Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தையும் சித்திரையும் - ஏன்? எது சரி?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் 2015

நாள்: 21.01.2015

தமிழர்களுக்கு வரலாறு தேவை. வரலாற்றுக்குத் தொடர் ஆண்டுக் கணக்கு தேவை.

 

ஊழியும் ஆண்டு எண்ணி யாத்தன

யாமமும் நாழிகை யானே நடந்தன - (நான் மணிக்கடிகை -72)

 

சீரான ஆண்டு நாட்களைக் கொண்ட காலமே தமிழில் ஊழி என்று அழைக்கப்பட்டது. சீரான ஆண்டுமுறை தடுமாறும் போது ஊழி தடுமாறியதாகக் கருதி அது மீண்டும் தொகுக்கப்பட்டது. அதுவரை அந்த ஊழியின் தொடர் ஆண்டு நீளும் என்பது தவிர்க்க இயலாதது.

 

தொல் ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தால்

......................

நல்அற நெறி நிறீஇ உலகாண்ட அரசன் – (கலித்தொகை – 129 : 1-4)

 

குத்து மதிப்பாக ஓர் ஊழி என்பது சில ஆயிரம் ஆண்டிகளாவது நீளும் என்று தெரிகிறது. ஊழி பிறழ்வதை ‘என்றூழ்’ என்று குறிப்பிடும் பழந்தமிழர்கள் முற்று முழுதாக மாந்த முயற்சியாலும், அரச யானைகள் இமில் ஏறு, கொண்மூ ஏறு போன்றவற்றின் போக்கினாலும் இயற்கையின் துயரத்தைத் துடைத்து உயிர்களை இந்த மண்ணில் தொடர்ந்து வாழ வழி செய்திருக்கிறார்கள்.

 

கன்றமர் ஆயமொடு களிற்று இனம் நடுங்க

என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்

காடு தீப் பிறப்பக் கனைஎரி பொத்திக்

கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட

வேனில் வேந்தன் வேற்றுப் புலம் படர

ஓசனிக்கின்ற உறுவெயில் கடை நாள் – (சிலம்பு – ஊர்காண்காதை – 121-125)

 

தமிழர்களின் தொடர் ஆண்டு முறையை உடைத்து எறிந்த ஆரிய வைதிகம், ஆறு நாட்கள் கொண்ட அறுபது கிழமைகளில் ஓராண்டு என்ற முறையை மாற்றி அறுபது என்ற சுழல் முறையில் ஆண்டு சுழல்வதாகப் பொய்யுரை செய்தது. அதன்வழியே தமிழர் வரலாற்றையும் வரலாற்றுத் தடயங்களையும் தகர்த்து எறிந்தது.

 

ஆங்கிலேயரின் இந்த 2000 ஆண்டுத்தொடர் ஆண்டு இன்று இல்லாது போயிருந்தால், தமிழர்களைத் தருதலைகளாக்கித் தனித்தனியே தலபுராணம் பாடியிருக்கும் ஆரிய வைதீகம்.

 

தொடர் ஆண்டு கணக்கிட்டுப் பெருவாழ்வு வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் சூழலைக் கெடுத்து ஆண்டு பற்றிய அவர்களது அடிப்படை அறிவை மழுங்கச் செய்து ஏமாற்றியதன் மூலம் தமிழர்களின் அறம், அறம் சார்ந்த அரச மரபு, அது சார்ந்த ஆளுமை, எவர்க்கும் அஞ்சாத அறிஞர்களின் குடிசார் நெறி, மக்களின் மரபு அறிவு அனைத்தும் மறைந்து போயின.

 

சித்திரைத் திங்கள் முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்று அயன்மை இன அரசுகளின் உதவியோடு தமிழர்களின் மீது திணித்த ஆரிய வைதிகம் அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டு எற்றிப் பிழைக்கப் பார்க்கிறது.

