாங்கம், இந்த இரண்டு மாதங்களிலும், தன்னைச் சுற்றி நடக்கும் தீவிரமான விவகாரங்கள் குறித்தே கவனம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது என்பதை மறுக்க முடியாது.  இந்தச் சிக்கலுக்குள், தமிழர்களின் பிரச்சினை குறித்து ஆலோசிக்கவோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதற்கோ, புதிய அரசுக்கு நேரம் கிடைத்திருக்கும் என்று கருத முடியவில்லை. அதைவிட, இந்தியா மட்டுமல்ல, எந்தவொரு நாடுமே, தமது தேவைகள், நலன்களுக்கே முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கும். இப்போதைய நிலையில், இலங்கை அரசாங்கத்துடன் உறவைப் பலப்படுத்திக் கொள்வதன் மூலம் அடையக் கூடிய நன்மையை விட, தமிழர் தரப்புடன் உறவைப் பலப்படுத்திக் கொள்வதன் மூலம், கூடுதல் நலன்களை இந்தியாவினால் பெற்று விட முடியும் என்று கூற முடியாது. 

    எனவே, சந்தர்ப்பம் வரும் போது பின்னர் ஒருமுறை பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியம் கூட புதுடெல்லியிடம் இருக்கலாம்.  அதற்கான வாய்ப்புகளையும் நிராகரிக்க முடியாது.  எவ்வாறாயினும், தமிழர் பிரச்சினை இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று, ஒதுக்கி வைத்து விட்டு இந்தியாவினால் முழுமையாக ஒதுங்கி நின்று விட முடியாது.  அதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுவது தாமதிக்கப்படுகிறது என்று கருதவும் முடியாது. 

    பொதுவாகவே, இலங்கையுடனான உறவு விடயத்தில், இலங்கைப் பிரச்சினை விவகாரத்தில், புதிய அரசாங்கம் நிதானப் போக்கையே வெளிப்படுத்துகிறது.  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் கொழும்புக்கானதாக இருக்கும் என்று முதலில் இலங்கை அரசாங்கம் நம்பியது. ஆனால், அவர் பூட்டானுக்கும் பிறேசிலுக்கும் சென்று வந்து விட்டார் -அடுத்து, நேபாளத்துக்குச் செல்லப் போகிறார். எனினும் இலங்கைப் பயணம் பற்றிய எந்த தகவலும் இல்லை. அதுபோலவே சுஸ்மா சுவராஜ், முதலில் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பங்களாதேஸ், பூட்டான், நேபாளம் என்று சென்று வந்து விட்ட அவர் அடுத்த மியான்மார் செல்லவுள்ள போதும், இலங்கையைக் கண்டுகொள்ளவில்லை. 

    நரேந்திர மோடியின் அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டுமன்றி, இலங்கை அரசாங்கத்தையும் கூட சற்று எட்டி வைத்தே கண்காணிக்கிறது.  இது, இந்த விவகாரத்தில் இருந்து தான் ஒதுங்கி நிற்பதாக காட்டிக் கொள்வதற்காகவோ அல்லது சற்று ஒதுங்கி நின்று அவதானித்து விட்டு, ஒரு பெரும் பாய்ச்சலை நடத்துவதற்காகவா? – பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.