Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டார் டைரி 1 - கமல்ஹாசன் | துல்லிய 'அப்டேட்' நாயகன்

Featured Replies

ஸ்டார் டைரி 1 - கமல்ஹாசன் | துல்லிய 'அப்டேட்' நாயகன்
 

"உன் நண்பன் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" என்று சொல்வது உண்டு. இது, தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களுக்கு மட்டும் பொருந்தாது. நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களிடம் பெயரளவுக்கு மட்டுமே பழகும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் தங்களது மேனேஜர், பி.ஆர்.ஓ. ஓட்டுநர், ஒப்பனைக் கலைஞர் முதலானோரிடம்தான் நெருக்கமாக இருக்கிறார்கள். நம்பிக்கையின் அடிப்படையில், இவர்களில் யாரோ ஒருவர்தான் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் டைரியாகவும் மாறுகிறார்கள். இத்தகைய உள்வட்டாரங்கள் மூலமாக அதிகாரபூர்வமாக கிடைத்தத் தகவல்களின் சுவாரசிய தொகுப்புதான் இந்த 'ஸ்டார் டைரி' தொடர். நிழலில் மட்டுமல்ல... நிஜத்தில் பல சுவாரசியங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால்தான் நடிகர் கமல்ஹாசனில் இருந்து தொடங்குகிறேன்.

soqxpv.jpg

ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், வாட்ஸ்-அப், மெசேஜ் இடையே வரும் போன் கால்கள் என அனைத்திலும் எப்போதுமே பிஸியாக இருப்பவர் நிகில். ட்விட்டர் தளத்தில் ட்வீட் போட்டுவிட்டு, வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கு பதில் அனுப்பிக் கொண்டிருப்பார். இடையே காதில் உள்ள ஹெட்போன் மூலமாக ஏதாவது ஒரு நடிகரிடம் பேசிக் கொண்டிருப்பார். கமல்ஹாசனின் தினசரி கால அட்டவணையை ஒருங்கிணைப்பது இவர்தான். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த 'நளதமயந்தி' மற்றும் கமல்ஹாசன் நடித்த 'பம்மல் கே சம்மந்தம்' படங்களில் தொடங்கிய நெருக்கம், 'உத்தம வில்லன்' வரை அப்படியே நீடிக்கிறது.

 

"அப்போதைய கமல் சார் பற்றி அப்புறம் பேசுறேன்... இப்போதைய கமல் சாரை முதலில் தெரிஞ்சுக்கலாம்" என்று சொல்லத் தொடங்கினார், தமிழ்த் திரையுலகின் 'ஹை-டெக்' என்று சொல்லப்படும் நிகில். இனி அவர் கூறியவை நம் நடையில்...

 

'அப்டேட்' நாயகன்

சினிமா தொடர்பாக மட்டும் அல்லாமல், அன்றாட வாழ்வில் புதிதாக அறிமுகமாகமும் தொழில்நுட்ப மாற்றங்களை உடனுக்குடன் ஆர்வத்துடன் அப்டேட் செய்துகொள்வதில் வல்லவர் கமல்ஹாசன். அந்தத் தொழில்நுட்பம் தனது படங்களுக்கு உறுதுணைபுரியும் என்றால், அதனை உடனே செய்யச் சொல்வார்.

தான் மட்டுமின்றி, தன்னிடம் பணிபுரியும் ஊழியர்கள், இணை இயக்குநர்கள், டிரைவர் உள்ளிட்ட அனைவரையும் ஹை-டெக் ஆர்வலர்களாக மாற்றிவிடுவார். அப்படி மாறியவர்களில் ஒருவர்தான் நிகிலும். 'விஸ்வரூபம்', 'தசாவதாரம்', 'உத்தம வில்லன்' உள்ள சமீப கால படங்களை எடுத்துக் கொண்டால் தொழில்நுட்பத்தில் பல புதுப்புது அம்சங்களைக் கையாண்டிருப்பார் கமல்.

 

உங்களுக்கு நடிகர் கமல்ஹாசனை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் வெறும் 5 நிமிடம் மட்டும்தான் நேரம் ஒதுக்கியிருக்கிறார். அந்த 5 நிமிடத்தை உங்களால் 50 நிமிடமாக்க முடியும். எப்படி?

