Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதியில் முறிந்த மைக்கேல் கிளார்க்கின் பயணம்

Featured Replies

பாதியில் முறிந்த மைக்கேல் கிளார்க்கின் பயணம்

 
 
மைக்கேல் கிளார்க்
மைக்கேல் கிளார்க்

முதலில் சுவாரஸ்யமான ஒரு புள்ளிவிவரம். இந்த மாதக் கடைசியில் ஓய்வுபெறவிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் ஜான் கிளார்க்கும் அவரை விரைவில் ஓய்வுபெற வைத்ததில் மறைமுகமாகப் பங்காற்றிய இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக்கும் ஒரே சமயத்தில் (2013, டிசம்பர்) தத்தமது 100-வது டெஸ்ட் போட்டியை ஆடியவர்கள். 100-வது போட்டி முடிந்த பிறகு அவர்களுடைய நிலை என்ன தெரியுமா? அலாஸ்டர் 100 + கிளார்க் 100 = சச்சின் 200 என்பதுதான் அந்தத் தகவல். புதிராக உள்ளதா? இதைப் பாருங்கள்:

கிளார்க்: 100 போட்டிகள், 7966 ரன்கள், 26 சதங்கள். குக்: 100 போட்டிகள், 7955 ரன்கள், 25 சதங்கள். இவை இரண்டையும் கூட்டினால் 200 போட்டிகள், 15921 ரன்கள், 51 சதங்கள். இது அப்படியே சச்சினின் டெஸ்ட் போட்டிகளுக்கான எண்ணிக்கை. 200 - 15921 51 என்பதுதான் சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் போட்டி புள்ளிவிவரம்.

200 போட்டிகளில் சச்சின் கடந்த பாதையின் பாதித்தொலைவை 100 போட்டிகளை ஆடி முடித்த போது இவர்கள் இருவரும் தனித்தனியே கடந்திருந்தார்கள். இதேபோல இவர்கள் பயணம் தொடர்ந்தால் இவர்களால் சச்சினின் சாதனைகளைத் தொட முடியும், ஏன் தாண்டக்கூட முடியும் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட் டிருக்கும். புள்ளிவிவர அடிப்படை யில் பார்த்தால் சாத்தியம்தான். ஆனால் ஆட்டமும் வாழ்க்கை மாதிரிதான்.

புள்ளிவிவரங்களின் கட்டங்களுக்குள் அடங்கிவிடுவ தில்லை. 100-வது போட்டிக்குப் பிறகு 14 போட்டிகள் ஆடி முடித்த நிலையில் தன் ஓய்வை அறிவித்திருக்கிறார் கிளார்க். 2004-ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூருவில் தன் முதல் டெஸ்டை ஆடிய கிளார்க், 11 ஆண்டுகள் கழித்து, ஆகஸ்ட் 20 அன்று தொடங்கவிருக்கும் டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட் டிடமிருந்து விடைபெறுவதாக அறிவித்துவிட்டார்.

ஓய்வுக்கு காரணம் என்ன?

ஆலன் பார்டர், மார்க் டெய்லர், ஸ்டீவ் வா ஆகியோரைப் போலவே கிளார்க்கும் கேப்டனாக இருக்கும்போதே ஓய்வுபெறுகிறார். அவர்களைப் போலவே இவரது ஓய்வும் கிட்டத்தட்ட முன்னரே கணிக்கப்பட்டுவிட்டது. ஒரே வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் யாரும் தோல்வியின் கோர முகத்தைக் கண்ட பிறகு ஓய்வை அறிவிக்கவில்லை.

