Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு இந்திய ஆதரவு கிடைக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு இந்திய ஆதரவு கிடைக்குமா?

கலாநிதி சர்வேந்திரா

<p>தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு இந்திய ஆதரவு கிடைக்குமா?</p>
 

 

கடந்த வெள்ளிக்கிழமை 27.11.2015 அன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்றன. தமக்காக உயிர்நீத்த மாவீர்களுக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதில் மக்கள் உணர்வுபூர்வமாய் ஈடுபட்டனர். மாவீரர்நாள் அறிமுகப்படுத்தப்பட்ட 1989 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை உலகமெங்கும் கவனத்தைப் பெறுவதாக அமைந்திருக்கும். தலைவர் பிரபாகரன் அவர்கள் 2008 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆற்றிய இறுதி மாவீரர்நாள் உரையை இவ் வருட மாவீரர் நாள் அன்று மீள வாசித்துப் பார்த்தேன். அதில் இந்தியாவுடன் நட்பினை ஏற்படுத்துவதற்கான அவரது விருப்பம் தெளிவாக வெளிப்படுகிறது.

தலைவர் பிரபாகரனின் இறுதி மாவீரர்நாள் உரையின் மீள்வாசிப்பு ஈழத் தமிழர் தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள உறவுநிலை குறித்த சில விடயங்களை இன்றைய பத்தியில் பதிவு செய்யத் தூண்டியது.

தமிழகத்தைச் சேர்ந்த ஊடகத்துறை நண்பர் ஒருவர் ஒருதடவை ஒரு கேள்வியை ஒரு உரையாடலின் போது என்னிடம் எழுப்பினார். இந்தியாவை ஈழத் தமிழர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பதுதான் அக் கேள்வி. அவர் மேலும் இரு துணைக் கேள்விகளைக் கேட்டார். இந்தியா தமக்குத் தேவை என ஈழத் தமிழர் கருதுகிறார்களா? அல்லது இந்தியா தேவையில்லை, இந்தியா இல்லாமலே தமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனக் கருதுகிறார்களா? இவையே நண்பர் கேட்ட துணைக் கேள்விகள்.

இந்தியா தேவையில்லை என ஈழத் தமிழர்கள் கருதவில்லை. ஆனால் இந்தியாவின் சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் தேவை என்றே பலரும் கருதுகின்றனர். இதேவேளை ஈழத் தமிழருக்கு சாதகமான மாற்றத்தை இந்தியாவிடம் ஏற்படுத்துவது சாத்தியமற்றது என்ற கருத்தும் பலரிடம் உண்டு எனப் பதிலளித்தேன். இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு போதியளவு செயற்பாடுகளை ஈழத் தமிழர்கள் அல்லது ஈழ ஆதரவு தமிழகத் தலைவர்கள் மேற்கொள்கிறார்களா என அவர் மீளக் கேட்டபோது, 'போதியளவு இல்லை' என்பதே எனது பதிலாக இருந்தது. இவரது இக் கேள்விகள் அப்போது சில சிந்தனைகளைத் தூண்டியது.

1985 ஆம் ஆண்டில் இந்தியாவும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் எனும் ஒரு சிறிய நூலைத் தமிழீழத்தின் மூத்த அரசியல் அறிஞர் மு. திருநாவுக்கரசு எழுதி வெளியிட்டிருந்தார். அப்போது அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை விரிவுரையாளராக இருந்தார். 'சுகந்தம்' வெளியீடாக வெளிவந்த இந்நூல் அன்றைய சூழ்நிலை கருதி சர்மா எனும் புனைபெயரில் எழுதப்பட்டிருந்தது. பின்னர் இவரது சொந்தப் பெயரிலும் இந்நூல் வெளியாகியிருந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றியடையக்கூடிய போராட்டம் எனவும், இந்தியாவை தமிழீழத்தை அங்கீகரிக்க வைக்கும்போதுதான் தமிழீழத்தின் வெற்றி சாத்தியமாகும் எனவும், இதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெரும்பகுதி இந்தியாவினை நோக்கி இந்தியாவின் அங்கிகாரத்தினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நகர்த்தப்பட வேண்டும் எனவும் இந்நூல் வலியுறுத்தியது. பனிப்போர்க் காலச் சூழலில் இந்நூல் எழுதப்பட்டிருந்தது. தமிழீழத்தை அங்கீகரிக்க இந்தியா இலகுவில் முன்வரமாட்டாது என்பதனைக் காரணங்ளோடு வெளிப்படுத்திய இந்நூல், சிறிலங்கா அரசின் இந்தியாவினை மீறிய அமெரிக்கச் சார்பினையும் தமிழகத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு இருக்கும் உறுதியான ஆதரவினையும் மையமாகக் கொண்டு இந்தியாவினைக் கையாள வேண்டும் என அறிவுறுத்தியது.