 

கமல்ஹாசன் உடனான சந்திப்பின்போது, புதுப்புது தகவல்களை, சுவையான அனுபவங்களையும் அவரிடம் அந்த 5 நிமிடத்தில் பகிருங்கள். ஒருவேளை, நீங்கள் பகிரும் விஷயங்கள் அவருக்குத் தெரியாதவையாக இருந்தால், உங்களை 50 நிமிடங்கள் ஆனாலும் அவர் விடமாட்டார். உங்களிடம் இருந்து முழுமையாக விஷயங்களைப் பெற்றுக்கொண்டு, அதன் மூலம் தன்னை அப்டேட் செய்துகொண்ட பின்னர்தான் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்.

தனக்குத் தெரியாதவற்றை தெரிந்தவர்களின் பின்னணி பற்றிய எவ்வித கவலையும் இல்லாமல், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் தன்னைத்தானே அப்டேட் செய்துகொள்ளும் அந்த முனைப்பும் பண்பும்தான், 'தல - தளபதி' சீசனிலும் நடிகர் கமல்ஹாசனை 'உலக நாயகன்' என்ற உயரிய இடத்தைத் தக்கவைக்க வழிவகுக்கிறது.

 

*

தி பெர்ஃபக்‌ஷனிஸ்ட்

'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழா, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இப்போதெல்லாம் இசை வெளியீட்டு விழா காலை 9 மணிக்கு வைத்தால், அப்படம் சம்பந்தப்பட்ட நடிகர்கள் வருவதற்கு 10 மணி ஆகும். ஆனால், கமல் என்ன செய்தார் தெரியுமா? 'என் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் பணிகளை நான் கவனிப்பேன்' என்றார். விழாவுக்கு முந்தைய நாள், இசை வெளியீட்டு விழா செட் பணிகள் நடைபெற்றன. அப்போது முதலே 'செட் இப்படி போட்டால் நன்றாக இருக்கும்... பத்திரிகையாளர்களை இங்கே அமர வைக்கலாம்... விஐபிக்கள் இங்கே இருக்கட்டும்... இது ரசிகர்கள் பக்கம்' என அனைத்தையுமே கமல் தீர்மானித்தார்.

 

மாலையில்தான் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆனால், அன்று காலையில் நிகழ்ச்சி ஒத்திகை பார்க்க வேண்டியிருந்தது. அன்றைய தினம் கமல் காலையிலேயே வந்துவிட்டார். அனைத்து ஒத்திகை நிகழ்ச்சிகளையும் பார்த்து, விழாவுக்கு வருபவர்கள் ஒரு நிமிடம் கூட சோர்வடையக் கூடாது என்று கூறி நிகழ்ச்சியை வடிவமைத்தார். மதிய உணவு அங்கே முடித்து, ஒரு கேராவேன் போட்டு தங்கிவிட்டார். ஏனென்றால், ஆபீஸுக்கோ, வீட்டுக்கோ போனால் திரும்பிவர தாமதாகி விடும். தன்னால்தான் தாமதம் என்று யாருமே சொல்லிவிட கூடாது என்பதுதான் அதற்கு காரணம்.

 

நிகழ்ச்சி ஒத்திகை... மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் கடிதம் ஒலிபரப்பட்டது. அனைவரும் ஒத்திகைப் பார்த்து கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று கமல் எழுந்து 'ஆடியோ எங்கேயோ தவறுகிறது' என்றார். 'இல்லை சார்... சரியாக இருக்கிறது' என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். 'இல்லை... தப்பு, பாருங்கள்' என்று கமல் கூறியதும், அங்கிருந்த ஆடியோ தொழில்நுட்ப கலைஞர்கள் ஆராயத் தொடங்கினார்கள். அப்போதுதான் தெரிந்தது, ஆடியோவுக்கும் வீடியோவுக்கும் இரண்டு புள்ளிகள் ஒற்றுமையில்லாமல் இருந்தது. அதைக் கண்டிபிடித்துச் சொன்னவர். தான் செய்யும் எந்த விஷயத்திலும் பிழை வந்திடக் கூடாது என்பதற்காக, கூர்ந்து கவனிப்பதில் வல்லவர் என்பதற்கு இதைவிட சிறந்த அண்மைகால உதாரணம் ஏதும் இல்லை. கமல்ஹாசன் எனும் அர்ப்பணிப்பு மிக்க கலைஞனின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதும் இந்தத் துல்லியத்தன்மை மீதான அக்கறைதான்.