60 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, மூன்றே நாட்களில் இன்னிங்ஸ் தோல்வி பெறும் அவமானத்துக்கு ஆஸ்திரேலியா ஆளான நிலையில் அதன் தலைவர் தன் ஓய்வை அறிவித்திருக்கிறார். அணியின் தோல்விக்குத் தலைமையின் மீது பழி சுமத்துவது சரியல்ல என்றாலும் அவரது தனிப்பட்ட ஆட்டம் ஆஸ்திரேலியாவின் நிலையைச் சீராக்க சிறிதும் உதவவில்லை என்பதால் இந்த முடிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

ஆஷஸ் தோல்வியும் தனிப்பட்ட ஆட்டத்தில் ஏற்பட்ட சரிவும் மட்டும் கிளார்க்கின் முடிவுக்குக் காரணமல்ல. அவரது உடல் நிலையும் அதற்கு ஒரு காரணம். கடுமையான முதுகு வலியால் இடையில் சில போட்டிகளில் அவரால் ஆட முடியாமல்போனது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது கிளார்க்கால் எல்லா போட்டிகளிலும் ஆட முடியவில்லை. வலியிலிருந்து மீண்டு வந்த அவர் உலகக் கோப்பைப் போட்டியில் அணியை திறம்பட வழிநடத்தி, கோப்பையை வென்றெடுத்தார். உலகக் கோப்பையைக் கையில் ஏந்திய உற்சாகத்துடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதிகரித்த அழுத்தம்

டெஸ்ட் போட்டிகளில் மேலும் சில ஆண்டுகள் ஆடலாம் என்னும் எண்ணம்தான் ஒருநாள் போட்டிகளில் ஓய்வுபெற்றதற்குக் காரணம். ஆனால் அது நிறைவேறவில்லை. ஆஷஸ் தொடரில் 4 போட்டிகளில் மூன்றில் தோற்றதும் ஒன்றில்கூட கிளார்க்கின் மட்டையாட்டம் எடுபடாததும் அவர் மீதான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிட்டன. முதுகு வலியோடு போராடுவதைவிடவும் இந்தப் போராட்டம் அவருக்கு அதிக மன அழுத்தத்தைத் தந்திருக்கும்.

ஆஸ்திரேலிய அணியில் வழக்கமாக நடப்பதைப் போலவே அடுத்த தலைவர் ஸ்டீவன் ஸ்மித் காத்துக்கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர் வாகமோ கருணைக்குப் பேர்போனதல்ல. இந்நிலையில் கிளார்க்குக்கு வேறு வழியில்லை. அணி நெருக்கடியில் இருக்கும்போது அவரால் தன் மட்டை ஆட்டத்தால் அதைக் கரைசேர்க்க முடியவில்லை. இந்த ஆஷஸ் போட்டியில் அவர் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. அவர் எடுத்த ரன்கள்: 38, 4, 7, 32, 10, 3, 10, 13.

தன் ஆட்டத்தை கிளார்க் காலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “என் அணி 10 பேரைக் கொண்டு ஆடுவதைப் போல இருக்கிறது” என்று மூன்றாவது டெஸ்ட் முடிந்தபோது அவர் சொன்னார். தலைமைப் பதவியைத் துறந்து மட்டையாளராக மட்டும் அணியில் இடம்பெறவும் வழியில்லை என்னும் அளவுக்கு அவரது மட்டையாட்டமே ஆட்டம் கண்டிருக்கிறது. இந்நிலையில் ஆடுகளத்திலிருந்து விடைபெறு வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போனது.

கிளார்க்கின் பிரச்சினை

100-வது போட்டியின் முடிவில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதன் பிறகு கிளார்க் 14 போட்டிகளில் ஆடி 662 ரன்கள், 2 சதங்களை எடுத்திருக்கிறார். கிளார்க்கின் பிரச்சினை தோல்வி மட்டும் அல்ல. அவரது ஆட்டம் மோசமாக இருந்தாலும் அவரைப் போன்ற ஆட்டக்காரருக்கு இன்னும் சிறிது அவகாசம் கிடைக்காது என்று சொல்லிவிட முடியாது. நல்ல அணியைத் தன் வசம் வைத்துக்கொண்டு அதை வெற்றிபெறும் அணியாக மாற்றும் திறன் குறைந்ததுதான் கிளார்க்கின் பிரச்சினைகளில் முக்கியமானது.