இந்நூல் இந்தியா குறித்த ஒரு கொள்கை வகுப்புக்குத் தேவையான பலமான அடிப்படையினை தமிழர் தரப்புக்கு வழங்கிய போதும் நடைமுறையில் இந் நூல் வெளிப்படுத்திய கருத்துக்களின் அடிப்படையில் செயற்படுவதற்கு ஈழத் தமிழ் போராட்ட அமைப்புக்களால் முடியவில்லை. இதற்கு அடிப்படையில் இரு காரணங்களைக் கூறலாம். முதலாவது, தமிழீழ விடுதலைப் போராட்டம் இயல்பான ஒரு வளர்ச்சியினை அடையாமல் வேகமாக வீக்கமடைந்து, இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் போராட்டத்தை வேகமாக முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்ட ஒரு சூழலில் கொள்கை வகுப்புக்கும் செயற்பாடுகளுக்கும் இசைவான ஒரு அக புற நிலையும் போதிய காலஅவகாசமும் தமிழர் அமைப்புகளுக்கு இருக்கவில்லை. இரண்டாவது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தரப்பில் இருந்து தொலைநோக்கில் விடயங்களை ஆய்ந்து வெளியுறவுக் கொள்கையினைத் தெளிவாக வகுத்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் பாரம்பரியமும் பண்பாடும் வளர்ச்சியடைந்திருக்கவில்லை.

இன்றைய சூழலில், எத்தகைய மாற்றத்தை ஈழத் தமிழ் மக்கள் இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்? இலங்கைத் தீவின் தேசியச் சிக்கலுக்கு ஓர் அரசியல்தீர்வு காண்பதற்கு ஈழத் தமிழ் மக்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்பதாக இதனைச் சொல்லலாம். இத்தகைய மாற்றத்தை இந்தியாவிடம் ஏற்படுத்துவது சாத்தியம்தானா? இது சாத்தியப்பட வேண்டும் என்றால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இம் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு உரிய முறையில் ஈழத் தமிழர் தேசம் செயற்படுகிறதா?

<p>தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு இந்திய ஆதரவு கிடைக்குமா?</p>

இன்றைய உலக அரசியல் ஒழுங்கை நன்றாகப் புரிந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து ஈழத்தின் அரசியல் அமைப்புக்களும் தமிழகத்தின் ஈழ ஆதரவு அமைப்புக்களும் போதிய நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணிக் கொள்கிறது. இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைக்கேற்ப தனது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இவற்றைவிட வேறு எதுவித நடவடிக்கைகளையும் கூட்டமைப்பு எடுப்பதாகத் தெரியவில்லை. கூட்டமைப்பின் தமிழகத்துடனான தொடர்புகள் மிகவும் பலவீனமாகவே உள்ளன. தமிழகத்திலேயோ அல்லது இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியிலோ கூட்டமைப்புக்கு அரசியல் பணிமனை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்தியாவில் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. ஈழத் தாயகத்தின் தற்போதைய நிலையினையும் அங்கு நடைபெறும் தமிழின அழிப்பினையும், ஒரு நாடு இரு தேசங்கள் என்ற தமது கோட்பாட்டையும் அதன் நடைமுறையினையும் பற்றிய தொடர்ச்சியான கருத்துக்களை இந்தியாவில் வெளிப்படுத்துவதற்கான தேவை அதிகம் இருக்கிறது என்பதனை இவர்கள் ஏன் கவனத்திற் கொள்ளவில்லை என்பதும் தெரியவில்லை.

புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகளைத் தளமாகக் கொண்டுள்ள அமைப்புக்கள் இந்தியாவில் செயற்படுவது கூடுதலாக தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு அமைப்புக்களையும் ஆதரவாளர்களையும் மையமாகக் கொண்டே உள்ளது. தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு அமைப்புக்கள் தமிழ்த் தேசிய அமைப்புக்களாக உள்ளன. ஈழத்தின் தேசிய இனச்சிக்கலை, தமிழீழம் என்ற இலட்சியத்தினை தமிழகத்தில் உயிர்ப்பாக வைத்திருப்பதில் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் காத்திரமான பங்கினை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதனைத் தாண்டி, இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை ஈழத் தமிழ் மக்களுக்குச் சாதகமாக மாற்றுவதிலோ அல்லது இப்பிரச்சினையை அனைத்திந்திய மட்டத்துக்கு கொண்டு சென்று ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான ஒரு தோழமையுணர்வினை ஏற்படுத்துவதிலோ போதிய ஆற்றல் அற்றவர்களாகவே இவர்கள் உள்ளனர். இதனால் புலத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்புக்களாலும் இந்திய நிலைப்பாட்டை மாற்றுவதில் காத்திரமான பங்கினை இதுவரை வகிக்க முடியவில்லை.

இந்திய நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? அல்லது முடியாதா என்பது ஒரு அரசியல் விவாதம்தான். ஆனால் அரசியல் செயற்பாடு என்பது எப்போதும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமைவதுதான் வரலாற்றை முன்னோக்கி நகர்த்த உதவும். இந்தியாவின் நிலைப்பாட்டில் ஈழத் தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கும் அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அதற்கான செயற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். குறைந்த பட்சம் அதற்காக முயற்சிக்கவாவது வேண்டும்.

ஆனால் இம் முயற்சி போதியளவு தமிழர் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்குப் பல்வேறுவகையான காரணங்கள் இருக்கலாம். ஆனால் விதைக்காமல் விளைச்சல் கிடைக்குமா? போதிய முயற்சியினை மேற்கொள்ளாமல் பயனை எதிர்பார்க்கலாமா? இதனைத் தமிழர் அரசியல் அமைப்புக்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=8c26433c-c501-4126-994a-59068fcb4d5d

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.