*

நிகில் விவரித்த கமல் தொடர்புடைய சில முக்கிய சந்திப்புகள்... அடுத்த அத்தியாயத்தில்!

 

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF-1-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article6999677.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

ஸ்டார் டைரி 2 - கமல்ஹாசன் | 'ஸ்மார்ட்' ரஜினி
 

 

"எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் வாசிப்பை நேசிப்பவர்களில் கமல் சார் முக்கியமானவர். அவரது அன்றாட வாழ்க்கையில் புத்தகங்களின் பங்கு மிக அதிகம்" என்று அவர் பர்சனல் பக்கங்களை அடுக்குகிறார் நிகில். இனி அவர் சொன்ன தகவல்கள், நம் மொழி நடையில்...

காலையில் அலுவலகம் வந்தவுடன், மீட்டிங் இருந்தால் அனைத்தையும் முடித்துவிட்டு எழுத உட்கார்ந்து விடுவார். படத்துக்கான கதை, திரைக்கதை அல்லது கவிதைகள் என எழுத ஆரம்பித்துவிடுவார். அவரைச் சந்திக்க வருபவர்களில் பலரும் புத்தகங்கள் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பர். தான் படிக்காத புதிய புத்தகத்தை யாராவது கொடுத்தால், அதை ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுவது கமலின் பழக்கம்.

 

அதேபோல், தன்னைச் சந்திக்க வருபவர்கள் "இந்தப் புத்தகம் படித்தேன். நன்றாக இருந்தது" என்று போகிற போக்கில் சொன்னால்கூட அதை கவனித்து, தனது உதவியாளர்கள் யாரிடமாவது அந்தப் புத்தகத்தை வாங்கி வரச் சொல்லி படித்துவிடுவார்.

 

ஒரு புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு, அந்த எழுத்து பிடித்துவிட்டால், தவறாமல் எழுத்தாளரை போனில் அழைத்து நீண்ட நேரம் பேசுவார். அந்தப் புத்தகத்தில் தன்னை ஈர்த்த அம்சங்களையும் வரிகளையும் சுவையுடன் பகிர்வார். சமீபத்தில் அப்படித்தான் 'கொற்றவை' புத்தகத்தைப் படித்துவிட்டு, எழுத்தாளர் ஜெயமோகனிடம் நீண்ட நேரம் பேசினார்.

அத்துடன், அவரை அலுவலகத்துக்கு அழைத்து நீண்ட நேரம் பேசியவர், 'பாபநாசம்' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை கொடுத்துவிட்டார் கமல். 'இவரால் முடியும்' என்று முடிவு செய்துவிட்டால், உடனே அவர்களைத் தன்னுடன் இணைத்துக்கொள்ள தயங்குவதில்லை. அதுதான் கமல்ஹாசன்.

 

கமலும் ரஜினியும்

"நண்பர், நல்ல மனிதர், உண்மையிலேயே சகலகலா வல்லவர். அவர் நடிப்பது, பாடுவது, பாடல் எழுதுவது என கை வைக்காத கலையே கிடையாது" என்று 'கமல் 50' விழாவில் பேசினார் ரஜினிகாந்த். அதற்கு, "எங்குளுக்கு முந்தைய காலகட்டத்தில், எங்கள் இருவரையும் போல யாரும் நட்பு பாராட்டியதில்லை. சூப்பர் ஸ்டார், உலக நாயகன் பட்டங்கள் எல்லாம் நீங்கள் கொடுத்ததுதான். எங்களுக்கு தெரியும் நாங்கள் யார் என்று. நாங்கள் திரையுலகுக்கு வந்த வேலை மட்டும் இன்னும் முடியவில்லை என்று எங்களுக்கு தெரியும்" என்று அவ்விழாவில் கமல் கூறினார்.

 

உண்மையில், இருவருக்கும் இடையேயான நட்பு என்பது ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்ததோ, அப்படியேதான் இன்னும் நீடிக்கிறது. அவ்வப்போது இருவரும் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொள்வார்கள்.