இன்னமும் ஆஸ்திரேலிய அணியின் மட்டையாளர்களோ, பந்து வீச்சாளர்களோ உலகின் எந்த அணிக்கும் சவால்விடக் கூடியவர்கள்தான். எந்த ஆடு களத்திலும் நன்கு ரன் குவிக்கவும் 20 விக்கெட்களை எடுக்கவும் திறமை படைத்தவர்கள்தான். இரண்டாவது போட்டியில் 405 ரன்கள் வித்தியாசத்தில் இதே இங்கிலாந்து அணியைத் தோற்கடித்தது இதே ஆஸ்திரேலிய அணிதான். அப்படிப்பட்ட அணியை வைத்துக்கொண்டு 3-1 என்னும் பின்னடைவைச் சந்திப்பது தலைமையின் தோல்வியாகவே பார்க்கப்படும்.

அலட்டிக்கொள்ளாத ஆட்டம்

சுழல் பந்துக்குச் சாதகமான இந்திய ஆடுகளங்களில் வெளிநாடுகளின் பெரிய மட்டையாளர்கள் பலர் திணறியிருக்கிறார்கள். அத்தகைய இந்திய ஆடுகளத்தில் தன் முதல் போட்டியை ஆடிய கிளார்க் அதில் சதம் அடித்துத் தன் திறமையை நிரூபித்திருக்கிறார். அலட்டிக்கொள்ளாத ஆட்டம், புதுமையான வியூக அமைப்புகள், சில சமயம் அருமையான சுழல் வீச்சு ஆகியவற்றுடன் கிரிக்கெட் உலகின் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்த மைக்கேல் கிளார்க் விடைபெற்றுவிட்டார்.

அவரது மட்டையாட்டம் பற்றியும் தலைமைத் திறன் பற்றியும் இதுவரை சொல்லாத குறைகளையெல்லாம் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆட்டக்காரர்கள் சொல்லிவருகிறார்கள். இதே கிளார்க்தான் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு 5-0 என்ற கணக்கில் ஆஷஸை வென்றவர் என்பதை மறந்துவிட்டார்கள். தோல்வி குரூரமானது. வாழ்வை ரசித்து வாழும் இயல்பு கொண்ட கிளார்க்கால் இதை ரசிக்க முடியவில்லை. ஒரு மட்டையாளராகவும் தலைவராகவும் சரிவிலிருந்து மீண்டு வருவது அவருக்குச் சாத்தியமாகலாம். ஆனால் ஆஸ்திரேலிய வாரியம் இன்னொரு வாய்ப்பு வழங்குவதற்குச் சாத்தியமே இல்லை என்பது மற்றவர்களைவிட கிளார்க்கிற்கு நன்றாகத் தெரியும்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சச்சினின் சாதனைகளில் சரி பாதியை வெற்றிகரமாக முடித்துப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திய கிளார்க்கின் பயணம் எதிர்பாராத வேகத்தில் முடிந்துவிட்டது. ஸ்டீவ் வா, ரிக்கி பாண்டிங் ஆகியோரைப் போல இவர் தனக்கென்று தனி அடையாளம் எதையும் விட்டுச் செல்லவில்லை.

ஜாம்பவான்கள் விடைபெற்ற பிறகு புதிதாக உருப்பெற்ற அணியைக் கட்டமைத்த பெருமையும் அவருக்கு மட்டும் உரியதல்ல. அணியை மீண்டும் தொடர் வெற்றி என்னும் பாதைக்கு அழைத்துச் செல்ல அவரால் முடியவில்லை. எனினும் அலட்டிக்கொள்ளாத ஆட்டம் என்னும் முத்திரை என்றென்றும் அவர் பெயருடன் தங்கியிருக்கும்.

http://tamil.thehindu.com/sports/பாதியில்-முறிந்த-மைக்கேல்-கிளார்க்கின்-பயணம்/article7529379.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.