 

ஆரிய வைதிகத்தின் நம்பிக்கையே கூட சித்திரைத் திங்கள் முதல் நாளில் வருடை என்ற மேழம் ஆகிய ஆட்டு வடிவில் ஆன வானத்து மீன் கூட்டத்தின் ஊடே கதிரவன் நுழைந்து 30 நாட்களில் அக்கூட்டத்தைக் கடந்து மாட்டு வடிவிலான அடுத்த கூட்டத்திற்கு 30 நாட்களில் செல்கிறான் என்பதுதான்.

 

உண்மையில் இவை இப்பொழுது நடக்கவில்லை. ஆடு மாடு போன்ற மீன் கூட்டங்கள் எல்லாம் எங்கேயோ மேய்கின்றன. சித்திரை வேறு எங்கோ மேய்கிறது. அதனைச் சரிசெய்வதும் தமிழர்களின் வேலைதான். அதைச் சித்திரையில் செய்ய முடியாது. ‘தை’க்குத்தான் வரவேண்டும். ஆரியப் பார்ப்பனர்களுக்குத் தமிழர்களை அழிக்க மட்டும்தான் தெரியும். ஆக்கத் தெரியாது ! விரும்பமாட்டார்கள்! எரிச்சல் அடைவார்கள்.

 

தமிழர்கள் எல்லா முழு நிலவுகளையும் அவ்வவற்றின் பண்பறிந்து தெளிந்து மகிழ்ச்சியோடு கொண்டாடி இருக்கிறார்கள். குறிப்பாக முழு நிலவு நாட்களில் தமிழர்கள் உறங்கியதே இல்லை. அது பற்றித் திருமந்திரம் தெளிவாகப் பேசுகிறது.

 

அகலாக் காதலொடு பகல் விளையாடி

.......

பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்

வெண் நிலவின் பயன் துய்த்தும் – (பட்டினப்பாலை – 103-104)

 

இவ்வாறாக சித்திரை முழுநிலவு நாளும் அதன் தோற்றத்திற்கேற்பத் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்தச் சித்திரை முழுநிலவு நாளும் இரண்டு மீன்களுக்கு இடையில் அகப்பட்டுத் தோன்றுமானால் அதனை ஆண்டுச் சரிவின் அறிகுறியாகக் கருதினர்.

 

சித்திரை சித்திரத் திங்கள் சேர்ந்தென

வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என.....

-(சிலம்பு – இந்திரவிழவு ஊர் எடுத்த காதை 64-65)

இரவு வானத்தில் இரட்டை மீன் கூட்டணி ஒன்று இயங்குகிறது. ஒரு மீன் வெளிச்சமாகவும் அதற்கருகில் இன்னொரு மீன் சற்று மங்கியும் தெரியும். அந்தச் சிறிய இடைவெளிக்குள் சித்திரை முழுநிலவு சிக்கினால் அன்று இரவு முழுவதும் சிக்கியே வருவது மட்டும் அல்லாமல் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அப்படியே வரும் என்று தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். அதனை நீக்க வேண்டியே ‘இந்திர விழா’ எடுத்தனர்.

 

இந்திர விழா என்பது சித்திரைத் திங்கள் முதல் நாளில் எடுக்கப்பட்ட விழா அல்ல. ஆண்டுத் தொடக்க விழாவும் அல்ல. சித்திரை முழு நிலவின் எச்சரிக்கை அறிகுறியைத் தொடர்ந்து, சித்திரை முழு நிலவுக்குப் பிறகு வைகாசி முழு நிலவு வரையிலான நாட்களில் இடைப்பட்ட ‘28’ நாட்கள் மட்டும் திட்டமிட்டுத் தேவைப்பட்டால் மட்டும் தலைநகரில் நடத்தப்பட்ட அரசவிழா என்று சிலம்பும் மணிமேகலையும் தெளிவாகப் பேசியிருக்கின்றன.

 

அந்த விழா உயிர்ப்பலி தரப்பட்ட விழா என்பதையும் கழுவாய் தேடி நடத்தப்பட்ட விழா என்பதையும் தமிழர்கள் நன்கு உணர வேண்டும்.