 

'தசாவதாரம்' படத்துக்காக பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அமெரிக்க அதிபர் அலுவலகம் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. அப்போது, கமலைப் பார்க்க வேண்டும் என்று திடீரென படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விட்டார் ரஜினி. அங்கு கமலோ ஜார்ஜ் புஷ் மாதிரியான வேடத்தில் இருந்ததைப் பார்த்து, ரொம்ப குஷியாகி பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

 

"சூப்பர் கமல். அற்புதம். இந்த மாதிரி எல்லாம் உங்களால் மட்டுமே பண்ண முடியும்" என்று கூறிவிட்டு, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், கமல் ஆகியோருடன் ஒரு மணி நேரம் இருந்து பேசிவிட்டு படப்பிடிப்பைப் பார்த்து ரசித்த பிறகே கிளம்பினார்.

 

'மன்மதன் அம்பு' படத்துகாக சிறப்புத் திரையிடல் காட்சிக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்தார் கமல். ரஜினியும் வந்திருந்தார். அப்போது ரஜினி வழக்கம்போல அல்லாமல் வித்தியாசமாக உடை அணிந்து வந்திருந்தார். ஏன் இந்த மாற்றம் என்று ரஜினியின் உதவியாளிடம் நிகில் விசாரித்திருக்கிறார். அப்போது "நீங்க வேற... ரஜினி சார் காலையில இருந்து நிறைய டிரெஸ்ஸை மாத்தி மாத்தி போட்டுப் பார்த்தார். இந்த டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு 'நல்லாயிருக்க இல்லையா?'ன்னு கேட்டு கன்பார்ம் பண்ணிட்டுதான் கிளம்பினார்" என்றாராம் ரஜினியின் உதவியாளர்.

 

அப்போது, கமல்ஹாசனைப் பார்க்கச் செல்லும்போது உடையில் ஏன் இந்த மெனக்கெடல் என்பதற்கான காரணத்தையும் காரில் செல்லும்போது ரஜினி சொல்லியிருக்கிறார்.

"கமலைப் பார்க்க போகிறோம் இல்லையா... ஸ்மார்ட்டாக போக வேண்டுமே!"

கமல் எந்த அளவுக்கு தனக்கு ஸ்பெஷல் என்பது ரஜினியின் இந்த ஸ்டேட்மென்ட் ஒன்றே சான்று.

 

*

ரஜினி, கமல் உடன் நிகில்

நான் வியந்த தருணம்:

"நான் படித்தது 8-ம் வகுப்பு வரைக்கும்தான். நான் கற்றுக்கொண்ட அனைத்துமே என்னுடைய அனுபவ அறிவில் இருந்துதான்" என்று சமீபத்தில் நடைபெற்ற 'உத்தம வில்லன்' இசை வெளியீட்டில் கமல் சார் பேசினார். திரையுலக அனுபவம், இலக்கிய அனுபவம், இசை அனுபவம் முதலான கலை சார்ந்த விஷயங்களைத்தான் அவர் குறிப்பிட்டார் என்று நாம் நினைத்தால் அது தவறு.

 

என் மூத்த மகன் அகில் தற்போது மருத்துவம் படித்து வருகிறார். அகில் 12-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியபோது, அவருக்கு போன் செய்து கமல் சார் வாழ்த்தினார். அப்போது "பிளஸ் டூ முடிச்சுட்டு என்ன படிக்கஆர்வம்?" என்று கேட்டிருக்கிறார். "நான் மெடிக்கல் படிக்கலாம்னு இருக்கிறேன்" என்றான் அகில்.

"மெடிக்கல்ல...?" - இது கமல் சார்.

 

"நியூரோலாஜி அங்கிள்."

அதைக் கேட்டதும், நியூரோலாஜியில் உள்ள ஒரு பிரிவு ஒன்றைக் குறிப்பிட்டு, "இதைப் படி.. நல்ல எதிர்காலம் இருக்கு" என்று சொன்னார் கமல் சார்.

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பிரிவு எந்தக் கல்லூரியில் இருக்கிறது? எவ்வளவு செலவாகும்? என்ற விவரங்களை எனக்குத் தெரிந்த நியூரோ மருத்துவரிடம் விசாரித்தேன்.