 

வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனப்

பலிகொண்ட புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக ........

–(சிலம்பு இந்திரவிழவு ஊர் எடுத்த காதை 79-80)

 

உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல்

முழக்கத்து மயிர்க்கண் முரசொடு வான் பலியூட்டி .....-(சிலம்பு – இந்திரவிழவு 87-88)

 

மாயிறு ஞாலத்து அரசு தலையீண்டும்

ஆயிரம் கண்ணோன் விழாக் கால் கொள்க! – (மணிமேகலை – விழாவறை காதை 25-26)

 

மண்ணகத்து என்தன் வான்பதி தன்னுள்

மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த

நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக ! – (மணிமேகலை –விழாவறை காதை 6-8)

 

கடந்த சில ஆண்டுகளாகவே சித்திரை முழு நிலவானது அந்த இரட்டை மீன்களுக்குள் சிக்கித்தான் தோன்றுகிறது. ஆயினும் இந்திரவிழா எடுத்து அந்தச் சிக்கலைத் தீர்க்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இப்போது இல்லை. இன்னும் ஓர் ஊழி நிமிர்வுக்குத் தேவையான உயிர்க்கொடை தமிழர்களால் தரப்பட்டுவிட்டது. இனித் தமிழர்கள் தங்கள் அடிப்படை அறிவை ஆரியப் பார்ப்பனரிடம் பறிகொடுக்காமல் இருந்தால் அதுவே போதுமானது.

 

இந்திரன் என்ற கருத்தியல் பழந்தமிழில் பேசப்படும் ‘பொலம் பூண் சேய்’ என்ற அரச மரபின் கருத்தியலை அடியொற்றியே புனையப்பட்டது. தேவர் கோமான், விண்ணவர் கோன் என்று வியக்கப்படும் உருவகம் என்பது ‘அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக! அஃது அன்றி வேறொன்றும் இல்லை (திருமுருகு – 271, 269)

 

‘தை’ முதல் நாளைத் தொட்டால் தமிழ் மரபு எழும். தவிர்த்தால் தமிழ் மரபு மயங்கும். ஆதலினால் ஆரிய வைதிகச் சடங்குகளோடு தமிழர்களின் அறிவு விழுமியங்களை இணைத்துப் பார்த்து தமிழர்கள் குழப்பம் அடையக் கூடாது.

 

ஆரிய வைதிகம் ஒரு புறமும், திராவிட அயன்மை இனங்கள் இன்னொரு புறமும், தமிழர்களை அறிவுத் தெளிவு பெறவிடாமல் குழப்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் தேசியக் கருத்தியலை வளர்த்து எடுப்போர் யாரும் சித்திரை முதல் நாளைத் தமிழ் புத்தாண்டு நாளாக ஏற்கக் கூடாது.

 

திராவிடர்கள் என்ற இல்லாத இனத்தார் வற்புறுத்துகிற ஆரிய வைதிகப் பஞ்சாங்கத்தின் படியான தைத்திங்கள் முதல் நாளிலும் போய் நிற்கக் கூடாது.

 

வானவியல் அடிப்படையில் ஆன சரியான தமிழ்ப்புத்தாண்டு நாளைக் கண்டு, முறையாக அறிவிப்புச் செய்து உரிமையுடன் கொண்டாட முன் வர வேண்டும். தமிழ் புத்தாண்டு முயற்சிகள் அரசியல் களத்தில் வெற்றியடையும் வரை அது பற்றித் தமிழர் அல்லாதாரிடம் பேசி நேரத்தை வீணாக்குவதும் கூடாது.

 

உண்மைத் தமிழரைத் தவிர வேறு யாரும் இந்த முயற்சிக்கு உதவிட மாட்டார்கள் என்ற வரலாற்று உண்மையை நன்கு அறிந்து தமிழர்கள் தங்களைத் தவமைத்துக் கொள்ள வேண்டும்.

 

- தென்னன் மெய்ம்மன்

oooOOO...ஓ...OOOooo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.