குறிப்பிட்ட நியூரோ படிப்பு பிரிவைப் பற்றி கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த நியூரோ மருத்துவர், "இந்தப் படிப்பு அமெரிக்காவில் புதிதாக அறிமுகப்படுத்தி வெறும் ரெண்டு மாசம்தான் ஆகுது. இந்தியாவுக்கே இந்தப் படிப்பு இன்னும் அறிமுகம் இல்லை. இந்தப் படிப்பைப் பற்றி உங்களுக்குச் சொன்னது யார்?" என்றார்.

"கமல் சார்" என்று பதில் சொன்னதும் வியந்தது அந்த நியூரோ மருத்துவர் மட்டுமல்ல... நானும்தான்" - நிகில்

*

கமலின் ஃபிட்னஸ் ரகசியங்கள்... அடுத்த அத்தியாயத்தில்!

 

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF-2-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/article7020579.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

ஸ்டார் டைரி 3 - கமல்ஹாசன் | சிவாஜி பாதி... எம்.ஜி.ஆர் பாதி!
 

"கமல் சார் இன்னும் இளமையாகவும், புத்துணர்வுடனும் இருப்பதற்குக் காரணம், அவரது உடல் நலம் மீதான அக்கறைதான். இதை நான் விவரிப்பதைவிட சூரி சார் சொன்னால் நன்றாக இருக்கும்" என்று கமல்ஹாசனின் உடற்பயிற்சியாளர் சூரியின் பேசச் சொன்னார். சூரி கூறிய தகவல்கள், நம் மொழி நடையில்...

 

கமல்ஹாசனைப் பொறுத்தவரையில், தனது உணவு விஷயங்களில் மிகவும் கண்டிப்பானவராக இருப்பார். எது கிடைத்தாலும் சாப்பிடுவது, என்ன கொடுத்தாலும் அருந்துவது என்பதை அவரிடம் காணவே முடியாது. உடல்நிலை சரியில்லாத சமயத்தில் டாக்டர் ஏதாவது மாத்திரைக் கொடுத்தால்கூட, அந்த மாத்திரை ஏன், எதற்கு என்பதை தெரிந்துகொள்ளாமல் சாப்பிடமாட்டார். எப்போதுமே அரை வயிறு தான் சாப்பாடுவார். அரிசி வகைகள் மிகவும் குறைவாகவும், பயிறு வகைகள் மிகுதியாகவும் உணவில் சேர்த்துக் கொள்வார். காபி, டீயைத் தொடுவதே இல்லை. தேவைப்படும்போது, ப்ளாக் டீ மட்டுமே குடிப்பார்.

 

படப்பிடிப்பு எவ்வளவு தீவிரமாக நடைபெற்றாலும், காலையில் ஒரு மணி நேரம் யோகா, இரவு 3 மணி நேரம் உடற்பயிற்சி என்பதை கமல் ஒருநாள் கூட தவறவிட்டதில்லை. அதேபோல, எந்த ஊருக்கு படப்பிடிப்புக்கு சென்றாலும், அவருடைய உடற்பயிற்சியாளர் சூரி கமலுடன் சென்றுவிடுவார். அமெரிக்காவில் 'விஸ்வரூபம்', பெங்களூரில் 'உத்தம வில்லன்' படப்பிடிப்பு நடைபெற்றபோது அவர் உடனே சூரியும் சென்றுவிட்டார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்தவுடன், சூரியின் பயிற்சிகளை தவறாமல் செய்துவிடுவது கமலின் வழக்கம்.

 

'உத்தம வில்லன்' படத்தில் மேக்கப், உடைகள் எல்லாம் களைந்து படப்பிடிப்பு விட்டு வெளியே வரவே இரவு ஏழரை மணியாகிவிடும். அப்போதுகூட களைப்பு அடையாமல், உடற்பயிற்சி செய்ய சென்று விடுவார் கமல். அந்த அளவுக்கு தனது உடல் மீது அக்கறை உடையவர். படத்துக்கு தகுந்தவாறு உடலைக் குறைப்பது, கூட்டுவது என சூரி சொல்லும் சாப்பாடு அனைத்தையும் தவறாமல் கமல் ஏற்றுக் கொள்வது உண்டு.

 

ஆளவந்தானுக்காக உடலுழைப்பு

'ஆளவந்தான்' படத்தில் ராணுவ வீரர் விஜயகுமார் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சூரியை சந்தித்து உடம்பைக் கூட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார் கமல். தொடர்ச்சியாக 4 மாதங்களுக்கு உடற்பயிற்சி கூடமே கதி என்று இருந்திருக்கிறார். முட்டையில் உள்ள வெள்ளைக் கரு மட்டும் தினமும் 30 சாப்பிட்டு உடம்பை ஏற்றியிருக்கிறார். தான் நினைத்த அளவுக்கு உடம்பு ஏறியவுடன்தான் படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறார் கமல். அந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன், மீண்டும் உடலைக் குறைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

 

உடலைக் குறைப்பது என்பது உடனே முடியாது என்றவுடன், சரி.. பரவாயில்லை என்று அந்த உடல்வாகுக்கு ஏற்றவாறு 'பம்மல் கே.சம்பந்தம்' படத்தை ஒப்புக் கொண்டார். அந்தப் படப்பிடிப்புக்கு இடையே உடலைக் குறைத்து கொண்டே வந்திருக்கிறார். 'பஞ்ச தந்திரம்' படத் தொடக்கத்தின் போது மீண்டும் கமலின் பழைய உடலமைப்பைக் கொண்டு வந்துவிட்டார் சூரி. இப்போது 75 கிலோ எடையில் இருக்கிறார் கமல். இன்னும் 2 கிலோ குறைக்க வேண்டும் என்பது கமலின் ஆர்வமாக இருக்கிறது. அவ்வாறு குறைத்துவிட்டால் கமல் இன்னும் இளமையாக தெரிவார் என்கிறார் சூரி.

 

உடற்பயிற்சியின்போதும்கூட தீராத திரைப்பசி

தினமும் உடற்பயிற்சி செய்யும்போது கூட, சூரியிடம் இன்று இந்த மாதிரி காட்சிகளில் எல்லாம் நடித்தேன் என்று பகிர்ந்து கொள்வார் கமல். படப்பிடிப்பு இல்லாமல் பாடல் பதிவு மாதிரியான நேரங்களில்கூட பாடலைப் பாடிக் காட்டி சூரி என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்துகொள்வார்.

'தசாவதாரம்' படத்தில் வரும் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை சூரியால் மறக்கவே முடியாது. அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது தினமும் உடற்பயிற்சியின் போது அப்பாத்திரம் மாதிரியே பேசிக் காட்டி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்திவிடுவாராம் கமல். அந்தக் கதாபாத்திரம் படப்பிடிப்பு முடியும் வரை எப்போது கமல் உடற்பயிற்சிக்கு வருவார் என்று சூரி ஏங்கிய நாட்கள் எல்லாம் உண்டு.

 

அதே போல, உடற்பயிற்சியின்போது கூட நிறைய பேசுவார், பாடுவார், கவிதைகள் கூறுவார்... இப்படி ஏதாவது செய்துகொண்டே இருப்பார் கமல். 'மருதநாயகம்' படப்பிடிப்பின்போது காலை 4 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்திருக்கிறார் கமல். அந்தக் கதாபாத்திரம் மீது கமலுக்கு அந்தளவுக்கு ஈர்ப்பு உண்டு.

'ஹேராம்' படத்தில் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் போஸ்டர் டிசைன் ஒன்று இருக்கிறது. அதற்காக, கைகள் போஸ்டரில் சரியாக இருந்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்று நிறைய பயிற்சிகள் செய்திருக்கிறார்.

 

சூரி பார்வையில் கமல்ஹாசன் என்ற நடிகர் எப்படிப்பட்டவர்..? "எல்லாருக்கும் சிவாஜி சார், எம்.ஜி.ஆர் சாரைப் பிடிக்கும். அவர்கள் இருவரையும் கலந்தவர் கமல் சார். அவரை நிறையப் பேர் அடுத்த சிவாஜி என்பார்கள். சிவாஜி மாதிரி நடிப்பு என்றால் எம்.ஜி.ஆரைப் போல எடிட்டிங், இயக்கம் என அனைத்து பிரிவுகளையும் தெரிந்து கொண்டவர் கமல் சார். உடற்பயிற்சி செய்யும்போது அடிக்கடி "நீங்கள் சிவாஜி - எம்.ஜி.ஆர் இருவரையும் சேர்ந்த கலவை சார் என்பேன். சிரித்துக்கொண்டே இருப்பார்" என்றார் சூரி.

 

 

 

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF-3-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/article7048099.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.